என்னைக் கழுவியருளும் அப்போது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்

நவம்பர் 27

“என்னைக் கழுவியருளும் அப்போது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்” சங். 51:7

தாவீது பெரும் பாவத்தைச் செய்து பாதகமானதை நடப்பித்தவன். தன் பாவம் கொடுரமானது என்று அவனே நன்கு அறிவான். அதை அறிக்கையும் இட்டான். ஆனாலும், தேவனுடைய மன்னிக்கும் தன்மை மிகவும் பெரிதாகையால், தன் பாவக்கறை முற்றிலும் நீங்கிவிடுமென்று நம்பினான். கர்த்தர் தன்னைத் தூய்மையாக்கினால், முழுத்தூய்மை  அடைவான் என்றும், பாவத்தின் கறை முற்றிலும் நீங்கிப்போகும் என்றும், தூதனைப்போல் தூய்மை அடைவான் என்றும் அவன் நம்பியிருந்தான். அதேபோல், அவருடைய மன்னிப்புக்கும் ஆளானான். அந்த நொடியிலிருந்தே அவன் தேவ கிருபையை அனுபவித்தான்.

அன்பானவரே, உமது பாவமும் கொடியதாக, கணக்கிலடங்காப் பெரியதாயிருந்தாலும், கிறிஸ்துவின் இரத்தம் அதை அறவே நீங்கக் கழுவிவிடும். உன் தேவன் உன்னைக் கழுவினால் உன்னில் எந்தப் பாவக்கறையும் தங்காது. உனக்கு முன்பு இப்பூவுலகில் பாவிகளாயிருந்து, இப்பொழுது பரலோக வாசிகளாயிருப்பவர்களைக் குறித்து, வேத வசனம், இப்பொழுது அவர்கள் குற்றமற்றவர்களாக தேவ ஆசனம்முன் நிற்கிறார்கள் என்று கூறுகிறது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக. கிருபை நிறைந்த தமது சமுகத்தில் மிகுந்த சந்தோஷத்தோடே குற்றமற்றவர்களாக உம்மை நிறுத்தக்கூடியவர் கிறிஸ்து என்றும் கூறுகிறது. இரட்சகருடைய இரத்தத்தின் பெருமையைக் கவனியும். அதனால் வரும் நன்மைகளை நோக்குங்கள். அது சகல பாவங்களையும் கழுவி நீக்கிவிடும். விலைமதிப்பற்ற அந்த இரத்தம், மனிதருடைய பாவங்களுக்காக பிராயச்சித்தமாக சிந்தப்பட்ட தேவ இரத்தம். அது உம்மை உம் பாவங்களறக் கழுவ வேண்டுமெனக் கேள்.

பாவக் கறையைப் போக்கும்
குருதி ஊற்றுப் பாயுது கல்வாரியில்
அதென்னைத் தூய்மையாக்கும்
கறை நீங்கித் தூய்மையாவேன் நானும்.

தமது கிருபையுள்ள வசனம்

நவம்பர் 20

“தமது கிருபையுள்ள வசனம்” அப். 14:3

அருமையான நமது வேதாகமத்திற்கு இது மற்றொரு பெயர்தான் தேவனுடைய கிருபையான வசனம், கிருபையற்ற பாவ மனிதருக்குக் கிருபையுள்ள வார்த்தைகள். இது தேவ கிருபையினால் பிறந்தது. தேவனுடைய உள்ளத்தில் பலகாலம் மறைந்து கிடந்தது. இது பரலோகத்திலிருந்துப் பூமிக்கு இறங்கி வந்தது. கிருபைதான் இதுவரை வசனத்தை வைத்திருக்கிறது. இது இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிற யாவருக்கும் மீட்பை இலவசமாகக் கொடுக்கிறது. கர்த்தருடைய ஆசனத்தருகில் வருகிறவர்களைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ளுகிறது. நம்முடைய குறைவுகளுக்கெல்லாம் தேவையான நிறைவை மீட்பரின்மூலமாக நமக்குத் தருவதற்கு ஆயத்தமாக வைத்திருக்கிறது. கிறிஸ்துவின்மீது விசுவாசம் கொண்டவர்களுக்குப் பரம வீடு நியாயமாகக் கிடைக்கச் செய்கிறது.

