தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 2

தேவனுடைய வீட்டார்

யூன் 02

“தேவனுடைய வீட்டார்.” எபேசி. 2:13

கர்த்தர் தமக்குச் சொந்தமான ஒரு விசேஷித்த குடும்பத்தை வைத்திருக்கிறார். அது ஆவிக்குரிய குடும்பம். ஏனென்றால் அதைச் சேர்ந்த ஒவ்வொருவரும், தேவனால் பிறந்து, ஆவியானவரால் போதிக்கப்பட்டு ஆவியானவர் அவர்களுக்குள் வாசம் செய்து, ஒரே சரீரமாக அவரில் ஞானஸ்நானம் பெற்றவர்கள். இக்குடும்பம் அவர் நோக்கத்திலிருந்து தோன்றியது. இது அவருடைய சித்தம் எது என்று காட்டுகிறது. அவர் வல்லமையால் உண்டானது. தேவனுடைய வீட்டார் என்பது அதன் பெயர். உலகத்திலிருந்துப் பிரிக்கப்பட்டதால் தேவனுடைய வீட்டார். அவர் நடத்திச் செல்லும் மந்தை.

அவர் ஒவ்வொருவரைப் பாதுகாத்து, குறைவையெல்லாம் நீக்கி, ஒவ்வொரு பிள்ளைக்கும் வேலை தந்து, நேசித்து, மகிழுகிறதால் பிதாவின் அன்பை வெளிப்படுத்துகிறார். இக்குடும்பத்தைச் சேர்ந்த யாவரும் சகோதரர்கள். இவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவருடைய கிருபையைப் பிரஸ்தாபப்படுத்த, அவருடைய காரியத்தை நடத்த, அவருடைய சித்தத்தை நிறைவேற்றவே இக்குடும்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய குடும்பத்தில் அவர் அறியப்பட்டு, நம்பப்பட்டு, துதிக்கப்படுகிறார். அவருக்குக் கீழ்ப்படிந்து, நேசித்து, அவருக்குள் மகிழுகிறார்கள். நீ இக்குடும்பத்தைச் சேர்ந்தவனா? இந்தக் குடும் விருந்துக்கு நீ செல்கிறாயா? இந்தக் குடும்பத்தின் ஆராதனைகள் உனக்கு இன்பமா? இந்தக் குடும்பத் தலைவரையும் அதன் உறுப்பினர்களையும் நீ உண்மையாய் நேசிக்கிறாயா? இந்த கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் உண்டு.

தேவனே, என்னிடம் வாரும்
என் உள்ளத்தில் தங்கும்
உமது குடும்பத்தில் என்னைச் சேர்த்து
இரட்சியும் கண் பார்த்து.

முடிந்தது

அக்டோபர் 14

“முடிந்தது” யோவான் 19:30

எவைகள் முடிந்தன? ஆண்டவருடைய பாடுகள் முடிந்தன அவருக்கு முன்கூட்டியே உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் முடிந்தன. அவருடைய துன்பங்கள் முடிந்தன. பூலோகத்தில் அவர் செய்ய வேண்டியிருந்த ஊழியம் முடிந்தன. மக்களுக்கு அவர் செய்ய வேண்டியிருந்த பணிகள் முடிந்தது. பாவிகளை நீதிமான்களாக்ககச் செய்ய வேண்டிய கிரியைகள் முடிந்தன. நியாயப்பிரமாணம் நிறைவேறி முடிந்தது. பாவத்திற்கு நிவாரண பலியாய்ச் செய்ய வேண்டிய கடமைகள் முடிந்தன.

