இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன்

யூலை 13

“இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன்.” எபேசியர் 2:4

பாவத்தினால் வரும் நம்முடைய நிர்பந்தம் பெரியது. ஆகிலும் தேவனுடைய இரக்கத்தைப்போல அவ்வளவு பெரியதல்ல. நமது துன்பங்கள் அநேகம். தேவ இரக்கம் அவைகளுக்கெல்லாம் மருந்து. இரக்கம் என்பது தேவனுக்கு இருக்கும் ஐசுவரியம். அதைத் தம்முடைய ஜனங்களுக்குக் கொடுக்கிறார். அது துன்பப்பட்ட தம்முடைய பிள்ளைகளுக்கு அவர் காட்டும் தயவு. அதைக் கொண்டுதான் நம்முடைய துன்பங்களை அவர் சரியாய் அறிந்து உணருகிறார். பழைய ஏற்பாட்டில் அவருடைய ஜனங்களைப்ற்றி, அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார். அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார். அவர் தமது அன்பின் நிமித்தம் அவர்களுடைய பரிதாபத்தின் நிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வ நாள்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்து வந்தாரென்று சொல்லப்பட்டிருக்கிறது.

தேவ இரக்கம் அளவற்றது. அது இரட்சகர்மூலமாய்ப் பாய்கிறது. நம்முடைய துக்கத்தை ஆற்றுகிறதினாலும் நம்முடைய குறைவுகளை நீக்குகிறதினாலும், நம்முடைய பாவங்களை மன்னிக்கிறதினாலும் நம்முடைய வருத்தங்களை அகற்றுகிறதினாலும் அலைந்து திரிகிற நம்மைத் திரும்பக் கொண்டு வந்து சேர்க்கிறதினாலும் அது மகிமைப்படுகிறது. அன்பர்களே, இந்த நாளில் தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர். அவர் உனக்க இரக்கம் வைத்திருக்கிறார். உனக்கு தேவையான இரக்கம் அவரிடத்தில் உண்டு. நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்கிறார். அவர் வாக்கை நம்பு. அவர் சமுகத்தில் இரக்கத்திற்காக கெஞ்சு. தமது இரக்கத்தை உன்னிடத்தில் மகிமைப்படுத்த வேண்டுமென்று கேள். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் அவர் ஐசுவரிய சம்பன்னர் என்பதே உனக்கு போதுமான தைரியம். ஆகவே இன்று அவர் வார்த்தையை நம்பி அவரைக் கனப்படுத்து.

பூமிக்கு வானம் எப்படி
உயர்ந்து இருக்கிறதோ,
அவர் இரக்கம் அப்படி
நமது பாவம் மூடாதோ?

இராக்காலம் வருகிறது

யூலை 02

“இராக்காலம் வருகிறது.” யோவான் 9:4

இரவு என்பதில் பயமும், திகிலும் உண்டு. இராக்காலம் மரணத்தின் அறிகுறி. மரணத்திற்குப் பிறகு இந்த உலகில் நன்மை செய்வதற்கான சந்தர்ப்பம் கிடையாது. ஆகவே, நிகழ்காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ள வேண்டும். மரணம் வரும்போது நம்முடைய எல்லா வேலைகளும் முடிந்து விடும். முடியாவிட்டால் அரைகுறையாய் அதை விட்டுப்போக வேண்டும். ஆதலால் காலம் இருக்கும்போதே அதை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மரணம் வரும்போது நாம் சிநேகிதரை விட்டுப் போக வேண்டும். ஆகவே உயிருள்ளபோதே அவர்கள் நட்பைக் காத்துக்கொள்வோமாக. ஒரு நாள் மரணம் வரும்போது எல்லாரையும்விட்டு இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்போம். நம்முடைய ஆத்துமா அமைதியாய் இளைப்பாறும். அது ஆண்டவர் சமுகத்தில் தங்கி அங்கே இளைப்பாறி திருப்தி அடையும்.

