Home Blog Page 22

கர்த்தர் யோசேப்போடே இருந்தார்

செப்டம்பர் 28

“கர்த்தர் யோசேப்போடே இருந்தார்” ஆதி. 39:21

யோசேப்பு, தன் தகப்பனைவிட்டுப் பிரிக்கப்பட்டு, தன் வீட்டையும் விட்டு, அடிமையாக விற்கப்பட்டான். பொய்யான குற்றம் சாட்டப்பட்டுக் சிறையில் அடைக்கப்பட்டான். ஆனால் கர்த்தர் அவனோடு இருந்தார். நம்முடைய வாழ்வில்கூட சோதனைகள் பெருகியிருக்கும்போதுதான் தேவ தயவு காணப்படும். நாம் நீதியினிமித்தம் துன்பப்படும்பொழுதுதான் சிறப்பு ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைக்கும். யோசேப்புக்கும்கூட அவனுக்கு வந்த கஷ்டங்கள் எல்லாவற்றையும் தேவன் நன்மையாக மாற்றினார். கர்த்தர் நம்முடன் இருந்தால், சிறைச்சாலையும் அரண்மனையாகும். துயரங்களிலும் பண்டிகை ஆசரிக்க முடியும். யோசேப்போடு தேவன் இருந்ததால் அவனை ஆதரிக்க, ஆறுதல்படுத்த, அவனோடு பேச சிறைச்சாலை தலைவனிடத்தில் தயவு கிடைக்கப்பண்ணினார். அவனுக்குச் சிறப்பு வரங்களைக் கொடுத்தார்.

அவனை எகிப்தை ஆளத்தகுதிப்படுத்தித் தம்முடைய நாமத்தில் துன்பப்படுகிற யாவருக்கும் ஆறுதல்படுத்தும் பாத்திரமாகவும் ஆக்கினார். விசேஷித்த மகத்துவத்தோடு கர்த்தர் யோசேப்போடே இருந்தார். மேன்மையடையும்முன் அவன் தாழ்த்தப்பட்டான். சிறைச்சாலைதான் அரண்மனைக்குப் போகும் நேர்வழியாகும். சிலுவையின் வழியாகத்தான் மகுடம் பெறமுடியும். கிறிஸ்துவோடு பரலோகத்தில் ஆளவேண்டுமானால், அவரோடு பூலோகத்தில் துன்பத்தை அனுபவிக்கவேண்டும். பிரியமானவரே, கடமை உம்மை எங்கு வேண்டுமானாலும், துன்பம் உம்மை எங்கு துரத்திடினும் கர்த்தர் உம்மோடு இருப்பார். கர்த்தராகிய சூரியன் நமது வாழ்விலிருக்கும்பொழுது, எந்தத் துன்பமாகிய மேகம் நம்மை மூடினாலும் நாம் அஞ்சத் தேவையில்லை. தேவ சமுகம் நமக்கு இன்பமாக இருக்கும். எவ்வளவு அருமையான உண்மை இது.

நீர் என்னோடிருப்பதே
எந்நாளும் என் வாஞ்சை
எத்துன்பம் வந்திடினும்
முறுமுறுக்காது ஏற்பேன்.

நான் உங்கள் நாயகர்

செப்டம்பர் 27

“நான் உங்கள் நாயகர்” எரேமி. 3:14

மனித உறவிலேயே மிகவும் நெருக்கமானது கணவன், மனைவி உறவுதான். இருவரும் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். கர்த்தரும் தமது ஜனங்களுக்கு இவ்வுறவையே காட்டியிருக்கிறார். அவர் அவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணியிருக்கிறார். அவர்களும் அவருக்கு வாக்குக்கொடுத்திருக்கிறார்கள். அவர் தம்முடைய அன்பை அவர்கள்மேல் வைத்திருக்கிறார். அவர்களும் அவர்மேல் தங்கள் பாசத்தை வைத்திருக்கிறார்கள். அவர்களை அவர் தேடித் தெரிந்துகொண்டார். அவர்களும் அவரைக் கண்டுபிடித்து விட்டார்கள். இரு சாராரும் ஒருவர்மீது ஒருவன் பிரியங்கொண்டுள்ளார்கள். அவர்களைத் தேடி அவர்கள் மத்தியில் வருகிறார். இரு சாராரும் அன்புடன் கலந்து உரையாடுகின்றனர். சேமித்து வைத்திருக்கிறார். அவருடைய வளத்தில் அவர்கள் வளம் பெறுகிறார்கள்.

