அக்டோபர்

முகப்பு தினதியானம் அக்டோபர்

அவர் மரணத்தைப் பரிகரித்தார்

அக்டோபர் 26

“அவர் மரணத்தைப் பரிகரித்தார்” 2.தீமோ.1:10

நமக்குப் பெரிய விரோதி மரணம். என்ன செய்தாலும் நாம் அதனிடமிருந்து தப்பிக்கொள்ள முடியாது. மரணம் உலகத்திலிருக்கும் ஒவ்வொருவரையும் வாரிக்கொண்டு போய்விடும். தேவ பிள்ளைகளையும்கூட அது விட்டுவைக்காது. நமது நண்பர்களையும், பிள்ளைகளையும்கூட அது விட்டுவைக்காது. நாம் அன்பாக நேசிக்கிறவர்களையும் அது நம்மிடமிருந்து அது பிரித்துவிடும். மரணம் மகா கொடிய பகைவன். நம்மைப் பயத்தால் நிரப்பி எப்பொழுதும் நம்மை நடுங்கச் செய்கிற நமது விரோதி. ஆனாலும் இந்த மரணச்சத்துருவுக்கு மேலான ஒரு பெரிய நண்பர் உண்டு. இந்த தயவுள்ள நண்பர் நம்மை நன்றாகத் தெரிந்தவர். அளவில்லாமல் நம்மை நேசிக்கிறார். நமக்கு இரக்கம் காட்டி, மனுக்குலத்தின் மீட்புக்காக தம்மையே ஒப்புக்கொடுத்தார். நம்மைத் தப்புவிக்க வேண்டுமென்று சந்தோஷமாகப் பூமிக்கு இறங்கி வந்தார்.

நமக்காகப் பெருந்துன்பத்தைச் சகித்தார். சொல்லிமுடியாத வண்ணமாகப் பாடுகள்பட்டார். இப்பாடுகளினால் நமது கடைசிச் சத்துருவாகிய மரணத்தை ஜெயித்தார். சாவின் கூரை ஒடித்தார். அவர் மரணத்தை ஜெயித்ததால், நாம் மரணத்திற்குப் பயப்பட வேண்டியதில்லை. மரணம் இப்பொழுது உறங்கிக்கிடக்கிறது. அதை அவர் மாற்றிப் போட்டதினால், அதைச் சிறையாக்கி, அதனால் சிறைப்படுத்தப்பட்டோரை விடுதலை செய்தார். அதன் பயங்கரத்தை நீக்கினார். இப்பொழுது அது திவ்விய மகிமை நிறைந்து அவர் சாவின் கூரை ஒடித்ததினால் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார். நீதி திருப்தியடைந்தது. துரைத்தனங்களையும் வல்லமைகளையும் அழித்தார். சாத்தானுடைய கரங்களிலுள்ள திறவுகோலைப் பறித்து விட்டார். நித்திய இரட்சிப்பைச் சம்பாதித்தார். இயேசு நமக்குள் இருந்தால் நமக்குச் சாவு இல்லை.

நம் பரமநேசரை நம்பி
அவர் வாழ்க்கையைப் பின்பற்றினால்
மரணத்தின் பயம் நமக்கில்லை
கல்லறையும் அச்சுறுத்தாதே.

அவர் முற்றிலும் அழகுள்ளவர்

அக்டோபர் 25

“அவர் முற்றிலும் அழகுள்ளவர்” உன். 5:16

ஆண்டவரை அதிகம் தெரிந்து கொண்டவர்கள் இவ்வாறுதான் அவரை வர்ணிப்பார்கள். அன்பு செலுத்தத்தக்க பண்பு அவரிடத்தில் உண்டு. அவரை நேசிப்பவர்கள் அவரில் வாசம்பண்ணுவார்கள். பரிசுத்த ஆவியினால் போதிக்கப்பட்டவர்கள் அவரைப் போற்றிப் பாடுவார்கள். தேவகுமாரனாக அவரைப் பார்த்தால், அவர் முற்றிலும் அழகுள்ளவர். அவர் மனுஷரெல்லாரிலும் அழகுள்ளவர். அவருடைய அழகில் தெய்வத்தன்மை உண்டு. அவர் பதினாயிரம் பேரில் சிறந்தவர். அவர் அளவில்லா ஞானமும், மகத்துவமும் உள்ளவர். அன்பும், இரக்கமும் உள்ளவர். அழகற்றது ஒன்றும் அவரிடமில்லை. அவரே பூரண அழகுள்ளவர்.

