Home Blog Page 23

அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்

செப்டம்பர் 18

“அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்” கலா. 5:13

தேவன் ஏற்றுக்கொள்ளக்கூடிய எக்காரியமானாலும் அதன் வேர் அன்புதான். அன்பு விசுவாசத்திலிருந்து ஆரம்பமாவதால், எல்லா நற்கிரியைகளையும், பிறருக்கு நாம் செய்கிற எச்செயலையும் அன்பில்லாமல் நாம் செய்தால் அதில் பலன் இருக்காது. கிறிஸ்தவத்தில் அதிமுக்கியமான காரியம் அன்புதான். வரங்கள் மேன்மைகள், புகழ், தியாகம் இவை யாவுமே இருக்கலாம். ஆனால் அன்பு இல்லாவிடில் வெறும் கைத்தாளம்போலவே இருப்போம். சப்தமிடுகிற வெண்கலம் போலத்தானிருப்போம். மனித இயற்கை பிறர்மேல் அதிகாரம் செலுத்தவே விரும்புகிறது. உங்களையே ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் எத்தனையோ பேருக்கு நன்மை செய்திருக்கக்கூடும். பிறருக்கு உதவி செய்ய உங்களுக்கு மனம் வந்ததா? அவர்கள் உயர்ந்து விடுவார்களோ என்று நீங்கள் நினைக்கவில்லையா? எங்கே உங்கள் அன்பு? அன்பு காட்டாத நீங்கள் கிறிஸ்தவர்களா?

அன்பு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறது. இதுதான் நற்செய்தியின் சிறப்பு. தேவன் அன்பாகவே இருக்கிறார். அன்பு அவரைப் போன்றது. அன்பு நோயாளிகளை குணமாக்கும். துயரத்தில் ஆறுதல் தரும். ஆடையற்றோருக்கு ஆடையளிக்கும். பசித்தவர்களைப் போஷிக்கும். வறியவர்களை வசதியுள்ளவர்களாக்கும். வனாந்தரமான இவ்வுலகம் அன்பினால் செழிக்கும். அன்பினால் ஏவப்பட்டுக் கைமாறு கருதாது நன்மைகளைக் செய்யுங்கள். தூய்மையான மனதுடன் ஓருவரை ஒருவர் நேசிக்கிறீர்களா? அன்பில் வளருகிறீர்களா? அல்லது பெருமை, பொறாமையில் வளருகிறீர்களா? தூய அன்போடு அன்புகூருங்கள். கிறிஸ்துவின் மக்களிடம் அன்புகூர்ந்து, அவர் தம்மைப் பகைத்தவர்களிடம் அன்புகூர்ந்ததுபோல் நடவுங்கள். அப்பொழுது பாக்கியவான்களாக இருப்பீர்கள்.

ஓர் இடம் போய்ச்சேருவோர்
ஒரே நம்பிக்கையுள்ளவர்கள்
அன்பின் கட்டால் ஒருமித்து,
மகிழ்ந்து வாழ்வார் சுகித்து.

அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர்

செப்டம்பர் 17

“அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர்” எரேமி. 50:34

நமது மீட்பர் நமக்கு மிகவும் நெருக்கமான உறவினர். கர்த்தராகிய இயேசுவைப்போல நமக்கு மிகவும் நெருக்கமானவர். வேறு யாரும் கிடையாது. பலவிதமான சூழ்நிலைகளிலும் நம்மோடு ஐக்கியப்படுபவர். இவரைப்போல் வேறு யாரும் இல்லை. இவர், தம்முடைய உயிரையே, நம்மை மீட்கும் பொருளாகத் தந்த நமது மீட்பர். நாம் சாத்தானுடைய வலையில் மீண்டும் விழுந்து விடாதபடி நம்மைக் காக்கத் தம்முடைய தூய ஆவியானவரையே நமக்குத் தாராளமாகத் தந்துள்ளார். மரித்தபின் நம்மை உயிரோடு எழும்பத் தம்முடைய மீட்பின் வல்லமையை முழுமையாகப் பயன்படுத்துகிறார். தாம் உலகிற்கு எதற்காக வந்தாரோ அதைப் பரிபூரணமாக நிறைவேற்றியுள்ளார். ஏனெனில், அவர் வல்லமையுள்ளவர். நீதிமான். வாக்கு மாறாதவர். சொன்னதைச் செய்வார்.

