தினதியானம்

Home தினதியானம்

அவனைக் கனப்படுத்துவேன்

ஜனவரி 07

“அவனைக் கனப்படுத்துவேன்”  சங். 91:15

என்னைக் கனப்படுத்துகிறவர்களை நான் கனப்படுத்துவேன். தற்பெருமை கர்த்தரைக் கனவீனப்படுத்தி நமக்குக் குறைவையும் அவர்கீர்த்தியையும் உண்டாக்குகிறது. தன்னை வெறுத்தலே மேன்மைக்கும் கனத்துக்கும் வழி நடத்தும். கிறிஸ்தவன் தன்னை வெறுத்து தன் கண்களையும் மனதையும் இரட்சகர்மேல் உறுதியாய் வைப்பானானால் கர்த்தர் அவனைக் கனப்படுத்துவார். அப்பொழுது அவன் வருத்தங்களை பொறுமையோடு சகித்து மற்றவர்கள் சொல்லும் நிந்தைகளையும் பழிச்சொற்களையும் நிராகரித்து துன்பநாளிலும்கூட பிதாவின் முகமலர்ச்சியை அனுபவிப்பான். கர்த்தரோ அவனைச் சந்தித்து அவனுடன் இனிமையாய்ப் பேசி அவனைச் சூழ்ந்திருக்கும் சகல துன்பங்களையும் மறந்துவிடும்படி செய்து அவன் வாழ்க்கையின்மேல் நோக்கமாயிருப்பார். வியாதியில் ஆற்றித்தேற்றி சுகத்தில் அவனை நடத்திக்கொண்டு போவார். வறுமையில் திருப்தியைக் கொடுத்து வாழ்வில் அவனுக்கு உதாரகுணத்தைத் தருவார். வாழ்நாளில் அவனுக்கு வேண்டியதைத் தந்து அவனை ஆதரித்து மரணத்தில் உயிர்ப்பித்து தம்மண்டையில் ஏற்றுக்கொள்வார். உயிரோடிருக்கும்போது ஆசீர்வாதமாயிருந்து மரித்த பிறகு சிங்காசனத்துக்கு அருகில் வைக்கப்படுவான்.

அன்பானவர்களே! உங்களை வெறுத்து மாம்சத்தை வென்று உலகத்துக்கு மேலாக எழும்பி விசுவாசத்தினால் வாழ்ந்து தேவனுடன் சஞ்சரித்துக் கர்த்தரைக் கனம்பண்ணுங்கள். அவரும் உங்களைக் கனப்படுத்துவார். உங்களின் கவலைக்குரிய காரியங்களை அவருக்கு ஒப்புவித்துப் பாருங்கள். அவருடைய இராஜ்யத்தையும் மகிமையையும் விரிவடையச் செய்யப் பாருங்கள். அப்போது தேவன் உங்களை ஆசீர்வதித்து மன்னாவால் உங்களைத் திருப்தியாக்குவார் என்று அறிவீர்கள்.

என் நிமித்தம் இம்மையில்
தன்னை வெறுப்பவன்
எனதன்பை ருசித்து
என் மகிமையை காண்பான்.

எப்பொழுது என்னிடத்தில் வருவீர்

ஓகஸ்ட் 03

“எப்பொழுது என்னிடத்தில் வருவீர்.” சங். 101:2

தேவனுடைய சமுகம்தான் தேவ பிள்ளைக்குப் பரவசம். இதை விட அவர்களுக்குப் பெரிய சந்தோஷம் கிடையாது. அவர்கள் விரும்புகிறபொருள் அவர்தான். இதுவே அவர்களின் சந்தோஷத்தின் ஊற்று. அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு ஜீவனும் அவரே. அவர் இருந்தால் எல்லாமே இன்பம்தான். அவரின்றி அவர்களுக்குத் திருப்தியே கிடையாது. ஆத்துமாவிற்கு அமைதியே கிடையாது. இதற்கு அநேக காரணங்கள் உண்டு. அவருடைய தயவுதான் அவர்களுக்கு ஜீவன். அவரோடு ஐக்கியப்படுவதுதான் அவர்களுக்குப் பொக்கிஷம். அதுவே அவர்கள் சமாதானம். நேசரின் சமுகத்தில் நிறைவான சந்தோஷமும், இளைப்பாறுதலும், ஜெயமும் உண்டு. அவர் இருந்தால் அவர்களின் பரிசுத்தம் விருத்தியடையும். அவர்களின் விசுவாசம் பெருகும். கிருபை என்னும் கனி பழுக்கும். அவர்களின் பக்தி மேன்மையானது என்று அது ரூபிக்கிறது. அப்படிப்பட்ட நேரங்களில்தான் கர்த்தர் தமது ஜனத்தை சந்திக்கிறார். ஆனால் அவர்கள் சில சமயங்களில் அவருடைய சமுகத்தை இழந்து விடுகிறார்கள். ஆனால் ஒருமுறை அனுபவித்தபடியால் அதன்மேல் திரும்பவும் வாஞ்சை கொள்கிறார்கள். அப்படி வாஞ்சித்து, கெஞ்சி வருத்தப்படுகிற ஆத்துமா திருப்தியடையாமல் போகாது.

