செப்டம்பர்

முகப்பு தினதியானம் செப்டம்பர் பக்கம் 2

எங்களை எப்படிச் சிநேகித்தீர்

செப்டம்பர் 23

“எங்களை எப்படிச் சிநேகித்தீர்” மல். 1:2

இது எவ்வளவு விபரீதமான கேள்வி! கர்த்தருடைய ஜனங்கள் இவ்வாறு கேட்பது சரியல்ல. ஆயினும், அநேகர் இப்படிப்பட்ட துணிகரமான கேள்வியைக் கேட்கிறார்கள். நீங்கள் எப்பொழுதாகிலும் கர்த்தர் உங்களை எப்படிச் சிநேகித்தார் என்று கேட்டதுண்டா? அவர் உங்களுக்கு செய்துள்ள நன்மைகளை எண்ணிப்பாருங்கள். உங்கள் பாவங்களுக்காக மரிக்கத் தம்முடைய குமாரனையே தந்தார். உங்களை உயிர்ப்பித்து, உங்களுக்கு போதித்து, வழிநடத்தித் தூய்மையாக்கத் தமது ஆவியானவரைத் தந்திருக்கிறார். அவருடைய மார்க்கத்தைப் போதிக்க தம்முடைய போதகர்களைத் தந்தார். உங்கள் துயரத்தில் உங்களை ஆற்றித் தேற்றக் கிருபையாகப் பல வழிகளைத் திறந்திருக்கிறார். உங்களுக்கு ஊழியம் செய்யச் தம்முடைய தூதர்களையும் அனுப்பியுள்ளார். உங்களைப் பாதுகாக்க உடன்படிக்கையனி; ஆணைகளையும் கொடுத்திருக்கிறார். நீங்கள் நித்திய காலமாகச் சுதந்தரித்து வாழத் தமது பரம வாசஸ்தலத்தையும் உங்களுக்கு வாக்களித்திருக்கிறார்.

உங்களைத் தமது ஆத்துமாவுக்கு அருமையாக எண்ணுகிறார். தமது ஆபரணங்கள், மகுடம், குமாரர், குமாரத்திகள் என்று அழைத்து மேன்மைப்படுத்தியிருக்கிறார். உலகம் வெறும் களிமண். நீங்களோ பொன் என்றும், அது பதர், நீங்கள் கோதுமை மணி, அதுவுமன்றி நீங்கள் ஆடுகள், அது பாம்பு. நீங்கள்புறாக்கள் என்று கூறுகிறார். உங்களுக்கும் அவருக்கும் உள்ள உறவைக் கவனியுங்கள். அவர் உங்கள் பிதா. இயேசு உங்கள் உடன்பிறப்பு. நண்பன். உங்களுக்காகப் பரிந்துரைப்போர், தலைவர், மன்னர், உங்களுக்கு மன்னிப்பை அருளினார். பரம நன்மைகளால் அவர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆச்சரியமான அவருடைய அன்பிற்கு ஒப்பில்லை.

என்றும் நன்றியுடன்
நானிருக்க அருளும்
உமதன்பிற்காகத் துதித்து
உமதிரக்கத்திற்காய் நன்றி சொல்வேன்.

தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக

செப்டம்பர் 22

“தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக” சங். 3:8

உலகம் உண்டாவதற்கு முன்னமே, தேவனுடைய ஜனம் எல்லா ஞான நன்மைகளாலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் கிறிஸ்துவால் எல்லா நன்மைகளையும் பெறுகிறார்கள். மறுமையிலும் கிறிஸ்து நாதரோடு வாழ்ந்து அனைத்து நன்மைகளையும் அனுபவிப்பார்கள். கர்த்தருடைய ஆசீர்வாதம் அவருடைய கிருபையால் அவர்கள்மேல் இருப்பதனால், அவர்கள் அவரைப் புகழ்ந்து போற்றித் துதித்துப் பாட அவர்களைத் தெரிந்து கொண்டார். இதனால் அவர்களுடைய பரிசுத்த பெருகுகிறது. அந்த ஆசீர்வாதம் தங்கியிருப்பதனால், அவர்களுக்கு நேரிடும் சோதனைகள் யாவும் நன்மையாகவே முடிகிறது. அவர்களுடைய குடும்பத்தின்மேலும் இந்த ஆசீர்வாதம் தங்குகிறது. உடன்படிக்கைப் பெட்டியின்மூலம் ஆசீர்வதிக்கப்பட்ட ஓபேத், ஏதோம் என்பவர்களுடைய வீட்டைப் போல் அவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.