நமக்கு மீட்பு கிருபையால்தான் வருகிறது. அதன்மூலமாகவே கர்த்தர் நமது செயல்களை நம் இதயத்தில் நிறைவேற்றுகிறார். கிருபைக்கும், நியாயப்பிரமாணத்திற்கும் வெகுவாக வேறுபாடுகள் உண்டு. கிருபை, தேவன் நமக்குக் காட்டிய இரக்கத்தை எடுத்துக்கூறி, எண்ணிலா மேன்மையான நன்மைகளை நமக்குக் காட்டி, நித்திய மீட்பை நமக்கு அறிவிக்கிறது.

அன்பானவர்களே, விசுவாசத்தை நியாயப்பிரமாணமாக மாற்றிக்கொள்ள வேண்டாம். சுவிசேஷம் எதையும் கட்டளையிடுகிறதில்லை. சுவிசேஷம் மகிழ்ச்சியின் கீதம். அது உங்களுக்குப் பாவ மன்னிப்பையும், சமாதானத்தையும், விடுதலையையும் பிரசங்கிக்கிறது. அது தேவ இரக்கத்தையும் கிருபையையும்பற்றிய சுபசெய்தி. மனதுக்கு மங்களச் செய்தி. கிரயமுமின்றிக் காசுமின்றிக் கிடைக்கும் இலவச நன்மைகளைப்பற்றிக் கூறும் தேவ செய்தி.

கர்த்தாவே, உமது நேசம்
என்றும் குறையாப் பொக்கிஷம்
எங்கள் பாவங்கள் போலவே
அளவிலடங்காததே.

ஏன் சஞ்சலப்படுகிறாய்

நவம்பர் 02

“ஏன் சஞ்சலப்படுகிறாய்” 1.சாமு. 1:8

அன்பும் பாசமும் நிறைந்தஒரு கணவன், தன் மனைவியைப் பார்த்து இக்கேள்வியைக் கேட்கிறான். நாம் நம்மிடம் இக்கேள்வியை ஆண்டவர்தாமே கேட்பதுபோல எடுத்துக்கொள்வோம். ஏன் சஞ்சகப்படுகிறாய்? பாவத்தினால் துன்பமடைந்து சஞ்சலப்படுகிறாயா? இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும் என்று வேதம் கூறுகிறது.

நம்முடைய பாவஙகளை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னிக்க அவர் உண்மையும் நீதியும் உள்ளவராய் இருக்கிறார் என்று கூறுகிறது. அவர் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. இனி மேல் அவரின் பிரசன்னம் எனக்குக் கிடையாது என்றெல்லாம் சஞ்சலப்படுகிறாயோ?  அவர் திரும்பவும் வந்து நம்மேல் மனதுருகுவார். அவரின் உடன்படிக்கைகள் உண்மையானவைகள். மாறாதவைகள். அவரது முகம் நமக்கு மறைக்கப்பட்டிருந்தாலும் அவர் தமது வாக்கை மாற்றமாட்டார்.

நான் கனி கொடுக்க முடியவில்லையே என்று சஞ்சலப்படுகிறாயோ? அவர் இஸ்ரவேலுக்குப் பனியைப்போல இருப்பார். தானிய விளைச்சலைப்போல் செழித்து திராட்சைச் செடியைப்போல் அவர்கள் படருவார்கள். உன்னையும் அதிகக் கனிகளைக் கொடுப்பதற்காகச் சுத்தம் செய்வார். வறுமையால் கஷ்டப்படுகிறாயோ? வெள்ளியும் பொன்னும் எல்லாம் அவருடைய அதிகாரத்துக்குள் இருக்கிறது. தமக்கு விருப்பமானபோது அவர் நமது தேவைகளையெல்லாம் நிறைவேற்றுவார். உனக்கருமையானவர்களை இழந்து விட்டதால் சஞ்சலமோ? அவர் உன்னைத் தாங்குவார். உன்னைத் தூய்மையாக்குவார். அவரின் அன்பு உனக்கு அமைதியும் பாதுகாப்பும் தந்திடும்.

சஞ்சத்தால் தவிக்கும்போது
இரட்சகரிடம் போய்ச் சேர்
இரட்சகரை நீ நம்பினால் உன்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.

