தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 33

அக்கிரம விஷயங்கள் என்மேல் வல்லமை கொண்டது

யூலை 17

“அக்கிரம விஷயங்கள் என்மேல் வல்லமை கொண்டது” சங். 65:3

தேவபிள்ளை யுத்தம் செய்கிறவன். பாவம் அவனில் வாசம் பண்ணி அவனில் கிரியை செய்து சில நேரங்களில் அவனை மேற்கொள்கிறது. அவன் பாவத்திற்கு முற்றும் நீங்கலானவன் அல்ல. ஒவ்வொரு நாளும் பாவத்திற்கு எதிராக விழித்திருந்து போர் செய்ய வேண்டியவன். அக்கிரம கிரியைகள் சில சமயங்களில் நமதுமேல் வல்லமை கொள்ளலாம். அப்பொழுது நமது சமாதானம் குறைந்து அவிசுவாசம் பலத்துப்போம். தேவன் மேலுள்ள பாசம் விலகி, ஜெபம் பண்ணமுடியாமல் வாய் அடைப்பட்டுத் துதியின் சத்தம் ஓய்ந்துபோம். அப்போது நமது ஆத்துமா பெலவீனப்பட்டுத் தீட்டாகி நமக்கும், தேவனுக்கும் நடுவே மந்தாரம் உண்டாகி, அவர் முகத்தைப் பார்க்கவும், அவன் அன்பை ருசிக்கவும் கூடாதவர்கள் ஆகிவிடுகிறோம்.

நாம் பாவத்திற்கு இணங்கி அது நம்மை மேற்கொள்ளும்போது நமக்குள் பரிசுத்தாவியானவர் நம்மை கடிந்துக்கொள்வார். கலக்கமும் வருத்தமும் தேவ சமுகத்தில் நம்மைப் பிடிக்கும். நாம் நம்மைத் தாழ்த்தி பாவத்தை அறிக்கையிட்டு தேவனண்டைக்குத் திரும்ப அவசியம் ஏற்படும். இப்படிப்பட்ட சம்பவத்தைத் தேவன் நமக்கு நன்மையாக பலிக்கச் செய்தால் நாம் பாவத்தை அதிகமாய்ப் பகைத்து தேவனுக்குமுன் நம்மை அருவருப்போம். அதிக விழிப்பும் ஜெப சிந்தையும் உள்ளவர்களாகுவோம். நம்மைக் குறித்து வைராக்கியம் கொண்டு பொல்லாங்காய் தோன்றுகிற யாவையும் விட்டு விலகப் பார்ப்போம். தேவன் நம்மை அப்படிப்பட்ட நிலைமையிலிருந்து விடுவிக்கும்போது நாம் தேவனுடைய நீடிய சாந்தத்தையும் இரக்கத்தையும் மன்னிப்பருளும் நேசத்தையும் பெறுவதால் ஸ்தோத்திரித்து அவரை வணங்குவோம். தாழ்மையை அணிந்து தேவனுக்கு முன்பாக பணிந்த சிந்தையோடு நடப்போம்.

என் அக்கிரமம் பெருகி,
என் ஆத்துமா தொய்யுது
என் இச்சை அடக்கும் தேவா
என்னை முற்றும் புதுப்பியும்.

மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி

ஜனவரி 12

“மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி”  லூக்கா 2:10

நம்மை மனம் நோகச் செய்யவும், அதைரியப்படுத்தவும், அநேக காரியங்கள் நம் உள்ளத்தில் இருக்கிறது. நம்மை துக்கப்படுத்த குடும்பத்திலும், சபையிலும் பல சோர்வுகளைக் கொண்டு வரலாம். இவ்வுலகம் நமக்குக் கவலையையும் கண்ணீரையும் கொண்டு வரும். ஆனால் சுவிசேஷமோ மிகுந்த சந்தோஷத்தைக் கொண்டு வரும். சுவிசேஷம் பெரிய ஒரு மேலான இரட்சகரை நமக்கு முன் நிறுத்துகிறது. இயேசு கிறிஸ்து மனுஷ ரூபமானபடியினால், மனிதர்களாகிய நமக்கு மனமிறங்கி தேவனிடத்தில் சகலத்தையும் பெற்றுத்தர கூடியவர். என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறார்? ஏன் எனக்குள் தியங்குகிறாய் என உங்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொள்ளுங்கள்.

