Home Blog Page 27

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடிருந்து….

ஒகஸ்ட் 10

“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடிருந்து…..”  1.நாளா.22:18

விசுவாசிக்குக் கிடைத்திருக்கும் பெரிய சிலாக்கியம் கர்த்தர் எப்போதும் அவனோடிருப்பதுதான். நான் உன்னோடிருப்பேன் என்று வாக்களித்திருக்கிறார். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்று சொல்லியிருக்கிறார். அவர் தகப்பனைப்போல உனக்காக கவலைப்படும் சர்வ வல்லமையுள்ள தேவனாக உன்னை பாதுகாக்க உன்னோடு இருக்கிறார். வருத்தத்தில் உனக்கு ஆறுதல் தரவும், கலக்கத்தில் உன்னை நடத்தவும், பெலவீனத்தில் உன்னைப் பெலப்படுத்தவும், மோசத்திலிருந்து உன்னைத் தப்புவிக்கவும், அவர் உன்னோடிருக்கிறார். தேவன் சொன்னபடியே இப்பொழுதும் செய்து வருகிறார். சோர்ந்த ஆத்துமாவே, சோதிக்கப்பட்ட துன்பப்பட்ட கிறிஸ்தவனே, வியாதிப் படுக்கையில் கிடைக்கும் பக்தரே, தேவன் உன்னோடு இல்லையா? உன் தேவனேயன்றி உனக்குதவி செய்தது யார்? உன்னைத் தாங்கி உனக்குச் சவரட்சணை செய்வது யார்? நம்பிக்கையற்றுப் போகாதபடிக்கு உன்னைக் காப்பாற்றுகிறது யார்? அவர் உன்னோடு இருக்கிறார்.

அப்படியானால் ஏன் நீ பயப்படுகிறாய்? ஏன் முறையிடுகிறாய்? அவரை நோக்கிப் பார். அவரை நோக்கிக் கூப்பிடு. அவரிடம் கெஞ்சு, அவரை நம்பி, கர்த்தர் உன்னோடிருப்பாரானால் சாத்தானையும், உலகத்தையும் மரணத்தையும்கூட எதிர்த்து அவைகளை மேற்கொள்வாய். இன்றிரவு, தேவன் உன்னோடிருக்கிறாரென்று உணர்ந்துகொள். சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார். யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். ஆகவே, நான் பயப்படேன் என்று சொல், நான் நம்பி பயப்படாமல் இருப்பேன். ஏனென்றால் கர்த்தராகிய யோகோவா என் பெலனும் என் கீதமுமானவர். அவர் என் இரட்சிப்புமாய் இருக்கிறார்.

தேவன் நம்மோடிருக்கிறார்
சேனையின் கர்த்தர் அவரே
அவர் நமக்குத் துருகம்
அவரே நமது அடைக்கலம்.

நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன?

ஒகஸ்ட் 09

“நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன?”  மத். 5: 47

மற்றவர்களைக் காட்டிலும் உங்களுக்கு அதிகம் கிடைத்திருக்கிறது என்ன? சிறைச்சாலை, மருத்துவமனை, தர்மசாலை, வியாதியஸ்தர் அறை, நிர்பந்தமான வீடுகள் இவைகளைப் போய் பார்த்திருக்கிறீர்களா? குருடர், சப்பாணிகள், மனநிம்மதியற்றவர், தொழு நோயுள்ளவர் இவர்களைச் சந்தித்துள்ளீர்களா? பரிசுத்தவான்கள் சகித்தது என்ன? ஆட்டுத் தோலைப் போர்த்துக் கொண்டு, சிறைச்சாலையில் தேவனுக்காய்த் துன்பப்பட்டவர்கள் கொலைகளத்தில் உயிரைக் கொடுத்தார்கள். இரத்த சாட்சிகளாய் மரித்தார்கள். அடிகளைகளை வாங்கிக் கொண்டும் ஜெபித்த இவர்களைப் பார். உன் வாழ்க்கையையும் பார். வேதத்தையும் பார். பரலோகத்தையும் பார். நரகத்தையும் பார். உனக்குக் கிடைத்த பாக்கியங்களை நினை. உனக்கு அதிகம் அதிகம் கிடைக்கவில்லையா? மற்றவர்களைவிட நீ அதிகம் செய்தது என்ன?