அவர், நம்மைச் சிறைபிடித்த சாத்தானிடமிருந்தும், நம்மை ஒடுக்கி ஆண்ட பாவத்தினின்றும் நமது சத்துருவாகிய மரணத்தினின்றும் மீட்ட கர்த்தர். இது மெய்யானது. ஆதலால், நாம் நமது பெலவீனங்களையும், குறைவுகளையும் அவரிடத்தில் அறிக்கை செய்வோமாக. அவர் ஒருக்காலும் நம்மீது சத்துரு ஆளுகை செய்யவிடமாட்டார். அவன் ஒருக்காலும் வெற்றி பெறவிடார். அவருடைய நோக்கமும், விருப்பம் நம்மை உயர்த்துவதே. நம்மோடு மகிழ்ந்திருப்பதே அவருடைய பேரவா. அக்கிரமங்களிலும், பாவங்களிலும் உழன்று கிடந்த நம்மை மீட்டு கிருபையாக நம்மை உயிர்ப்பிப்பதே. நம்முடைய எதிர் காலத்தை அவர் வளமுள்ளதாக்குவார். நமது கரத்தின் கிரியைகளை ஆசீர்வதிப்பார். நம்முடைய காரியங்களை எவ்வகையிலும் செய்து முடிப்பார்.

வல்ல மீட்பர் இயேசுவே
என்னைத் தயவாய் மீட்டீரே
சாத்தானின் கரத்திலிருந்தென்னைத்
தயவாய் மீட்டுக் கொண்டீரே.

மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா?

செப்டம்பர் 16

“மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா?” மல். 3:8

இந்த கேள்வி மிகக் கேவலமானது. மனிதன் தேவனை வஞ்சிப்பதென்பது எத்தனை துணிகரமான செயல்! நாம் தேவனை எவ்வாறு வஞ்சிக்கிறோம். அவருக்குச் சொந்தமானவைகளை நாம் எடுத்துக்கொள்ளாமற்போனாலும், நாம் அவருக்குச் செலுத்த வேண்டியதைச் செலுத்தாமலிருந்து அவரை வஞ்சிக்கிறோம். ஆதலால், அவர் நம்மைப் பார்த்து, நீங்கள் என்னை வஞ்சித்தீர்கள் என்கிறார். அவருடையவைகள் யாவற்றிலும் நாம் அவரை வஞ்சிக்கிறோம். அவருக்காகச் செலவிட வேண்டிய அவருடைய நேரத்தை எடுத்துக்கொண்டோம். அவருடைய பொருளைத் திருடிக்கொண்டோம். பிறருக்குக் கொடுக்க வேண்டியவைகளை நமக்குச் சொந்தமாக எடுத்துக்கொண்டோம். அவருடைய ஊழியத்தை நாம் செய்வதில்லை.

நம் இருதயம் அவருக்குச் சொந்தம். நாம் அதைக் கொடுக்கவில்லை. மாறாகச் சிலுவைகளுக்குக் கொடுத்தோம். உலகத்தையே அதிகம் நாடி, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதை நேசித்தோம். அவர் தந்த திறமைகளை அவருக்கென நாம் பயன்படுத்தவில்லை. அவருடைய பணிகளை விட்டு நமது பணிகளையே செய்தோம். இப்படி நடப்பது பாவம். அவரை வஞ்சிப்பது கொடுஞ்செயல். நம்மால் அவருடைய கோபத்திற்குமுன் இமைப்பொழுதுகூட நிற்கமுடியாது.

பிரியமானவர்களே, தேவனை நாம் வஞ்சித்துக்கொண்டிருக்கிறோமா? இவ்வாறானால் உடனே நமது குற்றத்தை அறிக்கை செய்துவிட்டு விடுவோம். நமது மீறுதல்களை உணர்ந்து நம்மை திருத்திக்கொள்வோம். முதலாவது தேவனுக்குரியவைகளை அவருக்குச் செலுத்துவோம். நமது உள்ளத்தில் உண்மையும், நடக்கையில் உத்தமமும் இருந்தால் எத்தனை நலமாயிருக்கும்.

