என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ?

அக்டோபர் 20

“என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ?” எரேமி. 32:27

சிருஷ்டிகரைவிட அதிகக் கடினமான காரியங்கள் சிருஷ்டிகளுக்கே உண்டு. சிருஷ்டிகரின் ஞானம் அளவிடமுடியாதது. அவருடைய வல்லமையைக் கணக்கிட முடியாது. அவருடைய அதிகாரத்திற்குட்படாதது ஏதுவுமில்லை. சகலமும் அவருக்குக் கீழானதே. அவர் யாவற்றையும் ஒழுங்காகவே ஏற்படுத்தியுள்ளார். கிரமமாக அவர் யாவற்றையும் நடத்துகிறார். அனைத்து காரியங்களையும் தம்முடைய சொந்த சித்தத்தின்படியே செய்கிறார்.

சில வேளைகளில் நாம் பல சிக்கல்களில் அகப்பட்டுவிடுகிறோம். மனிதர் உதவி செய்ய மறுத்து விடுகிறார்கள். நமது விசுவாசம் குறைகிறது. மனம் சஞ்சலப்படுகிறது. சோர்வடைந்து நாம் பயப்படுகிறோம். அப்படிப்பட்ட நேரத்தில் கர்த்தர் தலையிடுகிறார். நம்மைச் சந்தித்து என்னாலே செய்யக்கூடாத காரியம் ஒன்று உண்டோ? அதை என்னிடத்தில் கொண்டுவா. என்னை முற்றிலும் நம்பி உன்னை முற்றும் அர்ப்பணி. என் சித்தம் செய்யக் காத்திரு. அப்பொழுது நான் உன் காரியத்தைச் செய்து முடிப்பேன். அதை எவராலும் தடுக்க இயலாது என்கிறார்.

அன்பானவர்களே, உங்கள் கேடுகள், உங்கள் சோதனைகள் உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். உங்கள் தேவன் உங்களை விடுவிக்கக் கஷ்டப்படுபவரல்ல. உங்களுக்கு வரும் தீங்கை நீக்கி, உங்கள் துன்பங்களிலிருந்து உங்களை இரட்சிப்பார். உங்களது பெலவீனத்தில் அவருடைய பெலன் பூரணமாய் விளங்கும். கொடுக்கப்பட்ட இவ்வசனத்தில் கேட்கப்படும் கேள்வி, உங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தட்டும். நம்பிக்கையை வளர்க்கட்டும். உங்களுக்குத் தைரியம் தரட்டும். ஜெபிக்க உங்களை ஏவி விடட்டும். உங்கள் பெலத்தையே நோக்குங்கள். பெலவீனத்தை அல்ல. விடுவிக்க வல்லு அவருடைய கிருபையைத் தேடுங்கள்.

என் தேவனால் ஆகாதது
ஒன்றுண்டோ? அவர்தம்
கிருபை எனக்கு
எப்போதும் போதுமன்றோ!

இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்

அக்டோபர் 31

“இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்” சங். 147:3

மனிதருடைய இருதயத்தைப் பாவம் நிரப்பி அதைக் கடினப்படுத்தியிருக்கிறது. தேவ கிருபையால் மட்டுமே அதைத் தூய்மையாக்கி மென்மைப்படுத்த முடியும். தேவ ஆவியானவரால் இருதயம் மென்மையாக்கப்பட்டவன்தான் தன் இருதயக் கடினத்தைக் குறித்து துக்கப்படுவான். தேவன் பாவங்களை மன்னித்தார் என்ற மனநிறைவு ஒன்றே இருதயத்தை இளகச் செய்யும். தேவ ஆவியானவரால் ஆன்மா உயிர்ப்பிக்கப்படும்பொழுது, பாவ உணர்வு அதிகம் ஏற்படும். நமது குற்றங்கள், குறைவுகள் எல்லாம் நமது இருதயத்தை நொறுக்கும் தேவ பயம் உண்டாக்கும். இந்நேரத்தில் நொறுங்குண்ட இருதயத்தைக் குணமாக்க இயேசு கிறிஸ்து மனபாரம் நீக்கி மனமகிழ்ச்சியளிப்பார்.

