தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 30

இஸ்ரவேலில் நம்பிக்கை

அக்டோபர் 09

“இஸ்ரவேலில் நம்பிக்கை” எரேமியா 14:8

தேவன் இஸ்ரவேலின் நம்பிக்கைக்குக் காரணர். அந்த நம்பிக்கை அவருடைய ஆவியானவராலும், அவருடைய வசனத்தினாலும் உண்டாகிறது. வாக்கில் அவர் உண்மையுள்ளவராதலால், அவருடைய வாக்கிலும் ஆழமான கருத்துள்ள நித்திய வசனங்களிலும் நம்பிக்கை கொள்ளவேண்டும். இஸ்ரவேல் கர்த்தரை நம்புகிறான். தேவ பிள்ளைகள் அவரை நம்பியிருப்பார்களாக. கர்த்தரிடத்தில் கிருபையும், திரளான மீட்பும் உண்டு. மனிதனை நம்புவதில் பயன்யாதும் கிடையாது. மனிதன் பெலவீனன். மாறக்கூடியவன், உண்மையற்றவன். சுயநலக்காரன். அவனை நம்பாதே, கர்த்தரோ பெரியவர். உயிர் நண்பர், மன்னிப்பளிப்பவர், ஞானத்தோடு நடத்துபவர், கிருபையாகக் காப்பவர், இரக்க உருக்கம் உள்ளவர், மாறா அன்புள்ளவர். ஆகவே அவரையே நம்பு.

அவருடைய கிருபை நமக்குப் போதும். அவருடைய பெலன் நமக்குப் பூரணமாய்க் கிடைக்கும். அவர் இஸ்ரவேலின் கன்மலையாக நம்பிக்கைக்குரியவர். உறுதியானவர். அவரே அடைக்கல பட்டணமானவர். எனவே, ஆபத்துக்காலத்தில் அவரே நமக்கு ஒதுக்கிடமானவர். ஜீவ ஊற்றாகிய அவரில் நம் தாகம் தீர்த்துக்கொள்ளலாம். அவர் பாவத்தினின்று நம்மை இரட்சிக்கும் இரட்சகர். ஆதலால் அவரிடம் போவோம். அவரை நம்புவோம், அவரில் விசுவாசம் வைப்போம்! யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் தன் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். எனவே, இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு. அவரை உன் முழுமனதோடும், முழுப்பெலத்தோடும் நம்பு. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்.

இஸ்ரவேல் நம்பும் கர்த்தாவே
என் வேண்டுதல் கேட்டிடும்
எத்துன்பத்திலும் எனைக்காப்போரே,
என் முழுமையும் உம்மையே நம்பும்.

சமீபத்திற்கு மாத்திரமா தேவன்?

ஏப்ரல் 24

“சமீபத்திற்கு மாத்திரமா தேவன்?” எரேமி. 23:23

தேவபிள்ளை ஒரு சிநேகிதனைத் தேடி தூரமாய்ப் போகவேண்டியதில்லை. கர்த்தர் எப்போதும் அவனுக்குச் சமீபமாயிருக்கிறார். அவர் சமீபத்திலிருக்கிற தேவன். தேவன் நம்மைக் கவனிக்க தயாராயிருக்கிறார். உதவி செய்யவும் ஆயத்தமாயிருக்கிறார். இதை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். நாம் கலங்கி இருக்கும்போது இதுவே நம்மைச் சந்தோஷப்படுத்தும். சோதனையில் இது நம்மை ஆறுதல்படுத்தும், பயத்தில் தைரியம் சொல்லும். பாவம் செய்யாதபடி தடுக்கும். கடமைகளை முடிக்க உற்சாகத்தைக் கொடுக்கும். சோர்ந்துப்போன சமயத்தில் எழுப்பிவிடும். நமது நண்பர்கள் நம்மை விட்டு பிரிந்து விடுவார்கள். இனஜன பந்துக்கள் நமது கஷ்டத்தில் அதிகம் பங்கேற்கமாட்டார்கள். ஆனால் தேவனோ நமது சமீபத்தில் இருக்கிறார். நமக்கு இரக்கங்காட்டி நம்மைக் கண்டிதஇது புத்தி சொல்லி ஆதரிக்க அவர் சமீபத்தில் இருக்கிறார்.

