அவர்கள் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள்

யூன் 15

“அவர்கள் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள்.” ரோமர் 8:14

தேவனுடைய ஆவியானவரால் நடத்தப்படுகிறவர்கள்தான், தேவனுடைய புத்திரர், தேவ பிள்ளைகளை ஆவியானவர் எந்த இலக்கை நோக்கி நடத்துகிறார்? தங்களுக்கு இரட்சகர் தேவையென்று அறியவும், கிறிஸ்து இயேசு தங்களுக்கு மிகவும் ஏற்றவர் என்று காணவும், அவர் நிறைவேற்றின கிரியை போதுமென்று பிடிக்கவும், அவரின் ஜீவனையும் வெளிச்சத்தையும் பெற்றுக்கொள்ளவுமே அவர்களை நடத்துகிறார். சுருங்கக் கூறினால், தங்களை வெறுத்து, பாவத்தை விட்டு மனந்திரும்பி, உலகைவிட்டு பரிசுத்தத்தை வாஞ்சித்து கர்த்தருக்கு ஊழியம் செய்து, மகிமைக்கு தங்களை ஒப்புக்கொடுக்கவே அவர்களை நடத்துகிறார்.

இப்படி தேவாவியினால் நடத்தப்படுகிறவர்கள்தான் தேவபுத்திரர். இவர்கள் உலகத் தோற்றத்திற்கு முன்பே முன் குறிக்கப்பட்டவர்கள். இப்போது இவர்கள் உன்னதமான தேவனுடைய பிள்ளைகளென்று அறிவிக்கப்படுகிறார்கள். அவர்கள் தேவனால் பிறந்தவர்கள். தேவனால் போதிக்கப்பட்டவர்கள். பிள்ளைகளாக நடத்தப்படுகிறவர்கள். தேவனுக்குச் சுதந்தரவாளிகள். கிறிஸ்துவின் கூட்டாளிகள். மேலான கனத்தில் பங்கு பெறவும், பரலோக ஆனந்தத்தை அனுபவிக்கவும் அழைக்கப்பட்டவர்கள்.

அன்பர்களே! நாம் ஆவியானவரால் நடத்தப்படுகிறவர்களா? அவர் இன்று நம்மை கிறிஸ்துவினிடம் நடத்தினாரா? நமக்குத் தாழ்மையைக் கற்றுக்கொடுத்தாரா? கிறிஸ்து நமக்கு அருமையானவரா? நாம் தேவபுத்திரரானால் பயமில்லை. நமக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும்.

குமாரனுடய ஆவி
அடையட்டும் பாவி
உம்மைவிட்டு விலகேன்
ஓருக்காலும் உம்மை விடேன்.

கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்

யூன் 24

“கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்.” சங். 61:2

இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் அந்தக் கன்மலை கிறிஸ்துதான். முன்பு வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பிறகு முன்னடையாளங்களால் முத்தரிக்கப்பட்டு பிரசன்னமானவர் இவரே. தாகம் தீர்ப்பதற்காகவே அடிக்கப்பட்ட கன்மலை இவர். களைத்துப்போனவர்களுக்கு இளைப்பை அருளும் கன்மலை இவர். துன்பப்படுகிறவர்களை ஆதரிக்கும் கன்மலை இவர். பயந்து கலங்கினவர்கள் ஒதுங்கி நிற்கும் பிளவுண்ட கன்மலை இவர். இந்த கன்மலையின்மேல் நாம் சுகமாய்த் தங்கலாம். இந்தக் கன்மலையின்மேல் நின்று தூரத்திலுள்ள சியோனைப் பார்க்கலாம். இந்தக் கன்மலையில் இருந்தால் பூயலுக்கு பாதுகாக்கப்படலாம். சூரிய வெப்பத்துக்கு நிழலாய் தங்கலாம். ஆனால் நாமோ, இதன் அருமையை தெரிந்துக்கொள்ளாமல் அலைந்து திரிகிறோம். தூரத்தில் இருக்கும்போது இதன் பயனை உணர்ந்து இதனால் கிடைக்கும் சிலாக்கியத்துக்காக பெருமூச்சு விடுகிறோம்.