இந்நேரத்தில் சாத்தான் அதிக தீவிரமாக செயல்படுவான். தேவ வசனத்தைப்பற்றிய அறிவு குறைந்து அவிசுவாசம் பெருகும் போது மனம் கடினமாகும். மனந்திரும்புவதும் கடினமாகும். ஆவி நெர்ந்து போதும். இந்நிலையில் இருதயம் நொறுங்குண்டு போய்விட்டதால் தோன்றும். அப்பொழுது தன்னைக் தேவனுக்கு முன் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். நொறுங்குண்ட அவன் இதயம் குணமாகும். ஆண்டவருடைய வசனமும், இரட்சகருடைய இரத்தமுமே, மனசாட்சிக்கு அமைதியை கொடுத்து, உடைந்த இதயத்தைச் சீர் செய்யும். அப்பொழுது காயப்பட்ட இதயம் குணமாகும்.

இதை வாசிக்குத் நண்பனே, உன் இருதயம் நொறுக்கப்பட்டிருந்தால் அதைக் குணப்படுத்தும்படி உன் தேவனிடத்தில் கெஞ்சிக்கேள். கர்த்தரை நோக்கிப்பார். அவர் உன்னைக் குணமாக்குவார்.

காயப்பட்ட இருதயத்தைக்
கழுவி சுத்தப்படுத்தும்
தயக்கமுள்ள நெஞ்சை அது
மயக்கமின்றி விடுவிக்கும்.

உத்தமமானவர்களை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக

அக்டோபர் 05

“உத்தமமானவர்களை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக” பிலி. 1:9

எடுத்த எடுப்பில் எதையும் நம்பாமல், அதை வேதவசனத்துடன் ஒப்பிட்டு பரீட்சித்துப் பார்க்கவேண்டும். நலமானது எது? பயனுடையது எது? அவசியமானது எது? முக்கியமானது எது? சேதம் விளைவிப்பது எது என்று சோதித்துப் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு வேறுபடுகிற காரியங்களைப் பகுத்தறிந்து உத்தமமானவைகளை ஒப்புக்கொள்ளவேண்டும். நல்ல கடமைகளை விடாப்பிடியாய்ப் பற்றிக்கொள்ள வேண்டும். நல்ல கடமைகளை நிறைவேற்றுவதுடன், உயர்வான காரியங்களைத் தேடிப் பிடிக்க வேண்டும். சிறந்த, ஒழுங்கான காரியங்களைத் தேடிப்பிடிக்கவேண்டும். ஒழுங்கான முறையில் வாழவேண்டும். வேதவாக்கியங்களை ஆராயவேண்டும். நற்காரியங்களுக்காக ஜெபிக்கவேண்டும். தெளிவான பார்வையுடையவனெ;றும் சத்திகரிக்கப்பட்ட இதயமுள்ளவனெ;றும் உலகம் உன்னில் காணவேண்டும்.

நியாயப்பிரமானம், சுவிசேஷம், தேவகிருபை, நல்உணர்வு, இதயமாறுதல் போன்றவைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும். வாய்வார்த்தைக்கும் உண்மையான உத்தமத்திற்கும், வேத சத்தியத்திற்கும் தவறுதலான உபதேசத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்னெ;னவென்றறிந்து, உத்தமமானவைகளை ஒப்புக்கொள்ளவேண்டும். நல்லவைகளைக் கண்டுபிடித்து அவற்றை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் அறிந்து nனுபவிப்பதைப் பிறருக்கு எடுத்துக் கூறுங்கள். தேவ ஞானத்திற்காகத் தேவ ஆவியானவரிடம் வேண்டிக்கொள்ளுங்கள். நலமான எதையும் மறக்காமல் செய்பவர் அவர். விசுவாசத்தோடு கேட்டாய் பெற்றுக் கொள்வாய்.

உமக்கூழியம் செய்வதே
என் மீதான கடமை
உமக்குக் கீழ்ப்படிந்திருப்பதே
என் பாக்கியம். சிலாக்கியம்.

அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்

அக்டோபர் 07

“அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்” யோபு 23:10

யோபு சோதனை என்னும் அக்கினிக்குகையில் வைக்கப்பட்டான். அது வழக்கமாக உள்ளதினின்றும் ஏழுமடங்கு அதிகமாகச் சூடாக்கப்பட்டது. அவனுக்கு வந்த எல்லாச் சோதனைகளிலும் அவன் உத்தமனாக நிரூபிக்கப்பட்டான். குறைவுள்ளவனானாலும் அவன் உண்மையுள்ளவன். தேவன் தன் இருதயத்தையும், நடத்தையையும் விருப்பத்தையும் அறிந்திருக்கிறார் என்று அவனுக்குத் தெரியும். தன்னுடைய சோதனையின்பின்தான் புதுபிக்கப்படுவான் என்ற நம்பிக்கையும் அவனுக்கு அதிகமாக இருந்தது.

தேவன் நம்மைச் சோதிக்கும் நோக்கமே இதுதான். நம்முடைய எஜமானுக்கு நாம் தகுதியுடையவர்களாகும்படியே அவர் நமக்கு அவைகளை அனுமதிக்கிறார். நித்திய மகிமைக்கு நம்மை ஏற்றவர்களாக்கவே நம்மைச் சோதித்துத் தூய்மை ஆக்குகிறார். நமது பாவங்களும் தவறுதல்களும் இந்தச் சோதனைகளால் நம்மை விட்டு நீங்கி விடும். நமக்கு வேறெதுவும் நடக்காது. நமது பேரின்பத்தின் பலன்கள் அதிகரித்திடும். நித்திய மகிழ்ச்சிக்கு அவை வழிவகுக்கும். நமது தேவன் மாறுகிறவரல்ல. அதுதான் நமக்கு மகிழ்ச்சியும் மனஉறுதியும் தரும். நான் கர்த்தர், நான் மாறாதவர். ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாவதில்லை என்கிறார். கர்த்தர், தேவன் நம்மைப் புதுப்பிக்கச் சோதனையிடும்பொழுது புடமிடும் குகையண்டை அமர்ந்து பணிமுடிந்ததும் அக்கினியை அவித்துவிடுகிறார். சோதனைக்குள் இருக்கும் கிறிஸ்தவனே, கர்த்தர் உன் சோதனையை மாற்றுவார். உன்னைப் புதிப்பிப்பார். அவர் அன்பினால் அவ்வாறு செய்கிறார். இதை நம்பியிரு. அவிசுவாசங்கொள்ளாதே. உன் விசுவாசத்தை வளர்த்துத் தைரியங்கொள். யோபைப்போல் நான் போகும்வழியை அவர் அறிவார், அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன் என்று சொல்.

துன்பம் எனும் சூளையிலும்
உம் வாக்கையே நம்புவேன்
நீர் என்னைத் தாங்குகையில்
பொன்னைப்போல் மிளிருவேன்.

நான் உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறேன்

அக்டோபர் 13

“நான் உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறேன்” யோவான் 8:12

இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வராதிருந்தால், இவ்வுலகம் பாவம் நிறைந்து இருண்டிருக்கும். பாவம் நோய், கொடுமை, அறிவீனம் நீங்கு போன்றவைகளுக்கு அடிமைகளாகவே மக்கள் வாழ்ந்திருப்பார்கள். ஏழு திரிகள் கொண்ட ஒரு விளக்குத்தண்டை யூதர்கள் தங்கள் தேவாலயத்தில் வைத்திருப்பார்கள். அது தேவாலயத்திற்கு மட்டும் ஒளி வீசும். ஆனால் இயசு கிறிஸ்துவோ உலகத்திற்கே ஒளியாய் இருக்கிறார். புற ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும் அவர் வந்தார். அவரில் பூரண ஒளி உண்டு. அது என்றுமே அணையாமல் எப்போதுமே பிரகாசித்துக்கொண்டிருக்கும். அவர் தம்முடைய வசனத்தின்மூலம் ஒளிவீசுகிறார். தம்முடைய ஆவியானவரைக் கொண்டு நம் உள்ளத்திற்கு ஒளிதருகிறார். அவர் வீசும் ஒளியினால் பாவிகள் மன்னிப்புப் பெறுகிறார்கள். அவருடைய ஒளியில் வெளிச்சம் காண்கிறார்கள்.