அந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற

நவம்பர் 15

“அந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற” ரோமர் 4:6

இந்த வசனம் வேதத்தில் மறைந்து கிடக்கிற இரகசியங்களில் ஒன்று. மனிதன் சொந்த நீதியற்றன். கிருபையினாலே தேவன் மனுஷனை அங்கீகரிக்கிறார். இயேசு நாதர் பூமிக்கு வந்து தேவனுடைய கிருபையையும், நீதியையும் விளங்கப்பண்ணினான். அவர் சம்பாதித்துத் தந்த புண்ணியம் அளவற்ற பலனுள்ளது. நம்முடைய ரூபமெடுத்து, நமக்கும் தேவனுக்கும் மத்தியஸ்தராக இருந்து இந்தப் புண்ணியத்தைச் சம்பாதித்தார். நமக்காக அதை அங்கீகரித்து அதை நம்முடையதாகவும் எண்ணுகிறார். நாம் ஒரு நற்கிரியை செய்தவற்கு முன்னே, நம்முடைய கிரியையை அப்படியே கவனியாமல், நாம் விசுவாசிக்கிற நேரத்தில் அந்த நீதியை நம்முடையதாகவே நினைக்கிறார். அந்த நீதி நம்முடையது. இலவசமாக நாம் அதைப் பெற்றோம். நாமே சம்பாதித்ததுபோல் அது நமக்குரியதாகிவிடுகிறது. இதனாலே நாம் நீதிமான்களாகிறோம். பாக்கியம் பெறுகிறோம்.

இதனால், நாம் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நம்மேல் எக்குற்றமும் காட்டப்படாதிருக்கிறோம். எந்தக் குற்றத்திற்கும் அவர் மன்னிப்பு அளிக்கிறார். நீதியுள்ள தேவன் சகல குற்றங்களிலிருந்தும் நம்மை விடுதலையாக்குகிறார். நம்மை நீதிமான்களென்று முடிவு செய்து தண்டனைகளுக்கு நீங்கலாக்குகிறார். இவ்விதமாய் விசுவாசிக்கும் நீதியுண்டாக கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாக இருக்கிறார்.

பிரியமானவர்களே, நீங்கள் சாத்தானால் சோதிக்கப்படும்போதும் பயங்களும், திகில்களும் உங்களை மூடும்போதும் உங்கள் பழைய பாவங்கள் உங்கள்முன் தோன்றி அச்சுறுத்தும்போதும், எந்த நற்கிரியையுமில்லாமல் தேவன் நீதியைக் காட்டுகிறார் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

இயேசுவே, உமது கிருபையே
மகா மேன்மையுள்ளதே
விசுவாசத்தால் பெறும்
நீதியிலே எம் குற்றம் நீக்கிடும்.

தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு

நவம்பர் 18

“தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு” உன். 8:5

ஒவ்வொரு விசுவாசியும் இயேசு நாதரையே நேசிக்க வேண்டும். உலகம் விசுவாசிக்கும் பாழ்நிலம். பரலோகமோ அவனுக்குத் தந்தையார் இல்லம். அவன் வாழப்போகும் வாசஸ்தலம். கிறிஸ்துவையே துணையாகப் பற்றிக் கொண்டு இந்த உலகில் அவன் பயணம் செய்கிறான். இந்த வசனம் தன் நேசர்மேல் சாய்ந்து கொண்டு இருக்கும் மணவாட்டியைப்போல விசுவாசியைக் குறிப்பிடுகிறது. இது மணவாட்டிக்கு இருக்கும் பலவீனத்தையும், நேசருக்கு இருக்கும் பலத்தையும், அவர் மேல் அவளுக்கு இருக்கும் நம்பிக்கையையும் காட்டுகிறது. அவர் மவாட்டிக்கு துணையாகவும், பெலனாகவும் இருக்கிறார். திருச்சபை கிறிஸ்துவின் மணவாட்டி. சொரிந்து ஆறுதலளிக்கிறார். திருச்சபை தம்மேல் சார்ந்திருப்பதையே அவர் விரும்புகிறார்.

