தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 2

இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து

அக்டோபர் 28

“இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து” லூக்கா 8:35

வசனத்தில் குறிப்பிட்டபடி ஆண்டவரின் பாதத்தருகே உட்கார்ந்திருந்த ஏழை மனிதன் சிறிது நேரத்திற்குமுன்தான் சாத்தானுடைய கட்டுகளிலிருந்து விடுதலையானான். அவர் தேவனுடைய வல்லமையைக் கண்டு அவரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். அவருடைய வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, அவருடைய பாதத்தருகே நன்றியுள்ளவனாக அமர்ந்திருந்தான். நாமும் ஜீவனுள்ளவைகளைக் கற்றுக்கொள்ளவேண்டுமானால், தேவனுடைய பாதத்தருகேதான் இருக்க வேண்டும். இந்த இடத்தை எவரும் பெறலாம். இப்போதும் இயேசு நம்மோடிருக்கிறார். நாம் அவர் பாதத்தருகே உட்கார்ந்து அவருடைய வார்த்தைகளைக் கவனமாகக் கேட்டு, அவரின் உபதேசத்தை ஏற்றுக்கொள்ளுவோம். அவர் நம் எஜமானாக இருக்க நாம் விரும்பி ஏற்றுக்கொள்ளுவோம்.

ஆண்டவரின் பாதமே தயவும், அன்பும் நிறைந்த இடம். இங்கு நமக்கு எவ்வித பயமும் இல்லை. இங்குதான் ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைக்கும். புதுப்புது காரியங்கள் நாம் அவரிடம் கற்றுக்கொள்ளலாம். நமக்கும் தேவனுக்குமுள்ள ஐக்கியத்தை இது காட்டுகிறது. நாம் கிறிஸ்துவோடு சேர்ந்திருக்கிறோம் என்பதற்கு இது சாட்சி. அவர் பாதத்தருகே இருக்கும் நாம் எண்ணிறந்த நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம். நமது வாழ்வின் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய இடம் இதுவே. அவருடைய பாதத்தருகே அமர்ந்து, அவருடைய உபதேசத்தை ஏற்றுக்கொள்வோம். என்னவாயினும் இவ்விடத்தை விட்டு அகலவேண்டாம். சாத்தானின் சூழ்ச்சியை முறியடிப்போம். இவ்விடத்தில்தான் நாம் தேவனோடு வாழும் வாய்ப்பைப் பெறுகிறோம். இவ்விடத்திலிருக்கும் பொழுதுதான் நமது வாழ்க்கை பிறருக்கு முன்மாதிரியான வாழ்க்கையாகும்.

இயேசுவின் பாதத்தில் அமர்வேன்
இகத்திலும் பரத்திலும் பெறுவேன்
எண்ணற்ற ஆசீர்வாதங்கள்தனை
என்றுமவரைப் போற்றிப் பாடுவேன்.

தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு

யூன் 03

“தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு….” 1.கொரி. 15:28

யோகோவா எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருக்கிறார். தமது சகல வழிகளிலும் கிரியைகளிலும் தாம் மகிமைப்படுவதே அவர் நோக்கம். இரட்சண்ய ஒழுங்கில் அவர்தான் சமஸ்தம். அந்த ஒழுங்கு நித்தியத்தில் அளவற்ற ஞானத்தால் ஏற்படுத்தப்பட்டு, மகாவல்லமையால் நடத்தப்பட்டு வருகிறது. நாம் இரட்சிப்புக்கென்று தெரிந்துக்கொள்ளப்பட்டோமெனில் அது இயேசு கிறிஸ்துவினால் தேவனுக்குள் ஆயிற்று. நாம் இயேசுவுக்குச் சொந்தமாக்கப்பட்டோமெனில் அதைச் செய்தவர் பிதா. நித்திய ஜீவனுக்கென்றுக் குறிக்கப்பட்டோமெனில் அது உன்னத தேவனின் செய்கை. எல்லா பரம ஆசீர்வாதத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோமெனில் அது இரக்கங்களின் பிதாவால் அப்படியாயிற்று. கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்டோமெனில் அவர் அப்படிச் செய்ய பிதாவினால் முன் குறிக்கப்பட்டார்.