கிறிஸ்துவின் இரத்தத்தால் நம்முடைய பாவம் எல்லாமே பரிபூரணமாய் மன்னிக்கப்படுகிறது. அவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்தபடியால், நிறுத்தும்படி கிருபையை தமது நீதியால் உண்டாக்கிக் கொடுத்தார். அவர் பாவமில்லாதவரானபடியால், நமது பாவங்களை மன்னிக்க காத்திருக்கிறார் அவர் இரக்கமுள்ளவரானபடியால் நம்மீது எப்போதும் இரங்குகிற தேவனாய் இருக்கிறார். நாம் துன்பப்படும்போது தேற்றரவாளனால் உதவிட ஓடி வருகிறார். பாவிகளுக்கு இரட்சகராய் இருக்கிறார். பிதாவின் முன் பரிந்து பேசும் நேசராய் இருக்கிறார். பாவிகளை அழைத்து அவர்களைத் தம் இரத்தத்தால் கழுவி தமது இராஜ்யத்தில் சேர்த்துக் கொள்ளுகிறார். செய்திகளைச் சுபசெய்தியாக்குகிறதே சுவிசேஷம் தான். நம்மை சந்தோஷத்தில் நிரப்பும் அனைத்தும் நற்செய்தியில் இருக்கிறது.

இவ்வன்பை அளவிட முடியாது
நீளம் அகலம் அற்றது
ஆழம் உயரம் இல்லாதது
அளவிடப்பட முடியாதது.

உன் உக்கிராணக் கணக்கையொப்புவி

ஓகஸ்ட் 12

“உன் உக்கிராணக் கணக்கையொப்புவி”  லூக்கா 16:2

நமக்கெல்லாருக்கும் ஒவ்வொரு வேலையைத் தேவன் வைத்திருக்கிறார். அது பொறுப்பான நம்பிக்கையுள்ள வேலை. அந்த வேலைக்கு தலையும், மனமும், கைகளும், கால்களும் வேண்டும். இந்த உக்கிராணக்காரன் சுறுசுறுப்பும், உண்மையும் ஜாக்கிரதையுமாய் இருந்து கணக்கொப்புவிக்கவேண்டும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். நாம் எல்லாரும் கணக்கு கொடுக்கவேண்டியவர்கள். வெகு சீக்கிரத்தில் நாம் கணக்கொப்புவிக்கவேண்டும். நமது எஜமான் சீக்கிரம் வரப்போகிறார். அப்போது அவரை எதிர்கொண்டு போகாமல் பின்னடைவோமா? நம்முடைய செல்வாக்கு, பணம், யோசனைகள், செயல்கள் இவைகளை எப்படி பயன்படுத்தினோம். ஆத்துமாவின் வேலைகளில் என்ன பங்கேற்றோம்? எப்படி தேவனுக்குரிய காரியங்களில் நாம் ஈடுபட்டோம். இவைகளையெல்லாம் குறித்து கணக்கொப்புவிக்க வேண்டும்.

நண்பரே, நீ ஒர் உக்கிராணக்காரன் என்பது உனக்குத் தெரியுமா? வேதம் உன் எஜமான் இயேசு கொடுத்த சட்டம். உன் நடக்கைக்குப் பிரமாணம். இதைத் தியானிக்கிறாயா? உன் எஜமானுடைய கண் உன்மேல் இருக்கிறது. இதை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுகிறாயா? இந்த வசனத்துக்குப் பயப்படுகிறாயா? கர்த்தருடைய நாள் சமீபித்து வருகிறது. நம்முடைய கணக்குகளை ஒப்புவிக்க வேண்டிய வேளை நெருங்கிவிட்டது. இப்பொழுது உன் காரியம் எப்படியிருந்தாலும் உண்மையுள்ள உக்கிராணக்காரனுக்கு அப்போது தேவனால் புகழ்ச்சி கிடைக்கும். இப்போதாவது உன் பொறுப்பை உணர்ந்து, அதற்கு ஏற்றதாய் நடந்தால் எவ்வளவு நலம்!

