அவர்கள் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள்

யூன் 15

“அவர்கள் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள்.” ரோமர் 8:14

தேவனுடைய ஆவியானவரால் நடத்தப்படுகிறவர்கள்தான், தேவனுடைய புத்திரர், தேவ பிள்ளைகளை ஆவியானவர் எந்த இலக்கை நோக்கி நடத்துகிறார்? தங்களுக்கு இரட்சகர் தேவையென்று அறியவும், கிறிஸ்து இயேசு தங்களுக்கு மிகவும் ஏற்றவர் என்று காணவும், அவர் நிறைவேற்றின கிரியை போதுமென்று பிடிக்கவும், அவரின் ஜீவனையும் வெளிச்சத்தையும் பெற்றுக்கொள்ளவுமே அவர்களை நடத்துகிறார். சுருங்கக் கூறினால், தங்களை வெறுத்து, பாவத்தை விட்டு மனந்திரும்பி, உலகைவிட்டு பரிசுத்தத்தை வாஞ்சித்து கர்த்தருக்கு ஊழியம் செய்து, மகிமைக்கு தங்களை ஒப்புக்கொடுக்கவே அவர்களை நடத்துகிறார்.

இப்படி தேவாவியினால் நடத்தப்படுகிறவர்கள்தான் தேவபுத்திரர். இவர்கள் உலகத் தோற்றத்திற்கு முன்பே முன் குறிக்கப்பட்டவர்கள். இப்போது இவர்கள் உன்னதமான தேவனுடைய பிள்ளைகளென்று அறிவிக்கப்படுகிறார்கள். அவர்கள் தேவனால் பிறந்தவர்கள். தேவனால் போதிக்கப்பட்டவர்கள். பிள்ளைகளாக நடத்தப்படுகிறவர்கள். தேவனுக்குச் சுதந்தரவாளிகள். கிறிஸ்துவின் கூட்டாளிகள். மேலான கனத்தில் பங்கு பெறவும், பரலோக ஆனந்தத்தை அனுபவிக்கவும் அழைக்கப்பட்டவர்கள்.

அன்பர்களே! நாம் ஆவியானவரால் நடத்தப்படுகிறவர்களா? அவர் இன்று நம்மை கிறிஸ்துவினிடம் நடத்தினாரா? நமக்குத் தாழ்மையைக் கற்றுக்கொடுத்தாரா? கிறிஸ்து நமக்கு அருமையானவரா? நாம் தேவபுத்திரரானால் பயமில்லை. நமக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும்.

குமாரனுடய ஆவி
அடையட்டும் பாவி
உம்மைவிட்டு விலகேன்
ஓருக்காலும் உம்மை விடேன்.

பலனைப் பெற்றுக் கொள்ளுகிறவர்கள்

யூன் 30

“பலனைப் பெற்றுக் கொள்ளுகிறவர்கள்.” 1.தீமோ. 6:2

சுவிசேஷம் தேவன் தரும் மகத்தான ஈவுகளில் ஒன்று. அதைப் பெற்றுக்கொள்ளுகிற ஒவ்வொருவருக்கும் அது பலன் தருகிறது. ஒருவனின் அறிவுக்குப் பலன் தந்து அதை வளர்க்கிறது. அவன் இருதயத்திற்குப் பலன் தந்து அதைச் சுத்தப்படுத்துகிறது. அவன் மனட்சாட்சிக்குப் பலன் தந்து அதைச் சமாதானப்படுத்துகிறது. அவன் குணத்திற்குப் பலன் தந்து அதைச் செவ்வைப்படுத்துகிறது. அவன் நடக்கைக்கு பலன் தந்து அவனை தீமைக்கு விலக்கி நன்மையை அளிக்கிறது. அவன் குடும்பத்திற்கும் பலன் கிடைக்கிறது. இது எஜமானைப் பட்சமுள்ளவனாகவும், எஜமாட்டியைப் புத்திசாலியாகவும், வேலைக்காரரைக் கவனமும் சுறுசுறுப்பும் உள்ளவர்களாகவும், பெற்றோரை நல்லவர்களாகவும், பிள்ளைகளைக் கீழ்ப்படிகிறவர்களாகவும் இருக்கப்பண்ணுகிறது.

