பெப்ரவரி

முகப்பு தினதியானம் பெப்ரவரி

உம்மை நேசிக்கிறவன் என்பதை நீர் அறிவீர்

பெப்ரவரி 08

“உம்மை நேசிக்கிறவன் என்பதை நீர் அறிவீர்.” யோவான் 21:15

நான் எவ்வளவோ குறைவுள்ளவனாயிருந்தாலும், உம்மை அடிக்கடி துக்கப்படுத்தியும், உம்முடைய அன்புக்கு துரோகஞ்செய்தும் உம் வார்த்தைகளை நம்பாமலும், இவ்வுலகப்பொருளை அதிகமாய் பற்றிப்பிடித்தும், கொடியதும் அக்கிரமுமான கேடுபாடுகள் செய்தும், சில வேளைகளில் சாத்தானுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தபோதும் நீர் என் இருதயத்தை ஆராய்கிறீர். என் ஆத்துமாவின் அந்தரங்க கிரியைகள் எல்லாவற்றையும் பார்க்கிறீர். நான் உம்மை நேசிக்கிறேனா என்பதையும் நீ அறிவீர். உம்மையல்லாமல் திருப்தியடையக் கூடாத உரு வஸ்து என் உள்ளத்தில் புதைந்து கிடக்கிறதென்பதை நீர் அறிவீர். ஆதலால், உம்மை நினைத்து, உம்முடைய அன்பு என் உள்ளத்தில் ஊற்றப்படவேண்டுமென்று நாடி, உம் மகிமை என் ஆத்துமாவுக்குப் பிரசன்னமாக வேண்டுமென்று ஜெபித்து, எல்லாவற்றிற்கும் மேலாக நீர் என்னுடையவரென்றும் சொந்தம் பாராட்டி உம்மை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். உம்மை நேசிக்கிறபடியால் என் இருதயத்தில் பக்தி வைராக்கியம் கொண்டிருக்கிறேன். உம்மை நேசிக்கிறபடியால் உலகத்தை வெறுக்கிறேன். உம்மை விரும்புகிறபடியால் உமக்குப் பிரியமாய் நடக்க ஆசிக்கிறேன். எப்போதாவது உம்மை விட்டுப் பிரிந்தால் அதுதான் எனக்கு மனவருத்தம் கொடுக்கிறதேயன்றி வேறொன்றுமில்லை.

இன்னும் உம்மை அதிகம் நேசிக்க வேண்டாமா? உம்மைத் தியானிக்கும்போது ஆத்துமா ஆனந்தத்தால் பொங்கவேண்டாமா? எப்போதும் உம்மை நேசிக்கவும் எந்த நிமிடமும் உம் அன்பைத் தியானிக்கவும் உம்மேல் ஒரு பெரிய பாசத்தை வளர்ப்பியும் கர்த்தாவே.

என் அன்பு குளிர்ந்தது
என்பதே என் துக்கம்
நேசம் பெருகச் செய்யும்
நீரே என் துருகம்.

அவருக்குக் காத்துக்கொண்டிரு

பெப்ரவரி 07

“அவருக்குக் காத்துக்கொண்டிரு.” யோபு 35:14

உன் காலங்கள் அவர் கரத்தில் இருக்கிறது. உன் பேர் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அவர் உன் தேவனாயிருப்பேனென்று வாக்களித்திருக்கிறார். அவர் சொன்னபடியே செய்கிறவர். இவைகளை மறவாதே. நமக்கு தேவையான எந்த நன்மையானாலும் கொடுப்பேனென்று வாக்குப்பண்ணியிருக்கிறார். அவர் வாக்கு உறுதியும் நம்பிக்கையுமானது. அவைகளையே நம்பிக் கொண்டிரு. உன் இருதயம் பயப்படலாம். உன் மனம் திகைக்கலாம். உன் சத்துருக்கள் உன்னை நிந்திக்கலாம். ஆனால் உன் பாதைகளோ கர்த்தருக்கு மறைக்கப்படுவதில்லை. ஆகையால் அவரையே நம்பிக்காத்திரு.