சாத்தான் முறியடிக்கப்பட்டான். சாபங்கள் நீக்கப்பட்டன. மேய்ப்பனின் இரத்தத்தால் ஆடுகள் பாவமறக் கழுவப்பட்டாயிற்று. சந்தோஷத்திற்கும், சமாதானத்திற்கும் இரட்சிப்புக்கும் நித்திய அஸ்திபாரம் போடப்பட்டது. சகல பாவங்களையும் கழுவிச் சுத்தப்படுத்தும் பணி ஆரம்பமாயிற்று. நமக்காகப் பரிந்து பேசும் பிரதான ஊழியம் கிடைக்கப்பெற்றது. மரணத்தின்மீது வெற்றி ஏற்பட்டது. உலகம் நித்திய ஜீவனை அடைய ஜீவ நதி ஊற்றாகப் புறப்பட்டது. அனைத்தையும் சேர்த்துக் கூறவேண்டுமானால், பிதாவே எல்லாப் பணிகளையும் செய்து முடித்தார். சமாதான உடன்படிக்கையைச் செய்தார். நமக்குப் பெரிய இரட்சிப்பை உண்டுபண்ணினார். பிதாவின் காரியங்களைத் தேவ குமாரன் பூமியில் செய்து முடித்தார். பிதாவை மகிமைப்படுத்தினார். எனவே அவர் முடிந்தது என்கிறார். நமக்கிட்ட கட்டளைகளைச் சரியாக நாமும் செய்து முடிப்போமாக.

முடிந்த தெனக்கூறியே
ஆண்டவர் இயேசு மரித்தார்
மீட்பை நிறைவேற்றியே
சாத்தானை வென்றார்.

அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்

யூலை 08

“அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்.” மீகா 7:19

ஏதோ ஓரு துக்கமான காரியம் நடந்துவிட்டதாக இந்த வசனம் சொல்கிறது. கர்த்தர் தமது ஜனங்களைவிட்டு தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார். கர்த்தர் கோபங்கொண்டார். ஆனால் நம்மைப்புறக்கணிக்கவில்லை. அப்படி நமதுமேல் கோபமாய் இருக்கமாட்டார் என்று வாக்குப்பண்ணியுள்ளார். அவர் திரும்ப நம்மேல் இரங்குவார். நாம் திருந்தவேண்டும் என்பதற்காகவே அவர் கோபிக்கிறார். பேதுருவின் மனதை நோகப்பண்ணி அழுகையோடும் விண்ணப்பத்தோடும் அவனைத் திரும்பினதுபோல நம்மையும் திரும்ப நோக்கிப் பார்ப்பார். உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது, சமாதானத்தோடே போ என்று மரியாளுக்குச் சொன்னதுபோல் நமக்கும் சொல்லுவார்.

நம்முடைய பயங்களை ஓட்டி நம்மைத் தம்முடைய மடியில் சேர்த்து தமது அன்பை நம்மேல் பொழிவார். அவர் வாக்குபண்ணினவைகளை மாற்றாது அப்படியே செய்வார் எப்பொழுதும் அப்படிச் செய்வார். அவர் இருதயம் அன்பினால் நிறைந்திருக்கிறபடியால் அப்படிச் செய்வார் என்பது நிச்சயம். அவர் இரக்கத்தில் பரியப்படுகிறவர் என்பதால் அப்படிச் செய்வார் என்று சொல்லலாம். நம்முடைய புத்தியீனத்தைக் குறித்து நாம் புலம்பினாலும், அவர் மன்னிப்பைக் குறித்து அவநம்பிக்கை கொள்ள வேண்டியதில்லை. பட்சமும் கிருபையும் நிறைந்த தேவனுக்கு மனஸ்தாபம் உண்டாக்கினோம் என்று அழுதாலும் மனம் கலங்க வேண்டியதில்லை. நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு அவர் திரும்ப இரங்குவார் என்று எதிர்பார்த்திருப்போமாக இஸ்ரவேல் வீட்டாருக்குத் தம்மை மறைத்துக்கொள்ளுகிற கர்த்தருக்குக் காத்திருந்து அவர் வருகைக்கு ஆயத்தமாய் இருப்போமாக.

இயேசுவே எங்கள் துன்பங்கண்டு
உருக்கமாய் இரங்குமேன்
எங்கள்மேல் கிருபைகூர்ந்து
சகல பாவம் நீக்குமேன்.