நமக்கு அவர் சமீபத்திலிருக்கிறது மட்டுமல்லாமல் எங்கும் இருக்கிறார். தூரத்திலிருக்கிற நம்முடைய சிநேகிதர்களோடு இருக்கிறார். மறைவிடங்களில் ஒளித்திருக்கிற நம்முடைய சத்துருக்களோடு இருக்கிறார். அவர்களுடைய யோசனைகளை அழித்து அவர்களுடைய விரோதங்களை நமக்கு நன்மையாக  நடத்துவார். தேவன் சமீபமாயிருக்கிறார். தூங்கும்போது அவர் விழித்திருந்து நம்மைப் பாதுகாக்கிறார். அவர் சித்தமின்றி ஒன்றும் நம் வாழ்வில் நடப்பதில்லை. தேவனுக்குத் திடீரென்று ஒன்றும்  சம்பவிக்கிறதில்லை. எவ்வளவு தூரத்திலிருந்தாலும் பார்க்கிறார். சகலத்தையும் நன்மைக்காக முடிப்பேன் என்று அவர் சொல்லியிருப்பதால் அந்த எண்ணத்தோடு இருப்போமாக. ஆத்துமாவே! நீ ஒருபோதும், உன் தேவன் சமீபத்திலிருக்கிறார் என்பதை மறவாதபடிக்குப் பார்.

தேவனே எனக்கு
உமது மகிமையைக் காண்பியும்
உமது வல்லமையே
என் இதயம் உணரட்டும்.

கர்த்தாவே என்னைச் சேதித்துப்பாரும்

யூலை 10

“கர்த்தாவே என்னைச் சேதித்துப்பாரும்” சங். 26:2

கர்த்தர் மனிதரைப் பார்த்து, ஒவ்வொருவனும் தன்னைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்கிறார். தேவ பிள்ளை தன்னைச் சோதித்துப் பார்த்து தான் செய்தது போதுமென்றிராமல் தேவனை நோக்கி, கர்த்தாவே நீர் என்னை சோதித்துப்பாரும் என்பான். தன் இருதயம் மோசமானதென்று அறிந்து இன்னும் மிகுதியாக மோசப்பட்டு போவேமோ என்று பயப்படுகிறான். என்னதான் கேடுள்ள ஒருவனிருந்தாலும் அவன் நல்லதை அறியவே விரும்புகிறான். தன் இருதயம் செம்மையாக இருக்க வேண்டுமென்று விரும்புகிற ஒளியினிடம் வருகிறான்.

ஆத்துமாவில் தேவ கிருபை இருக்கிறது என்பதற்கு இது நல்ல அத்தாட்சி. தேவனால் போதிக்கப்படுபவர்கள்தான் கர்த்தாவே என்னைச் சோதித்துப்பாருமென்று கேட்பார்கள். சிநேகிதரே இன்று இரவு இப்படி ஒரு ஜெபத்தைபண்ணுவீரா? தேவன் உங்களை சோதித்து பார்ப்பது உங்களுக்குப் பிரியமா? கர்த்தாவே என் இருதயத்தை சோதித்துப்பாரும். நான் உமது கிருபையைப் பெற்றவனா? என் நோக்கங்களை சோதித்துப்பாரும். அவைகள் சுத்தமானவைகளா? அவை தேவ வசனத்தோடு ஒத்திருக்கிறதா? என் எண்ணங்களைச் சோதித்துப்பாரும். உம்முடைய மகிமையையும் சித்தத்தையும் நாடுகிறேனா என்று கேளுங்கள். உன்னை நீயே சோதித்துப் பார்ப்பது தான் இந்த ஜெபத்தின் நோக்கம். என்னைச் சோதித்துப்பாருமென்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். உத்தமன்தான் தன் காரியங்களை நன்றாய்ச் சோதித்துப் பார்க்க கேட்பான். உத்தம சிந்தையுள்ள கிறிஸ்தவர்கள்தான் தேவன் தங்களை ஆராய வேண்டுமென்று மனதார ஜெபம்பண்ணுவார்கள்.