ஆதிமுதல் அவர் வார்த்தை உண்மையாகவே இருக்கிறது. இதை அவரின் அடியவர்கள் பரீட்சித்து பார்த்திருக்கிறார்கள். உண்மைதான் அதன் கிரீடம். ஆதலால் நீ உறுதியாய் நம்பலாம். உன் நம்பிக்கையைப் பலப்படுத்து. உன் ஆறுதல் இன்னமாய் இருக்கட்டும். இப்பொழுதும் நீ குழந்தையைப்போல் கீழ்ப்படி. அவரின் மனமோ உன்னை நேசித்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை உனது தப்பிதங்களுக்கு, உன்னை அழிக்க ஒரு பட்டயத்தை பிடித்திருப்பாய். அவர் தோன்றினாலும் தோன்றலாம். அப்போது நீ அவர் என்னைக் கொன்றுப்போட்டாலும் அவுர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்று சொல்ல வேண்டும். அப்போது நீ காட்டின நம்பிக்கையின் நிமித்தம், உன்னை மேன்மைப்படுத்தி, திரண்ட ஐசுவரியமுள்ள மேலான தலத்திற்கு கொண்டுபோவார்.

கர்த்தாவே உமது வழிகள்
மிக ஞானமுள்ளவைகள்
கோணலான வழிகளெல்லாம்
உமதன்பினால் உண்டானவையே
ஆகையால் நான் நம்புவேன்
உம்சித்தம் என் பாக்யம் என்பேன்.

தம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல்

பெப்ரவரி 11

“தம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல்.” ரோமர் 8:32

தமது ஜனங்களை இரட்சிக்கும்படிக்கு பிதா தம்முடைய குமாரனையும் பெரிதாக எண்ணவில்லை. இவர்களை ஆறுதல்படுத்த அவரைத் தண்டித்தார். பாவம் செய்த தூதர்களையும் அவர் விட்டுவைக்கவில்லை. உலகத்தில் அதிகமாய் பாவம் செய்தவர்களையும் தண்டித்தார். ஆனால் நம்மையோ இரட்சிப்பதற்கு அதிகம் விருப்பம் கொள்கிறார். இந்த அன்பை யோசித்தால் ஆச்சரியமானது. அவரே நம்மை இரட்சித்தார், இரட்சிக்கிறார், இரட்சிப்பார். இதற்காகத்தான் இயேசுவையும் ஒப்புக்கொடுத்தார். நமக்hகத்தான் பிதாவும் அவரோடு உடன்படிக்கை செய்தார். நமக்காகவே அவர் உலகத்தில் வந்தார். நமக்காகவே சகல நீதியையும் நிறைவேற்றினார். நமக்காகவே பாவ பலியானார். நமக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்து பரமேறி பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

கிறிஸ்து நம்முடைய பதிலாளி. மேலான உடன்படிக்கைக்குப் பிணையாளி. ஆகையால்தான் நம்மை விடுவிக்க தேவன் அவரை தண்டித்தார். நம்மைத் தப்பிவிப்பது மட்டுமல்hமல் ஜீவனும், புத்தியும், சகல உரிமையையும் இலவசமாய் தருகிறார். எங்கள் அருமை இரட்சகரே, எங்களுக்காக பிதா உம்மைத் தண்டித்தார். பிசாசும் உம்மைச் சும்மா விட்டு வைக்கவில்லை. குற்றவாளியான மனுஷர்களும் உம்மைக் கொடுமைப்படுத்தினார்கள். ஆனால் நாங்களோ, உம்மைக் கோபப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளவும், உம்மை மனம் நோகச் செய்யாதபடி காத்துக் கொள்ளவும், உமது நாமத்தை வீணிலே வழங்காதிருக்கும்படி நடக்கவும், எங்களுக்குக் கீழ்ப்படிகிற இருதயத்தைத் தந்தருளும்.