பிரியமான விசுவாசியே, உன் நேசரோடு நெருங்கியிரு. இக்கொடிய வனாந்தரமான உலகில் அவரை விட்டுப் பிரியாதே. எப்பொழுதும் அவர்மேல் சார்ந்திரு. உன் பெலவீனத்தை உணர்ந்துகொள். அவருடைய வலிமையான கரம் உனக்கு உதவ ஆயத்தமாயிருக்கிறது. உன்னைத் தூக்கி எடுத்து நடத்துவார். அவர்மேல் நீ எவ்வளவு அதிகமாக சார்ந்திருக்கிறாயோ, அவ்வளவு அதிகமாக அவர் உன்மேல் அன்பு செலுத்துகிறார். அவரை நேசிக்கும் அளவுக்கு அவருடன் ஐக்கியமாவாய். அவரே உன்னை நடத்தட்டும். அவரையே நம்பு. வல்லமையுள்ள அவரைப் பற்றிக்கொள். என்றும் அவரோடேயே நடந்து அவரையே போற்று. நீ அவரோடிருக்கும் மட்டும் எனக்குப் பமில்லை. அவருடைய சமுகத்தில் உன் இருதயம் கொழுந்து விட்டெரியும் அனுபவத்தைப் பெறுவாய். உன் நேசரை விசுவாசித்து, அவரை அறிந்து, எப்பாழுதும் அவர் பேரில் சார்ந்துகொள்.

எச்சோதனையிலும் நீ
உன் நேசர்மேல் சார்ந்திரு
அவரே உன் மீட்பர், இரட்சகர்
அவரே உன்னைக் காப்பார்.

அற்பமான ஆரம்பத்தின் நாள்

நவம்பர் 29

“அற்பமான ஆரம்பத்தின் நாள்” சக. 4:10

தேவன் சிலரிடத்தில் அதிகக் கிரியைகள் நடப்பித்தாலும் அவை வெளியே தெரிவதில்லை. அவர்களின் விசுவாசம் பெலவீனமானது. அவர்களுடைய வேத வசன அறிவு மிகவும் குறைவுதான். அவர்களுடைய அன்பு ஆழமானதல்ல. தேவனுக்கு செய்ய வேண்டிய எதையும் அவர்கள் வெளிப்படையாகச் செய்வதில்லை. மனம் திறந்து பேசவும் மாட்டார்கள். எப்பொழுதும் எந்தப் பாவத்திற்காவது அடிமைப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் இப்படிப்பட்டவர்களும் கர்த்தருடைய பிள்ளைகள்தான். வெறுமையான உலகத்தையும், பாவத்தையும் வெறுத்து கிறிஸ்து இயேசுவின் அருமை பெருமைகளை அறிந்துக் கொள்ளக் கூடிய அறிவு அவர்களுக்கிருக்கிறது. அவர்களும் அவருடைய அன்பை ருசிக்க ஆவல் உள்ளவர்கள்தான். எல்லாவற்றையும், சிறப்பாக வேதனையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனாலும் நாங்கள் கிறிஸ்துவில் அன்புகூருகிறோம் என்று வெளிப்படையாகக் கூறும் தைரியம் அவர்களுக்கு இல்லை. எனினும் மறைவான அவரை அவர்கள் நேசிக்கிறார்கள். அவர்களுக்கு பயங்கள் அதிகமாயிருப்பதால் மகிழ்ச்சி குறைவாயிருக்கிறது.

அவர்கள் ஜெபிக்காவிடில் தேவ சமுகத்தில் நாடாவிடிலும் பிழைக்கமாட்டார்கள். கிறிஸ்துவோடு ஐக்கியப்படுவதில் வாஞ்சையுள்ளவர்களான கர்த்தரின் பிள்ளைகளைப்போல் பாக்கியசாலிகள் யாருமில்லை. அவ்வாறானவர்களின் விஷயத்தில்தான் அற்பமான ஆரம்பத்தின் நாள் காணப்படும். அந்த நாளில் இரட்சிப்புக்கானவை உண்டு. சிறிய விதைகளிலிருந்துதான் பெரிய மரங்கள் வளருவதுபோலத்தான் இதுவும் அற்பமான ஆரம்பத்தின் நாளைத் தாழ்வாக எண்ணாதே. ஆண்டவர் அதைக் குறைவாக மதிப்பதில்லை. விருப்பத்துடன் ஏற்பார். ஆகவே எவருடைய அற்கமான ஆரம்ப நாளையும் நாம் தாழ்வாக எண்ணலாகாது.