இராக்காலம் வருகிறது. அது தூரத்தில் இல்லை. சிலருக்கு அது வெகு அருகில் இருக்கலாம். திடீர் என்றும் வரலாம். ஆகவே நாம் ஆயத்தமாய் இருக்க எச்சரிக்கப்படுகிறோம். இயேசுவை விசுவாசித்தவர்களாக காலத்தை ஆதாயப்படுத்தி, நாள் முழுவதும் வேலை செய்து, இரவுக்கு ஆயத்தப்பட்டவர்களாய் இருப்போமாக. நம்முடைய வேலை முடிந்தது. தேகம் இளைத்தது. பரம பாக்கியத்தின் பேரில் ஆசை மிகுந்தது. எப்போது பேரின்ப வீட்டுக்குப் போகலாம் என்று சந்தோஷமாய் எதிர்பார்க்கிறவர்களைப்போல இருக்கக்கடவோம்.

தேவனிடம் கிட்டி சேர்ந்து
அவரைப்போல் இருப்பது
எப்போ கிடைக்கும், அப்போ
பாவம் முற்றிலும் ஒழியும்.

கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார்

யூலை 14

“கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார்” சங். 97:1

கர்த்தர் உன் இரட்சகர். அவர் உன் தன்மையைத் தரித்திருக்கிறார். அவர் உன்னை நன்றாய் அறிவார். ஒரு தாய் தன் ஒரே மகனை நேசிக்கிறதிலும் அவர் உன்னை அதிகமாய் நேசிக்கிறார். அவர் செய்கிற சகலத்திலும், அவர் அனுமதிக்கிற சகலத்திலும் உன் நலத்தையே விரும்புகிறார். அவர் சர்வ லோகத்தையும் ஆண்டு நடத்துகிறார். சிம்மாசனங்களும், அதிகாரங்களும், துரைத்தனங்களும் அவருக்குக் கீழ்ப்படிகிறபடியால் அவரே எல்லாவற்றிற்கும் மேலாக ஆளுகை செய்கிறார். அவர் ஆளுகையில் அவருடைய ஞானமும், வல்லமையும், நீதியும், இரக்கமும், ஏகாதிபதியமும் ஒன்றுபோல விளங்குகிறது. பரிசுத்தமும் பாக்கியமும் தமது பிள்ளைகளுடைய நித்திய சேமமும் விருத்தியாக வேண்டுமென்றே ஆளுகை செய்கிறார்.

அவர் தம்முடைய சத்துருக்களின்மேல் ஆளுகை செய்து அவர்களுடைய இரகசிய தந்திரங்களை அவமாக்கி அவர்களுடைய சத்துவத்தைக் கொண்டு தமது சித்தத்தை முடிக்கிறார். தம்முடைய சிநேகிதர்மேல் ஆளுகை செய்து பொல்லாங்கினின்று அவர்களைக் காப்பாற்றி அவர்களின் காரியங்களை நடத்தி தம்முடைய வாக்கை நிறைவேற்றுகிறார். கர்த்தர் இராஜரீகம்பண்ணுகிறார். சாத்தான் உன்னைப்பிடிக்க கண்ணிவைக்கும்போதும், பாவம் உன்னைக் கீழே விழத்தள்ளும்போதும் இதை நினை. நற்செல் உனக்கு விரோதிகளை உண்டாக்கி, உன் ஒழுங்குகளைக் குலைத்து, உன் நன்மைகளைக் கெடுத்து, உன் விசுவாசத்தைச் சோதிக்கும்போது இதை நினை. புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் உண்டாகி, சத்துருக்கள் உன்னை வெறுத்து, வியாதி உன்னை வருத்தி, மரணப் படுக்கையில் இருக்கும்போதும் இதை நினை. சகலத்திற்கும் மேலாக இரட்சகர் ஆளுகை செய்கிறபடியால் உனக்குப் பயம் இல்லையென்று நினைத்துச் சந்தோஷப்படு.

கர்த்தர் இராஜாதி இராஜன்
மகிழ்ந்து அவரைப் போற்று,
சுத்தாவி என் உள்ளத்தில்
தங்கும் இது என் மன்றாட்டு.

