தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 31

இவள் மிகவும் அன்புகூர்ந்தாள்

பெப்ரவரி 23

“இவள் மிகவும் அன்புகூர்ந்தாள்.” லூக்கா 7:47

இவள் ஒரு பெரிய பாவி. தன் பாவத்தை உணர்ந்து இரட்சகரைத் தேடினாள். மன்னிப்புக்காக அவரிடம் சென்று இரக்கம் பெற்றான். இயேசுவின் அன்பையும், அவர் காட்டின பாசத்தையும் அவள் உணர்ந்தபடியால், அவர் Nரில் அன்பு பொங்கிற்று. அவள் அவரைச் சாதாரணமாய் Nநிக்கவில்லை. அதிகமாய் நேசித்தாள். அதனால் அவரின் சமுகத்தை உணர்ந்து அவர் வார்த்தைக்குச் செவிகொடுத்து துன்பத்தையும், நிந்தையையும் சகித்தவளானாள். அவளின் அன்பு உள்ளுக்குள்ளேயே அடைக்கப்படவில்லை. அதை வெளிக்காட்டினாள். அதனால்தான் விலையேறப்பெற்ற தைலத்தைக் கொண்டு வந்து ஊற்றி, தன் கண்ணீரால் அவர் பாதங்களை நனைத்து, தலை மயிரால் துடைத்து அபிஷேகம்பண்ணினாள்.

இது நமக்கு ஒரு நல்ல முன்மாதிரி. நாமும் பாவிகள்தான். இயேசுவும் நமது பாவங்களை மன்னித்தார். ஆம் இந்த ஸ்திரீயை அவர் எவ்வளவாய் நேசித்தாரோ அவ்வளவாய் நம்மையும் நேசிக்கிறார். அந்தப் பெண் நேசித்ததுப்போல் நாமும் அவரை நேசிக்கிறோமா? இல்லையென்றே சொல்ல வேண்டும். காரணம் என்ன? நாம் நமது பாவங்கள் நிமித்தம் அவ்வளவு உணர்வு அடைவதில்லை. நமது அபாத்திர தன்மையை அவ்வளவாய் பார்க்கிறதில்லை. நமது மோசமான வாழ்க்கையைக் கண்டு நாம் கண்ணீர் விடுவதில்லை. அவர் நம்மை மன்னித்த மன்னிப்பைப் பெரிதாக ஒன்றும் எண்ணவில்லை. இனியாவது நமது சிந்தையை இயேசுவண்டைத் திருப்புவோம். பரிசுத்தாவியானவர் தேவ அன்பை நமது இருதயத்தில் ஊற்றும்படி கேட்போம். அவரோடு ஒன்றாகி அவர் பாதத்தில் அமர்ந்திருப்போம்.

தேவ அன்புக்கீடாய்
பதில் என்ன செய்வோம்
அவர் மன்னிப்புக்கு ஈடாய்
நன்றி சொல்வோம்.

இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்

ஓகஸ்ட் 17

“இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” கொலோ. 4:2

எப்போதும் ஜெபம் அவசியம். அது எப்பொழுதும் பயனுள்ளதுதான். நாம் தேவனுக்கு முன்பாக நம்முடைய ஜெபத்தை சுருக்கி விடுகிறோம். இது பாவம். இது தேவனைக் கனவீனப்படுத்தி, நம்மை பெலவீனப்படுத்துகிறது. ஜெபிக்கும்போது தேவ குணத்திற்கு ஸ்தோத்திரம் சொல்லுகிறோம். அவர் எங்கும் இருக்கிறதை விசுவாசிக்கிறோம். நமது தேவைகளைச் சந்திக்கும் தஞ்சமாக நுழைகிறோம். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு உண்மையைத் தெரிந்தெடுக்கிறோம். ஜெபத்தில் உள்ளான எண்ணங்களைத் தேவனுக்குச் சொல்லுகிறோம். நமக்கு இருக்கும் சந்தோஷத்தையும், துக்கத்தையும், நன்றியையும், துயரத்தையும் விவரித்துச் சொல்லுகிறோம். நமது குற்றங்களை அறிக்கையிட்டு மன்னிப்பை பெற்று தேவனிடம் கிருபையைப் பெற்றுக் கொள்ளுகிறோம். நமது விருப்பங்களை வெளியிட்டு நம்முடைய நிலையை அவருக்கு முன்பாக விவரிக்கிறோம்.