சிறு மழைத்தூறல் பெரும் வெள்ளமாம்,
சிறிதான பொறியும் பெரு நெருப்பாம்
சிறிதான ஆரம்பம் விசுவாசியாக்கும்
சிறது எதையும் அசட்டை செய்யாதே.

எபெனேசர்

நவம்பர் 19

எபெனேசர்” 1.சாமு.7:12

சிருஷ்டிகளாகிய நாம் மோசத்தில் விழக்கூடியவர்கள். வலிமையில்லாதவர்கள். அறிவீனர். நமக்கு எந்த நேரத்திலும் நமது பகைவனான சாத்தானாலும்,  அவன் வைக்கும் கண்ணிகளாலும் ஆபத்து எந்நேரமும் ஏற்படும். நாம் சிறுக சிறுகத் தவறிப்போகிறவர்கள். அச்சத்தால் பீடிக்கப்படுகிறவர்கள். இவ்வாறான நேரங்களில் நமக்கு உதவி செய்திடவே எபெனேசராக தேவன் இருக்கிறார். அவர் நம்மோடே இருந்து, தேவைப்படும்பொழுதெல்லாம் நமக்கு உதவி செய்கிறார். தேவனுடைய ஒத்தாசையினால்தான் நாம் நமது அவிசுவாசத்தையும், பாவ வாழ்க்கையையும் மேற்கொண்டோம். நமது சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவின் பின் செல்கிறோம். துன்பமும், சோதனையும் வந்தபோதும், எத்தகைய புயலுக்கும் அஞ்சாதிருந்தோம். தேவ ஒத்தாசையாலேயே இம்மட்டும் காக்கப்படுகிறோம்.

ஆகவே, நம்முடைய எபெனேசராகிய தேவனை நம்முன் நிறுத்தி நமக்கு அவர் செய்த உதவியை அறிக்கை செய்வது நமது கடமை. எல்லா உதவிகளையும் நமக்குச் செய்பவர் நமது கர்த்தரே. அவரே ஏற்ற நேரங்களில் உதவியவர். எப்போதும் அவர் நமக்கு உதவி செய்பவராயிருக்கிறபடியால், அவரைத் துதிப்போம். அவரிடத்திலிருந்து நாம் உதவிகளைப் பெற்றதால், நாம் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகள் யாவை? அவரைத் துதித்து, ஸ்தோத்தரித்து, அவருக்கு நன்றி செலுத்துவோம். இவ்வாறு செய்யும்பொழுது நாம் முழு இருதயத்தோடு செய்ய வேண்டும். அவருடைய உதவியும் பிரசன்னமும், என்றும் நம்மோடிருக்கும் என்று நாம் விசுவாசிக்க வேண்டும். நன்றி செலுத்தும் ஜெபங்களைத் தவறாது ஏறெடுக்க வேண்டும். எபெனேசர் இம்மட்டும் தேவன் நமக்கு உதவி செய்தார். இனிமேலும் செய்வார் என்று அவருடைய உதவிக்காகப் பொறுமையோடு காத்திருப்போம். அவர் செய்த உதவிக்கு சாட்சி சொல்லுவோம்.

இம்மட்டும் காத்தார் தேவன்
எபெனேசர் ஆதலால் போற்றுவேன்
இம்மையிலெல்லாம் நம்புவேன்
இம்மை விட்டவரில்லம் சேருவேன்.

அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்

நவம்பர் 11

“அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்” மல். 3:3

புடமிடப்படும் வெள்ளி தேவனுடைய மக்களே. அவர்களுக்கு வரும் துன்பங்கள்தான் புடமிடுதல். வெள்ளியை சுத்தமாக்க வேண்டுமென்பதே அவருடைய நோக்கம். அதனால், அவர்களை அவர் புடமிடுகிறார். தமது நோக்கம் நிறைவேறும்வரை சுத்தம்பண்ணுகிறார். சுத்தமாக்குகிற வேலையைத் தாமே செய்கிறார். துன்பத்தை அதிகமாக்கி தம் பணியைக் கவனமாகச் செய்கிறார். நோக்கம் நிறைவேறப் பொறுமையோடு காத்திருக்கிறார். அவருடைய விருப்பம் வீணாகாது. ஒரு சோதனையால் அவருடைய நோக்கம் நிறைவேறாவிடில் வேறு சோதனைகளைத் தருவார். தமது நோக்கம் நிறைவேற்றுவார்.

