சத்தியத்தை வாங்கு அதை விற்காதே

டிசம்பர் 24

“சத்தியத்தை வாங்கு அதை விற்காதே” நீதி.23:23

சத்தியம் நமக்கு அவசியம். நமது மனதுக்கு தெளிவைத்தர, இருதயத்தைத் தூய்மைப்படுத்த, ஆத்துமாவை மகிழ்விக்க, நடத்தையைச் சீர்படுத்த அது மிகவும் அவசியம். எந்த நன்மையும் சத்தியத்திலிருந்ததான் பிறக்கிறது. எல்லாத் தீமைகளையும், அவை பொய்யிலிருந்து உண்டாவதால், அது கண்டிக்கிறது. எனவே சத்தியத்தை வாங்கு. அதை விலைகொடுத்து வாங்க வேண்டிய அளவுக்கு உயர்ந்தது. அதை வாங்குவதற்கு நீ செலவிடவேண்டும். அது விலையேறப்பெற்றது. பலர் இந்தச் சத்தியத்திற்காக தமது சுகத்தையும், பெலத்தையும், இனத்தையும், ஜனத்தையும், ஏன், தங்கள் உயிரையும்கூட கொடுத்திருக்கிறார்கள். சத்தியம் ஒரு பெரும் புதையல். அதன் மையம் கிறிஸ்துவே. கிறிஸ்துவையே சத்தியம் உயர்த்திக் காட்டுகிறது. அதைத் தேடி கண்டுபிடித்து வாங்கு. அதை விற்காதே.

சத்தியத்தைச் சம்பாதிக்க பிரயாசப்படு. கிறிஸ்துவைப்பற்றி ஆழமாகத் தெரிந்துகொள். சத்தியம் எங்கும் நிறைந்துள்ளது. கிறிஸ்துவின் வார்த்தையே சத்தியம். அவரை எவ்வகையிலாயினும் பெற்றுக்கொள். அவரைத் தேடிப் பெற்றுக்கொள். அவருக்காக ஜெபம் செய். சத்தியம் கிடைக்கும்வரை போராடு. அதை உனக்குக் கொடுக்கிறவர் தூயஆவியானவரே. அவரைக் கனப்படுத்து. உனக்கு அவர் சத்தியத்தைக் காட்டுவார். அவர்தான் உன்னைத் தேவனண்டை நடத்துவார். எந்தச் சூழலிலும் உன்னை நடத்த அவரால் முடியும். மனகலக்கத்தில் அவர் உன்னைத் தேற்றி, உன் நோயில் உன்னைக் குணமாக்கி, ஆறுதல்படுத்தி, உன்னைச் சத்தியத்தில் நடத்துவார். அவர் கற்றுத் தருவதனைத்தையும் கற்றுக்கொள். அதுவே உனக்கு உணவும், துணைவுமாகட்டும். ஆண்டவரின் மாட்சிமைக்காக அதைப் பிரசங்கி.

நீரே வழி இயேசுவே
நீரே சத்யம், ஜீவனும்,
நீர் என்னை நடத்தும்,
நேர் வழி நான் காண்பேன்.

மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது

டிசம்பர் 11

“மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது” 1.யோவான் 2:8

இவ்வுலகில் எங்குமே பாவ இருள் மூடியிருக்கிறது. எங்கெல்லாம் சுவிசேஷ ஒளி செல்கிறதோ, அங்கெல்லாம் அவ்விருள் மறைந்து விடுகிறது. பிசாசின் இருள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அவ்விடத்திற்கெல்லாம் தேவ ஒளி செல்லும்போது அது நீங்கிப்போய்விடுகிறது. இன்று பல இடங்களில் அவிசுவாசம், அவபக்தி என்னும் மேகங்கள் காணப்படுகின்றன. மெய்யான நற்செய்தியின் ஒளிமட்டுமே அவைகளை நீக்க முடியும். தேவாலயங்களில் பிரசங்கிக்கப்படும் வசனத்தின்மூலம் அவ்வொளி பிரகாசிக்கிறது. நமது இருதயத்திலும் அவ்வொளி வீசுகிறது. இப்படி வந்த பிரசங்கத்தினால் இரட்சிப்பின் வழியையும், மெய்ச் சந்தோஷத்தையும், கீழ்ப்படிதலையும் நாம் அறிந்து கொள்கிறோம்.