உலக அரசுகளுக்கும் அதனால் பலன் கிடைக்கிறது. நல்ல சட்டங்களை ஏற்படுத்தி ஆளுகைகளைத் திடப்படுத்துகிறது. குடி மக்களை நல்லவர்களாக மாற்றுகிறது. இந்தப் பலனை நாமும் பெற்றிருக்கிறோமா? பெற்றுக்கொள்வதன் பொருள் என்ன? இது தெய்வீகமானதென்றும், அதன் உபதேசத்தை ஒத்துக்கொண்டு, அதன் நன்மைகளை ஏற்றுக்கொண்டு, அதன் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து, அதன் நியமங்களை ஆதரித்து, அதன் சந்தோஷங்களைப் பரீட்சை செய்து, எந்தப் பயனுள்ள காரியங்களுக்கும் அதை உபயோகிப்பதே அதன் பொருள். சிலர் வசனத்தைக் கேட்கிறார்கள். ஆனால் அதற்கு செவிகொடுக்க மறுக்கிறார்கள். சிலர் செவி கொடுத்தும் அதை ருசிக்க மறுக்கிறார்கள். ஆனால் சிலரோ அதை ஏற்றுக்கொண்டு ருசித்து அதன் பலனை அடைகிறார்கள். இப்படிப்பட்டவர்கள்தான் குற்றமற்றவர்களாய் மாறி, பரிசுத்தராகி, பாக்கியவான்களாய் மாறுகிறார்கள். சகலமும் அவர்களுடைய நன்மைக்கு ஏதுவாகிறது. நீ சுவிசேஷத்தினால் இந்தப் பலனைப் பெற்றவனா?

இந்த நன்மை எனக்கீயும்
சுவிசேஷத்தின் மகிமையை
கண்டு களிக்கச் செய்யும்
என் உள்ளம் உம்மைப் போற்றும்.

நானே வழி

யூன் 26

“நானே வழி.” யோவான் 14:6

இந்த வசனம் ஒரு நல்ல உவமானம். இரட்சகர் நமக்குத் தேவை எனக் காட்டுவதற்கு இந்த உவமானத்தைப் பயன்படுத்துகிறார். நாம் தேவனுக்குத் தூரமானவர்கள். நாம் பாவிகளானதால் தேவனால் அங்கீகரிக்கப்படுவதற்குச் சுபாவப்படி வழி இல்லை. ஆனால் இயேசுவோ நமக்கு மத்தியஸ்தராகி நம்மைப் பிதாவிடம் வழி நடத்தும் வழியானார். இந்த வழிதான் நம்மைப் பாவத்திலிருந்தும், பரிசுத்தத்திற்கும், கோபாக்கினைக்குரிய பயத்தினின்று நித்திய சிநேகத்திற்கும் நம்மை நடத்துகிறது. தேவனை அறிவதற்கும், தேவனோடு ஒப்புரவாகுதற்கும், தேவனால் அங்கிகரிக்கப்படுவதற்கும், தேவனோடு சம்பந்தப்படுவதற்கும், தேவனை அனுபவிப்பதற்கும், தேவனுக்கு ஒப்பாவதற்கும், தேவ சமூகத்தண்டையில், அவர் மகிமையண்டைக்கும் நடத்த இயேசுதான் வழி.