அன்பானவர்களே, தேவ ஆசீர்வாதம் உங்கள்மேல் தங்குவது தான் உங்கள் பாக்கியம். இதை அனுபவித்து இருக்கிறீர்களா? தேவ கிருபையால்தான் இது நடக்கிறது என்று அறிவீர்களா? இயேசு கிறிஸ்துதான் இக்கிருபையை உமக்கு அருளுகிறார். விசுவாசத்துடன் கீழ்படிவதனால் இதை அனுபவிக்கலாம். தேவ வாக்குத்தத்தத்தின் மூலம் இது உறுதி செய்யப்படுகிறது. தேவ பிள்ளையே, உனக்குத் தேவையானதைத் தர தேவன் ஆயத்தமாக இருக்கிறார் என்னும் சிந்தையோடு இன்றிரவு படுக்கைக்குச் செல்லுங்கள். தகப்பனே, என்னை ஆசீர்வதியும் என்று ஜெபித்துப் படுத்துக்கொள். அவரை நம்புகிற யாவரும் பாக்கியவான்கள்.

நான் உம்முடையவன்
என்னை மகிழ்ச்சியாக்கும்
உம் சொந்த மகனாகவே உம்
வாக்குத்தத்தம் பெறுவேன்.

அவர்கள் தேவனை நோக்கி, எங்களை விட்டு விலகி இரும்

செப்டெம்பர் 07

“அவர்கள் தேவனை நோக்கி, எங்களை விட்டு விலகி இரும்…… என்கிறார்கள்” யோபு 21:14-15

அக்கிரமக்காரர் இப்படிச் சொல்லுகிறார்கள். தேவ சமுகம் அவர்களுக்கு வெறுப்பைக் கொடுக்கிறது. தேவன் இல்லாமல் வாழ்வது இவர்களுக்கு அதிக பிரியம். தேவன் ஒருவர் இருக்கிறபடியால், அவர் தங்களைவிட்டுத் தூரமாய் இருக்க வேண்டும் என்கிறார்கள். நீங்களும் அப்படியே இருந்தீர்கள். உங்கள் முன்னிலைமையும் அப்படியே இருந்தது. இப்பொழுதுதோ தேவ சமுகத்தை விரும்புகிறீர்கள். இது தேவனுடைய அன்பினால் உண்டானது.

தேவனுடைய மகிமையைக் கண்ட நீங்கள், அவரின் அடைக்கலத்திற்குள் இருக்கிறபடியால் உங்களுக்கு ஒன்றும் கேடானதுநேரிடாது என்று அறிந்திருக்கிறபடியால் உலகிற்கு வெளிப்படுத்தாத விதமாய் உங்களுக்குத் தம்மை வெளிப்படுத்த வேண்டும் என்றே விரும்புகிறீர்கள். நீங்கள் ஆண்டவரைப் பார்த்து எங்களை விட்டு விலகி இரும் என்று சொல்லாமல், என் ஆத்துமா ஜீவனுள்ள தேவன்மேல் தாகமாய் இருக்கிறது. நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன் என்பீர்கள். தேவனே, எங்களைவிட்டு விலகி இரும் என்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களே! என்னை விட்டு பிசாசுக்கும், அவன் தூதருக்கும், ஆயத்தம் பண்ணப்பட்டு இருக்கிற நித்திய அக்கினிக்கும் போங்கள் என்று அவர் சொல்வதை ஒரு நாள் அவர்கள் கேட்பார்கள். ஆனால் எங்கள் வீட்டிற்கும் எங்கள் இருதயத்துக்கும் அவர் வந்து தங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களைப் பார்த்து, வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலக தோற்றத்துக்கு முன்னே உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்ட இராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ள வாருங்கள் என்று அவர் அழைப்பார்.

தேவனைப் பார்த்து நான்
என்னிடம் இருப்பேன் என்பேன்
என் இருதயத்தில் வாசஞ்செய்து
என்னை முழுதும் ஆண்டுக்கொள்ளும்.