இப்பொழுதும் அவ்வொளி நம்மை சூழ தெளிவாகவும், அழகாகவும் பிரகாசிக்கிறது. இந்தப் பிரகாசம் தேவனுடைய சுத்த தயவை விளக்குகிறது. மகிழ்சியாய் இருக்கவும், ஆறுதலாக நடந்து நம்பிக்கையோடு போர் செய்யவும், தீமையை விட்டுவிலகவும், மனநிறைவோடு பரலோகம் சேரவும் நமக்குப் பெலன்தருகிறது. நம்மில் மெய்யான ஒளி பிரகாசிக்கிறதென்றால், கோடானகோடி மக்கள் கண்டு கொள்ளாத ஒளியை நாம் கண்டு கொண்டோமே. ஆகவேதான் நம்முடைய தேவன் ஒளியில் இருக்கும்பொழுது நாமும் ஒளியில் நடந்து, உயிருள்ளவர்களாய் அவரோடு ஐக்கியப்பட்டு, நமக்குக் கிடைத்துள்ள சிலாக்கியத்தைப் பயன்படுத்திக் கொள்வோமாக.

மனிதனை மீட்கவே
தெய்வ ஒளி பிரகாசித்தது
பாவிகளை இரட்சிக்க
அதன் ஜோதி வீசுது.

தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்

நவம்பர் 10

“தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்” ஓசியா 14:2

தேவனுடைய பிள்ளைக்குப் பாவத்தைப்போல் துன்பம் தரக்தக்கது வேறு ஒன்றுமில்லை. பாவத்திலிருந்து விடுதலைபெற வேண்டும் என்றுதான் அவன் விரும்புகிறான். அதற்காகவும் ஜெபிக்கிறான். அவன் எல்லாவற்றிலும் நீதிமானாக்கப்படும்பொழுது தனது குற்றங்களிலிருந்து விடுதலை பெறுகிறான். இதுமட்டுமல்ல, அவன் செய்யும் எல்லா செயல்களையும் பாவ விடுதலையோடு செய்ய விரும்புகிறான். பாவம்தான் ஒருவனை அலைக்கழித்து வருத்தப்படுத்துகிறது. கர்த்தருடைய பிள்ளை என்று சொல்லும் சாட்சியைக் கெடுத்து, அவனுடைய அமைதியைக் குலைத்து விடுகிறது. ஆகவே, அவன் ஆண்டவரிடம், தன்னிடமிருந்து எல்லாத் தீங்குகளையும் போக்கிவிட வேண்டுமென்று கெஞ்சுகிறான். ஜெபிக்க வேண்டும் என்ற இந்த எண்ணத்தைக் கர்த்தர் அவன் இருதயத்தில் உண்டாக்குகிறார். எந்தத் தேவனுடைய பிள்ளையும் முதலில் தேட வேண்டிய காரியம் இதுதான்.

ஒருவன் தன் அக்கிரமங்களினால் வீழ்ந்து இருக்கலாம். அவன் பரிசுத்தத்தின்மூலமாக மட்டுமே எழுந்திருக்கக்கூடும். தன் சொந்த புத்தியீனத்தினால் அவன் விழுந்திருக்கலாம். கர்த்தருடைய இரக்கத்தினால் அவன் எழுந்திருக்கக் கூடும். தேவன் எல்லா அக்கிரமங்களையும் நீக்கி போடுவாரா? ஆம், நீக்கிப்போடுவார். தமது பலியினால் எல்லாப் பாவங்களையும் நீக்குவார். தம்முடைய வசனத்தை நிறைவேற்றிப் பாவத்தின் வல்லமையை அகற்றுவார். மரணத்தை ஜெயிக்க பெலன் தருவார். ஆகவே, ஒவ்வொரு நாளும், கர்த்தாவே, என்னை முற்றிலும் பரிசுத்தமாக்கும். என் ஆத்துமா ஆவி, சரீரம் முழுவதையும் கிறிஸ்துவின் வருகைமட்டும் குற்றமில்லாததாகக் காப்பாற்றும். என்று ஜெபிப்பதால், நாம் மறுபடியும் பிறந்தவர்கள் என்று சாட்சியும் பெறுவோம். அந்த ஜெபத்தைக் கர்த்தர் கேட்பார். நீங்கள் முற்றும் பரிசுத்தமாவீர். அவர் உண்மையுள்ளவர். அவர் அப்படியே உங்களைப் பரிசுத்தமாக்குவார்.