நியாயாதிபதியாம் கர்த்தாவே
உமக்குமுன் நான் நிற்பேன்
அப்போது குற்றமற்றுவனாக
விளங்கி மகிழ்வேன்.

மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்

நவம்பர் 08

“மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்” சங். 100:2

நம்முடைய தேவன் இணையற்ற பேறுகள் உள்ளவர். தம்முடைய மக்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியோடிருக்கவே அவர் விரும்புகிறார். ஆதி முதல் அவர் யாவற்றையும் அவர்களுக்காக சேமித்து வைத்திருக்கிறார். ஆனால், பாவம் அவர்களுக்கு வரும் நன்மைகளைக் கெடுத்து போட்டது.

இப்பொழுதும் நாம் அவருக்கு ஊழியம் செய்யும் பாக்கியம் பெற்றிருக்கிறோம். அதை அவர் விரும்புகிறார். நித்திய சுவிசேஷத்தில் உனக்கு பாக்கியமானதை சேமித்து வைத்திருக்கிறேன். நீ அதை விசுவாசி. இலவசமாக உனக்கு பாவமன்னிப்புக் கிடைக்கும். முழுமையான நீதியை உனக்குத் தருவேன். உன் இதயத்தைச் சுத்திகரிப்பேன். உனது குறைவுகளை நிறைவு செய்வேன். என் சமுகத்தின் உன்னை ஏற்றுக்கொள்வேன். உன் வாழ்நாளெல்லாம் என் கிருபையைத் தருவேன். மரண பரியந்தம் உன்னை மகிமைப்படுத்துவேன் என்கிறார்.

நீங்கள் மகிழ்ச்சியுள்ள  பாக்கியவான்களாகக் கர்த்தருக்கு ஆராதனை செய்ய, உங்களை உற்சாகப்படுத்த இது போதுமே, தேவனுடைய ஊழியம் நமக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும். நாம் புத்திரசுவிகாரம் பெற்றது உண்மை என்ற அறிவுடன் உள்ளான அன்புடன் அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும். மறுமையில் நாம் பரலோகத்தில் ஆளகை செய்யப் போகிறோம் என்னும் நம்பிக்கையுடன், இன்மையில் அவருக்கு நாம் ஊழியம் செய்வோம். நமது நடத்தையினால், நான் கர்த்தருக்குச் சந்தோஷமாய் ஊழியம் செய்கிறேன். நான் வேறு எருக்கும் ஊழியம் செய்யேன் என்று மற்றவர்களுக்குக் காட்ட வேண்டும்.

இயேசுவே என் பாவம் நீக்கி
என்னை இரட்சித்திடும்
மகிழ்ச்சியோடு உம்மை
நான் ஆராதிக்கட்டும் என்றும்.

தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து

செப்டம்பர் 13

“தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து” கொலோசெயர் 1:10

பூமியிலே நமக்கு இருக்கும் அறிவு குறைவுள்ளதே. நாம் அறிந்து கொண்டது அற்பம்தான். அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய வசதிகள் நம்மிடம் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தும் மனதில்லாதவர்களாய் நாம் இருக்கிறோம். ஆண்டவரை அறிந்தால் மட்டும்தான், நம்மால் அவரை நேசிக்க முடியும். அவரை நம்பக்கூடும். இல்லாவிடில் நாம் அவருடைய மகத்துவங்களைப் போற்றவும் மாட்டோம். அவரைத் துதிக்கவும் மாட்டோம். தேவனை நாம் தெரிந்து கொண்டால்தான், அவரை நாடி, அவருடைய கோபத்துக்குப் பயந்து, அவருக்குக் கீழ்ப்படிவோம்.