என் சிநேகிதரே, தேவ சமுகத்தை நீ ருசித்ததுண்டா? அதை அனுபவித்ததுண்டா? இன்று அதில் நீ இருந்ததுண்டா? இதைவிட உனக்கு உதவி செய்வது தேறொன்றுமில்லையே. தாவீதுபோல் என் ஆத்துமா உம்மை தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறதென்றும்ஈ என்னிடத்தில் எப்போது வருவீர் என்றும், நான் பிழைத்து இருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக. உமது வேதம் என் மனமகிழ்ச்சி என்று நீர் சொல்கிறவரா? இப்படி ஒருவேளை நீர் தேவ சமுகத்தைக் குறித்து கவலையற்றவரானால் நீர் தேவனுக்கு அந்நியனே.

கர்த்தாவே உமதுமேல்
என் ஆவி வாஞ்சைக் கொள்கிறது
நீரே என்னை நிரப்பும்
என் தாகத்தைத் தீர்த்திடும்.

பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம்

யூலை 30

“பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம்” 1.சாமு.15:22

சடங்குகளைப் பெரிதாக எண்ணுவது மனித இயற்கை. இஸ்ரவேலரும் அப்படியே செய்தார்கள். எண்ணிக்கையற்றோர் இன்றும் அப்படி செய்கிறார்கள். ஆனால் அதைவிட கிறிஸ்து முடித்த கிரியையினால் ஜீவனும் சமாதானமும் கிடைக்கும் என்று நம்பி, தேவனை நேசிக்கிற நேசத்தால் உந்தப்பட்டு வேதப்பிரமாணங்களைக் கைக்கொள்ளுவதே தேவனுக்குப் பிரியம். கீழ்ப்படிகிறதுதான் பலியைப் பார்க்கிலும் உத்தமம். கீழ்ப்படியும்போது நமக்கு நியாயமாய் தோன்றுகிறதை தள்ளி, மனட்சாட்சியின்படி தேவனுடைய சித்தத்துக்கு கீழ்ப்படிந்து, அதற்கு இணங்கி முழுமனதோடு அந்த அதிகாரத்திற்கு கீழ் அடங்க வேண்டும். அப்படிப்பட்ட கீழ்ப்படிதல்தான் எல்லா பலியைப் பார்க்கிலும் உயர்ந்தது. இப்படி கீழ்ப்படியும்போது அவர் ஞானமும், தயவும் உள்ளவர் என்று அறிக்கையிட்டு அவருடைய சித்தத்திற்குச் சந்தோஷமாய் இணங்குகிறோம்.

இப்படி நாம் கீழ்ப்படிவது தேவனுக்குப்பிரியமாய் இருக்க வேண்டுமானால் நாம் தேவ வசனத்துக்கு ஒத்து, உத்தமமாயும், தாழ்மையாயும் எப்போதும் மாறாமலும் இருக்கவேண்டும். அப்போது தான் நாம் செலுத்தும் எந்தக் காணிக்கையிலும் நாம் சிக்கக்கூடிய எந்த வருத்தத்திலும் அது அதிக நலமாய் இருக்கும். பிதாவைப்போல நாம் இயேசுவை நேசித்தாலும் அவருக்கு மனப்பூர்வமாய் கீழ்படிய வேண்டும். அவர் அருளிய வாக்குத்தத்தங்களை நம்புகிறதோடு அவர் அதிகாரத்தையும் மதிக்க வேண்டும். பிதாவின் நேசத்தை ருசிக்கிற பிள்ளைகளைப்போல் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவர் நமக்குச் செய்யும் நன்மைகளுக்குப் பதிலாக நாம் அவருக்குக் கீழ்ப்படியாமல் கிறிஸ்துவை நேசிக்கிறோம் என்பதற்கு சாட்சியாகவும் அவரோடு ஐக்கியப்படுகிறோம் என்பதற்கு நற்பலனாகவும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

பரம ஞானம் தந்தும்மை
பிரியப்படுத்தச் செய்திடும்
விருப்பத்தோடு செய்கையும்
என்னில் உண்டாக பண்ணிடும்.

கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருக்கிறார்

யூன் 29

“கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருக்கிறார்.”  கொலோ 1:27

தேவபிள்ளைகளுடைய நம்பிக்கை மகிமையைப் பற்றினது. அந்த நம்பிக்கையின் தன்மை நமக்குப் புரியாத ஒன்றாய் இருக்கலாம். அந்த மகிமையின் மகத்துவம் நமக்கு விளங்காததுப்போல் இருக்கும். அதில் சுதந்தரம் ஓர் இராஜ்யம், கிரீடம், சந்தோஷம் ஆகியவை அடங்கியிருக்கின்றன. அது மகிமையின் கிரீடம். கனமகிமை, நித்திய மகிமை. நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் மகிமை, நம்மை உடுத்துகிற மகிமை. நமக்குள் இருக்கும் மகிமையும், வல்லமையும், ஞானமும், அறிவும் சேர்ந்திருக்கும் மகிமை. அது சரீரத்தைப் போற்றி ஆத்துமாவை நிரப்பும். அந்த மகிமை நமக்குள் இருக்கும் மகிமை. அது வெளிப்படக் காத்திருக்கிறது.

இந்த நம்பிக்கை அல்லது எதிர்பார்க்குதல் கிருபையில் ஆரம்பித்து, பரிசுத்த ஆவியானவரால் உண்டாகி, விசுவாசத்தினால் பெருகி, தேவவாக்கையும், ஆணையையும் பிடித்து, தேவன் குறித்த காலத்திற்காக காத்திருந்து அதைப் பெற்றவனைச் சுத்திகரிக்கிறது. கிறிஸ்து நம்மில் இருப்பதுதான் இந்த நம்பிக்கையின் அத்தாட்சி. தேவன் தம்முடைய ஜனங்களில் தம்முடைய வசனத்தைக் கொண்டும், கிருபையைக் கொண்டும், தம்முடைய வசனத்தைக் கொண்டும், வாசம் செய்கிறார். ஓர் அரசனைப்போல் நம்மில் ஆட்சி செய்கிறார். குடும்பத்தில் தலைவனைப்போல் கண்காணிக்கிறார். வீட்டில் எஜமானனைப்போல் எல்லாவற்றையும் தம்முடையதாக்குகிறார். மரத்தின் சாரத்தைப்போல் வளரப்பண்ணுகிறார். ஆகவே நமது ஆலயத்தில் உள்ள தேவனைப்போல் நாம் அவரை ஆராதிக்க வேண்டும். கிறிஸ்து உங்களில் வாசம்பண்ணினால் உங்கள் எண்ணங்களிலும், விருப்பங்களிலும், பாசங்களிலும், நோக்கங்களிலும் அவர் வாசம் செய்ய வேண்டும். உங்களுக்கு மகிமை கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கு உண்டா? நீங்கள் எதிர்பார்க்கிற மகிமை தேவனோடு ஐக்கியப்படுகிறதா?

என்னில் தங்கும் இயேசுவே
நீர் சொல்லி முடியாத ஈவே
மோட்ச நம்பிக்கை தாரும்
அவ்வடையாளம் வேணும்.

