ஒகஸ்ட்

முகப்பு தினதியானம் ஒகஸ்ட்

துக்கம் நிறைந்தவர்

ஓகஸ்ட் 23

“துக்கம் நிறைந்தவர்” ஏசாயா 53:3

தேவகுமாரன் துக்கமாய் இருப்பது எவ்வளவு விசித்திரமான காரியம். அவர் மகிமையின் பிரகாசமானவர். பிதாவின் அச்சடையாளமானவர். ஆனாலும் அவருடைய ஜனங்கள் பட்ட துன்பத்தையும், பட வேண்டிய துன்பத்தையும் அனுபவத்தால் அறியவே இந்த உலகில் வந்தார். அவர் துயரங்களை கேள்வியால் அறிந்தவர். அவர் நம்முடைய சுபாவத்தை தரித்துக் கொண்டார். நமக்கு பதிலாக வந்தார். பிறந்தது முதல் துன்பத்தைச் சகிக்க ஆரம்பித்தார். மரணபரியந்தமும் துன்பத்தையே அனுபவித்து வந்தார். தன்னுடைய கடமையில் அதிக பாரத்தைச் சுமந்தவர். பிதாவை நிந்தித்தவர்களுடைய நிந்தை அவர்மேல் விழுந்தது. அவர் துக்கம் அனுபவித்தவர். பலவகையில் துக்கம் அனுபவித்தார். துக்கத்தின் ஆழம் அவருக்குத் தெரிந்திருந்தது.

அவரைப்போலவே துயரங்களை அனுபவித்தவர் வேறே ஒருவரும் இல்லை. சில வேளைகளில் சந்தோஷப்பட்டாலும் பல வேளைகளில் துக்கப்பட்டார். துக்கமே அவர் கூட்டாளிகளாய் இருந்தது. நண்பரே, கர்த்தர் உனக்காய் துக்கப்பட்டார். உன்னைப்போல் துக்கப்பட்டார். உன்னைவிட அதிகம் துக்கப்பட்டார். அதனால் இப்போது உனக்காகப் பரிதபிக்கிறார். மனிதன் அனுபவிக்கும் துக்கம் ஒவ்வொன்றும் அவருக்குத் தெரியும். அவருக்கு எப்பக்கத்திலிருந்தும் துக்கம், துயரம் ஏற்பட்டது. வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் ஏன், நரகத்திலிருந்தும்கூட அவருக்குத் துன்பம் வந்தது. உனக்காய் அவர் பாடுபட்டார். ஆதலால் உனது எல்லா துக்கத்திலும், துயரத்திலும் நிர்பந்தத்திலும் உனக்காகப் பரிதபித்து, உனக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார்.

மனிதனால் எனக்கிரங்கி
உருக்கத்தால் தவிர்க்கிறார்
கர்த்தாவே என்னைத் தாங்கி
முற்றிலும் இரட்சியுமே.

மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்

ஓகஸ்ட் 05

“மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்” எபேசி. 6:6

தேவனுடைய சித்தம் என்ன என்பதை நாம் அறியவேண்டும். ஒவ்வொரு பாவியும் தம்மை விசுவாசித்து, நேசித்து தமக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதே தேவ சித்தம். ஒவ்வொரு தேவ பிள்ளையும் தேவனுடைய அதிகாரத்தை மதித்து, தம் வார்த்தையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சித்தம் கொள்கிறார். தேவன் தம் சித்தத்தை வெளிப்படுத்துவதைப் புதிய ஏற்பாட்டில் காண்கிறோம். நமது வாழ்க்கைக்கு அதுவே சட்டம். நமக்கு இது கடமையாகவும் தேவனுடைய சித்தம் செய்யும் பொறுப்பாகவும் இருக்கிறது. மனிதர் நம்மை விரோதித்தாலும், நமது பிரியத்துக்கு அது விரோதமாய் கண்டாலும், நாம் பிதாவினுடைய சித்தம் செய்ய வேண்டும்.

