என் ஆத்துமா ஆறுதலடையாமல் போயிற்று

ஓகஸ்ட் 19

“என் ஆத்துமா ஆறுதலடையாமல் போயிற்று” சங்.77:2

கர்த்தர் தமது ஜனத்திற்கு தேவையானதும் போதுமானதுமான ஆறுதலைச் சவதரித்து வைத்திருக்கிறார். தம் பிள்ளைகளின் அவசர நேரத்தில் தேவைப்படுகிற ஆறுதல் சொல்பவர்களை அனுப்பி வைக்கிறார். ஆனால் சில வேளைகளில் அவர்கள் ஆறுதல் மொழிகளைக் கேட்க மறுக்கின்றனர். ஒருவேளை தேவன் அவர்கள் விக்கிரமாகப் பாவித்த ஒன்றை அவர்களிடமிருந்து எடுத்துப்போட்டிருப்பார். விசுவாசத்தினால் ஜீவனம்பண்ணும்படி தம் முகத்தை மறைத்திருக்கலாம். அல்லது இவ்வுலக காரியங்களில் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கலாம். தாங்கள் நம்பியிருந்தவற்றின்மேல் மாயை என்று எழுதி இருக்கலாம். யோனாவைப்போல் இவர்கள் கோபத்திற்கு இடம் கொடுத்து இருப்பார்கள்.

அல்லது பெருமை தங்களிலே ஆளும்படி இடம் கொடுத்திருப்பார்கள். ராகேலைப்போல கவலைக்கும் அதிகம் இடங்கொடுத்திருப்பார்கள். அல்லது சோதனைக்குள் விழுந்திருப்பார்கள். தவறுகளை அதிகம் செய்திருப்பார்கள். இது முழுவதும் தவறு. சுவிசேஷத்தில் உனக்கு இருக்கும் பாக்கியத்தைப் பார். மோட்சத்தின் மேன்மையைப் பார். சங்கீதக்காரன் இவ்வாறு தன்னையே நோக்கி, தன்னைத் தேற்றிக் கொண்டான். தன் பாவத்திற்காகத் துக்கப்பட்டான். தன் எண்ணத்தையும், நடத்தையையும் சீர்திருத்திக் கொண்டான். நமக்குப் போதனையாகவும், எச்சரிப்பாகவும் விழிப்பு உணர்ச்சி ஏற்படவும் இந்தச் சங்கீதத்தை எழுதியிருக்கிறான். ஆறுதலைப் பெறக்கூடியவர்களும் தங்குள் தவறுகளால் ஆறுதலை அனுபவியாமல் போகிறார்கள். கர்த்தரின் ஜனங்கள் அடிக்கடி தங்களையே வாதித்துக் கொள்கிறார்கள். ஆறுதலின் பாத்திரத்தைத் தங்களைவிட்டு அகற்றி தாங்கள் அதற்குப் பாத்திரர் அல்ல என்கிறார்கள்.

சகல நன்மைக்கும் ஊற்றே
துக்கம் நீங்கி ஆற்றிடும்
மறுமையில் சேரும்போது
வாழ்ந்தென்றும் சுகிப்பேன்.

முழுக்குடும்பத்துக்கும்

ஓகஸ்ட் 24

“முழுக்குடும்பத்துக்கும்” எபேசி. 3:14

கிறிஸ்துவின் சபை ஒரு குடும்பம். இந்தக் குடும்பத்தின் ஒரு பங்கு பூலோகத்திலும், மறுபங்கு பரலோகத்திலும் இருக்கிறது. ஒரு பங்கு இன்னும் தோன்றவில்லை. இக்குடும்பம் முழுவதற்கும் பிதாவானவரே தேவன்.தேவன் தன் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு பிள்ளையையும் காப்பாற்ற அவர்கள்மேல் மனதுருகுகிறார். ஒவ்வொருவரையும் அருமையானவர்களாய் எண்ணுகிறார். ஒருவனையும் அவர் தள்ளமாட்டார். இயேசு எல்லாருக்கும் பரிகாரியாக இருப்பதால், பிணையாளி ஒருவன் இல்லை என்று முறையிட அவசியம் இல்லை. ஒரு குடும்பமாக நம்மை ஏற்றுக்கொள்ள நாம் பரலோகத்தின் தூதர்களிலும் மேற்பட்டவர்களல்ல. அவர் முழு குடும்பத்தையும் ஒன்றுபோல் நேசித்து, மீட்டு, புத்திரசுவிகாரமாக்கினார்.