திருச்சபையாகிய மணவாட்டி, அவரைக் குறித்துக்கூறிய சாட்சி, அவருடைய தீர்க்கதரிசி, ஆசிரியர், இராஜா ஆகிய பதவிகளுக்கும் பொருந்தும். உலகம் முழுவதையும் அவர் ஆண்டுகொண்டிருப்பதாலும், சகலமும் அவர் பாதங்களின்கீழ் இருப்பதாலும் அவரை இவ்வாறு போற்றிப் புகழலாம். வானத்திலும், பூமியிலும் அவருடைய பணிகளைக்குறித்தும் இச்சாட்சியைக் கூறலாம். அவர் கிருபை செய்வதில் வல்லவர். ஆகவே அவர் அழகுள்ளவராகக் காண்பிக்கப்படுகிறார். அவர் நம்மைச் சுத்திகரித்து, உயர்த்திக் கனப்படுத்தி அழகுபடுத்த வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.

பிரியமானவனே, நீ ஆண்டவரை அழகுள்ளவராகக் காண்கிறாயா? அவருடைய அழகில் நீ மகிழ்ச்சி கொள்ளுகிறாயா? அவரில் களிகூரு. அவரில் பேரின்பம் பெறு. அவர்மேல் சார்ந்து வாழ்ந்திரு. எவ்வளவாய் நீ அவரை அறிந்து கொள்ளுகிறாயோ, அவ்வளவாய் நீ அவரை நேசிப்பாய். அவரை நேசிக்கும் அளவுக்கு நீ பாக்கியவானாவாய்.

கர்த்தர் மகிமை நிறைந்தவர்,
மா அழகுள்ளோர், அவரை நேசிப்பது
பேரானந்தம். அவரை அறிந்தோர்
எவருமவரைப் புகழ்ந்து போற்றுவார்.

நான் என்னை அருவருக்கிறேன்

அக்டோபர் 24

“நான் என்னை அருவருக்கிறேன்” யோபு 42:6

தேவன் எவ்வளவாக தம்மை தெரியப்படுத்துகிறாரோ, அவருடைய ஆவியானவர் எவ்வளாக நம்மில் கிரியை செய்கிறாரோ, அவ்வளவாக நாம் நம்மைத் தாழ்த்த வேண்டும். தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்ளுகிறவர்கள், தேவனோடு நெருங்கி வாழ்வது என்பதை உணராதவர்கள். நாம் தேவனோடு நெருங்கி வாழ்ந்தால், நம்முடைய சரியான நிலையை அறிந்து கொள்வோம். தேவனுக்குத் தூரமாய் இருக்கும்பொழுது நாம் நம்மைக் குறித்தே மிகப்பெருமையாக யோசித்துக்கொள்ளலாம். ஆனால், அவரின் முன்னிலையில் வந்தடைந்தால், நாம் அழகானவை என்றெண்ணியதெல்லாம் அவலட்சணமாக நமக்குத் தோன்றும். நாம் அழுக்கானவர்கள் என்று உள்ளபடியே உணருவோம். நாம் ஒன்றுமில்லை என்று தெரிந்துகொள்வோம்.

யோபு தற்பெருமை பாராட்டித் தேவனோடு வழக்காடினான். அவன் தேவனுக்கு அருகில் வந்தவுடன் அவனுடைய சிந்தனைகள் முற்றிலும் மாறி, என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன், இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. ஆகையால், நான் என்னை அருவருத்து, தூளிலும், சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான். நாம் நம்மைப் பாவிகள் என்றும், தீய வழியில் நடப்பவர்கள் என்றும் எண்ணி நம்மையே அருவருக்கலாம். நம் நேசர் நம்மை இரட்சிக்க வலிமையற்றவர். விருப்பமில்லாதவர் என்றும் நாம் கூறலாம். ஆனாலும், தேவனுக்குமுன் நம்மை நாமே வெறுத்துத் தாழ்த்தும்போதுதான் தேவகிருபை நமக்கு மேன்மையாகத் தோன்றும். கிறிஸ்துவை நாம் ஒப்பற்றவராய் எண்ணுவோம். நாம் நம்மை வெறுத்து, தாழ்த்தி தேவனை உயர்த்துவோம்.