நோயையும் துன்பத்தையுமல்ல
பாவத்தையே என்னிலிருந்து நீக்கும்
எவ்வாறு பெரும்பாவமாயினும்
தயவாக அதை மன்னித்தருளும்.

இதெல்லாம் எனக்கு விராதமாய் நேரிடுகிறது

டிசம்பர் 07

“இதெல்லாம் எனக்கு விராதமாய் நேரிடுகிறது” ஆதி. 42:36

எவைகள் எல்லாம் விரோதமாக நேரிடுகின்றன? இழப்புகள், கஷ்டங்கள், வருத்தங்கள், துக்கங்கள், நோய்கள் இவைகளெல்லாமே. உனக்கும் இவைகள் விரோதமாய் இருக்கின்றனவா? இல்லை இல்லை இவைகள் உன்னைப் பாவத்திற்கு இழுத்துச் சென்றால், உன்னை உலகத்தோடு ஐக்கியப்படுத்தினால், உன் தேவனுக்கு உன்னைப் பகைவனாக்கினால், உனக்கு அவரிடமிருந்து கிடைக்கும் நன்மைகளைத் திருப்பினால், இவைகளெல்லாம் உனக்கு விரோதிகள் எனலாம். ஆனால், இவை உன்னை உலகத்தை வெறுக்கும்படி செய்து, உன் தேவனண்டைக்கு உன்னை அழைத்துச் சென்று, இரட்சகராக நல்லவராகக்காட்டி, அவருடைய வசனங்களை மதிக்கச் செய்து, பரலோகத்தின்மேல் உன்னை வாஞ்சை கொள்ளச் செய்தால் இவை உனக்கு விரோதமானவை அல்ல. அனுகூலமானவைகளே.

கிருபைகள் நிறைந்த தெய்வ செயலின் ஒழுங்குப்படி, அவைகள் நடக்கின்றனவென்றும், அவைகளை உன் பரம பிதா உன் நன்மைக்கென்றே அனுப்புகிறார் என்பதையும் மறந்துவிடாதே. ஆகவே, முறுமுறுக்காதே. நீ முறுமுறுப்பது வேத வசனத்தை அறியாததினாலும், உன் பாவங்களை மறந்துவிடுவதினாலும் அவிசுவாசத்தினாலும் ஆகும். முறுமுறுப்பது, தேவனின் கிருபையும், அவர் கருத்து உள்ளவர். இரக்கம் உள்ளவர் என்பதையும் மறுப்பதாகும். உலகில் துன்பங்கள் வரத்தான் செய்யும். சோதனைகள் சூழும். விரோதங்கள் எழும். ஆனாலும், உனக்கு நன்மைகளைக் கொண்டு வரவே அவை அனுப்பப்படுகின்றன. அன்பானவனே, துன்பங்கள், சோதனைகள் வரும்போது தேவனைக் குறித்து தவறான எண்ணங்கள் கொள்ளாதே. யாவும் நன்மைக்கென்றே நடக்கின்றன. நாம் தவறான எண்ணங்கொண்டு அவர் வாக்குகளை மறக்கிறோம். இனி அவ்வாறு செய்யாதிருப்போமாக.

பக்தருக்கு பயம் ஏன்?
அவன் முறுமுறுப்பதேன்?
எத்துன்பம் வரினும் அதில்
தேவனிருப்பார். அஞ்சாதே.

என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று

டிசம்பர் 13

என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று (ஓசி.14:4)

தேவன் துன்மார்க்கர்மீது கோபப்படுவார். பாவத்தைக் கண்டிப்பதற்காக அவர் கோபப்படுவார். தேவ கோபம் மிகவும் பயங்கரமானது, மிகவும் வேதனையைக் கொடுக்கக்கூடியது. நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயத்தில் தேவனுடைய கோபத்தைக் காண்கிறோம். எகிப்தியரின்மேல் வாதைகளை வரவிட்டபொழுது அவருடைய கோபம் காணப்பட்டது. நினிவேயின்மீது தேவகோபம் எழும்பியது. அவர் பாவத்தின்மீது கோபம் வைப்பார். சில நேரங்களில் தமது பிள்ளைகள்மீதும் அவர் தமது கோபத்தைக் காட்ட நேரிடுகிறது. ஒரு பிள்ளையின் தவறான நடத்தையினால் தகப்பன் கண்டித்துக் கோபப்படுகிறான். அதுபோல தேவனும் கோபப்படுகிறார். அவர் எவரை அதிகமாக நேசிக்கிறாரோ, அவாகளைத் திருத்துவதற்காகக் கோபம் காட்டுகிறார். அவர்கள் மீதுள்ள அன்பு அவரைக் கோபம் காட்டச் செய்கிறது.

