ஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்

டிசம்பர் 28

“ஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்” வெளி 7:15

இவர்கள் ஆண்டவர் நிமித்தம் அதிகம் துன்பப்பட்டவர்கள். அவரைப் பிரியப்படுத்தவும், மகிமைப்படுத்தவும் விரும்பியவர்கள். துயரங்களையும், சோதனைகளையும், நோய்களையும், துன்பங்களையும் சகித்தவர்கள். உயிரே போய்விடும் அளவுக்கு வேதனையிருந்தாலும், தேவனைவிட்டு விலகாதவர்கள். விசுவாசத்தோடும், தைரியத்தோடும் பெரு நம்பிக்கையோடும் தேவனுடைய பாதையில் கடந்து போனவர்கள். இந்த அசுத்தமான உலகில் பாவம் பெருகியிருக்கும் பொழுதும் தங்கள் இரட்சிப்பின் ஆடைகளை, தூய வெண்மையாகக் காத்துக் கொண்டவாகள். திறக்கப்பட்ட கல்வாரி ஊற்றில் எப்பொழுதும் தங்களைக் கழுவிக்கொண்டபடியால்தான் பரிசுத்தமாக வாழ்ந்தார்கள். ஆதலால்தான் இவர்கள் சிங்காசனத்தின்முன் நிற்கிறார்கள்.

தேவனக்கு முன் நிற்பதனால் அவர்கள் அலங்கரிக்கப்பட்ட பிள்ளைகளாய், இரவும் பகலும் அவரைப் பணிந்து வணங்கும் பாக்கியம் பெறுகிறார்கள். அவருடைய ஊழியத்தை அன்போடும், வெறுப்பின்றி, சோம்பலின்றி, பாரத்தோடு செய்தபடியால் அவருடைய முன்னிலையிலும் தொழுகையின் ஊழியத்தை செய்யும் பேறு பெற்றவர்கள். தேவனைத் தினமும் சேவிப்பதனால் அவர்களுக்குக் குறைகளே கிடையாது. அவர்களுக்கு இனி பசி தாகமில்லை, கண்ணீரும் துயரமும் இல்லை. காரணம், அவர்கள் சதாவாக தேவனுடன் இருக்கிறார்கள். ஆட்டுக்குட்டியானவரே அவர்களை மேய்த்து அன்புடன் நடத்தி வருகிறார். தாங்கள் எண்ணினதற்கு மேலான பாக்கிவான்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் தேவதூதரோடும் பரிசுத்தர்களோடும் சேர்ந்து தேவனை ஆராதித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

தூயோர் என்றும்
தூயவர் முன்னிலையில்
துயரமேதுமின்றி
துதித்திடுவர் தேவனை

தேவனுடைய கிருபை வரமோ நித்திய ஜீவன்

டிசம்பர் 09

“தேவனுடைய கிருபை வரமோ நித்திய ஜீவன்” ரோமர் 6:23

நித்திய மரணம் நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதே என்று நியாயப்பிரமாணம் நம்மை பயமுறுத்துகிறது. ஆனால், இயேசுவோ நமக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறார். நித்திய ஜீவன் அவருடைய குமாரனாகிய இயேசுவில் உள்ளது. இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம். அவர்தாம் நிரந்தர உயிர். நமக்கு பரம வாழ்வு உண்டு என்றும் பாவம், துக்கம், துன்பத்தினின்று நாம் விடுதலையாகி, எப்பொழுதும் நாம் மகிழ்ச்சியுடன் வாழ்வோம் என்றும் தேவன் நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். எல்லா நாளும் சந்தோஷமாக அவருக்குப் பணிவிடை செய்வது அவர் நமக்குக் கொடுத்த பாக்கியம். அது இலவசமாய் கொடுக்கப்பட்டது. ஆண்டவரின் கிருபைதான். அது நமக்குக் கிடைத்தது. இதிலேதான் அவருடைய கிருபையின் மகத்துவம் விளங்குகிறது.

பாவம் செய்த தேவதூதர்கள் பாதாளத்திற்குள் தள்ளப்பட்டார்கள். ஆனால், நாம் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தாலும், அவர் நமக்கு நிரந்தர வாழ்வைத் தருகிறார். எந்த மனுஷனுக்கும் இந்த சிலாக்கியம் கிடைத்திருக்கிறது. அதைப் பெற்றவர் கிறிஸ்து நாதரோடு உயிர்ப்பிக்கப்பட்டு தேவனுக்கென்று பிழைத்திருக்கிறான். இவ்வாறான மரணமில்லா வாழ்வை எதிர்பார்த்து நாம் இவ்வுலகில் வாழ்வோம். அந்த அனுபவத்தைப் பெற வாஞ்சை கொண்டு ஒவ்வொரு நாளும் விசுவாச வாழ்க்கையில் முன்னேறுவோம். அருள்நாதர் தம் ஆடுகளுக்கு யாவும் தருவதாக வாக்களித்திருக்கிறார். நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் ஒருக்காலும் கெட்டுப் போவதில்லை. ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதும் இல்லை என்பது அவர் வாக்கு.

