தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 2

சர்வ வல்லவருடைய சிட்சை

அக்டோபர் 17

“சர்வ வல்லவருடைய சிட்சை” யோபு 5:17

தேவனுடைய பிள்ளை எவரானாலும் அவருக்குத் தேவனுடைய சிட்சை உண்டு. அவர் சர்வ வல்லவருடைய அன்பினால் சிட்சிக்கப்படுகிறார். தேவன் அதிக ஞானமாகவே எப்போதும் சிட்சிக்கிறார். தேவ கிருபை நமக்கு அதிகமாக விளங்கவும், நல்வழிகளில் நாம் வளரவும், கனிதரும் வாழ்க்கையில் விளங்கவும் நம்மை அவர் சிட்சிக்கிறதுண்டு. நம்மைத் தாம் நேசிக்கிறதினால்தான் கர்த்தர் நம்மைச் சிட்சிக்கிறார். ஆதலால், நமக்குத் துன்பங்கள் நேரிடுகையில் நாம் அவைகளைத் தவறாக எண்ணலாகாது. அவைகள் யாவும் இரக்கங்கள். நமது நன்மைக்காகவே வருகிறவை. அவைகள் நமக்கு அவசியம் தேவை. கிருபையும் இரக்கமும், நிறைந்தவர் நமது பரமபிதா. அவர் நமக்கு என்றும் தீங்கு நினையார், அனுமதியார்.

நமக்குச் சோதனைகள் வரும்பொழுது எக்குற்றத்திற்காகத் தேவன் நம்மைத் திருத்த ஆசிக்கிறார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அவர் ஞானமாக நம்மைச் சிட்சிக்கிறார் என்பதை அறிக்கையிட்டு, அதை அவர் நமக்கு ஆசீர்வாதமாக மாற்ற வேண்டுமென்று ஜெபிக்கவேண்டும். கர்த்தர் விரும்பும் கோல் துளிர்த்துப் பூத்துக் கனிகொடுக்கும். இளக்காரம் பெற்ற அடிமையாக இருப்பதைவிட, சிட்சை பெற்ற பிள்ளையாயிருப்பது நலம். இக்காலத்தில் நமக்கு நேரிடும் சிட்சை இனிவரும் நன்மைகளுக்கும், மகிமைக்கும், கடமைகளுக்கும் நம்மை நடத்தும். தேவனுடைய சிட்சை எல்லாம் நலம்தான். நாம் அவற்றால் நன்மையையே பெறுகிறோம். இன்று சிட்சை நமக்குத் துன்பமாய் காணப்பட்டாலும், இனிவரும் காலங்களில் அதனால் நமக்கு நீதியும், சமாதானமும் கிடைக்கும்.

கர்த்தாவே, என் துன்பத்தை
இன்பமாக மாற்றியருளும்
உம் சிட்சை ஆசீர்வாதமே
அதென்னைத் தூய்மையாக்கும்.

மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது

டிசம்பர் 11

“மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது” 1.யோவான் 2:8

இவ்வுலகில் எங்குமே பாவ இருள் மூடியிருக்கிறது. எங்கெல்லாம் சுவிசேஷ ஒளி செல்கிறதோ, அங்கெல்லாம் அவ்விருள் மறைந்து விடுகிறது. பிசாசின் இருள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அவ்விடத்திற்கெல்லாம் தேவ ஒளி செல்லும்போது அது நீங்கிப்போய்விடுகிறது. இன்று பல இடங்களில் அவிசுவாசம், அவபக்தி என்னும் மேகங்கள் காணப்படுகின்றன. மெய்யான நற்செய்தியின் ஒளிமட்டுமே அவைகளை நீக்க முடியும். தேவாலயங்களில் பிரசங்கிக்கப்படும் வசனத்தின்மூலம் அவ்வொளி பிரகாசிக்கிறது. நமது இருதயத்திலும் அவ்வொளி வீசுகிறது. இப்படி வந்த பிரசங்கத்தினால் இரட்சிப்பின் வழியையும், மெய்ச் சந்தோஷத்தையும், கீழ்ப்படிதலையும் நாம் அறிந்து கொள்கிறோம்.