என்னைச் சோதித்தறியும்,
உமது ஆவியை அருளும்
சூது கபடு ஒழியட்டும்
நான் உமதாலயம் ஆகட்டும்.

பரிசுத்த ஜனம்

டிசம்பர் 18

பரிசுத்த ஜனம். ஏசாயா 62:12

கர்த்தருடைய ஜனம் எல்லாருமே பரிசுத்த ஜனம்தான். அவர்களுக்கு மெய்யுணர்வைத் தந்து மனஸ்தாபப்படும் உணர்வையும் அடைய அவர் செய்கிறார். இவர்தான் பாவத்தின்மேல் வெறுப்பைத் தருகிறவர். பரிசுத்தர்களாயிருக்கத் தேவன் தமது ஜனத்தைத் தெரிந்துகொண்டபடியால், அவர்கள் பாவம் செய்வதைவிட்டுவிடுகிறார்கள். இந்த ஜனங்கள் பரிசுத்தமாகவேண்டுமென்றே இயேசு கிறிஸ்து தம்மைத்தாமே பலியாக ஒப்புக்கொடுத்தார். ஓளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்குபெற அவர்கள் தகுதியாகும்படி தேவஆவியானவர் அவர்களுக்குள் வாசம்பண்ணுகிறார். பரிசுத்தம்தான் அவர்களுடைய ஜீவன். அவர்களுடைய இன்பம் அவர்கள் பரிசுத்தத்தின்மீது வாஞ்சை கொண்டு நாடித் தேடுகிறார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரதத்ததினால் மீட்கப்பட்டு, அவரால் சுத்திகரிக்கப்பட்டு, அவராலே நீதிமான்களாக்கப்படுகின்றனர். நீதிமான்களாக்கப்படுவதுதான் பரிசுத்தமாக்கப்படுதலுக்கு அடிப்படை. ஒருவன் நீதிமானாக்கப்பட்டால், அவன் பரிசுத்தமாக்கப்படுவான். பரிசுத்தமாக்கப்படுவதால், தான் நீதிமானாக்கப்பட்டதை நிரூபிப்பான். பாவம் வெறுக்கப்பட்டு, அது கீழ்ப்படுத்தப்படாவிட்டால், அது மன்னிக்கப்படுவதில்லை. பாவம் செய்கிற எவனும் நீதிமானல்ல, பரிசுத்தவானுமல்ல. இயேசுவைத் தன் சொந்தம் என்றோ, தான் பரிசுத்தஆவியைப் பெற்றவன் என்றோ சொல்லுவது தவறு. பரிசுத்தவான்கள் யாவரும் பாவத்திற்காகத் துக்கப்பட்டு, அதனோடு போராடி வெல்லுகிறார்கள். தங்கள் தேவனுக்கு முன்பாகப் பரிசுத்தமாக நிற்கிறார்கள். இவர்கள்தான் மீட்கப்பட்ட பரிசுத்தவான்கள். உனது நிலை என்ன? பரிசுத்தர் கூட்டத்தில் நீ இருக்கிறாயா ?

கர்த்தாதி கர்த்தர் பரிசுத்தர்
கிறிஸ்துவும் பரிசுத்தர்
தூய ஆவியானவரும் பரிசுத்தர்
அவர் பரிசுத்தராதலால் நாமும் பரிசுத்தராவோம்

மகா பிரதான ஆசாரியர்

ஓகஸ்ட் 28

“மகா பிரதான ஆசாரியர்” எபி. 4:14

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக ஊழியஞ் செய்கிறவராயிருக்கிறார். அவர் நமக்கு ஆசாரியர். நமக்காகவே பிரதான ஆசாரியராக அபிஷேகம்பண்ணப்பட்டு அனுப்பப்பட்டார். நம்முடைய பாவங்களுக்காக அவர் பிராயச்சித்தம் செய்துக்கொள்ள முடிவு செய்தார். அந்தப் பிராயச்சித்தமே தேவ மகிமையால் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அது மதிப்புக்கு அடங்காதது. என்றும் பிரசித்தி பெறத்தக்கது. அது நம்முடைய குற்றங்களையும் பாவங்களையும் நிராகரித்துவிட்டது. இப்போதும் அவர் நமக்காகப் பரிந்து பேசுகிறார். இதற்காகவே அவர் பிழைத்தும் இருக்கிறார். எப்போதும் அதைச் செய்துக் கொண்டு வருகிறார்.