உன் சத்தத்தை நான் கேட்கட்டும்

செப்டம்பர் 04

“உன் சத்தத்தை நான் கேட்கட்டும்” உன். 2:14

இயேசுவானவர் தம்முடைய சபையையும் நம்மையும் பார்த்து இப்படிச் சொல்லுகிறார். நாம் அவருடைய சிங்காசனத்தண்டை சேருகிறதைப் பார்க்கவும், நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக ஊற்றுகிறதைக் கேட்கவும் அவர் பிரியப்படுகிறார். நீதிமான் செய்யும் ஜெபம் அவருக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அது புறா கூறுகிறதுபோல் துக்க இராகமாய் இருந்தாலும் ஒன்றாய் முணங்குவதுபோல இருந்தாலும் அவருடைய செவிக்கு அது இன்பமானது. சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னால் நாம் சலித்து விடுவதுப்போல் அவரும் சலித்து விடுவார் என்று நாம் தவறாய் நினைத்து விடுகிறோம். ஆண்டவரோ அப்படியல்ல. நான் உன் சத்தத்தை கேட்கட்டும் என்கிறார். நாம் மாட்டோமென்று சொல்லலாமா?

அவரின் பாதத்தில் போய் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, நம்முடைய புத்தியீனத்திற்காக வருத்தப்பட்டு, மன்னிப்பை நாடி, அவருடைய அருமையான வாக்குத்தத்தங்களை எடுத்துக்காட்டி, அவரிடம் கெஞ்சி அவரிடம் இருக்கும் ஆசீர்வாதங்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாய் கேட்டு வாங்குவோமாக. நாம் அடிக்கடி மிஞ்சி கேட்கிறோம் என்று சொல்லவுமாட்டார். தாராளமாய் நாம் அவரிடம் செல்லலாம். அடிக்கடி அவர் சமுகத்தில் வரும்படி ஏவிவிடுகிறார் செல்லாமலிருக்கும்போது நம்மைக் கண்டிக்கிறார். நம்மை அவரின் பக்கம் வரவழைக்க துன்பங்களையும் சோதனைகளையும் அனுப்புகிறார். அவர் அளிக்கும் ஒவ்வொரு ஆறுதலிலும் உன் சத்தத்தை நான் கேட்கட்டும் என்கிறார். ஒவ்வொரு துன்பத்திலும் என்னை நோக்கிப் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் என்கிறார்.

இரவில் கவலை நீக்குவேன்
என்னை ஆராய்ந்துப் பார்ப்பேன்
கண் மூடும் முன்னே நான்
ஜெபத்தில் பேசுவேன்.

ஆரோன் பேசாதிருந்தான்

செப்டம்பர் 29

“ஆரோன் பேசாதிருந்தான்” லேவி. 10:3

ஆரோன் மிகப்பெரிய துன்பத்தில் இருந்தான். அவனுக்கு ஏற்பட்ட சோதனை மிகப்பெரியதே. அந்தச் சோதனை தன் குடும்பத்தில் ஏற்பட்ட மரணங்களே. அவனது இரண்டு குமாரர்களும் மடிந்துவிட்டனர். தங்கள் துணிகரமான பாவத்திற்காகத் திடீர் மரணம் அடைந்தனர். தேவன் அவர்களைக் கொன்று போட்டார். தேவனுடைய வைராக்கியம் கோபம் எப்படிப்பட்டது என்று காட்ட மக்கள் காணும்பொழுதே மரித்துப்போனார்கள். அவர்களுக்கு மனந்திரும்ப அவகாசம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் நித்திய வாழ்வைக் குறித்து அறியாதிருந்தார்கள். இதனால் தாம் மகிமைப்படுவதாகக் கர்த்தர் கூறினார். ஆரோன் பேசாதிருந்தான். தேவன் செய்தது நீதியோ, இல்லையோ, சரியோ, தவறோ, என்று முறுமுறுத்து அவன் கேள்வி கேட்கவில்லை. அத்தகைய பண்பு நமக்கு வேண்டும். இவை போன்ற காரியங்கள் தேவ சித்தத்துடன்தான் நடக்கிறன. இது அவரை யாவற்றிற்கும் மேலாக நேசிப்பதாலும் தண்டனைக்குத் தான் பாத்திரன்தான் என்று எண்ணுவதாலும் ஏற்படுகிறது.