நாம் உயிர்ப்பிக்கப்பட்டோமெனில் அது தேவனால் ஆயிற்று. நாம் தேவனால் போதிக்கப்பட்டோமெனில் அதுவும் தேவனால் ஆயிற்று. நமக்கு விசுவாசமும் மறுபிறப்பும் கிடைக்கிறதா? அதுவும் தேவனுடைய சுத்த ஈவு. நாம் சாத்தானை மேற்கொள்ளுகிறோமா? சமாதானத்தின்தேவன் அவனை நம்முடைய கால்களின் கீழே நசுக்கினபடியால் அப்படிச் செய்கிறோம். நாம் அதிகம் உழைக்கிறோமா? அது நமக்குள் வல்லமையாய் கிரியை செய்கிற அவருடைய சத்துவத்தினால் ஆயிற்று. நாம் பரிசுத்தராய் இருக்கிறோமா? அது தேவ கிருபைதான். நம்முடைய சத்துருக்கள் யாவரையும் மேற்கொள்கிறோமெனில் அது அவர்மூலம்தான். இவ்வுலகில் அவர்தான் சர்வவல்லவர். நாம் மோட்சம் சேர்ந்து வாழப்போகிறதும் அவரால்தான். தேவ நேசமும், நேசத்தின் தேவனுமே நமது நித்திய ஆனந்தத்திற்குக் காரணம். என்றுமுள்ள நிறைவான இரட்சிப்பில் தேவன்தான் சர்வவல்லவர்.

தேவனை அறியப்பார்
அவர் தன்மையை தியானி
நீதி அன்பு உள்ளவர்
மகா மகிமை நிறைந்தவர்.

முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்

அக்டோபர் 10

“முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்” எபி. 10:32

நடந்து முடிந்த காரியங்களைத் திரும்பிப்பார்ப்பது அதிக பலனைத் தரும். நமந்து முடிந்த காரியங்களை நாம் இன்னு தியானிப்பது நல்லது. நமது நாடு முற்றிலும் இருண்டு, சிலை வணக்கத்திலும் அவ பக்தியிலும், கீழ்ப்படியாமையிலும், பாவத்திலும் வளர்ந்துள்ளது. இவைகளின் மத்தியில் தேவன் நம்மைத் தம்முடைய பிள்ளைகளாகத் தெரிந்துக்கொண்டார். முன்னால் நாம் பிசாசுக்கும் பாவத்திற்கும் அடிமைப்பட்டிருந்தோம். சாத்தானால் ஆளப்பட்டோம். வழிதவறி உலகப்பற்றுள்ளவர்களாக வாழ்ந்து வந்தோம். தேவனோ நம்மேல் இரங்கிக் கிருபையால் நம்மைத் தெரிந்துகொண்டார். பாவத்திலும் அக்கிரமத்திலும் முழ்கிக் கிடந்த நம்மை உயிர்பித்துக் கிறிஸ்துவுடனே சேர்த்துக் கொண்டார். அன்று இரட்சகர் நம்மை நினைத்ததால், இன்று அவரை நாம் இனியவராக அறிகிறோம். சுவிசேஷம் நம்மைக் தேடி வந்தது நமக்கு எத்தனை பெரும் பேறு.

தேவன் நம்மைத் தெரிந்துகொண்ட அந்த நாள் ஆனந்த நாள். அவருடைய ஆலயம் நம்கு இன்பமான வாசஸ்தலமாக மாறியது. ஆத்துமாவே, உனது இன்றைய நிலை யாது? ஆண்டவரைப் பற்றிய பக்தி வைராக்கியம் இன்று குறைந்திருக்கிறதா? வேதத்தின்மேல் முன்போல் வாஞ்சையாயிருக்கிறாயா? தேவ ஊழியத்தில் பங்குகொள்கிறாயா? உனது ஜெப வாழ்க்கை முன்னேறியுள்ளவதா? ஆத்துமா பாரம் உனக்கு உண்டா? ஆவிக்குரிய காரியங்களில் அனல்குன்றிவிட்டாய். முந்தைய நாள்களை நினைத்துக்கொள். ஆதி அன்பை விட்டுவிடாதே. கர்த்தர் உன்னைப் போஷித்து நடத்தினார். உன்னைத் தூய்மைப்படுத்தினார். இன்று உன்னை உன் முந்தின நாள்களை நினைத்துப் பார்க்கச் சொல்லுகிறார்.