அவர்கள், அவரையே தங்கள் தெய்வமாகக் கொண்டிருப்பதால், வெட்கமடையார்கள். ஜீவ ஒளியைப் பெறுகிறார்கள். பிசாசின் கண்ணிகளுக்குத் தப்பி அவர்களால் நடக்கமுடிகிறது. அவர்கள் பாவம் செய்யாது வாழவே விரும்புகிறார்கள். ஞானத்தோடும் தெய்வ பயத்தோடும் நடக்க முயற்சிக்கிறார்கள்.

அன்பானவரே, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வெளிச்சத்தில் நீர் நடக்கிறீரா? அவருக்காக ஒளி வீசும் சாட்சியாக நீர் வாழ்கிறீரா? மற்றவர்களை இவ்வொளிக்கு நடத்துகிறீரா? உமக்கு அவருடைய ஒளி கிடைத்துள்ளதா? இல்லையானால், அவரிடம் வந்து ஒளியைப் பெற்றுக்கொள்ளும். உமக்கு ஒளிதேவை. அதைத் தரும்படி இயேசு கிறிஸ்துவிடம் வேண்டிக்கொள்ளும்.

ஜீவ ஒளியே, உம் ஒளி தாரும்
உம் ஒளியால் என் உள்ளம் மிளிரும்
உம் ஒளியால் என் வழி காண்பேன்
அதில் என் வாழ்வு பிரகாசிக்கும்.

அவர் மரணத்தைப் பரிகரித்தார்

அக்டோபர் 26

“அவர் மரணத்தைப் பரிகரித்தார்” 2.தீமோ.1:10

நமக்குப் பெரிய விரோதி மரணம். என்ன செய்தாலும் நாம் அதனிடமிருந்து தப்பிக்கொள்ள முடியாது. மரணம் உலகத்திலிருக்கும் ஒவ்வொருவரையும் வாரிக்கொண்டு போய்விடும். தேவ பிள்ளைகளையும்கூட அது விட்டுவைக்காது. நமது நண்பர்களையும், பிள்ளைகளையும்கூட அது விட்டுவைக்காது. நாம் அன்பாக நேசிக்கிறவர்களையும் அது நம்மிடமிருந்து அது பிரித்துவிடும். மரணம் மகா கொடிய பகைவன். நம்மைப் பயத்தால் நிரப்பி எப்பொழுதும் நம்மை நடுங்கச் செய்கிற நமது விரோதி. ஆனாலும் இந்த மரணச்சத்துருவுக்கு மேலான ஒரு பெரிய நண்பர் உண்டு. இந்த தயவுள்ள நண்பர் நம்மை நன்றாகத் தெரிந்தவர். அளவில்லாமல் நம்மை நேசிக்கிறார். நமக்கு இரக்கம் காட்டி, மனுக்குலத்தின் மீட்புக்காக தம்மையே ஒப்புக்கொடுத்தார். நம்மைத் தப்புவிக்க வேண்டுமென்று சந்தோஷமாகப் பூமிக்கு இறங்கி வந்தார்.

நமக்காகப் பெருந்துன்பத்தைச் சகித்தார். சொல்லிமுடியாத வண்ணமாகப் பாடுகள்பட்டார். இப்பாடுகளினால் நமது கடைசிச் சத்துருவாகிய மரணத்தை ஜெயித்தார். சாவின் கூரை ஒடித்தார். அவர் மரணத்தை ஜெயித்ததால், நாம் மரணத்திற்குப் பயப்பட வேண்டியதில்லை. மரணம் இப்பொழுது உறங்கிக்கிடக்கிறது. அதை அவர் மாற்றிப் போட்டதினால், அதைச் சிறையாக்கி, அதனால் சிறைப்படுத்தப்பட்டோரை விடுதலை செய்தார். அதன் பயங்கரத்தை நீக்கினார். இப்பொழுது அது திவ்விய மகிமை நிறைந்து அவர் சாவின் கூரை ஒடித்ததினால் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார். நீதி திருப்தியடைந்தது. துரைத்தனங்களையும் வல்லமைகளையும் அழித்தார். சாத்தானுடைய கரங்களிலுள்ள திறவுகோலைப் பறித்து விட்டார். நித்திய இரட்சிப்பைச் சம்பாதித்தார். இயேசு நமக்குள் இருந்தால் நமக்குச் சாவு இல்லை.