தேவ பிள்ளையே! கர்த்தர் உன் நாயகர் என்பதை நீ உணருகிறாயா? அவருடைய ஐசுவரியமும், ஞானமும் அளவிலடங்காதவை என நீ அறிவாயா? அவருடைய மணவாட்டியான திருச்சபையாக நீ சஞ்சரிக்கிறாயா? அவருக்கு வாழ்க்கைப்பட்ட அவருடைய மனைவியைப்போல் நீ தேவனுக்காய் வாழ்கிறாயா? யாவற்றையும் அவருக்கு விட்டு விட்டு, உனக்குத் தேவையானதெல்லாம் அவர் தருவார் என்று நம்பிக்கையுடன் உன் நாயகராகிய அவருக்கு மன நிறைவுதரும்படி வாழ்கிறாயா? உன்னை நேசிக்கும் மற்றவர்கள் என்றும் உன்னை விட்டுப் பிரிவதே இல்லை. அவர் உன்னைக் காத்து நடத்துவார். அவரோடு ஐக்கியப்படு. எதுவும் உன்னை அவரைவிட்டுப் பிரிக்காதிருக்கட்டும்.

நான் உம்மோடு ஐக்கியப்பட்டும்
பிரகாசிக்க அருள் செய்யும்,
அப்போ நான் உம்முடையவன் என
வானமும் பூமியும் அறிந்திடும்.

என்னைச் சோதித்துப் பாரும்

செப்டம்பர் 26

“என்னைச் சோதித்துப் பாரும்” மல்.3:10

தேவன் தம்மைச் சோதித்துப் பார்க்கும்படி நம்மை அழைக்கிறார். அவரின் உண்மையைப் பரீட்சித்துப் பார்க்கச் சொல்லுகிறார். அவர் வாக்குப்பண்ணினதைச் செய்யாதிருப்பாரோ என்று யார் சந்தேகிக்க முடியும்? நாம் சந்தேகிப்போமானால், அது அவரைச் சோதிப்பது போலாகும். நாம் எவ்வாறு அவரைச் சோதிக்கலாம்? அவருடைய வார்த்தையை நம்பி, அதை ஜெபத்தில் வைத்து, விழித்திருந்து, அவர் கட்டளையிட்டபடிச் செய்து, அவர் தாம் சொன்னபடிச் செய்கிறாரா என்று சோதித்துப் பார்க்கவேண்டும். எப்பொழுது சோதிக்கலாம்? நாம் பாவப்பாரத்தோடு சஞ்சலப்படுக்கையில் அவர் நம்மை மன்னிக்கிறாராவென்றும், நாம் துன்பப்படுக்கையில் அவர் இரக்கம் காட்டி நம்மை விடுவிக்கிறாராவென்றும், நாம் மனம் கலங்கி நிற்கையில் நம் கண்ணீரைத் துடைக்கிறாராவென்றும், வறுமை வேதனையால் நாம் வாடும் பொழுது, நமக்கு ஆதரவளித்து நம்மை மீட்கிறாராவென்றும் நாம் அவரைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.

அவருடைய ஊழியத்தை நாம் செய்யும்பொழுது நம்மை தெய்வபக்திக்கும், உயிருள்ள வாக்குத்தத்தங்களுக்கும் பங்குள்ளவர்களாக நம்மை மாற்றுகிறாரா என்று அவரைச் சோதித்துப் பார்க்கலாம். நமக்கு முன்னே கோடானகோடிப்பேர் அவரைச் சோதித்து, அவர் உண்மையுள்ளவர் என்று கண்டுகொண்டார்கள். அவரைச் சோதிக்குமளவுக்கு நாம் என்ன செய்யக்கூடும் என்று நம்மையே முதலில் சோதித்துப்பார்ப்போம். முதலில் விசுவாசத்தில் பெலப்படுவோம். தேவையான பொழுதெல்லாம் அவருடைய உண்மைக்குச் சாட்சிகளாக விளங்குவோம். என்றைக்கும் அவர் தமது வாக்கில் உண்மையுள்ளவர் என்று சான்று பகர்வோம். அவரை நாம் நம்பினால் பாக்கியவான்களாயிருப்போம்.