தம்முடைய கிருபையினால் பலவித ஊழியங்களையும், நம் ஜெபங்களையும், பெலவீனங்களையும், சுகந்த வாசனையாக்குகிறார். இந்தப் பரிந்து பேசுதல் நமதுமேல் வரும் துன்பங்களை விலக்கி நமக்குத் தேவையான எல்லா நன்மைகளையும் சம்பாதித்து தம்முடைய தயவுகளை நம்மேல் பொழிகிறது. இப்போதும் நமக்காக மகா பரிசுத்த ஸ்தலத்தில் நமக்காக பரிந்து பேசுகிறார். இரத்தத்தை தெளித்து தூபத்தைச் செலுத்துகிறார். அவர் ஆசாரியர் மட்டுமல்ல. பிரதான மகா பிரதான ஆசாரியர். அவர் மகத்துவத்திலும் வல்லமையிலும் மகிமையிலும், இலட்சணங்களிலும் அவர் ஊழியங்களின் பலனிலும் அவருக்கு மேலானவர் ஒருவரும் இல்லை. இவரே நம்முடைய மகா பிரதான ஆசாரியர். இவர் தேவக் குமாரனாகவும் நமக்கு இருக்கிறார். நமக்காக அவர் தேவ சமுகத்தில் நிற்கிறார். இன்று இரவு அவர் நமக்காகத் தம்முடைய இரத்தத்தைச் சமர்பிக்கிறார்.

அவர் பிதாவின் சமுகத்தில்
நமக்காகப் பரிந்து பேசுவார்
அவரிடம் ஒப்புவித்ததெல்லாம்
நலமாய் முடிப்பார்.

அதில் வண்டல்களின்மேல் அசையாமல் இருந்து

நவம்பர் 26

அதில் வண்டல்களின்மேல் அசையாமல் இருந்து” எரேமி. 48:11

தன் சுய ஞானத்தில் பெருமை கொண்டு, தன் பெலனே போதுமான பெலன் என்று எண்ணுகிறவன் அடையும் பலன் இந்த அழிவே. அமைதியும், ஆறுதலும் தனக்கிருந்தபடியால், அவன் மகிழ்ந்து போவான். நமக்குக் கஷ்டங்கள் வராவிடில் நமது வாழ்க்கையும் இப்படிதான் இருக்கும். நமது இரட்சகராகிய தேவனை நாம் மறந்து நமது பாதுகாப்பான கன்மலையை அற்பமாக எண்ணுவோம். தேவனை மறந்து விடுவோம். நம்மைப்பற்றியே பெருமையாக எண்ணிக்கொண்டிருப்போம். சோம்பேறிகளாகி விடுவோம். நமது ஜெபங்கள் உயிரற்றுப்போம். பரம காரியங்களில் நாம் சலிப்படைந்து விடுவோம். ஆண்டவருக்கடுத்தவைகளை அசட்டை செய்வோம். அவரோடு நமக்கிருந்த ஐக்கியம் துண்டிக்கப்படுகிறது. ஆவிக்குரிய காரியங்களைப்பற்றிய உரையாடல்கள் இல்லை. நாம் உயிரற்றுப்போகிறோம். நாம் உத்தம கிறிஸ்தவர்களானால், இந்நிலையை நாம் அடையும்பொழுது துன்பங்கள் வரும் என்று எதிர்பார்ப்போம்.