எஜமானுடைய கட்டளையை நிறைவேற்ற வேண்டும். அரசருடைய சட்டத்தைக் கைக்கொள்ள வேண்டும். இரட்சகருடைய சட்டத்திற்குக் கீழ்ப்படியவேண்டும். அவர் சித்தத்தை மனப்பூர்வமாய் செய்ய வேண்டும். பாவம் இருக்கும் இருதயத்திலிருந்து எல்லா தீமையும் வருகிறதுப்போல், கிருபையால் புதுப்பிக்கப்பட்ட இருதயத்திலிருந்து நன்மையான காரியங்கள் வெளிப்படுகிறது. இந்த நன்மையான கிரியைகள் தேவனுடைய சித்தம் செய்பவையாகவும் இருக்கவேண்டும். முழு இருதயத்தோடு செய்ய வேண்டும். உற்சாகமாய் தேவனுக்குரியவைகளை நிறைவேற்ற வேண்டும். பிரியமானவரே, நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்து அதைச் செய்ய உங்களுக்கு மனம் உண்டா? உங்களுக்கு இருக்கிற அறிவுக்குத்தக்கதாக செய்கிறீர்களா? உங்கள் கீழ்ப்படிதல் மனப்பூர்வமானதா?

கிறிஸ்துவே என் மாதிரி
அவரையே நான் பிடிப்பேன்
அவர் அடி பின் செல்லுவேன்
அவர் சாயல் அணிவேன்.

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்

ஓகஸ்ட் 13

“நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்” உபா. 14:1

என்ன ஒர் ஆச்சரியமான உறவிது. தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்! இவர்கள் யார்? அவர்கள் மறுபடியும் பிறந்தவர்கள். இது இவர்களுக்குள்ளே புது சுபாவத்தையும், புது விருப்பங்களையும், புது ஆசைகளையும், புது எண்ணங்களையும், புது செய்கைகளையும் உண்டுபண்ணும். இவர்கள் தேவனால் போதிக்கப்பட்டவர்கள். இவர்கள் புத்திரசுவிகார ஆவியைப் பெற்றவர்கள். இவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் உண்டு. ஒரு பிள்ளை தகப்பன் சொன்னதை நம்பி தகப்பன் கற்பிப்பதைச் செய்து தகப்பன் அனுப்பும் இடத்துக்கும் சென்று, அவர் வாக்குமாறாதவர் என்றும், அவர் கொடுப்பார் என்றும் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். இது எத்தனை ஆறுதலைக் கொடுக்கிறது. உன்னைச் சிநேகிதனற்றவனென்று சொல்லாதே. நீ அநாதை பிள்ளை அல்ல. அவர் உன் தகப்பன். ஒப்பற்ற தகப்பன். மாறாத தகப்பன். மனம் கலங்காதே.

உன் வறுமையில் பிதாவின் சம்பத்தையும், நிந்தையில் உனது கனமான உறவையும் உன் வியாதியில் பரம வீட்டையும் மரணத்தில் முடிவில்லா நித்திய வாழ்வையும் நினைத்துக்கொள். நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் பாராட்டின அன்பு எவ்வளவு பெரியதென்று பாருங்கள். நாம் எல்லாரும் இப்பொழுது பிள்ளைகளாயிருக்கிறோம். இனி எவ்விதமாய் இருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை. ஆனாலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால் அவருக்கு ஒப்பாய் இருப்போம் என்று அறிந்திருக்கிறோம்.

இந்தக் கிருபைத் தாரும்
அது என்னை நடத்தட்டும்
என் நா உம்மைத் துதிக்கும்
என் இதயம் உம்மை நேசிக்கும்.

நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன?