பரம வாழ்வைத் தாரும்
பரிசுத்த பிதாவே
தேவ கிருபையும் பரிசுத்தமும்
தேவனே தந்தருளும்.

விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலன் இல்லாமற்போயிற்றோ

டிசம்பர் 12

“விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலன் இல்லாமற்போயிற்றோ” (ஏசா.50:2)

இவ்வசனம் அவிசுவாசத்தைப் பார்த்துக் கேட்கப்படும் கேள்வி. உன்னுடைய அவிசுவாசத்தையும் பார்த்து இக்கேள்வி கேட்கப்படுகிறது. தேவன் விடுவிக்கக்கூடியவர். விடுவிப்பேன் என்று அவர் வாக்களித்திருப்பதால், எந்தப் பயமும் கூடாது. எந்த வருத்தமும் வேண்டாம். எந்தக் கலக்கமும் வேண்டாம். உன்னை மனமடிவாக்கிய உன் துன்பத்தை நன்றாக கவனி. ஆண்டவர் எந்தக் கோணத்திலிருந்து வரும் உன் துன்பங்களைச் சந்திப்பார். பிறகு விடுவிப்பதற்கு என்னிடத்தில் பெலன் இல்லாமற்போயிற்றோ என்று கர்த்தர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல். பாவத்திலிருந்தும், குற்றத்திலிருந்தும், பிசாசின் வல்லமையிலிருந்தும், தண்டனையிலிருந்தும் உன்னை விடுவிக்க அவர் வல்லவரே, தேவனுடைய காரியத்தில் வரும் எப்பிரச்சனையிலிருந்தும் உன்னை விடுவிக்க அவர் வல்லவரே.

உன் தேவனால் உன்னை விடுவிக்க முடியாதா? உன்னை இரட்சிக்கக் கூடாதபடி அவருடைய கரங்கள் குறுகிப்போகவில்லை. உன் விண்ணப்பங்களுக்குப் பதில் கொடுக்க முடியாதபடி அவருடைய செவிகள் மந்தமாகிப்போகவில்லை. இல்லையென்றால் ஏன் சந்தேகப்படுகிறாய். தேவனிடத்தில் நம்பிக்கை வை. இதற்கு முன்னே அவர் உனக்குச் செய்தவைகளையெல்லாம் எண்ணிப் பார். உன்னைக் காத்தார், மீட்டார், நடத்தினார், ஆசீர்வதித்தார். இவைகளுக்காக அவரைப் போற்று, அவரைத் துதி. இனிமேலும் அவர் உன்னை நடத்துவார். அதை நம்பு. உன் அவிசுவாசத்தை விலக்கு. அவரை நோக்கிக் கூப்பிடு. அவருடைய வல்லமை உன்னை நிரப்பட்டும். என்னை நோக்கிகக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் என்கிறார்.

விடுவிக்கிறவர் வல்லவர்,
ஞானம் ஆற்றல் உள்ளவர்,
நித்தியத்தின் மீது அதிகாரம்
உள்ளவர், அவரைப் பற்று, பெலன் கொள்.

சத்தியத்தை வாங்கு அதை விற்காதே

டிசம்பர் 24

“சத்தியத்தை வாங்கு அதை விற்காதே” நீதி.23:23

சத்தியம் நமக்கு அவசியம். நமது மனதுக்கு தெளிவைத்தர, இருதயத்தைத் தூய்மைப்படுத்த, ஆத்துமாவை மகிழ்விக்க, நடத்தையைச் சீர்படுத்த அது மிகவும் அவசியம். எந்த நன்மையும் சத்தியத்திலிருந்ததான் பிறக்கிறது. எல்லாத் தீமைகளையும், அவை பொய்யிலிருந்து உண்டாவதால், அது கண்டிக்கிறது. எனவே சத்தியத்தை வாங்கு. அதை விலைகொடுத்து வாங்க வேண்டிய அளவுக்கு உயர்ந்தது. அதை வாங்குவதற்கு நீ செலவிடவேண்டும். அது விலையேறப்பெற்றது. பலர் இந்தச் சத்தியத்திற்காக தமது சுகத்தையும், பெலத்தையும், இனத்தையும், ஜனத்தையும், ஏன், தங்கள் உயிரையும்கூட கொடுத்திருக்கிறார்கள். சத்தியம் ஒரு பெரும் புதையல். அதன் மையம் கிறிஸ்துவே. கிறிஸ்துவையே சத்தியம் உயர்த்திக் காட்டுகிறது. அதைத் தேடி கண்டுபிடித்து வாங்கு. அதை விற்காதே.

