என்னை நோக்கிப் பாரும்

யூலை 11

“என்னை நோக்கிப் பாரும்” சங். 119:132

ஒரு சிறு பிள்ளை தன் தகப்பன் தன்னைக் கவனிக்கும்படி கேட்கிறது. தேவன் செய்கிறதெல்லாம் சுலபமாக செய்கிறார். நம்முடைய வருத்தங்களை நீக்கி துன்பத்தினின்று நம்மை விடுதலையாக்க நமக்குச் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தர அவர் நம்மைப் பார்த்தால் போதும். அவர் பார்வை யோபைத் தாழ்மைப்படுத்தி கிதியோனைப் பலப்படுத்தி, பேதுருவை மனந்திரும்பச் செய்து, சாகிற ஸ்தேவானைச் சந்தோஷத்தாலும், சமாதானத்தாலும் நிரப்பிற்று. பார்ப்பது என்பது தயவு காட்டுவது ஆகும். சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுஞ்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன். தேவன் நம்மை நோக்கிப் பார்க்க வேண்டுமானால் நம்முடைய கண்களை அவரண்டைக்கு உயர்த்த வேண்டும். அவர் நம்மைப் பார்த்து நமதுமேல் கிருபையாய் இருக்க வேண்டுமானால் நாம் விசுவாசத்தோடு அவரை நோக்கி கெஞ்ச வேண்டும்.

அன்பர்களே, தேவனுடைய கண் உங்கள் மேலிருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அது இன்னதென்று உணருகிறீர்களா? அது இன்னதென்று உணருகிறீர்களா? அவர் இரக்கமாய் உங்களைக் கண்ணோக்குவாரானால் உங்கள் பயங்கள் நீங்கிப்போம். உங்கள் அந்தகாரம் விலகும். நீங்கள் ஒளியினாலும் பரிசுத்த நம்பிக்கையினாலும் நிரம்பப்படுவீர்கள். இவ்வளவு நாம் தேவனிடத்தில் கேட்கலாமென்று நினைக்கிறீர்களா? நாம் பெற்றுக்கொள்வதற்கு இது அதிகமென்று நினைத்தாலும் அவர் கொடுப்பதற்கு இது அதிகமல்ல. நாம் அவரோடு ஒப்புரவானோம் என்று இது காட்டுகிறது. அவர் நம்மேல் அக்கறை வைத்துள்ளாரென்று இது நிரூபிக்கும். இது நமக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். இந்த இரவில் நீயும்கூட என்னை நோக்கிப் பாரும் ஆண்டவரே என்று சொல்லி படுக்கைக்குச் செல்.

உமது அடிமையைப் பாரும்
மன்னித்து மகிழ்ச்சி அளியும்
உமது சமுகம் காட்டியே
அமர்ந்து தூங்கச் செய்யும்..

அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்

யூலை 18

“அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்” யோவான் 17:10

பிதாவை மகிமைப்படுத்துகிறதுதான் இயேசுவின் கிரியை. பிதா அவரில் மகிமைப்படுகிறார். இயேசுவை மகிமைப்படுத்துவது அவருடைய வேலையாய் இருக்குமானால் இயேசு நம்மில் மகிமைப்படுவார். அவருடைய இரத்தம் நம்மை மன்னித்து சமாதானப்படுத்தி, சகல பாவங்களிலிருந்தும் நாம் பூரணராய் நீதிமானாக்கப்படுவதனால் மகிமைப்படும். அவருடைய வல்லமை நாம் உலகத்தினின்று பிரிந்து நித்திய ஜீவனுக்கென்று காக்கப்படுவதனால் மகிமைப்படும். நாம் உயிர்பிக்கப்பட்டு அனுபவிக்கும் எண்ணில்லா நன்மைகளால் அவர் இரக்கமும், நாம் விடுவிக்கப்பட்டு சந்தோஷப்படுவதில் அவர் வார்த்தையும், நாம் அவரோடு ஐக்கியப்பட்டு ஒன்றாவதில் அவருடைய சிந்தையும் மகிமைப்படும்.