நண்பரே, இந்தக் காரியம் நம்மோடு பேசி, நமக்கு நேரிடும் பெருந்துன்பங்களில் நம்மை ஆரோனைப் போலிருக்கத் தூண்டுகிறது. நமது முறைப்பாடுகள் எல்லாவற்றிலும், தேவ அன்பு இரக்கம் பற்றி நமக்கு உண்டாகும் ஐயங்களையும் கடிந்து கொள்கிறது. பக்தர்களையும் துன்பங்கள் விடவில்லை என்பதை நமக்கு எடுத்துக்காட்டி நம்மை ஆறுதல்படுத்துகிறது. இவ்வாறு நாம் எச்சரிக்கப்படுவதால் எவ்விதத் துணிகரத்திற்கும், அசட்டைக்கும் நாம் இடங்கொடுக்கக் கூடாது. நமது தேவன் வைராக்கியமுள்ளவர். அமர்ந்திருந்து நானே தேவன் என்று அறிந்து கொள்ளுங்கள் என்கிறார். கர்த்தர் நீதியுள்ளவர். அவர் வழிகள் நீதியும் செம்மையுமானவை.

யாது நடந்திடினும் யான்
உமக்கடங்கி யிருப்பேன்
உம் சித்தம் என் பாக்கியம்
எனக் கூறி மகிழ்ந்திடுவேன்.

அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர்

செப்டம்பர் 17

“அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர்” எரேமி. 50:34

நமது மீட்பர் நமக்கு மிகவும் நெருக்கமான உறவினர். கர்த்தராகிய இயேசுவைப்போல நமக்கு மிகவும் நெருக்கமானவர். வேறு யாரும் கிடையாது. பலவிதமான சூழ்நிலைகளிலும் நம்மோடு ஐக்கியப்படுபவர். இவரைப்போல் வேறு யாரும் இல்லை. இவர், தம்முடைய உயிரையே, நம்மை மீட்கும் பொருளாகத் தந்த நமது மீட்பர். நாம் சாத்தானுடைய வலையில் மீண்டும் விழுந்து விடாதபடி நம்மைக் காக்கத் தம்முடைய தூய ஆவியானவரையே நமக்குத் தாராளமாகத் தந்துள்ளார். மரித்தபின் நம்மை உயிரோடு எழும்பத் தம்முடைய மீட்பின் வல்லமையை முழுமையாகப் பயன்படுத்துகிறார். தாம் உலகிற்கு எதற்காக வந்தாரோ அதைப் பரிபூரணமாக நிறைவேற்றியுள்ளார். ஏனெனில், அவர் வல்லமையுள்ளவர். நீதிமான். வாக்கு மாறாதவர். சொன்னதைச் செய்வார்.

அவர், நம்மைச் சிறைபிடித்த சாத்தானிடமிருந்தும், நம்மை ஒடுக்கி ஆண்ட பாவத்தினின்றும் நமது சத்துருவாகிய மரணத்தினின்றும் மீட்ட கர்த்தர். இது மெய்யானது. ஆதலால், நாம் நமது பெலவீனங்களையும், குறைவுகளையும் அவரிடத்தில் அறிக்கை செய்வோமாக. அவர் ஒருக்காலும் நம்மீது சத்துரு ஆளுகை செய்யவிடமாட்டார். அவன் ஒருக்காலும் வெற்றி பெறவிடார். அவருடைய நோக்கமும், விருப்பம் நம்மை உயர்த்துவதே. நம்மோடு மகிழ்ந்திருப்பதே அவருடைய பேரவா. அக்கிரமங்களிலும், பாவங்களிலும் உழன்று கிடந்த நம்மை மீட்டு கிருபையாக நம்மை உயிர்ப்பிப்பதே. நம்முடைய எதிர் காலத்தை அவர் வளமுள்ளதாக்குவார். நமது கரத்தின் கிரியைகளை ஆசீர்வதிப்பார். நம்முடைய காரியங்களை எவ்வகையிலும் செய்து முடிப்பார்.