பொய் சொல்ல தேவன் மனிதரல்ல
அவர் என்றும் வாக்கு மாறாதவர்
சத்தியபரன் அவரையே என்றும்
நம்பி நாம் பேறு அடைவோம்.

தேவனுக்குக் கீழ்ப்படிந்து இருங்கள்

செப்டம்பர் 25

தேவனுக்குக் கீழ்ப்படிந்து இருங்கள்” யாக். 4:7

சுபாவத்தின்படி மனிதன் எவருக்கும் கீழ்ப்படிபவன் அல்ல. ஆனால் கீழ்ப்படிதல் இல்லையெனில் மகிழ்ச்சி இருக்காது. நமது சித்தம், தேவ சித்தத்திற்கு இசைந்து அதற்கு மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிந்தால் தான் நமக்கு மகிழ்ச்சியும், சமாதானமும் இருக்கும். கீழ்ப்படிதலில்லாதபோது பரிசுத்தமும் இருக்காது. கீழ்ப்படியாமைக்கு முக்கிய காரணம் அகந்தையும், மேட்டிமையுமே. தேவனுக்குக் கீழ்ப்படிய நான் மனமற்றிருப்பது, அவருடைய அதிகாரத்திற்கு எதிர்த்து, அவருடைய ஞானத்தையும், மகத்துவத்தையும் மறுப்பதாகும். அவருடைய அன்பை மறுத்து அவருடைய வார்த்தையை அசட்டை செய்வதாகும். அவரால் அங்கீகரிக்கப்பட்டு, அவருக்கு அடங்கி இருக்கும்பொழுது நாம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்கிறோம். அவருக்குக் கீழ்ப்படியும் பொழுது அவர் தரும் அனைத்தையும் நாம் நன்றியறிதலோடு பெற்றுக்கொள்வோம்.

தேவ அதிகாரம் என்று முத்திரை பெற்றுவருகிற எதற்கும் நாம் கீழ்படிந்து நடக்கவேண்டும். அவருக்கு நாம் கீழ்ப்படியாவிடில் நமக்கு இரட்சிப்பில்லை. இந்த நியாயத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, அவருடைய பாதத்தில் பணிந்து தொழுது கொள்ள வேண்டும். அவருக்கு நாம் கீழ்ப்படியாவிடில், அவருடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும். எனவே, தேவ கிருபையால் இரட்சிக்கப்படுதலுக்கும், அவருடைய வார்த்தையில் வளருவதற்கும் கீழ்படிதலே காரணம். தேவனுடைய சித்தத்தின்படி நடக்கட்டும் என்று எல்லாக் காரியங்களையும் அவருக்கு ஒப்படைத்து விடுவதற்கு நம்மில் கீழ்ப்படிதல் இருக்கவேண்டும். ஆத்துமாவே, நீ கீழ்ப்படிந்தால் பெலவானாயிருப்பாய். பரிசுத்தவானாய் இருப்பாய். உன் வாழ்க்கையிலும், மரண நேரத்திலும் தைரியசாலியாயிருப்பாய்.

தயாளம், இரக்கம் நிறைந்தவர் கர்த்தர்
தம் மக்களை ஒருபோதும் மறந்திடார்
அவருக்கே நான் என்றும் கீழ்ப்படிந்து
அவர் நாமம் போற்றித் துதிப்பேன்.

உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்

செப்டெம்பர் 24

“உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்” சங்.86:4

தேவ ஊழியனாக இருப்பது, உலகின் ஒரு பெரிய நாட்டின் ஜனாதிபதியாயிருப்பதைக் காட்டிலும் மிகப் பெருமையான நிலையாகும். தேவனுடைய உண்மையான ஊழியர்கள் அனைவரும் அவருடைய மக்களே. அவருடைய சித்தத்தின்படி தமது ஊழியத்தின் மக்களாகிய அவர்களை அவர் இன்னும் அதிகமாக நேசிக்கிறார். உழைப்பவர்கள், அவருக்கு உழைக்கத் தங்களை ஒப்புக்கொடுத்து, தங்கள் எஜமானாகிய ஆண்டவரையும், தங்கள் ஊழியத்தையும் அவர்கள் அதிகம் நேசிக்கிறார்கள். ஆனால், கர்த்தருக்காகவே எப்பொழுதும் ஊழியம் செய்தாலும் எப்பொழுதும் அவர்கள் மகிழ்ச்சியாயிருப்பதில்லை. தங்களுடைய உயர்வான நிலை, மேலான உறவு, மகிமையான வெளிப்பாடுகள், கிருபையாகப் பெற்ற சிலாக்கியங்கள் ஆகியவற்றை மறந்துவிடுகிறார்கள். சில சோதனை வேளைகளில் தாங்கள் தேவ ஊழியர் என்பதையும் மறந்துவிடுகின்றனர். அச்சமயங்களில் தேவனுடைய செயல் அவர்களுக்கு விநோதமாகத் தெரிகிறது. மனசோர்வு அடைகிறார்கள். தேவன் தங்களைக் கடிந்து கொள்கிறார் என்றெண்னி வேதனையடைகிறார்கள்.

இவைகளெல்லாம் நம்மை மனமடிவாக்குகின்றவை. ஆகவேதான் தாவீதரசன் உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும் என்றான். உன் வேதனைகளை நீயும் அவரிடம் கூறு. உன் மனநோவை அவர் அறியச்சொல். கதிரவனொளியைப்போல அவர் தமது கிருபையை உன்மேல் பிரகாசிக்க் செய்வார். உனக்குச் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தந்தருளுவார். சோர்வுற்ற நேரத்தில் ஊக்கமும், துயரத்தில் ஆறுதலும் ஈவார். மனம் கலங்காதே. கர்த்தர் உன் ஆத்துமாவை மகிழ்ச்சியாக்குவார்.

உம்மில் நான் களி கூர்ந்ததால்
என் பயங்கள் நீங்கிடும்
என் துன்ப நேரத்திலும்
வீழ்ந்திடுவேன் உம்பாதத்தில்.

எங்களை எப்படிச் சிநேகித்தீர்

செப்டம்பர் 23

“எங்களை எப்படிச் சிநேகித்தீர்” மல். 1:2

இது எவ்வளவு விபரீதமான கேள்வி! கர்த்தருடைய ஜனங்கள் இவ்வாறு கேட்பது சரியல்ல. ஆயினும், அநேகர் இப்படிப்பட்ட துணிகரமான கேள்வியைக் கேட்கிறார்கள். நீங்கள் எப்பொழுதாகிலும் கர்த்தர் உங்களை எப்படிச் சிநேகித்தார் என்று கேட்டதுண்டா? அவர் உங்களுக்கு செய்துள்ள நன்மைகளை எண்ணிப்பாருங்கள். உங்கள் பாவங்களுக்காக மரிக்கத் தம்முடைய குமாரனையே தந்தார். உங்களை உயிர்ப்பித்து, உங்களுக்கு போதித்து, வழிநடத்தித் தூய்மையாக்கத் தமது ஆவியானவரைத் தந்திருக்கிறார். அவருடைய மார்க்கத்தைப் போதிக்க தம்முடைய போதகர்களைத் தந்தார். உங்கள் துயரத்தில் உங்களை ஆற்றித் தேற்றக் கிருபையாகப் பல வழிகளைத் திறந்திருக்கிறார். உங்களுக்கு ஊழியம் செய்யச் தம்முடைய தூதர்களையும் அனுப்பியுள்ளார். உங்களைப் பாதுகாக்க உடன்படிக்கையனி; ஆணைகளையும் கொடுத்திருக்கிறார். நீங்கள் நித்திய காலமாகச் சுதந்தரித்து வாழத் தமது பரம வாசஸ்தலத்தையும் உங்களுக்கு வாக்களித்திருக்கிறார்.

உங்களைத் தமது ஆத்துமாவுக்கு அருமையாக எண்ணுகிறார். தமது ஆபரணங்கள், மகுடம், குமாரர், குமாரத்திகள் என்று அழைத்து மேன்மைப்படுத்தியிருக்கிறார். உலகம் வெறும் களிமண். நீங்களோ பொன் என்றும், அது பதர், நீங்கள் கோதுமை மணி, அதுவுமன்றி நீங்கள் ஆடுகள், அது பாம்பு. நீங்கள்புறாக்கள் என்று கூறுகிறார். உங்களுக்கும் அவருக்கும் உள்ள உறவைக் கவனியுங்கள். அவர் உங்கள் பிதா. இயேசு உங்கள் உடன்பிறப்பு. நண்பன். உங்களுக்காகப் பரிந்துரைப்போர், தலைவர், மன்னர், உங்களுக்கு மன்னிப்பை அருளினார். பரம நன்மைகளால் அவர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆச்சரியமான அவருடைய அன்பிற்கு ஒப்பில்லை.