ஒகஸ்ட் 09

“நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன?”  மத். 5: 47

மற்றவர்களைக் காட்டிலும் உங்களுக்கு அதிகம் கிடைத்திருக்கிறது என்ன? சிறைச்சாலை, மருத்துவமனை, தர்மசாலை, வியாதியஸ்தர் அறை, நிர்பந்தமான வீடுகள் இவைகளைப் போய் பார்த்திருக்கிறீர்களா? குருடர், சப்பாணிகள், மனநிம்மதியற்றவர், தொழு நோயுள்ளவர் இவர்களைச் சந்தித்துள்ளீர்களா? பரிசுத்தவான்கள் சகித்தது என்ன? ஆட்டுத் தோலைப் போர்த்துக் கொண்டு, சிறைச்சாலையில் தேவனுக்காய்த் துன்பப்பட்டவர்கள் கொலைகளத்தில் உயிரைக் கொடுத்தார்கள். இரத்த சாட்சிகளாய் மரித்தார்கள். அடிகளைகளை வாங்கிக் கொண்டும் ஜெபித்த இவர்களைப் பார். உன் வாழ்க்கையையும் பார். வேதத்தையும் பார். பரலோகத்தையும் பார். நரகத்தையும் பார். உனக்குக் கிடைத்த பாக்கியங்களை நினை. உனக்கு அதிகம் அதிகம் கிடைக்கவில்லையா? மற்றவர்களைவிட நீ அதிகம் செய்தது என்ன?

உலகத்தானைவிட, அஞ்ஞானியைவிட, புறமதஸ்தனைவிட, அநேக பெயர் கிறிஸ்தவனைவிட எனக்கு நல்ல சட்டதிட்டங்கள் உண்டு என்கிறாய். உன் இதயத்தையும், பணத்தையும், நேரத்தையும் சகலத்தையும் அவருக்குக் கொடுத்தேன் என்கிறாய். ஆனால் மற்றவர்களைவிட நீ அதிகம் செய்தது என்ன? கிறிஸ்துவுக்காக கிறிஸ்தவ ஊழியத்துக்காக, சபைக்காக, ஏழைகளுக்காக, தேவ மகிமைக்காக, நீ செய்தது என்ன? மற்றவர்களைவிட உனக்கு அதிகம் தெரியுமே, அதிகம் பேசுகிறாயே? ஆகவே, மற்றவர்களைவிட உன்னிடத்தில் அதிகம் எதிர்ப்பார்ப்பது நியாயந்தானே மற்றவர்களைவிட அதிகம் செய்யப்பார். இல்லாவிட்டால் நீ சொல்வதை குறித்துச் சந்தேகம் கொள்ளுகிறது நியாயந்தானே.

நமது பெயருக்கேற்ற
நல் நடத்கை எங்கே?
மாறினோம் என்று காட்ட
நற்கனிகள் எங்கே?

கர்த்தாவே….. என்னை நினைத்து

ஓகஸ்ட் 30

“கர்த்தாவே….. என்னை நினைத்து” சங். 106:4-5

இது அதிக பொருள் அடங்கியுள்ள ஒரு நல்ல ஜெபம். ஓர் ஏழை ஐசுவரியத்திற்காகவும், நிர்பந்தன் இரக்கத்திற்காகவும், அநாதை சிநேகிதனுக்காகவும் வேண்டுகிற ஜெபம். கர்த்தர் நம்மை நினைத்தால் நாசத்திலிருந்து காத்து, மோசத்திற்கு விடுவித்து, வருத்தத்தில் நம்மை நடத்தி, குறைவிலிருந்து நிறைவுக்கு அழைத்து துக்கத்தில் ஆறுதல்படுத்த நாள்தோறும் நடத்திச் செல்கிறார். கர்த்தர் நம்மை நினைத்துவிட்டால் யார் நம்மை மறந்தாலும் கவலையில்லை. அவர் சகல சிருஷ்டிகளைக் காட்டிலும் நமக்கு அதிகம் செய்வார். யார் கைவிட்டாலும் அவர் கைவிடார். அவர் எப்போதும் நம்மை நினைத்துக்கொண்டிருக்கிறார். நம்மை மண் என்றும், பெலவீனர் என்றும் மோசத்துக்கு ஏதுவானவர்கள் என்றும், அடிக்கடி சோதிக்கப்படுகிறவர்கள் என்றும் அவர் நம்மை நினைக்கிறார். நமக்காகச் செய்த தமது உடன்படிக்கையையும், தமது வாக்குத்தத்தங்களையும், தமது குமாரன் பட்ட பாடுகளையும், அவர் நமக்கு வைத்திருக்கும் சம்பத்துக்களையும் அவர் நினைக்கிறார்.