துன்பங்கள் நமக்கு எவ்விதத்திலும் வரும். கழுகு தன் கூட்டைக் கலைப்பதுபோல நாமும் துன்பங்களால் கலங்கடிக்கப்படுவோம். கண்ணீரோடும் ஜெபத்தோடும் நாம் அவரண்டை வரும்வரை ஒரு சோதனைக்குப்பின் மற்றொன்று, ஒரு துக்கத்தையடுத்துப் பிறிதொன்று தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். ஆண்டவரைப் பின்பற்றாத மோவாப் வண்டல்களின்மேல் அசையாமல் தங்கியிருக்கலாம். ஆனால், தேவ மக்களாகிய இஸ்ரவேலர் அவ்வாறிருக்கலாகாது. இத்தகைய நிலையை நாம் அடையாதபடி எச்சரிக்கையாயிருப்போம். கவனமாக கர்த்தருக்கென்று உழைத்து, அவருக்குக் கீழ்ப்படிந்திருக்கும் காலம் இது. உறங்காமல் ஆண்டவருக்காக உழைத்திடுவோம்.

பாவத்தால் சோர்வடையாமல்
பாவியின் நேசா, எனைக் காரும்,
காலமும் கர்த்தருக்காயுழைத்து,
காலமும் வாழும் பேறடைவோம்.

மற்றவர்கள் தூங்குகிறதுபோல் நாம் தூங்காமல்

யூலை 07

“மற்றவர்கள் தூங்குகிறதுபோல் நாம் தூங்காமல்.” 1.தெச.5:6

தூக்கம் இங்கே உவமானமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சரீர இளைப்பாறுதலைப்பற்றியல்ல, மனதின் தன்மையைப்பற்றியே அப்போஸ்தலன் இப்படிச் சொல்கிறார். விசுவாசித்து ஜெபிக்கிற பரிசுத்த விருப்பங்களுக்குரிய வல்லமை நின்றுப்போயிருப்பது இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. வேலைசெய்ய வேண்டிய நேரத்தில் தூங்குவது தவறல்லவா? இது மரணத்துக்கு ஒப்பானது. பேர் கிறிஸ்தவர்கள் தூங்குகிறார்கள். ஆனால் நாமோ மற்றவர்கள் தூங்குகிறதுப்போல் தூங்கக்கூடாது. அப்படி நாம் தூங்கினால் உவாட்டர்லூ என்னும் போர்க்களத்தில் கொடிய சண்டை முடிந்த பிறகு காணப்படும் செத்தவர்கள், காயப்பட்டவர்கள் ஆகியோர் நடுவே தூங்குவதுப்போல, ஒரு பட்டணத்தில் பெரிய கொள்ளை நோய் வந்தபோது அந்த நோய்க்கு மாற்று மருந்து நம்மிடம் இருந்தும் நாம் தூங்குகிறவர்கள்போல் இருப்போம்.

ஒரு தீவில் அநேக அடிமைகள் இருக்க அவர்களை விடுதலையாக்கும் விடுதலை சாசனம் நம்மிடம் இருந்தும் நாம் தூங்குகிறவர்கள்போல் இருப்போம். அதிக பைத்தியக்காரர்கள் இருந்தும் ஊரில் நாம் அவர்களைக் குணப்படுத்தக்கூடிய திறமை இருந்தும் தூங்குகிறவர்கள்போல் இருப்போம். போதுமான உணவு இருந்தும் பட்டினியால் சாவதுப்போல் இது இருக்கும். பகலில் அறுவடை நேரத்தில் தூங்குகிற சோம்பேறிபோல இருப்போம். அறுவடை நேரத்தில் பெரும் புயல் அடித்து எஜமானுடைய விளைச்சல் நாசமாகும் சமயத்தில் தூங்கும் வேலைக்காரனைப்போல இருப்போம். இது சத்துரு போர்களத்தில் இருக்கும்போது விழித்திருக்கவேண்டிய போர்ச்சேவகன் தூங்குகிறதுபோல இருக்கும்.

கிறிஸ்துவர் என்று சொல்பவர்
தூங்குகிறதைப் பார்
எழுந்து கீழ்ப்படிந்து
ஓட்டத்தை ஓடிமுடி.

இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்

ஜனவரி 08

“இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்” 1.சாமு. 7:12

தேவன் உண்மையுள்ளவர். இதை நாம் நமது அனுபவத்தில் நன்றாய்க் கண்டறிந்திருக்கிறோம். அவர் நமக்கு உதவி செய்வேனென்று வாக்களித்துள்ளார். நாம் நம்முடைய நீண்ட பிரயாணத்தில் தண்ணீரைக் கடந்து அக்கினியில் நடந்தாலும், பாதைகள் கரடு முரமானாலும், பாவங்கள் பெருகி, சத்துருக்கள் அநேகரானாலும் நம்முடைய விசுவாசம் பலவீனமுள்ளதாயிருந்தாலும், கர்த்தர் நமக்கு ஏற்ற துணையாய் நின்றார். இருட்டிலும் வெளிச்சத்திலும், கோடைக்காலத்திலும் மாரிக்காலத்திலும், ஆத்தும நலத்திலும் சரீர சுகத்திலும் அவர் நமக்கு உதவி செய்தார்.

இந்த நாளில் அவருடைய இரக்கங்களை நினைத்து நம்முடைய ‘எபெனேசரை” நம் முன் நிறுத்தி அவரே நமக்கு உதவினாரென்று சாட்சியிடுவோமாக. மேலும் கடந்த காலத்தை நினைத்து கலங்காமல், எதிர்காலத்திலும் தேவனே உதவிடுவார் என தைரியமாய் நம்புவோமாக. ‘நான் உனக்குச் சொன்னதை எல்லாம் செய்து தீருமட்டும் நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லுகிறார். நாமும் சந்தோஷித்து மகிழ்ந்து வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தடைய நாமத்திலே எங்களுக்கு ஒத்தாசை உண்டென்று சங்கீதக்காரனோடு துதிபாடுவோமாக. நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை. கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லுகிறதுபோல நாமும் தைரியத்தோடு கர்த்தர் எனக்குச் சகாயர், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்வோமாக. எது மாறிப்போனாலும் உன் தேவனுடைய அன்பு மாறாது. அவரே மாற்ற ஒருவராலும் கூடாது. ஆகையாய் அவரை நம்பு. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்.

இம்மட்டும் தேவன் காத்தார்
இம்மட்டும் நடத்தினார்
இன்னும் தயை காட்டுவார்
அவர் அன்பர்கள் போற்றிப் பாடுவர்.

அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்

யூலை 03

“அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.” மீகா 7:18

தேவனை விரோதிப்பவர்கள்மேல்தான் தேவ கோபம் வரும். தேவனுடைய கோபம் யார்மேல் வருகிறதோ அவர்களுடைய நிலை மகா வருத்தமானது. கொஞ்ச காலம் அவருடைய ஜனங்களுக்கு விரோதமாகவும் அது வரலாம். ஒவ்வொருவனும் நீர் என்மேல் கோபமாயிருந்தீர் என்று சொல்லக்கூடும். தேவனுடைய கோபத்திற்கு காரணம் பாவம். அவர் தம் பிள்ளைகள்மேல்தான் கோபப்படுகிறார். அது தகப்பனுக்கொத்த கோபம். நம்மைச் சீர் செய்யவேண்டும் என்பதே அவருடைய கோபத்தின் நோக்கம். அந்தக்கோபம் பல விதங்களில் நம்மை வருத்தப்படுத்தக்கூடும்.

தேவ கோபத்தால் உலக நன்மைகள் கெட்டு ஆவிக்குரிய ஆறுதலும், சந்தோஷமும் குறைந்து போகலாம். அது குறுகிய காலம் தான் இருக்கும். அவர் கோபம் ஒரு நிமிஷம். அவருடைய தயவோ நீடிய வாழ்வு. தேவன் நம்மேல் கோபமாய் இருக்கும்போது ஒரு மணிநேரம் ஒரு நாள்போலவும், ஒரு மாதம், ஒரு வருடம்போலவும் இருக்கும். ஆகையால் அவர் எப்பொழுதும் கோபம் வைக்கிறதில்லை என்ற உண்மை நமக்கு இன்பமாய் இருக்கவேண்டும். கோபப்படுவது அவர் இயல்பு அல்ல. அவர் சுயசித்தமாய் கோபிக்கிறவரும் அல்ல. அவர் வெகுகாலம் கோபம் வைக்கிறதில்லை. அவர் பிராயசித்த பலியை நோக்கி சீரடைந்தவனுடைய விண்ணப்பத்திற்குப் பதிலளிக்கிறார். தம்முடைய உடன்படிக்கையை நினைக்கிறார். இரக்கம் காட்டுவதே அவருக்குப் பிரியம் என்று நிரூபிக்கிறார். அவருடைய கோபம் பாவிகளுக்கு விரோதமாக, பாவத்தால் நெருப்பு மூட்டப்பட்டு எப்பொழுதும் எரியும். ஆனால் அவர் பிள்ளைகளின்மேல் வைக்கும் கோபம் சீக்கிரம் அணைந்துப்போம். தேவனின் அன்பு என்கிற நீர் அதை அவித்துப்போடும்.