நம் பரமநேசரை நம்பி
அவர் வாழ்க்கையைப் பின்பற்றினால்
மரணத்தின் பயம் நமக்கில்லை
கல்லறையும் அச்சுறுத்தாதே.

மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்?

அக்டோபர் 22

“மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்?” பிர. 6:12

உலகக்காரியங்களில் மூழ்கியிருப்போருக்கு இக்கேள்வி வருத்தத்தைக் கொடுக்கும். தேவனுடைய செயல்கள்தான், இதற்கும் பதில் அளிக்கக்கூடும். சில நேரங்களில் வாழ்வும், சில நேரங்களில் தாழ்வும் நலமானவை. சில நேரங்களில் உடல் நலம் நல்லது. சில நேரங்களில் உடல் நலக்குறைவும் நலமாகும். பூமியிலே சில நேரங்களில் காரியம் கைகூடாமையும், சில நேரங்களில் கை கூடுதலும் நலமாயிருக்கும். நாம் அதிகமாக விரும்பும் காரியங்தான் நமக்குத் தீங்கு ஆகக்கூடும். தேவன் நம்மைத் தடுத்து, நம்மைவிட்டு எடுத்து விடும் காரியம் நமக்கு நன்மையாக இராது.

நமக்கிருப்பது எதுவோ அதை நாம் சரியானபடி பயன்படுத்திக் கர்த்தருடைய மகிமைக்கு அதைப் பயன்படுத்துவோமானால், அது நன்மையாகவே இருக்கும். நமக்கு நாம் மகிமை தேடாமல், தேவனுக்கு மகிமையைத் தேடும்பொழுது அது நன்மையே ஆகும். அன்பானவர்களே நீங்கள் உங்களுக்கு இல்லாததொன்றைத் தேடி அதையே நாடுவீர்களானால் அது தீமையாகவே முடியும். தேவ சித்தத்திற்கு உங்களை ஒப்புக்கொடுத்து, அவருடைய வசனத்தின்படி செயலாற்றுவதே நன்மையைத் தரும். தினமும் விசுவாசத்தினால் இயேசுவோடு ஜெபம்பண்ணி, தேவனோடு சஞ்சரித்து, பரலோகத்தில் உங்களுக்குச் செல்வங்களைச் சேமித்து வைத்து, நம்மைச் சூழ்ந்த யாவருக்கும் நன்மை செய்ய முயற்சிப்பதே மிகவும் நல்லது. இவ்வுலகில் நன்மையைத் தேடுவதில் கவனமாய் இருப்போம். இந்த உயிர் இருக்கும்பொழுதே தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருவதை நாடித்தேடுவோம்.

கர்த்தர் என் தந்தை, எனக்கு
நலமானதையே அவர் தருகிறார்
இவ்வுலகை விட்டுச் செல்கையில்
தருவார்மோட்ச பாக்கியம்.

இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து

அக்டோபர் 28

“இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து” லூக்கா 8:35

வசனத்தில் குறிப்பிட்டபடி ஆண்டவரின் பாதத்தருகே உட்கார்ந்திருந்த ஏழை மனிதன் சிறிது நேரத்திற்குமுன்தான் சாத்தானுடைய கட்டுகளிலிருந்து விடுதலையானான். அவர் தேவனுடைய வல்லமையைக் கண்டு அவரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். அவருடைய வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, அவருடைய பாதத்தருகே நன்றியுள்ளவனாக அமர்ந்திருந்தான். நாமும் ஜீவனுள்ளவைகளைக் கற்றுக்கொள்ளவேண்டுமானால், தேவனுடைய பாதத்தருகேதான் இருக்க வேண்டும். இந்த இடத்தை எவரும் பெறலாம். இப்போதும் இயேசு நம்மோடிருக்கிறார். நாம் அவர் பாதத்தருகே உட்கார்ந்து அவருடைய வார்த்தைகளைக் கவனமாகக் கேட்டு, அவரின் உபதேசத்தை ஏற்றுக்கொள்ளுவோம். அவர் நம் எஜமானாக இருக்க நாம் விரும்பி ஏற்றுக்கொள்ளுவோம்.