கர்த்தாவே என்னைச் சேதித்துப்பாரும்

யூலை 10

“கர்த்தாவே என்னைச் சேதித்துப்பாரும்” சங். 26:2

கர்த்தர் மனிதரைப் பார்த்து, ஒவ்வொருவனும் தன்னைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்கிறார். தேவ பிள்ளை தன்னைச் சோதித்துப் பார்த்து தான் செய்தது போதுமென்றிராமல் தேவனை நோக்கி, கர்த்தாவே நீர் என்னை சோதித்துப்பாரும் என்பான். தன் இருதயம் மோசமானதென்று அறிந்து இன்னும் மிகுதியாக மோசப்பட்டு போவேமோ என்று பயப்படுகிறான். என்னதான் கேடுள்ள ஒருவனிருந்தாலும் அவன் நல்லதை அறியவே விரும்புகிறான். தன் இருதயம் செம்மையாக இருக்க வேண்டுமென்று விரும்புகிற ஒளியினிடம் வருகிறான்.

ஆத்துமாவில் தேவ கிருபை இருக்கிறது என்பதற்கு இது நல்ல அத்தாட்சி. தேவனால் போதிக்கப்படுபவர்கள்தான் கர்த்தாவே என்னைச் சோதித்துப்பாருமென்று கேட்பார்கள். சிநேகிதரே இன்று இரவு இப்படி ஒரு ஜெபத்தைபண்ணுவீரா? தேவன் உங்களை சோதித்து பார்ப்பது உங்களுக்குப் பிரியமா? கர்த்தாவே என் இருதயத்தை சோதித்துப்பாரும். நான் உமது கிருபையைப் பெற்றவனா? என் நோக்கங்களை சோதித்துப்பாரும். அவைகள் சுத்தமானவைகளா? அவை தேவ வசனத்தோடு ஒத்திருக்கிறதா? என் எண்ணங்களைச் சோதித்துப்பாரும். உம்முடைய மகிமையையும் சித்தத்தையும் நாடுகிறேனா என்று கேளுங்கள். உன்னை நீயே சோதித்துப் பார்ப்பது தான் இந்த ஜெபத்தின் நோக்கம். என்னைச் சோதித்துப்பாருமென்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். உத்தமன்தான் தன் காரியங்களை நன்றாய்ச் சோதித்துப் பார்க்க கேட்பான். உத்தம சிந்தையுள்ள கிறிஸ்தவர்கள்தான் தேவன் தங்களை ஆராய வேண்டுமென்று மனதார ஜெபம்பண்ணுவார்கள்.

என்னைச் சோதித்தறியும்,
உமது ஆவியை அருளும்
சூது கபடு ஒழியட்டும்
நான் உமதாலயம் ஆகட்டும்.

இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு

யூலை 27

“இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு” லூக்கா 15:2

இதுதான் நமது இரட்சகருக்கு விரோதமாய் சொல்லப்பட்ட வழக்கு. அவர் பாவிகளை ஏற்றுக்கொண்டார் என்ற வார்த்தை நமக்கு எவ்வளவோ ஆறுதலைத் தருகிறது. அவர் பாவிகளாகவே நம்மை ஏற்றுக்கொண்டார். இன்றும் அவர் பாவிகளை ஏற்றுக்கொள்கிறார். அவர்கள் பாவங்கள் நிமித்தமே அவர்களை ஏற்றுக்கொள்கிறார். அவர்கள் எவ்வளவு கெட்ட பாவிகயாய் இருந்தாலும், எவ்வளவு அற்பரும் மற்றவர்களால் புறக்கணக்கப்பட்டவர்களாய் இருந்தாலும், அவர்கள் எவ்வளவு தாழ்வானவர்களாய் இருந்தாலும் இன்னும் அவர்களை ஏற்றுக்கொள்கிறார். எந்த இடத்திலும் எக்காலத்திலும் பாவிகளை வித்தியாசமின்றி ஏற்றுக்கொள்கிறார். எவ்வளவு தீட்டுள்ள கெட்டப் பாவியாய் இருந்தாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ள எந்தத் தகுதியும் இல்லாதிருந்தும் அவர்களைக் கிருபையாய் ஏற்றுக்கொள்கிறார்.