அவரின் திவ்ய ஈவுகளையும், அவர் கிருபைகளையும் நமக்கு இன்னும் கொடுக்க வேண்டுமென்று அவரைக் கேட்கலாம். நம்முடைய பாவங்களை மன்னிக்க நம்முடைய ஆத்துமாக்களை சந்திக்க, உயிப்பிக்க, நமது பிரயாசங்களுக்குப் பலன் கொடுக்க, நாம் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில் பெருக, விசுவாசத்தில் வளர, சந்தோஷத்திலும், சமாதானத்திலும் பெருக நம்மை அவர் நினைக்க வேண்டும் என்று அவரை நாம் கேட்கலாம். ஆத்துமாவே, இந்த இராத்திரியில் எல்லா மோசங்களுக்கும் என்னை விலக்கிக் காத்து, விசுவாசத்தால் நிறைந்து, பக்தி வைராக்கியத்தால் ஏவப்பட்டு, அன்பில் பிரகாசித்து, தாழ்மையைத் தரித்துக்கொண்டவனாய் நாளை காலை நான் எழுந்து கொள்ளச் செய்யும்.

பரிந்து பேசும் கர்த்தாவே
என்னை உமக்கொப்புவிப்பேன்
ஏழைக்கிரங்கி அருளும்
அடியேனை நினைத்தருளும்.

கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்

ஓகஸ்ட் 29

“கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்” ஏசாயா 49:13

இந்த உலகத்தில் கர்த்தருக்குச் சொந்தமான ஜனங்கள் உண்டு. வேதாகமத்தில் எங்கும் இதைப் பார்க்கலாம். தமது ஜனத்தை தேவன் அதிகமாய் நேசித்தார். இரட்சிப்புக்காகவே இவர்களை தெரிந்துக் கொண்டார். இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் அவர்களை மீட்கிறார். அவர் அவர்களைத் தமது அன்பான குமாரனோடு இணைத்து ஐக்கியப்படுத்தி ஒன்றுப்படுத்துகிறார். அவரின் கண்மணிப்போன்று அவர்கள் அவருக்கு அருமையானவர்கள். என்றாலும் அவர்களுக்குப் பலத்த சோதனைகள் வரும். அவர்கள் அதிக பெருமூச்சு விட்டுத் தவிக்கிறார்கள். அவர்கள் இன்னும் பாவிகள்தான். பாவம் புண்ணாக வெளியே காணவிட்டாலும் உள்ளே புடம் வைத்து இருக்கிறது. வெளியரங்கமாய்ப் பாவத்தால் அவர்களுக்குத் தண்டனையில்லையென்றாலும் அது அவர்களுக்கு அதிக வருத்தத்தைக் கொடுக்கிறது.

காபிரியேலைப்போல் நன்றி செலுத்துவதற்காண காரணங்கள் அதிகம். இருந்தபோதிலும், அவர்களை மனமடிவாக்கி சிறுமைப்படுத்தும் அநேக காரியங்கள் அவர்களுக்கு உண்டு. ஆனால் தேவனோ அவர்களை ஆற்றித் தேற்றுகிறார். தமது பரிசுத்த வசனத்தை அனுப்பி, அவர்களை தேற்றி, கிருபாசனத்தை ஏற்படுத்தி அவர்களின் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்து தமது சமாதானத்தை அளித்து, தாம் அவர்கள் பிதா என்று உறுதி அளித்து, முடிவில்லாத பாக்கியம் கிடைக்கப்போவதை அவர்களுக்கு விவரித்து, இவ்விதமாய் அவர்களைத் தேற்றுகிறார். நித்தியமான தேவன் ஒரு புழுவுக் ஆறுதல் சொல்ல முனைவது எவ்வளவு பெரிய தாழ்மை. முன்னே கலகம் செய்த துரோகியை ஆற்றித் தேற்றுவது எவ்வளவு பெரிய தயவு.