நாம் எங்கே இருந்தாலும் இந்தக் கன்மலையிடம் வரலாம். நம்மை நடத்த உள்ள துணையும் உதவி செய்யும் சிநேகிதனும் நமக்குத் தேவை. ஆகவே நாம் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் சங்கீதக்காரனைப்போல் என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உம்மை நோக்கி கூப்பிடுவேன். எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும் என்று சொல்லுவோமாக. இயேசுவானவர் நமக்கு எல்லாமுமாய் இருக்கிறார். நமக்கு வேண்டியதெல்லாம் அவரிடம் உண்டு. எப்பொழுதும் ஜெபம் பண்ணலாம். தேவன் ஜெபத்தை ஏற்று தைரியப்படுத்தி, பதில் அளிக்கிறார். அவரிடத்தில் போவோமானால் பயங்களை வென்று சத்துருக்களை ஜெயித்து, நாம் எதிர்பார்க்கிறதிலும், அதிகம் பெறுவோம். நாம் கேட்கிறதற்கும் நினைப்பதற்கும் அதிகமாக அவர் செய்ய வல்லவர்.

சேர்ந்துப்போகும் தருணம்
இயேசுவினிடம் செல்லுவோம்
எந்தத் துன்பம் வந்தாலும்
கன்மலையை விடோம்.

என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள்

யூன் 27

“என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள்.” உன். 2:16

பரிசுத்த நிச்சயம் கொண்ட எவரும் இப்படித்தான் சொல்லுவர். கிறிஸ்து பிதாவினால் பாவிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறார். அவர் தான் தேவன் கொடுத்த சொல்லி முடியாத ஈவு. விசுவாசம் அதை ஏற்று அங்கிகரிக்கிறது. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறது பயபக்தியான அர்ப்பணிப்பால் உறுதிப்படுகிறது. அப்படி ஏற்றுக்கொள்கிறவர்கள் அவருடையவர்களாயிருப்பர். அவருடையவராக மட்டும் இருப்பேன் என்று வாக்குக் கொடுக்கின்றனர். இது பரிசுத்த ஐக்கியத்தால் உறுதிப்படுகிறது. கிறிஸ்து தன்னுடையவர் என்று சொல்லுகிறவன் அவரோடு ஐக்கியப்பட்டவனாய் ஜீவிக்கிறான். என் நேசர் நாம் விசுவாசித்து நம்கும் இரட்சகர். நான் மதித்து நேசிக்கிற தெய்வம். நான் வணங்கி கீழ்ப்படிகிற ஆண்டவர். என் மனமும், யோசனையும் பற்றிப் பிடித்துக்கொள்ளும் அவருமையானவர். நான் என் நேசருடையவள். அவர் என்னைத் தெரிந்துகொள்ளாமல் போயிருந்தால் நான் அவரைத் தெரிந்துக் கொள்ளாமல் இருந்திருப்பேன்.

அவர் என்னை மீட்டார். இல்லாவிட்டால் நான் இன்னும் அடிமையாகவே இருப்பேன். அவர் என்னை அழைத்தார். இல்லாவிட்டால் தேவனை விட்டு இன்னும் அலைந்து திரிகிறவனாயிருப்பேன். அவர் என்னைப் பரிசுத்தப்படுத்தினார். இல்லாவிட்டால் அவர் மகிமையை இன்னும் காணாதிருப்பேன். நான் என் நேசருக்கு மனையாட்டியின் தோழி. நான் அவரின் பங்கு. அவரின் மகிழ்ச்சி. அவரில் வெற்றி பெற்று கொண்டு வந்த கொள்ளைப் பொருள்களில் மிமையான கிரீடம். அன்பர்வளே! இந்த நிச்சயத்தைப் பெற்றுக்கொள்ளப்பாருங்கள். அவர் என்னுடையவர், நான் அவருடையவன் என்று உண்மையாகச் சொல்லும்வரைக்கும் ஓயாதேயுங்கள்.

இயேசுவே என் சொந்தம்
அவரில் சுகம், ஜீவன் அடைவேன்
நான் அவருடையோன் ஆகவே
மணவாட்டிப்போல் களிப்பேன்.