எல்லாப் பாவிகளுக்கும், அவரை ஏற்றுக்கொள்ளுகிற யாவருக்கும் அவர் வழியாகத் திறக்கப்பட்டுள்ளார். அவரை நம்புகிற யாவருக்கும் அவரே நல்வழி. வரப்போகிற ஆக்கினைக்குத் தப்ப ஓரே வழி. ஆனால் நாமோ சுபாவப்படி அவர் வழியை விட்டு விலகிப்போனோம். ஆவியானவர் இதை நமக்கு உணர்த்துகிறார். இயேசுவைப் போலொத்த வழிதான் நமக்கு வேண்டுமென்று அறிகிறோம். விசுவாசத்தினால் அந்த வழிக்கு உட்படுகிறோம். கண்ணீரால் அந்த வழியை நனைக்கிறோம். அந்த வழியில் நாம் பிரயாணப்படவேண்டும். அவர் வழியில் செல்லும் எவரும் சுகத்தோடு தாங்கள் சேரும் இடம் அடைவர். அன்பர்களே! நாம் நிற்கிற இடம் நல்ல இடம். நாம் நடக்கிற பாதை நேரானது. நாம் தொடங்கி இருக்கும் பயணத்தின் முடிவு நித்திய ஜீவன்.

நீரே வழி உம்மால்தான்
பாவம் மாம்சம் ஜெயிப்பேன்
உம்மையன்றி பிதாவிடம்
சேரும் வழி அறியேன்.

தேவப்பிரியர்

யூன் 09

“தேவப்பிரியர்.” ரோமர் 1:2

தேவப்பிரியர் இன்னாரென்று எப்படித் தெரியும். இயேசுவில் அவர்கள் வைக்கும் விசுவாசத்தினாலும் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதனாலும் தெரியும். தேவப்பிரியர் என்ற பெயர் கிடைப்பது பெரிய சிலாக்கியம். இதுவே எல்லா நன்மைகளுக்கும் காரணம். தேவப்பிரியர் என்பது தேவனை சிநேகிப்பதினாலும் அவருடைய மகிமைக்காக வைராக்கியம் காட்டுவதினாலும் தெரிந்துக்கொள்ளக்கூடியது. அவரின் சித்தம் செய்து பொறுமையாய்ச் சகிக்கிறதினாலும் தெரிந்துக்கொள்ள முடியும். அவர்களுக்குக் கிடைக்கும் மேன்மை என்ன? அவர்கள் தேவனுடையப் பிள்ளைகளாகிறார்கள். இயேசுவுக்குச் சகோதரராக ஒப்புக்கொள்ளப்படுகிறார்கள். தேவனுக்குக் கூட்டாளிகளாக அவரோடு சஞ்சரிக்கிறார்கள். அவர்களுக்குள் ஆவியானவர் தங்கியிருக்கிறார்.
திவ்ய செயல், அவர்களைத் தற்காத்து அவர்களுக்குத் துணை நின்று அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் சுதந்தரித்து வைத்திருக்கிறது. தேவத்தூதர்கள் அவர்களுக்குப் பணிவிடை செய்கிறார்கள். இவர்கள் சகலத்திற்கும் சுதந்தரவாளிகள். இவர்களுக்குக் கிடைப்பது என்ன? வெற்றி. எல்லா சத்துருக்களின் மேலும் ஜெயம். எல்லா அடிமை நுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு வியாதிகளிலிருந்து சுகம் அடைவர்.

பரிசுத்த பாக்கியத்தைத் தேவனோடுகூட அனுபவித்து இயேசுவைப்போல் இருப்பார்கள். மகிமையின் சிங்காசனம், அலங்காரமான கிரீடம், மோட்சானந்த கின்னரம் அவர்களுக்குக் கிடைக்கும். இவர்கள் செய்ய வேண்டிய கடமை, தேவனுக்காகவும் அவர் ஊழியத்திற்காகவும் தீர்மானமாய் பிரயாசப்படுதல் வேண்டும். முழுவதும் தேவனுக்கும் அவர் ஊழியத்திற்கும் தங்களை ஒப்புவிக்கவேண்டும். அவர் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நியமங்களை நேசித்து நடக்க வேண்டும். அவருடைய சித்தத்தைப் பெரிதாக மதித்து, சகலத்திலும், அவருடைய ஜனங்களுக்கு ஒத்து நடக்க வேண்டும். இதை வாசிக்கிறவரே, நீர் தேவனுக்குப் பிரியமானவர்தானா? நீர் அவரை நேசிக்கிறீரா? அவரோடு சஞ்சரித்து வருகிறீரா?.