ஜெபம் என்பது தேவனுக்கும் நமக்கும் நடுவே செல்லுகிற வாய்க்கால். அதன் வழியேதான் நாம் தேவனுக்கு விண்ணப்பங்களையும், வேண்டுதல்களையும் தெரிவிக்கிறோம். அவர் நமக்கு அறிவையும், பலத்தையும், ஆறுதலையும், கிருபையையும் அனுப்புகிறார். ஜெபிப்பது நமது கடமை. இது பெரிய சிலாக்கியம். நமது வேலைகள் ஜெபத்தை அசட்டை செய்யும்படி நம்மை ஏவும். ஆனால் ஜெபத்தில் உறுதியாயும், கருத்தாயும், நம்பிக்கையாயும், விசுவாசமாயும், விடாமுயற்சியுள்ளவர்களாயும், பொறுமையுள்ளவர்களாயும் இருக்க வேண்டும். தேவன் ஜெபத்தை விரும்புகிறார். சாத்தானோ அதைப் பகைக்கிறான். நாம் எப்பொழுதும் முழங்காலில் இராவிட்டாலும் ஜெபசிந்தை உள்ளவர்களாய் இருக்க வேண்டும். இது அவசியம், பிரயோஜனமானது. தேவன் அங்கிகரிக்கத்தக்கது. மெய்க் கிறிஸ்தவன் அதை மதிக்கிறான்.

ஜெபியாவிட்டால் கெடுவேன்
கிருபைத் தாரும் கெஞ்ச
உம்மைச் சந்திக்க வருகையில்
என்னிடம் நீர் வாரும்.

தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்

ஓகஸ்ட் 04

“தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்” யோபு 11:5-6

யோபின் சிநேகிதர் அவன் நிலமையை புரிந்துக்கொள்ளவில்லை. அவர்கள் சொன்ன நியாயங்கள் அவன் மனதில் தங்கவில்லை. அவனுக்கு அவைகள் தெரிய வேண்டுமென்று அவர்களில் இவன் ஒருவன் விரும்பினதால், தேவன் பேசினால் நலமாய் இருக்கும் என்று வாய்விட்டுச் சொன்னான். இப்படித்தான் விசுவாசியும் கடைசியில் சொல்லுகிறார். யாரிடத்தில் தேவன் பேசினால் நலமாய் இருக்குமென்று விரும்புகிறோம்? நம்மிடத்தில்தான் அவர் பேசவேண்டும். அப்போதுதான் அவரின் அன்பு நம்மிடத்தில் இருக்கிறதென்று ஒரு நிச்சயம் உருவாகும். நமது வருத்தங்கள் விலகும். சத்தித்தில் நாம் நிலைப்படுவோம். பாவிகளிடத்தில் அவர் பேச வேண்டும். அப்போது அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். மனந்திருப்பி கர்த்தர் பட்சம் சேருவார்கள். துக்கப்படுவோரிடம் அவர் பேச வேண்டும். அப்போது அவர்கள் தேற்றப்படுவார்கள். சுயாதீனம் அடைவார்கள். பின்வாங்கி போனவர்களோடு அவர் பேசவேண்டும். அப்போது அவர்கள் திரும்பவும் பரிசுத்தர்களும் பாக்கியமும் பயனுள்ளவர்களும் ஆகலாம்.

இவைகளெல்லாம் நமக்குப் போதிக்கிறதென்ன? எந்த வேளையானாலும் தேவனிடம் ஓடி அவர்மேல் நம்பிக்கை வைக்கும்போது அவர் நம்மோடு பேசுவார். சோதிக்கப்படுகிற விசுவாசியே, தேவன் உனக்காகப் பேசுவார். பக்தியுள்ள கிறிஸ்தவனே, தேவன் உன்னோடு பேசுவார். எப்படிப் பேசுவார் என்று கேட்கிறாயா? தம்முடைய வசனத்தை கொண்டும், தமது கிரியைகளைக் கொண்டும், ஆவியானரைக் கொண்டும் பேசுவார். அப்படியானால் அவர் சத்தத்துக்குச் செவிக்கொடுப்போமாக. அவர் தம்முடைய வார்த்தையைக் கொண்டும், ஊழியர்களைக் கொண்டும் எவ்விதத்திலும் நம்மோடு பேச அவரை வேண்டிக்கொள்வோமாக.