சகோதரரே நாம் கடனாளிகளாய் இருக்கிறோம்

யூன் 08

“சகோதரரே நாம் கடனாளிகளாய் இருக்கிறோம்.” ரோமர் 8:12

அபாத்திரருக்குத் தயைக் காட்டுகிறதினால் அவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் அதிகரிக்கின்றன. சிருஷ்டிகளாக நம்மைப் பார்த்தால் நாம் கடன்காரர். புது சிருஷ்டிகளாய் பார்த்தாலோ இன்னும் பெரிய கடன்காரர். தேவதீர்மானத்தின்படி வாக்குத்தத்தப் புத்தகத்தில் நம்முடைய பேர் எழுதப்பட்டுள்ளதாலும் ஆண்டவரின் ஊழியத்தில் பங்கிருப்பதாலும் அவரின் கீழ்ப்படிதல், மன்றாட்டு, மரணம் இவைகளின் நன்மைகள் நமக்காயிருப்பதினாலும், நாம் தேவ கிருபைக்குக் கடன்பட்டவர்கள். பிராயசித்த, இரத்தத்தால் நீதிக்கு திருப்தி உண்டாக்கி நாம் தேவ கோபத்தினின்று விடுவிக்கப்பட்டதாலும், பிசாசின் வல்லமைக்கு தப்புவதாலும் நாம் அவருக்குக் கடன்பட்டவர்கள்.

அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்துக்கிடந்த பொழுது, நாம் தேவ வல்லமையால் உயிர்ப்பிக்கப்பட்டு, தேவ சித்தத்தைக் கற்று, சுயாதீனத்திற்கும், சுகத்திற்கும் உள்ளானபடியினால் நாம் கடன்பட்டவர்கள். அனுதினமும் நிமிஷந்தோறும் நாம் பெற்றுக்கொள்ளுகிற விலையேறப்பெற்ற நன்மைகக்காகத் தேவனுக்குக் கடன்பட்டவர்கள். அன்பர்களே, நம் கடமையை உணர்ந்துப் பார்ப்போமாக. அன்பு நன்றியறிதல் என்னும் கடமை நமக்குண்டு. ஆகவே நமது பரம பிதாவின் கற்பனைகளை நன்கு மதித்து, ஆண்டவரின் வழிகளைக் கவனித்து, பரிசுத்தாவியானவரின் வழி நடத்துதலுக்கு இடங்கொடுத்து, தேவ வசனத்துக்கெல்லாம் சந்தோஷமாய் கீழடங்குவோமாக. கடனாளிகளாக நம்மைத் தாழ்த்தி, யோக்கியமாய் நடந்து, நாம் நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல என்றும், நமது காலமும் பலமும் நமக்கு உரிமையல்லவென்றும் ஒத்துக்கொண்டு எல்லாம் கர்த்தருடையவைகளே என அறிக்கையிடுவோமாக.

நான் மன்னிப்படைந்த பாவி
என் கடன் மகா பெரியது
அவர் செய்த நம்மைக்கீடாக
எதைப் பதிலாய்த் தருவேன்.

ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு

யூன் 22

“ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு.” பிலி. 2:14

சுவிசேஷத்தைப் பிடித்துக்கொண்டு கிறிஸ்துவானவரைக் குறித்த வாக்குத்தத்தத்திலும் அவருடைய கிரியையிலும் உள்ள ஜீவனை இது வெளிப்படுத்துகிறது. குற்றவாளிகளாகத் தீர்க்கப்பட்டவர்களுக்கு ஜீவனை தேவனுடைய இலவச ஈவாகக் கொடுக்கிறது. வசனம் ஆவியானவரின் வல்லமையினால் ஜீவனை அளிக்கப் பயன்படுகிறது. இந்த ஜீவ வசனம்தான் தேவ தயவிலும், கிறிஸ்துவின் ஐக்கியத்திலும், ஆவியானவரைப் பெறுவதிலும், ஜீவ வழியில் சேர்ப்பதிலும், ஆக்கினைத் தீர்ப்புக்கு விலக்குவதிலும், நித்திய மகிமைக்கு சேர்ப்பதிலும் நம்மை நடத்துகிறது. இந்தச் சுவிசேஷம் நமக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்காக நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வசனத்தை நாம் அந்தகாரத்தில் வெளிச்சத்தைப்போலவும், பசியினால் வருந்தும் பாவிக்கு உணவுப்போலவும், ஆயுள் குற்றவாளிக்கு மன்னிப்புப்போலவும், மீட்கப்பட்டவர்களுக்கு சட்ட நூலாகவும் தூக்கிப் பிடிக்க வேண்டும். தேவ ஊழியத்தில் பரிசுத்த நடத்தையாலும், கனியுள்ள வாழ்க்கையினாலும், அதைத் தூக்கிப் பிடிக்க வேண்டும். அன்பர்களே, சுவிசேஷத்தை ஜீவனுள்ள வசனமாக ஏற்றுக்கொள்வோமாக. அதைப் பிறர்க்குச் சொல்லுவது நம்முடைய கடமையென்று எண்ணுவோமாக. அந்தக் கடமையைச் சரியானபடி நிறைவேற்றுகிறோமா என்று நம்மை நாமே கேட்போமாக. அச்சிட்டுள்ள அவர் வசனத்தை வாங்கிப் பிறர்க்குக் கொடுப்பதினாலும் அவ்வாறு செய்பவர்களுக்கு உதவி செய்வதினாலும் ஜீவ வசனத்தைத் தூக்கிப் பிடிப்போமாக.

நன்றி உள்ளவர்களாய் என்றும்
சேவை செய்வோம் அவருக்கு
நம் இயேசுவைப் புகழ்ந்து
நம்மையே அவருக்குக் கொடுப்போம்.

தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்

யூன் 18

“தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்.” யோபு 15:4

பக்தன் யோபுக்கு, விரோதமாகச் சொல்லப்பட்ட இந்த வார்த்தை, நம்மில் அநேகருக்கு விரோதமாகவும் சொல்லப்படலாம். ஜெபமானது விசேஷித்த சிலாக்கியமாக எண்ணப்பட்டு, புத்திரசுவிகார ஆவியினால் அந்தச் சிலாக்கியத்தை அனுபவித்தாலும் நாம் இந்த உலக சிந்தைக்கு இடங்கொடுத்தால் அது இன்பமான காரியமாயிராமல் பாரமான கடமையாய் விடும். நாம் வெறுப்பு உள்ளவர்களாய் குளிர்ந்து உயிரற்றுப்போகிறதினால் கர்த்தரை விட்டு தூர விலகிப் போகிறோம். சரியானபடி இவை நம்மை அவர் சமுகம் கொண்டுப்போக வேண்டும்.

தேவ சமுகத்தில் நம்மை வழிநடத்த, நல்ல இருதயம்வேண்டும். நல்ல நேரம் வரட்டும், ஏற்ற சமயம் கிடைக்கட்டுமென்று இல்லாமல் சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவர் சமுகம் தேடி போக வேண்டும். ஜெபம் குறையும்போது நாம் ஆவியின் சிந்தை உடையவர்களாய் இருந்தாலும் சீக்கிரம் குளிர்ந்து கவலையற்று பெலனற்றுப்போவோம். பாவம் நமக்குள் பெலன்கொண்டு நற்குணங்கள் குறைந்து, ஜெபத்தியானம் குறைந்து, தேவ சமாதானம் கலைந்துப்போகும். நம் ஆசைகள் மாம்சத்துக்கு உரியவைகளாகும். ஆகவே மெய்மார்க்கம் வாடிவதங்கி, அழிந்துப்போகிற உலக பொருளை பெரிதென்றெண்ணி, கிருபையின் எத்தனங்கள் பலனற்றதாகி, சாத்தான் நம்மேல் வெற்றி அடைவான். ஜெபத்தியானத்தைக் குறைப்பது வேத வசனத்துக்கு நேர் விரோதமானதாகும். அதனால் சாத்தானுக்கு இடங்கொடுத்து, பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்துவதால், எல்லாம் கேடாய் முடியும்.