நான் உம்மை வஞ்சித்தேன்
நாதா என்னை மன்னியும்
கிறிஸ்துவின் இரத்தம் மீட்டதால்,
என்னைக் கடாட்சித்தருளும்.

அவர் கையைத் தடுக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை

செப்டம்பர் 15

“அவர் கையைத் தடுக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை” தானி. 4:35

தேவனுடைய கை என்பது அவருடைய செயல். அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் விளங்கும் அவருடைய ஞானம், வல்லமை, மகத்துவம் போன்றவைகளே. அவுருடைய நோக்கத்தை அறிந்து கொள்ள ஒருவனாலும் கூடாது. அவர், தமது நோக்கத்தை உறுதியாய்ச் கொண்டு செயல்படுகிறார். எக்காரியமாயினும் அவர் மிகவும் எளிதாக முடித்துவிடுவார். அவர் தமக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்கிறார். அவருடைய பரிசுத்தவான்கள் அவருடைய கரங்களில் இருக்கிறபடியால் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களுக்காக அவருடைய கரம் பாதுகாப்பாக இருக்கிறபடியால் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களுக்காக அவருடைய கரம் கிரியை செய்கிறபடியால் சேதமின்றி வாழ்கின்றனர். அவர் தம்முடைய வசனங்களுக்கேற்பத் தமது செயல்களை நடப்பிக்கிறார்.

அவர் சொன்னது சொன்னபடி நிறைவேற வேண்டும். நாம் நம்மை அவரிடம் சமர்ப்பித்துக் கொண்டால் சுகபத்திரமாயிருக்கலாம். அன்பானவர்களே, தேவனுடைய கரம் உங்கள்மேல் உயர்ந்திருக்குமானால், உங்களுக்கு ஒரு குறைவும் வராது. அவருடைய கைகள் உங்களைத் தாங்குகிறபடியால் நீங்கள் விழமாட்டீர்கள். அவருடைய கரத்தின் செயல்கள் யாவும் உங்களுக்கு நம்மையாகவே முடியும் என்று விசுவாசியுங்கள். உங்களுடைய சத்துருக்களிடமிருந்து அவருடைய கை உங்களை மீட்கும். உங்களை ஆதரித்து, உங்கள் குறைவுகளை நிறைவாக்கும் வனாந்தரத்தில் நடந்தாலும் அவருடைய கரத்தால் நீங்கள் காக்கப்பட்டு உயர்த்தப்படுவீர்கள். அனைத்தையும் அவருடைய கரம் ஒழுங்குபடுத்தும். சொல்லிமுடியாத அன்பினால் அவருடைய உள்ளம் நிறைந்திருக்கும். உங்களுக்காக அவர் செயல்படும்பொழுது, எவராலும் அவரைத் தடுத்து நிறுத்தமுடியாது.

தெய்வ கரங்கள் தாமே உனை
பெலப்படுத்தி என்றும் காக்கும்
தம் வாக்குகளை நிறைவேற்றி
எப்போதுமவர் வெற்றிதருவார்.

பேதுரு தூரத்திலே பின்சென்றான்

செப்டம்பர் 14

“பேதுரு தூரத்திலே பின்சென்றான்.” மத். 26:58

எத்தனை முறைகள் நாம் பேதுருவைப்போலப் பின் வாங்கிப் போயிருக்கிறோம்? நான் அன்பில் குளிர்ந்துபோக மாட்டேன். பற்றுறுதியில் அணைந்து போகமாட்டேன், உம் பாதையைவிட்டுச் சற்றும் விலகேன் என்று பலமுறைகள் தீர்மானம் செய்தோம். வெகு சீக்கிரம் அதை மறந்துவிட்டோம். தேவனை விட்டுப்பின் வாங்கிப்போவதைவிட, தொலைவில் அவருக்குப் பின் நடப்பது நலமே. அன்று பேதுருவுக்கு இருந்த நிலை அவனைத் தொலைவில் பின் தொடரச் செய்தது. இன்று நமக்கு அப்படிப்பட்ட நிலை இல்லையே! விசுவாசம் நம்மை அவருக்கு அண்மையில் கொண்டு சேர்க்கும். ஆனால், அவிசுவாசம் நம்மை அவரை விட்டுப்பிரிக்கிறது. நம்முடைய நன்மைகளில் நஞ்சாக அவிசுவாசம் இருக்கிறது. நாம் கிறிஸ்தவர்கள் என்று சொல்லக்கூடாதபடிக்கு நம்மைப் பெய்யராக்குகிறது. நம்முடைய பக்தி வைராக்கியத்தைக் குலைத்து, இயேசுவுக்கு நம்மைத் தூரமாக்கி விடுகிறது. அவருடைய வழிகளை விட்டு நம்மை விலக்கி, நம்மை அந்நியராக்குகிறது.