நான் என்னை வெறுக்க
உம்மாட்சி எனக்குக் காட்டும்,
உம்மைப் பார்த்து நான்
என் தாழ் நிலை அறிவேன்.

பரிசுத்த ஆவியில் பலத்தினாலே

அக்டோபர் 23

“பரிசுத்த ஆவியில் பலத்தினாலே” ரோமர் 15:13

பரிசுத்த ஆவியானவர் தெய்வத் தன்மையுள்ளவர். பிதாவுக்கும் குமாரனுக்கும் வல்லமையிலும், மகத்துவத்திலும், மகிமையிலும் ஒப்பானவர். இவர் கிரியை செய்வதில் வல்லவர். இவரது கிரியை இல்லாவிட்டால் இரட்சிப்பு இல்லை. அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்துக்கிடக்கிற நமக்கு அவர்தான் மறு உயிர் அருளுகிறார். நாம் அறியாமையினால் கலங்கி நிற்கிறபோது அவர்தான் நமக்குப் போதிக்கிறார். பாவத்தால் கெட்டுப்போயிருக்கிற நம்மை அவர்தான் தூய்மைப்படுத்துகிறார். நாம் சோர்ந்து மனமடிவாக இருக்கும்பொழுது நம்மைத் தூய ஆவியானவர் ஆற்றித்தேற்றுகிறார். ஜெபிக்க நமக்கு உதவி செய்து நமக்காகப் பிதாவினிடத்தில் பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்கிறார். தேவனுடைய உயர் பண்புகள் நம்மில் மிளிரும்படி செய்கிறார். நமக்கு வல்லமையைத் தருகிறார். அது மங்கும்போது, அதைத் தூண்டிவிட்டு அதைப் பயனுள்ளதாக்கினார். நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதற்கு அவர் சாட்சி கூறி, மீட்கப்படும் நாளுக்கென்று நம்மை உறுதியாக்குகிறார்.

நாம் அவருடைய கைகளின் கிரியை. அவர் வாசம் செய்யும் தேவாயலம். அவரே நம் போதகர். ஆறுதல் அளிக்கிறவர். நமக்காகப் பரிந்து பேசுகிறார். அவருடைய வல்லமையே தேவ வசனத்தை அதிகம் பலனுள்ளதாக்குகிறது. கிறிஸ்து இயேசுவைப்போல நம்மை மாற்றுகிறவர் தூய ஆவியானவரே. அவரின் உதவி நமக்கு எப்பொழுதும் தேவை. நாம் இடைவிடாது அவரைப் பற்றியிருக்க வேண்டும். கிறிஸ்து நாதரின் நீதியைக் கொண்டு நம்மைக் கிறிஸ்துவோடு ஒப்புரவாக்குகிறார். இன்றையத் தேவை தூய ஆவியானவர் தரும் இந்த அனுபவம்தான்.

தேவாவியே, நீர் வாருமே
வந்தென்முன் தங்கிடும்
பயம் இருள் நீக்கியே
அன்பால் எம் இதயம் நிரப்பும்.

மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்?

அக்டோபர் 22

“மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்?” பிர. 6:12

உலகக்காரியங்களில் மூழ்கியிருப்போருக்கு இக்கேள்வி வருத்தத்தைக் கொடுக்கும். தேவனுடைய செயல்கள்தான், இதற்கும் பதில் அளிக்கக்கூடும். சில நேரங்களில் வாழ்வும், சில நேரங்களில் தாழ்வும் நலமானவை. சில நேரங்களில் உடல் நலம் நல்லது. சில நேரங்களில் உடல் நலக்குறைவும் நலமாகும். பூமியிலே சில நேரங்களில் காரியம் கைகூடாமையும், சில நேரங்களில் கை கூடுதலும் நலமாயிருக்கும். நாம் அதிகமாக விரும்பும் காரியங்தான் நமக்குத் தீங்கு ஆகக்கூடும். தேவன் நம்மைத் தடுத்து, நம்மைவிட்டு எடுத்து விடும் காரியம் நமக்கு நன்மையாக இராது.