நம்முடைய ஜெபங்களுக்கும் விண்ணப்பங்களுக்கும் கிடைக்கும் உத்தரவில் அவருடைய உண்மையும், நாம் தைரியமாய் நம்பிக்கையோடு கிருபாசனத்தண்டை சேருவதில் அவருடைய அன்பும், துன்பத்தில் நமக்கு வேண்டியதைத் தந்து ஆதரிப்பதில் அவருடைய தயையும் மகிமைப்படும். நம்முடைய துக்கங்களிலும் வருத்தங்களிலும் அவருடைய உருக்கமும், நம்முடைய பெலவீனங்களிலும் முரட்டாட்டத்திலும் நம்மை தாங்குகிறதில் மரணத்திலும் நம்முடைய நித்திய இரட்சிப்பிலும் அவருடைய கிருபையும் மகிமைப்படுகிறது. நாம் எதிர்பார்க்கிறதெல்லாம் அவரிடத்திலிருந்துதான் வரவேண்டும். அவருடைய சபை அவருடைய மகிமையானதால் அவர் அதை மகிமையுள்ளதாக்குவார். அதை அவர் மாசு திரை ஒன்றுமில்லாமல் மகிமையுள்ள சபையாக தமக்கு முன் நிறுத்துவார். இயேசு என்னில் மகிமைப்படுகிறார் என்பது எத்தனை அருமையான சத்தியம்.

என்னில் உம் மகிமை
தங்கிட அருளும்
உமக்காகவே பிழைப்பேன்
உமக்கென்றே சாவேன்.

இயேசுவைத் தரவிர வேறொருவரையும் காணவில்லை

யூலை 25

“இயேசுவைத் தரவிர வேறொருவரையும் காணவில்லை” மத்.17:8

மோசேயும் எலியாவும், சீஷர்களோடு மலையின்மேல் இருந்தார்கள். அவர்கள் போனபின்பு இயேசுவானவர்மட்டும் இருந்தார். உலகில் எல்லாம் மாறிப்போகிறது. சுகம், ஆஸ்தி, வாலிபம், இன்பங்கள், மனிதன் எல்லாமே மாறிப்போகிறது. ஆனால் எது மாறினாலும் இயேசு அப்படியே இருக்கிறார். அவருடைய அன்பும் தன்மையும் மாறுவதில்லை. நம்மேல் அவர் வைத்திருக்கிற சித்தமும் மாறுகிறதில்லை. அவர் கிருபையுள்ளர். உண்மையுள்ள அவருடைய வாக்கும் மாறுகிறதில்லை. ஆசாரிய ஊழியத்திலும், மன்றாட்டு ஊழியத்திலும், இராஜ உத்தியோகத்திலும் அவர் மாறுகிறதில்லை. அவருடைய இரத்தம் எப்போதும் பலனுள்ளது. தகப்பனாகவும், சகோதரனாகவும், புருஷனாகவும், சிநேகிதனாகவும் அவரோடு நமக்கு இருக்கும் உறவில் அவர் மாறுகிறதில்லை. அவர் நேற்றும் இன்றும் ஒரே விதமாய் இருக்கிறார். இந்த வசனம் நமக்கு எப்போதும் ஞாபகக் குறியாய் இருக்க வேண்டும்.

இயேசுவால் மட்டும்தான் நம்மை கிருபாசனத்தண்டை கூட்டிக் கொண்டு போக முடியும். அவரைத்தான் நம்பி விசுவாசிக்கலாம். தேவன் நம்மை அங்கீகரிப்பாரென்று நம்ப அவர்தான் நமக்கு ஆதாரம்., மாதிரி. அவரே நம்முடைய சந்தோஷமும், கீதமும், நம்முடைய இராஜனும் நியாயப்பிரமாணிகனுமாய் இருக்கிறார். அவர் மாறாதவர். ஆகையால் எல்லாவற்றிலும் அவரையே பற்றப் பிடித்திருக்கலாம். நமது கண்களையும் சித்தத்தையும் அவர்மேல் வைப்போமாக. மோசேயும் எலியாவும் போனாலும் இயேசுவானவர் இருக்கிறார் என்று சந்தோஷப்படுவோமாக. மேகம் இருண்டு இருந்தாலும். பிரகாசமாய் காணப்பட்டாலும் அவர் மாறாதவர். இயேசுவானவர் சகல வருத்தங்களையும் இன்பமாக்கி, பயன்படுத் வாழ்வில் வரும் சோதனைகளுக்கு நம்மை விலக்கி காப்பார் என்று எதிர்பார்த்திருப்போமாக.