தமது சபையை முழுவதும் பரிசுத்தமும், பாக்கியமுமாக்கும்படி நிர்ணயத்திருக்கிறார். குடும்பத்தினரின் ஒவ்வொருவருடைய பேரும் ஜீவ புத்தகத்தில் எழுதியிருக்கிறது. இவர்களை இரட்சகர் தமது உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிறார். பரலோகமே இந்தக் குடும்பத்தின் வசந்த மாளிகை. நம்முடைய பிதாவின் வீடு. பிதாவானவர் நமக்குக் கொடுத்த ஈவு. நமக்காக உலகம் உண்டாகும்முன்னே அவர் ஆயத்தப்படுத்தியிருக்கிறார். அதைச் சந்தோஷமாக நமக்குக் கொடுக்கிறார். நாம் எல்லாரும் கிறிஸ்துவுக்குள் ஒன்று. ஒரே குடும்பம். இந்த ஆவியின் ஐக்கியத்தைச் சமாதானத்தோடு பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்குச் செய்தது நமக்குச் செய்ததென்று இரட்சகர் சொல்கிறார்.தேவ பிள்ளைகளைச் சேதப்படுத்துவது இரட்சகரையே சேதப்படுத்துவதாகும். தலையானது அவயங்களோடு சேர்ந்து துன்பத்தைச் சகிக்கிறது. பிதாவானவர் குடும்பத்தோடு இணைந்து செயல்படுகிறார்.

கர்த்தாவே நான் உம்முடையயோன்
என்று சொல்ல செய்யும்
நீர் என் சொந்தம் என்
ஆத்துமா பிழைத்து வாழ்ந்திடும்.

தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்

ஓகஸ்ட் 04

“தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்” யோபு 11:5-6

யோபின் சிநேகிதர் அவன் நிலமையை புரிந்துக்கொள்ளவில்லை. அவர்கள் சொன்ன நியாயங்கள் அவன் மனதில் தங்கவில்லை. அவனுக்கு அவைகள் தெரிய வேண்டுமென்று அவர்களில் இவன் ஒருவன் விரும்பினதால், தேவன் பேசினால் நலமாய் இருக்கும் என்று வாய்விட்டுச் சொன்னான். இப்படித்தான் விசுவாசியும் கடைசியில் சொல்லுகிறார். யாரிடத்தில் தேவன் பேசினால் நலமாய் இருக்குமென்று விரும்புகிறோம்? நம்மிடத்தில்தான் அவர் பேசவேண்டும். அப்போதுதான் அவரின் அன்பு நம்மிடத்தில் இருக்கிறதென்று ஒரு நிச்சயம் உருவாகும். நமது வருத்தங்கள் விலகும். சத்தித்தில் நாம் நிலைப்படுவோம். பாவிகளிடத்தில் அவர் பேச வேண்டும். அப்போது அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். மனந்திருப்பி கர்த்தர் பட்சம் சேருவார்கள். துக்கப்படுவோரிடம் அவர் பேச வேண்டும். அப்போது அவர்கள் தேற்றப்படுவார்கள். சுயாதீனம் அடைவார்கள். பின்வாங்கி போனவர்களோடு அவர் பேசவேண்டும். அப்போது அவர்கள் திரும்பவும் பரிசுத்தர்களும் பாக்கியமும் பயனுள்ளவர்களும் ஆகலாம்.

இவைகளெல்லாம் நமக்குப் போதிக்கிறதென்ன? எந்த வேளையானாலும் தேவனிடம் ஓடி அவர்மேல் நம்பிக்கை வைக்கும்போது அவர் நம்மோடு பேசுவார். சோதிக்கப்படுகிற விசுவாசியே, தேவன் உனக்காகப் பேசுவார். பக்தியுள்ள கிறிஸ்தவனே, தேவன் உன்னோடு பேசுவார். எப்படிப் பேசுவார் என்று கேட்கிறாயா? தம்முடைய வசனத்தை கொண்டும், தமது கிரியைகளைக் கொண்டும், ஆவியானரைக் கொண்டும் பேசுவார். அப்படியானால் அவர் சத்தத்துக்குச் செவிக்கொடுப்போமாக. அவர் தம்முடைய வார்த்தையைக் கொண்டும், ஊழியர்களைக் கொண்டும் எவ்விதத்திலும் நம்மோடு பேச அவரை வேண்டிக்கொள்வோமாக.

சுவிசேஷத்தில் தொனிக்கும்
சத்தம் சமாதானமே
இதை உமதடியார்க்களித்து
விடாமல் என்றும் காரும்.