நமக்கிருப்பது எதுவோ அதை நாம் சரியானபடி பயன்படுத்திக் கர்த்தருடைய மகிமைக்கு அதைப் பயன்படுத்துவோமானால், அது நன்மையாகவே இருக்கும். நமக்கு நாம் மகிமை தேடாமல், தேவனுக்கு மகிமையைத் தேடும்பொழுது அது நன்மையே ஆகும். அன்பானவர்களே நீங்கள் உங்களுக்கு இல்லாததொன்றைத் தேடி அதையே நாடுவீர்களானால் அது தீமையாகவே முடியும். தேவ சித்தத்திற்கு உங்களை ஒப்புக்கொடுத்து, அவருடைய வசனத்தின்படி செயலாற்றுவதே நன்மையைத் தரும். தினமும் விசுவாசத்தினால் இயேசுவோடு ஜெபம்பண்ணி, தேவனோடு சஞ்சரித்து, பரலோகத்தில் உங்களுக்குச் செல்வங்களைச் சேமித்து வைத்து, நம்மைச் சூழ்ந்த யாவருக்கும் நன்மை செய்ய முயற்சிப்பதே மிகவும் நல்லது. இவ்வுலகில் நன்மையைத் தேடுவதில் கவனமாய் இருப்போம். இந்த உயிர் இருக்கும்பொழுதே தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருவதை நாடித்தேடுவோம்.

கர்த்தர் என் தந்தை, எனக்கு
நலமானதையே அவர் தருகிறார்
இவ்வுலகை விட்டுச் செல்கையில்
தருவார்மோட்ச பாக்கியம்.

நாம் கர்த்தருடையவர்களாய் இருக்கிறோம்

அக்டோபர் 21

“நாம் கர்த்தருடையவர்களாய் இருக்கிறோம்” ரோமர் 14:8

கர்த்தர் தமக்கென்று சொந்தமான ஒரு ஜனத்தை வைத்திருக்கிறார். அவர்கள் மற்றெல்லாரையும்விட மாறுபட்டவர்கள். கர்த்தரே அவர்களைத் தெரிந்து கொண்டு, தமது இரத்தத்தால் அவர்களக் கழுவித் தூய்மைப்படுத்தினபடியால், அவர்கள் எல்லாரிலும் மேம்பட்டவர்கள். அவர்க அவர்களைத் தமது நித்திய அன்பினால் நேசிக்கிறார். அதனால் அவர்களைத் தமது பிள்ளைகளைப்போல நடத்துகிறார். தமது சிறப்பான செல்வங்களாக அவர்களை மதிக்கிறார். அவர்கள்மீது அன்பு செலுத்தி அவர்களோடு ஒன்றாகி விடுகிறார். தமது மணவாட்டியான அவர்களைப் பாதுகாக்கிறார். அவர்களைத் தமது கண்ணின் மணிகளாகப் பாவிக்கிறார்.

இந்தப் பாக்கியம் நமக்கும் உண்டு. நாம் கர்த்தருடையவர்கள். இதை நாம் அறிவோம். நாம் தூய ஆவியானவரால் உயிர்ப்பிக்கப்படுகிறோம். ஆண்டவரின் சிம்மாசனத்தின்முன் நிற்கத் தகுதியுள்ளவர்களாக்கப்பட்டோம். தமக்கு ஊழியம் செய்யவும், தமக்கென்று உழைக்கவுமே அவரால் நாம் பிரித்தெடுக்கப்பட்டோம். அவருடைய குடும்பத்தின் அங்கமாகி, அவருடைய வசனத்தின்படி நடந்து, அவருடைய மகிமைக்காக வாழ்கிறோம். அவருடைய உறவைப்பெற்ற நாம் அவரை நேசிப்பதனால் திருப்தியடைகிறோம். இதனால் நாம் மகிழ்வோம். இது நமக்குக் கிட்டிய பெரும் பேறாகும். அவருடைய பரிசுத்தவான்களோடு இணைந்து கொள்வோம். பூவுலகில் சிறந்தவர்கள் அவர்களே. அவருடைய வசனத்தை வாசித்து கேட்டறிந்து உள்கொண்டு, விசுவாசித்து அவைகளின்படி நடப்போம். துன்பம் வரும் நேரத்திலும், நாம் கர்த்தருடையவர்களாய் இருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