பவுல் இந்தச் சத்தியத்தை அறிந்து கொண்டபடியால் கொலோசெயர் தேவ அறிவில் தேறவேண்டும் என்று ஜெபம்பண்ணினான். நாம் அவரை அறிய வேண்டுமானால், அவருடைய சிருஷ்டிகளையும், செயல்களையும் கவனித்து, அவருடைய வேதத்தை ஆழ்ந்து கற்க வேண்டும். தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே வெளிப்படுத்துகிறார். இதனாலேயே இயேசு கிறிஸ்து என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்று கூறுகிறார்.

நீங்கள் தேவனை அறிந்திருக்கிறீர்களா? முன்பு நீங்கள் அவரை அறியாதவர்களாக இருந்ததினால், நன்றியில்லாதவர்களாயிருந்தீர்கள். உங்கள் அறிவு குறைவுள்ளது. ஆகையால் அவரைப்பற்றி மேலும் அறியப் பிரயாசப்படுங்கள். ஒன்றான மெய்தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன் என்கிறார் இயேசு. இதை மனதிற்கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டால் நித்திய ஜீவன் பெறுவீர்கள். வற்றாத பேறுகளைப் பெறுவீர்கள். தேவ அன்பில் பெருகுவதே உங்கள் நோக்கமாக இருக்கட்டும்.

எம் உள்ளத்தில் நீர் பிரகாசியும்
அதை உம்மைப்பற்றி அறிவால்
என்றும் நிரப்பிடும் உம்மை
அறிவதே எமக்கு நித்திய ஜீவன்.

கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்து

மார்ச் 17

“கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்து.” 1.நாளா. 16:29

தேவன் தமது நாமத்தை அவருடைய வல்லமையான கிரியைகள் எல்லாவற்றின் மேலும், அன்பான ஈவுகள் எல்லாவற்றின் மேலும் தயவாய் மாட்சிமையாய் வரைந்திருக்கிறார். தேவ நாமத்தை நாம் நன்கறிய வேண்டும். அதிலும் சுவிசேஷத்தை ஆராய்ந்தறிய வேண்டும். தேவன் தமது நாமத்தை, பாவங்களைக் குணமாக்குதலிலும், நீதிமான்களாக்கப்படுவதிலும், பரிசுத்தவான்களாக்கப்படுவதிலும், மகிமைப்படுத்துவதிலும் வரைந்திருக்கிறார். தமது மகிமையான தன்மைகளையும், குணநலன்களையும் விளக்கி வெளிப்படுத்துகிறார். தேவன் தமது நாமத்தை தம்முடைய வசனத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதை உபதேசங்களிலும், வாக்குத்தத்தங்களிலும், கட்டளைகளிலும், இனி வெளிப்படப்போகிற காரியங்களிலும் நாம் வாசிக்கிறோம்.

யேகோவாவின் நாமத்தை நாம் சரியானபடி வாசித்து அறிவோமானால், ஆச்சரியத்தோடும் நிரப்பப்படுவோம். அப்படி நிரப்பப்படும்போது நமது ஜெபங்களிலும், துதிகளிலும், நடக்கைகளிலும் அவரை மகிமைப்படுத்துவோம். அவருடைய நாமத்திற்குரிய பிரகாரம் அவரை மகிமைப்படுத்த நமது திறமைகளும், காலமும் போதவே போதாது. அவரை மகிமைப்படுத்துவது நமது கடமை. இருதயம் மட்டும் சுத்தமாய் இருக்குமானால் அது நமக்கு இனிமையாய் இருக்கம். நாம் அடிக்கடி தேவமகிமையை அசட்டை செய்கிறோம். தேவனுக்குரியதை நாம் செலுத்தாமல் போவதால் ஆத்துமாவுக்கரிய ஆறுதலை நாம் அனுபவிக்க முடியாமல் இருக்கிறோம். அவரு நாமத்திற்கரிய மகிமையை அவருக்குச் செலுத்த நாம் கற்றுக்கொள்வோமாக.