முந்தின நாள்களிலெல்லாம்
முனைப்பாய்க் காத்து வந்தீர்
பிந்திய காலத்தில் பின் வாங்கிப்போன
பாவியென்னைத் திருப்பியருளும்.

இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதில்லை

மார்ச் 04

“இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதில்லை.” 1.சாமு. 15:29

கர்த்தர் பொய் சொல்லாதவரானபடியால் நாம் அவருக்கு உண்மையாக இருந்து அவரை நம்பவேண்டும். இது நமது கடமை. அவருக்கு முன்னால் பொய்யற்றவர்களாக நிற்க வேண்டும். அவருடைய பொய் சொல்லா வாக்குகளெல்லாம் அவர் அன்பிலிருந்து பிறக்கும் கனிகள். அவர் சர்வ வல்லவரானபடியால் தமது வார்த்தைகளை எவ்விதமும் நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார். அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறபடியால் எவ்விதத்தினாலும் அதை நிறைவேற்றுவார். தமது ஜனங்களை ஆற்றித்தேற்ற அவர் வல்லமை உள்ளவர். அவர் தமது வசனத்தின்மூலம், நம்மோடு பேசுகிறார். பாவிகளாகிய நம்மைப் பார்த்து பேசுகிறார். சோதனையிலும், துன்பத்திலுமிருக்கிற உங்களைப் பார்த்து இந்த நாளில் இருக்கிறவிதமாய் பேசுகிறார்.

நம் பயங்களைப் போக்க, நம்முடைய துன்பங்களில் நம்மை மகிழ்ச்சியாக்க, நம்முடைய வருத்தங்களில் நமக்கு ஆறுதல் அளிக்க நம்மைப் பார்த்துப் பேசுகிறார். அவர் உண்மையுள்ள வார்த்தையை நாம் உண்மையாய் நம்புகிறோமா? தேவன் உண்மையையே பேசுகிறார் என்று நினைக்கிறோமா? அவர் நமக்கு உண்மையாய் இருக்கிறதுபோல நாமும் அவருக்கு உண்மையாய் இருக்கிறோமா? அவர் சொல்லைப்பற்றி பிடித்திருக்கிறோமா? எப்போதும் உண்மை தேவனை நோக்குகிறோமா? எப்போதுமே நமது பரமபிதா உண்மை வார்த்தைகளைத்தான் பேசுகிறார் என்று விசுவாசிக்கிறோமா? வானமும் பூமியும் ஓழிந்தாலும் என் வார்த்தைகளோ ஒழிந்து போகாது என்று இயேசு சொன்னதை உண்மையானது என்று உண்மையாய் நம்புங்கள். அவரை நம்பி நடவுங்கள். அவருடைய வார்த்தையை நோக்குங்கள். அப்படி நோக்கும்போது பின் வருகிற பிரகாரம் சொல்லலாம்.

தேவனே சொன்னதால்
அவர் உண்மையுள்ளவராதலால்
வாக்கை நிறைவேற்றுவார்
எதையும் செய்து முடிப்பார்.

நான் உங்கள் நாயகர்

செப்டம்பர் 27

“நான் உங்கள் நாயகர்” எரேமி. 3:14

மனித உறவிலேயே மிகவும் நெருக்கமானது கணவன், மனைவி உறவுதான். இருவரும் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். கர்த்தரும் தமது ஜனங்களுக்கு இவ்வுறவையே காட்டியிருக்கிறார். அவர் அவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணியிருக்கிறார். அவர்களும் அவருக்கு வாக்குக்கொடுத்திருக்கிறார்கள். அவர் தம்முடைய அன்பை அவர்கள்மேல் வைத்திருக்கிறார். அவர்களும் அவர்மேல் தங்கள் பாசத்தை வைத்திருக்கிறார்கள். அவர்களை அவர் தேடித் தெரிந்துகொண்டார். அவர்களும் அவரைக் கண்டுபிடித்து விட்டார்கள். இரு சாராரும் ஒருவர்மீது ஒருவன் பிரியங்கொண்டுள்ளார்கள். அவர்களைத் தேடி அவர்கள் மத்தியில் வருகிறார். இரு சாராரும் அன்புடன் கலந்து உரையாடுகின்றனர். சேமித்து வைத்திருக்கிறார். அவருடைய வளத்தில் அவர்கள் வளம் பெறுகிறார்கள்.