எப்பொழுது என்னிடத்தில் வருவீர்

ஓகஸ்ட் 03

“எப்பொழுது என்னிடத்தில் வருவீர்.” சங். 101:2

தேவனுடைய சமுகம்தான் தேவ பிள்ளைக்குப் பரவசம். இதை விட அவர்களுக்குப் பெரிய சந்தோஷம் கிடையாது. அவர்கள் விரும்புகிறபொருள் அவர்தான். இதுவே அவர்களின் சந்தோஷத்தின் ஊற்று. அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு ஜீவனும் அவரே. அவர் இருந்தால் எல்லாமே இன்பம்தான். அவரின்றி அவர்களுக்குத் திருப்தியே கிடையாது. ஆத்துமாவிற்கு அமைதியே கிடையாது. இதற்கு அநேக காரணங்கள் உண்டு. அவருடைய தயவுதான் அவர்களுக்கு ஜீவன். அவரோடு ஐக்கியப்படுவதுதான் அவர்களுக்குப் பொக்கிஷம். அதுவே அவர்கள் சமாதானம். நேசரின் சமுகத்தில் நிறைவான சந்தோஷமும், இளைப்பாறுதலும், ஜெயமும் உண்டு. அவர் இருந்தால் அவர்களின் பரிசுத்தம் விருத்தியடையும். அவர்களின் விசுவாசம் பெருகும். கிருபை என்னும் கனி பழுக்கும். அவர்களின் பக்தி மேன்மையானது என்று அது ரூபிக்கிறது. அப்படிப்பட்ட நேரங்களில்தான் கர்த்தர் தமது ஜனத்தை சந்திக்கிறார். ஆனால் அவர்கள் சில சமயங்களில் அவருடைய சமுகத்தை இழந்து விடுகிறார்கள். ஆனால் ஒருமுறை அனுபவித்தபடியால் அதன்மேல் திரும்பவும் வாஞ்சை கொள்கிறார்கள். அப்படி வாஞ்சித்து, கெஞ்சி வருத்தப்படுகிற ஆத்துமா திருப்தியடையாமல் போகாது.

என் சிநேகிதரே, தேவ சமுகத்தை நீ ருசித்ததுண்டா? அதை அனுபவித்ததுண்டா? இன்று அதில் நீ இருந்ததுண்டா? இதைவிட உனக்கு உதவி செய்வது தேறொன்றுமில்லையே. தாவீதுபோல் என் ஆத்துமா உம்மை தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறதென்றும்ஈ என்னிடத்தில் எப்போது வருவீர் என்றும், நான் பிழைத்து இருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக. உமது வேதம் என் மனமகிழ்ச்சி என்று நீர் சொல்கிறவரா? இப்படி ஒருவேளை நீர் தேவ சமுகத்தைக் குறித்து கவலையற்றவரானால் நீர் தேவனுக்கு அந்நியனே.

கர்த்தாவே உமதுமேல்
என் ஆவி வாஞ்சைக் கொள்கிறது
நீரே என்னை நிரப்பும்
என் தாகத்தைத் தீர்த்திடும்.

கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவன்

ஓகஸ்ட் 21

“கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவன்” கொலோசெயர் 1:28

விசுவாசி தன்னில் குறையுள்ளவனாக எல்லாரும் பார்க்கும்படி நடந்துக்கொள்ளுகிறான். அவர் உணர்வுகள், விருப்பங்கள், துக்கங்கள், செயல்கள், ஜெபங்கள், தியானம் எல்லாவற்றிலும் குறைவு வெளியரங்கமாய்க் காணப்படுகிறது. அவன் இருதயத்திலிருந்து எழும்பும் பெருமூச்சு, மனதில் வரும் அங்கலாய்ப்பு, கண்களிலிருந்து புறப்படும் கண்ணீர், எல்லாம் குறைவையே காண்பிக்கின்றன. ஆனால் கிறிஸ்து இயேசுவிலோ நிறைவுண்டு. நம்மை நீதிமான்களாக்க அவரிடத்தில் பூரண கிருபை உண்டு. நம்மைப் பரிபூரணமாக்க அவரிடத்தில் பரிபூரணமுண்டு. நம்மைப் போதித்து நடத்த அவரிடத்தில் பூரண ஞானம் உண்டு.