வல்ல மீட்பர் இயேசுவே
என்னைத் தயவாய் மீட்டீரே
சாத்தானின் கரத்திலிருந்தென்னைத்
தயவாய் மீட்டுக் கொண்டீரே.

என்னைச் சோதித்துப் பாரும்

செப்டம்பர் 26

“என்னைச் சோதித்துப் பாரும்” மல்.3:10

தேவன் தம்மைச் சோதித்துப் பார்க்கும்படி நம்மை அழைக்கிறார். அவரின் உண்மையைப் பரீட்சித்துப் பார்க்கச் சொல்லுகிறார். அவர் வாக்குப்பண்ணினதைச் செய்யாதிருப்பாரோ என்று யார் சந்தேகிக்க முடியும்? நாம் சந்தேகிப்போமானால், அது அவரைச் சோதிப்பது போலாகும். நாம் எவ்வாறு அவரைச் சோதிக்கலாம்? அவருடைய வார்த்தையை நம்பி, அதை ஜெபத்தில் வைத்து, விழித்திருந்து, அவர் கட்டளையிட்டபடிச் செய்து, அவர் தாம் சொன்னபடிச் செய்கிறாரா என்று சோதித்துப் பார்க்கவேண்டும். எப்பொழுது சோதிக்கலாம்? நாம் பாவப்பாரத்தோடு சஞ்சலப்படுக்கையில் அவர் நம்மை மன்னிக்கிறாராவென்றும், நாம் துன்பப்படுக்கையில் அவர் இரக்கம் காட்டி நம்மை விடுவிக்கிறாராவென்றும், நாம் மனம் கலங்கி நிற்கையில் நம் கண்ணீரைத் துடைக்கிறாராவென்றும், வறுமை வேதனையால் நாம் வாடும் பொழுது, நமக்கு ஆதரவளித்து நம்மை மீட்கிறாராவென்றும் நாம் அவரைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.

அவருடைய ஊழியத்தை நாம் செய்யும்பொழுது நம்மை தெய்வபக்திக்கும், உயிருள்ள வாக்குத்தத்தங்களுக்கும் பங்குள்ளவர்களாக நம்மை மாற்றுகிறாரா என்று அவரைச் சோதித்துப் பார்க்கலாம். நமக்கு முன்னே கோடானகோடிப்பேர் அவரைச் சோதித்து, அவர் உண்மையுள்ளவர் என்று கண்டுகொண்டார்கள். அவரைச் சோதிக்குமளவுக்கு நாம் என்ன செய்யக்கூடும் என்று நம்மையே முதலில் சோதித்துப்பார்ப்போம். முதலில் விசுவாசத்தில் பெலப்படுவோம். தேவையான பொழுதெல்லாம் அவருடைய உண்மைக்குச் சாட்சிகளாக விளங்குவோம். என்றைக்கும் அவர் தமது வாக்கில் உண்மையுள்ளவர் என்று சான்று பகர்வோம். அவரை நாம் நம்பினால் பாக்கியவான்களாயிருப்போம்.

பொய் சொல்ல தேவன் மனிதரல்ல
அவர் என்றும் வாக்கு மாறாதவர்
சத்தியபரன் அவரையே என்றும்
நம்பி நாம் பேறு அடைவோம்.