உலகத்தானைவிட, அஞ்ஞானியைவிட, புறமதஸ்தனைவிட, அநேக பெயர் கிறிஸ்தவனைவிட எனக்கு நல்ல சட்டதிட்டங்கள் உண்டு என்கிறாய். உன் இதயத்தையும், பணத்தையும், நேரத்தையும் சகலத்தையும் அவருக்குக் கொடுத்தேன் என்கிறாய். ஆனால் மற்றவர்களைவிட நீ அதிகம் செய்தது என்ன? கிறிஸ்துவுக்காக கிறிஸ்தவ ஊழியத்துக்காக, சபைக்காக, ஏழைகளுக்காக, தேவ மகிமைக்காக, நீ செய்தது என்ன? மற்றவர்களைவிட உனக்கு அதிகம் தெரியுமே, அதிகம் பேசுகிறாயே? ஆகவே, மற்றவர்களைவிட உன்னிடத்தில் அதிகம் எதிர்ப்பார்ப்பது நியாயந்தானே மற்றவர்களைவிட அதிகம் செய்யப்பார். இல்லாவிட்டால் நீ சொல்வதை குறித்துச் சந்தேகம் கொள்ளுகிறது நியாயந்தானே.

நமது பெயருக்கேற்ற
நல் நடத்கை எங்கே?
மாறினோம் என்று காட்ட
நற்கனிகள் எங்கே?

தேவன் பிரியமானவர்

ஓகஸ்ட் 08

“தேவன் பிரியமானவர்” கலா. 1:15-16

அப்போஸ்தலனாகிய பவுல் தன் தாயின் வயிற்றிலிருந்து முதல் பிரித்தெடுக்கப்பட்டதையும், கிருபையினால் அழைக்கப்பட்டதையும், கிறிஸ்து தன்னில் வெளிப்பட்டதையும், தான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், பிரித்தெடுக்கப்பட்டதையும் குறித்து இவை யாவும் தேவனுடைய சித்தத்தினால் ஆனது என்கிறார். சவுலைப் பவுலாக்கி அவன் காரியத்தில் கிருபையைக் காண்பித்தது தேவ தயவு தான். இந்தத் தயவுக்கு அவன் பாத்திரன் அல்ல. தேவன் இப்படிச் செய்ய தேவனை ஏவிவிடத்தக்கது அவனிடத்தில் ஒன்றுமில்லை. ஆனால் தேவனுக்குப் பிரியமானபடியால், அவர் சித்தங்கொண்டிபடியால் அப்படி செய்தார். மற்றவர்களைக் காட்டிலும் நாம் வித்தியாசமானவர்களா? முன் இருந்ததற்கும் இப்பொழுது இருப்பதற்கும் வித்தியாசம் உண்டா? அப்படியானால் மற்றவர்களுக்குக் கிடைக்காதவைகள் நமக்கு மட்டும் கிடைத்திருக்கிறது. தேவனுடைய சுத்த கிருபையே அவரின் சுயசித்தமே இதற்குக் காரணம் ஆகும்.

அவர் யார்மேல் இரக்கமாயிருக்க சித்தம் கொள்கிறாரோ அவர்கள்மேல் இரக்கம் கொள்கிறார். யார்மேல் பிரியமாயிருக்க சித்தம் கொள்கிறாரோ அவர்கள்மேல் பிரியமாயிருக்கிறார். தகுதியே இல்லாத நம்மை தேவன் நேசித்து தகுதிப்படுத்தி பிரியமாயிருக்கிறார். தங்கள் பாத்திர தன்மைக்கு அதிகமாகவே எல்லாருக்கும் கிடைத்திருப்பதால் முறுமுறுக்க எவருக்கும் நியாயமில்லை. சிலருக்கு அதிக தயவு கிடைத்திருக்குமென்றால் அதற்கு நன்றியுள்ளவர்களர் இருப்பது அவர்களது கடமை. கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைத்திருக்கிறார். சாந்தகுணம் உள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிக்கிறார். கர்த்தர் உங்களையும் தமது ஜனமாக்கிக் கொண்டார். அவர் தமது மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்.

கர்த்தருக்கே மகிமை
எனக்கு வேண்டாம் பெருமை
அவர் பாதம் தாழ்ந்து பணிந்து
கிருபைக்கு நன்றி கூறுவேன்.

தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்

ஓகஸ்ட் 07

“தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்” சங்.147:11

இரக்கம் நிர்பந்தத்தைக் கண்டு மனதுருகுகிறது. நிர்பந்தத்தைத் தான் இரக்கம் கண்ணோக்குகிறது. தேவன் இயேசுவின்மூலம் தமது கிருபையை வெளிப்படுத்தினார். அவரில் அது உருக்கத்தோடும் நிறைவோடும் எப்போதும் வெளிப்படுகிறது. நாம் பாவம் செய்தவர்களாகையால் ஒரு நீதியும் நம்மிடத்தில் இல்லை. ஆனால் இந்த இரக்கத்தினால்தான் நமக்கு எல்லாமே கிடைக்கிறது. ஏனென்றால் இரக்கத்தில்தான் தேவன் பிரியப்படுகிறார். பாவம் முதலாவது தேடுவது இரக்கம்தான். மனிதர் தேவனிடம் தேடுவதும் இந்தக் கிருபைதான். அநேகர் விசுவாசத்தினால் கிடைக்கும் இந்த நிச்சயம் அற்றவர்கள். தேவன் என்னை நேசித்து எனக்காக தம்மைத்தந்தார் என்று அவர்கள் சொல்லமாட்டார்கள். தேவனைப் பிதா என்று அழைக்கமாட்டார்கள். வாக்குத்தத்தங்களை உரிமையாக்கி, உபதேசங்களை ஏற்றுக்கொண்டு கர்த்தர் என் தேவன் தேவன் என்று சொல்வது அவர்களுக்குத் துணிகரமாயிருக்கும்.

எப்படிப்பட்டவராயினும் தேவனிடம் வரும்போது அவர் இரக்கமுள்ளவர் என்று நம்பியே வருகிறார்கள். தேவ கிருபை அவர்களை உற்சாகப்படுத்தி, தைரியப்படுத்தி, சந்தோஷப்படுத்துகிறது. தேவன் கிறிஸ்துவின்மூலம் பாவிகளுக்கு இரக்கம் காண்பிக்கிறபடியால் தங்களுக்கும் காண்பிப்பார் என்று நம்புகிறார்கள். இரட்சிக்கப்படுவோம் என்ற நிச்சயம் அவர்களுக்கு இல்லாவிட்டாலும் இயேசு கிறிஸ்துவின் இரக்கம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஆகவே, தமக்குப் பயந்து தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாய் இருக்கிறார் என்பது எவ்வளவு அருமையான ஒரு காரியம். அவர்கள் ஜெயிப்பது அவருக்குள் பிரியமானபடியால் அவர்களுக்கு உத்தரவு கொடுப்பார்.

தேவ பயமுள்ளவர்
கர்த்தருக் கருமையானவர்
அவர் கிருபை தேடுவோர்
அவர் அன்பைக் பெறுவோர்.

தேவனையே நோக்கி அமர்ந்திரு

ஓகஸ்ட் 06

“தேவனையே நோக்கி அமர்ந்திரு” சங். 62:5

தேவனையே நோக்கி அமர்ந்திருப்பதென்றால் அவர்மேல் சார்ந்திருப்பதாகும். குடிமகனும், தேவ ஊழியனும், சிறுபிள்ளையும் இப்படிச் சார்ந்திருக்கிறவர்கள்தான். அமர்ந்திரு என்பது நம்பிக்கையின் குறி. இந்த நம்பிக்கைதான் நம்மைத் தேவனிடம் நடத்துகிறது. அவரைநோக்கி காத்திருக்கச் செய்கிறது. ஆவிக்குரிய எந்த செய்கைக்கும் ஏது செய்கிறது. அவரை நோக்கி அமர்ந்திருப்பதென்பது நமது விருப்பத்திற்கு அடையாளம். அவரிடத்திலிருந்து ஒன்றைப் பெற்றுக்கொள்ள விரும்பாவிட்டால் நாம் அவரை நோக்கி பார்க்க மாட்டோம். அவர்முன் காத்திருக்கவும் மாட்டோம். இதில் கீழ்ப்படிதல் அடங்கியிருக்கிறது. இந்தக் கடமையை அசட்டை செய்வது பாவம்.