மன்னிக்கிறவர்

மார்ச் 23

“மன்னிக்கிறவர்.” சங். 86:5

கர்த்தர் இரக்கத்தில் பிரியப்படுகிறவராகவும், கோபத்திற்கு ஆத்தரப்படாதவராகவும், மன்னிக்கிற தேவனாகவும் வெளிப்படுகிறார். இது உண்மையானபடியால் இதை எப்போதும் நாம் விசுவாசிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் மன்னிப்பைத்தேடி எதிர்நோக்கிப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவரை நம்பி துக்கப்பட்டு அறிக்கையிடுகிற யாவருக்கும் கர்த்தர், அதை மன்னிக்க மனதுள்ளவரும், பின்வாங்காதவரும் ஆவார். ஆண்டவரின் நாமத்தில் அவரிடத்தில் வருகிற ஒவ்வொருவருக்கம் மன்னிப்பளிக்கும்போது தம்முடைய வசனத்துக்கு உண்மையுள்ளவராகவும், தமது குமாரனுடைய இரக்கத்தின்படி நியாயஞ்செய்கிறவராகவும் வெளிப்படுகிறார். அவன் மன்னிக்கிறவரானதால் நாம் பயப்படதேவையில்லை. மனம் கலங்க அவசியமில்லை. இந்த விஷயத்தில் கிறிஸ்துவைச் சந்தேகிப்பது பாவமாகிவிடும். ஆகையால் மகாபாவியையும் குறைவின்றி மன்னிக்க ஒரு வழியை ஏற்படுத்தியுள்ளார். பாவிகளாம் நம்மை மன்னித்து சேர்த்துக்கொள்ள, தம் அன்புள்ள ஒரே பேறான குமாரனைப் பிராயச்சித்த பலியாய் ஒப்புக்கொடுத்ததால் மன்னிக்க ஆயத்தமுள்ளவர் என்பதைக் காட்டினார்.

பிராயச்சித்தமின்றி மன்னிப்பு கிடையாது. அவர் செய்யக் கூடியதை எவ்விதமும் செய்வார். இயேசுவின் பிராயச் சித்தத்தின்படி தேவன் எவ்விதப் பாவிக்கும் பூரணமாய், சுலபமாக அனுதினமும் மன்னிப்பு அளிக்கு முடியாது. இந்த இரவிலும் இந்த நாளின் பாவங்களையும் முந்தின எல்லாப் பாவங்களையும் நமக்கு மன்னித்து, இந்த நேரத்திலேயே தர ஆயத்தமாய் இருக்கிறார். இது எவ்வளவு பெரிய சத்தியம்.

மரித்துயிர்த்த இயேசுவை
விசுவாசத்தால் நோக்குவோம்
அப்போது நீதிமான்களாகி
பரத்தில் சேர்ந்து களிகூறுவோம்.

அதின் கனி வாய்க்கு மதுரமாயிருக்கிறது

டிசம்பர் 04
“அதின் கனி வாய்க்கு மதுரமாயிருக்கிறது” உன். 2:3

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருமை, வார்த்தைகளில் அடங்காது. அவருடைய சிறப்பான குணங்களை நம்மால் சொல்லி முடியாது. அவருடைய தன்மைகளை விளக்கிக்காட்டப் பலவிதமான உதாரணங்களும், ஒப்புமைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. அவருடைய மகத்துவங்களனைத்தையும் அறிய வேண்டுமானால், அவருடைய அன்பில் நம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவருடைய மகிமையைக் காண விரும்பும் எவரும் அவரின் பாதத்தில் காத்திருப்பார்கள். இங்கே காட்டு மரங்களில் கிச்சிலி மரங்கள்போலவும், குளிர்ந்த நிழலைப்போலவும், இனிய கனி தருபவைகளாகவும் ஆண்டவர் வர்ணிக்கப்பட்டிருக்கிறார். அவர் தரும் கனி நமது வாய்க்கு இனிமையாயிருக்கிறது. அவர் கொடுக்கும் கனிகளில் அவரின் வாக்குகளும், அவர் அருளும் மன்னிப்பும், அவரின் ஓப்புரவாக்குதலும், சமாதானமும், ஐக்கியமும், அவருடைய அன்பின் நிச்சயமும், அவருடைய தூய மகிழ்ச்சியும், நித்திய வாழ்வைப்பற்றிய நம்பிக்கையும், தேவ சமுக மகத்துவத்தைப்பற்றின காரியங்களும் உள்ளடங்கியிருக்கின்றன. பரம சிந்தையுள்ளவர்களுக்கு இந்தக் கனிகள் இன்பத்தைக் கொடுக்கின்றன. வாழ்க்கையின் பெரும் புயலுக்கு தப்பி, கொடுமைகளான வெயிலுக்கு மறைவாக அவரால் கிருபை பெற்றவன் பாக்கியவான். இந்த இரட்சிப்பின் கனியை உண்பவன் பேறு பெற்றோன். அவனுடைய ஆத்துமாவுக்கு ஆண்டவர் இனிமையானவர். இக்கனி அவர்களுக்கு இனிமையாயிருப்பதால், பாவம் கசப்பாயிருக்கிறது. இவ்வுலக ஞானம், இன்பம், வீண் வேடிக்கை அனைத்துமே பைத்தியமாகத் தோன்றும். பாவத்தினாலுண்டாகும் இன்பம் அவனுக்கு வெறுப்பாகும்.

