முகப்பு வலைப்பதிவு பக்கம் 24

மற்றவர்கள் தூங்குகிறதுபோல் நாம் தூங்காமல்

யூலை 07

“மற்றவர்கள் தூங்குகிறதுபோல் நாம் தூங்காமல்.” 1.தெச.5:6

தூக்கம் இங்கே உவமானமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சரீர இளைப்பாறுதலைப்பற்றியல்ல, மனதின் தன்மையைப்பற்றியே அப்போஸ்தலன் இப்படிச் சொல்கிறார். விசுவாசித்து ஜெபிக்கிற பரிசுத்த விருப்பங்களுக்குரிய வல்லமை நின்றுப்போயிருப்பது இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. வேலைசெய்ய வேண்டிய நேரத்தில் தூங்குவது தவறல்லவா? இது மரணத்துக்கு ஒப்பானது. பேர் கிறிஸ்தவர்கள் தூங்குகிறார்கள். ஆனால் நாமோ மற்றவர்கள் தூங்குகிறதுப்போல் தூங்கக்கூடாது. அப்படி நாம் தூங்கினால் உவாட்டர்லூ என்னும் போர்க்களத்தில் கொடிய சண்டை முடிந்த பிறகு காணப்படும் செத்தவர்கள், காயப்பட்டவர்கள் ஆகியோர் நடுவே தூங்குவதுப்போல, ஒரு பட்டணத்தில் பெரிய கொள்ளை நோய் வந்தபோது அந்த நோய்க்கு மாற்று மருந்து நம்மிடம் இருந்தும் நாம் தூங்குகிறவர்கள்போல் இருப்போம்.

ஒரு தீவில் அநேக அடிமைகள் இருக்க அவர்களை விடுதலையாக்கும் விடுதலை சாசனம் நம்மிடம் இருந்தும் நாம் தூங்குகிறவர்கள்போல் இருப்போம். அதிக பைத்தியக்காரர்கள் இருந்தும் ஊரில் நாம் அவர்களைக் குணப்படுத்தக்கூடிய திறமை இருந்தும் தூங்குகிறவர்கள்போல் இருப்போம். போதுமான உணவு இருந்தும் பட்டினியால் சாவதுப்போல் இது இருக்கும். பகலில் அறுவடை நேரத்தில் தூங்குகிற சோம்பேறிபோல இருப்போம். அறுவடை நேரத்தில் பெரும் புயல் அடித்து எஜமானுடைய விளைச்சல் நாசமாகும் சமயத்தில் தூங்கும் வேலைக்காரனைப்போல இருப்போம். இது சத்துரு போர்களத்தில் இருக்கும்போது விழித்திருக்கவேண்டிய போர்ச்சேவகன் தூங்குகிறதுபோல இருக்கும்.

கிறிஸ்துவர் என்று சொல்பவர்
தூங்குகிறதைப் பார்
எழுந்து கீழ்ப்படிந்து
ஓட்டத்தை ஓடிமுடி.

உன் நோய்களையெல்லாம் குணமாக்கி.

யூலை 06

“உன் நோய்களையெல்லாம் குணமாக்கி.” சங். 103:3

கர்த்தர் ஒருவரே பரிகாரி. அவரே சரீரத்தையும், ஆத்துமாவையும், குணமாக்குகிறவர். விசேஷமாய் அவர் ஆத்துமாவுக்கும் பரிகாரி. எல்லா வியாதிக்கும் துன்பத்துக்கும் காரணம் பாவமே. பாவத்துக்கு இருப்பிடம் இருதயமே. இந்த வியாதி வுருத்தமானதும் அருவருப்பானதும் ஆகும். இது ஞாபகத்தையும் பாசத்தையும், மனசாட்சியையும், சித்தத்தையும் முழு மனுஷனையும் கெடுக்கும். நம் எல்லாருக்கும் இந்த வியாதி உண்டு. இதனால் நாம் யாவரும் வருத்தப்படுகிறோம். கர்த்தராகிய இயேசுதான் நம்மைக் குணமாக்க முடியும். அவர் பெரிய பரிகாரி.. அவரிடத்தில் போனால் சுகமடைவோம்.