இப்படி தேவனையே நோக்கி அமர்ந்திருப்பதில் அடங்கியிருப்பது என்ன? அவருடைய வசனத்தின்மேல் விசுவாசம். அருடைய ஆசனத்தண்டையில் செய்யும் விண்ணப்பம். அவரின் நற்கிரியைகளை செய்தல். ஜெபத்திற்குப் பதில் கிடைக்குமென்று காத்திருத்தல். நம்முடைய விஷயத்தில் தேவன் உதவி செய்வாரென்று எதிர்பார்த்தல். எல்லா இடத்திலும் தேவன் இருக்கிறார் என்று உணர்ந்து அவருக்குப் பயப்படுதல். அவரே நன்மைகளுக்கு காரணமும் ஊற்றுமானவர் என்று அவருக்குப் பயப்படுதல் போன்ற பல்வேறு செய்திகள் அடங்கியிருக்கிறது. கர்த்தரிடம் அமர்ந்திருந்தால் நாம் சுகபத்திரராகவும், பரிசுத்தமாகவும், ஜசுவரியர்களாகவும், திருப்தியுள்ளவர்களாகவும், பாக்கியசாலிகளாகவும் இருப்போம். நீ செய்கிற எல்லாவற்றிலும் கர்த்தருக்காகக் காத்திரு. அதிலும் துன்பப்படும்போதும், கலங்கும்போதும், அவருக்குக் காத்திரு. அதிலும் ஆத்துமாவுக்கு ஆசீர்வாதம் கிடைப்பது நிச்சயம். கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கமடையார் என்று அவர் சொல்லுகிறார்.

உமது சமுகம் தரிசிக்க
ஆவலோடு காத்திருப்பேன்
கர்த்தரைத் தேடிய
இஸ்ரவேலர் வெட்கப்பட்டதில்லை.

மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்

ஓகஸ்ட் 05

“மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்” எபேசி. 6:6

தேவனுடைய சித்தம் என்ன என்பதை நாம் அறியவேண்டும். ஒவ்வொரு பாவியும் தம்மை விசுவாசித்து, நேசித்து தமக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதே தேவ சித்தம். ஒவ்வொரு தேவ பிள்ளையும் தேவனுடைய அதிகாரத்தை மதித்து, தம் வார்த்தையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சித்தம் கொள்கிறார். தேவன் தம் சித்தத்தை வெளிப்படுத்துவதைப் புதிய ஏற்பாட்டில் காண்கிறோம். நமது வாழ்க்கைக்கு அதுவே சட்டம். நமக்கு இது கடமையாகவும் தேவனுடைய சித்தம் செய்யும் பொறுப்பாகவும் இருக்கிறது. மனிதர் நம்மை விரோதித்தாலும், நமது பிரியத்துக்கு அது விரோதமாய் கண்டாலும், நாம் பிதாவினுடைய சித்தம் செய்ய வேண்டும்.

எஜமானுடைய கட்டளையை நிறைவேற்ற வேண்டும். அரசருடைய சட்டத்தைக் கைக்கொள்ள வேண்டும். இரட்சகருடைய சட்டத்திற்குக் கீழ்ப்படியவேண்டும். அவர் சித்தத்தை மனப்பூர்வமாய் செய்ய வேண்டும். பாவம் இருக்கும் இருதயத்திலிருந்து எல்லா தீமையும் வருகிறதுப்போல், கிருபையால் புதுப்பிக்கப்பட்ட இருதயத்திலிருந்து நன்மையான காரியங்கள் வெளிப்படுகிறது. இந்த நன்மையான கிரியைகள் தேவனுடைய சித்தம் செய்பவையாகவும் இருக்கவேண்டும். முழு இருதயத்தோடு செய்ய வேண்டும். உற்சாகமாய் தேவனுக்குரியவைகளை நிறைவேற்ற வேண்டும். பிரியமானவரே, நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்து அதைச் செய்ய உங்களுக்கு மனம் உண்டா? உங்களுக்கு இருக்கிற அறிவுக்குத்தக்கதாக செய்கிறீர்களா? உங்கள் கீழ்ப்படிதல் மனப்பூர்வமானதா?

கிறிஸ்துவே என் மாதிரி
அவரையே நான் பிடிப்பேன்
அவர் அடி பின் செல்லுவேன்
அவர் சாயல் அணிவேன்.

தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்

ஓகஸ்ட் 04

“தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்” யோபு 11:5-6

யோபின் சிநேகிதர் அவன் நிலமையை புரிந்துக்கொள்ளவில்லை. அவர்கள் சொன்ன நியாயங்கள் அவன் மனதில் தங்கவில்லை. அவனுக்கு அவைகள் தெரிய வேண்டுமென்று அவர்களில் இவன் ஒருவன் விரும்பினதால், தேவன் பேசினால் நலமாய் இருக்கும் என்று வாய்விட்டுச் சொன்னான். இப்படித்தான் விசுவாசியும் கடைசியில் சொல்லுகிறார். யாரிடத்தில் தேவன் பேசினால் நலமாய் இருக்குமென்று விரும்புகிறோம்? நம்மிடத்தில்தான் அவர் பேசவேண்டும். அப்போதுதான் அவரின் அன்பு நம்மிடத்தில் இருக்கிறதென்று ஒரு நிச்சயம் உருவாகும். நமது வருத்தங்கள் விலகும். சத்தித்தில் நாம் நிலைப்படுவோம். பாவிகளிடத்தில் அவர் பேச வேண்டும். அப்போது அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். மனந்திருப்பி கர்த்தர் பட்சம் சேருவார்கள். துக்கப்படுவோரிடம் அவர் பேச வேண்டும். அப்போது அவர்கள் தேற்றப்படுவார்கள். சுயாதீனம் அடைவார்கள். பின்வாங்கி போனவர்களோடு அவர் பேசவேண்டும். அப்போது அவர்கள் திரும்பவும் பரிசுத்தர்களும் பாக்கியமும் பயனுள்ளவர்களும் ஆகலாம்.

இவைகளெல்லாம் நமக்குப் போதிக்கிறதென்ன? எந்த வேளையானாலும் தேவனிடம் ஓடி அவர்மேல் நம்பிக்கை வைக்கும்போது அவர் நம்மோடு பேசுவார். சோதிக்கப்படுகிற விசுவாசியே, தேவன் உனக்காகப் பேசுவார். பக்தியுள்ள கிறிஸ்தவனே, தேவன் உன்னோடு பேசுவார். எப்படிப் பேசுவார் என்று கேட்கிறாயா? தம்முடைய வசனத்தை கொண்டும், தமது கிரியைகளைக் கொண்டும், ஆவியானரைக் கொண்டும் பேசுவார். அப்படியானால் அவர் சத்தத்துக்குச் செவிக்கொடுப்போமாக. அவர் தம்முடைய வார்த்தையைக் கொண்டும், ஊழியர்களைக் கொண்டும் எவ்விதத்திலும் நம்மோடு பேச அவரை வேண்டிக்கொள்வோமாக.

சுவிசேஷத்தில் தொனிக்கும்
சத்தம் சமாதானமே
இதை உமதடியார்க்களித்து
விடாமல் என்றும் காரும்.

எப்பொழுது என்னிடத்தில் வருவீர்

ஓகஸ்ட் 03

“எப்பொழுது என்னிடத்தில் வருவீர்.” சங். 101:2

தேவனுடைய சமுகம்தான் தேவ பிள்ளைக்குப் பரவசம். இதை விட அவர்களுக்குப் பெரிய சந்தோஷம் கிடையாது. அவர்கள் விரும்புகிறபொருள் அவர்தான். இதுவே அவர்களின் சந்தோஷத்தின் ஊற்று. அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு ஜீவனும் அவரே. அவர் இருந்தால் எல்லாமே இன்பம்தான். அவரின்றி அவர்களுக்குத் திருப்தியே கிடையாது. ஆத்துமாவிற்கு அமைதியே கிடையாது. இதற்கு அநேக காரணங்கள் உண்டு. அவருடைய தயவுதான் அவர்களுக்கு ஜீவன். அவரோடு ஐக்கியப்படுவதுதான் அவர்களுக்குப் பொக்கிஷம். அதுவே அவர்கள் சமாதானம். நேசரின் சமுகத்தில் நிறைவான சந்தோஷமும், இளைப்பாறுதலும், ஜெயமும் உண்டு. அவர் இருந்தால் அவர்களின் பரிசுத்தம் விருத்தியடையும். அவர்களின் விசுவாசம் பெருகும். கிருபை என்னும் கனி பழுக்கும். அவர்களின் பக்தி மேன்மையானது என்று அது ரூபிக்கிறது. அப்படிப்பட்ட நேரங்களில்தான் கர்த்தர் தமது ஜனத்தை சந்திக்கிறார். ஆனால் அவர்கள் சில சமயங்களில் அவருடைய சமுகத்தை இழந்து விடுகிறார்கள். ஆனால் ஒருமுறை அனுபவித்தபடியால் அதன்மேல் திரும்பவும் வாஞ்சை கொள்கிறார்கள். அப்படி வாஞ்சித்து, கெஞ்சி வருத்தப்படுகிற ஆத்துமா திருப்தியடையாமல் போகாது.