என்றும் நன்றியுடன்
நானிருக்க அருளும்
உமதன்பிற்காகத் துதித்து
உமதிரக்கத்திற்காய் நன்றி சொல்வேன்.

தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக

செப்டம்பர் 22

“தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக” சங். 3:8

உலகம் உண்டாவதற்கு முன்னமே, தேவனுடைய ஜனம் எல்லா ஞான நன்மைகளாலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் கிறிஸ்துவால் எல்லா நன்மைகளையும் பெறுகிறார்கள். மறுமையிலும் கிறிஸ்து நாதரோடு வாழ்ந்து அனைத்து நன்மைகளையும் அனுபவிப்பார்கள். கர்த்தருடைய ஆசீர்வாதம் அவருடைய கிருபையால் அவர்கள்மேல் இருப்பதனால், அவர்கள் அவரைப் புகழ்ந்து போற்றித் துதித்துப் பாட அவர்களைத் தெரிந்து கொண்டார். இதனால் அவர்களுடைய பரிசுத்த பெருகுகிறது. அந்த ஆசீர்வாதம் தங்கியிருப்பதனால், அவர்களுக்கு நேரிடும் சோதனைகள் யாவும் நன்மையாகவே முடிகிறது. அவர்களுடைய குடும்பத்தின்மேலும் இந்த ஆசீர்வாதம் தங்குகிறது. உடன்படிக்கைப் பெட்டியின்மூலம் ஆசீர்வதிக்கப்பட்ட ஓபேத், ஏதோம் என்பவர்களுடைய வீட்டைப் போல் அவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.

அன்பானவர்களே, தேவ ஆசீர்வாதம் உங்கள்மேல் தங்குவது தான் உங்கள் பாக்கியம். இதை அனுபவித்து இருக்கிறீர்களா? தேவ கிருபையால்தான் இது நடக்கிறது என்று அறிவீர்களா? இயேசு கிறிஸ்துதான் இக்கிருபையை உமக்கு அருளுகிறார். விசுவாசத்துடன் கீழ்படிவதனால் இதை அனுபவிக்கலாம். தேவ வாக்குத்தத்தத்தின் மூலம் இது உறுதி செய்யப்படுகிறது. தேவ பிள்ளையே, உனக்குத் தேவையானதைத் தர தேவன் ஆயத்தமாக இருக்கிறார் என்னும் சிந்தையோடு இன்றிரவு படுக்கைக்குச் செல்லுங்கள். தகப்பனே, என்னை ஆசீர்வதியும் என்று ஜெபித்துப் படுத்துக்கொள். அவரை நம்புகிற யாவரும் பாக்கியவான்கள்.

நான் உம்முடையவன்
என்னை மகிழ்ச்சியாக்கும்
உம் சொந்த மகனாகவே உம்
வாக்குத்தத்தம் பெறுவேன்.

என் தேவன் என்னைக் கேட்டருளுவார்

செப்டம்பர் 21

“என் தேவன் என்னைக் கேட்டருளுவார்” மீகா 7:7

தேவன் சொன்னபடியே தம் வாக்கை மெய்யாய் நிறைவேற்றுபவர். கடந்த நாள்களில் என்றும் அவர் வாக்குத் தவறியதில்லை. இம்மட்டும் நடத்தியவர் இனிமேலும் நடத்துவார் என்பதை இது காட்டுகிறது. அவர் என் தேவனாக இருக்கிறபடியால் என் பிதாவாகவும் இருக்கிறார். என் நிலைமை அவருக்குத் தெரியும். எனக்குரிய பங்கை அவர் ஏற்படுத்தி வைத்திருக்கிறார். அவர் எனக்கும் கிருபையையும், ஜெபத்தின் ஆவியையும் தந்திருக்கிறார். அவர் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் சமீபமாக இருப்பேன் என்று வாக்களித்திருக்கிறர். தமக்குப் பயன்படுகிறவர்களின் விருப்பத்தை அவர் நிறைவேற்றி, அவர்களுடைய விண்ணப்பங்களைக் கேட்டு, அவர்களை இரட்சிப்பதாகவும் வாக்கு அளித்திருக்கிறார்.