அவர்களின் பாவங்களை மன்னித்து அசுத்தத்திலிருந்து கழுவி, குற்றங்களைப் பரிகரித்து, நீதிமான்களாக்கி, காயங்களைக் கட்டி, புது சிருஷ்டிகளாய் மாற்றி, தமது மகிமைக்கென்று உபயோகப்படுத்த அவர்களை ஏற்றுக்கொள்கிறார். விசேஷித்த ஜனங்களாய் பூமியில் நற்கிரியைக் குறித்து வைராக்கியராகவும், தம்மோடு மோட்சத்தில் என்றைக்கும் மகிமைப்படுத்தவும் அவர்களை ஏற்றுக்கொள்கிறார். பிரியமானவேர, தேவனிடத்தில் பரிசுத்தனாய் போக முடியாதென்று கண்டால் இயேசுவினிடத்தில் பாவி என்று போ. இந்த நிமிடமே அவர் உன்னை ஆசீர்வதிக்கக் காத்து நிற்கிறார். ஆகையால் போ.

இயேசுவின் இரத்தம் கழுவி
குற்றம் நீக்கிடும்
ஆத்துமாவை அலங்கரித்து
பேரின்பத்தில் சேர்த்திடும்.

இனி குழந்தைகளாய் இராமல்

யூலை 16

“இனி குழந்தைகளாய் இராமல்” எபேசி. 4:14

இந்த வசனம் ஓரே நிலையையல்ல வளர்ச்சியைக் குறிக்கிறது. நாம் எப்போதும் பிள்ளைகளைப்போல இருந்தாலும் அறிவில் பெரியவர்களாய் இருக்கவேண்டும். கர்த்தர் தம்முடைய ஜனங்கள் வளர்வதற்கேற்ற சூழ்நிலையை உண்டாக்கியிருப்பதுமல்லாமல், அவர்கள் வளர வேண்டும் என்று கற்பிக்கிறார். நாம் அறிவில் வளர வேண்டும். சிறு பிள்ளைகள் சிறிய காரியங்களில் திருப்தியடைகிறார்கள். நாம் அப்படி இருக்கக்கூடாது. நாம் பலப்பட்டு கிறிஸ்துவிலுள்ள கிருபையில் பெலப்பட வேண்டும். நம் சத்துருக்களுக்கு எதிராகத் திடன் அடைந்து கர்த்தருடைய காரியத்தில் தைரியம் பெற்று திவ்வி காரியங்களில் உறுதியாய் இருக்க வேண்டும்.

நம்முடைய விசுவாசமும், நம்பிக்கையும், வைராக்கியமும் அன்பும் பெருகவேண்டும். நாம் இருக்கிறபடியே இருக்கக்கூடாது. குழந்தைகளாகவும் வளரவேண்டும். நாம் வளரும்படி ஞானத்திலும், பக்தியிலும் பெருக வேண்டும். நாம் வளரும்படிக்கு கிறிஸ்துவை உள்கொண்டு சகல கிருபைகளையும் முயற்சி செய்து தேவனோடு ஐக்கியப்பட வேண்டும். நாம் வளரும்படிக்கு தேவன் தம்முடைய வசனத்தையும், நியமங்களையும், தமது குமாரனையும் தந்திருக்கிறார். நாம் பூரணராகும்படிக்குத் தம்முடைய ஊழியக்காரரையும் தாம் செய்து முடித்த கிரியைகளையும், தம்முடைய சத்துருக்களையும்கூட பயன்படுத்துகிறார். நாம் திராட்சை செடிபோலவும், தொழுவத்தில் உள்ள கன்றுகுட்டிகளைப்போலவும் வளருவோம் என்று வாக்குக்கொடுத்திருக்கிறார். ஆதலால் வளர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு வாக்கியத்தில் கண்டிருக்கிற எச்சரிக்கையை ஏற்றுக்கொள்வோமாக. நாம் குழந்தைகளாய் இருக்ககூடாது.

பிதாவே எப்போதும்
குழந்தைகள் போலிராமல்
எங்கள் ஒளி மென்மேலும்
பிரகாசிக்க செய்யும்.

அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து

யூலை 01

“அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து.” சங்.103:3

தினந்தோறும் நாம் பாவம் செய்கிறபடியால் தினந்தோறும் நமக்கு மன்னிப்பு தேவைப்படுகிறது. நம்முடைய பாவம் கொடிய தன்மை உடையது. இரத்தக் கிரயத்தைக் கொடுத்து, நம்மை மீட்ட ஆண்டவருக்கு விரோதமாக நாம் பாவம் செய்கிறோம். தன் எஜமான் வீட்டில் வாசம் செய்து அவருடைய போஜனத்தை அவரோடு புசித்து, அவருடைய உதாரத்துவத்தால் சகலத்தையும் பெற்று அனுபவிக்கிற ஊழியக்காரன், இப்படி தனக்கு தயவு காட்டுகிற எஜமானுக்கு விரோதமாய் பாவம் செய்கிறதுபோல நாமும் பாவம் செய்கிறோம். பாசமாய் வளர்க்கப்பட்ட பிள்ளை, ஒரு நல்ல பட்சமுள்ள அன்பான தகப்பனுக்கு விரோதமாய் பாவம் செய்கிறதுப்போலவே நாமும் பாவம் செய்கிறோம்.

நம்முடைய பாவங்கள் அநேகம். அடிக்கடி செய்கிறோம். அது பல வகையானது. அவைகளினின்று தப்ப முடியாது. ஆயினும் கர்த்தர் நம்முடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னிக்கிறார். நிறைவாயும், இலவசமாயும், எவ்வித குறைவுவராமல் மன்னிக்கிற தேவனைப்போல வேறு ஒருவரும் இல்லை. இந்த மன்னிப்பு இயேசுவின் இரத்தத்தால் கொள்ளப்பட்டது. அவர் மன்னிப்பைத்தரும்போது பாவத்தின்மேல் பகையும், துக்கமும், அதை விட்டுவிலகுதலும் உண்டாகவேண்டும். தேவன் நம்மைப் பலமுறை மன்னித்து கொண்டே இருக்கிறார். தகப்பனைப்போல் அன்பாயும், பலமுறையும் மன்னிக்கிறார். தேவன் இரக்கமாய் மன்னிக்கிறார் என்று சாட்சி கொடுத்த தாவீது பெரிய பாவி. அவன் விபசாரம் செய்து மோசம்பண்ணி, கொலைக்கும் ஆளாகி, அது தெய்வ செயல் என்று சொல்லி வெகு காலம் பாவத்தில் உறங்கிக்கிடந்தான். ஆனால் அவன் மனசாட்சி குத்தினபோது தேவனுக்குமுன் பாவங்களை அறிக்கையிட்டான். இதை வாசிக்கிறவரே, நீர் பாவமன்னிப்பு பெற்றதுண்டா? நீர் குற்றவாளி அல்லவா? தேவன் உமக்கு மன்னிக்க காத்திருக்கிறார். பாவத்தை அறிக்கை செய்து, ஜெபம்பண்ணு. இயேசுவின் புண்ணியத்தைச் சொல்லி, கெஞ்சி மன்னிப்பைப் பெற்றுக்கொள்வீராக.

இயேசுவே உமது அருளை
சொல்வது என் பெருமை
அதை என்றும் போற்றவே
மன்னிப்பளித்துக் காருமேன்.

நான் அவர்கள் தேவனாய் இருப்பேன்

யூலை 09

“நான் அவர்கள் தேவனாய் இருப்பேன்.” எரேமி. 32:38

இது இஸ்ரவேல் ஜனங்களைக் குறித்துச் சொல்லப்பட்டதாய் இருந்தாலும், மெய்யான இஸ்ரவேலரான விசுவாசிகளுக்கும் ஏற்றதுதான். ஆண்டவர் இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட எவரைக்குறித்தும் இப்படி சொல்லலாம். அழுகையோடும் விண்ணப்பத்தோடும் தேவனிடம் திரும்புகிற எந்தப் பாவிக்கும் அவரின் கிருபையின் வார்த்தையை நம்புகிற ஒவ்வொருவருக்கும், எந்த ஓர் உண்மையான விசுவாசிக்கும் இந்த வாக்குத்தத்தத்தில் பங்குண்டு.