நாம், நமது இருதயத்தில் விசுவாசத்தை வளர்த்து நம்மைத் தைரியப்படுத்திக்கொள்ள வேண்டும். இது நமது நடையை வேகமாக்கும். ஆண்டவரை நெருங்கி இருக்கச் செய்யும். நமது இருதயத்தைப் பெலப்படுத்தி, நமது இரட்சகரில் மகிழச்செய்யும். எனது நண்பா, நீ கர்த்தருடன் செல்பவனா? அல்லது பேதுருவைப்போல தூரத்தில் செல்பவனா? எச்சரிக்கையுடனிரு. தூரத்தில் பின்செல்லாமல், அருகிலேயே இரு. அவருடனே நடந்து அவரையே நினைத்து உன் பாரத்தை அவர்மேல் வைத்து, அவரையே சார்ந்திரு. தாயின் மார்பில் ஒட்டியிருக்கும் குழந்தையைப்போலவே அவரில் ஒட்டிக்கொண்டிரு.

இயேசுவோடு ஐக்கியப்பட்டு
அவர் குரலைக் கேட்டிருப்பவன்
தன்னை முற்றிலும் துறந்து
அவரிலேயே ஒளிந்திருப்பான்.

தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து

செப்டம்பர் 13

“தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து” கொலோசெயர் 1:10

பூமியிலே நமக்கு இருக்கும் அறிவு குறைவுள்ளதே. நாம் அறிந்து கொண்டது அற்பம்தான். அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய வசதிகள் நம்மிடம் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தும் மனதில்லாதவர்களாய் நாம் இருக்கிறோம். ஆண்டவரை அறிந்தால் மட்டும்தான், நம்மால் அவரை நேசிக்க முடியும். அவரை நம்பக்கூடும். இல்லாவிடில் நாம் அவருடைய மகத்துவங்களைப் போற்றவும் மாட்டோம். அவரைத் துதிக்கவும் மாட்டோம். தேவனை நாம் தெரிந்து கொண்டால்தான், அவரை நாடி, அவருடைய கோபத்துக்குப் பயந்து, அவருக்குக் கீழ்ப்படிவோம்.

பவுல் இந்தச் சத்தியத்தை அறிந்து கொண்டபடியால் கொலோசெயர் தேவ அறிவில் தேறவேண்டும் என்று ஜெபம்பண்ணினான். நாம் அவரை அறிய வேண்டுமானால், அவருடைய சிருஷ்டிகளையும், செயல்களையும் கவனித்து, அவருடைய வேதத்தை ஆழ்ந்து கற்க வேண்டும். தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே வெளிப்படுத்துகிறார். இதனாலேயே இயேசு கிறிஸ்து என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்று கூறுகிறார்.

நீங்கள் தேவனை அறிந்திருக்கிறீர்களா? முன்பு நீங்கள் அவரை அறியாதவர்களாக இருந்ததினால், நன்றியில்லாதவர்களாயிருந்தீர்கள். உங்கள் அறிவு குறைவுள்ளது. ஆகையால் அவரைப்பற்றி மேலும் அறியப் பிரயாசப்படுங்கள். ஒன்றான மெய்தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன் என்கிறார் இயேசு. இதை மனதிற்கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டால் நித்திய ஜீவன் பெறுவீர்கள். வற்றாத பேறுகளைப் பெறுவீர்கள். தேவ அன்பில் பெருகுவதே உங்கள் நோக்கமாக இருக்கட்டும்.