இந்த மகிழ்ச்சி அந்நியர்
அறியார் பெறவும் மாட்டார்
நேசர்மேல் சார்ந்தோர்தான்
இதில் களித்துப் பூரிப்பர்.

முழுக்குடும்பத்துக்கும்

ஓகஸ்ட் 24

“முழுக்குடும்பத்துக்கும்” எபேசி. 3:14

கிறிஸ்துவின் சபை ஒரு குடும்பம். இந்தக் குடும்பத்தின் ஒரு பங்கு பூலோகத்திலும், மறுபங்கு பரலோகத்திலும் இருக்கிறது. ஒரு பங்கு இன்னும் தோன்றவில்லை. இக்குடும்பம் முழுவதற்கும் பிதாவானவரே தேவன்.தேவன் தன் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு பிள்ளையையும் காப்பாற்ற அவர்கள்மேல் மனதுருகுகிறார். ஒவ்வொருவரையும் அருமையானவர்களாய் எண்ணுகிறார். ஒருவனையும் அவர் தள்ளமாட்டார். இயேசு எல்லாருக்கும் பரிகாரியாக இருப்பதால், பிணையாளி ஒருவன் இல்லை என்று முறையிட அவசியம் இல்லை. ஒரு குடும்பமாக நம்மை ஏற்றுக்கொள்ள நாம் பரலோகத்தின் தூதர்களிலும் மேற்பட்டவர்களல்ல. அவர் முழு குடும்பத்தையும் ஒன்றுபோல் நேசித்து, மீட்டு, புத்திரசுவிகாரமாக்கினார்.

தமது சபையை முழுவதும் பரிசுத்தமும், பாக்கியமுமாக்கும்படி நிர்ணயத்திருக்கிறார். குடும்பத்தினரின் ஒவ்வொருவருடைய பேரும் ஜீவ புத்தகத்தில் எழுதியிருக்கிறது. இவர்களை இரட்சகர் தமது உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிறார். பரலோகமே இந்தக் குடும்பத்தின் வசந்த மாளிகை. நம்முடைய பிதாவின் வீடு. பிதாவானவர் நமக்குக் கொடுத்த ஈவு. நமக்காக உலகம் உண்டாகும்முன்னே அவர் ஆயத்தப்படுத்தியிருக்கிறார். அதைச் சந்தோஷமாக நமக்குக் கொடுக்கிறார். நாம் எல்லாரும் கிறிஸ்துவுக்குள் ஒன்று. ஒரே குடும்பம். இந்த ஆவியின் ஐக்கியத்தைச் சமாதானத்தோடு பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்குச் செய்தது நமக்குச் செய்ததென்று இரட்சகர் சொல்கிறார்.தேவ பிள்ளைகளைச் சேதப்படுத்துவது இரட்சகரையே சேதப்படுத்துவதாகும். தலையானது அவயங்களோடு சேர்ந்து துன்பத்தைச் சகிக்கிறது. பிதாவானவர் குடும்பத்தோடு இணைந்து செயல்படுகிறார்.

கர்த்தாவே நான் உம்முடையயோன்
என்று சொல்ல செய்யும்
நீர் என் சொந்தம் என்
ஆத்துமா பிழைத்து வாழ்ந்திடும்.

கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவன்

ஓகஸ்ட் 21

“கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவன்” கொலோசெயர் 1:28

விசுவாசி தன்னில் குறையுள்ளவனாக எல்லாரும் பார்க்கும்படி நடந்துக்கொள்ளுகிறான். அவர் உணர்வுகள், விருப்பங்கள், துக்கங்கள், செயல்கள், ஜெபங்கள், தியானம் எல்லாவற்றிலும் குறைவு வெளியரங்கமாய்க் காணப்படுகிறது. அவன் இருதயத்திலிருந்து எழும்பும் பெருமூச்சு, மனதில் வரும் அங்கலாய்ப்பு, கண்களிலிருந்து புறப்படும் கண்ணீர், எல்லாம் குறைவையே காண்பிக்கின்றன. ஆனால் கிறிஸ்து இயேசுவிலோ நிறைவுண்டு. நம்மை நீதிமான்களாக்க அவரிடத்தில் பூரண கிருபை உண்டு. நம்மைப் பரிபூரணமாக்க அவரிடத்தில் பரிபூரணமுண்டு. நம்மைப் போதித்து நடத்த அவரிடத்தில் பூரண ஞானம் உண்டு.

அவரோடு ஐக்கியப்படுவதால் நாம் பூரணராகிறோம். ஏனென்றால் அவருடைய மணவாட்டியாக அவருக்கிருப்பதெல்லாம் நமக்குச் சொந்தமாகிறது. அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளகிறதினால்தான் நாம் பூரணராகிறோம். அவருடைய நிறைவிலிருந்து நாம் கிருபையின் மேல் கிருபை பெற்றுக்கொள்கிறோம். ஏனெனில் தேவனுடைய ஆவியாலே நாம் மகிமையின்மேல் மகிமை அடைந்து அவர் சாயலாக மாற்றப்படுகிறோம். நாம் குறைவற்று, தேர்ச்சி பெற்றவர்களாவது, தேவனுடைய தீர்மானம். இப்படி வளர அவர் வாக்களித்துள்ளார். உதவி செய்கிறார். வசனத்தில் உள்ளபடியே நடந்தேறும். அவர் நம்மை பூரணராக்கி நிறையுள்ளவர்களாய், தேறினவர்களாய் பிதாவுக்குமுன் நிறுத்துகிறார். நாம் பூரண பரிசுத்தர் ஆவோம். பூரண பாக்கியர் ஆவோம்.

இயேசு மரித்தபோது
அவர் சீடரும் மரித்தார்
அவரும் அவர்களும் ஒன்றே
இப்பாக்கியம் மகா பெரியது.

தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்

ஓகஸ்ட் 04

“தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்” யோபு 11:5-6

யோபின் சிநேகிதர் அவன் நிலமையை புரிந்துக்கொள்ளவில்லை. அவர்கள் சொன்ன நியாயங்கள் அவன் மனதில் தங்கவில்லை. அவனுக்கு அவைகள் தெரிய வேண்டுமென்று அவர்களில் இவன் ஒருவன் விரும்பினதால், தேவன் பேசினால் நலமாய் இருக்கும் என்று வாய்விட்டுச் சொன்னான். இப்படித்தான் விசுவாசியும் கடைசியில் சொல்லுகிறார். யாரிடத்தில் தேவன் பேசினால் நலமாய் இருக்குமென்று விரும்புகிறோம்? நம்மிடத்தில்தான் அவர் பேசவேண்டும். அப்போதுதான் அவரின் அன்பு நம்மிடத்தில் இருக்கிறதென்று ஒரு நிச்சயம் உருவாகும். நமது வருத்தங்கள் விலகும். சத்தித்தில் நாம் நிலைப்படுவோம். பாவிகளிடத்தில் அவர் பேச வேண்டும். அப்போது அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். மனந்திருப்பி கர்த்தர் பட்சம் சேருவார்கள். துக்கப்படுவோரிடம் அவர் பேச வேண்டும். அப்போது அவர்கள் தேற்றப்படுவார்கள். சுயாதீனம் அடைவார்கள். பின்வாங்கி போனவர்களோடு அவர் பேசவேண்டும். அப்போது அவர்கள் திரும்பவும் பரிசுத்தர்களும் பாக்கியமும் பயனுள்ளவர்களும் ஆகலாம்.

