Home Blog Page 19

நீதிபரன்

நவம்பர் 13

“நீதிபரன்” அப். 7:52

நமதாண்டவரின் நாமங்களில் இதுவும் ஒன்று. அவர் பரிசுத்த தன்மையுடையவர். பூரண நீதிமான். யாவருக்கும் செலுத்த வேண்டியவைகளைச் செலுத்தி முடித்தவர். தேவ குமாரனாக அவர் தமது பரம தகப்பனுக்குக் கீழ்ப்படிந்து அவரைக் கனம்பண்ணினார். பணிவுடனும் பக்தியுடனும் அவருக்குப் பணிபுரிந்தார். தமது ஜனத்திற்குப் பிணையாளியாக, அவர்கள் சகிக்க வேண்டியதைத் தாமே சகித்தார். நியாயப் பிரமாணத்தைக் கனப்படுத்தி மேன்மைப்படுத்தினார். தமது இரத்தத்தால் கழுவப்பட்டவர்களை முற்றும் பரிபூரண பரிசுத்தராக்கினார். அவர் நீதிபரர்.

தமக்குக் கொடுக்கப்பட்ட எல்லாப் பணிகளையும் நிறைவேற்றினார். தமது மக்கள் ஒவ்வொருவருக்கும் தக்கப்படித் தமது தன்மைகளைக் காட்டி வருகிறார். முறைப்படி தம்முடைய சத்துருக்களைத் தண்டித்துத் தம்மை நம்புகிற எல்லாரையும் இரட்சிக்கிறார். அவர் தம் வார்த்தையில் என்றும் மாறாதவர். அவருடைய நடத்தையில் யாதொரு குறையும் காணப்படவில்லை. தம்மிடம் அண்டிவரும் எப்பாவியையும் அவர் தள்ளிவிடார். தமது மந்தையில் வந்து சேருகிற ஆடுகளை அன்பாகக் கண்காணிப்பார். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் அவர் செவி கொடுப்பார். தான் னஒரு பாவியென்று அவர் பாதத்தைக் தேடுகிற எவருக்கும் அவர் இரட்சிப்பைத் தருகிறார். தமது ஊழியக்காரருக்குக் கொடுக்கும் ஒரு கலசம் தண்ணீரைக்கூட அவர் மறந்துவிடாமல், அதற்குகந்த பதிலளிப்பார். அக்கிரமக்காரரையும் அகந்தையுள்ளோரையும் அழித்து, தமது பரிசுத்தவான்களுக்கு என்றும் நித்திய பாக்கியத்தைக் கொடுத்து நீதிபரராகவே விளங்குகிறார்.

நீதிபரர், என் ஆண்டவர்
தம் நீதியால் என்னை நித்தம்
தாங்குவார், அருள்தனை அளித்து
ஆனந்தம் தருவார் பரத்தில்.

என்ன செய்தேன்

நவம்பர் 12

“என்ன செய்தேன்?” எரேமி. 8:6

ஒரு நாளின் இறுதியில் நமது செயல்களை இப்படி விசாரிக்கும் பொழுது, இக்கேள்வி அவசியம் வரும். நம் இருதயத்தை நாம் ஆராய்வதோடு, நமது நடத்தையையும் வேத வசனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இன்றிரவு நம்மையே நாம் சில கேள்விகள் கேட்டுக் கொள்வோமாக. தேவனுக்கு விரோதமாக நான் இன்று என்ன செய்தேன்? அவருடைய கட்டளைகளை மீறினேனா? அவருடைய வசனத்தை விசுவாசியாதிருந்தேனா? அவருடைய தூய ஆவியானவரைத் துக்கப்படுத்தினேனா? அவடைய அன்பு மைந்தனை அசட்டை செய்தேனா? அவருடைய செயல்களுக்கு விரோதமாக முறுமுறுத்தேனா? அவருடைய சித்தத்திற்கு எதிர்த்து நின்றேனா? என் இருதயம் அவருடைய நியமங்களைப் புறக்கணித்து அவருடைய முகத்திற்கு முன்பு விரோதம் பேசியதா? அவருடைய அன்பைச் சந்தேகித்தேனா? அவருடைய உண்மையைப்பற்றி தவறாக நினைத்தேனா? இன்று நான் கர்த்தருக்காக என்ன செய்தேன் என்று சோதித்துக் கொள்வோம்.