அதிபதியாகவும் இரட்சகராகவும்

நவம்பர் 01

“அதிபதியாகவும் இரட்சகராகவும்” அப். 5:31

இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு பெயர், துக்கம் நிறைந்த மனுஷன் என்பது. அவர் இப்பொழுது பிதாவின் வலது பாரிசத்தில் வல்லமைநிறைந்தவராக வீற்றிருக்கிறார். பரலோகத்திலும் பூலோகத்திலும் முழங்கால்கள் யாவும் அவருக்கு முன்பாக முடங்க வேண்டும். அவர் யாவற்றுக்கும் யாவருக்கும் தலைவர். இராஜாதி இராஜா. உயிரளிக்கும் கர்த்தர். எல்லா அதிகாரங்களும் அவருக்குக் கீழ்ப்பட்டதே. பிரபுவைப்போலவும், மீட்பராகவும் அவர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். தமது சொந்தக் கிருபையினால் நம்மை இரட்சிக்கிறார். பாவிகளெல்லாரையும் அவர் இரட்சிக்கிறார். அவருடைய இரட்சிப்பு இலவசமானது. நாம் நமது பாவங்களைவிட்டு மனந்திரும்பினால் அவர் இரட்சிப்பார். இரட்சிப்பு அவருக்கு விருப்பமான செயல்.

அவருடைய இரட்சிப்பின் செயல் உலகத்தின் முடிவு பரியந்தம் நடக்கும். தம்மிடம் வருபவர்களை அவர் இரட்சித்து ஆண்டு கொள்ளுகிறார். பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார். அதற்காகவே அவர் இரத்தம் சிந்தினார். மரித்தார். உயிர்த்தார். இப்போது அவர் இஸ்ரவேலுக்கு மகிமையாகப் பாவிகளுக்கு மன்னிப்பருள தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆதலால் அவர் தம்முடன் வருகிறவர்கள் எல்லாரையும் ஏற்றுக்கொள்ளுகிறார்.

எந்தப் பாவியாயினும் அவர் புறம்பே தள்ளுவதில்லை. சாந்தமும் இரக்கமும் நிறைந்த இந்த இரட்சகராகிய பிரபுவிடம் நீ வந்தால் அவர் உன்னையும் ஏற்றுக்கொள்ளுவார். நீ இரட்சிப்படைய வேண்டுமென்றால் அவரிடம் போய் சேர்ந்துகொள். அவர் உன்னை இரட்சிப்பார். அதுவே உனது வேலை. அவரை மகிமைப்படுத்தி அவர் தரும் மீட்பைப் பெற்றுக்கொள்.

இரட்சகரான இயேசுவே
உயிரோடெழுப்பி பரத்தில்
வீற்றிருப்போரே, பாவியாம்
என்னையும் இரட்சித்தருளும்.

கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார்

யூலை 14

“கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார்” சங். 97:1

கர்த்தர் உன் இரட்சகர். அவர் உன் தன்மையைத் தரித்திருக்கிறார். அவர் உன்னை நன்றாய் அறிவார். ஒரு தாய் தன் ஒரே மகனை நேசிக்கிறதிலும் அவர் உன்னை அதிகமாய் நேசிக்கிறார். அவர் செய்கிற சகலத்திலும், அவர் அனுமதிக்கிற சகலத்திலும் உன் நலத்தையே விரும்புகிறார். அவர் சர்வ லோகத்தையும் ஆண்டு நடத்துகிறார். சிம்மாசனங்களும், அதிகாரங்களும், துரைத்தனங்களும் அவருக்குக் கீழ்ப்படிகிறபடியால் அவரே எல்லாவற்றிற்கும் மேலாக ஆளுகை செய்கிறார். அவர் ஆளுகையில் அவருடைய ஞானமும், வல்லமையும், நீதியும், இரக்கமும், ஏகாதிபதியமும் ஒன்றுபோல விளங்குகிறது. பரிசுத்தமும் பாக்கியமும் தமது பிள்ளைகளுடைய நித்திய சேமமும் விருத்தியாக வேண்டுமென்றே ஆளுகை செய்கிறார்.