ஜெபியாதவனுக்கு
மகிழ்ச்சி ஏது?
கேளாதவனுக்கு
கிடைப்பதெப்படி?

சிலுவையைப்பற்றி வரும் இடறல்

யூன் 06

“சிலுவையைப்பற்றி வரும் இடறல்.” கலா. 5:11

சிலுவையில் அறையப்பட்ட ஒரு யூதனாலே இரட்சிப்பு உண்டு என்கிற உபதேசம் பவுல் அப்போஸ்தலனுடைய காலத்தில் பெரிய இடறலாய் இருந்தது. அதனால் அநேகர் இடறி விழுந்து கெட்டுப்போனார்கள். கிறிஸ்துவை விசுவாசிப்பதினால்மட்டும் நிறைவான இரட்சிப்பு உண்டு என்கிற உபதேசம் இன்னும் அநேகருக்கு இடறலாய்த்தான் இருக்கிறது. சுபாவ மனுஷன் தான் விசேஷத்தவன் என்றும் தான் ஏதாவது சாதிக்க வேண்டுமென்றும், தன்னை எல்லாரும் மேன்மையாக எண்ணவேண்டுமென்றும் ஆசைக்கொள்ளுகிறான். ஆனால் கிருபையினால் உண்டாகும் இரட்சிப்பைக் குறித்த உபதேசத்திற்கு முன்பாக மனுஷன் ஒன்றுமில்லை.

என்றும் கிறிஸ்துதான் எல்லாவற்றிற்கும் எல்லாம் என்றும், சிலுவையில் அறையப்பட்டவர்தான் நாம் விசுவாசிக்க தக்க இலக்கு என்றும், இது நம்முடைய நம்பிக்கைக்கு ஆதாரம் என்றும், இதுவே எல்லாம் ஆசீர்வாதமும் பாய்கிறதற்கு வாய்க்கால் என்றும் நமக்கு முன்னிருத்துகிறது. தேவ அன்பு நம்மை சிலுவையைப் பார்ம:மு கவனித்து, அதையே வாஞ்சிக்கும்படி செய்கிறது. இச்சிலுவை யோக்கியனையும், அயோக்கியனையும், ஞானியையும், வைத்தியக்காரனையும், ஏழையையும், ஐசுவரியவானையும் ஓரே வகையாய் இரட்சித்து ஆண்டவர் முடித்த கிரியைகளை எல்லாரும் ஒன்றுபோல் பற்றிப்பிடிக்கச் செய்து தேவ சமுகத்தில் எந்த மனிதனும் மேன்மைப் பாராட்ட கூடாதென்றே போதிக்கிறனது. சிலுவை மனிதனுடைய பெருமைக்கு பெரிய இடறல். மனுஷீகத்தின்படி சுவிசேஷம் ஒருவனையும் நிதானியாமல் இயேசுவைச் சுட்டிக்காட்டி, நெருக்கமான வாசல் வழியாய், இடுக்கமான பாதையில் நடத்தி, இரட்சிப்புக்குத் தன்னை வெறுத்தல், ஒழித்தல் அவசியமென்று போதித்து, ஒன்று கிறிஸ்துவை விசுவாசி, அல்லது கெட்டுப்போ என்கிறது. இதுவே சிலுவையின் இடறல்.

எவ்வசை நல் ஈவும்
இயேசுவாலே வரும்
அவர் சிந்தின இரத்தம்
நீங்கா தேவ வருத்தம்.

அவர்களைச் சகோதரர் என்று சொல்ல வெட்கப்படாமல்

யூன் 10

“அவர்களைச் சகோதரர் என்று சொல்ல வெட்கப்படாமல்…” எபி. 2:11

ஆண்டவருக்கும் நமக்கும் இருக்கும் உறவு மிக பெரியதென்று உணருவோமானால் இந்த வசனத்தில் சொல்லியிருப்பது ஆச்சரியமாய் இருக்கும். இந்த உறவு எத்தனை பெரியது. அவர் பரிசுத்தர். நாம் அசுத்தர். அவர் பெலவான். நாம் பலவீனர். அவர் பாக்கியவான். நாம் நிர்பந்தர். அவர் சர்வ ஞானி. நாம் அறிவீனர். அவர் மகத்துவமானவர். நாம் அற்பர். அவர் வாழ்த்துக்குரியவர். நாம் இழிவுள்ளவர்கள். இவ்வளவு வேறுபாடுகளிருந்தாலும் அவர் நம்மை அங்கீகரித்துக்கொள்கிறார். நமக்கும் அவர்களுக்கும் ஒருவகை ஒற்றுமை இருக்கிறது. நம் இருவருக்கும் பிதா ஒருவர்தான். அவர் தேவன்.