நோயாளிகளைச் சந்தித்தேனா? ஏழைகளுக்கு உதவினேனா? துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதல் சொன்னோ? சபையில் என் கடமைகளைச் செய்தேனா? பின் வாங்கியவர்களைத் திருப்ப முயற்சித்தேனா? அவருடைய மகிமைக்காக இன்று நான் செய்ததென்ன? அவருடைய இராஜ்ய விருத்திக்காக என்ன செய்தேன்? என்னையே நினைத்துப் பெருமை கொண்டேனா? கிறிஸ்து நாதருக்காக இன்று என்ன செய்திருக்கிறேன் என்று யோசி. அவருக்காக உழைக்க தீர்மானித்துக்கொள். தீமையை விட்டு விலகி நன்மை செய்.

குற்றம் நிறைந்த மனதோடு
உம்மண்டை நான் வந்தேன்
சுத்தமாக்கும் என்னை நீரே
உம்மண்டை சேர்த்தருளும்.

அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்

நவம்பர் 11

“அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்” மல். 3:3

புடமிடப்படும் வெள்ளி தேவனுடைய மக்களே. அவர்களுக்கு வரும் துன்பங்கள்தான் புடமிடுதல். வெள்ளியை சுத்தமாக்க வேண்டுமென்பதே அவருடைய நோக்கம். அதனால், அவர்களை அவர் புடமிடுகிறார். தமது நோக்கம் நிறைவேறும்வரை சுத்தம்பண்ணுகிறார். சுத்தமாக்குகிற வேலையைத் தாமே செய்கிறார். துன்பத்தை அதிகமாக்கி தம் பணியைக் கவனமாகச் செய்கிறார். நோக்கம் நிறைவேறப் பொறுமையோடு காத்திருக்கிறார். அவருடைய விருப்பம் வீணாகாது. ஒரு சோதனையால் அவருடைய நோக்கம் நிறைவேறாவிடில் வேறு சோதனைகளைத் தருவார். தமது நோக்கம் நிறைவேற்றுவார்.

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, நீங்கள் துன்பங்கள் ஏன் தொடர்ந்து வருகின்றன என்று கேட்கலாம். அதற்குப் பதில் இதுதான் உங்களிலுள்ள களிம்பு இன்னும் நீங்கவில்லை. நேரிடும் பெரும் துன்பங்களனைத்தும், பெரிய இரக்கங்களே. நீ பிற்காலத்தில் ஒளியிலுள்ள பரிசுத்தவான்களைப்போல் அனுபவிக்கும் சுதந்தரத்திற்கு உன்னை ஆயத்தமாக்கும் கருவிகள்தான் அவை. உங்கள் துன்ப நேரங்களில் நீங்கள் கைவிடப்பட்டவர்களென்று நினைக்க வேண்டாம். உன்னைத் தூய்மையாக்கும் வேலையைக் கர்த்தர்தாமே உடனிருந்து செய்கிறார். உங்கள் பெருமை, கோபம், தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படியாமை ஆகிய களிப்புகள் உங்களிலிருந்து நீங்க வேண்டும். நீக்கியவுடன் துன்பங்கள் முடிந்துபோகும். ஒருமுறை அவர் அனுமதியார். போதுமான நேரத்திற்கு மேலாக ஒருகணம்கூட நீங்கள் துன்பத்தை அனுபவிக்க மாட்டீர்கள். இவ்வாறுதான் அவர் உங்களை மகிமைப்படுத்துகிறார். அன்பனே, உன்னைப் புடமிடுகிறவர் உன் கர்த்தர். தம் வேலை முடியும்வரை உன்னுடன் அவர் இருக்கிறார். உனக்கு ஒரு தீங்கும் வராது.

பொன்போல் ஜோதி வீசுமட்டும்
என்னோடிரும் புடமிடுகையில்
சோதனை முடிந்த பின்னர் உம்
முகம் என்னில் காண்பீரே.

தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்

நவம்பர் 10

“தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்” ஓசியா 14:2

தேவனுடைய பிள்ளைக்குப் பாவத்தைப்போல் துன்பம் தரக்தக்கது வேறு ஒன்றுமில்லை. பாவத்திலிருந்து விடுதலைபெற வேண்டும் என்றுதான் அவன் விரும்புகிறான். அதற்காகவும் ஜெபிக்கிறான். அவன் எல்லாவற்றிலும் நீதிமானாக்கப்படும்பொழுது தனது குற்றங்களிலிருந்து விடுதலை பெறுகிறான். இதுமட்டுமல்ல, அவன் செய்யும் எல்லா செயல்களையும் பாவ விடுதலையோடு செய்ய விரும்புகிறான். பாவம்தான் ஒருவனை அலைக்கழித்து வருத்தப்படுத்துகிறது. கர்த்தருடைய பிள்ளை என்று சொல்லும் சாட்சியைக் கெடுத்து, அவனுடைய அமைதியைக் குலைத்து விடுகிறது. ஆகவே, அவன் ஆண்டவரிடம், தன்னிடமிருந்து எல்லாத் தீங்குகளையும் போக்கிவிட வேண்டுமென்று கெஞ்சுகிறான். ஜெபிக்க வேண்டும் என்ற இந்த எண்ணத்தைக் கர்த்தர் அவன் இருதயத்தில் உண்டாக்குகிறார். எந்தத் தேவனுடைய பிள்ளையும் முதலில் தேட வேண்டிய காரியம் இதுதான்.

ஒருவன் தன் அக்கிரமங்களினால் வீழ்ந்து இருக்கலாம். அவன் பரிசுத்தத்தின்மூலமாக மட்டுமே எழுந்திருக்கக்கூடும். தன் சொந்த புத்தியீனத்தினால் அவன் விழுந்திருக்கலாம். கர்த்தருடைய இரக்கத்தினால் அவன் எழுந்திருக்கக் கூடும். தேவன் எல்லா அக்கிரமங்களையும் நீக்கி போடுவாரா? ஆம், நீக்கிப்போடுவார். தமது பலியினால் எல்லாப் பாவங்களையும் நீக்குவார். தம்முடைய வசனத்தை நிறைவேற்றிப் பாவத்தின் வல்லமையை அகற்றுவார். மரணத்தை ஜெயிக்க பெலன் தருவார். ஆகவே, ஒவ்வொரு நாளும், கர்த்தாவே, என்னை முற்றிலும் பரிசுத்தமாக்கும். என் ஆத்துமா ஆவி, சரீரம் முழுவதையும் கிறிஸ்துவின் வருகைமட்டும் குற்றமில்லாததாகக் காப்பாற்றும். என்று ஜெபிப்பதால், நாம் மறுபடியும் பிறந்தவர்கள் என்று சாட்சியும் பெறுவோம். அந்த ஜெபத்தைக் கர்த்தர் கேட்பார். நீங்கள் முற்றும் பரிசுத்தமாவீர். அவர் உண்மையுள்ளவர். அவர் அப்படியே உங்களைப் பரிசுத்தமாக்குவார்.

நோயையும் துன்பத்தையுமல்ல
பாவத்தையே என்னிலிருந்து நீக்கும்
எவ்வாறு பெரும்பாவமாயினும்
தயவாக அதை மன்னித்தருளும்.