அவர் தம்முடைய சத்துருக்களின்மேல் ஆளுகை செய்து அவர்களுடைய இரகசிய தந்திரங்களை அவமாக்கி அவர்களுடைய சத்துவத்தைக் கொண்டு தமது சித்தத்தை முடிக்கிறார். தம்முடைய சிநேகிதர்மேல் ஆளுகை செய்து பொல்லாங்கினின்று அவர்களைக் காப்பாற்றி அவர்களின் காரியங்களை நடத்தி தம்முடைய வாக்கை நிறைவேற்றுகிறார். கர்த்தர் இராஜரீகம்பண்ணுகிறார். சாத்தான் உன்னைப்பிடிக்க கண்ணிவைக்கும்போதும், பாவம் உன்னைக் கீழே விழத்தள்ளும்போதும் இதை நினை. நற்செல் உனக்கு விரோதிகளை உண்டாக்கி, உன் ஒழுங்குகளைக் குலைத்து, உன் நன்மைகளைக் கெடுத்து, உன் விசுவாசத்தைச் சோதிக்கும்போது இதை நினை. புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் உண்டாகி, சத்துருக்கள் உன்னை வெறுத்து, வியாதி உன்னை வருத்தி, மரணப் படுக்கையில் இருக்கும்போதும் இதை நினை. சகலத்திற்கும் மேலாக இரட்சகர் ஆளுகை செய்கிறபடியால் உனக்குப் பயம் இல்லையென்று நினைத்துச் சந்தோஷப்படு.

கர்த்தர் இராஜாதி இராஜன்
மகிழ்ந்து அவரைப் போற்று,
சுத்தாவி என் உள்ளத்தில்
தங்கும் இது என் மன்றாட்டு.

நித்திய ஜீவனைக் குறித்த நம்பிக்கையைப்பற்றி

மார்ச் 15

“நித்திய ஜீவனைக் குறித்த நம்பிக்கையைப்பற்றி.” தீத்து 1:3

உத்தம கிறிஸ்தவன் ஒருவன் இப்படித்தான் ஜீவியம் செய்ய வேண்டும். அவன் இருதயம் கீழான உலக காரியத்தைப்பற்றாமல் நித்திய ஜீவனுக்கென்று இயேசுவின் இரக்கத்தையே நோக்கிக்கொண்டிருக்கிறது. கிறிஸ்தவனின் முழு நம்பிக்கைதான் அவன் ஆத்துமாவுக்கத் தைலமாகவும் மருந்தாகவும் இருக்கிறது. அவன் மறுமையில் தேவனோடு பூரண வாழ்வுள்ளவனாய் இருப்பேன் என்றே நம்பியிருக்கிறான். தான் நித்திய நித்தியமாய் மகிழ்ச்சி, சமாதானம் இவைகளை அனுபவிப்பான். தனக்கு நித்திய ஜீவன் நிச்சயமாகவே கிடைக்குமென்று நம்புகிறான்.

பொய்யுரையாத தேவன் வாக்களித்திருக்கிறார். உலகம் உண்டாகுமுன்னே அநாதியாய் முன் குறித்திருக்கிறார். விசுவாச சபைக்குக் கீரீடமான இயேசுவுக்கு வாக்களித்திருக்கிறார். சுவிசேஷமும் அதற்கு சாட்சியிடுகிறது. தேவன் நித்திய ஜீவனைக் கொடுத்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்குpறது. கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டருக்கு இந்த நித்திய ஜீவன் உண்டு. முற்கனி நமக்குக் கிடைத்திருக்கிறது. மகிமையான அறுப்பு கிடைக்கும். நம்பிக்கையில் வளர்ந்தே நாம் தனிந்தோறும் ஜீவித்து வருகிறோம். இந்த நம்பிக்கை துன்பத்தில் வழிநடத்தி நித்திய போராட்டத்தில் நம்மை உயிர்ப்பித்து மோசம் வரும்போது நம்மைக் காக்கிறது. இரட்சிப்பு என்னும் தலைச்சீரா இதுவே. விசுவாசியே மரணத்தையல்ல, நித்திய ஜீவனுக்காக நீ எதிர்நோக்க வேண்டியது, பரம தேசத்தையே அதை அனுபவிப்போம் என்ற நம்பிக்கையும் அதை நிச்சயித்துக் கொள்வோம் என்ற எதிர்பார்த்தலும்தான் விசுவாசம்.

எது வந்தாலும் எது போனாலும்
எது மாறிக் கெட்டாலும்
பேரின்பத்தை நோக்குவேன்
மோட்ச நம்பிக்கைப் பிடிப்பேன்.

உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது

யூன் 11

“உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.” சங்.94:19

நாம் அடிக்கடி வருத்தப்படுகிறோம். நம்முடைய நினைவுகள் கலங்கி சோர்ந்துப் போகிறது. நம் தேவன் இப்படிப்பட்ட நேரங்களில் நமக்கு ஆறுதல் அளிக்க அதிக கவனமுடையவராயிருக்கிறார். நிறைவான, எக்காலத்திற்கும் ஏற்ற ஆறுதல் அவரிடத்தில் உண்டு. அருமை வாக்குத்தத்தங்களினாலும், கிறிஸ்துவின் பூரண கிரியைகளிலும், நித்திய உடன்படிக்கையினாலும், பாவம், துன்பம், துக்கம் இவைகளினின்று முற்றிலும் என்றைக்கும் விடுதலையாவோம் என்ற நம்பிக்கையிலும் நமக்கு எவ்வளவு ஆறுதல் அடங்கியிருக்கிறது.

நமக்கு நாமே ஆறுதல்படுத்த அற்றவர்களாய் இருக்கிறோம். நம்முடைய தேவனிடத்தில் நம்மைப் பாக்கியவான்களாக்கத் தக்க தகுதி இருக்கிறது. நமது சொந்த நினைவுகள்கூட அடிக்கடி நமது துக்கத்திற்குக் காரணம். நம்முடைய தேவனைப்பற்றிய நினைவுகளோ, அன்பு, சமாதானம், சந்தோஷம் இவைகளால் நிறைந்திருக்கிறது. அவர் எக்காலத்திலும் நம்மை நேசிக்கும் சிநேகிதன். கண்ணீரைத் துடைக்க நமக்காகப் பிறந்த சகோதரன் நமக்கிருப்பது எத்தனை ஆறுதல். இவர் எப்போதும் பிதாவண்டை பரிந்து பேசும் மத்தியஸ்தர். இதனால் நாம் தேவனோடு ஐக்கியப்பட்டிருக்கிறோம். நம்முடைய ஒவ்வொரு வருத்தங்களில் வருத்தப்பட்டு தம்மைப்போல் நம்மை முற்றிலும் மாற்றி, தாம் இருக்கும் இடத்தில் நம்மை சேர்க்கத்தக்கதான அவ்வளவு நெருங்கிய ஐக்கியம் உண்டென்று அறிவது எவ்வளவு ஆறுதல். இவர்தான் நமக்குத் தலையானவர். நாம் அவருக்குச் சரீரம். கிறிஸ்துவும் அவர் சபையும் ஒன்று என்ற சத்தியம் எத்தனை அருமையானது. எத்தனை பரிசுத்த ஆறுதல் நிறைந்தது. அவநம்பிக்கைக்கும் மனமடிவுக்கும் எத்தனை நல்ல மருந்து. உள்ளும் புறமும் எல்லாம் துக்கமும், துயரமும் வியாகுலமுமாய் இருக்கும்போது, அவருடைய ஆறுதல்களைப்பற்றி ஜீவனம் பண்ணுவோமாக.

துயரம் பெருகும் போதும்
துக்கம் நிறையும் போதும்
உமதாறுதல் அணுகி,
என்னைத் தேற்றும் அப்போது.

நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவர்

அக்டோபர் 27

“நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவர்” சங். 136:23

இயற்கையாகவே நாம் மிகவும் கீழான நிலையில் இருக்கிறோம்.

நம் நிலை தாழ்வானது. சுயாதீனமற்றவர்கள் நாம். பிசாசுக்குக் கீழ்ப்படிந்தவர்கள். அக்கிரமங்களுக்கும், பாவத்திற்கும் அடிமைகள். கலகக்காரரோடும், துரோகிகளோடும் ஐக்கியமானவர்கள். உலக இன்பத்திலும் அதன் ஆசாபாசங்களிலும் மூழ்கிப் போனவர்கள். எனவே நமக்கு எவ்விதப் பெருமையான நிலையும் இல்லை. மகிழ்ச்சி என்பது நமக்கில்லை. நாம் நிர்பாக்கியர். நம்மால் பயன் ஒன்றும் கிடையாது. நாம் என்ன பிரயாசப்பட்டாலும் பயன் மரணம்தான். நமது சுபாவமே மிகக்கேடானது. நமது உள்ளான நிலை பரிதாபத்துக்குரியது.