முள்கிரீடத்தில் எங்களுக்கு
மகிமை சம்பாதித்தீர்
ஐங்காயங்களால் பாவிகட்கு
சுகம் வரப்பண்ணினீர்.

என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது

பெப்ரவரி 17

“என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது.” சங். 119:25

இப்படி சரியான அறிக்கை செய்வது சாதாரணமானாலும், மிக உண்மையானது. உலகம் வெறும் மண். அதன் பணமும் பதவிகளும் மண்தான். மேலான இராஜ்யத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவைகளெல்லாம் ஒன்றுமில்லை. நிலையான ஆத்துமாவுக்கு முன், நிலைய்ய இவைகள் ஒன்றுமில்லை. இது நமக்குத் தெரிந்திருந்தாலும் நாம் உலக நினைவாலே அதிகம் கவரப்படுகிறோம். நமது ஆசைகள் உலகப் பொருள்மீது அதிகம் ஈடுபடுகிறது. இதனால் நமது நல் மனசாட்சியையும் நாம் கெடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உலகத்தார் இந்த மண்ணை விரும்பி இதிலேயே திருப்தியாகி விடுகிறார்கள். ஆனால் இந்த மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிற தேவ பிள்டுளைகளுக்கோ இது திருப்தியாயிருக்கக்கூடாது. அதை அருவருத்து வாழ்கிறது மிகவும் நல்லதே.

நாம் மேலானவைகளை நோக்க வேண்டும். செட்சைகளை விரித்து மேலே எழும்ப வேண்டும். இம்மைக்குரிய பொருள்களை அற்பமென்று எண்ணவேண்டும். என் ஆத்துமாவே! நீ ஒன் அசுத்தத்தை விட்டெழும்பு. நீ இருக்கிற இடத்திலிருந்தே தேவனை நோக்கிப் பார். இந்த மண்ணை விட்டெழுந்து உதறி மேலான வஸ்திரங்களைத் தரித்துக்கொள். இதுவே இரட்சிப்பின் நாள். தேவன் உன்னை அழைக்கிறார். அவர் உன்னோடு ஐக்கியம் கொள்ள விரும்புகிறார். இந்த பூமி உனக்கு நிரந்திரமானதல்ல. உன் வீடும் வாசஸ்தலமும் நித்தியம்தான். இந்தப் பூமி கடந்து போய்விட வேண்டிய ஒரு வனாந்தரம். நீ கொஞ்சநாள் தங்கியிருக்கும் இடம். நீ இளைப்பாரும் இடம் மேலே உள்ளது. இவ்விடம் தீட்டுள்ளது.

மரித்து மோட்சம் சேரும் நான்
மண்ணைப் பிடித்திருப்பேனோ?
லோகத்தைவிட்டு என் ஆவி
பரத்தைப் பிடிக்கும் தாவி.

விலையேறப்பெற்ற சீயோன் குமாரர்

பெப்ரவரி 06

“விலையேறப்பெற்ற சீயோன் குமாரர்.” புல. 4:2

இரட்சகராகிய இயேசு தம்முடைய ஜனங்களுக்கு அருமையாயிருக்கிறதுபோல, அவர்களும் தமது ஆபரணங்களென்றும் தமது விசேஷித்த பொக்கிஷங்களென்றும், நமது பங்கென்றும் அவர் சொல்லுகிறார். அவர்கள்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு ஆச்சரியமானது. தமது பிள்ளைகளை மிகவும் வேண்டியவர்களாய் எண்ணியபடியால், தனது விலையேறப்பெற்ற இரத்தத்தினால் அவர்களை மீட்டார். அவ்வளவு உயர்ந்த விலைக்கொடுத்து மீட்டதால் அவர்களைக் கைவிடவே மாட்டார். நேசர் தமது ஜனங்களுக்கு அருமையாயிருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? அவர் அவர்களுக்கு எவ்வளவோ உதவிகளையும், நன்மைகளையும் செய்கிறார். பல வழிகளில் அவர்களோடு ஐக்கியப்படுகிறார். அவர் எவ்வளவோ அருமையானவர். நாம் அவர் பார்வையில் அருமையாயிருப்பதுதான் அதிக ஆச்சரியம்.