வான் கடல் பூமி யாவும்
உம் நாமம் துதித்து போற்றும்
உமது நாமம் கற்போம்
அப்போது ஞானிகள் ஆவோம்

தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்

டிசம்பர் 31

தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார். ஆதியாகமம் 33:11

இதை நாம் எப்பொழுதும் மனதில் வைத்திருக்கவேண்டும். கடந்த நாட்களையெல்லாம் கடந்து வந்து மீண்டும் ஓர் ஆண்டை முடிக்கிறோம். எத்தனையோ பாடுகள், துன்பங்கள், சோதனைகளின் மத்தியிலும், சொல்லி முடியாத இரக்கமுள்ள தேவனின் கிருபை நமக்கிருந்தது. சகல தீங்குகளுக்கும் நம்மை நீங்கலாக்கிக் காத்து, தமது வசனத்தை நிறைவேற்றினார். எத்தனை பாவங்கள், எத்தனை மீறுதல்கள், எத்தனை முறை அவருடைய கட்டளைகளை அலட்சியம் செய்தது, எத்தனை முறை நன்மை செய்யாதிருந்தது, எத்தனை முறை நன்றியறிதல் இல்லாதிருந்தது. இத்தவறுகளைச் செய்திருக்கிறோம். ஆனாலும் தேவன் நன்மை செய்பவராய், அன்பானவரால், உண்மையானவராக இருந்தார். அவர் நமக்குச் சொன்னபடியெல்லாம் செய்தார்.

நாம் தேவனுக்கு எவ்வளவாகக் கடமைப்பட்டிருக்கிறோம்! இவைகளை எண்ணி, அவருக்கு நன்றி துதி செலுத்த வேண்டுமே. நமது ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதையும் அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். நமது பாவங்களை மன்னித்து, ஜெபங்களைக் கேட்டு, சத்துருக்களைக் கீழ்ப்படுத்தி, நம்மைக் காப்பாற்றி, நடத்தி எத்தனை விதமாகத் தயவு காட்டினார். ஆகவே, இவ்வாண்டிறுதி நாளின் இரவில் அவருக்கு நாம் முழுமனதோடு நன்றி கூறுவோம். நம்மை நடத்தி வந்த தேவனுக்கு நன்றி சொல்லுவோம். நம்மைக் காத்து வந்த கரங்களுக்கு நன்றி கூறுவோம். நன்றித் துதிகளை ஏறெடுப்போம். அவருடைய வாக்குகளுக்காக ஸ்தோத்திரம் சொல்லுவோம். இம்மட்டும் நம்மைக் காத்த கர்த்தரைப் போற்றிப் புகழ். தேவன் நமக்கு அனுக்கிரகம் செய்தார். அவர் கரங்களில் இளைப்பாறுவோம். அவருடைய சித்தத்திற்காக காத்திருப்போம். நம்பிக்கையோடிருப்போம்.

இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் நம்மைக் காத்திடுவார்
இகத்திலவரையே நம்பியிருப்போம், பின்
இறை வீட்டில் மகிழ்ந்து வாழ்வோம்.