பரம விருந்தின் இன்பம் பாக்கியமே
பரம நாட்டின் நிழல் இன்பமானதே
பரம நாட்டின் கனிகள் அருமருந்தே
பரம நாட்டிற்கெனை கொண்டு சேரும், ஆண்டவரே.

பிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார்

யூலை 31

“பிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார்” யோவான் 15:21

இயேசு நேசிக்கிற சகலரையும் தேவன் நேசிக்கிறார். அவர்கள் யார்? அவருடைய வசனத்தைப் பிடித்து, அவர் புண்ணியத்தின்மேல் சார்ந்து, அவருடைய நாமத்தை நம்பி, அவரின் நியமங்களுக்குக் கீழ்ப்படிந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு அவரே தங்கள் ஆத்துமாவுக்கு அருமையானவர் என்று காண்பிப்பவர்கள். இப்படிப் பட்டவர்களையே பிதாவானவர் நேசிக்கிறார். இந்த அன்பில் இவர்களைப்பற்றி தேவன் கொண்டிருக்கும் அளவற்ற எண்ணமும், பிரியமும், அதிகம் அடங்கியிருக்கிறது. இவர்களைச் சிநேகித்து நன்மை செய்யவும், அவர்களை ஆசீர்வதிக்கவும், அவர் எவ்வளவோ மனதுள்ளவராயிருக்கிறார். தேவன் இப்படி நோக்கங்கொண்டு சிநேகித்து குமாரன் முடித்த மகிமையான கிரியையில் இதை நிறைவேற்றினார்.

அவர் அன்பு நித்தியமானது. மாறாதது. சுயாதீனமுள்ளது. அதற்கு சாட்சியே அவர் செய்த உடன்படிக்கை. தமது குமாரனைத் தந்த ஈவு, ஆவியானவரைக் கொடுப்பேன் என்ற வாக்குத்தத்தம், ஆவிக்குரிய நன்மையான வேதவசனம், மகிமையின் நாம் ஜெபிக்கும்போது இதை மறக்காது நம்புவோமா. அவர் சித்தம்படி செய்யவும், சகிக்கவும் மனதாயிருப்போமா, கர்த்தர் சிநேகிக்கிற சகலத்தையும் நாடி, பாவிகள்மேல் மனதுருகி, அவர்களோடும், அவர்களுக்காகவும் வேண்டிக்கொள்வோமாக. தேவனை தேடுகிற ஒவ்வொருவரையும் பார்த்து அவர் உங்களை நேசிக்கிறார் என்று சொல்லி உற்சாகப்படுத்துவோமாக. தேவன் நம்மை நேசிக்கிறபடியால் சபையில் விருத்தியையும் ஐக்கியத்தையும் பரம சித்தத்தையும் நாடித் தேடுவோமாக.

நாம் கெட்டுப்போய் இருக்கையில்
சுதனைக் தந்தவர் பிதா
ஆவியும் அவர் ஈந்ததால்
அவரை என்றும் போற்றுவோம்.

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்

மே 24

“‘விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.” கலா. 3:11

விசுவாசத்தினால்தான் அவர்கள் நீதிமான்களாகிறார்கள். பாவத்தைப்பற்றி உணர்வடைந்தவர்களானதால் தங்கள் பெலவீனத்தை உணர்ந்து¸ சுவிசேஷத்தை அறிந்து¸ கிறிஸ்துவின் கிரியைகளைப் பற்றி பிடித்து கொள்ளுகிறார்கள். அவரின் நீதி அவர்களுடையதானபடியால் எல்லா குற்றத்திற்கும் நீங்கலாகுகிறார்கள். நீதிமான்களாக்கப்பட்டு பிழைத்திருக்கிறார்கள். அதாவது ஆக்கினையினின்று விடுவிக்கப்பட்டு¸ சகல ஞான நன்மைகளுக்கும் உரியவர்களாகி சுயாதீனராய் நடக்கிறார்கள். விசுவாசத்தினால் அவர்கள் பிழைக்கிறார்கள். விசுவாசத்தினால் தங்கள் சத்துருக்களை மேற்கொள்ளுகிறார்கள். விசுவாசத்தினால் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள். விசுவாசத்தினால் தேவனோடு சஞ்சரிக்கிறார்கள்.