தேவன் கோபிக்கிறபொழுது துன்பங்களை அனுமதிக்கிறார். அவருடைய கோபம் ஒரு வினாடிதான் இருக்கும். அவருடைய மக்களின் முரட்டாட்டத்தின் நேரத்தில் அவர்கள் பேரில் அவர் கோபங்கொள்கிறார். அவருடைய கோபத்திற்கு ஆளானவர்கள் மனந்திரும்பி துக்கப்பட்டு, அவருடைய காலில் விழுந்து, பாவத்தை அறிக்கையிட்டு, இரக்கத்திற்காகக் கெஞ்சும்பொழுது, அவர் தமது கோபத்தை விட்டுவிடுகிறார். இன்னும் உன்னை நேசிப்பேன் என்கிறார். திரும்பவும் உனக்கு வேண்டிய ஆசீர்வாதங்களைத் தருவார். நீ எத்தவறையும் செய்யாதவன்போல உன்னை நேசிப்பார். உன் பாவத்தை மன்னித்து, மறப்பார். நாம் நமது பாவத்தை நினைத்துக் கொண்டே இருக்கிறோம். அவர் நம்மை நேசிக்கிறார் என்ற நினைவோடு இந்த இரவு படுக்கைக்குச் செல்வது நமக்கு இன்பமானதாக இருக்கும்.

ஆண்டவர் கொள்ளும் கோபம்
இருப்பது ஒரே கணம்தான்
ஆண்டவர் இரக்கம் நிறைந்தவர்
இது நமக்குக் கிடைத்த பேறுதான்.

நான் அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன்

டிசம்பர் 06

“நான் அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன்” வெளி 1:8

இந்த வசனம் ஆண்டவருடைய மகத்துவத்தையும், மேன்மையையும் குறித்து கூறுகிறது. கிரேக்க மொழியின் முதல் எழுத்தையும், இறுதி எழுத்தையும் கூறி, நான் அல்பாவும், ஒமேகாவுமாய் இருக்கிறேன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வார்த்தையின் எழுத்துக்கள் தேவனுடைய தன்மையை விபரிக்கின்றன. அவரை நமக்கு வெளிப்படுத்தினதே, ஆண்டவராகிய இயேசுதான். அவருடைய தன்மைகளையும், மகத்துவங்களையும் அவர் அப்படியே வெளிப்படுத்துகிறார். கிரேக்க மொழி பேசுகிறவர்கள் தங்கள் உரையாடலில் இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவார்கள்.

இயேசு கிறிஸ்து நமக்கு மேன்மையாக இருப்பவர். நம்முடைய இரட்சிப்புக்கும், ஆறுதலுக்கும், மேன்மைக்கும், கனத்திற்கும் அவசியமானதெல்லாமே அவரிடம் உண்டு. அவரில் ஞானமும் அறிவும், மேன்மையும் கனமும், ஐசுவரியமும் நித்தியமும் நிறைவாக அடங்கியுள்ளது. அவரே இரட்சிப்பின் முதலும் முடிவுமாக இருக்கிறார். அவரிலிருந்து கிருபையின் ஊற்று பாய்கிறது. அது நாம் அவரையே மையமாகக் கொண்டு அவரையே சூழ்ந்திருக்கச் செய்கிறது. எல்லாவற்றிலும் முக்கியமும், நித்தியமுமாய் இருக்கிறவர் அவரே. தேவனுக்குரிய அனைத்து கர்த்தத்துவங்களும் அவர் கொண்டவர். நன்மையும், கிருபையும் அவரிடத்தில் எப்பொழுதும் உண்டு. எனவேதான் தேவனுடைய பிள்ளைகள் அவரைப் புகழ்வதிலும், பிரசங்கிப்பதிலும் ஒய்வதே இல்லை. பாவிக்கு தேவையான சகல தயவும் அவரிடம் உண்டு. இத்தன்மையில் இயேசுவைக் காண்பது எவ்வளவு இனிமை. வெளிப்படுத்தல் புத்தகத்தில் இவ்வசனத்தில் நான்கு முறைகள் கூறப்பட்டுள்ளது. இதைத் தியானித்து நமது ஆன்மீன உணவைப் பெறுவோம்.