இயேசு நல்ல பெருமான்
எனக்கு முற்றிலும் ஏற்றவர்
எனக்கு வேண்டியது எல்லாம்
அவரிடம் என்றுமுள்ளது.

அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்

யூலை 08

“அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்.” மீகா 7:19

ஏதோ ஓரு துக்கமான காரியம் நடந்துவிட்டதாக இந்த வசனம் சொல்கிறது. கர்த்தர் தமது ஜனங்களைவிட்டு தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார். கர்த்தர் கோபங்கொண்டார். ஆனால் நம்மைப்புறக்கணிக்கவில்லை. அப்படி நமதுமேல் கோபமாய் இருக்கமாட்டார் என்று வாக்குப்பண்ணியுள்ளார். அவர் திரும்ப நம்மேல் இரங்குவார். நாம் திருந்தவேண்டும் என்பதற்காகவே அவர் கோபிக்கிறார். பேதுருவின் மனதை நோகப்பண்ணி அழுகையோடும் விண்ணப்பத்தோடும் அவனைத் திரும்பினதுபோல நம்மையும் திரும்ப நோக்கிப் பார்ப்பார். உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது, சமாதானத்தோடே போ என்று மரியாளுக்குச் சொன்னதுபோல் நமக்கும் சொல்லுவார்.

நம்முடைய பயங்களை ஓட்டி நம்மைத் தம்முடைய மடியில் சேர்த்து தமது அன்பை நம்மேல் பொழிவார். அவர் வாக்குபண்ணினவைகளை மாற்றாது அப்படியே செய்வார் எப்பொழுதும் அப்படிச் செய்வார். அவர் இருதயம் அன்பினால் நிறைந்திருக்கிறபடியால் அப்படிச் செய்வார் என்பது நிச்சயம். அவர் இரக்கத்தில் பரியப்படுகிறவர் என்பதால் அப்படிச் செய்வார் என்று சொல்லலாம். நம்முடைய புத்தியீனத்தைக் குறித்து நாம் புலம்பினாலும், அவர் மன்னிப்பைக் குறித்து அவநம்பிக்கை கொள்ள வேண்டியதில்லை. பட்சமும் கிருபையும் நிறைந்த தேவனுக்கு மனஸ்தாபம் உண்டாக்கினோம் என்று அழுதாலும் மனம் கலங்க வேண்டியதில்லை. நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு அவர் திரும்ப இரங்குவார் என்று எதிர்பார்த்திருப்போமாக இஸ்ரவேல் வீட்டாருக்குத் தம்மை மறைத்துக்கொள்ளுகிற கர்த்தருக்குக் காத்திருந்து அவர் வருகைக்கு ஆயத்தமாய் இருப்போமாக.

இயேசுவே எங்கள் துன்பங்கண்டு
உருக்கமாய் இரங்குமேன்
எங்கள்மேல் கிருபைகூர்ந்து
சகல பாவம் நீக்குமேன்.

அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்

யூலை 03

“அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.” மீகா 7:18

தேவனை விரோதிப்பவர்கள்மேல்தான் தேவ கோபம் வரும். தேவனுடைய கோபம் யார்மேல் வருகிறதோ அவர்களுடைய நிலை மகா வருத்தமானது. கொஞ்ச காலம் அவருடைய ஜனங்களுக்கு விரோதமாகவும் அது வரலாம். ஒவ்வொருவனும் நீர் என்மேல் கோபமாயிருந்தீர் என்று சொல்லக்கூடும். தேவனுடைய கோபத்திற்கு காரணம் பாவம். அவர் தம் பிள்ளைகள்மேல்தான் கோபப்படுகிறார். அது தகப்பனுக்கொத்த கோபம். நம்மைச் சீர் செய்யவேண்டும் என்பதே அவருடைய கோபத்தின் நோக்கம். அந்தக்கோபம் பல விதங்களில் நம்மை வருத்தப்படுத்தக்கூடும்.