ஆண்டவரே எனக்கு உதவி செய்யும்

ஏப்ரல் 19

“ஆண்டவரே எனக்கு உதவி செய்யும்” மத். 15:25

இந்த வார்த்தை ஒர் ஏழை ஸ்திரீயினுடைய இருதயத்திலிருந்துப் பிறந்த ஜெபம் இது. கிறிஸ்துவின் இதயத்துக்குள் சென்றது. இது சுருக்க ஜெபமானாலும் சகலத்தையும் அடங்கிய ஜெபம். எந்த வேளைக்கும் இது ஏற்றதானாலும் சில சந்தர்ப்பங்களில் மிகவும் ஏற்றது. நமது பெலவீனத்தை அறிந்து உணருகிறது பெரிய இரக்கம். அப்போதுதான் கர்த்தரின் பெலனுக்காய் இருதயத்திலிருந்து கெஞ்சுவோம். நாம் செய்ய வேண்டிய எந்தக் காரியத்திலும், சகிக்க வேண்டிய எந்தச் சோதனையிலும், நாம் படவேண்டிய எத்துன்பத்திலும், ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று ஜெபிக்கலாம். நமக்கு தேவ ஒத்தாசை தேவை. அதைக் கொடுப்பேன் என்று வாக்களித்திருக்கிறார். அதைத் தேடிப் பெற்றுக்கொள்வது நமது கடமை.

முழு மனதோடு இயேசுவுடன் இருக்க உதவி செய்யும். எப்போதும் சந்தோஷமாய் உமது சித்தம் நிறைவேற்ற உதவி செய்யும். எல்லா வருத்தங்களையும் கடந்து பரம அழைப்பிற்குரிய பந்தயப் பொருளை இலக்காக வைத்து ஓடும்படி கிருபை செய்யும். வாழ்வில் நன்றி நிறைந்த உள்ளத்தோடு உம்மைப் போற்றி தாழ்வில் பொறுமையாய் உமது சித்தம் தேட உதவி செய்யும். என் சத்துருக்களை ஜெயிக்க உதவி செய்யும். சோதனைகளை மேற்கொள்ள உதவி செய்யும். என் மரண நாள் மட்டும் உம் பாதத்தில் அமைதியோடு காத்திருக்க உதவி செய்யும் என்று தினந்தோறும் ஜெபிப்போமாக. இப்படி விசுவாசத்தோடு உணர்ந்து ஜெபிப்போமானால், கர்த்தர் எனக்குச் சகாயர், மனிதன் எனக்கு என்ன செய்வான். நான் பயப்படேன் என்று அனுதினமும் சொல்லலாம்.

கர்த்தாவே கிருபை புரியும்
நான் ஏதுமற்ற பாவி
உமக்காக உழைத்து மரிக்க
உமதாவி அளியும்.

தேவன் பிரியமானவர்

ஓகஸ்ட் 08

“தேவன் பிரியமானவர்” கலா. 1:15-16

அப்போஸ்தலனாகிய பவுல் தன் தாயின் வயிற்றிலிருந்து முதல் பிரித்தெடுக்கப்பட்டதையும், கிருபையினால் அழைக்கப்பட்டதையும், கிறிஸ்து தன்னில் வெளிப்பட்டதையும், தான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், பிரித்தெடுக்கப்பட்டதையும் குறித்து இவை யாவும் தேவனுடைய சித்தத்தினால் ஆனது என்கிறார். சவுலைப் பவுலாக்கி அவன் காரியத்தில் கிருபையைக் காண்பித்தது தேவ தயவு தான். இந்தத் தயவுக்கு அவன் பாத்திரன் அல்ல. தேவன் இப்படிச் செய்ய தேவனை ஏவிவிடத்தக்கது அவனிடத்தில் ஒன்றுமில்லை. ஆனால் தேவனுக்குப் பிரியமானபடியால், அவர் சித்தங்கொண்டிபடியால் அப்படி செய்தார். மற்றவர்களைக் காட்டிலும் நாம் வித்தியாசமானவர்களா? முன் இருந்ததற்கும் இப்பொழுது இருப்பதற்கும் வித்தியாசம் உண்டா? அப்படியானால் மற்றவர்களுக்குக் கிடைக்காதவைகள் நமக்கு மட்டும் கிடைத்திருக்கிறது. தேவனுடைய சுத்த கிருபையே அவரின் சுயசித்தமே இதற்குக் காரணம் ஆகும்.