இப்படிப்பட்ட நிலைமையில்தான் கர்த்தர் நம்மை நினைத்தார். இத்தாழ்வான நிலையில் நாம் இருக்கும்பொழுதுதான் அவர் தமது குமாரனை அனுப்பினார். தூய ஆவியானவரை வாக்களித்தார். தமது நற்செய்தியை நமக்குத் தந்தருளி நம்மை நினைத்தார். தமது வல்லமையை நமக்குத் தந்தார். மோட்ச வீட்டை நமக்குத் திறந்தார். தமது சிம்மாசனத்தருகில் நிற்கும் பாக்கியத்தை நமக்கு அருளியிருக்கிறார். இவ்வாறாக கர்த்தர் நம்மை நினைத்தார். நாம் தாழ்வில் இருக்கும்பொழுதே தேவன் நம்மை நினைத்தார். அவருடைய இரக்கம் என்றுமுள்ளது. அது நம்மை அவரிடம் சேர்த்திருக்கிறது. கீழான நிலையிருந்த நம் பெயரை ஜீவ புத்தகத்தில் எழுதியதும் அவருடைய கிருபையே. தமது வசனத்தை நமக்குத் தந்தது அவருடைய இரக்கமே. நமக்கு மகிழ்ச்சியைத் தந்து, நமக்குத் தம்முடைய ஆசீர்வாதங்களைத் தரவும் அவர் காத்திருப்பது அவருடைய தயவுதான். நமது தாழ்வில் அவர் நம்மை நினைத்தருளினார். அவரைத் துதியுங்கள். அவர் கிருபை என்றுமுள்ளது.

எமது தாழ்நிலையில்
எம்மைக் கண்ணோக்கிய கர்த்தர்
தம் சித்தப்படியே தான்
எம்மை இரட்சித்தார், தயவாய்.

புத்திரசுவிகாரத்தின் ஆவி.

பெப்ரவரி 02

“புத்திரசுவிகாரத்தின் ஆவி.” ரோமர் 8:15

பாவிகளாகிய நம்மை இரக்கத்திற்காகக் கெஞ்சும்படி செய்கிறவர் ஆவியானவரே. பிறகு நேசிக்கும் பிள்ளைகளாகும்படி நம்முடன் உறவாடுகிறவரும் இவரே. யேகோவாவின் கிருபை நிறைந்த குணநலன்களை நமக்கு வெளிப்படுத்தி, நமது இதயத்தில் அவரில் வாஞ்சைக்கொள்ளும்படி செய்து பிதாவின் அன்பை நமது உள்ளங்களில் ஊற்றி அப்பா பிதாவே என்று நம்மை அழைக்கச் செய்கிறவதும் இந்த ஆவியானவரே. உலக தோற்றத்திற்கு முன்னே புத்திரசுவிகாரத்தின் சிலாக்கியத்திற்கு நாம் முன் குறிக்கபட்டிருந்தாலும்,பரிசுத்தாவியானவரின் துணைக் கொண்டுதான் சகலத்தையும் அறிய முடியும்.

ஆவியானவர்தான் இருதயத்தைத் திருப்பி, மேலான சிந்தனைகளைக் தந்து, உள்ளத்தைச் சுத்திகரித்து, நோக்கங்களைச் சீர்ப்படுத்தி, சத்தியத்தில் நடத்துகிறார். மேலும் பாவத்தைச் சுட்டிக்காட்டி உணர்த்தி, மனந்திரும்பச் செய்து சமாதானத்தினாலும், உத்தமத்தாலும் நிரப்புகிறார். அவர் நம்மை நடத்தும்போது ஜெபம் இனிமையாகிவிடும். தியானம் பிரயோஜனமாகிவிடும். விசேஷமான வெளிப்பாடுகள் ஆனந்தங்கொடுக்கும்.