தேவ கோபத்தால் உலக நன்மைகள் கெட்டு ஆவிக்குரிய ஆறுதலும், சந்தோஷமும் குறைந்து போகலாம். அது குறுகிய காலம் தான் இருக்கும். அவர் கோபம் ஒரு நிமிஷம். அவருடைய தயவோ நீடிய வாழ்வு. தேவன் நம்மேல் கோபமாய் இருக்கும்போது ஒரு மணிநேரம் ஒரு நாள்போலவும், ஒரு மாதம், ஒரு வருடம்போலவும் இருக்கும். ஆகையால் அவர் எப்பொழுதும் கோபம் வைக்கிறதில்லை என்ற உண்மை நமக்கு இன்பமாய் இருக்கவேண்டும். கோபப்படுவது அவர் இயல்பு அல்ல. அவர் சுயசித்தமாய் கோபிக்கிறவரும் அல்ல. அவர் வெகுகாலம் கோபம் வைக்கிறதில்லை. அவர் பிராயசித்த பலியை நோக்கி சீரடைந்தவனுடைய விண்ணப்பத்திற்குப் பதிலளிக்கிறார். தம்முடைய உடன்படிக்கையை நினைக்கிறார். இரக்கம் காட்டுவதே அவருக்குப் பிரியம் என்று நிரூபிக்கிறார். அவருடைய கோபம் பாவிகளுக்கு விரோதமாக, பாவத்தால் நெருப்பு மூட்டப்பட்டு எப்பொழுதும் எரியும். ஆனால் அவர் பிள்ளைகளின்மேல் வைக்கும் கோபம் சீக்கிரம் அணைந்துப்போம். தேவனின் அன்பு என்கிற நீர் அதை அவித்துப்போடும்.

பாவத்தை ஒழித்து
முற்றும் மன்னிப்பார்
கோபம் ஒரு நொடி மாத்திரம்
அவர் அன்போ என்றும் உள்ளது.

உக்கிரம் என்னிடத்தில் இல்லை

யூலை 24

“உக்கிரம் என்னிடத்தில் இல்லை” ஏசாயா 27:4

தேவனுடைய தன்மைகளைப்பற்றி நாம் சரியான ஒரு தெளிவு இல்லாமல் இருக்கிறோம். அவரைக் கோபமுள்ளவராகவே அடிக்கடி பார்த்து பயப்படுகிறோம். தேவன் இயேசுவிலே நம்மைச் சந்தித்து நம்மை ஆசீர்வதித்து, நம்மிடத்தில் எரிச்சலாயில்லை என்று செல்லுகிறார். இது தான் நம்முடைய நம்பிக்கையின் ஆதாரம். தேவனிடத்தில் எரிச்சலில்லை. ஆனால் அன்பு உண்டு. ஆகவே நாம் நம்பிக்கை கொள்ளலாம். அவர் என் வேண்டுதலைத் தள்ளார். என் ஜெபத்தைக் கேட்காது என்னைத் தமது ஆசனத்தண்டையிலிருந்துத் துரத்தமாட்டார். இதுதான் ஆறுதலுக்கு ஊற்று. தேவனிடத்தில் எரிச்சல் இல்லாவிட்டால் மனிதனுடைய கோபம் விருதா. பாதாளத்தின் எரிச்சலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

இது நமது பயத்திற்கும், சந்தேகத்திற்கும் நல்ல மாற்று மருந்து. தேவனிடத்தில் எரிச்சல் இல்லாவிட்டால், சாவைப்பற்றிய பயம் இருக்காது. மாறாக தேவன் என்னைத் தள்ளிவிடுவார் என்ற பயம் இருக்காது. நியாயத்தீர்ப்பை குறித்த பயம் இருக்காது. இதற்காக நாம் அவருக்கு நன்றி செலுத்தி துதிக்க வேண்டும். தேவனிடத்தில் உக்கிரம் இல்லாததால் நாம் அவர் சமீபமாய்ப் போகலாம். அவரை நம்பி, அவர் நன்மை செய்வார் என்று எதிர்பார்க்கலாம். ஆகவே நாம் அவரைத் துதிக்க வேண்டும். தேவனிடம் உக்கிரம் இல்லாததால் நாம் யாருக்கும், எதற்குப் பயப்பட வேண்டும்? இது துன்பத்தில் அடைக்கலம். வனாந்தரத்தில் தண்ணீர் ஊற்று. அவாந்தரவெளியில்  திராட்சை தோட்டம். தேவனுடைய பட்டணத்தைச் சந்தோஷப்படுத்துகிற வாய்க்கால் சுரக்கும் நதி. தேவன் உக்கிரம் உள்ளவர் அல்ல. அவர் அன்புள்ளவர். அவர் இருள் அல்ல, ஒளி. அன்பானவர்களே. நீங்கள் உங்கள் தேவனைப்பற்றி என்ன எண்ணம் கொண்டிருக்கிறீர்கள் என்பதில் எச்சரிக்கையாய் இருங்கள். அது வசனத்துக்கு ஒத்திருக்கட்டும். புது உடன்படிக்கைக்கு இசைந்திருக்கட்டும்.