தேவ பிள்ளையே! கர்த்தர் உன் நாயகர் என்பதை நீ உணருகிறாயா? அவருடைய ஐசுவரியமும், ஞானமும் அளவிலடங்காதவை என நீ அறிவாயா? அவருடைய மணவாட்டியான திருச்சபையாக நீ சஞ்சரிக்கிறாயா? அவருக்கு வாழ்க்கைப்பட்ட அவருடைய மனைவியைப்போல் நீ தேவனுக்காய் வாழ்கிறாயா? யாவற்றையும் அவருக்கு விட்டு விட்டு, உனக்குத் தேவையானதெல்லாம் அவர் தருவார் என்று நம்பிக்கையுடன் உன் நாயகராகிய அவருக்கு மன நிறைவுதரும்படி வாழ்கிறாயா? உன்னை நேசிக்கும் மற்றவர்கள் என்றும் உன்னை விட்டுப் பிரிவதே இல்லை. அவர் உன்னைக் காத்து நடத்துவார். அவரோடு ஐக்கியப்படு. எதுவும் உன்னை அவரைவிட்டுப் பிரிக்காதிருக்கட்டும்.

நான் உம்மோடு ஐக்கியப்பட்டும்
பிரகாசிக்க அருள் செய்யும்,
அப்போ நான் உம்முடையவன் என
வானமும் பூமியும் அறிந்திடும்.

நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்

செப்டம்பர் 12

“நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்” ஆதி. 6:9

நோவா தேவனோடு வாழ்ந்து வந்தான். தேவனோடு ஒன்றித்திருந்தான். தேவன் பேசுகிற குரலைக்கேட்டு அவருடைய வழியைத் தெரிந்துகொண்டு, அவருடைய நினைவிலே மூழ்கி அவருடைய சித்தமே சரி என்று ஒப்புக்கொண்டான். தேவனோடு உரையாடுவதென்றால் அவனுக்கு மிகப்பிரியம். ஆலோசனைக்காக அவரண்டை அவன் செல்வான். அவரிடத்தல் அன்புடன் பழகுவான். தேவனே அவருடைய சிறந்த நண்பர். அவன் அவருடைய சமுகத்தை விரும்பி, அவருடன் நடந்து, அவருடைய நட்பில் மகிழ்ந்தான். பூவுலகில் இருந்து கொண்டே, குமாரரையும் பெற்று வாழ்ந்து கொண்டே நோவா தேவனோடு சஞ்சரித்தான். அவருடைய வழியில் நடந்தான். ஒவ்வொரு நாளும் பல நன்மைகளைப் பெற்றான்.

அவனுக்குப் பக்தி இருந்ததுடன் கவனமும் இருந்தது. தேவ சமுகத்தையே அவன் பாக்கியமாகவும், மேன்மையாகவும், பெரியதாகவும் எண்ணினான். இந்த மனிதனைப்போலவே நாமும் தேவனுடன் பழகும் சிலாக்கியம் உள்ளவர்களே. நாம் கர்த்தராகிய கிறிஸ்துவை விசுவாசித்தால் இந்த ஐக்கியத்தைப்பெற்று, அவரோடு சஞ்சரிக்கலாம். தேவன் நம்மோடுகூட இருக்கிறார். நாம் அவரோடு கூட இருக்கிறோமா? அவரோடுகூட நடக்கிறோமா? அன்பானவரே, நீர் தேவனோடு வாழ்கிறீரா? இன்று அவரோடே நடந்ததுண்டா? தேவ சமுகத்தினாலுண்டான மகிழ்ச்சியைப் பெற்றீரா? அவருடைய சமுகத்தில் நீங்கள் இருந்து உற்சாகமடைந்தீர்களா? தேவனோடு சஞ்சரிப்பது பெரும் பாக்கியம். இது அவருடைய பெரிதான இரக்கம். கிருபை. நீங்கள் தேவனோடு இருந்தால் அவர் உங்களோடு இருப்பார்.