இப்படி நீங்கள் தைரியம் கொள்ளும்படி அவர் எப்படிப்பட்டவர் என்று கவனியுங்கள்.அவர் அளவற்ற ஞானமும், உருக்கமும், திறதையும் உள்ளவர். அவரைப்போல் அனுபவம் மிக்க வைத்தியர் எவருமில்லை. அவர் தொட்டால் எந்த வியாதியானாலும் சுகமாகிவிடும். அவரின் ஒளடதமோ திரு இரத்தம், திரு வசனம், பரிசுத்தாவியானவர் என்பவைகள். துன்பங்களாலும், நஷ்டங்களாலும், மெய் உணர்வினாலும், இரகசிய கிரியைகளினாலும் இவைகளை நம்மில் பெலன் செய்யப்பண்ணுகிறார். அவர் சிகிச்சை அளித்து சுகமடையாமல் இருப்பது யாருமல்ல. தாவீதின் வியாதி கொடியதாயிருந்தாலும், என் நோய்களையெல்லாம் குணமாக்கினார் என்கிறான். இதை உணர்ந்து சொல்கிறான். ஆனால் இதை நம்பலாம். நீ பாவியானால் நீ வியாதிஸ்தன். உன் வியாதி மோசமானது. நீ இயேசுவண்டை போ. சத்தியத்தைவிட்டு விலகினவனே, நீ வியாதியாய் இருக்கிறாய். நீயும் இயேசுவண்டைக்கு போ. விசுவாசியே, நீ முற்றிலும் சுகமாக வேண்டுமென்று விரும்புகிறதில்லையா? அப்படிhனால் இன்றே இரட்சகரண்டைக்குப் போ. கர்த்தாவே உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று சொல்.

மன்னித்துக் கிருபை அளித்து
பாவப் பிணியை நீக்கும்
ஆத்தும சுகம் ஈந்து
பூரண சுத்தம் தாரும்.

விடாய்த்திருந்தும் பின்தொடர்ந்தார்கள்

யூலை 05

“விடாய்த்திருந்தும் பின்தொடர்ந்தார்கள்.” நியா. 8:4

கிதியோனுடைய போர்ச் சேவர்கள் அதிகம் வருத்தப்பட்டார்கள், விடாய்த்துப் போனார்கள். ஆகிலும் அவர்கள் கர்த்தர் தெரிந்துகொண்ட சேனை. தங்கள் தலைவனின்பின் அவர்கள் உறுதியாய் சென்றார்கள். பிரயாசத்தினாலும், தங்கள் வெற்றியினாலும், உணவில்லாமையினாலும், இளைத்துப் போனார்கள்.

முற்பிதாக்களின் காலத்தில் அற்புதங்கள் செய்யப்பட்ட யோர்தான் நதிக்கு சமீபத்தில், வெற்றி முற்றுப்பெற்ற கடைசி நேரத்தில்தான் விடாய்த்துப் போனார்கள்.
கர்த்தருடைய ஜனங்களைப்பற்றியும் இப்படியே சொல்லலாம். இவர்கள் கர்த்தருக்கு அருமையானவர்களாய் இருந்தும், சிலுவையின் போர்ச்சேவகராய் இருந்தும் சுமைகளாலும், துன்பங்களாலும், யுத்தங்களாலும், ஞானாகாரக் குறைவினாலும், அடிக்கடி இளைத்து, சோர்ந்து மனமடிவாகிறார்கள். அப்படியிருந்தும் அவர்கள் பின் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பின்தொடருவதை விடுகிறதும் இல்லை. மாம்ச சிந்தைக்கு இடங்கொடுக்கிறதுமில்லை. தேவன் இதைச் செய்வாரோ, மாட்டாரோ என்று யோசிக்கிறதுமில்லை. அவர் கைவிட்டாரோ இல்லையோ என்று வீணாய் கங்குகிறதுமில்லை. இவர்கள் தேவன் கொடுத்த உத்தரவு பிரகாரம் தாங்கள் மேற்கொண்ட சத்துருக்களைப் பின் தொடர்ந்தார்கள். வாக்குத்தத்தங்கள் இவர்களை உற்சாகப்படுத்தின. ஆகவே முழு நிச்சயத்தோடும், விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும், தொடர்ந்து போகிறார்கள்.

நீ சோர்ந்து போகிறாயா? அது உன் ஜெபத்தில், பிரயாசத்தில் பிரதிபலிக்கிறதா? இன்னும் தொடர்ந்து போ. பெலவீனமாய் இருந்தாலும் தொடர்ந்து போ. தேவன் உன்னோடு இருப்பதால் தொடர்ந்து போ.