எம் உள்ளத்தில் நீர் பிரகாசியும்
அதை உம்மைப்பற்றி அறிவால்
என்றும் நிரப்பிடும் உம்மை
அறிவதே எமக்கு நித்திய ஜீவன்.

நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்

செப்டம்பர் 12

“நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்” ஆதி. 6:9

நோவா தேவனோடு வாழ்ந்து வந்தான். தேவனோடு ஒன்றித்திருந்தான். தேவன் பேசுகிற குரலைக்கேட்டு அவருடைய வழியைத் தெரிந்துகொண்டு, அவருடைய நினைவிலே மூழ்கி அவருடைய சித்தமே சரி என்று ஒப்புக்கொண்டான். தேவனோடு உரையாடுவதென்றால் அவனுக்கு மிகப்பிரியம். ஆலோசனைக்காக அவரண்டை அவன் செல்வான். அவரிடத்தல் அன்புடன் பழகுவான். தேவனே அவருடைய சிறந்த நண்பர். அவன் அவருடைய சமுகத்தை விரும்பி, அவருடன் நடந்து, அவருடைய நட்பில் மகிழ்ந்தான். பூவுலகில் இருந்து கொண்டே, குமாரரையும் பெற்று வாழ்ந்து கொண்டே நோவா தேவனோடு சஞ்சரித்தான். அவருடைய வழியில் நடந்தான். ஒவ்வொரு நாளும் பல நன்மைகளைப் பெற்றான்.

அவனுக்குப் பக்தி இருந்ததுடன் கவனமும் இருந்தது. தேவ சமுகத்தையே அவன் பாக்கியமாகவும், மேன்மையாகவும், பெரியதாகவும் எண்ணினான். இந்த மனிதனைப்போலவே நாமும் தேவனுடன் பழகும் சிலாக்கியம் உள்ளவர்களே. நாம் கர்த்தராகிய கிறிஸ்துவை விசுவாசித்தால் இந்த ஐக்கியத்தைப்பெற்று, அவரோடு சஞ்சரிக்கலாம். தேவன் நம்மோடுகூட இருக்கிறார். நாம் அவரோடு கூட இருக்கிறோமா? அவரோடுகூட நடக்கிறோமா? அன்பானவரே, நீர் தேவனோடு வாழ்கிறீரா? இன்று அவரோடே நடந்ததுண்டா? தேவ சமுகத்தினாலுண்டான மகிழ்ச்சியைப் பெற்றீரா? அவருடைய சமுகத்தில் நீங்கள் இருந்து உற்சாகமடைந்தீர்களா? தேவனோடு சஞ்சரிப்பது பெரும் பாக்கியம். இது அவருடைய பெரிதான இரக்கம். கிருபை. நீங்கள் தேவனோடு இருந்தால் அவர் உங்களோடு இருப்பார்.

லோகம் ஆளும் ஆண்டவர்தாம்
என் உயிர் நண்பராம்.
அவரோடு சஞ்சரிப்பேன்
என்றும் பெரும் பேறு பெறுவேன்.

மரணபரியந்தம் நம்மை நடத்துவார்

செப்டம்பர் 11

“மரணபரியந்தம் நம்மை நடத்துவார்” சங். 48:14

இந்த நம்பிக்கைதரும் வாக்கு எத்தனை ஆறுதலானவது. கர்த்தர் நம்மை நடத்துகிறவர். முதலாவது இந்த உலகினின்று நம்மைப் பிரித்தெடுத்து நடத்தினார். சமாதான வழியில் நம்மை நடத்தினார். கடந்த நாள்களிலும், நமது துன்பங்களிலும் நம்மை நடத்தினதுபோல இனிமேலும் நம்மை நடத்துவார். இத்தனை நாள்களிலும் நம்மை நடத்தினார். இனிமேலும் நம்மை நடத்தாதிருக்க மாட்டாரா? நமது இறுதிமூச்சுவரை நம்மை நடத்துவார். நாம் நடக்கவேண்டிய வழியை அவரே தெரிந்தெடுத்து, நீதியின் பாதையில் நம்மை நடத்துகிறார். வழியில் நம்மோடு அன்பாகப் பேசி நமது பாதையிலிருக்கும் வலைகளையும், கண்ணிகளையும் நமக்குக் காட்டி, விசுவாசத்தின் மூலமாக நம்மைப் பாதுகாத்து, இரட்சித்து வருகிறார்.