தேவன் அன்பானவர்
தன் சுதனையே தந்தார்
என்றும் நம்மை மறவார்
கடைசிவரை காப்பார்.

இராக்காலம் வருகிறது

யூலை 02

“இராக்காலம் வருகிறது.” யோவான் 9:4

இரவு என்பதில் பயமும், திகிலும் உண்டு. இராக்காலம் மரணத்தின் அறிகுறி. மரணத்திற்குப் பிறகு இந்த உலகில் நன்மை செய்வதற்கான சந்தர்ப்பம் கிடையாது. ஆகவே, நிகழ்காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ள வேண்டும். மரணம் வரும்போது நம்முடைய எல்லா வேலைகளும் முடிந்து விடும். முடியாவிட்டால் அரைகுறையாய் அதை விட்டுப்போக வேண்டும். ஆதலால் காலம் இருக்கும்போதே அதை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மரணம் வரும்போது நாம் சிநேகிதரை விட்டுப் போக வேண்டும். ஆகவே உயிருள்ளபோதே அவர்கள் நட்பைக் காத்துக்கொள்வோமாக. ஒரு நாள் மரணம் வரும்போது எல்லாரையும்விட்டு இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்போம். நம்முடைய ஆத்துமா அமைதியாய் இளைப்பாறும். அது ஆண்டவர் சமுகத்தில் தங்கி அங்கே இளைப்பாறி திருப்தி அடையும்.

இராக்காலம் வருகிறது. அது தூரத்தில் இல்லை. சிலருக்கு அது வெகு அருகில் இருக்கலாம். திடீர் என்றும் வரலாம். ஆகவே நாம் ஆயத்தமாய் இருக்க எச்சரிக்கப்படுகிறோம். இயேசுவை விசுவாசித்தவர்களாக காலத்தை ஆதாயப்படுத்தி, நாள் முழுவதும் வேலை செய்து, இரவுக்கு ஆயத்தப்பட்டவர்களாய் இருப்போமாக. நம்முடைய வேலை முடிந்தது. தேகம் இளைத்தது. பரம பாக்கியத்தின் பேரில் ஆசை மிகுந்தது. எப்போது பேரின்ப வீட்டுக்குப் போகலாம் என்று சந்தோஷமாய் எதிர்பார்க்கிறவர்களைப்போல இருக்கக்கடவோம்.

தேவனிடம் கிட்டி சேர்ந்து
அவரைப்போல் இருப்பது
எப்போ கிடைக்கும், அப்போ
பாவம் முற்றிலும் ஒழியும்.

ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது.

யூலை 04

“ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது.” சங். 63:3

உயிரோடு இருப்பதுதான் ஜீவன். நல்வாழ்வு என்பது அதன் பொருள். சுகமாய், மேன்மையாய், சமாதானத்தோடு குறைவின்றியிருப்பது. மற்றவர்களோடு நல்ல ஓர் உறவை வைத்து மனதிருப்தியோடிருந்தால் அரசன் தன் சிம்மாசனத்திலும், வியாபாரி தன் வியாபாரத்திலும் மாணவன் தன் படிப்பிலும் திருப்தி அடைவான். ஜீவனோடிருப்பவனை நற்காரியங்கள் சூழ்ந்திருக்கும். ஆனால் தேவன் காட்டும் கிருபை எது? அன்பான வார்த்தைகளும், பட்சமான செயல்களுமே. தம்முடைய குணாதிசயங்களை வெளிப்படுத்துதலும் ஆகும். நம்மை ஞான நன்மைகளால் அவர் திருப்தி செய்கிறார். இந்த நன்மைகள் ஜீவனைவிட மேன்மையானவை. ஏனெனில் அவை மேலான கனத்தைக் கொடுக்கிறது. அதிக இன்பங்களை அளிக்கிறது.