லோகம் ஆளும் ஆண்டவர்தாம்
என் உயிர் நண்பராம்.
அவரோடு சஞ்சரிப்பேன்
என்றும் பெரும் பேறு பெறுவேன்.

அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்

ஓகஸ்ட் 15

“அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்” 1.சாமு. 2:9

பரிசுத்தமாக்கப்பட்டவர்களே பரிசுத்தர்கள். தம்முடைய புகழ்ச்சிக்காக பிதாவினால் பிரித்தெடுக்கப்பட்டவர்கள். கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் மீட்டெடுக்கப்பட்டவர்கள். உலகத்திலிருந்து எடுத்து பரிசுத்தாவியானவரால் நிரப்பி சுத்திகரிக்கப்பட்டவர்கள். இயேசு உலகத்தாரல்லாததுபோல இவர்களும் உலகத்தாரல்லாதவர்கள். இந்தப் பாக்கியம் இவர்களுக்கு இருந்தாலும்,இவர்கள் முற்றிலும்பலவீனமானவர்கள். இவர்களை எப்போதும் காதுகாக்க வேண்டியது அவசியம். தேவன்தான் இவர்களைப் பாதுகாக்கக் கூடியவர் உலகத்து மனிதனால் இது முடியாது. அவர்களும் பலவீனர்தானே.

இவர்களின் பாதைகள் கரடுமுரடானது. முள்ளுள்ளது. மோசமானது. இவர்களுக்குத் திரளான சத்துருக்கள் இருக்கிறார்கள். ஆயினும் இவர்கள் விழிப்புள்ளவர்கள். தைரியமானவர்கள். வெட்கப்படாதவர்கள். காரணம் கர்த்தர் இவர்களைக் காக்கிறார். கொடுமைக்கும், துணிகரத்திற்கும், கவலைக்கும், அழிவுக்கும் இவர்களைக் காக்கிறார். தம்முடைய ஆவியானவராலும், வல்லமையினாலும், தேவ தூதர்களாலும், துன்பங்களினின்றும், நஷ்டங்களினின்றும், மார்க்கப்பேதங்களினின்றும் இவர்களைக் காக்கிறார். தேவன் யாரைக் காக்கிறாரோ, அவர்கள்தான் பத்திரமாய் இருப்பார்கள். தமது பரிசுத்தவான்கள் எல்லாரையும் காக்கிறார். விசுவாசிகளை மாத்திரம் காக்கிறபடியால் பெயர் கிறிஸ்தவர்கள் கெட்டழிவார்கள். விசுவாசத்தினாலும், தேவன் மேல் வைக்கும் நம்பிக்கையினாலும் இவர்கள் காக்கப்படுகிறார்கள். என்னை ஆதரித்தருளும், அப்போது நான் இரட்சிக்கப்படுவேன்.

இயேசுவே நீர் உத்தமர்
என் நடையைக் காத்தருளும்
உம்மோடு நடப்பேன்
மோட்சம்பேறு அடைவேன்.

கர்த்தாவே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும்

அக்டோபர் 13

“கர்த்தாவே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும்” ஆப. 3:2

தேவன் எப்போதும் தம்முடைய கிரியைகளுக்குப் புத்தியிரளிக்க வல்லவர். அவர் இச்செயலைத் தொடங்கி, அதை நடத்துபவர். அதைத் தாமாகவே முடிக்கவும் வல்லவர். தம்முடைய கிரியைகளைப் பல உபகரணங்களைக் கொண்டு செய்து முடிக்க வல்லவர். நாம் எழும்புதல் அடைய வேண்டும் என்று நமக்குக் கூறகிறார். அவ்வாறு செய்ய நம்மைத் தூண்டிவிடுகிறார். நாம், பல நேரங்களில் அவருடைய பாதத்தருகில் அதிக நேரம் செலவிட மறந்து விடுகிறோம். அவரின் சமுகத்தில் அதிகம் ஜெபிக்காமல் இருந்து நேரத்தை வீணாக்கி விடுகிறோம். ஆனால், அவர் சமுகத்தில் அதிக நேரம் செலவிடும் பொழுது ஒரு வேகத்தையும் தைரியத்தையும் பெறுகிறோம். அப்போது அந்தத் தீர்க்கன் சொன்னதைப்போல் உம்முடைய ஜனங்கள் உம்மில் மகிழும்படிக்கு எங்களைத் திரும்பவும் உயிர்ப்பிக்கமாட்டீரா என்று நாமும் சொல்லலாம்.