நான் உம் சொந்தம் இயேசுவே
இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே
உம்முடையோனாம் என்னையே
கிருபை தந்து கடாட்ச்சியும்.

என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ?

அக்டோபர் 20

“என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ?” எரேமி. 32:27

சிருஷ்டிகரைவிட அதிகக் கடினமான காரியங்கள் சிருஷ்டிகளுக்கே உண்டு. சிருஷ்டிகரின் ஞானம் அளவிடமுடியாதது. அவருடைய வல்லமையைக் கணக்கிட முடியாது. அவருடைய அதிகாரத்திற்குட்படாதது ஏதுவுமில்லை. சகலமும் அவருக்குக் கீழானதே. அவர் யாவற்றையும் ஒழுங்காகவே ஏற்படுத்தியுள்ளார். கிரமமாக அவர் யாவற்றையும் நடத்துகிறார். அனைத்து காரியங்களையும் தம்முடைய சொந்த சித்தத்தின்படியே செய்கிறார்.

சில வேளைகளில் நாம் பல சிக்கல்களில் அகப்பட்டுவிடுகிறோம். மனிதர் உதவி செய்ய மறுத்து விடுகிறார்கள். நமது விசுவாசம் குறைகிறது. மனம் சஞ்சலப்படுகிறது. சோர்வடைந்து நாம் பயப்படுகிறோம். அப்படிப்பட்ட நேரத்தில் கர்த்தர் தலையிடுகிறார். நம்மைச் சந்தித்து என்னாலே செய்யக்கூடாத காரியம் ஒன்று உண்டோ? அதை என்னிடத்தில் கொண்டுவா. என்னை முற்றிலும் நம்பி உன்னை முற்றும் அர்ப்பணி. என் சித்தம் செய்யக் காத்திரு. அப்பொழுது நான் உன் காரியத்தைச் செய்து முடிப்பேன். அதை எவராலும் தடுக்க இயலாது என்கிறார்.

அன்பானவர்களே, உங்கள் கேடுகள், உங்கள் சோதனைகள் உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். உங்கள் தேவன் உங்களை விடுவிக்கக் கஷ்டப்படுபவரல்ல. உங்களுக்கு வரும் தீங்கை நீக்கி, உங்கள் துன்பங்களிலிருந்து உங்களை இரட்சிப்பார். உங்களது பெலவீனத்தில் அவருடைய பெலன் பூரணமாய் விளங்கும். கொடுக்கப்பட்ட இவ்வசனத்தில் கேட்கப்படும் கேள்வி, உங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தட்டும். நம்பிக்கையை வளர்க்கட்டும். உங்களுக்குத் தைரியம் தரட்டும். ஜெபிக்க உங்களை ஏவி விடட்டும். உங்கள் பெலத்தையே நோக்குங்கள். பெலவீனத்தை அல்ல. விடுவிக்க வல்லு அவருடைய கிருபையைத் தேடுங்கள்.

என் தேவனால் ஆகாதது
ஒன்றுண்டோ? அவர்தம்
கிருபை எனக்கு
எப்போதும் போதுமன்றோ!

அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை

அக்டோபர் 19

“அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை” புல. 3:22

நண்பனுடைய அன்பு ஒரு நாள் முடிந்துவிடும். உறவினரின் பாசம் முறிந்துவிடும். தாய் தன் குழந்தைக்குக் காட்டும் அன்பு மாறிப்போகும். ஆனால், தேவனுடைய இரக்கம் ஒருக்காலும் மாறாது. சொல்லிமுடியாத இந்த இரக்கத்திற்கு முடிவே இல்லை. அது வற்றாப் பெருங்கடல். மறையாக் கதிரவன். சிலவேளைகளில் அது இருண்டதுபோல் தோன்றும். அதினின்று நன்மை வராததுபோல் தோன்றும். ஆனால் அது எப்பொழுதும்போல் பிரகாசமுள்ளதாகவும் மேன்மையுள்ளதாகவே இருக்கும்.