பிரியமானவர்களே, நாம் தேவனை நோக்கி கூப்பிட்டு, நம்முடைய விண்ணப்பங்களை அவரிடம் கூறி, நம்முடைய ஜெபங்களை ஏறெடுத்து, அவருடைய உதவியையும், அவருடைய ஆசீர்வாதங்களையும் எப்பொழுதும் தேடுவோமாக. அவர் நம்மைக் கேட்டருளுவார். இன்று நண்பர், நாளை பகைவராகலாம். ஆனால் தேவன் அவ்வாறு மாறுபவரல்ல. மனிதர் நம்மை அசட்டை செய்யலாம். ஆனால் தேவன் ஓருக்காலும் அசட்டை செய்யார். ஆகவே நாம் மீகாவைப்போல், நானோவென்றால் கர்த்தரை நோக்கிக் கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன். என் தேவன் என்னைக் கேட்டருள்வார். என் சத்துருவே எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே. நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன். நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார் என்று கூறலாம். அவர் தாமதித்தாலும், மறவார். உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு எந்த நன்மையும் வழங்காதிரார்.

ஜெபித்துக் கொண்டே இரு
உன் ஜெபம் தேவன் கேட்பார்
ஞான நன்மையாலுனை நிரப்பி
பரம அன்பால் சோதிப்பார்.

நான் உமது சத்தியத்திலே நடப்பேன்

செப்டம்பர் 20

“நான் உமது சத்தியத்திலே நடப்பேன்” சங். 86:11

தேவனுடைய சத்தியம் மனிதனுடைய விருப்பத்திற்கும் எண்ணங்களுக்கும், வழக்கத்திற்பும் மாறுபட்டே இருக்கும். நமக்கு விருப்பமில்லாததாயிருப்பினும், நன்மையைச் செய்ய அது நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. பயனுள்ள காரியங்களை நமக்குத் தெரிவிக்கிறது. ஆகையால், இந்த வசனத்தின்படி நாம் தீர்மானம்பண்ணுவது நல்லது. தேவனிடத்திலிருந்து வந்ததாகவே ஏற்றுக்கொள்வது. அதை மனப்பூர்வமாய் நம்புவது ஆகும். கிரியையில்லாத விசுவாசம் செத்தது. ஆகையால் தேவ வசனத்தின்படி செய்வதே சத்தியத்தின்படி நடப்பதாகும்.

ஒரு நல்ல கிறிஸ்தவன் உன் சித்தத்தின்படியே என்னை நடத்தும் என்று ஜெபிக்கிறான். உமது வழிகளில் என்றும் நடப்பேன் என்று தீர்மானிக்கிறான். தேவனுடைய சத்தியத்திலே நடந்தால் நமக்கு ஆனந்தம் கிடைக்கும். அது எப்பொழுதும் நமக்கு நற்செய்தியையும், ஆறுதலையும் கொண்டு வருகிறது. அது நமக்குக் கட்டளையாக மாத்திரமல்ல அன்பாகவும் வாழ்த்தாகவும் இருக்கிறது. நம்மைப் பரிசுத்தராகவும், பாக்கியவான்களாகவும் மாற்றுகிறது. நாம் சத்தியத்தை விசுவாசித்து, அதன்படி நடந்து அதை இருக்கும் வண்ணமாகவே அனுபவமாக்க வேண்டுமானால் அதை நம் இருதயத்தில் நிரப்ப வேண்டும். அதை மெய்யாகவே பகிரங்கமாக எங்கும் பிரசங்கிக்க வேண்டும். சத்தியத்தினால் நம்மைத் தினந்தோறும் அலங்கரிக்க வேண்டும். நாம் அழைக்கப்பட்ட அழைப்பிற்குத் தகுதியுள்ளவர்களாகப் பக்தியோடும், உத்தமத்தோடும் நடக்க வேண்டும். நமது நம்பிக்கையை எங்கும் பிரஸ்தாபிக்க வேண்டும். வாக்குத்தத்தங்களைப்பற்றிப் பிடித்துக் கொண்டு அவற்றின்படி நடக்க வேண்டும். நாம் வேத வசனத்தின்படி நடந்தால் நமக்குப் பயமில்லை. வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர்.