இந்தக் கிருபைதான் மேலான காரியங்களை எதிர்பார்க்கும்படி நம்மை ஏவிவிடுகிறது. நம்மை அதிக பத்திரமாய் காக்கிறது. அது ஜீவனைவிட நல்லது. அது நித்திய நித்தியமானது. ஆத்துமாவின் தன்மைக்கும் மிகவும் ஏற்றது. மகிமை நிறைந்தது. அது கலப்பற்ற நன்மை. அழியாத இன்பம், குறையாத ஐசுவரியம். ஆகையால்தான் சங்கீதக்காரன் இது ஜீவனைவிட நல்லது. ஆகவே என் உதடுகள் உம்மை துதிக்கும் என்று சொல்லுகிறான். மற்றவர்களோடு பேசும் போதும் அதைப் புகழ்ந்து பேசுவேன் என்கிறான். என் ஜெபத்தில் உமக்கு நன்றி செலுத்துவேன். அதை எனக்குத் தெரியப்படுத்தினதற்காகவும் இப்போது அது எனக்கு கிடைத்தமைக்காகவும், எப்போதுமே அதை அனுபவிப்பேன் என்ற நம்பிக்கைக்காகவும் உம்மைத் துதிக்கிறேன் என்கிறான். நண்பரே, ஜீவன் உனக்கு அருமையானதுதான், ஆனால் அதிலும் தேவகிருபை பெரிதானதென்று எண்ணுகிறாயா?

உம் தயவும் அன்பும்
ஜவனிலும் நல்லதே
தேவ இரக்கம் பூமியைப்
பரலோகமாக்குகிறது.

தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்

யூலை 21

“தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்” எபி. 12:24

பாவத்திற்காகச் சிந்தப்பட்ட இரத்தம் பாவியின் மேலே சிந்தப்பட்டது. முந்தினது பாவநிவர்த்தியை உண்டாக்கிற்று. பிந்தினது செலுத்தினவன் சுத்தமானான் என்று காட்டிற்று. இயேசுவின் இரத்தம் தெளிக்கப்பட்ட இரத்தம். அது பாவிகளுக்குச் சமாதானத்தை உண்டாக்கிற்று. சமாதானத்தைக் கூறுகிறது. அது சகல பாவத்தினின்றும் நம்மைச் சுத்திகரிக்கிறது. இது நமக்குத் தவறாமல் புண்ணியமாய்ப் பலிக்கத்தக்கதாய் நடப்பிக்கிறது. அது காயப்பட்ட மனச்சாட்சியை ஆற்றி, நம்முடைய ஊழியத்தைச் சுகந்த வாசனையாக்கி உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறது. பஸ்காவின் இரத்தம் இஸ்ரவேலரைக் காத்ததுப்போல இயேசுவின் இரத்தம் நம்மை பத்திரப்படுத்தி, நித்திய நீதிக்குத் திருப்தி உண்டாக்குகிறது.

இந்த இரத்தம் குற்றவாளிக்கு மன்னிப்பையும், செத்தவனுக்கு ஜீவனையும் சிறைப்பட்டவனுக்கு விடுதலையையும், கிருபையற்றவனுக்கு கிருபையையும் கொடுக்கிறது. இந்தத் தெளிக்கப்பட்ட இரத்தத்தண்டைக்குத்தான் விசுவாசிகளாக வருகிறோம். இந்த இரத்தம் நமக்காகப் பரிந்து பேசுகிறதைக் கேட்க வருகிறோம். ஆபேலின் இரத்தத்தைவிட அது மேலான காரியங்களைச் சொல்கிறது. தேவனண்டைக்கு நம்மை ஒப்புரவாக்குகிறதினால் அதன்மேல் நம்பிக்கை வைக்க வருகிறோம். அதை ருசிக்கவும், அதனால் ஏற்படும் பாக்கியத்தை அனுபவிக்கவும் வருகிறோம். இரக்கத்தையும் அவசியமான வேலைக்கு வேண்டிய கிருபையைப் பெற்றுக்கொள்ளவும், அவர் இரத்தமூலமே வருகிறோம். இதில் நாம் சந்தோஷப்பட வருகிறோம். ஏனெனில் அது ஆறுதலுக்கும், சந்தோஷத்திற்கும் ஊற்று. குற்றத்தால் வருத்தப்பட்டு, பயத்தால் கலங்கி, சாத்தானால் பிடிபட்டு, குறைவால் வருத்தப்பட்டு மரணம் நம்மை சமீபித்து வரும்போது நாம் அதனண்டையில்தான் போகவேண்டும்.