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, நீங்கள் துன்பங்கள் ஏன் தொடர்ந்து வருகின்றன என்று கேட்கலாம். அதற்குப் பதில் இதுதான் உங்களிலுள்ள களிம்பு இன்னும் நீங்கவில்லை. நேரிடும் பெரும் துன்பங்களனைத்தும், பெரிய இரக்கங்களே. நீ பிற்காலத்தில் ஒளியிலுள்ள பரிசுத்தவான்களைப்போல் அனுபவிக்கும் சுதந்தரத்திற்கு உன்னை ஆயத்தமாக்கும் கருவிகள்தான் அவை. உங்கள் துன்ப நேரங்களில் நீங்கள் கைவிடப்பட்டவர்களென்று நினைக்க வேண்டாம். உன்னைத் தூய்மையாக்கும் வேலையைக் கர்த்தர்தாமே உடனிருந்து செய்கிறார். உங்கள் பெருமை, கோபம், தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படியாமை ஆகிய களிப்புகள் உங்களிலிருந்து நீங்க வேண்டும். நீக்கியவுடன் துன்பங்கள் முடிந்துபோகும். ஒருமுறை அவர் அனுமதியார். போதுமான நேரத்திற்கு மேலாக ஒருகணம்கூட நீங்கள் துன்பத்தை அனுபவிக்க மாட்டீர்கள். இவ்வாறுதான் அவர் உங்களை மகிமைப்படுத்துகிறார். அன்பனே, உன்னைப் புடமிடுகிறவர் உன் கர்த்தர். தம் வேலை முடியும்வரை உன்னுடன் அவர் இருக்கிறார். உனக்கு ஒரு தீங்கும் வராது.

பொன்போல் ஜோதி வீசுமட்டும்
என்னோடிரும் புடமிடுகையில்
சோதனை முடிந்த பின்னர் உம்
முகம் என்னில் காண்பீரே.

என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்

நவம்பர் 17

“என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்” யோபு 29:18

யோபு தனக்கிருந்த கூடாகிய வீட்டை சௌகரியமுள்ளதாகவும் ஆறுதல் தருவதாகவும் நினைத்திருந்தான். அது நிரந்தரமானது என்றும் எண்ணினான். ஆனால் இம்மண்ணுலகில் எங்கு நம் வீட்டை நாம் அமைத்தாலும் அது இயற்கையின் உபாதைகளான புயல், வெள்ளம், நெருப்பு, பூகம்பம் இவற்றிற்குத் தப்பாது. நிலையான நரகம் நமக்கு இங்கு இல்லை. நாம் இங்கு நிரந்தரமாக வாழ முடியாது. யோபு வாழ்வில் பழுதில்லாதவன். நேமையான, தூய வாழ்க்கையுடையவன். அவனும் இவ்வாழ்க்கையை வெறுத்து மேலான தேவனுடைய இடத்தையே நாடினான். இப்பூமியில், அந்தப் பரம வீட்டிற்கு இணையானது எதுவும் கிடையாது. இம்மைக்குரிய நன்மைகள் நமக்குத் தற்காலிகமாகத் தரப்பட்டவைதான்.

இவ்வுலகில் எங்கு நமது கூட்டை ஏற்படுத்தினாலும் அது அழிந்துபோகும். நமக்கு நிரந்தரமான வீடு பரலோகம். எனவே நம்முடைய வாழ்வை நிர்ணயிக்கும் தேவனுடைய கரத்தில் நாம் ஒப்புக்கொடுப்போம் என்று இருந்தாலும், ஒரு நாள் நாம் இவ்வுலகை விட்டுப்போ வேண்டியவர்களே. மரணத்தை நாம் சந்தித்தே ஆக வேண்டும். படுக்கையில் மரிப்போமா. விபத்தில் மாள்வோமா. ஏழையாக மரிப்போமா. ஐசுவரியவனாக மரிப்போமா என்பது முக்கியமல்ல. நாம் கிறிஸ்துவின் மகனாக, மகளாக மரிக்கிறோமா என்பதே முக்கியம். அவ்வாறு நாம் மரித்தோமானால், நமக்கு நித்திய வாழ்வு கிடைக்கும். அங்கு மரணம் இல்லை. அவ்விடம் ஒன்ற நமக்கு நிரந்தரமாக வீடு. அதையே நாடித் தேடி, அதைப் பெற உழைப்போம். வாழ்வோம்.