பேதுரு தூரத்திலே பின்சென்றான்

செப்டம்பர் 14

“பேதுரு தூரத்திலே பின்சென்றான்.” மத். 26:58

எத்தனை முறைகள் நாம் பேதுருவைப்போலப் பின் வாங்கிப் போயிருக்கிறோம்? நான் அன்பில் குளிர்ந்துபோக மாட்டேன். பற்றுறுதியில் அணைந்து போகமாட்டேன், உம் பாதையைவிட்டுச் சற்றும் விலகேன் என்று பலமுறைகள் தீர்மானம் செய்தோம். வெகு சீக்கிரம் அதை மறந்துவிட்டோம். தேவனை விட்டுப்பின் வாங்கிப்போவதைவிட, தொலைவில் அவருக்குப் பின் நடப்பது நலமே. அன்று பேதுருவுக்கு இருந்த நிலை அவனைத் தொலைவில் பின் தொடரச் செய்தது. இன்று நமக்கு அப்படிப்பட்ட நிலை இல்லையே! விசுவாசம் நம்மை அவருக்கு அண்மையில் கொண்டு சேர்க்கும். ஆனால், அவிசுவாசம் நம்மை அவரை விட்டுப்பிரிக்கிறது. நம்முடைய நன்மைகளில் நஞ்சாக அவிசுவாசம் இருக்கிறது. நாம் கிறிஸ்தவர்கள் என்று சொல்லக்கூடாதபடிக்கு நம்மைப் பெய்யராக்குகிறது. நம்முடைய பக்தி வைராக்கியத்தைக் குலைத்து, இயேசுவுக்கு நம்மைத் தூரமாக்கி விடுகிறது. அவருடைய வழிகளை விட்டு நம்மை விலக்கி, நம்மை அந்நியராக்குகிறது.

நாம், நமது இருதயத்தில் விசுவாசத்தை வளர்த்து நம்மைத் தைரியப்படுத்திக்கொள்ள வேண்டும். இது நமது நடையை வேகமாக்கும். ஆண்டவரை நெருங்கி இருக்கச் செய்யும். நமது இருதயத்தைப் பெலப்படுத்தி, நமது இரட்சகரில் மகிழச்செய்யும். எனது நண்பா, நீ கர்த்தருடன் செல்பவனா? அல்லது பேதுருவைப்போல தூரத்தில் செல்பவனா? எச்சரிக்கையுடனிரு. தூரத்தில் பின்செல்லாமல், அருகிலேயே இரு. அவருடனே நடந்து அவரையே நினைத்து உன் பாரத்தை அவர்மேல் வைத்து, அவரையே சார்ந்திரு. தாயின் மார்பில் ஒட்டியிருக்கும் குழந்தையைப்போலவே அவரில் ஒட்டிக்கொண்டிரு.

இயேசுவோடு ஐக்கியப்பட்டு
அவர் குரலைக் கேட்டிருப்பவன்
தன்னை முற்றிலும் துறந்து
அவரிலேயே ஒளிந்திருப்பான்.

நான் உமது சத்தியத்திலே நடப்பேன்

செப்டம்பர் 20

“நான் உமது சத்தியத்திலே நடப்பேன்” சங். 86:11

தேவனுடைய சத்தியம் மனிதனுடைய விருப்பத்திற்கும் எண்ணங்களுக்கும், வழக்கத்திற்பும் மாறுபட்டே இருக்கும். நமக்கு விருப்பமில்லாததாயிருப்பினும், நன்மையைச் செய்ய அது நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. பயனுள்ள காரியங்களை நமக்குத் தெரிவிக்கிறது. ஆகையால், இந்த வசனத்தின்படி நாம் தீர்மானம்பண்ணுவது நல்லது. தேவனிடத்திலிருந்து வந்ததாகவே ஏற்றுக்கொள்வது. அதை மனப்பூர்வமாய் நம்புவது ஆகும். கிரியையில்லாத விசுவாசம் செத்தது. ஆகையால் தேவ வசனத்தின்படி செய்வதே சத்தியத்தின்படி நடப்பதாகும்.

ஒரு நல்ல கிறிஸ்தவன் உன் சித்தத்தின்படியே என்னை நடத்தும் என்று ஜெபிக்கிறான். உமது வழிகளில் என்றும் நடப்பேன் என்று தீர்மானிக்கிறான். தேவனுடைய சத்தியத்திலே நடந்தால் நமக்கு ஆனந்தம் கிடைக்கும். அது எப்பொழுதும் நமக்கு நற்செய்தியையும், ஆறுதலையும் கொண்டு வருகிறது. அது நமக்குக் கட்டளையாக மாத்திரமல்ல அன்பாகவும் வாழ்த்தாகவும் இருக்கிறது. நம்மைப் பரிசுத்தராகவும், பாக்கியவான்களாகவும் மாற்றுகிறது. நாம் சத்தியத்தை விசுவாசித்து, அதன்படி நடந்து அதை இருக்கும் வண்ணமாகவே அனுபவமாக்க வேண்டுமானால் அதை நம் இருதயத்தில் நிரப்ப வேண்டும். அதை மெய்யாகவே பகிரங்கமாக எங்கும் பிரசங்கிக்க வேண்டும். சத்தியத்தினால் நம்மைத் தினந்தோறும் அலங்கரிக்க வேண்டும். நாம் அழைக்கப்பட்ட அழைப்பிற்குத் தகுதியுள்ளவர்களாகப் பக்தியோடும், உத்தமத்தோடும் நடக்க வேண்டும். நமது நம்பிக்கையை எங்கும் பிரஸ்தாபிக்க வேண்டும். வாக்குத்தத்தங்களைப்பற்றிப் பிடித்துக் கொண்டு அவற்றின்படி நடக்க வேண்டும். நாம் வேத வசனத்தின்படி நடந்தால் நமக்குப் பயமில்லை. வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர்.