தேவ குமாரன்மீதுள்ள விசுவாசத்தினாலேதான் அவர்கள் இவ்வுலகத்தில் ஜீவிக்கிறார்கள். அவர்கள் வேதத்தின் வார்த்தைகளைப் பற்றிப்பிடித்து அவருடைய கிரியையின்மேல் மட்டும் சாய்நது¸ அவர் சத்தியத்தின் பேரில் நம்பிக்கை வைத்து அவரின் நிறைவிலிருந்து தங்களுக்கு வேண்டியதெல்லாம் பெற்றுக்கொள்கிறார்கள். வருவாய்க்காக அல்ல¸ அன்பினால் ஊழியம் செய்கிறார்கள். கூலி வாங்கும் வேலைக்காரர்கள் போலல்லாமல் பிதாவின் வீட்டில் உள்ள பிள்ளைகளாய் வேலை செய்கிறார்கள். இவர்கள் தேவனை நம்பிப் பெற்றுக்கொள்ளாதபோதும் கொடுப்பாரென்று எதிர்ப்பார்த்து¸ வாக்களிக்கப்பட்டது தாமதிக்கும்போதும் அதற்காக காத்திருக்கிறார்கள். எல்லாம் இருளானாலும்¸ மனதுக்கு வருத்தமானாலும் இவர்கள் முன்னேறி செல்கிறார்கள். சில வேளைகளில் அவர்களுக்கு இருக்கிறதெல்லாம் அவருடைய வாக்குத்தத்தம்தான். எல்லாம் குளிர்ந்து விறைத்து செத்துப்போனதுபோல உள்ளே காணப்பட்டாலும் புறம்பே எல்லாம் அவர்களுக்கு மாறாகக் காணப்பட்டாலும்¸ அச்சூழ்நிலையிலும் அவர்கள் தேவனை நம்பி¸ தங்கள் ஆண்டவரை உறுதியாய்ப் பிடிக்கிறார்கள்.

யாரை விசுவாகித்தேனென்று
நான் அறிவேன் அது நல்லது
நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை
பாதுகாத்திடுவார் எந்நாளும்.

நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடேன்

ஏப்ரல் 11

“நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடேன்” எசேக். 20:3

இந்த ஜனங்கள் தங்களை உத்தம மார்க்கத்தாரென்று சொல்லிக் கொண்டு பாவம் செய்தவர்கள். இப்படிப்பட்டோர் தேவனுடையப் பார்வையில் மகா அருவருப்பானவர்கள். இவர்களைத் தேவன் தம்முடன் ஐக்கியப்பட இடங்கொடார். என் இருதயத்தில் அக்கிரம சிந்தை வைத்தேனானால் தேவன் எனக்குச் செவி கொடார். வேதத்தை கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபம் அருவருப்பானது.

உன்னுடைய இருதயம் உத்தமமாய் இருக்கிறதா? உன் நடக்கை உண்மையுள்ளதா? நீ பாவத்தை நேசித்து, அதைச் செய்து, சாக்கு போக்குச் சொல்லுவாயானால் தேவன் உன்னுடன் ஐக்கியப்படார். உன்னைக் கழுவி சுத்திகரி என்பார். பாவம் ஆத்துமாவிற்குத் தீட்டு. பரிசுத்தம்தான் ஆத்துமாவிற்கு சுத்தரங்கம். பாவிகள் தீட்டுள்ளவர்கள். தேவன் அவர்களை வெறுக்கிறார். தன்னைப் பரிசுத்தவானென்று சொல்லி பாவம் செய்பவரைப்போல் அருவருப்பானவர்கள் வேறு யாரும் இல்லை. பாவம் உனது ஊழியத்தை கெடுத்துப் போடும். குறிப்பாய் நீ ஒரு பாவத்தை இன்னும் விடாதிருப்பாயானால், உன் ஊழியத்தை இன்னும் தள்ளிப்போடுவார். பாவத்தோடு உன் ஜெபத்தைக் கேளார். பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவனானபடியால் அவர் உன்னை அருவருத்துத் தள்ளுவார். இயேசுவானவர் பாவத்திற்கு ஊழியம்செய்ய மாட்டார். அக்கிரமத்துக்கு உடந்தையாக தம் கிரியையைபை; பிரயோகிக்கமாட்டார். நாம் கிருபையினால் நீதிமான்களாக்கப்பட்டு, சத்தியத்தினால் பரிசுத்தராக்கப்படகிறோம். நம்முடைய இருதயம் பாவத்திற்கு பகையாக இருக்கும்போதுதான் நம் ஜெபம் கேட்கப்படும். அன்பர்களே! பாவத்துக்கு இணங்க சோதிக்கப்படும்போது நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடேன் என்று தேவன் சொல்வதை நினைத்துக் கொள்வோமாக.