உங்கள் மீட்பு சமீபமாய் இருக்கிறது

நவம்பர் 09

“உங்கள் மீட்பு சமீபமாய் இருக்கிறது” லூக்கா 21:28

நீங்கள் பெறப்போகிற பூரண மீட்புக்காக உங்கள் மீட்பர் பூமியில் வந்து மீட்பின் கிரயத்தை செலுத்தினார். இப்போது அவர் பிதாவின் வலது பக்கத்தில் வானத்திலும் பூமியிலும் அதிக அதிகாரமுள்ளவராக வீற்றிருக்கிறார். அவர் வெகு சீக்கிரம் மீண்டும் வந்து உலகை நியாயந்தீர்ப்பார். நீங்கள் இயேசு கிறிஸ்துவில் நித்திரையடையலாம். உங்களுக்கு அருமையானவர்கள் கல்லறைகளில் நித்திரையாக இருக்கலாம். ஆனால் கொஞ்கக் காலத்தில் இயேசு வருவார். அப்பொழுது மரித்துப்போன உங்களுக்கன்பானவர்களை உயிரோடு எழுப்புவார். நீங்களும் ஒருவேளை கிறிஸ்துவுக்குள் மரித்திருந்தால், தூசியை உதறித்தள்ளி சாவாமை என்னும் சிறப்பு ஆடையணிந்து கொண்டெழும்புவீர்கள். தேவனுடைய பிள்ளைகளாக மகிமை, வல்லமை முழுமையை அடைவீர்கள். பரம பிதாவினால் மீட்கப்பட்ட முழுக் குடும்பத்துடனும் கொண்டு சேர்த்துக் கொள்ளப்படுவீர்கள். அப்பொழுது உங்கள் மீட்பு முழுமையாகும்.

இப்பொழுது அம்மீட்பு சமீபித்திருக்கிறது. ஒவ்வொரு நாள் முடிய முடிய, அது நெருங்கி வருகிறது. அந்த நாளின்மேல் விருப்பம் கொள்ளுகிறோமா? அப்போஸ்தலனைப்போல ஆவியானவரின் முதற்பலனைப் பெற்ற நாமும், நம்முடைய மீட்பாகிற புத்திர சுவகாரத்தைப் பெறுகிறதற்குக் காத்திருந்து நமக்குள்ளே தவிக்கிறோமா? அப்படியானால், உங்களது மீட்பு நெருங்கியிருக்கிறது என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். ஏனென்றால், நீங்கள் விசுவாசிகளான போது, உங்கள் மீட்பு சமீபமாயிருந்ததைக் காட்டிலும், இப்போது அது மிக சமீபமாயிருக்கிறது.

மீப்பின் நாள் கண்டு மகிழ்வேன்
மீட்பரோடு பாக்கிறனாய் வாழ்வேன்
பரலோகத்தில் எல்லாருடனும் நான்
பரமனைத் துதித்து மகிழுவேன்.

மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்

நவம்பர் 08

“மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்” சங். 100:2

நம்முடைய தேவன் இணையற்ற பேறுகள் உள்ளவர். தம்முடைய மக்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியோடிருக்கவே அவர் விரும்புகிறார். ஆதி முதல் அவர் யாவற்றையும் அவர்களுக்காக சேமித்து வைத்திருக்கிறார். ஆனால், பாவம் அவர்களுக்கு வரும் நன்மைகளைக் கெடுத்து போட்டது.

இப்பொழுதும் நாம் அவருக்கு ஊழியம் செய்யும் பாக்கியம் பெற்றிருக்கிறோம். அதை அவர் விரும்புகிறார். நித்திய சுவிசேஷத்தில் உனக்கு பாக்கியமானதை சேமித்து வைத்திருக்கிறேன். நீ அதை விசுவாசி. இலவசமாக உனக்கு பாவமன்னிப்புக் கிடைக்கும். முழுமையான நீதியை உனக்குத் தருவேன். உன் இதயத்தைச் சுத்திகரிப்பேன். உனது குறைவுகளை நிறைவு செய்வேன். என் சமுகத்தின் உன்னை ஏற்றுக்கொள்வேன். உன் வாழ்நாளெல்லாம் என் கிருபையைத் தருவேன். மரண பரியந்தம் உன்னை மகிமைப்படுத்துவேன் என்கிறார்.

நீங்கள் மகிழ்ச்சியுள்ள  பாக்கியவான்களாகக் கர்த்தருக்கு ஆராதனை செய்ய, உங்களை உற்சாகப்படுத்த இது போதுமே, தேவனுடைய ஊழியம் நமக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும். நாம் புத்திரசுவிகாரம் பெற்றது உண்மை என்ற அறிவுடன் உள்ளான அன்புடன் அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும். மறுமையில் நாம் பரலோகத்தில் ஆளகை செய்யப் போகிறோம் என்னும் நம்பிக்கையுடன், இன்மையில் அவருக்கு நாம் ஊழியம் செய்வோம். நமது நடத்தையினால், நான் கர்த்தருக்குச் சந்தோஷமாய் ஊழியம் செய்கிறேன். நான் வேறு எருக்கும் ஊழியம் செய்யேன் என்று மற்றவர்களுக்குக் காட்ட வேண்டும்.