நான் அவர்கள் தேவனாய் இருப்பேன் என்பதின் ஆழ்ந்த சத்தியம் என்ன? அவர்கள் என் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து, என் வார்த்தையை அங்கிகரித்து, என் சிம்மாசனத்தண்டை பணிந்து, எனக்கு ஊழியம் செய்து, என் சித்தத்தை நிறைவேற்றி, எல்லாவற்றிற்கும் மேலாக என்னை உயர்த்தி, தங்களின் தேவனாக என்னை நம்பி, என்னை ஆராதித்து என்னை நேசிப்பார்கள் என்பதே இதன் கருத்து. நான் அவர்களின் தேவனாய் இருப்பேன் என்றால், அவர்களை நடத்த என் ஞானமும், அவர்களை ஆதரிக்க என் வல்லமையும், அவர்களுக்கு நிச்சம் உண்டாக்க என் அன்பும், அவர்களை இரட்சிக்க என் கிருபையும், அவர்களைச் சுத்திகரிக்க என் பரிசுத்தமும், அவர்களை ஆறுதல்படுத்த என் ஆவியும் கிடைக்கும் என்பதே சத்தியம்.

அவர்கள் தேவனாக நான் அவர்களோடு இருப்பேன். அவர்கள் பட்சத்தில் இருப்பேன். அவர்களுக்குத் தேவனாய் இருப்பேன். அவர்களை விட்டுவிலகவும் மாட்டேன். கைவிடவும் மாட்டேன். நான் வாக்களித்தபடியெல்லாம் அவர்களுக்குச் செய்வேன். என் உடன்படிக்கையில் சவதரித்து வைத்திருக்கிறதெல்லாம் அவர்களுக்குக் கொடுப்பேன். விசுவாசியே, இந்த வாக்குத்தத்தத்தில் தேவன் உனக்குக் காட்டும் மகா பெரிய இரக்கத்தைப் பார்.

இதுவே எனக்காதாரம்
என் கவலைகள் நீங்கும்
அவர் என் தேவனானால்
துக்கம் களிப்பாகுமே.

என்னை நோக்கிப் பாரும்

யூலை 11

“என்னை நோக்கிப் பாரும்” சங். 119:132

ஒரு சிறு பிள்ளை தன் தகப்பன் தன்னைக் கவனிக்கும்படி கேட்கிறது. தேவன் செய்கிறதெல்லாம் சுலபமாக செய்கிறார். நம்முடைய வருத்தங்களை நீக்கி துன்பத்தினின்று நம்மை விடுதலையாக்க நமக்குச் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தர அவர் நம்மைப் பார்த்தால் போதும். அவர் பார்வை யோபைத் தாழ்மைப்படுத்தி கிதியோனைப் பலப்படுத்தி, பேதுருவை மனந்திரும்பச் செய்து, சாகிற ஸ்தேவானைச் சந்தோஷத்தாலும், சமாதானத்தாலும் நிரப்பிற்று. பார்ப்பது என்பது தயவு காட்டுவது ஆகும். சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுஞ்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன். தேவன் நம்மை நோக்கிப் பார்க்க வேண்டுமானால் நம்முடைய கண்களை அவரண்டைக்கு உயர்த்த வேண்டும். அவர் நம்மைப் பார்த்து நமதுமேல் கிருபையாய் இருக்க வேண்டுமானால் நாம் விசுவாசத்தோடு அவரை நோக்கி கெஞ்ச வேண்டும்.

அன்பர்களே, தேவனுடைய கண் உங்கள் மேலிருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அது இன்னதென்று உணருகிறீர்களா? அது இன்னதென்று உணருகிறீர்களா? அவர் இரக்கமாய் உங்களைக் கண்ணோக்குவாரானால் உங்கள் பயங்கள் நீங்கிப்போம். உங்கள் அந்தகாரம் விலகும். நீங்கள் ஒளியினாலும் பரிசுத்த நம்பிக்கையினாலும் நிரம்பப்படுவீர்கள். இவ்வளவு நாம் தேவனிடத்தில் கேட்கலாமென்று நினைக்கிறீர்களா? நாம் பெற்றுக்கொள்வதற்கு இது அதிகமென்று நினைத்தாலும் அவர் கொடுப்பதற்கு இது அதிகமல்ல. நாம் அவரோடு ஒப்புரவானோம் என்று இது காட்டுகிறது. அவர் நம்மேல் அக்கறை வைத்துள்ளாரென்று இது நிரூபிக்கும். இது நமக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். இந்த இரவில் நீயும்கூட என்னை நோக்கிப் பாரும் ஆண்டவரே என்று சொல்லி படுக்கைக்குச் செல்.