கிறிஸ்துவே ஆதியும் அந்தமுமாம்
அவரே கிருபையும் ஆனந்தமுமாம்
கிறிஸ்து தரும் நன்மைகள் யாவும்
அவர் தரும் பேரின்பங்களாம்.

நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்

டிசம்பர் 15

“நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்” (எரேமி.3:19)

கர்த்தர் நமக்கு தந்தையாய் இருக்கிற உறவை நாம் அறிந்து உணர்ந்து அவரண்டை சேரவேண்டும். நமது உறவை நாம் அறிக்கை செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். அவர் செய்வதுபோல் எவராலும் செய்ய முடியாது. எப்படிப்பட்ட துர்ச்செயலையும் அவர் மன்னிப்பார். எப்படிப்பட்டவராயினும் பிதாவை நேசிக்க முடியும். எந்த இனத்தவராயினும், எப்பேர்ப்பட்ட பாவியாயினும் பிதா ஏற்றுக்கொள்ளுவார். அவர்களின்மேல் தேவன் தயவைக் காட்டுகிறார். அவர் பொறுமையாய் இருக்கிறார். அவர் நமக்குத் தம்மிடம் சேர்த்துக் கொண்டு, நம்மை ஆசீர்வதிக்கிறார். அதனால் அவர் மகிழ்ச்சியடைகிறார்.

தேவன் சர்வ வல்லவராயிருந்து பெலவீனராகிய நாமெல்லாம் அவரைப் பிதாவே என்று அழைக்க வேண்டுமென்று விரும்புகிறார். இது தேவன் நம்மேல் வைத்திருக்கும் பாசத்தைக் குறிக்கிறது. ஆகவே, நம் தகப்பனாக அவரை நினைத்து, அவரை நோக்கி ஜெபிப்போமாக. தகப்பனுக்குப் பணி செய்வதுபோல அவருக்கு உழைப்போமாக. தகப்பனிடம் நன்மையை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பபோல அவரையே நாம் எதிர்பார்திருப்போம். நமது நம்பிக்கை முழுவதுமாக அவர்மேலேயே இருக்கட்டும் நாம் அவரையே நேசிப்போம். நம்மைப் புத்திரராக அவர் எற்றுக்கொண்டதை எண்ணி அவரைப் போற்றுவோம். நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று சாட்சி கூறுவதற்காக, அவர் நமக்கு அப்பா, பிதாவே என்று அவரை அழைக்கக்கூடிய உறவையும் உரிமையையும் தந்திருக்கிறார். அவருடைய உறவில்லாமல், நாம் அவருடைய பிள்ளைகளாக முடியாது. பிரியமானவனே, தேவனைப்பற்றி இவ்வெண்ணத்திற்காக மகிழ்வோம். அவரைப் பிதாவே என்றழைத்துப் போற்றுவோம். என்றும் இவ்வுரிமைக்குப் பாத்திரராயிருக்கப் பாடுபடுவோம்.

அப்பா, பிதாவே, என்று
உம்மை அழைக்கும்பேறு
உம்மாலே எங்கட்குக் கிடைத்ததால்
உம்மைப் போற்றுகிறோம், பிதாவே.

உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்

டிசம்பர் 22

“உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்” யோவான் 13:15

இயேசு கிறிஸ்து காட்டின மாதிரியின்படியே நீ நடக்க ஆயத்தமா? அவருடைய மாதிரியில் ஆச்சரியங்களைக் கண்டு பிடித்தாயா? அதன்படி நடக்க முழுமனதோடு விரும்புகிறாயா? அவருடைய மாதிரியின்படி நடவாமல், அவர் செலுத்தின பலியினால் நான் இரட்சிக்கப்பட்டவன் என்று சொல்லுவது வீண்பேச்சு. அவருடைய காலடிகளை நாம் தொடர்ந்து செல்லுமாறு அவர் நமக்கு நல்ல மாதிரிகளை வைத்துப்போனார். அவர் பிதாவின்மேல் வைத்த விசுவாசம், அவர்மீது காட்டின அன்பு, ஊழியத்தில் அவருக்கிருந்த பக்தி வைராக்கியம், பிதாவின் வேலைகளில் அவருக்கிருந்த வேகம், இவைகளை எல்லாம் கவனித்துப்பார். அவர் தமது ஜனத்தின்மேல் வைத்த அன்பு, பொறுமை, அமைதி, அவருடைய இரக்க உருக்கம், தன்னை வெறுத்தல், தாழ்மை இவைகள் எல்லாவற்றையும் கவனித்துப் பார்.