இயேசுவே என் பாவம் நீக்கி
என்னை இரட்சித்திடும்
மகிழ்ச்சியோடு உம்மை
நான் ஆராதிக்கட்டும் என்றும்.

தேவனை ஸ்தோத்தரித்து தைரியம் அடைந்தான்

நவம்பர் 07

“தேவனை ஸ்தோத்தரித்து தைரியம் அடைந்தான்” அப். 28:15

பவுலுக்கு அவன் சிநேகிதர்கள் காட்டின அன்பு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்து இதற்காக அவன் தேவனைத் துதித்து தைரியம் அடைந்தான். நாம் பெற்றுக்கொள்ளும் எல்லா நன்மைகளுக்காகவும் நாம் நன்றி கூற வேண்டும். நன்மையான எதுவானாலும் தேவனிடத்தில் இருந்துதான் வருகிறது. சகல நன்மைகளுக்கும் அவர்தான் காரணர். ஆகவே, ஒவ்வொரு நாளும் அவருக்கு துதிகளைச் செலுத்த வேண்டும். அவர் நம்மை மோசங்களிலிருந்து காத்து, துன்பங்களிலிருந்து விடுவித்து, தயவாக நன்மைகளைக் செய்கிறார். ஆகவே இப்போது நாம் அவருக்கு நன்றி சொல்லுவோம்.

இனிமேல் நமக்கு நேரிடும் குறைவுகளில் நமக்குத் தேவையானதைத் தருவார். நமக்காக சிறப்பான வாக்குகளைக் கொடுத்திருக்கிறார். சகலமும் நமது நன்மைக்காக கிரியை செய்ய நிச்சயம் செய்திருக்கிறார். தேவன் நம்மைக் கைவிடுவதில்லை என்று வாக்களித்திருக்கிறார். ஆகவே, தைரியமடைந்து துதி செலுத்தி, நன்றியுள்ளவர்களரிருப்போம். நமது வழி கரடு முரடானதாக இருக்கலாம். சத்துருக்கள் நிறைந்ததாக இருக்கலாம். துன்பங்கள் சூழ்ந்ததாக இருக்கலாம். ஆனாலும், நம்முடைய பெலன் அதைத் தாங்க போதுமானதாக இருக்கலாம். நமக்குத் தேவையானது கட்டாயம் கிடைக்கும். நமது காரியத்தை அவர் வாய்க்கப்பண்ணுவார். இனி சாத்தான் சொல்வதைக் கேளாதே. அவிசுவாசத்திற்கு இடங்கொடாதே. நமக்கு இனி என்ன நடக்கும் என்று பயப்படாதே. இதுவரையில் நம்மை விடுவித்தவர் இன்னும் நம்மை விடுவிப்பார். இதுவரை கர்த்தர் செய்தவைகளை எண்ணிப்பார். உனக்கு அவர் காட்டின இரக்கத்தை சிந்தி. அவர் வாக்குகளை நினை. அதற்காக நன்றி கூறு.

இயேசுவே மீட்டு வழிநடத்தும்,
உம்மை நம்பி நடப்பேன் உம்மோடு
உம் நடத்துதலுக்காக நன்றி
உம் வாக்குகளுக்காக நன்றி.

நீ மரணபரியந்தம் உண்மையாயிரு

நவம்பர் 06

“நீ மரணபரியந்தம் உண்மையாயிரு” வெளி 2:10

தேவன் தமது ஜனத்திற்கு அதிகம் நல்லவர். தமது வாக்குத்தத்தங்களை எப்போதும் நிறைவேற்றுபவர். தமது மக்களின் வேண்டுதல்கள் வீணென்று ஒருபோதும் நினைப்பதேயில்லை. தமது மக்கள் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று அவர்களைத் தூண்டுகிறார். இந்த வசனம் எபேசு சபையிலுள்ளவர்களுக்குள் கூறப்பட்டது. அவர்கள் வசனத்தைப் பிரசங்கிப்பதிலும், ஆத்துமாக்களுக்காக விழித்திருப்பதிலும் கிறிஸ்துவுக்காக வாழ்வதிலும், பரிசுத்தத்தையும் சமாதானத்தையும் விரும்புகிறவர்களாக இருக்க வேண்டும்.