சுவிசேஷத்தில் தொனிக்கும்
சத்தம் சமாதானமே
இதை உமதடியார்க்களித்து
விடாமல் என்றும் காரும்.

அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்

ஏப்ரல் 22

“அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்” சங்கீதம் 116:12

ஒவ்வொரு நாளும் முடியும்போது இப்படி கேட்பது நல்லதல்லோ? இன்று மாலை துதி செலுத்த வேண்டியதாயிருந்தாலும் இந்த நாளில் கடந்த காரியங்களை மட்டும் நினைக்கக் கூடாது. கர்த்தர் நமக்கு செய்தது என்ன என்று நம்மை நாமே கேட்க வேண்டும். அவர் எண்ணிலா நன்மைகளைச் செய்திருக்கிறார். இல்லாவிட்டால் நன்மையுள்ளவர்களாய், ஆசீர்வாதமுள்ளவர்களாய் நாம் இருக்க மாட்டோம். அவர் கிருபைகளைத் தந்து பயங்களைப் போக்கி, விடுதலையளித்துத் தேவைகளைச் சந்தித்து விசுவாசத்தை உறுதிப்படுத்தி மகிமைப்படுத்துவேன் என்று வாக்களித்திருக்கிறார். நாம் பெற்றுக்கொள்வதெல்லாம் உபகாரந்தான். அது சுத்தக் கிருபையிலிருந்துப் பிறந்து, அபாத்திரருக்கு நன்மையை அளிப்பதாய் உள்ளது.

பிதா நமக்கு தமது குமாரனைக் கொடுத்தார். நாம் நிறைவேற்றின கிருபைகளைக் கொடுத்தார். ஆவியானவர் தமது ஜீவனைத் தந்து நம் இருதயத்தில் குடிகொண்டுள்ளார். ஆகவே அவருக்கு என்னத்தைச் செலுத்துவோம்? நாம் என்ன செலுத்தக்கூடும்? என்ன செலுத்த மனதாய் இருக்கிறோம்? நாம் வரங்கள் பெற்றிருக்கிறோமென்றால், அதை அவர் புகழ்ச்சிக்கென்று பிரயோகிப்போமாக. அவர் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்து, அவர் சத்துருக்களுக்கு விரோதமாய் போராடுவோமாக. அவர் ஊழியத்தில் துன்பங்களைச் சகித்து, ஏழைகளுக்கு நம்முடைய பொருளைக் கொடுப்போமாக. அவரோடு நெருங்கி சஞ்சரிக்கிறதுதான் அவருக்குப் பிரியம். அவர் சுவிசேஷத்தை உலகிற்கு அறிவித்து வியாதியுள்ளவர்களைச் சந்தித்து, அவருடைய எளியவர்களுக்கு உதவிசெய். உன் சம்பத்துக்குத்தக்கபடி உன் நன்றியறிதலைக் காட்டு. ஓரே வாழ்க்கையைக் கிறிஸ்துவுக்காய் பிரதிஷ்டைப்பண்ணி ஜீவியம்பண்ணு. தேவனுக்காய் பிரதிஷ்டை செய்யப்பட்ட சீஷனாக ஜீவனம்பண்ணு.

கர்த்தர் காட்டும் தயவுக்கு
பதில் என்ன செய்வேன்
அவர் வழிகளைக் காத்து
அவர் சொற்படி நடப்பேன்.

ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு

யூன் 22

“ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு.” பிலி. 2:14

சுவிசேஷத்தைப் பிடித்துக்கொண்டு கிறிஸ்துவானவரைக் குறித்த வாக்குத்தத்தத்திலும் அவருடைய கிரியையிலும் உள்ள ஜீவனை இது வெளிப்படுத்துகிறது. குற்றவாளிகளாகத் தீர்க்கப்பட்டவர்களுக்கு ஜீவனை தேவனுடைய இலவச ஈவாகக் கொடுக்கிறது. வசனம் ஆவியானவரின் வல்லமையினால் ஜீவனை அளிக்கப் பயன்படுகிறது. இந்த ஜீவ வசனம்தான் தேவ தயவிலும், கிறிஸ்துவின் ஐக்கியத்திலும், ஆவியானவரைப் பெறுவதிலும், ஜீவ வழியில் சேர்ப்பதிலும், ஆக்கினைத் தீர்ப்புக்கு விலக்குவதிலும், நித்திய மகிமைக்கு சேர்ப்பதிலும் நம்மை நடத்துகிறது. இந்தச் சுவிசேஷம் நமக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்காக நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வசனத்தை நாம் அந்தகாரத்தில் வெளிச்சத்தைப்போலவும், பசியினால் வருந்தும் பாவிக்கு உணவுப்போலவும், ஆயுள் குற்றவாளிக்கு மன்னிப்புப்போலவும், மீட்கப்பட்டவர்களுக்கு சட்ட நூலாகவும் தூக்கிப் பிடிக்க வேண்டும். தேவ ஊழியத்தில் பரிசுத்த நடத்தையாலும், கனியுள்ள வாழ்க்கையினாலும், அதைத் தூக்கிப் பிடிக்க வேண்டும். அன்பர்களே, சுவிசேஷத்தை ஜீவனுள்ள வசனமாக ஏற்றுக்கொள்வோமாக. அதைப் பிறர்க்குச் சொல்லுவது நம்முடைய கடமையென்று எண்ணுவோமாக. அந்தக் கடமையைச் சரியானபடி நிறைவேற்றுகிறோமா என்று நம்மை நாமே கேட்போமாக. அச்சிட்டுள்ள அவர் வசனத்தை வாங்கிப் பிறர்க்குக் கொடுப்பதினாலும் அவ்வாறு செய்பவர்களுக்கு உதவி செய்வதினாலும் ஜீவ வசனத்தைத் தூக்கிப் பிடிப்போமாக.

நன்றி உள்ளவர்களாய் என்றும்
சேவை செய்வோம் அவருக்கு
நம் இயேசுவைப் புகழ்ந்து
நம்மையே அவருக்குக் கொடுப்போம்.

இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்

ஜனவரி 08

“இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்” 1.சாமு. 7:12

தேவன் உண்மையுள்ளவர். இதை நாம் நமது அனுபவத்தில் நன்றாய்க் கண்டறிந்திருக்கிறோம். அவர் நமக்கு உதவி செய்வேனென்று வாக்களித்துள்ளார். நாம் நம்முடைய நீண்ட பிரயாணத்தில் தண்ணீரைக் கடந்து அக்கினியில் நடந்தாலும், பாதைகள் கரடு முரமானாலும், பாவங்கள் பெருகி, சத்துருக்கள் அநேகரானாலும் நம்முடைய விசுவாசம் பலவீனமுள்ளதாயிருந்தாலும், கர்த்தர் நமக்கு ஏற்ற துணையாய் நின்றார். இருட்டிலும் வெளிச்சத்திலும், கோடைக்காலத்திலும் மாரிக்காலத்திலும், ஆத்தும நலத்திலும் சரீர சுகத்திலும் அவர் நமக்கு உதவி செய்தார்.

இந்த நாளில் அவருடைய இரக்கங்களை நினைத்து நம்முடைய ‘எபெனேசரை” நம் முன் நிறுத்தி அவரே நமக்கு உதவினாரென்று சாட்சியிடுவோமாக. மேலும் கடந்த காலத்தை நினைத்து கலங்காமல், எதிர்காலத்திலும் தேவனே உதவிடுவார் என தைரியமாய் நம்புவோமாக. ‘நான் உனக்குச் சொன்னதை எல்லாம் செய்து தீருமட்டும் நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லுகிறார். நாமும் சந்தோஷித்து மகிழ்ந்து வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தடைய நாமத்திலே எங்களுக்கு ஒத்தாசை உண்டென்று சங்கீதக்காரனோடு துதிபாடுவோமாக. நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை. கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லுகிறதுபோல நாமும் தைரியத்தோடு கர்த்தர் எனக்குச் சகாயர், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்வோமாக. எது மாறிப்போனாலும் உன் தேவனுடைய அன்பு மாறாது. அவரே மாற்ற ஒருவராலும் கூடாது. ஆகையாய் அவரை நம்பு. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்.