சத்துருவை ஜெயிக்கும் மட்டும்
ஜெபித்து நின்று போராடு
ஜெயம் கடைசியில் வரும்
ஜீவ கிரீடமும் கிடைக்கும்.

ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது.

யூலை 04

“ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது.” சங். 63:3

உயிரோடு இருப்பதுதான் ஜீவன். நல்வாழ்வு என்பது அதன் பொருள். சுகமாய், மேன்மையாய், சமாதானத்தோடு குறைவின்றியிருப்பது. மற்றவர்களோடு நல்ல ஓர் உறவை வைத்து மனதிருப்தியோடிருந்தால் அரசன் தன் சிம்மாசனத்திலும், வியாபாரி தன் வியாபாரத்திலும் மாணவன் தன் படிப்பிலும் திருப்தி அடைவான். ஜீவனோடிருப்பவனை நற்காரியங்கள் சூழ்ந்திருக்கும். ஆனால் தேவன் காட்டும் கிருபை எது? அன்பான வார்த்தைகளும், பட்சமான செயல்களுமே. தம்முடைய குணாதிசயங்களை வெளிப்படுத்துதலும் ஆகும். நம்மை ஞான நன்மைகளால் அவர் திருப்தி செய்கிறார். இந்த நன்மைகள் ஜீவனைவிட மேன்மையானவை. ஏனெனில் அவை மேலான கனத்தைக் கொடுக்கிறது. அதிக இன்பங்களை அளிக்கிறது.

இந்தக் கிருபைதான் மேலான காரியங்களை எதிர்பார்க்கும்படி நம்மை ஏவிவிடுகிறது. நம்மை அதிக பத்திரமாய் காக்கிறது. அது ஜீவனைவிட நல்லது. அது நித்திய நித்தியமானது. ஆத்துமாவின் தன்மைக்கும் மிகவும் ஏற்றது. மகிமை நிறைந்தது. அது கலப்பற்ற நன்மை. அழியாத இன்பம், குறையாத ஐசுவரியம். ஆகையால்தான் சங்கீதக்காரன் இது ஜீவனைவிட நல்லது. ஆகவே என் உதடுகள் உம்மை துதிக்கும் என்று சொல்லுகிறான். மற்றவர்களோடு பேசும் போதும் அதைப் புகழ்ந்து பேசுவேன் என்கிறான். என் ஜெபத்தில் உமக்கு நன்றி செலுத்துவேன். அதை எனக்குத் தெரியப்படுத்தினதற்காகவும் இப்போது அது எனக்கு கிடைத்தமைக்காகவும், எப்போதுமே அதை அனுபவிப்பேன் என்ற நம்பிக்கைக்காகவும் உம்மைத் துதிக்கிறேன் என்கிறான். நண்பரே, ஜீவன் உனக்கு அருமையானதுதான், ஆனால் அதிலும் தேவகிருபை பெரிதானதென்று எண்ணுகிறாயா?

உம் தயவும் அன்பும்
ஜவனிலும் நல்லதே
தேவ இரக்கம் பூமியைப்
பரலோகமாக்குகிறது.

அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்

யூலை 03

“அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.” மீகா 7:18

தேவனை விரோதிப்பவர்கள்மேல்தான் தேவ கோபம் வரும். தேவனுடைய கோபம் யார்மேல் வருகிறதோ அவர்களுடைய நிலை மகா வருத்தமானது. கொஞ்ச காலம் அவருடைய ஜனங்களுக்கு விரோதமாகவும் அது வரலாம். ஒவ்வொருவனும் நீர் என்மேல் கோபமாயிருந்தீர் என்று சொல்லக்கூடும். தேவனுடைய கோபத்திற்கு காரணம் பாவம். அவர் தம் பிள்ளைகள்மேல்தான் கோபப்படுகிறார். அது தகப்பனுக்கொத்த கோபம். நம்மைச் சீர் செய்யவேண்டும் என்பதே அவருடைய கோபத்தின் நோக்கம். அந்தக்கோபம் பல விதங்களில் நம்மை வருத்தப்படுத்தக்கூடும்.