நல்ல போதகரே, நான்
நடக்கும் பாதை காட்டிடும்,
நீரே சத்திய மாதலால்
சத்தியவழியைக் காட்டிடும்.

அதனால் என்னை மறந்தார்கள்

செப்டம்பர் 19

“அதனால் என்னை மறந்தார்கள்” ஓசியா 13:6

ஆண்டவர் இஸ்வேலரை ஏன் கானான் தேசத்திற்குக் கொண்டுவந்தார்? அவர்களுக்கு ஏன் வளமான, செழிப்பான வாழ்வைத் தந்தார்? அவர்கள் அவருடைய மக்கள் என்பதற்காகவே. ஆனால் அவர்கள் தன்னலத்திற்கு இடம் கொடுத்து, பெருமையையும், மேட்டிமையையும் அடைந்தார்கள். அவர்களுக்கு எண்ணிலடங்கா நன்மைகளைச் செய்த தேவனை மறந்தார்கள். நாம் எப்பொழுதும் துன்பத்தை அல்ல நன்மையையே நாடித் தேடுகிறோம். ஆனால் சோதனைகளை அனுபவித்து வெற்றி பெற்றவர்களோ, நன்மையோ தீமையோ எது வந்தாலும் ஒரே சீராக இருப்பார்கள். நம்முடைய இதயம் தேவனைவிட்டு வழுவிக் கீழான காரியங்களில் பாசம் வைக்கிறது. மாம்ச இச்சைகளுக்கு இடம் கொடுக்கும்பொழுது ஆவிக்குரிய கடமைகளுக்கும், முயற்சிகளுக்கும் தகுதியில்லாதவர்களாகிறோம். பரத்துக்கடுத்த காரியங்கள் நமக்கு மகிழ்வளிப்பதில்லை. மாம்சத்தைப் பெரிதுபடுத்துவதில் பலன் இல்லை.

தேவ கிருபையையும், அவர் நமக்குச் செய்த சிறப்பான நன்மைகளையும் மறந்துவிடுகிறோம். தேவனுக்குரிய கடமைகளைச் செய்யத் தவறிவிடுகிறோம். நமது இருதயம் கடினமாகிறது. தேவ அன்பை மறந்துவிடுகிறோம். நமது மனட்சாட்சி மழுங்கிவிடுகிறன. மனம் கடினமாகிறது. இவ்வாறு நாம் ஆவதற்குச் சாத்தானும் துணை செய்கிறான். வேதவசனங்களையும், வேதவசனங்களையும், தேவனுடைய கிருபாசனத்தையும் வெறுக்கிறோம். ஜெபவாழ்வு மறைகிறது. உலகப்பற்று அதிகமாகிறது. அன்பரே, நமக்கு ஆண்டவர் காட்டின அன்பையும், நாம் அவருக்குச் செய்யவேண்டிய கடமைகளையும் மறவாதிருப்போம். நம்முடைய தவறுகளை உணர்ந்து, விழிப்புடன் இருப்போம். நன்றியறில் உள்ளவர்களாக வாழ்வோம். மரணபரியந்தம் நம்மை நடத்தவல்ல ஆண்டவரை மறவாதிருப்போம்.

உம் நல்ல பாதைதனை விட்டேன்,
சமாதானமின்றிக் கெட்டேன்
இயேசுவின் பாதம் இனிப்பிடிப்பேன்
மீண்டும் சுகித்து வாழ்ந்திடுவேன்.

Popular Posts

My Favorites

நான் வணங்கும் தெய்வமே

https://youtu.be/_KPxxy6IcDQ?si=nXZVFS1MQ6D9rLEI நான் வணங்கும் தெய்வமே என்னை வழிநடத்தும் இயேசுவே நான் வணங்கும் தெய்வமே என்னை வழிநடத்தும் இயேசுவே இந்த மானிலத்தை நொடியிலே வகுத்த மாசில்லா ஜோதியே இந்த மானிலத்தை நொடியிலே வகுத்த மாசில்லா ஜோதியே...