இம்மட்டும் தேவன் காத்தார்
இம்மட்டும் நடத்தினார்
இன்னும் தயை காட்டுவார்
அவர் அன்பர்கள் போற்றிப் பாடுவர்.

ஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்

டிசம்பர் 28

“ஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்” வெளி 7:15

இவர்கள் ஆண்டவர் நிமித்தம் அதிகம் துன்பப்பட்டவர்கள். அவரைப் பிரியப்படுத்தவும், மகிமைப்படுத்தவும் விரும்பியவர்கள். துயரங்களையும், சோதனைகளையும், நோய்களையும், துன்பங்களையும் சகித்தவர்கள். உயிரே போய்விடும் அளவுக்கு வேதனையிருந்தாலும், தேவனைவிட்டு விலகாதவர்கள். விசுவாசத்தோடும், தைரியத்தோடும் பெரு நம்பிக்கையோடும் தேவனுடைய பாதையில் கடந்து போனவர்கள். இந்த அசுத்தமான உலகில் பாவம் பெருகியிருக்கும் பொழுதும் தங்கள் இரட்சிப்பின் ஆடைகளை, தூய வெண்மையாகக் காத்துக் கொண்டவாகள். திறக்கப்பட்ட கல்வாரி ஊற்றில் எப்பொழுதும் தங்களைக் கழுவிக்கொண்டபடியால்தான் பரிசுத்தமாக வாழ்ந்தார்கள். ஆதலால்தான் இவர்கள் சிங்காசனத்தின்முன் நிற்கிறார்கள்.

தேவனக்கு முன் நிற்பதனால் அவர்கள் அலங்கரிக்கப்பட்ட பிள்ளைகளாய், இரவும் பகலும் அவரைப் பணிந்து வணங்கும் பாக்கியம் பெறுகிறார்கள். அவருடைய ஊழியத்தை அன்போடும், வெறுப்பின்றி, சோம்பலின்றி, பாரத்தோடு செய்தபடியால் அவருடைய முன்னிலையிலும் தொழுகையின் ஊழியத்தை செய்யும் பேறு பெற்றவர்கள். தேவனைத் தினமும் சேவிப்பதனால் அவர்களுக்குக் குறைகளே கிடையாது. அவர்களுக்கு இனி பசி தாகமில்லை, கண்ணீரும் துயரமும் இல்லை. காரணம், அவர்கள் சதாவாக தேவனுடன் இருக்கிறார்கள். ஆட்டுக்குட்டியானவரே அவர்களை மேய்த்து அன்புடன் நடத்தி வருகிறார். தாங்கள் எண்ணினதற்கு மேலான பாக்கிவான்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் தேவதூதரோடும் பரிசுத்தர்களோடும் சேர்ந்து தேவனை ஆராதித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

தூயோர் என்றும்
தூயவர் முன்னிலையில்
துயரமேதுமின்றி
துதித்திடுவர் தேவனை

உண்மையுள்ள தேவன்

செப்டம்பர் 30

“உண்மையுள்ள தேவன்” உபா. 7:9

மானிடரில் உண்மையுள்ளவர்களைக் கண்டுபிடிப்பது முடியாத காரியம். ஆனால், நமது தேவன் உண்மையுள்ளவர் என்று நாம் அறிகிறோம். ஆனால் நாம் அவரை நம்பலாம். அச்சமன்றி அவரை நெருங்கித் தாராளமாக அவரிடத்தில் யாவற்றையும் மனம் திறந்து சொல்லலாம். அவர் உண்மையுள்ளவராகையால் நம்மைப் புதியவர்களாக மாற்றுகிறார். நம்மைக் கண்டிக்கிறார். தம்முடைய சித்தத்தை நமக்கு அறிவிக்கிறார். துன்பங்களில் நம்மை ஆதரித்து, நம்முடைய கஷ்டங்களில் நம்மை மீட்கிறார். நமது பகைவரை வென்று அடக்குகிறார். நமது இருளான நேரங்களில் நமக்கு வெளிச்சம் தருகிறார்.