நாம் எவ்வளவு பாவிகள், எவ்வளவு நிர்பந்தர், எவ்வளவு கொடியவர்கள், எவ்வளவு நிர்விசாரிகள். அவரின் வழிகள் நம்முடையவைகள் அல்ல. அவருடைய நினைவுகள் நம்முடைய நினைவுகள் அல்ல. அப்படியருந்தும் நம்மை, அருமையான பிள்ளைகளாக, அழகான மனையாட்டிகளாகப் பாவிக்கிறார். அவ்வளவுக்கு அதிகமாய் அவர் நம்மை நேசிக்கிறார். இது மகிமை நிறைந்த சத்தியம். மனிதர் நம்மைக் குறித்து என்ன நினைத்தாலும் அவர் நம்மை விலையேறப்பெற்றவர்களாய் நினைக்கிறார். நாம் விலையேறப்பெற்றதால்தான் கர்த்தருடைய பார்வைக்கு அருமையானவர்கள். இந்தச் சிந்தையோடு இந்த இரவில் படுக்கைக்குச் செல்வோமாக. பரிசுத்தவான்கள் கர்த்தருடைய பார்வைக்கு அருமையானவர்கள்தான். அவர்கள் மரணமும் அருமையானதுதான்.

இயேசு சொல்வதைக் கேள்
அவரை விட்டுப் பிரியாதே
பிழைத்தும் செத்தும் பக்தர்
அவருக்கு அருமையானவர்களே.

கர்த்தர் எவனிடத்தில் அன்புகூறுகிறாரோ அவனை அவர் சிட்சிக்கிறார்

பெப்ரவரி 21

“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூறுகிறாரோ அவனை அவர் சிட்சிக்கிறார்.” எபி. 12:6

எல்லா விசுவாசிகளையும் தேவன் நேசிக்கிறார். ஆகையால் எல்லா விசுவாசிகளையும் அவர் தண்டிக்கிறார். தண்டனைதான் அவர் அன்புக்கு அத்தாட்சி. நாம் பி;ளைகளாயிருப்போமானால் தண்டனை நமக்கு அவசியம் வேண்டும். அப்படி அவசியமான தண்டனைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிலரை நஷ்டம் வரும்படி வியாதிமூலம் தண்டிக்கிறார். சிலருக்குக் குடும்பப் பிரச்சனைகளினால் தண்டிக்கப்படுகிறார்கள். தேவனுடைய ஒரே பிரம்பால் நாம் தண்டிக்கப்படாவிட்டாலும், ஒரே கரந்தான் நம்மெல்லாரையுமே தண்டிக்கிறது. ஒரே வகையாய் நாம் எல்லாரும் சீரடையாவிட்டாலும் நம்மெல்லாரையும் சீர்ப்படுத்துகிறவர் ஞானமும் அன்பும் கொண்ட ஒரே பிதாதான்.

சிலர் மனதில் வருத்தப்படுகிறார்கள். சிலர் சரீரத்தில் துன்பப்படுகிறார்கள். சிலர் தங்களின் உறவினர்கள்மூலம் தண்டனையடைகிறார்கள். எந்த அடிகளும் அன்பால் விழுகிறதென்பதை நாம் மறக்கக்கூடாது. தண்டனை நமக்கு வருத்தத்தைத்தான் கொடுக்கும், பிதாவும் அப்படியே வருத்தம் அடைவார். அவர் வேண்டுமென்று நம்மை தண்டிக்கிறதில்லை. தமது இஷ்டப்படி நம்மைத் துன்பப்படுத்துகிறதில்லை. சில சமயங்களில் நமது புத்தியீனமும் நமது துன்பங்களுக்கும் காரணமாகிவிடுகிறது. நமது பாவங்கள்கூட பிதாவின் கடிந்துக் கொள்ளுதலை அவசியமாக்குகிறது.