சபையின் போதகர்கள் சபையில் எப்போதும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். விசுவாசிகள் சத்தியத்தைப் பிடித்துக்கொண்டு அதன்படி நடந்து எப்போதும் அதையே பிரசங்கிக்க வேண்டும். தங்களது மனசாட்சிக்கு உண்மையாயிருந்து அதற்குக் கீழ்ப்படிந்து, நீதியாய் உத்தமமாய் நடக்க வேண்டும்.

தன்னுடைய வாழ்வில் தேவனுடைய வார்த்தையை நம்பி, தேவ சித்தத்தின்படி நடந்து, தேவனுக்கா துன்பத்தையும் சகிக்க வேண்டும். உலகத்தாரிடத்தில் உண்மையாக வாழ்ந்து, பாவத்தைக் குறித்து, அவர்களை எச்சரித்து, கிருபையால் கிடைத்த நற்செய்தியைக் கூறி அவர்களை இயேசுவண்டை வழி நடத்தவேண்டும். பரிசுத்தவான்களிடத்திலும் உண்மையைக் காட்டி, அவர்களை நேசித்து, துன்பத்தில் அவர்களைத் தேற்றி அவர்களின் கஷ்டத்தில் அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும். நீ மரணபரியந்தம் உண்மையாயிரு என்றால், மரணம் வந்தாலும் உண்மையாயிருப்பதைத் தவறவிடாதே என்று பொருள். அப்படி நீ இருந்தால் ஜீவ கிரீடத்தைப் பெறுவாய்.

உண்மையாயிருக்க உதவி செய்யும்
விசுவாசத்தால் எமது இடைகட்டும்
உயிர் மெய்யிலென்றும் நிலைத்து
உயிர் மகுடம் பெற்றிடச் செய்யும்.

தேவன் என்னென்ன செய்தார்

நவம்பர் 05

“தேவன் என்னென்ன செய்தார்” எண். 23:23

தேவன் தமது ஜனத்தைப் பாவத்தினின்றும், அறிவீனத்தினின்றும் விடுவித்து, அவர்களுக்கு அதிகமான நன்மைகளைக் கொடுக்கிறதினால் புறவினத்தாரும் அதைப் பார்த்து பொறாதை கொள்ளலாயினர். தம்முடைய சபையைத் தேவன் தமது குமாரனின் பாடுகள் மரணத்தால் மீட்டுக்கொண்டார். அவருடைய சபையைச் சேர்ந்த அவருடைய அவயவங்களை உயிர்ப்பித்து குணமாக்கி தூய்மைப்படுத்துகிறார். அவர்களைப் பூமியின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஒன்றாகக் கூட்டி சேர்க்கிறார். அவர்களின் குறைகளைச் சந்தித்துப் பராமரித்து பாதுகாத்து தமது வல்லமையால் அவர்களுடைய விசுவாசத்தின்மூலம் இரட்சிப்பைத் தந்து காக்கிறார்.

தமது ஆத்துமாவைப் பிசாசின் பிடியிலிருந்து விடுவித்து தமது குமாரனுடைய வீட்டிலேகொண்டு போய்ச் சேர்க்கிறார். அவரின் இரத்தத்தினால் நம்முடைய பாவங்களை மன்னித்து, அவரின் கிருபையினால் நீதிமான்களாக்குகிறார். நமது இருதயத்தில் விசுவாசத்தை ஏற்படுத்திக் கிருபையினால் மேலான நன்மைகளைக் கொடுத்து, பரிசுத்த ஆவியால் நம்மை நிரப்புகிறார். நமக்காக சத்துருக்களை வென்று நமக்குள் இருக்கும் தீய எண்ணங்களை நீக்குகிறார்.

தேவன் எவ்வளவு பெரிய காரியங்களை நமக்குச் செய்திருக்கிறார்? அற்புதமானவைகளை நடப்பித்திருக்கிறார். யாருக்காக இவைகளைச் செய்தார்? பாவிகளான நமக்காகத்தான். ஏன்? தமது நாம மகிமைக்காகவே.