தேவன் உண்மையுள்ளவர் என்பது நமக்குக் கிடைக்கும் தேவ இரக்கத்திலும், நம்மைப் பாதுகாக்கும் கிருபையிலும், நமது குறைகளிலும், நாம் சுமக்கும் சிலுவையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமது மகத்துவங்களை நமக்குக் காண்பிக்கவும், தமது வசனத்தை அதிகாரத்துடன் செலுத்தவும், நம்முடைய வேண்டுதல்களுக்குப் பதிலளிக்கவும் தமது சித்தத்தைச் செயல்படுத்தவும், நமக்கு சகல நன்மைகளைப் பொழியவும் தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். ஏதேன் தோட்டத்திலிருந்து பாவம் செய்த ஆதாமை வெளியேற்றினதாலும், பெருவெள்ளங்கொண்டு பாவிகளான மக்களை நோவாவின் காலத்தில் அழித்ததினாலும், பாவ மக்களை மீட்கத் தமது குமாரனையே தந்ததினாலும், நமது ஆன்மீக வாழ்க்கையில் நம்மைத் தாங்கி திடப்படுத்தத் தம் ஆவியானவைர அருளினதாலும் அவருடைய நீதியும் உண்மையும் விளங்குகின்றன. அவர் நமது அடைக்கலம். கன்மலை. இளைப்பாறுதல். அவர் உண்மையுள்ளவராதலால் நாமும் உண்மையுள்ளவர்களாக இருப்போமாக.

கர்த்தர் மேல் வைத்திடு
உன் பாரமனைத்தையும்
உண்மையுள்ள அவர் தாம்
உன் பளு நீக்கிக்காப்பார்.

தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு

ஏப்ரல் 28

“தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு” 1.பேதுரு 1:5

தேவனுடைய ஜனங்கள் எல்லாரும் தேவன் தங்களைப் பாதுகாப்பது அவசியம் என்று எண்ணி தங்களைப் பாதுகாக்க வேண்டுமென்று ஜெபிக்கிறார்கள். இப்படி ஜெபிப்பது மட்டும் போதாது, வாக்குத்தத்தங்களைப் பற்றிப் பிடித்து, அவைகள் நிறைவேறும் என்று விசுவாசத்தோடு எதிர்ப்பார்த்திருக்க வேண்டும். விசுவாசத்தினால்தான் தேவ வல்லமை நம்மிடமிருந்துப் புறப்படும். விசுவாசத்தினால்தான் தேவ வாக்கைப்பிடித்து கிருபாசனத்துக்குச் சமீபம் சேருகிறோம். மரணத்துக்கும்கூட காக்கப்படுகிறோம்.

அவிசுவாசத்தால் நாம் தேவனைவிட்டு விலகி அலைந்து திரிந்து, பாவத்துக்கும் புத்தியீனத்துக்கும் உள்ளாகிறோம். ஜீவனுள்ள தேவனை விட்;டு விலகுவதற்கு ஏதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களுக்கு இல்லாதபடி எச்சரிக்கையாய் இருங்கள். உங்களில் ஒருவரும் பாவத்தின் வஞ்சனையினால் கடினப்பட்டுப் போகாதபடிக்கு அனுதினமும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். தேவன் நம்மை மிருகங்களைப்போல் அல்லாது புத்தியுள்ள சிருஷ்டிகளாகத்தான் பாதுகாப்பார். அவர் உன்னைச் சவாரி பண்ணுகிறவன் குதிரையைப் போலும் கோவேறு கழுதையைப்போலும் கடிவாளத்தில் இழுக்கிறதுபோல் இழுக்காமல், அன்புள்ள பிள்ளைகளைப்போல் நடத்தி, ஆசையுள்ள சிருஷ்டிகளைப்போல் காப்பார். அவர் வல்லமை உங்களுக்கு அவசியம் வேண்டும். அவர் வல்லமையை நம் பிள்ளைகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார். விசுவாசிகளும் விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் ஜெபிக்கும் போதுதான் அவரோடு பிணைக்கப்பட்டிருக்க முடியும்.