அவர் பாவிகளின்மேல் வைத்த அன்பைப் பார். அவர்களுக்காக அவர்விட்ட பெருமூச்சைப் பார். அவர்களுக்காக சிந்திய கண்ணீரைப் பார். அவர்களைப்பற்றி அவருக்கிருந்த பாரத்தைப் பார். அவர்களுக்கு நன்மை செய்யவேண்டுமென்று அவருக்கிருந்த எண்ணத்தைக் கவனி. இவைகளை எல்லாம் சிந்தித்துப் பார். அவர் தம்மை எவ்வளவாய் தாழ்த்தினார். தமக்கெதிராக அவர்கள் செய்த கொடுமைகளை எவ்வளவு பொறுமையாகச் சகித்தார். அவர்தான் உன் முன்மாதிரி. எப்பொழுதும் அவரைப்போலிருக்க அவருடைய முன்மாதரியைப் பின்பற்றுங்கள். ஓவ்வொருமுறையும் உங்கள் நடத்தையை அவருடைய நடத்தையோடு ஒப்பிட்டுப்பாருங்கள். அவருடைய மாதிரி எத்தனை அழகு, எவ்வளவு நல்லது, எவ்வளவு பாக்கியமானது. „அவருடைய மாதரியின்படி நடத்த பரிசுத்த ஆவியானவரே, எனக்கு வலிமையையும், பெலத்தையும் தாரும்“ என்று தினமும் ஜெபி.

கிறிஸ்துவே என் முன்மாதிரி,
கிறிஸ்துவின் சாயல் ஏற்பேன்,
அவரது அடிகளைப் பின்பற்றி,
அவரைப்போலாக முயற்சிப்பேன்.

எல்லாம் புதிதாயின

டிசம்பர் 20

“எல்லாம் புதிதாயின” 2.கொரி.5:17

புதிதாய் இயேசுநாதரை ஏற்றுக்கொண்டவன் „எல்லாம் புதிதாயின“ என்றுதான் நினைப்பான். ஆண்டவரை ஏற்றுக்கொள்ளும்பொழுது எல்லாருமே புதியவைகளைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள். அவர்களுக்குள்ளே ஜீவன் இருக்கிறது. அது ஆவிக்குரிய ஜீவன். வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை அவர்கள் புசிக்கிறார்கள். அவர்கள் செய்யும் செயல்கள் புதிதானவை. பரிசுத்தமான நடக்கையைத் தெரிந்து கொள்ளுகிறார்கள். புது வாழ்க்கையைத் தெரிந்துகொண்டு, அதன்படி நடக்க முயற்சிக்கிறார்கள். கிறிஸ்துவின் அன்பினால் அவர்கள் நெருக்கப்படுகிறார்கள். புதிய நோக்கங்களை அவர்கள் பெறுகிறார்கள். தேவமகிமையைக் கண்டு அதில் வளருகிறார்கள். புதிய புதியதான நண்பர்களோடு ஐக்கியம் கொள்ளுகிறார்கள். காரணம் என்வென்றால், எல்லாம் புதிதாயின“.

அப்படிப்பட்டவர்களுக்கு தலையாயிருப்பவர் கிறிஸ்து. இரண்டாம் ஆதாம் அவரே. அவர்தாமே இவர்களைத் தேவனோடு ஒப்புரவாக்கிப் புதிய பரதீசிக்குள் அழைத்துச் செல்கிறார். இவர்கள் எல்லாரும் புது உடன்படிக்கையின்கீழ் இருக்கிறார்கள். இது கிருபையின் உடன்படிக்கை கிரியையின் உடன்படிக்கையல்ல. தேவனே இவர்களுக்குப் பிதா, தேவதூதர்கள் பணிவிடையாள்கள். கிறிஸ்து இவர்களுக்கு மூத்த சகோதரர். தூய ஆவியானவர் இவர்களுக்குத் தேற்றரவாளர். தேவனுடன் இவர்களுக்கு உண்டாயிருக்கும் உறவு புதியது. இவர்கள் உலகத்துக்குச் சாட்சிகளாய் இருப்பவர்கள். கிறிஸ்துவின் ஊழியர்கள். இவர்கள் ஆவியானவர் தங்கும் ஆலயம். இவர்களுடைய ஆசைகள், நம்பிக்கை, நோக்கம் எல்லாம் புதியவைகள். புதிய வானம் புதிய பூமியின் சிருஷ்டிகள் இவர்கள். பழையவைகள் எல்லாம் ஒழிந்துபோயின. எல்லாம் புதிதாயின.