தேவ கோபத்தால் உலக நன்மைகள் கெட்டு ஆவிக்குரிய ஆறுதலும், சந்தோஷமும் குறைந்து போகலாம். அது குறுகிய காலம் தான் இருக்கும். அவர் கோபம் ஒரு நிமிஷம். அவருடைய தயவோ நீடிய வாழ்வு. தேவன் நம்மேல் கோபமாய் இருக்கும்போது ஒரு மணிநேரம் ஒரு நாள்போலவும், ஒரு மாதம், ஒரு வருடம்போலவும் இருக்கும். ஆகையால் அவர் எப்பொழுதும் கோபம் வைக்கிறதில்லை என்ற உண்மை நமக்கு இன்பமாய் இருக்கவேண்டும். கோபப்படுவது அவர் இயல்பு அல்ல. அவர் சுயசித்தமாய் கோபிக்கிறவரும் அல்ல. அவர் வெகுகாலம் கோபம் வைக்கிறதில்லை. அவர் பிராயசித்த பலியை நோக்கி சீரடைந்தவனுடைய விண்ணப்பத்திற்குப் பதிலளிக்கிறார். தம்முடைய உடன்படிக்கையை நினைக்கிறார். இரக்கம் காட்டுவதே அவருக்குப் பிரியம் என்று நிரூபிக்கிறார். அவருடைய கோபம் பாவிகளுக்கு விரோதமாக, பாவத்தால் நெருப்பு மூட்டப்பட்டு எப்பொழுதும் எரியும். ஆனால் அவர் பிள்ளைகளின்மேல் வைக்கும் கோபம் சீக்கிரம் அணைந்துப்போம். தேவனின் அன்பு என்கிற நீர் அதை அவித்துப்போடும்.

பாவத்தை ஒழித்து
முற்றும் மன்னிப்பார்
கோபம் ஒரு நொடி மாத்திரம்
அவர் அன்போ என்றும் உள்ளது.

இராக்காலம் வருகிறது

யூலை 02

“இராக்காலம் வருகிறது.” யோவான் 9:4

இரவு என்பதில் பயமும், திகிலும் உண்டு. இராக்காலம் மரணத்தின் அறிகுறி. மரணத்திற்குப் பிறகு இந்த உலகில் நன்மை செய்வதற்கான சந்தர்ப்பம் கிடையாது. ஆகவே, நிகழ்காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ள வேண்டும். மரணம் வரும்போது நம்முடைய எல்லா வேலைகளும் முடிந்து விடும். முடியாவிட்டால் அரைகுறையாய் அதை விட்டுப்போக வேண்டும். ஆதலால் காலம் இருக்கும்போதே அதை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மரணம் வரும்போது நாம் சிநேகிதரை விட்டுப் போக வேண்டும். ஆகவே உயிருள்ளபோதே அவர்கள் நட்பைக் காத்துக்கொள்வோமாக. ஒரு நாள் மரணம் வரும்போது எல்லாரையும்விட்டு இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்போம். நம்முடைய ஆத்துமா அமைதியாய் இளைப்பாறும். அது ஆண்டவர் சமுகத்தில் தங்கி அங்கே இளைப்பாறி திருப்தி அடையும்.

இராக்காலம் வருகிறது. அது தூரத்தில் இல்லை. சிலருக்கு அது வெகு அருகில் இருக்கலாம். திடீர் என்றும் வரலாம். ஆகவே நாம் ஆயத்தமாய் இருக்க எச்சரிக்கப்படுகிறோம். இயேசுவை விசுவாசித்தவர்களாக காலத்தை ஆதாயப்படுத்தி, நாள் முழுவதும் வேலை செய்து, இரவுக்கு ஆயத்தப்பட்டவர்களாய் இருப்போமாக. நம்முடைய வேலை முடிந்தது. தேகம் இளைத்தது. பரம பாக்கியத்தின் பேரில் ஆசை மிகுந்தது. எப்போது பேரின்ப வீட்டுக்குப் போகலாம் என்று சந்தோஷமாய் எதிர்பார்க்கிறவர்களைப்போல இருக்கக்கடவோம்.

தேவனிடம் கிட்டி சேர்ந்து
அவரைப்போல் இருப்பது
எப்போ கிடைக்கும், அப்போ
பாவம் முற்றிலும் ஒழியும்.

அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து

யூலை 01

“அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து.” சங்.103:3

தினந்தோறும் நாம் பாவம் செய்கிறபடியால் தினந்தோறும் நமக்கு மன்னிப்பு தேவைப்படுகிறது. நம்முடைய பாவம் கொடிய தன்மை உடையது. இரத்தக் கிரயத்தைக் கொடுத்து, நம்மை மீட்ட ஆண்டவருக்கு விரோதமாக நாம் பாவம் செய்கிறோம். தன் எஜமான் வீட்டில் வாசம் செய்து அவருடைய போஜனத்தை அவரோடு புசித்து, அவருடைய உதாரத்துவத்தால் சகலத்தையும் பெற்று அனுபவிக்கிற ஊழியக்காரன், இப்படி தனக்கு தயவு காட்டுகிற எஜமானுக்கு விரோதமாய் பாவம் செய்கிறதுபோல நாமும் பாவம் செய்கிறோம். பாசமாய் வளர்க்கப்பட்ட பிள்ளை, ஒரு நல்ல பட்சமுள்ள அன்பான தகப்பனுக்கு விரோதமாய் பாவம் செய்கிறதுப்போலவே நாமும் பாவம் செய்கிறோம்.

நம்முடைய பாவங்கள் அநேகம். அடிக்கடி செய்கிறோம். அது பல வகையானது. அவைகளினின்று தப்ப முடியாது. ஆயினும் கர்த்தர் நம்முடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னிக்கிறார். நிறைவாயும், இலவசமாயும், எவ்வித குறைவுவராமல் மன்னிக்கிற தேவனைப்போல வேறு ஒருவரும் இல்லை. இந்த மன்னிப்பு இயேசுவின் இரத்தத்தால் கொள்ளப்பட்டது. அவர் மன்னிப்பைத்தரும்போது பாவத்தின்மேல் பகையும், துக்கமும், அதை விட்டுவிலகுதலும் உண்டாகவேண்டும். தேவன் நம்மைப் பலமுறை மன்னித்து கொண்டே இருக்கிறார். தகப்பனைப்போல் அன்பாயும், பலமுறையும் மன்னிக்கிறார். தேவன் இரக்கமாய் மன்னிக்கிறார் என்று சாட்சி கொடுத்த தாவீது பெரிய பாவி. அவன் விபசாரம் செய்து மோசம்பண்ணி, கொலைக்கும் ஆளாகி, அது தெய்வ செயல் என்று சொல்லி வெகு காலம் பாவத்தில் உறங்கிக்கிடந்தான். ஆனால் அவன் மனசாட்சி குத்தினபோது தேவனுக்குமுன் பாவங்களை அறிக்கையிட்டான். இதை வாசிக்கிறவரே, நீர் பாவமன்னிப்பு பெற்றதுண்டா? நீர் குற்றவாளி அல்லவா? தேவன் உமக்கு மன்னிக்க காத்திருக்கிறார். பாவத்தை அறிக்கை செய்து, ஜெபம்பண்ணு. இயேசுவின் புண்ணியத்தைச் சொல்லி, கெஞ்சி மன்னிப்பைப் பெற்றுக்கொள்வீராக.

இயேசுவே உமது அருளை
சொல்வது என் பெருமை
அதை என்றும் போற்றவே
மன்னிப்பளித்துக் காருமேன்.

பலனைப் பெற்றுக் கொள்ளுகிறவர்கள்

யூன் 30

“பலனைப் பெற்றுக் கொள்ளுகிறவர்கள்.” 1.தீமோ. 6:2

சுவிசேஷம் தேவன் தரும் மகத்தான ஈவுகளில் ஒன்று. அதைப் பெற்றுக்கொள்ளுகிற ஒவ்வொருவருக்கும் அது பலன் தருகிறது. ஒருவனின் அறிவுக்குப் பலன் தந்து அதை வளர்க்கிறது. அவன் இருதயத்திற்குப் பலன் தந்து அதைச் சுத்தப்படுத்துகிறது. அவன் மனட்சாட்சிக்குப் பலன் தந்து அதைச் சமாதானப்படுத்துகிறது. அவன் குணத்திற்குப் பலன் தந்து அதைச் செவ்வைப்படுத்துகிறது. அவன் நடக்கைக்கு பலன் தந்து அவனை தீமைக்கு விலக்கி நன்மையை அளிக்கிறது. அவன் குடும்பத்திற்கும் பலன் கிடைக்கிறது. இது எஜமானைப் பட்சமுள்ளவனாகவும், எஜமாட்டியைப் புத்திசாலியாகவும், வேலைக்காரரைக் கவனமும் சுறுசுறுப்பும் உள்ளவர்களாகவும், பெற்றோரை நல்லவர்களாகவும், பிள்ளைகளைக் கீழ்ப்படிகிறவர்களாகவும் இருக்கப்பண்ணுகிறது.