பாவத்தை ஒழித்து
முற்றும் மன்னிப்பார்
கோபம் ஒரு நொடி மாத்திரம்
அவர் அன்போ என்றும் உள்ளது.

வேண்டுதல் செய்யும்படி அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறார்

ஜனவரி 28

“வேண்டுதல் செய்யும்படி அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறார்.” எபி. 7:25

நம்முடைய பாவங்களுக்காக அவர் ஒரே தரம் மரித்தார். என்றாலும் தினந்தோறும் ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நிமிஷமும் நமக்காகப் பரிந்து பேச அவர் உயிரோடிருக்கிறார். அவருக்கு முடிவில்லாத ஜீவனும் மாறாத ஆசாரியத்துவமும் உண்டு. Nhட்சத்தில் நம்முடைய பிரதான ஆசாரியராக அவர் வெளிப்படுவார். நம்முடைய பெயர்கள் அவருடைய இருதயத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. நமது காரியங்களையெல்லாம் அவர் நன்றாய் அறிவார். நமக்காகப் பரிந்துப் பேசத்தான் அவர் அங்கேயும் உயிரோடிருக்கிறார். தம் அருமையான இரத்தத்தையும், பூரண நீதியையும் தேவன் முன்பாக வைத்து, அவைகளின்மூலம் நமக்கு மன்னிப்பு, தந்து நம்மை மகிமைப்படுத்த வேண்டுமென்று வேண்டுகிறார்.

பிதா அவருக்குச் செவிக் கொடுக்கிறார். ஏனென்றால் அவர் அவரை அதிகம் நேசிக்கிறார். நமது செழுமைக்காக தம்மாய் ஆனதெல்லாம் அவர் செய்தார். அவர் அன்பு எத்தனை ஆச்சரியமானது. நமக்காக பரலோகத்தைத் துறந்தார். பூமியிலேவந்து பாடுபட்டு உத்தரித்து நமக்காக மரித்தார். பின்பு மோட்சலோகஞ்சென்று அங்கே நமக்காக வேண்டிக்கொண்டு நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கிறார். நாம் மாறுகிறதை அவர் பார்க்கிறார். துக்கப்பட்டு இன்னும் நமக்காக மன்றாடுகிறார். நமக்கு நன்மை செய்யப் பிரியப்படுகிறார். இது எத்தனை ஆறுதல்! நம்பிக்கைக்கு எத்தனை ஆதாரம். நாம் தேவனுக்குச் சத்துருக்கயரிருக்கையில் அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், பின்பு நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாம்.

இரக்க ஆசனத்தின் முன்னே
நமக்காய் நின்று பேசுவார்
பாரியத்தில் உத்தமர்
வீரம் கொண்டு ஜெயிப்பார்.

Popular Posts

My Favorites

தேவன் பிரியமானவர்

ஓகஸ்ட் 08 "தேவன் பிரியமானவர்" கலா. 1:15-16 அப்போஸ்தலனாகிய பவுல் தன் தாயின் வயிற்றிலிருந்து முதல் பிரித்தெடுக்கப்பட்டதையும், கிருபையினால் அழைக்கப்பட்டதையும், கிறிஸ்து தன்னில் வெளிப்பட்டதையும், தான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், பிரித்தெடுக்கப்பட்டதையும் குறித்து இவை யாவும் தேவனுடைய...