ஆண்டவரின் பாதமே தயவும், அன்பும் நிறைந்த இடம். இங்கு நமக்கு எவ்வித பயமும் இல்லை. இங்குதான் ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைக்கும். புதுப்புது காரியங்கள் நாம் அவரிடம் கற்றுக்கொள்ளலாம். நமக்கும் தேவனுக்குமுள்ள ஐக்கியத்தை இது காட்டுகிறது. நாம் கிறிஸ்துவோடு சேர்ந்திருக்கிறோம் என்பதற்கு இது சாட்சி. அவர் பாதத்தருகே இருக்கும் நாம் எண்ணிறந்த நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம். நமது வாழ்வின் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய இடம் இதுவே. அவருடைய பாதத்தருகே அமர்ந்து, அவருடைய உபதேசத்தை ஏற்றுக்கொள்வோம். என்னவாயினும் இவ்விடத்தை விட்டு அகலவேண்டாம். சாத்தானின் சூழ்ச்சியை முறியடிப்போம். இவ்விடத்தில்தான் நாம் தேவனோடு வாழும் வாய்ப்பைப் பெறுகிறோம். இவ்விடத்திலிருக்கும் பொழுதுதான் நமது வாழ்க்கை பிறருக்கு முன்மாதிரியான வாழ்க்கையாகும்.

இயேசுவின் பாதத்தில் அமர்வேன்
இகத்திலும் பரத்திலும் பெறுவேன்
எண்ணற்ற ஆசீர்வாதங்கள்தனை
என்றுமவரைப் போற்றிப் பாடுவேன்.

நாம் கர்த்தருடையவர்களாய் இருக்கிறோம்

அக்டோபர் 21

“நாம் கர்த்தருடையவர்களாய் இருக்கிறோம்” ரோமர் 14:8

கர்த்தர் தமக்கென்று சொந்தமான ஒரு ஜனத்தை வைத்திருக்கிறார். அவர்கள் மற்றெல்லாரையும்விட மாறுபட்டவர்கள். கர்த்தரே அவர்களைத் தெரிந்து கொண்டு, தமது இரத்தத்தால் அவர்களக் கழுவித் தூய்மைப்படுத்தினபடியால், அவர்கள் எல்லாரிலும் மேம்பட்டவர்கள். அவர்க அவர்களைத் தமது நித்திய அன்பினால் நேசிக்கிறார். அதனால் அவர்களைத் தமது பிள்ளைகளைப்போல நடத்துகிறார். தமது சிறப்பான செல்வங்களாக அவர்களை மதிக்கிறார். அவர்கள்மீது அன்பு செலுத்தி அவர்களோடு ஒன்றாகி விடுகிறார். தமது மணவாட்டியான அவர்களைப் பாதுகாக்கிறார். அவர்களைத் தமது கண்ணின் மணிகளாகப் பாவிக்கிறார்.

இந்தப் பாக்கியம் நமக்கும் உண்டு. நாம் கர்த்தருடையவர்கள். இதை நாம் அறிவோம். நாம் தூய ஆவியானவரால் உயிர்ப்பிக்கப்படுகிறோம். ஆண்டவரின் சிம்மாசனத்தின்முன் நிற்கத் தகுதியுள்ளவர்களாக்கப்பட்டோம். தமக்கு ஊழியம் செய்யவும், தமக்கென்று உழைக்கவுமே அவரால் நாம் பிரித்தெடுக்கப்பட்டோம். அவருடைய குடும்பத்தின் அங்கமாகி, அவருடைய வசனத்தின்படி நடந்து, அவருடைய மகிமைக்காக வாழ்கிறோம். அவருடைய உறவைப்பெற்ற நாம் அவரை நேசிப்பதனால் திருப்தியடைகிறோம். இதனால் நாம் மகிழ்வோம். இது நமக்குக் கிட்டிய பெரும் பேறாகும். அவருடைய பரிசுத்தவான்களோடு இணைந்து கொள்வோம். பூவுலகில் சிறந்தவர்கள் அவர்களே. அவருடைய வசனத்தை வாசித்து கேட்டறிந்து உள்கொண்டு, விசுவாசித்து அவைகளின்படி நடப்போம். துன்பம் வரும் நேரத்திலும், நாம் கர்த்தருடையவர்களாய் இருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

நான் உம் சொந்தம் இயேசுவே
இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே
உம்முடையோனாம் என்னையே
கிருபை தந்து கடாட்ச்சியும்.