அவர் யார்மேல் இரக்கமாயிருக்க சித்தம் கொள்கிறாரோ அவர்கள்மேல் இரக்கம் கொள்கிறார். யார்மேல் பிரியமாயிருக்க சித்தம் கொள்கிறாரோ அவர்கள்மேல் பிரியமாயிருக்கிறார். தகுதியே இல்லாத நம்மை தேவன் நேசித்து தகுதிப்படுத்தி பிரியமாயிருக்கிறார். தங்கள் பாத்திர தன்மைக்கு அதிகமாகவே எல்லாருக்கும் கிடைத்திருப்பதால் முறுமுறுக்க எவருக்கும் நியாயமில்லை. சிலருக்கு அதிக தயவு கிடைத்திருக்குமென்றால் அதற்கு நன்றியுள்ளவர்களர் இருப்பது அவர்களது கடமை. கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைத்திருக்கிறார். சாந்தகுணம் உள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிக்கிறார். கர்த்தர் உங்களையும் தமது ஜனமாக்கிக் கொண்டார். அவர் தமது மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்.

கர்த்தருக்கே மகிமை
எனக்கு வேண்டாம் பெருமை
அவர் பாதம் தாழ்ந்து பணிந்து
கிருபைக்கு நன்றி கூறுவேன்.

கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்

ஓகஸ்ட் 14

“கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்”  லூக்கா 6:38

இந்த வசனத்தைப் போதித்தவர் அதன்படியும் செய்து காட்டினார். நமதாண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே. அவர் ஐசுவரியம் உள்ளவராய் இருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படி உங்கள் நிமித்தமாகத் தரித்திரர் ஆனாரே. இதில் கண்டிருக்கிற வாக்குத்தத்தத்திற்கு அவர் ஒரு நல்ல உதாரணம். அவர் மரணபரியந்தம் அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆனால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

கொடு என்பது கட்டளை. உதாரத்துவமாய் கொடு. உன்னால் கூடுமானவரையும் எல்லா நல்ல காரியத்துக்கும் கொடு. நல்ல நோக்கத்தோடு கொடு. ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்பி கொடு. இது என் கடமை. மனுஷருக்கு இதனால் ஆசீர் கிடைக்கும்.தேவனுக்கு இதனால் மகிமை வரும் என்று எண்ணிக்கொடு. கொடுக்கப்படும் என்பது வாக்குத்தத்தம். இப்படிச் சொன்னது யார்? சொன்னதை நிறைவேற்றக் கூடியவர். எப்படியென்றால், அவர் ஐசுவரியமுள்ளவர். செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர். ஏனெனில் அவர் உண்மையுள்ளவர். நிறைவேற்றக் கூடியவர். உதாரத்துவமாய் கொடுக்கும் எவருக்கும் இப்படி வாக்குக் கொடுக்கப்படுகிறது. இது ஆத்துமாவுக்கும் சரீரத்துக்கம் இம்மைக்கும் மறுமைக்கும் ஏற்றது. கொடுங்கள் அப்போது அமுக்கி குலுக்கி சரித்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். சில விதைகளை விதைக்கிறோம். ஆனால் எவ்வளவோ தானியங்களை அறுவடை செய்கிறோம். உன் உதாரகுணம் இயேசுவில் விசுவாசம் வைத்து அவருடைய நாமத்தை நேசிக்கிறதிலிருந்துப் பிறக்கிறதா?

நீ வாழவேண்டுமானால்
உதாரமாகக் கொடு
உலகத்தான் சேர்த்து வைப்பான்.
கிறிஸ்தவன் கொடுத்துப் பூரிப்பான்.

Popular Posts

My Favorites

உண்மையுள்ள தேவன்

செப்டம்பர் 30 "உண்மையுள்ள தேவன்" உபா. 7:9 மானிடரில் உண்மையுள்ளவர்களைக் கண்டுபிடிப்பது முடியாத காரியம். ஆனால், நமது தேவன் உண்மையுள்ளவர் என்று நாம் அறிகிறோம். ஆனால் நாம் அவரை நம்பலாம். அச்சமன்றி அவரை நெருங்கித் தாராளமாக அவரிடத்தில்...