நான் உம்முடையவன், மற்றும்
நான் உம்மால் புதிதாக்கப்பட்டேன்.
புது வானம் பூமியின் புது சிருஷ்டி
புதுப் பரதீசின் புதுக் குடிமகனே.

நீதியின் சூரியன்

டிசம்பர் 23

நீதியின் சூரியன் (மல்.4:2)

நீதியின் சூரியன் என்பது இயேசு கிறிஸ்துவினுடைய பெயர்தான். உலகத்திற்கு ஒரே சூரியன் இருப்பதுபோல ஒரே இரட்சகர்தான் உண்டு. இந்த உதாரணத்தை அவருடைய மாட்சிமையும், உன்னதமும், அழுகும், மகிமையும், நிறைவும், சகல நற்குணங்களும் விளக்கிக்காட்டும். அவர் நீதியின் சூரியன். அவர் தன்னில்தான் நிறைவுள்ளவர், மேன்மையுள்ளவர், ஆளும் கர்த்தர் என்பதையும் தமது ஜனத்திற்கு அவர் நீதியாய் செயல்படுகிறார் என்றும் காட்டுகிறது.

வெளிச்சம் சூரியனிடத்திலிருந்து வருவதுபோல, நம்முடைய நீதி இயேசு நாதரிடமிருந்து வருகிறது. அவரே பரிசுத்தத்தின் உறைவிடம். நம்மை நீதிமான்களாக்க அவரே அனைத்தையும் செய்து முடித்தார். உலகத்திற்கு தேவையான ஒளி சூரியனிடத்தில் இருப்பதுபோல, நமக்கெல்லாம் போதுமான ஆவிக்குரிய ஒளியும், நீதியும் அவரில் இருக்கிறது. சூரியனின் ஒளி நமக்கு இலவசமாகக் கிடைப்பதுபோல இயேசு கிறிஸ்துவும் தமது நீதியை இலவசமாய்த் தருகிறார். வானத்தில் சூரியன் பிரகாசிக்கும்பொழுது வேறிடத்திலிருந்து ஒளி கிடைக்குமென்றிருப்பது மதியீனம். பலர் இன்று இயேசுவைவிட்டு வேறிடங்களில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இது மதியீனம். சூரியனிலிருந்து சகல சிருஷ்டிகளுக்கும் தேவையான வெப்பமும், பிரகாசமும் கிடைப்பதுபோல இயேசு நாதரிடத்திலிருந்து ஆசீர்வாதங்களும், வெளிப்பாடுகளும் கிடைக்கின்றன. „நீதியின் சூரியனே, நாங்கள் உமது ஒளியில் நடந்து, நீர் கிருபையாகத் தருவதைப் பெற்றுக்கொண்டு, ஜீவனும் சமாதானமும் அடைய பாவிகளாகிய எங்களைப் பிரகாசிப்பித்தருளும் என்று ஜெபிப்போம்.

மெய் ஒளியாம் எம் இயேசுவே
நீரென் இதயத்துள் வாருமே
மெய் ஒளியால் என் பாவம் காட்டி
நீதியின் சூரியனே இரட்சியும்.

Popular Posts

My Favorites

எனக்கு எதிரே உத்தரவு சொல்

செப்டம்பர் 08 "எனக்கு எதிரே உத்தரவு சொல்" மீகா 6:3 நம்முடைய நடத்தை பல நேரங்களில் மாறக்கூடியதாய் இருக்கிறது. தேவனைவிட பெரியதாக உலகத்திலும், உலகத்தில் உள்ளவற்றிலும் அன்பு கூர்ந்தால் தேவன் அங்கு அசட்டை செய்யப்படுகிறார். நாம் அவரைக்...