சத்தியத்தைச் சம்பாதிக்க பிரயாசப்படு. கிறிஸ்துவைப்பற்றி ஆழமாகத் தெரிந்துகொள். சத்தியம் எங்கும் நிறைந்துள்ளது. கிறிஸ்துவின் வார்த்தையே சத்தியம். அவரை எவ்வகையிலாயினும் பெற்றுக்கொள். அவரைத் தேடிப் பெற்றுக்கொள். அவருக்காக ஜெபம் செய். சத்தியம் கிடைக்கும்வரை போராடு. அதை உனக்குக் கொடுக்கிறவர் தூயஆவியானவரே. அவரைக் கனப்படுத்து. உனக்கு அவர் சத்தியத்தைக் காட்டுவார். அவர்தான் உன்னைத் தேவனண்டை நடத்துவார். எந்தச் சூழலிலும் உன்னை நடத்த அவரால் முடியும். மனகலக்கத்தில் அவர் உன்னைத் தேற்றி, உன் நோயில் உன்னைக் குணமாக்கி, ஆறுதல்படுத்தி, உன்னைச் சத்தியத்தில் நடத்துவார். அவர் கற்றுத் தருவதனைத்தையும் கற்றுக்கொள். அதுவே உனக்கு உணவும், துணைவுமாகட்டும். ஆண்டவரின் மாட்சிமைக்காக அதைப் பிரசங்கி.

நீரே வழி இயேசுவே
நீரே சத்யம், ஜீவனும்,
நீர் என்னை நடத்தும்,
நேர் வழி நான் காண்பேன்.

தேவனே எங்களைச் சோதித்தீர்

டிசம்பர் 03

“தேவனே எங்களைச் சோதித்தீர்” சங். 66:10

நமது செயல்கள் ஒவ்வொன்றும் சோதிக்கப்படுபவை. நம்முடைய கொள்கையும் சோதிக்கப்படுகிறது. விசுவாசத்தைக் குறித்து பேசுவது சுலபம். ஆனால் அதைக் கைக்கொள்ளுவது கடினம். எந்த நேரத்திலும் எதையும் செய்யலாம் என்பது சாதாரணம். ஆனால் அந்தந்த நேரத்தில் வரும் சோதனைகளைச் சந்திப்பதுதான் கடினம். வீண்பேச்சுப் பேசுகிறவர்கள் அதிகம் தவறு செய்பவர்கள். வீழ்ச்சிக்கு முன் அகந்தை வரும். இந்நேரத்தில் நமது தகுதியை முற்றிலும் தள்ளிவிட்டு, தேவனுடைய உண்மையான வாக்கை நம்பினால் மட்டுமே நன்மை கிடைக்கும். நமது வாழ்வில் இருண்ட நேரங்களில், சாத்தானாகிய விரோதி, இயற்கை உபாதைகளான நெருப்பு, வெள்ளம், பூமியதிர்ச்சி, நமது மனதிலுண்டாகும் திகில், வாழ்வில் துன்பம், இழப்பு ஆகியவை சோதனைகளாய் வரும். சோதனைகளில்லாதபோது சிலர் தேவனை மகிழ்ச்சியோடு ஆராதிக்கின்றனர். ஆனால் சோதனை காலத்தில் பின்வாங்கிப் போகிறார்கள்.

இளம் கிறிஸ்தவர்களில் சிலர் ஆரம்பத்தில் தங்களது கிறிஸ்துவ வாழ்க்கையில் அனலுள்ளவர்களாயிருக்கும்போது, வளர்ச்சியடைந்த கிறிஸ்தவர்களிடம் குறைகளைக் காண முயற்சிக்கின்றனர். ஆனால், தாங்களும் மற்றவர்களைப்போலவே பெலவீனர்தான் என்று தாங்கள் சோதிக்கப்படுகையில் அறிந்து கொள்ளுவர். நம்முடைய தன்மையை தேவன் நமக்குக் காட்டினால்தான் நாம் அதை மெய்யாகத் தெரிந்து கொள்ள முடியும். நமது இருதயம் திருக்குள்ளது. பெலவீனமானது. ஆண்டவர் நமக்கு தரும் சோதனைகளில் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்காக தேவ கிருபைக்காக நாம் ஜெபிக்க வேண்டும். அவர் நம்மை சோதித்து நம்மைத் தம்மிடம் நெருக்கமாக சேர்க்கிறார்.