உலக அரசுகளுக்கும் அதனால் பலன் கிடைக்கிறது. நல்ல சட்டங்களை ஏற்படுத்தி ஆளுகைகளைத் திடப்படுத்துகிறது. குடி மக்களை நல்லவர்களாக மாற்றுகிறது. இந்தப் பலனை நாமும் பெற்றிருக்கிறோமா? பெற்றுக்கொள்வதன் பொருள் என்ன? இது தெய்வீகமானதென்றும், அதன் உபதேசத்தை ஒத்துக்கொண்டு, அதன் நன்மைகளை ஏற்றுக்கொண்டு, அதன் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து, அதன் நியமங்களை ஆதரித்து, அதன் சந்தோஷங்களைப் பரீட்சை செய்து, எந்தப் பயனுள்ள காரியங்களுக்கும் அதை உபயோகிப்பதே அதன் பொருள். சிலர் வசனத்தைக் கேட்கிறார்கள். ஆனால் அதற்கு செவிகொடுக்க மறுக்கிறார்கள். சிலர் செவி கொடுத்தும் அதை ருசிக்க மறுக்கிறார்கள். ஆனால் சிலரோ அதை ஏற்றுக்கொண்டு ருசித்து அதன் பலனை அடைகிறார்கள். இப்படிப்பட்டவர்கள்தான் குற்றமற்றவர்களாய் மாறி, பரிசுத்தராகி, பாக்கியவான்களாய் மாறுகிறார்கள். சகலமும் அவர்களுடைய நன்மைக்கு ஏதுவாகிறது. நீ சுவிசேஷத்தினால் இந்தப் பலனைப் பெற்றவனா?

இந்த நன்மை எனக்கீயும்
சுவிசேஷத்தின் மகிமையை
கண்டு களிக்கச் செய்யும்
என் உள்ளம் உம்மைப் போற்றும்.

கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருக்கிறார்

யூன் 29

“கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருக்கிறார்.”  கொலோ 1:27

தேவபிள்ளைகளுடைய நம்பிக்கை மகிமையைப் பற்றினது. அந்த நம்பிக்கையின் தன்மை நமக்குப் புரியாத ஒன்றாய் இருக்கலாம். அந்த மகிமையின் மகத்துவம் நமக்கு விளங்காததுப்போல் இருக்கும். அதில் சுதந்தரம் ஓர் இராஜ்யம், கிரீடம், சந்தோஷம் ஆகியவை அடங்கியிருக்கின்றன. அது மகிமையின் கிரீடம். கனமகிமை, நித்திய மகிமை. நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் மகிமை, நம்மை உடுத்துகிற மகிமை. நமக்குள் இருக்கும் மகிமையும், வல்லமையும், ஞானமும், அறிவும் சேர்ந்திருக்கும் மகிமை. அது சரீரத்தைப் போற்றி ஆத்துமாவை நிரப்பும். அந்த மகிமை நமக்குள் இருக்கும் மகிமை. அது வெளிப்படக் காத்திருக்கிறது.

இந்த நம்பிக்கை அல்லது எதிர்பார்க்குதல் கிருபையில் ஆரம்பித்து, பரிசுத்த ஆவியானவரால் உண்டாகி, விசுவாசத்தினால் பெருகி, தேவவாக்கையும், ஆணையையும் பிடித்து, தேவன் குறித்த காலத்திற்காக காத்திருந்து அதைப் பெற்றவனைச் சுத்திகரிக்கிறது. கிறிஸ்து நம்மில் இருப்பதுதான் இந்த நம்பிக்கையின் அத்தாட்சி. தேவன் தம்முடைய ஜனங்களில் தம்முடைய வசனத்தைக் கொண்டும், கிருபையைக் கொண்டும், தம்முடைய வசனத்தைக் கொண்டும், வாசம் செய்கிறார். ஓர் அரசனைப்போல் நம்மில் ஆட்சி செய்கிறார். குடும்பத்தில் தலைவனைப்போல் கண்காணிக்கிறார். வீட்டில் எஜமானனைப்போல் எல்லாவற்றையும் தம்முடையதாக்குகிறார். மரத்தின் சாரத்தைப்போல் வளரப்பண்ணுகிறார். ஆகவே நமது ஆலயத்தில் உள்ள தேவனைப்போல் நாம் அவரை ஆராதிக்க வேண்டும். கிறிஸ்து உங்களில் வாசம்பண்ணினால் உங்கள் எண்ணங்களிலும், விருப்பங்களிலும், பாசங்களிலும், நோக்கங்களிலும் அவர் வாசம் செய்ய வேண்டும். உங்களுக்கு மகிமை கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கு உண்டா? நீங்கள் எதிர்பார்க்கிற மகிமை தேவனோடு ஐக்கியப்படுகிறதா?