நேசருக்கு இருக்கிற சுபாவமும், ஆவியும் சாயலும் நமக்கும் ஒருவாறு உண்டு. அவருக்கும் நமக்கம் இருக்கும் ஒரே வேலை வேதனை மகிமைப்படுத்துவது மட்டும்தான். கர்த்தருடைய வேலைகளில் இயேசுவுக்கும் நமக்கும் இருக்கும் வாஞ்சை ஒன்றுதான். அவரின் நேக்கமே நமது நோக்கம். அவரின் வாசஸ்தலம்தான் நமக்கும் வீடு. நாம் அவரைக் குறித்தும் மற்ற தேவனுடைய பிள்ளைகளைக் குறித்தும் அடிக்கடி வெட்கப்படுகிறோம். ஆனால் இயேசுவோ நம்மைக் குறித்தும் வெட்கப்படுவதே இல்லை. இவர் இப்பொழுதும், பிதாவுக்கு முன்பாகவும் பரிசுத்த தூதருக்கு முன்பாகவும் நம்மைச் சொந்தம் பாராட்டுகிறார். பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்து நமக்காகப் பரிந்து பேசுகிறார். வருங்காலத்தில் பிதாவினால் ஆசீhவதிக்கப்பட்டவர்கள் என்றும், சகோதரர் என்றும் அழைப்பார். ஆண்டவரே நம்மைச் சகோதரர் என்று அழைக்கும் போது நாம் சில காரியங்களில் வித்தியாசப்பட்டாலும் ஒருவரைக்குறித்து ஒருவர் ஒருக்காலும் வெட்கப்படாதிருப்போமாக.

நீசப் புழுவை இயேசு
சகோதரர் என்கிறார்
தேவ தூதர்களுக்கும் அவர்
இம்மேன்மையை அளியார்.

கர்த்தரிடத்தில் கிருபை உண்டு

யூன் 21

“கர்த்தரிடத்தில் கிருபை உண்டு.” சங். 130:7

கர்த்தர் நமக்குக் கிருபை அளிக்கிறார். அவரிடத்தில் கிருபை வாசம்பண்ணுகிறது. அவரின் குணத்தில் கிருபையும் ஒன்று. இரக்கம் காட்டுவதே அவருக்கு மகிழ்ச்சி. அவரிடத்தில் இருக்கும் கிருபை பூரணமானது. கிருபை காண்பிப்பதில் இப்போதிருப்பதுப்போல் இதற்கு முன்பு இருந்ததில்லை. இனி அவர் இருக்கப்போவதுமில்லை. தேவன் கிருபையில் அதிக உருக்கமானவர். அதிக இரக்கமுள்ளவர். பலவகைகளில் அவர் கிருபையை நம்மீது காட்டுகிறார். எல்லாருக்கும் தேவையானது அவரிடத்தில் உண்டு. பின்வாங்கிப்போனவர்களைச் சீர்ப்படுத்தும் கிருபை அவரிடத்தில் உண்டு. விசுவாசிகளைப் பாதுகாக்கிற கிருபை அவரிடத்தில் உண்டு.