உமது அடிமையைப் பாரும்
மன்னித்து மகிழ்ச்சி அளியும்
உமது சமுகம் காட்டியே
அமர்ந்து தூங்கச் செய்யும்..

உக்கிரம் என்னிடத்தில் இல்லை

யூலை 24

“உக்கிரம் என்னிடத்தில் இல்லை” ஏசாயா 27:4

தேவனுடைய தன்மைகளைப்பற்றி நாம் சரியான ஒரு தெளிவு இல்லாமல் இருக்கிறோம். அவரைக் கோபமுள்ளவராகவே அடிக்கடி பார்த்து பயப்படுகிறோம். தேவன் இயேசுவிலே நம்மைச் சந்தித்து நம்மை ஆசீர்வதித்து, நம்மிடத்தில் எரிச்சலாயில்லை என்று செல்லுகிறார். இது தான் நம்முடைய நம்பிக்கையின் ஆதாரம். தேவனிடத்தில் எரிச்சலில்லை. ஆனால் அன்பு உண்டு. ஆகவே நாம் நம்பிக்கை கொள்ளலாம். அவர் என் வேண்டுதலைத் தள்ளார். என் ஜெபத்தைக் கேட்காது என்னைத் தமது ஆசனத்தண்டையிலிருந்துத் துரத்தமாட்டார். இதுதான் ஆறுதலுக்கு ஊற்று. தேவனிடத்தில் எரிச்சல் இல்லாவிட்டால் மனிதனுடைய கோபம் விருதா. பாதாளத்தின் எரிச்சலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

இது நமது பயத்திற்கும், சந்தேகத்திற்கும் நல்ல மாற்று மருந்து. தேவனிடத்தில் எரிச்சல் இல்லாவிட்டால், சாவைப்பற்றிய பயம் இருக்காது. மாறாக தேவன் என்னைத் தள்ளிவிடுவார் என்ற பயம் இருக்காது. நியாயத்தீர்ப்பை குறித்த பயம் இருக்காது. இதற்காக நாம் அவருக்கு நன்றி செலுத்தி துதிக்க வேண்டும். தேவனிடத்தில் உக்கிரம் இல்லாததால் நாம் அவர் சமீபமாய்ப் போகலாம். அவரை நம்பி, அவர் நன்மை செய்வார் என்று எதிர்பார்க்கலாம். ஆகவே நாம் அவரைத் துதிக்க வேண்டும். தேவனிடம் உக்கிரம் இல்லாததால் நாம் யாருக்கும், எதற்குப் பயப்பட வேண்டும்? இது துன்பத்தில் அடைக்கலம். வனாந்தரத்தில் தண்ணீர் ஊற்று. அவாந்தரவெளியில்  திராட்சை தோட்டம். தேவனுடைய பட்டணத்தைச் சந்தோஷப்படுத்துகிற வாய்க்கால் சுரக்கும் நதி. தேவன் உக்கிரம் உள்ளவர் அல்ல. அவர் அன்புள்ளவர். அவர் இருள் அல்ல, ஒளி. அன்பானவர்களே. நீங்கள் உங்கள் தேவனைப்பற்றி என்ன எண்ணம் கொண்டிருக்கிறீர்கள் என்பதில் எச்சரிக்கையாய் இருங்கள். அது வசனத்துக்கு ஒத்திருக்கட்டும். புது உடன்படிக்கைக்கு இசைந்திருக்கட்டும்.

தேவன் அன்பானவர்
தன் சுதனையே தந்தார்
என்றும் நம்மை மறவார்
கடைசிவரை காப்பார்.

Popular Posts

My Favorites

சுமை தாங்கிகள்

நம் நாட்டில் பல பகுதிகளில் சுமை தாங்கி கற்கள் பாதையின் ஓரங்களில் அடுத்தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. சுமைகளை தூக்கி நடப்பவர்கள் சுமைதாங்கி மீது தங்கள் சுமைகளை வைத்து அருகிலுள்ள மரத்தின் நிழலில் சிறிது நேரம்...