இன்று நமது பிதாவின்கீழ் நம்மைத் தாழ்த்துவோமாக. நம்மை அவர் தண்டிக்கும்போது அவர் நமக்குச் சொந்தம் என்றும் நம்மை நேசிக்கிறாராயென்று நாம் சந்தேகிக்கக்கூடாது. நமக்குத் தண்டனை அவசியமில்லையென்று எண்ணி அவைகளை அசட்டை செய்யாதிருப்போமாக.

தேவ தண்டனை எனக்கு
வருத்தமாகக் கண்டாலும்
அதற்கே கீழடங்குவேன்
தேவ சித்தமே நலம் என்பேன்.

நீர் என்னைப் புடமிட்டுப் பார்த்தீர்

பெப்ரவரி 13

“நீர் என்னைப் புடமிட்டுப் பார்த்தீர்.” சங். 17:3

ஆகையால் ஜெபத்திற்குப் பதில் கிடைத்தது. கிருபை வரங்கள் பெருகியது. தேவன் உன்னைக் கண்டிப்பாய் நடத்தியிருக்கிறார். நீதிமானைக் கர்த்தர் புடமிடுகிறபடியால் அவனுக்கு வரும் துன்பங்கள் மூலம் நற்குணங்கள் பிரகாசிக்கின்றன. அவருடைய அக்கினி சீயோனிலும் அவருடைய குகை எருசலேமிலும் இருக்கினறன. அங்கேதான் அவர் தமது ஜனங்களைப் புடமிடுகிறார். எந்தத் துன்பமும் நமது நன்மைக்கு அவசியம் வேண்டியது. நித்திய நேசத்தால் ஏற்படுத்தப்பட்டு எவ்வளவு காலம் அது தேவையோ அவ்வளவு காலம் அது இருக்கும். அதற்கு மிஞ்சி ஒரு நொடியும் இருக்காது. எந்தப் பக்தனுக்கும் துன்புங்கள் வேண்டும். எந்த விசுவாசியும் புடமிடப்படுகிறான். நம்மைப் பரிசுத்தராக்க தேவன் சித்தங்கொண்டால் நம்மை அக்கினியில் வைப்பார்.

பரிசுத்தத்திற்காக நாம் ஜெபிக்கும்போதெல்லாம் துன்பங்கள் வேண்டுமென்று கேட்கிறோம். துன்பங்கள் வாக்குத்தத்தங்களை அதிக அருமையாக்கி, கிருபாசனத்தின்மேல் நாம் வாஞ்சைக்கொள்ள செய்கிறது. இது இரட்சகரை எவ்வளவோ அருமையுள்ளவர் ஆக்குகிறது. துன்பங்கள் வரும்போது நம்முடைய சொந்த இருதயங்களை நாம் நன்றாய் பார்க்கிறோம். உலகம் நம்மைச் சாந்திப்படுத்தாது என்று அறிகிறோம். நாம் தேவனுடைய பிள்ளைகளென்று காட்டுகிற சாட்சிகளைக் கூர்ந்து கவனிக்கச் செய்கிறது. ஒரு புடமிடப்பட்ட கிறிஸ்தவன் உறுதியுள்ளவனாவான். சோதனையில்லாமல் இருக்கிறவர்கள் பரம சிந்தையில் குறையுள்ளவர்களாயிருப்பார்கள். அதிக பிரயோஜனமுள்ளவர்களாயும் இருக்க மாட்டார்கள். பிறருக்கு ஆறுதலாயுமிருக்க முடியாது. துன்பங்கள் மழை காலத்தில் விழும் மூடுபனிபோல் வசனமாகிய விதையை ஏற்றுக்கொள்ள நமது இருதயத்தைப் பண்படுத்துகிறது. அப்போதுதான் நாம் அதிக கனிகளைக் கொடுப்போம்.

அக்கினியில் என்னைச் சோதித்தீர்
அதை அவித்து தினம் துதிப்பேன்
தண்ணீரில் மூழ்கப் பண்ணினீர்
நீரே இரட்சித்தீரென்று போற்றுவேன்.

வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தாவி

பெப்ரவரி 15

“வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தாவி.” எபேசி.1:13

பழைய ஏற்பாட்டில் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டிருக்கிற பெரிய ஆசர்வாதம் தே குமாரன்தான். புதிய ஏற்பாட்டில் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டிருக்கிறவர் பரிசுத்தாவியானவர். இயேசு கிறிஸ்து செய்து முடித்த கிரியைகளுக்குப் பதிலாக, அவர் நமக்குக் கொடுக்கப்பட்டார். அவரை நோக்கி கேட்கிற எவருக்கும் ஆவியானவரைத் தந்தருளுவார். இந்த ஜீவத் தண்ணீரைக் கொடுப்பவர் இயேசுவானவN. இதைப் பெறுகிற யாவரும் நித்திய ஜீவகாலமாய் ஊறும்ஊற்றைப் பெறுவர். நம்மைத் தேற்றவும், ஆற்றவும், போதிக்கவும், நடத்தவும், உதவி செய்யவும் ஆவியானவேர பொறுப்பெடுக்கிறார். கிறிஸ்துவால் நமக்கு நீதியும் இரட்சிப்பும் கிடைக்கிறதுபோல, பரிசுத்தாவியானவர்மூலம் நமக்கு அறிவும், ஜீவனும், சந்தோஷமும், சமாதானமும் கிடைக்கிறது.

இவர் வாக்குத்தத்தத்தின் ஆவியாயிருக்கிறார். இவர் உதவியின்றி தேவ வாக்குகளை நாம் வாசித்தால் அதன் மகிமையை அறியோம். சொந்தமாக்கிக் கொள்ளும் உணர்வையும் அடையோம். அவர் போதித்தால் தான் வாக்குகள் எல்லாம் புதியவைகளாகவும், அருமையானதாகவும், மேலானதாகவும் தெரியும். எந்தக் கிறிஸ்தவனும் துன்பமென்னும் பள்ளிக்கூடத்தில் தன் சுய அனுபவத்தால், வாக்குத்தத்தமுள்ள ஆவியானவர் தினமும் தனக்கு அவசியத் தேவையெனக் கற்றுக்கொள்ளுகிறான்.

தேவ பிள்ளையே, ஆவியானவரைத் துக்கப்படுத்தாதபடி ஜாக்கிரதையாக இருப்போமாக. அவர் ஏவுதலை ஏற்று, அவர் சித்தம் செய்ய முற்றிலும் இடங்கொடுப்போமாக.

பிதாவே உமது ஆவி தாரும்
அவர் என்னை ஆளட்டும்
உமது வாக்கின்படி செய்யும்
என் தாகத்தைத் தீரும்.

சமாதானத்தின் தேவன்

பெப்ரவரி 05

“சமாதானத்தின் தேவன்.”  எபி. 13:20

கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் தேவன் நம்மோடு முற்றிலும் சமாதானமாகி ஒப்புரவாக்கப்பட்டிருக்கிறார். அவர் சமாதானத்தின் தேவன். பயப்படத்தக்கதொன்றும் அவரில் இல்லை. இயேசுவின் நாமத்தில் எதைக் கேட்டாலும் அதை நடக்குக் கொடுப்பார். அவர் நம்மேல் மனஸ்தாபமாயிருந்தது உண்மைதான். இப்போதோ அவர் கோபம் நீங்கி ஆறுதல்படுத்துகிறார். நமக்கும், அவருக்கும் இப்போது சமாதானமுண்டு. நமது நன்மையை அவர் போருகிறார். அவருக்கு மகிமையை அதிகம் கொடுக்க வேண்டியதே நமது கடமை. யோகோவா நம்மிடம் சமாதானமாய் இருப்பது எத்தனை பாக்கியம். அவரின் சமுகத்தில் நமது இருதயத்தை ஊற்றி அவரில் நம்பிக்கை வைத்து முழுவதும் அவர் கரத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போமாக.