நாம் அறியாமலே அந்த ஆரம்ப நாள்களிலும் நம்மை நடத்தினார். நாம் ஜெபிக்கும்பொழுது நமக்குப் பட்சமான வழிகாட்டியாகத் தம்மை வெளிப்படுத்தினார். அந்தத் தேவனே இறுதி மட்டும் பொறுமையோடு நம்மைத் தாங்குவார். நாம் புத்தியீனராக நடந்தாலும், நமது துன்பங்களினால் தொய்ந்து போனாலும், கர்த்தர் கோபப்படாமல் நம் அருகில் வந்து நம்மை நடத்துவார். நமது வாழ்நாள் முடியும் பரியந்தம் அவர் நம்மை நடத்திச் செல்வார். மரண இருளின் பள்ளத்தாக்கில் நாம் நடந்தாலும், அவர் நம்மோடுகூட நடப்பார். தமது இராஜ்யத்திற்கு நம்மை நடத்திச் சென்று அதை நமக்குச் சுதந்தரமாய்த் தருவார்.
அவர் வாக்குமாறாதவர். தாம் கொடுத்த வாக்குகளை நிச்சயம் நிறைவேற்றுவார். அன்பானவரே, நமது பரமதந்தை நமக்கு ஆளுகையைத் தரவிரும்புகிறார். ஆகவே, அவர் நம்மை நடத்திச் செல்வார். நம்மைத் தம் இராஜ்யத்தின் மேன்மைக்கு ஆளாக்குவார்.

என்றும் மாறாதவர் நமது தேவன்
நித்தம் நம்மை நடத்துவார் அவர்
மரணம் மட்டும் நம்மைக் காப்பார்
நம்மைத் தம்மிடம் சேர்த்துக்கொள்வார்.

நான் உமது நாமத்திற்குப் பயந்திரும்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்

செப்டம்பர் 10

“நான் உமது நாமத்திற்குப் பயந்திரும்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்” சங். 86:11

கர்த்தருக்குப் பயப்படுகிறதென்றால் அவர் வார்த்தையே நம்பி, அதற்குக் கீழ்ப்படிந்து, அவரை மகிமைப்படுத்துகிறதே ஆகும். அவருடைய நாமத்தில் பக்திவைராக்கியம் கொள்வது, அவரைப் பிரியப்படுத்த முயற்சி செய்து, அவரை விசனப்படுத்தாமல் இருப்பது அவரைத் தொழுவது ஆகும். ஆராதனை என்பதில், துதி, தோத்திரம், ஜெபம் ஆகியவை அடங்கும். முழு உள்ளத்தோடு செய்யாத ஆராதனை ஒன்றுக்கும் உதவாது. தேவனைத் தொழுதுகொள்ளும்பொழுது, நமது சிந்தனை அவர்பேரில் இல்லாது சிதறிப்போவதுண்டு. இதனால்தான் நாமும் சங்கீதக்காரனைப்போல், உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இதயத்தை ஒரு முகப்படுத்தும் என்று ஜெபம் செய்ய வேண்டும்.

அதாவது, சமாதானமாய் இருக்கவும், தேவ சமுகத்தில் களிகூர்ந்து ஆராதனை செய்யவும் இது முக்கியம். இவ்வாறு நாம் ஜெபிக்கும் பொழுது, நாம் தேவ ஆராதனையில் பிரியம் கொள்வோம். பயத்தோடும், பக்தியோடும் தேவனுக்கு ஊழியம் செய்யத்தக்க கிருபையைப் பெற்றுக்கொள்ளத் தேடுவோம் என்று காட்டுகிறோம் பரிசுத்தவான்கள்கூட இருதயத்தை அலையவிடுவதினால் கர்த்தருக்கு ஊழியம் செய்யத்தடைப்படுகிறார்கள். சில நேரங்களில் நாமும் அவ்வாறு உணர்வதுண்டு. இந்நிலையிலுள்ளவர்கள், மந்தமனமுள்ளவர்களாகவும், ஊழியத்தில் உற்சாகமில்லாமல், இரண்டுங்கெட்டானாயிருப்பார்கள். அவர்கள் தாவீதைப்போல ஜெபிக்க வேண்டும். அப்பொழுது மேலான தேவசமாதானம் இவர்களுடைய சிந்தையை ஆளும். இருதயத்தை ஒருமுகப்படுத்தி, தேவனுக்குப் பயந்திருங்கள். ஆவிக்குரிய வாழ்வில் வளருங்கள்.