கர்த்தர் தமது கிரியைகளை உயிர்ப்பிக்கும்போது நம்முடைய விசுவாசத்தைப் பெலப்படுத்துவார். நமது நம்பிக்கையை வளர்ப்பார். நமது அன்பிற்கு அனல் மூட்டுவார். தாழ்மையைக் கற்றுக்கொடுப்பார். நமது பக்தி வைராக்கியத்தை உறுதிப்படுத்துவார். நம்முடைய எழுப்புதலின் ஆவியைத் தூண்டிவிடுவார். அப்போது ஜெபம் நமக்கு இனிமையாகும். ஆலயம் அருமையாயிருக்கும். சபையில் தேவ மக்கள் மகிழ்ச்சியோடு உலாவும் நந்தவனம்போல் இருக்கும். வசனம் விருத்தியாகும். மோட்சத்தையே நாம் எப்பொழுதும் நினைத்துக்கொண்டே இருப்போம். தேவன் நம்மை என்றும் உயிர்ப்பிக்க வல்லவராகக் காத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய உயிர்ப்பிக்கும் ஆவியானவர் நம்மை அவரண்டை நேராக நடத்துவார்.

உமது தயவினாலே
எம்மை உயிர்ப்பியும்
நாங்கள் ஒளிவிட்டெழும்ப
கிருபை பாராட்டியருளும்

தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்

ஓகஸ்ட் 07

“தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்” சங்.147:11

இரக்கம் நிர்பந்தத்தைக் கண்டு மனதுருகுகிறது. நிர்பந்தத்தைத் தான் இரக்கம் கண்ணோக்குகிறது. தேவன் இயேசுவின்மூலம் தமது கிருபையை வெளிப்படுத்தினார். அவரில் அது உருக்கத்தோடும் நிறைவோடும் எப்போதும் வெளிப்படுகிறது. நாம் பாவம் செய்தவர்களாகையால் ஒரு நீதியும் நம்மிடத்தில் இல்லை. ஆனால் இந்த இரக்கத்தினால்தான் நமக்கு எல்லாமே கிடைக்கிறது. ஏனென்றால் இரக்கத்தில்தான் தேவன் பிரியப்படுகிறார். பாவம் முதலாவது தேடுவது இரக்கம்தான். மனிதர் தேவனிடம் தேடுவதும் இந்தக் கிருபைதான். அநேகர் விசுவாசத்தினால் கிடைக்கும் இந்த நிச்சயம் அற்றவர்கள். தேவன் என்னை நேசித்து எனக்காக தம்மைத்தந்தார் என்று அவர்கள் சொல்லமாட்டார்கள். தேவனைப் பிதா என்று அழைக்கமாட்டார்கள். வாக்குத்தத்தங்களை உரிமையாக்கி, உபதேசங்களை ஏற்றுக்கொண்டு கர்த்தர் என் தேவன் தேவன் என்று சொல்வது அவர்களுக்குத் துணிகரமாயிருக்கும்.

எப்படிப்பட்டவராயினும் தேவனிடம் வரும்போது அவர் இரக்கமுள்ளவர் என்று நம்பியே வருகிறார்கள். தேவ கிருபை அவர்களை உற்சாகப்படுத்தி, தைரியப்படுத்தி, சந்தோஷப்படுத்துகிறது. தேவன் கிறிஸ்துவின்மூலம் பாவிகளுக்கு இரக்கம் காண்பிக்கிறபடியால் தங்களுக்கும் காண்பிப்பார் என்று நம்புகிறார்கள். இரட்சிக்கப்படுவோம் என்ற நிச்சயம் அவர்களுக்கு இல்லாவிட்டாலும் இயேசு கிறிஸ்துவின் இரக்கம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஆகவே, தமக்குப் பயந்து தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாய் இருக்கிறார் என்பது எவ்வளவு அருமையான ஒரு காரியம். அவர்கள் ஜெயிப்பது அவருக்குள் பிரியமானபடியால் அவர்களுக்கு உத்தரவு கொடுப்பார்.