கிறிஸ்துவானவர் நமக்காக நிறைவேற்றின கிரியையை, யோகோவா அங்கீகரித்து, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, பரம ஸ்தலங்களில் அவரைத் தமது வலது பாரிசத்தில் வைத்து, அவர்மூலம் நமது வாழ்க்கைக்கு நன்மை செய்யப் பிரியப்படுகிறார். இப்போதும் அவர் அதிகமாய் நம்மோடு சமாதானப்பட்டிருக்குpறார். நாம் இதை அதிகமாய் நம்பி அதிகமாய் அனுபவிக்கலாம். பரிசுத்தாவியைத் தந்து நமக்கு நன்மை செய்கிறது அவருக்குப் பிரியம். இனி தேவனைக் குறித்து தப்பெண்ணங்கொள்ளாதபடிக்கும் அவர் கடினமனமு;ளவரென்று எண்ணாதபடிக்கும் எச்சரிக்கையாயிருப்போமாக. அவர் சமாதானத்தின் தேவன்.

சமாதானத்தின் தேவனே
அமர்ந்த மனநிலை தாருமே
இருதயத்தில் இரத்தம் தெளித்து
உமது நாமம் அதில் எழுதுமே.

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு

பெப்ரவரி 14

”கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு.” சங். 37:4

கர்த்தர் நம்மில் மகிழுகிறதுபோல, நாம் அவரில் மனமகிழ்ச்சியாயிருக்க வேண்டும். இதற்கு அவருடைய அன்பைப்பற்றி சரியான எண்ணங்கள் நமது உள்ளத்தில் வரவேண்டும். இயேசுவில் வெளியாகியிருக்கிற அவரின் மகிமையான குண நலன்களைத் தியானிக்க வேண்டும். அவருடைய அன்பும் பூரண இரட்சிப்பும் நமக்கு உண்டென உணரவேண்டும். அவரின் அழகையும் பரலோக சிந்தையும் நம்மில் இடைவிடாமல் இருக்க வேண்டும். அவரின் வாக்குகளை அதிகம் நம்ப வேண்டும்.அவரின் பாதத்தில் காத்திருக்க வேண்டும். நமது தகப்பனாகவும், நண்பனாகவும் அவரை நாட வேண்டும். நமது பங்கு நித்திய காலமாய் நமக்கிருக்கிறதென்று விசுவாசிக்க வேண்டும்.

எனவே, கீழான காரியங்களின் மேலிருக்கும் நாட்டத்தை நீக்கி, அதைக் கர்த்தர்மேல் வைக்க அதிகமாய் பிரயாசப்பட வேண்டும். கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருப்பவர்கள் வெகு சிலரே. அவரைப் பற்றி தியானிப்பது, அவரைப்பற்றி அறிந்துக்கொள்வது அவரைப்பற்றிப்படிப்பது போதுமென்றிருக்கிறோம். ஆனால் அது போதாது. நாம் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருக்க வேண்டும். நமக்கு வேண்டியதையெல்லாம் நமக்குக் கொடுக்கும் பொக்கிஷங்களில் நாம் மகிழலாம். நமக்குத் தரும் பாதுகாப்பிற்காகவும் அவரில் மகிழலாம். அவரின் அலங்காரமான பரிசுத்தத்தில் மகிழலாம். அவரின் கிருபைக்காகவே அவரில் அனுதினம் மகிழலாம்.

கர்த்தாவே உம்மில் மகிழுவேன்
உமது அரவணைப்பில் பூரிப்பேன்
நீர் என் நேசர், துன்பத்தில்
உமதண்டை ஓடி வருவேன்.

Popular Posts

My Favorites

விலை மதிப்பிடமுடியாத முத்து

நம் நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதியை ஒட்டியுள்ள ஒரு சிறிய கிராமத்தில் சாபு என்கிற வயதான முத்துக்குளிப்பவன் தனியே வசித்து வந்தான். ஒரு நாள் முத்துக்குளியல் முடித்துக்கொண்டு கரையை அடையும்போது, தன் நெருங்கிய...