நண்பரே, இந்தப் புத்திரசுவிகார ஆவியானவர் உன்னிடத்தி; உண்டா? பிள்ளையைத் தகப்பனிடம் நடத்துகிறதுப்போல நடத்துகிற ஆவியானவரை நாடுகிறாயா? ஆற்றி தேற்றி உன்னை அணைக்கும்போது அவரோடு இசைந்துப் போகிறாயா? அவரால் எழுதப்பட்ட தேவ வசனத்தை ஏற்றுக்கொண்டு கீழ்ப்படிகிறாயா? அவர் ஜெபிக்க சொல்கிறபடி அவருடன் சேர்ந்து ஜெபிக்கிறாயா?

கர்த்தாவே உம் ஆவியை
என் உள்ளத்தில் ஊதிவிடும்
உமதன்பால் என்னை ஆள்கொள்ளும்
உம்மை விடேன் எந்நாளும்.

இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன்

ஜனவரி02

“இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன்” ஆதி. 29:35

நன்றிகேடுபெரும் பாதகம். ஆனால் இது வெகு சாதாரணமான பாவமாகிவிட்டது. நாம் நன்மைகளைப்பெற்றுக்கொள்ளுகிறோம். நன்றி செலுத்தாமல் அவைகளை அனுபவிக்கிறோம்.நன்மைகளுக்கு தேவனைத் துதிக்காமல் இருப்பதால் அவைகள் நம்மை விட்டுஎடுக்கப்பட்டுப் போகின்றன. நாம் பெற்றுக்கொண்டோமென்று உணர்ந்து சொல்லாதஎத்தனை உபகாரங்களை நாம் பெற்றனுபவித்திருக்கிறோம்! ஸ்தோத்திரபலி இடுகிறவன்என்னை மகிமைப்படுத்துகிறான் என்று கர்த்தர் சொல்லுகிறார். நாம் பெற்றுக்கொண்டநன்மைகளைக் குறித்துச் சிந்தித்து, நம்முடைய நன்றிக்கேட்டுக்காகத்துக்கப்பட்டு லேயாளைப்போல் ‘இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன்” என்றுசொல்லுவோம். இப்படி சொல்வது இம்மைக்குரிய நன்மைகளுக்காகவும் இப்பொழுதே அவரைத்துதிக்கத் தொடங்குவோமாக. கர்த்தர் இதுவரையில் நமக்குச் செய்ததற்காகவும், இனிசெய்வேனென்று வாக்களித்திருகிறதற்காகவும், ஆதாமின்மூலமாய் நமக்குக் கிடைத்தநன்மைகளுக்காகவும், அதிலும் அதிகமாய் கிறிஸ்துவினாலே நாம் பெற்றுக்கொண்டநன்மைகளுக்காகவும் அவரைத் துதிக்கக்கடவோம். நமது தேவைகளையெல்லாம் அவர்சந்தித்ததற்காகவும் பணமின்றி இலவசமாய் அவைகளையெல்லாம் நமக்குத்தருகிறதற்காகவும் அவரை துதித்து நன்றி சொல்வோம். அவர் நமக்கு தருவது இன்பமானாலும்,துன்பமானாலும் சகலத்தையும் அன்பினால் தருகிறார்.

ஆதலால் அப்போஸ்தலன் புத்தி சொல்லுகிறபடி “எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம்”செய்யக்கடவோம். அப்படி செய்வதே கிறிஸ்துவுக்குள் உங்களைக் குறித்து தேவ சித்தம்.நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்வின் நாமத்திலே எப்போதும்எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரம் செய்யுங்கள். ‘துதிசெய்வதே செம்மையானவர்களுக்குத் தகும்”

தேவனைத்துதி, உள்ளமே
அவர்ஈவை நினை
நன்மைகளைஎன்றும் மறவாதே
மௌனமாயிராதே.

Popular Posts

My Favorites

தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்

யூலை 21 "தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்" எபி. 12:24 பாவத்திற்காகச் சிந்தப்பட்ட இரத்தம் பாவியின் மேலே சிந்தப்பட்டது. முந்தினது பாவநிவர்த்தியை உண்டாக்கிற்று. பிந்தினது செலுத்தினவன் சுத்தமானான் என்று காட்டிற்று. இயேசுவின் இரத்தம் தெளிக்கப்பட்ட இரத்தம். அது...