என் இதயம் அலைந்து
திரியாமற் செய்திடும்
உம்மையே பற்றி நிலைத்து
வாழ்ந்திருக்க உதவிசெய்யும்.

என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறார்

செப்டம்பர் 09

“என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறார்” சங். 31:7

வாழ்க்கையில் ஏராளமான நண்பர்கள் இருக்கலாம். அவர்களது உண்மை நமது துன்பத்தில்தான் விளங்கும். மகிழ்ச்சி என்னும் சூரியன் பிரகாசிக்கும்பொழுது, சிரிப்பும், கும்மாளமும் உண்டு. ஆனால் துன்பம் என்னும் புயல் வரும்பொழுது நம்முடன் இருப்பவன் யார்? தாவீதரசனுக்கும் துன்பங்கள் வந்தன. நண்பர்கள் அந்தநேரங்களில் அவனை தாங்கவில்லை. கைவிட்டுவிட்டனர். ஆனால், தேவன் அவனை மறக்கவில்லை. அவனை கவனித்து, சந்தித்து, அவன்மீது அக்கறை கொண்டு, அன்புகாட்டி, அவனுடைய குறைவுகளை நீக்கி அவனைக் காப்பாற்றினார்.

இதேபோன்ற பெருமை பரிசுத்தவான்கள் அனைவருக்கும் கிடைத்துள்ளது. இஸ்ரவேலரை அவர் அவாந்தரவெளிகளிலும் வனாந்தரங்களிலும் நடத்தி வந்தார். அவரால் தெரிந்துக்கொள்ளப்பட்ட தமது மக்களாகிய நம்மையும் அவர் நினைத்து, நம்மீது அக்கறை கொண்டு, அன்பு செலுத்தி நம்மை ஆதரிப்பார். முன்நாட்களில் அவர் அவ்வாறு செய்தார். கடந்துபோன நாட்களிலெல்லாம் நம்மைக் காத்து, நடத்தி, ஆதரித்தார். நம்மைப் போஷித்துச் செழிப்பான இடத்திற்கு நம்மைக் கொண்டு வந்து சேர்த்தார். நமது ஆத்தும வியாகுலங்களை அவர் அறிந்து, அவர் நன்மைசெய்தபடியால், நாம் சாட்சி கூறி அவரை மகிமைப்படுத்துவோம். இம்மட்டும் நமது துயரங்களை அறிந்து இருக்கிறபடியால், இனியும் நம்மை நடத்த அவர் வல்லவர். பல துன்பங்ளிலிருந்து நம்மை விடுவித்தவர் இன்றும் நம்மை விடுவிப்பார். அதை அவர் நமக்கு வாக்களித்துள்ளார். அவர் உண்மையுள்ளவர், நமது இனிய நண்பர். அவர் நமது துன்ப துயரத்தில், சோதனைகளில் நம்மைக் காத்து ஆதரிப்பார்.

உம் முகம் கண்டால், ஆண்டவா
எம் பயங்கள் நீங்கிப் போம்.
உம் இரக்கம் தான் என்றும்
எமக்குச் சமாதானம் தந்திடும்.

Popular Posts

My Favorites

கடைசிச் சத்துரு

ஓகஸ்ட் 02 "கடைசிச் சத்துரு" 1.கொரி. 15:26 கிறிஸ்தவனுக்கு அநேகச் சத்துருக்கள் உண்டு. தேவ கிருபையினால் இவன் சகல சத்துருக்களையும் மேற்கொள்ளுவான். அதில் பரிகரிக்கப்பட வேண்டிய கடைசிச் சத்துரு மரணம். மரணம் தான் எல்லா இராஜ்யத்துக்கும் சத்துரு....