அவரோடு ஐக்கியப்படுவதால் நாம் பூரணராகிறோம். ஏனென்றால் அவருடைய மணவாட்டியாக அவருக்கிருப்பதெல்லாம் நமக்குச் சொந்தமாகிறது. அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளகிறதினால்தான் நாம் பூரணராகிறோம். அவருடைய நிறைவிலிருந்து நாம் கிருபையின் மேல் கிருபை பெற்றுக்கொள்கிறோம். ஏனெனில் தேவனுடைய ஆவியாலே நாம் மகிமையின்மேல் மகிமை அடைந்து அவர் சாயலாக மாற்றப்படுகிறோம். நாம் குறைவற்று, தேர்ச்சி பெற்றவர்களாவது, தேவனுடைய தீர்மானம். இப்படி வளர அவர் வாக்களித்துள்ளார். உதவி செய்கிறார். வசனத்தில் உள்ளபடியே நடந்தேறும். அவர் நம்மை பூரணராக்கி நிறையுள்ளவர்களாய், தேறினவர்களாய் பிதாவுக்குமுன் நிறுத்துகிறார். நாம் பூரண பரிசுத்தர் ஆவோம். பூரண பாக்கியர் ஆவோம்.

இயேசு மரித்தபோது
அவர் சீடரும் மரித்தார்
அவரும் அவர்களும் ஒன்றே
இப்பாக்கியம் மகா பெரியது.

துக்கம் நிறைந்தவர்

ஓகஸ்ட் 23

“துக்கம் நிறைந்தவர்” ஏசாயா 53:3

தேவகுமாரன் துக்கமாய் இருப்பது எவ்வளவு விசித்திரமான காரியம். அவர் மகிமையின் பிரகாசமானவர். பிதாவின் அச்சடையாளமானவர். ஆனாலும் அவருடைய ஜனங்கள் பட்ட துன்பத்தையும், பட வேண்டிய துன்பத்தையும் அனுபவத்தால் அறியவே இந்த உலகில் வந்தார். அவர் துயரங்களை கேள்வியால் அறிந்தவர். அவர் நம்முடைய சுபாவத்தை தரித்துக் கொண்டார். நமக்கு பதிலாக வந்தார். பிறந்தது முதல் துன்பத்தைச் சகிக்க ஆரம்பித்தார். மரணபரியந்தமும் துன்பத்தையே அனுபவித்து வந்தார். தன்னுடைய கடமையில் அதிக பாரத்தைச் சுமந்தவர். பிதாவை நிந்தித்தவர்களுடைய நிந்தை அவர்மேல் விழுந்தது. அவர் துக்கம் அனுபவித்தவர். பலவகையில் துக்கம் அனுபவித்தார். துக்கத்தின் ஆழம் அவருக்குத் தெரிந்திருந்தது.

அவரைப்போலவே துயரங்களை அனுபவித்தவர் வேறே ஒருவரும் இல்லை. சில வேளைகளில் சந்தோஷப்பட்டாலும் பல வேளைகளில் துக்கப்பட்டார். துக்கமே அவர் கூட்டாளிகளாய் இருந்தது. நண்பரே, கர்த்தர் உனக்காய் துக்கப்பட்டார். உன்னைப்போல் துக்கப்பட்டார். உன்னைவிட அதிகம் துக்கப்பட்டார். அதனால் இப்போது உனக்காகப் பரிதபிக்கிறார். மனிதன் அனுபவிக்கும் துக்கம் ஒவ்வொன்றும் அவருக்குத் தெரியும். அவருக்கு எப்பக்கத்திலிருந்தும் துக்கம், துயரம் ஏற்பட்டது. வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் ஏன், நரகத்திலிருந்தும்கூட அவருக்குத் துன்பம் வந்தது. உனக்காய் அவர் பாடுபட்டார். ஆதலால் உனது எல்லா துக்கத்திலும், துயரத்திலும் நிர்பந்தத்திலும் உனக்காகப் பரிதபித்து, உனக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார்.

மனிதனால் எனக்கிரங்கி
உருக்கத்தால் தவிர்க்கிறார்
கர்த்தாவே என்னைத் தாங்கி
முற்றிலும் இரட்சியுமே.

Popular Posts

My Favorites

கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார்

யூலை 14 "கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார்" சங். 97:1 கர்த்தர் உன் இரட்சகர். அவர் உன் தன்மையைத் தரித்திருக்கிறார். அவர் உன்னை நன்றாய் அறிவார். ஒரு தாய் தன் ஒரே மகனை நேசிக்கிறதிலும் அவர் உன்னை அதிகமாய் நேசிக்கிறார்....