பிரியமானவர்களே, தேவன் இம்மட்டும் செய்த காரியங்கள், வரும் நாள்களுக்கு நம்மைத் தைரியப்படுத்த வேண்டும். அவருடைய வாக்குத்தத்தங்கள் இன்னும் நிறைவேறும். தாம் சொன்னபடியெல்லாம் செய்தார்.

தேவன் இம்மட்டும் செய்தது
இனி செய்வதற்கும் ஆதாரம்
விசுவாசக் குறைவின்றியே நாம்
அவரில் தைரியமாயிருப்போம்.

என் தேவன் என் பெலனாய் இருப்பார்

நவம்பர் 04

“என் தேவன் என் பெலனாய் இருப்பார்” ஏசாயா 49:5

தேவகுமாரனாகவும், நமக்கு நல்முன்மாதிரியாகவும், தலைவருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுக்குத் தேவன் பெலனாயிருந்தார். தமது பிதாவின் வார்த்தையின்மேல் விசுவாசம் வைத்து அவர் வாழ்ந்தார். சத்துருவாகிய சாத்தானால் அதிகமாய் சோதிக்கப்பட்டார். எனினும் பிதாவால் பிழைத்திருந்தார். அப்படியே நாமும் பிழைத்திருப்போம். தமது அளிவில்லாத அன்பினால் நம்மை நேசிக்கிறார். தமது உடன்படிக்கையை நமக்கு நன்மையாகவே செய்து முடித்தார்.

அவரின் வாக்குத்தத்தங்கள் நமக்கெனவே ஏற்படுத்தப்பட்டவை. ஆகையால் பெரிய சோதனைகள், போராட்டங்கள், மாறுதல்கள் வரும்போதும், கடைசி சத்துருவான மரணம் வரும்போதும் என் தேவன் என் பெலனாய் இருப்பார் என்று சொல்லும்படியாக இருப்போமாக.

நான் உன்னைப் பெலப்படுத்துவேன் என்று அவர் கூறியிருப்பதால், தைரியத்தோடும் விசுவாசத்தோடும் இருப்போம். நமது பெலவீனத்தை நாம் உணரும்போது விசுவாசத்தில் பெருகுவோம். என் பெலன் உன் பலவீனத்தில் பூரணமாய் விளங்கும் என்று அவர் கூறியிருக்கிறாரே. அப்படியே அவருடைய பெலன் நமக்கிருக்கிறது. அவருடைய ஒத்தாசையால் இந்நாள்வரைக்கும் வாழ்கிறோம்.

எனவே, வருங்காலத்திலும், அவரை நம்பி கடமையை நாம் நிறைவேற்றும்பொழுது எந்தச் சத்துருவையும் நாம் எதிர்க்கும்பொழுதும், ஆண்டவரின் வல்லமையால் நடப்பேன். உம்முடைய நீதியைப் போற்றுவேன் என்று நாம் தீர்மானிக்க வேண்டும். கர்த்தருடைய பெலத்தால் நான் கடைசி மட்டும் நிற்பேன். சுபீட்சத்தோடு பரலோகம் போவேன். அவர் கொடுத்த சிலாக்கியத்திற்காக மகிழ்வேன். என் தேவன் எனது பெலனாய் இருப்பார் என்பதை தியானித்து அவரிடத்தில் இன்றிரவு வேண்டிக்கொள்வோம்.

என் தேகம் மாண்டு போனாலும்
என் தேவன் என் பெலனாவார்
இதனால் நான் பெலனடைவேன்
என் விசுவாசம் வளர்ப்பேன்.

Popular Posts

My Favorites

பெத்லகேமில் இயேசு பிறந்தார்

டிசம்பர் 25 "பெத்லகேமில் இயேசு பிறந்தார்" (மத்.2:1) இயேசு கிறிஸ்து எப்பொழுது எந்த நாளில் பிறந்தார் என்று திட்டவட்டமாகத் தெரியாது. அது நமக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் பிறந்தார் என்ற செய்திமட்டும் மிகத் தெளிவாக நமக்குக்...