நீர் எங்களுடனே தங்கியிரும்

அக்டோபர் 06

“நீர் எங்களுடனே தங்கியிரும்” லூக்கா 24:29

இரண்டு சீஷர்கள் எம்மாவு என்னும் ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்கள். வழியில் இயேசுவானவர் அவர்களோடு சேர்ந்து கொண்டார். ஆனால் அவரை இன்னாரென்று அறியவில்லை. வழியில் அவர் அவர்களுக்கு தேவ வசனத்தை விளக்கிக் கூறினார். பின்பு வேறு வழியிற் செல்பவர்போல் காணப்பட்ட அவரை அவர்கள் நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காம் ஆயிற்று, பொழுதும் போயிற்று, என்று அழைத்தார்கள். ஆண்டவருடைய சமுகத்தை அனுபவித்த எவரும் இப்படிச் சொல்லக்கூடும். உண்மையான தேவ பிள்ளைகள் அவர் தங்களைவிட்டுப் போவதை விரும்பமாட்டார்கள். தாங்கள் தேவனோடு இருக்கவும், அவர் அவர்களோடு இருப்பதையும் விரும்புவார்கள். ஆண்டவர் எப்பொழுதும் நம்மோடு இருக்கிறார். நாம்தான் அதை உணருவதில்லை.

இந்த நாளில் அவருடைய சமுகம் உங்களோடு இல்லை என்றாலும் உடனே அதைத் தேடுங்கள். எங்களோடு தங்கும் என்று கெஞ்சுங்கள். உங்கள் உள்ளத்தில் அனல்மூட்டி எழும்பும்படி அவரைக் கெஞ்சிக்கேளுங்கள். உங்களைவிட்டு அவர் கடந்துபோக விடாதேயுங்கள். அவரும் எப்போதும் நம்மோடேயே இருக்க விரும்புகிறார். நீங்கள் அவரை விரும்புவதிலும் அதிகமாக அவர் விரும்புகிறார். நீங்கள் கர்த்தரோடிருந்தால் அவர் உங்களோடிருப்பார். அவரைத் தேடி கண்டுபிடித்து, அவரை விட்டுவிடாது பற்றிக்கொள்ளுங்கள்.

பிரியமானவர்களே, நீங்கள் கர்த்தரின் சமுகத்தை அனுபவித்ததுண்டா? அதைக் கண்டு உணருகிற சந்தோஷத்தை உணர்ந்திருக்கிறீர்களா? அவர் சமுகமே மோட்சம். அவருடைய பிரசன்னம் இன்பம். நமது துக்க துன்பங்களை நீக்கும் வழி அவரே. அவர் நம்மோடிருப்பின் மகிழ்வோம். களிகூருவோம். அவரை நாம் கண்டு பிடித்துப் பற்றிக்கொண்டால் மரணபரியந்தம். ஏன், மரணத்திற்குப் பின்னும் சந்தோஷம் பெறுவோம்.

இயேசுவே என்னிடம் வாரும்,
வந்தென்னை ஆசீர்வதியும்
நீங்காதிரும் மாநேச கர்த்தரே
வெளிச்சம் மங்கி இருளாயிற்றே.

Popular Posts

My Favorites

நாம் தேவனால் உண்டாயிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்

ஜனவரி 30 "நாம் தேவனால் உண்டாயிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்." 1.யோவான் 5:19 இது எவ்வளவு பெரிய சிலாக்கியம். எவ்வளவு பெரிய ஆறுதல். நாம் தேவனால் உண்டானவர்கள். கிறிஸ்து இயேசுவின் வல்லமையினாலும் அவரின் இரத்தம் நம்மேல் தெளிக்கப்பட்டதினாலும்,...