கர்த்தாவே, உமது வழிகள் எல்லாம்
ஆச்சரியமானவை, என்னைப் புடமிட்டு
என்னைத் தூய்மையாக்கியருளும்
என்னை உம்மிடம் சேர்த்தருளும்.

தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்

நவம்பர் 10

“தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்” ஓசியா 14:2

தேவனுடைய பிள்ளைக்குப் பாவத்தைப்போல் துன்பம் தரக்தக்கது வேறு ஒன்றுமில்லை. பாவத்திலிருந்து விடுதலைபெற வேண்டும் என்றுதான் அவன் விரும்புகிறான். அதற்காகவும் ஜெபிக்கிறான். அவன் எல்லாவற்றிலும் நீதிமானாக்கப்படும்பொழுது தனது குற்றங்களிலிருந்து விடுதலை பெறுகிறான். இதுமட்டுமல்ல, அவன் செய்யும் எல்லா செயல்களையும் பாவ விடுதலையோடு செய்ய விரும்புகிறான். பாவம்தான் ஒருவனை அலைக்கழித்து வருத்தப்படுத்துகிறது. கர்த்தருடைய பிள்ளை என்று சொல்லும் சாட்சியைக் கெடுத்து, அவனுடைய அமைதியைக் குலைத்து விடுகிறது. ஆகவே, அவன் ஆண்டவரிடம், தன்னிடமிருந்து எல்லாத் தீங்குகளையும் போக்கிவிட வேண்டுமென்று கெஞ்சுகிறான். ஜெபிக்க வேண்டும் என்ற இந்த எண்ணத்தைக் கர்த்தர் அவன் இருதயத்தில் உண்டாக்குகிறார். எந்தத் தேவனுடைய பிள்ளையும் முதலில் தேட வேண்டிய காரியம் இதுதான்.

ஒருவன் தன் அக்கிரமங்களினால் வீழ்ந்து இருக்கலாம். அவன் பரிசுத்தத்தின்மூலமாக மட்டுமே எழுந்திருக்கக்கூடும். தன் சொந்த புத்தியீனத்தினால் அவன் விழுந்திருக்கலாம். கர்த்தருடைய இரக்கத்தினால் அவன் எழுந்திருக்கக் கூடும். தேவன் எல்லா அக்கிரமங்களையும் நீக்கி போடுவாரா? ஆம், நீக்கிப்போடுவார். தமது பலியினால் எல்லாப் பாவங்களையும் நீக்குவார். தம்முடைய வசனத்தை நிறைவேற்றிப் பாவத்தின் வல்லமையை அகற்றுவார். மரணத்தை ஜெயிக்க பெலன் தருவார். ஆகவே, ஒவ்வொரு நாளும், கர்த்தாவே, என்னை முற்றிலும் பரிசுத்தமாக்கும். என் ஆத்துமா ஆவி, சரீரம் முழுவதையும் கிறிஸ்துவின் வருகைமட்டும் குற்றமில்லாததாகக் காப்பாற்றும். என்று ஜெபிப்பதால், நாம் மறுபடியும் பிறந்தவர்கள் என்று சாட்சியும் பெறுவோம். அந்த ஜெபத்தைக் கர்த்தர் கேட்பார். நீங்கள் முற்றும் பரிசுத்தமாவீர். அவர் உண்மையுள்ளவர். அவர் அப்படியே உங்களைப் பரிசுத்தமாக்குவார்.

நோயையும் துன்பத்தையுமல்ல
பாவத்தையே என்னிலிருந்து நீக்கும்
எவ்வாறு பெரும்பாவமாயினும்
தயவாக அதை மன்னித்தருளும்.

Popular Posts

My Favorites

இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு

மார்ச் 05 "இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு." ஓசியா 12:16 உன் தேவனை நம்பிக்கொண்டிரு அல்லது உன் தேவனுக்காகக் காத்துக்கொண்டிரு. தேவனிடம் காத்திருப்பதே நம்மை பரம சிந்தைக்கு வழி நடத்துகிறது. அவருடைய சிங்காசனத்துக்கு முன் நிறுத்தி...