என் சிநேகிதரே, தேவ சமுகத்தை நீ ருசித்ததுண்டா? அதை அனுபவித்ததுண்டா? இன்று அதில் நீ இருந்ததுண்டா? இதைவிட உனக்கு உதவி செய்வது தேறொன்றுமில்லையே. தாவீதுபோல் என் ஆத்துமா உம்மை தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறதென்றும்ஈ என்னிடத்தில் எப்போது வருவீர் என்றும், நான் பிழைத்து இருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக. உமது வேதம் என் மனமகிழ்ச்சி என்று நீர் சொல்கிறவரா? இப்படி ஒருவேளை நீர் தேவ சமுகத்தைக் குறித்து கவலையற்றவரானால் நீர் தேவனுக்கு அந்நியனே.

கர்த்தாவே உமதுமேல்
என் ஆவி வாஞ்சைக் கொள்கிறது
நீரே என்னை நிரப்பும்
என் தாகத்தைத் தீர்த்திடும்.

கடைசிச் சத்துரு

ஓகஸ்ட் 02

“கடைசிச் சத்துரு” 1.கொரி. 15:26

கிறிஸ்தவனுக்கு அநேகச் சத்துருக்கள் உண்டு. தேவ கிருபையினால் இவன் சகல சத்துருக்களையும் மேற்கொள்ளுவான். அதில் பரிகரிக்கப்பட வேண்டிய கடைசிச் சத்துரு மரணம். மரணம் தான் எல்லா இராஜ்யத்துக்கும் சத்துரு. இது ஞானவான்களையும், தேச தலைவர்களையும், பரிசுத்தரையும் அழித்துப் போடுகிறது. இது சபையின் சத்துரு. இது பக்தியுள்ளவரையும், நன்மை செய்பவரையும், பயனற்றவரையும் நீக்கிப்போடுகிறது. தேவாலயத்துக்கும் சத்துரு இது. பணிவிடைக்காரர்களையும், ஊழியர்களையும், போதிக்கிறவர்களையும், வாலிபரையும் தேவனுக்காய் உழைப்பவர்களையும் மரணம் கொடுமையாக கொண்டுபோய் விடுகிறது. இது குடும்பங்களுக்குச் சத்துரு. தாய் தந்தையையும், மனைவி புருஷனையும், பிள்ளைகளையும் பிரித்துவிடுகிறது. ஊழியர்களையும், பக்திமான்களையும் உலக மனிதரையும் பாவிகளையும் பட்சபாதமின்றி மரணம் விழுங்கி விடுகிறது. நம்முடைய ஆண்டவர் இயேசுவுக்கும் அது சத்துருவாய்தான் இருந்தது.

மரணம்தான் கடைசி சத்துரு.முதல் சத்துரு சாத்தான். இரண்டாம் சத்துரு பாவம். கடைசிய சத்துரு மரணம். இது கடைசியாக நம்மைத் தாக்குகிறது. வியாதியிலும், முதுமையிலும், ஏன் இளமையிலும் மரணம் வந்துவிடுகிறது. இதுவே கடைசியாக அழிக்கப்படுகிற சத்துரு.தேவ தீர்மானத்தின்படி மரணம் கிறிஸ்துவினால் அழிக்கப்பட்டுப்போய்விடும் என்று வாக்களித்திருக்கிறார். பரிசுத்தவான்கள் அதற்காக ஜெபிக்கிறார்கள். அது அழியும் என்று சபையும் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த வசனத்தை நிறைவேற்ற இயேசு கிறிஸ்துவும் வரப்போகிறார். அப்பொழுது அது நிச்சயமாய் அழிக்கப்பட்டுப்போம். பூரணமாய் அழிக்கப்பட்டுப்போம். இப்பொழுதும் பக்திமான்கள் அதன் வல்லமையை எதிர்த்து, அது வர சம்மதித்து முடிவுக்கு வாஞ்சித்து, மகிழ்ச்சியாய் அதற்கு உட்பட்டு, அதன் பிடிக்குத் தப்பி சொல்லமுடியாத மகிமையை அனுபவிக்க எதிர்நோக்கலாம்.