இவைகளெல்லாம் நமக்குப் போதிக்கிறதென்ன? எந்த வேளையானாலும் தேவனிடம் ஓடி அவர்மேல் நம்பிக்கை வைக்கும்போது அவர் நம்மோடு பேசுவார். சோதிக்கப்படுகிற விசுவாசியே, தேவன் உனக்காகப் பேசுவார். பக்தியுள்ள கிறிஸ்தவனே, தேவன் உன்னோடு பேசுவார். எப்படிப் பேசுவார் என்று கேட்கிறாயா? தம்முடைய வசனத்தை கொண்டும், தமது கிரியைகளைக் கொண்டும், ஆவியானரைக் கொண்டும் பேசுவார். அப்படியானால் அவர் சத்தத்துக்குச் செவிக்கொடுப்போமாக. அவர் தம்முடைய வார்த்தையைக் கொண்டும், ஊழியர்களைக் கொண்டும் எவ்விதத்திலும் நம்மோடு பேச அவரை வேண்டிக்கொள்வோமாக.

சுவிசேஷத்தில் தொனிக்கும்
சத்தம் சமாதானமே
இதை உமதடியார்க்களித்து
விடாமல் என்றும் காரும்.

அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்

ஓகஸ்ட் 15

“அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்” 1.சாமு. 2:9

பரிசுத்தமாக்கப்பட்டவர்களே பரிசுத்தர்கள். தம்முடைய புகழ்ச்சிக்காக பிதாவினால் பிரித்தெடுக்கப்பட்டவர்கள். கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் மீட்டெடுக்கப்பட்டவர்கள். உலகத்திலிருந்து எடுத்து பரிசுத்தாவியானவரால் நிரப்பி சுத்திகரிக்கப்பட்டவர்கள். இயேசு உலகத்தாரல்லாததுபோல இவர்களும் உலகத்தாரல்லாதவர்கள். இந்தப் பாக்கியம் இவர்களுக்கு இருந்தாலும்,இவர்கள் முற்றிலும்பலவீனமானவர்கள். இவர்களை எப்போதும் காதுகாக்க வேண்டியது அவசியம். தேவன்தான் இவர்களைப் பாதுகாக்கக் கூடியவர் உலகத்து மனிதனால் இது முடியாது. அவர்களும் பலவீனர்தானே.

இவர்களின் பாதைகள் கரடுமுரடானது. முள்ளுள்ளது. மோசமானது. இவர்களுக்குத் திரளான சத்துருக்கள் இருக்கிறார்கள். ஆயினும் இவர்கள் விழிப்புள்ளவர்கள். தைரியமானவர்கள். வெட்கப்படாதவர்கள். காரணம் கர்த்தர் இவர்களைக் காக்கிறார். கொடுமைக்கும், துணிகரத்திற்கும், கவலைக்கும், அழிவுக்கும் இவர்களைக் காக்கிறார். தம்முடைய ஆவியானவராலும், வல்லமையினாலும், தேவ தூதர்களாலும், துன்பங்களினின்றும், நஷ்டங்களினின்றும், மார்க்கப்பேதங்களினின்றும் இவர்களைக் காக்கிறார். தேவன் யாரைக் காக்கிறாரோ, அவர்கள்தான் பத்திரமாய் இருப்பார்கள். தமது பரிசுத்தவான்கள் எல்லாரையும் காக்கிறார். விசுவாசிகளை மாத்திரம் காக்கிறபடியால் பெயர் கிறிஸ்தவர்கள் கெட்டழிவார்கள். விசுவாசத்தினாலும், தேவன் மேல் வைக்கும் நம்பிக்கையினாலும் இவர்கள் காக்கப்படுகிறார்கள். என்னை ஆதரித்தருளும், அப்போது நான் இரட்சிக்கப்படுவேன்.

இயேசுவே நீர் உத்தமர்
என் நடையைக் காத்தருளும்
உம்மோடு நடப்பேன்
மோட்சம்பேறு அடைவேன்.

Popular Posts

My Favorites