நண்பரே, இன்று அவர் உனக்கு இரக்கம் காட்டியிருக்கிறார். இப்பொழுதும் உன்மீது உருக்கமான அன்பைக் காட்டியிருக்கிறார். தாராளமாகக் கிருபை அளிக்கிறார். அவர் தமது பிள்ளைகளிடத்தில் இரக்கம் காட்டுவதுபோல் எவருக்கும் காட்டுவதில்லை. ஆகவே, நீ எங்கிருக்கிறாய் என்பதைப் பார்த்துத் திரும்பு. வறண்ட பூமியையும், உலர்ந்த ஓடைகளையும் விட்டுத் திரும்பு. பயத்தையும், திகிலையும் விட்டுவிடு. தேவ இரக்கத்திற்காகக் காத்திரு. இயேசு கிறிஸ்து, தம்மைப் பின்பற்றிய மக்கள் உண்ண உணவில்லாதிருந்ததைக் கண்டு அவர்கள்மேல் மனதுருகினார் அல்லவா? உன்மீதும் அவர் மனதுருகுவார். உன் பலவீனங்களில் உன்னைத் தாங்குவார். உன் துக்கத்தை நீக்குவார். உனது ஆன்மாவை வலுப்படுத்துவார். தம்முடைய மகிமையில் உன்னைச் சேர்த்துக் கொள்ளுவார். ஏனென்றால், அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. இக்கூற்று மாறாத உண்மையானது. உனக்கும் எப்பொழுதும் அவருடைய இரக்கம் கிடைக்கும். வேத வசனம், அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை என்று கூறுகிறது. அது என்றும் பொய்யாகாது.

ஐயங்கள் பயங்கள் பிடித்தாலும்
கவலை என்னை வாட்டினாலும்
தேவ இரக்கம் என்றும் உள்ளதே
அவர் தயவால் அவற்றை வெல்வேன்.

கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராய் இரும்

அக்டோபர் 18

“கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராய் இரும்” சங். 30:9

நமது வாழ்க்கையில் எப்பொழுதும் நமக்குத் தேவ ஒத்தாசை தேவை. நமக்குச் சாயம் செய்பவர் கர்த்தரே. அவர் நமக்குச் சகாயம் செய்ய நாம் அவரைக் கருத்தால் வேண்டிக்கொள்ள வேண்டும். பயப்படாதே, நான் உனக்கு உதவி செய்வேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். அவருடைய வாக்குகளை நாம் நமது ஜெபங்களாக்க வேண்டும். உமது வாக்கின்படியே எனக்கு ஆகட்டும் கர்த்தாவே என்று ஜெபிக்கும்பொழுதுதான் நமது ஜெபம் சரியானதாகிறது. இப்பொழுதும்கூட கர்த்தாவே, நீர் என்குச் சகாயராய் இரும் என்று கருத்தாய் ஜெபிப்போம். அநேகர் விழுந்து போகிறார்கள். நீர் என்னைத் தாங்காவிடில் நானும் விழுந்துபோவேன். என் சத்துருக்கள் பலத்திருக்கிறார்கள். என் இருதயம் கேடானது. மனுஷனை நம்புவது விருதா. என்னையே நான் நம்புவதும் வீண் அகந்தையாகும். உமது ஒத்தாசை இல்லாவிடில் உமது கிருபை என்னை வந்தடையாது. ஆகையால் கர்த்தாவே எனக்குச் சகாயராயிரும் என்று ஜெபி.