பாவத்தை மன்னிக்கிற இரக்கம், சுவிசேஷ சிலாக்கியங்களை அனுபவிக்கச் செய்கிற சிலாக்கியம், ஜெபிக்கிற ஆத்துமாவுக்கு இரங்குகிற இரக்கம் இந்தக் கிருபையில்தான் உண்டு. அவர் கிருபை நிறைந்தவர் மட்டுமல்ல, அதைக் காட்ட, கொடுக்க அவர் பிரயாசப்படுகிறார். அந்தக் கிருபையை மேன்மைப்படுத்த மகிமைப்படுத்த, வேண்டுமென்பதே அவர் முழு நோக்கம். அவரில் கிருபையிருப்பதினால் நிர்பந்தர் தைரியமாய் அவரிடம் சேரலாம். அது பயப்படுகிறவர்களைத் தைரியப்படுத்துகிறது. தேவனிடமிருந்து நன்மையைப் பெற அவர்கள் ஒன்றும் கொண்டு செல்லவில்லை. இந்தக் கிருபை பின்வாங்கிக் கெட்டுப்போனவர்களைத் திரும்ப வரும்படி அழைக்கிறது. Nhதனையில் அகப்பட்டு கிறிஸ்தவனை எல்லா துன்பத்திலும் வருத்தத்திலும் மகிழ்ச்சியாக்குகிறது. அவரின் கிருபை தேவனைப்போலவே நித்தியானது, அளவற்றது என்பதை மறக்கக்கூடாது. கிருபை எப்பொழுதும் சிங்காசனத்தில்மேல் ஆட்சி செய்கிறது. எந்தப் பாவியும் இரக்கம் பெறலாம்.

கர்த்தரை நம்பு பாவி
அவர் இரக்கம் மாபெரிது
அவர் கிருபை நாடு
அவர் பெலன் பெரியது.

தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது

யூன் 17

“தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது.” லூக்கா 17:21

தேவன் தமது சிங்காசனத்தை மனிதனுடைய இருதயங்களில் வைக்கிறார். அவர் பூமியின்மேல் ஆளுகை செய்தாலும் அவர்களுக்குள் அரசாளுகிறார். ஒரு தேவனுடைய பிள்ளை ஒரே சமயத்தில், தேவ வாசஸ்தலமாயும், அவர் ஆலயமாயும், அவரின் இராஜ்யமாயும் இருக்கிறான். அவர் நமக்குள் வாசம் செய்து அரசாளுகிறார். மறு பிறப்பில் அவர் நம்மைச் சொந்தமாக்கி, நம்மை முற்றும்முடிய அவரின் ஊழிய மகிமைக்கும், புகழ்ச்சிக்கும் ஒப்புக்கொடுக்கும்போது நமக்குள் அரசாளுகிறார். அவர் இப்படி அரசாளுகிறதினால், தேவனோடு ஒப்புரவாகுதலும், தேவனாடு நேசமாகுதலும், தேவசித்தத்திற்கு முற்றும் கீழ்ப்படிதலும் அடங்கியிருக்கிறது.

இவையெல்லாம் அவரின் கிரியைகளினாலும், தயவினாலும், ஆவியானவரின் தேற்றுதலினாலும் உண்டாகிறது. கர்த்தர் ஆளுகைச் செய்யும் இடத்தில், ஆத்துமா குற்றம் நீங்கி, தேவ சமாதானத்தை அனுபவித்து, பிதாவின் மகிமையை உணர்ந்து ஆனந்தங்கொள்ளுகிறது. ஒருவன் ஆண்டவரின் ஆளுகைக்குள் வரும்போது இருதயத்தில் பகை கொல்லப்பட்டு மனதில் இருள் நீங்க மாய்மாலம் நீங்கி, தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்ற சிந்தைப் பிறக்கிறது. தேவ சித்தமே அவனுக்குப் பிரமாணம். கிறிஸ்து முடித்த கிரியை அவனுக்கு அருமை. தேவ மகிமை அவன் நாடும் மகிமை. அவன் விரோதி அவனுக்கு சிநேகிதனாகிறான். இராஜதுரோகி உத்தம குடிமகனாகிறான். அந்நியன் அருமையான பிள்ளையாகிறான். தேவ இராஜ்யம் நமக்குள் இருந்தால், தேவ வாக்குகளைப் பிடித்தவர்களாய் தேவனுக்கு பிரியமாய் நடக்கப் பார்க்க வேண்டும்.

கர்த்தாவே என்னை ஆளும்,
என் பாவம் கழுவும்,
சமாதானத்தை அளியும்,
தேவ மகிழ்ச்சியாய் நிரப்பும்.

Popular Posts

My Favorites