இவ்வுலகம் சதமல்ல
என் வீடு பரத்திலேயேதான்
என் மீட்பர் இருக்குமிடமே
என் வீடாக என்றுமிருந்திடும்.

உன் இருதயம் செம்மையாய் இருக்கிறதா

நவம்பர் 21

“உன் இருதயம் செம்மையாய் இருக்கிறதா” 2.இராஜா. 10:15

இக்கேள்வி மிகவும் அவசியமாகக் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்வி. சில மனிதர் மிகவும் ஞானமாகவும் நன்றாகவும் பேசுவார்கள். அவர்களுக்கு கிறிஸ்தவ உபதேசம்பற்றிய தெளிந்த அறிவும் உண்டு. கிறிஸ்தவ வழிகளைச் சரியாக அறிந்தவர்கள். ஆனால் அவர்களுடைய இதயங்கள் நேர்மையானவையல்ல. இதை வாசிப்பவரே, உமது இதயம் சீரானதாயுள்ளதா? செய்த பாவத்திற்காக அது நொறுக்கப்பட்டுள்ளதா? அது தீமையை வெறுக்கிறதா? இயேசு கிறிஸ்துவை உறுதியாகப்பற்றிக் கொண்டிருக்கிறதா? கர்த்தருடைய வசனத்தை அது ஏற்றுக்கொண்டுள்ளதா? வசனத்தில் கூறப்பட்டபடி தேவனுக்குப் பிரியமாக நடக்க முயற்சிக்கிறதா? உம் இருதயம் பரிசுத்தவான்கள் மேலும் அன்பு காட்டுகிறதா? கர்த்தருடைய ஊழியத்தில் பக்தி வைராக்கியம் கொண்டுள்ளதா?

அல்லது, அது தேவனை விட்டுத் தூர விலகி வாழ்கிறதா? கிறிஸ்துவில் ஐக்கியங் கொள்ளவில்லையா? உலகக் காரியங்களிலேயே திருப்தி கொள்கிறதா? வேதாகமத்தை ஏற்காமல் அவமதிக்கிறதா? தேவ கிருபையைக் குறித்து அசட்டையாயிருக்கிறதா? பாவத்தால் ஏற்படும் குற்ற உணர்வால் கலங்குகிறதா? உம் இதயத்தின் நிலையைச் சோதித்துப் பாரும்.

கிறிஸ்துவினண்டைக்கு உம் இதயம் வராமற்போனால் அது செம்மையாய் இருக்காது. ஆகையால் அது அடிக்கடி கெத்செமனே, கல்வாரி காட்சிகளைத் தியானிக்க வேண்டும். உம் இருதயம் செம்மையாக இல்லை என உணர்ந்து நீர் துக்கப்பட்டதுண்டா? நீர் உமது இருதயத்தை இயேசுவின் இரத்தத்தால் கழுவவேண்டும். அதை ஆண்டவருடைய சந்நிதியில் படைக்க வேண்டும். அப்பொழுது அவர் அதை செம்மை ஆக்குவார்.

என் மனம் செம்மையானதானால்,
பாவத்தை ஒரு நாளும் அது விரும்பாது
என் மனதில் கிறிஸ்து வருவாரானால்
அது தூய்மையாகி நலம் பெறும்.

Popular Posts

My Favorites

கர்த்தர் சமீபமாயிருக்கிறார்

மார்ச் 02 "கர்த்தர் சமீபமாயிருக்கிறார்." பிலி. 4:5 இயேசு கிறிஸ்து வரப்போகிறார். அவர் வருகிற நாள் தெரியாது. ஆகையால் நாம் எப்போதும் ஆயத்தமாய் இருக்க வேண்டும். அவர் சீக்கிரம் வருவார். உண்மையாய் வரத்தான் போகிறார் என்று...