என்னில் தங்கும் இயேசுவே
நீர் சொல்லி முடியாத ஈவே
மோட்ச நம்பிக்கை தாரும்
அவ்வடையாளம் வேணும்.

காலத்தை அறிந்தவர்களாய்

யூன் 28

“காலத்தை அறிந்தவர்களாய்…” ரோ. 13:11

நிகழ்காலத்தை நாம் அறிவோம். இது நமக்குத் தெரிய வேண்டியது. ஆனால் எதிர்காலத்தைப்பற்றி நமக்கேதும் தெரியாது. இது சாத்தானுடைய வல்லமைக்கு ஏற்ற காலம். அவன் சுறுசுறுப்புள்ளவன். ஜாக்கிரதையுள்ளவன். பிடிவாதமுள்ளவன். இது உலகத்திற்கு மோசத்தைக் கொண்டு வரும் காலம். இந்த உலகம் உறங்கிக்கொண்டு இருக்கிறது. அல்லது மயங்கிக் கிடக்கிறது. அல்லது தேவ காரியத்துக்கு விரோதமாய் மூர்க்கங்கொண்டிருக்கிறது. ஆனால் தேவன் பொறுமையாய் இருக்கும் காலம்.

நீதி இப்போது காத்திருக்கிறது. கிருபை சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறது. இரக்கம் பட்சமாய் எச்சரிக்கிறது. இது அனுக்கிரக காலம். இதுவே இரட்சணிய நாள் என்று சொல்லியிருக்கிறது. இது சபை தன் கடமையை நிறைவேற்ற வேண்டிய காலம். பொழுதடையப் போகிறது. காலத்தை நழுவ விடக்கூடாது. இது முக்கியமான காலம். நன்மை செய்யவேண்டிய தருணங்கள் அநேகமுண்டு. விடா முயற்சியோடு உழைக்க நம்மைத் தைரியப்படுத்துகிற காரியங்கள் அநேகமுண்டு நம்மேல் விழுந்த பொறுப்போ பெரியது. ஆதலால் காலத்தை அறிவோமாக. வேத வசனத்தையும், பிற காரியங்களையும் கவனித்தால் காலத்தின் உண்மைநிலை தெரியவரும். ஆகவே, சோம்பலாய் இருக்கிறவர்களை எழுப்பி விடுகிறதினாலும், எல்லா சமயத்தையும் நம்மை செய்வதிலும் நாம் பயன்படுத்துவோமாக. நன்மை செய்யும் காலமும், நன்மை பெறும் காலமும் குறுகினதுதான் என்று மறக்க வேண்டாம். எந்தக் காலத்தையும், எந்தச் சமயத்தையும் நம்மாலாகமட்டும் உபயோகித்துச் செம்மையாய்ப் பின்பற்றுவோமாக. தற்காலத்தின் முடிவு பயங்கரமாய் இருக்கும். விழித்திருந்து உதார மனதோடு ஜாக்கிரதையாய் உழைப்பது நமது கடமை.

தேவா கிருபையளியுமே
நலத்தைப் போதியும்
நீர் கொடுத்ததைப் பயன்படுத்தி
உம்மை தொழச் செய்யும்.

Popular Posts

My Favorites

கிறிஸ்து நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படிக்கு

ஏப்ரல் 21 "கிறிஸ்து நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படிக்கு" 1.பேதுரு 3:18 கிறிஸ்து செய்து முடித்த சகல கிரியைகளிலும் பிரயாசங்களிலும் அவர் சகித்த சகல பாடுகளிலும் அவர் கொண்ட நோக்கம் இதுதான். சுபாவத்தின்படி நாம் தேவனுக்கு தூரமானவர்கள்:...