இயேசுவின் நாமத்தில் எழுந்து
அவர் கைமேல் சார்வேன்
அவர் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து
என் அன்பைக் காண்பிப்பேன்.

உங்கள் அன்பைத் திருஷ்டாந்தப்படுத்துங்கள்

யூன் 01

“உங்கள் அன்பைத் திருஷ்டாந்தப்படுத்துங்கள்.” 2.கொரி 8:24

தேவனை நேசிக்கிறோமென்று சொல்லியும் நேசியாமலிருந்தால் நாம் கிறிஸ்தவர்கள் அல்ல. கிறிஸ்தவ அன்பு எல்லாவற்றையும்விட கிறிஸ்துவையும் அவர் காரியத்தையும் பெரிதாக எண்ணும். அவரின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து அவர் சித்தம் செய்யும். அவர் கற்பனைகள் எல்லாவற்றிற்கும் உண்மையாய் கீழ்ப்படிந்து அவர் பிள்ளைகள் இவ்வுலகில் மேன்மக்கள் என்று அவர்களோடு சந்தோஷப்படும். இந்த அன்புதான் துன்பப்படுகிறவர்களோடு பரிதபிக்கும். எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாயிருக்கும். நாம் உண்மையுள்ள ஜாக்கிரதையுள்ள கிறிஸ்தவர்கள் என்றால் இப்படிச் செய்வோம்.

தேவனுடைய பிரமாணம் இப்படி நம்மை நேசிக்கும்படி செய்கிறது. சர்வ வல்ல பிதா இந்த நேசத்தை நமக்குள் உண்டாக்குவேன் என்கிறார். பரிசுத்த ஆவியானவரால் இந்த அன்பு நம் உள்ளத்தில் ஊற்றப்படுகிறது. இயல்பாகவே நம்மில் அன்பு இல்லாதபோது அவர்தான் தெய்வீக அன்பை ஊற்றுகிறார். அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, விரும்பி தேடப்பண்ணுகிறார். சுவிஷேத்தை விளக்கிக் காட்டி நம்முடைய இருதயத்தில் தேவ அன்பை ஊற்றி அதை உண்;டுபண்ணுகிறார். தேவனோடு தினமும் அவர் ஐக்கியத்தில் நம்மை வழி நடத்திச் செல்லுகிறார். அன்பர்களே, நாம் தேவனையும் அவர் பிள்ளைகளையும் நேசிக்கிறோமென்று சொல்லுகிறோம். அப்படியானால், நல்வசனத்திலும், கிரியைகளிலும் அவர்களுக்கு உதவி செய்து, மற்றெல்லாரிலும் அவர்களை மேன்மையாக எண்ணி அந்த அன்பை நிரூபிக்க வேண்டும். வியாதியில் அவர்களைச் சந்தித்து, வறுமையில் உதவி செய்து, ஒடுக்கப்படும்போது பாதுகாத்து இயேசுவின் நிமித்தம் அவர்களிடத்தில் பட்சமாய் நடந்துகொள்வோமாக.

இயேசுவின் இரத்தம் பெற்றோம்
அதில் காப்பற்றப்பட்டோம்
அவ்விரக்கத்தைக் காட்டுவோம்
அன்பைப் பாராட்டுவோம்.

Popular Posts

My Favorites

உன் நோய்களையெல்லாம் குணமாக்கி.

யூலை 06 "உன் நோய்களையெல்லாம் குணமாக்கி." சங். 103:3 கர்த்தர் ஒருவரே பரிகாரி. அவரே சரீரத்தையும், ஆத்துமாவையும், குணமாக்குகிறவர். விசேஷமாய் அவர் ஆத்துமாவுக்கும் பரிகாரி. எல்லா வியாதிக்கும் துன்பத்துக்கும் காரணம் பாவமே. பாவத்துக்கு இருப்பிடம் இருதயமே. இந்த...