தேவா உமது சாயலை
எனக்களித்துப் போதியும்
அப்பொழுது உம் சமுகம்
கண்டு என்றும் களிப்போம்.

கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்

ஓகஸ்ட் 01

“கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்.” 2.சாமு. 12:13

தாவீது இராஜா உரியாவின் மனைவியிடம் பாவம் செய்தது பெரிய பாவம். உரியாவைக் குடிக்கச் செய்து அவனைக் கொல்வதற்கு ஏற்பாடுகளை செய்து இது தேவனால் நடந்தது என்று காட்டி கவலையற்றவனாய் நாள்களைக் கழித்தான். பிறகு பாவ மயக்கத்தை விட்டெழுந்து தான் செய்த அக்கிரமத்தைத் தாழ்மையோடு கர்த்தரிடம் அறிக்கையிட்டான். அவன் உணர்ந்து அறிக்கையிட்டபடியினாலும், மனவேதனையோடு ஜெபித்தபடியினாலும் அவனுக்கு மன்னிப்பு கிடைத்தது. கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார். பாவமானது தேவனுக்கு முன்பாக பாவியைக் குற்றம் சாட்டுகிறது. பாவத்திற்கு விரோதமாக நமக்காகப் பரிந்து பேசும் ஒருவர் வருகிறார். அவரே இயேசுவானவர்.

இயேசு கிறிஸ்துவே கொடிய பாவங்களுக்கு மன்னிப்பளிக்கிறார். பாவத்தை மன்னித்தும் மறந்து விடுகிறார். நம் தேவனைப் போல் மன்னிக்கிறதற்கு அவருக்கு இணையாக ஒருவருமில்லை. தன் பாவங்களைத் தாராளமாய் அறிக்கையிடுகிற மனிதனுக்குத் தேவன் மனப்பூர்வமாய் இலவசமாய் மன்னிக்கிறார் என்பதை நினையில் கொள்ள வேண்டும். தேவனானவர் நம்முடைய பாவங்களை மன்னிக்கும்போது நமது சத்துருக்கள் அதைத் தேடியும் கண்டுபிடிக்க மாட்டார்கள். உன்னுடைய பாவங்களைத் தேவனுடைய முதுகிற்குபின் எறிந்துவிட வேண்டுமானால் நீ அடிக்கடி அவற்றை அறிக்கையிட்டு சரிசெய்துக் கொள்ள வேண்டும். அவருக்குமுன் உன்னைத் தாழ்த்தி உன்னை சரிசெய்து கொள். உன் ஆத்துமாவில் அன்பையும் நன்றியறிதலையும் தேவ மன்னிப்பு ஊற்றிவிடும். தாவீதும் இப்படியே ஜெபித்தான். என் பாவம் எப்போதும் எனக்கு முன் நிற்கிறது என்றான். மன்னிப்பு தேவையானால் ஒரு பாவி பாவத்திற்காகத் துக்கப்பட்டு மனஸ்தாபப்பட வேண்டும். நீயும்கூட பாவத்திற்கு விரோதமாய் விழித்திரு. அப்போது பாவம் செய்யமாட்டாய்.

மன்னிப்புத் தரும் இயேசுவே
என் பாவம் மன்னியுமே
நீர் என் பரிகாரியே
காயம் கட்டி ஆற்றுமே.

Popular Posts

My Favorites

கர்த்தருக்கே காத்திரு

பெப்ரவரி 27 "கர்த்தருக்கே காத்திரு." சங். 37:7 எப்பொழுதுமே பாவியானவன் அமைதலற்றவன். அவன் இருக்க வேண்டிய இடத்தை விட்டுவிட்டபடியால் அவன் ஆவை அவனை நிலையற்றவனாக்குகிறது. கிறிஸ்து அவனைப் பார்த்து என்னிடத்தில் வா, நான் உனக்கு இளைப்பாறுதல்...