தேவ பயமுள்ளவர்
கர்த்தருக் கருமையானவர்
அவர் கிருபை தேடுவோர்
அவர் அன்பைக் பெறுவோர்.

இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு

மார்ச் 05

“இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு.” ஓசியா 12:16

உன் தேவனை நம்பிக்கொண்டிரு அல்லது உன் தேவனுக்காகக் காத்துக்கொண்டிரு. தேவனிடம் காத்திருப்பதே நம்மை பரம சிந்தைக்கு வழி நடத்துகிறது. அவருடைய சிங்காசனத்துக்கு முன் நிறுத்தி அவர் வார்த்தையில் விசுவாசம் தந்து, அவர் இரத்தத்தை நம்ப வைத்து அவரின் சித்தத்திற்கு நேராய் நம்மை நடத்துகிறது. அவர் பாதத்தில் அமர்ந்திருக்கும்போதுதான் அவருக்குப் பிரியமானதை செய்ய நமது மனம் நினைக்கும். காத்திருக்கும் ஆத்துமாதான் சகலத்திலும் தேவனைக் காண்கிறது. எவ்விடத்திலும் தேவன் இருக்கிறார் என்றே உணருகிறது. எந்தக் காரியத்தையும் தேவன் நடத்துகிறார் என்று ஒத்துக்கொள்கிறது. உன் தேவனிடத்தில் எப்போதும் காத்திரு. அப்போதூன் எக்காலத்திலும் மோசத்திற்குத் தப்பி சுகித்திருப்பாய். எந்தச் சோதனையிலும் வெற்றிப் பெறுவாய். கர்த்தர் தம்முடைய நியமங்களின்மூலம் உன்னை மேன்மைப் படுத்துகிறதைக் காண்பாய்.

ஜாக்கிரதையுள்ள ஊழியக்காரன் தன் பட்சமுள்ள எஜமானிடத்திலும், உத்தம வேலைக்கரி தன் எஜமாட்டியிடத்திலும் பட்சமுள்ள பிள்ளை தன் பிரிய தகப்பனிடத்திலும் காத்திருப்பது போல காத்திரு. நீ காத்திருப்பது அவருக்குப் பிரியமானபடியால் அவரிடத்தில் காத்திரு. காத்திரு என்று உன்னிடம் அவர் சொன்னதால் காத்திரு. அவர் இரக்கம் காண்பிக்கும் நேரத்திற்காக காத்திரு. அவருக்காக காத்திருப்பவர்கள் வெட்கப்படமாட்டார்கள். கர்த்தரிடம் காத்திரு. திடமனதாயிரு. அதுவே பெலன். இனி ஆத்துமாவே, இன்று தேவனிடத்தில் காத்திருந்தாயா? இந்த இராத்திரியிலே அவரோடு அமர்ந்து காத்திருக்கிற சிந்தை உன்னிடத்தில் உண்டா? கர்த்தருக்குக் காத்திருக்கிறேன் என்று தைரியமாய் உன்னால் சொல்ல முடியுமா? இல்லையென்றால் இனிமேலாவது காத்திருக்க தீர்மானி.

விசுவாசித்து காத்திரு
திடமாய் நிலைத்திரு
அவர் வார்த்தை உண்மையே
அவர் பெலன் அளிப்பாரே.

Popular Posts

My Favorites

தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்

நவம்பர் 10 "தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்" ஓசியா 14:2 தேவனுடைய பிள்ளைக்குப் பாவத்தைப்போல் துன்பம் தரக்தக்கது வேறு ஒன்றுமில்லை. பாவத்திலிருந்து விடுதலைபெற வேண்டும் என்றுதான் அவன் விரும்புகிறான். அதற்காகவும் ஜெபிக்கிறான். அவன் எல்லாவற்றிலும் நீதிமானாக்கப்படும்பொழுது...