தேவ கரம் என்னைக் காக்கும்
தீய்க்கும் தண்ணீருக்குக் தப்புவேன்
மரணம் என்மீது வரினும்
ஒருகாலும் பயப்படேன்.

கடைசிச் சத்துரு

ஓகஸ்ட் 02

“கடைசிச் சத்துரு” 1.கொரி. 15:26

கிறிஸ்தவனுக்கு அநேகச் சத்துருக்கள் உண்டு. தேவ கிருபையினால் இவன் சகல சத்துருக்களையும் மேற்கொள்ளுவான். அதில் பரிகரிக்கப்பட வேண்டிய கடைசிச் சத்துரு மரணம். மரணம் தான் எல்லா இராஜ்யத்துக்கும் சத்துரு. இது ஞானவான்களையும், தேச தலைவர்களையும், பரிசுத்தரையும் அழித்துப் போடுகிறது. இது சபையின் சத்துரு. இது பக்தியுள்ளவரையும், நன்மை செய்பவரையும், பயனற்றவரையும் நீக்கிப்போடுகிறது. தேவாலயத்துக்கும் சத்துரு இது. பணிவிடைக்காரர்களையும், ஊழியர்களையும், போதிக்கிறவர்களையும், வாலிபரையும் தேவனுக்காய் உழைப்பவர்களையும் மரணம் கொடுமையாக கொண்டுபோய் விடுகிறது. இது குடும்பங்களுக்குச் சத்துரு. தாய் தந்தையையும், மனைவி புருஷனையும், பிள்ளைகளையும் பிரித்துவிடுகிறது. ஊழியர்களையும், பக்திமான்களையும் உலக மனிதரையும் பாவிகளையும் பட்சபாதமின்றி மரணம் விழுங்கி விடுகிறது. நம்முடைய ஆண்டவர் இயேசுவுக்கும் அது சத்துருவாய்தான் இருந்தது.

மரணம்தான் கடைசி சத்துரு.முதல் சத்துரு சாத்தான். இரண்டாம் சத்துரு பாவம். கடைசிய சத்துரு மரணம். இது கடைசியாக நம்மைத் தாக்குகிறது. வியாதியிலும், முதுமையிலும், ஏன் இளமையிலும் மரணம் வந்துவிடுகிறது. இதுவே கடைசியாக அழிக்கப்படுகிற சத்துரு.தேவ தீர்மானத்தின்படி மரணம் கிறிஸ்துவினால் அழிக்கப்பட்டுப்போய்விடும் என்று வாக்களித்திருக்கிறார். பரிசுத்தவான்கள் அதற்காக ஜெபிக்கிறார்கள். அது அழியும் என்று சபையும் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த வசனத்தை நிறைவேற்ற இயேசு கிறிஸ்துவும் வரப்போகிறார். அப்பொழுது அது நிச்சயமாய் அழிக்கப்பட்டுப்போம். பூரணமாய் அழிக்கப்பட்டுப்போம். இப்பொழுதும் பக்திமான்கள் அதன் வல்லமையை எதிர்த்து, அது வர சம்மதித்து முடிவுக்கு வாஞ்சித்து, மகிழ்ச்சியாய் அதற்கு உட்பட்டு, அதன் பிடிக்குத் தப்பி சொல்லமுடியாத மகிமையை அனுபவிக்க எதிர்நோக்கலாம்.

தேவா உமது சாயலை
எனக்களித்துப் போதியும்
அப்பொழுது உம் சமுகம்
கண்டு என்றும் களிப்போம்.

Popular Posts

My Favorites

கர்த்தர் நன்மையானதைத் தருவார்

மார்ச் 31 "கர்த்தர் நன்மையானதைத் தருவார்." சங். 85:12 நலமானது எதுவோ அதைக் கர்த்தர் நமது ஜனத்திற்குத் தருவார். நம்மை ஆதரிக்க உணவையும், பரிசுத்தமாக்க கிருபையையும், மகுடம் சூட்டிக்கொள்ள மகிமையையும் நமக்குத் தருவார். தலமானதை மட்டும்தான்...

நானே வழி