நல்ல போதகரே, நான்
நடக்கும் பாதை காட்டிடும்,
நீரே சத்திய மாதலால்
சத்தியவழியைக் காட்டிடும்.

எனக்கு எதிரே உத்தரவு சொல்

செப்டம்பர் 08

“எனக்கு எதிரே உத்தரவு சொல்” மீகா 6:3

நம்முடைய நடத்தை பல நேரங்களில் மாறக்கூடியதாய் இருக்கிறது. தேவனைவிட பெரியதாக உலகத்திலும், உலகத்தில் உள்ளவற்றிலும் அன்பு கூர்ந்தால் தேவன் அங்கு அசட்டை செய்யப்படுகிறார். நாம் அவரைக் குறைவுபடுத்துகிறோம். அவரை நேசிக்காமல் இருக்கும்போது, அவருக்கு மிகுந்த விசனமளிக்கிறோம். இதைக் கண்டு, அவர் மனம் நொந்து, என் ஜனமே, நான் உனக்கு என்ன செய்தேன்? எதினால் உன்னைத் துக்கப்படுத்தினேன் எனக்கு எதிரே பதில் சொல் என்கிறார்.
நீ தனி ஜெபத்தை அசட்டை செய்கிறாயா? கிருபையின் வசதிகளைக் குறித்து கவலையற்றிருக்கிறாயா? வேதாகமத்தை வாசியாமல் அசட்டையாயிருந்து அதை ஒதுக்கி வைத்து விட்டாயா? தேவனே நேசிக்க வேண்டிய நீ உலகத்தின்மேல் அன்பு செலுத்துகிறாயா? ஏன் அவரை விட்டுப் பின்வாங்கினாய்? இதனாலேயே அவர் உன்னிடம் இவ்வாறு கூறுகிறார்.

மேலும் அவர், என்னில் நீ கண்ட குறை யாது? என் அன்பில் குறை கண்டாயா? என் வாக்குகளை நான் நிறைவேற்றவில்லையா? தேவனுக்குரிய மகத்துவமான காரியங்களை நான் செய்யவில்லையா? ஏன் என்னை அசட்டை செய்தாய்? என்னைவிட உலகத்தையும், சத்துருவையும் ஏன் அதிகம் நேசித்தாய்? எனக்கு எதிரே உத்தரவு சொல். என்று கேட்கிறார். விசுவாசியே உன்னிடம் தவறுகள் இல்லையா? உன் ஆண்டவரை நீ துயரப்படுத்தவில்லையா? உன் பாவங்களை அறிக்கை செய்து, மனந்திரும்பி, ஆண்டவரின் அன்பினுள் வந்து சேர். அவருடைய சமுகத்திற்குள் வா. அவருடைய அன்புக்குள் உன்னை மறைத்துக்கொள்.

நான் நிர்பந்தன், தேவா
என்னைத் தள்ளாதிரும்.
உமது சமுகத்திலேயேதான்
நான் என்றும் மகிழட்டும்.

Popular Posts

My Favorites

தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் ஒருவரே

ஜனவரி 03 "தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் ஒருவரே"  1.தீமோ 2:5 மனுஷன் அநேக மத்தியஸ்தர்களை ஏற்படுத்திக் கொள்கிறான். மத்தியஸ்தர் ஒருவர்தான். தேவன் ஒருவரைத்தான் அங்கீகரித்திருக்கிறார். ஒரே மத்தியஸ்தர் போதும். இயேசு கிறிஸ்துதான் அந்த ஒருவர். அவர்...