கிறிஸ்து சிலுவையில்
தன் குருதி சிந்தினார்
அவர் தேகம் பட்ட காயம்
எனக்களிக்கும் ஆதாயம்.

அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாய் இருப்பார்

யூலை 12

“அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாய் இருப்பார்” ஏசாயா 8:14

இது இயேசுவைப்பற்றி ஏசாயா கூறிய வார்த்தைகள். தேவ கோபாக்கினைக்குத் தப்பித்து, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கும் சாத்தானுடைய பொல்லாத சோதனைக்கும் நாம் தப்பி சுகமாயிருக்கப்பட்ட பரிசுத்த ஸ்தலம் அவர்தான். சத்துருக்களுக்கும், புயலுக்கும், துன்பங்களுக்கும் நாம் தப்பி ஓடவேண்டிய அடைக்கலப் பட்டணம் அவர்தான். இந்தப் பரிசுத்த ஸ்தலத்தில்தான் நம்பிக்கையோடும், விசுவாசத்தோடும், அங்கீகாரத்தோடும் கிருபாசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனை நாம் ஆராதிக்கலாம். கிறிஸ்துவினாலே தேவன் தம்மை நமக்கு வெளிப்படுத்தி நாம் அறிய வேண்டிய காரியங்களைப்பற்றி நமக்குப் போதிப்பார். இந்தப் பரிசுத்த ஸ்தலத்தில் நமக்கு வேண்டிய சகலமும் பயத்தினின்று விடுதலையும், சத்துருக்களை எதிர்க்க பலனும் துன்பங்களின் உதவியும், துக்கங்களால் உள்ளான பரிசுத்தமும், இந்த உலகத்தில் இருக்கும் மட்டும் சுகமும் கிடைக்குமென்று எதிர்பார்க்கலாம்.

நண்பரே, எவ்வகை துன்பத்திலும் நீ இயேசுவண்டை போக வேண்டும். உன் தேவை யாவையும் அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள பார்க்க வேண்டும். தேவன் உனக்கு எண்ணளவு கிருபையுள்ளவரென்று காட்டி எல்லா மெய் விசுவாசிகளுக்கும் கிடைக்கும் பாக்கியம் இன்னதென்று அவர் விவரிக்கிறார். அவர் உன் பரிசுத்த ஸ்தலமாய் இருக்கிறாரா? நீ தேவனைக் கிறிஸ்துவுக்குள் எப்போதாவது சந்தித்ததுண்டா? நீ கிறிஸ்துவில் தேவனைத் துதிப்பது உண்டா? அவர் உனக்குப் பரிசுத்த ஸ்தலமானால் அவரை மகிமைப்படுத்தப் பார். எந்த ஆசீர்வாதத்தையும் அவரிலே பெற்றுக்கொள்ளத் தேடு. எந்தத் துன்பத்திலும் மோசத்திலும் அவரண்டை போய் அப்படிப்பட்ட மகிமையின் நிலை உனக்குக் கிடைத்ததற்காக அவரை ஸ்தோத்திரி. இங்கே நீ சுகபத்திரமாய் இருக்கலாம். இங்கே உனக்குச் சமாதானம் உண்டு. கிருபையும் இருக்கும்.

இயேசுவில் எனக்கு
சுகம் பெலன் யாவும் உண்டு
இரட்சகரே நீரே என்றும்
என் அடைக்கலமாய் இரும்.

Popular Posts

My Favorites

ஏன் சந்தேகப்பட்டாய்

செப்டம்பர் 06 "ஏன் சந்தேகப்பட்டாய்" மத். 14:31 இந்த வார்த்தை பேதுருவைப் பார்த்து கேட்கபட்டதென்றாலும் நமக்கும் ஏற்றதே. நம்மில் சந்தேகப்படாதவர், அடிக்கடி சந்தேகப்படாதவர் யார்? சந்தேகத்தை பாவம் என்று எல்லாருமே உணருகிறார்களா? ஆம், அது பாவம்தான். நம்முடைய...