கர்த்தாவே என்னைக் கழுவும்
உள்ளத்தைச் சுத்திகரியும்
கிருபையின் ஆவி அளித்து
என்னைப் பரிசுத்தமாக்கும்.

தேவப்பிரியர்

யூன் 09

“தேவப்பிரியர்.” ரோமர் 1:2

தேவப்பிரியர் இன்னாரென்று எப்படித் தெரியும். இயேசுவில் அவர்கள் வைக்கும் விசுவாசத்தினாலும் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதனாலும் தெரியும். தேவப்பிரியர் என்ற பெயர் கிடைப்பது பெரிய சிலாக்கியம். இதுவே எல்லா நன்மைகளுக்கும் காரணம். தேவப்பிரியர் என்பது தேவனை சிநேகிப்பதினாலும் அவருடைய மகிமைக்காக வைராக்கியம் காட்டுவதினாலும் தெரிந்துக்கொள்ளக்கூடியது. அவரின் சித்தம் செய்து பொறுமையாய்ச் சகிக்கிறதினாலும் தெரிந்துக்கொள்ள முடியும். அவர்களுக்குக் கிடைக்கும் மேன்மை என்ன? அவர்கள் தேவனுடையப் பிள்ளைகளாகிறார்கள். இயேசுவுக்குச் சகோதரராக ஒப்புக்கொள்ளப்படுகிறார்கள். தேவனுக்குக் கூட்டாளிகளாக அவரோடு சஞ்சரிக்கிறார்கள். அவர்களுக்குள் ஆவியானவர் தங்கியிருக்கிறார்.
திவ்ய செயல், அவர்களைத் தற்காத்து அவர்களுக்குத் துணை நின்று அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் சுதந்தரித்து வைத்திருக்கிறது. தேவத்தூதர்கள் அவர்களுக்குப் பணிவிடை செய்கிறார்கள். இவர்கள் சகலத்திற்கும் சுதந்தரவாளிகள். இவர்களுக்குக் கிடைப்பது என்ன? வெற்றி. எல்லா சத்துருக்களின் மேலும் ஜெயம். எல்லா அடிமை நுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு வியாதிகளிலிருந்து சுகம் அடைவர்.

பரிசுத்த பாக்கியத்தைத் தேவனோடுகூட அனுபவித்து இயேசுவைப்போல் இருப்பார்கள். மகிமையின் சிங்காசனம், அலங்காரமான கிரீடம், மோட்சானந்த கின்னரம் அவர்களுக்குக் கிடைக்கும். இவர்கள் செய்ய வேண்டிய கடமை, தேவனுக்காகவும் அவர் ஊழியத்திற்காகவும் தீர்மானமாய் பிரயாசப்படுதல் வேண்டும். முழுவதும் தேவனுக்கும் அவர் ஊழியத்திற்கும் தங்களை ஒப்புவிக்கவேண்டும். அவர் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நியமங்களை நேசித்து நடக்க வேண்டும். அவருடைய சித்தத்தைப் பெரிதாக மதித்து, சகலத்திலும், அவருடைய ஜனங்களுக்கு ஒத்து நடக்க வேண்டும். இதை வாசிக்கிறவரே, நீர் தேவனுக்குப் பிரியமானவர்தானா? நீர் அவரை நேசிக்கிறீரா? அவரோடு சஞ்சரித்து வருகிறீரா?.

இயேசுவின் நாமத்தில் எழுந்து
அவர் கைமேல் சார்வேன்
அவர் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து
என் அன்பைக் காண்பிப்பேன்.

Popular Posts

My Favorites

கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராய் இரும்

அக்டோபர் 18 "கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராய் இரும்" சங். 30:9 நமது வாழ்க்கையில் எப்பொழுதும் நமக்குத் தேவ ஒத்தாசை தேவை. நமக்குச் சாயம் செய்பவர் கர்த்தரே. அவர் நமக்குச் சகாயம் செய்ய நாம் அவரைக் கருத்தால் வேண்டிக்கொள்ள...