எந்தக் கடமையிலும், எந்தப் போராட்டத்திலும், எந்தச் சோதனையிலும் கர்த்தருடைய உதவிதான் நம்மைத் தூக்கிவிடும். எந்த நேரத்திலும் அவருடைய சகாயத்தைத் தேடும் ஜெபம் நமக்கு ஏற்றதாகும். அந்த ஜெபம் மெய்யானதாக உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரவேண்டும். கர்த்தர் நமக்குச் சகாயராயிருப்பதனால் நமது கடமைகளை நாம் செவ்வனே நிறைவேற்றுவோம். நம் ஜெபங்களுக்குப் பதில் கண்டடைவோம். எத்துன்பத்தையும் மேற்கொள்ளுவோம். சகல குறைகளும் தீரும். துன்பங்கள் இன்பங்களாக மாறும்.

கர்த்தாவே, நான் பெலவீனன்,
உம்மையே பற்றிப் பிடிப்பேன்
நீர் என் துணை, என் நண்பன்
நான் வெற்றி பெற்றிடுவேன்.

சர்வ வல்லவருடைய சிட்சை

அக்டோபர் 17

“சர்வ வல்லவருடைய சிட்சை” யோபு 5:17

தேவனுடைய பிள்ளை எவரானாலும் அவருக்குத் தேவனுடைய சிட்சை உண்டு. அவர் சர்வ வல்லவருடைய அன்பினால் சிட்சிக்கப்படுகிறார். தேவன் அதிக ஞானமாகவே எப்போதும் சிட்சிக்கிறார். தேவ கிருபை நமக்கு அதிகமாக விளங்கவும், நல்வழிகளில் நாம் வளரவும், கனிதரும் வாழ்க்கையில் விளங்கவும் நம்மை அவர் சிட்சிக்கிறதுண்டு. நம்மைத் தாம் நேசிக்கிறதினால்தான் கர்த்தர் நம்மைச் சிட்சிக்கிறார். ஆதலால், நமக்குத் துன்பங்கள் நேரிடுகையில் நாம் அவைகளைத் தவறாக எண்ணலாகாது. அவைகள் யாவும் இரக்கங்கள். நமது நன்மைக்காகவே வருகிறவை. அவைகள் நமக்கு அவசியம் தேவை. கிருபையும் இரக்கமும், நிறைந்தவர் நமது பரமபிதா. அவர் நமக்கு என்றும் தீங்கு நினையார், அனுமதியார்.

நமக்குச் சோதனைகள் வரும்பொழுது எக்குற்றத்திற்காகத் தேவன் நம்மைத் திருத்த ஆசிக்கிறார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அவர் ஞானமாக நம்மைச் சிட்சிக்கிறார் என்பதை அறிக்கையிட்டு, அதை அவர் நமக்கு ஆசீர்வாதமாக மாற்ற வேண்டுமென்று ஜெபிக்கவேண்டும். கர்த்தர் விரும்பும் கோல் துளிர்த்துப் பூத்துக் கனிகொடுக்கும். இளக்காரம் பெற்ற அடிமையாக இருப்பதைவிட, சிட்சை பெற்ற பிள்ளையாயிருப்பது நலம். இக்காலத்தில் நமக்கு நேரிடும் சிட்சை இனிவரும் நன்மைகளுக்கும், மகிமைக்கும், கடமைகளுக்கும் நம்மை நடத்தும். தேவனுடைய சிட்சை எல்லாம் நலம்தான். நாம் அவற்றால் நன்மையையே பெறுகிறோம். இன்று சிட்சை நமக்குத் துன்பமாய் காணப்பட்டாலும், இனிவரும் காலங்களில் அதனால் நமக்கு நீதியும், சமாதானமும் கிடைக்கும்.

கர்த்தாவே, என் துன்பத்தை
இன்பமாக மாற்றியருளும்
உம் சிட்சை ஆசீர்வாதமே
அதென்னைத் தூய்மையாக்கும்.

Popular Posts

My Favorites

கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருக்கிறார்

யூன் 29 "கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருக்கிறார்."  கொலோ 1:27 தேவபிள்ளைகளுடைய நம்பிக்கை மகிமையைப் பற்றினது. அந்த நம்பிக்கையின் தன்மை நமக்குப் புரியாத ஒன்றாய் இருக்கலாம். அந்த மகிமையின் மகத்துவம் நமக்கு விளங்காததுப்போல் இருக்கும்....