இப்பொழுதும் அவ்வொளி நம்மை சூழ தெளிவாகவும், அழகாகவும் பிரகாசிக்கிறது. இந்தப் பிரகாசம் தேவனுடைய சுத்த தயவை விளக்குகிறது. மகிழ்சியாய் இருக்கவும், ஆறுதலாக நடந்து நம்பிக்கையோடு போர் செய்யவும், தீமையை விட்டுவிலகவும், மனநிறைவோடு பரலோகம் சேரவும் நமக்குப் பெலன்தருகிறது. நம்மில் மெய்யான ஒளி பிரகாசிக்கிறதென்றால், கோடானகோடி மக்கள் கண்டு கொள்ளாத ஒளியை நாம் கண்டு கொண்டோமே. ஆகவேதான் நம்முடைய தேவன் ஒளியில் இருக்கும்பொழுது நாமும் ஒளியில் நடந்து, உயிருள்ளவர்களாய் அவரோடு ஐக்கியப்பட்டு, நமக்குக் கிடைத்துள்ள சிலாக்கியத்தைப் பயன்படுத்திக் கொள்வோமாக.

மனிதனை மீட்கவே
தெய்வ ஒளி பிரகாசித்தது
பாவிகளை இரட்சிக்க
அதன் ஜோதி வீசுது.

தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்

ஓகஸ்ட் 07

“தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்” சங்.147:11

இரக்கம் நிர்பந்தத்தைக் கண்டு மனதுருகுகிறது. நிர்பந்தத்தைத் தான் இரக்கம் கண்ணோக்குகிறது. தேவன் இயேசுவின்மூலம் தமது கிருபையை வெளிப்படுத்தினார். அவரில் அது உருக்கத்தோடும் நிறைவோடும் எப்போதும் வெளிப்படுகிறது. நாம் பாவம் செய்தவர்களாகையால் ஒரு நீதியும் நம்மிடத்தில் இல்லை. ஆனால் இந்த இரக்கத்தினால்தான் நமக்கு எல்லாமே கிடைக்கிறது. ஏனென்றால் இரக்கத்தில்தான் தேவன் பிரியப்படுகிறார். பாவம் முதலாவது தேடுவது இரக்கம்தான். மனிதர் தேவனிடம் தேடுவதும் இந்தக் கிருபைதான். அநேகர் விசுவாசத்தினால் கிடைக்கும் இந்த நிச்சயம் அற்றவர்கள். தேவன் என்னை நேசித்து எனக்காக தம்மைத்தந்தார் என்று அவர்கள் சொல்லமாட்டார்கள். தேவனைப் பிதா என்று அழைக்கமாட்டார்கள். வாக்குத்தத்தங்களை உரிமையாக்கி, உபதேசங்களை ஏற்றுக்கொண்டு கர்த்தர் என் தேவன் தேவன் என்று சொல்வது அவர்களுக்குத் துணிகரமாயிருக்கும்.

எப்படிப்பட்டவராயினும் தேவனிடம் வரும்போது அவர் இரக்கமுள்ளவர் என்று நம்பியே வருகிறார்கள். தேவ கிருபை அவர்களை உற்சாகப்படுத்தி, தைரியப்படுத்தி, சந்தோஷப்படுத்துகிறது. தேவன் கிறிஸ்துவின்மூலம் பாவிகளுக்கு இரக்கம் காண்பிக்கிறபடியால் தங்களுக்கும் காண்பிப்பார் என்று நம்புகிறார்கள். இரட்சிக்கப்படுவோம் என்ற நிச்சயம் அவர்களுக்கு இல்லாவிட்டாலும் இயேசு கிறிஸ்துவின் இரக்கம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஆகவே, தமக்குப் பயந்து தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாய் இருக்கிறார் என்பது எவ்வளவு அருமையான ஒரு காரியம். அவர்கள் ஜெயிப்பது அவருக்குள் பிரியமானபடியால் அவர்களுக்கு உத்தரவு கொடுப்பார்.

தேவ பயமுள்ளவர்
கர்த்தருக் கருமையானவர்
அவர் கிருபை தேடுவோர்
அவர் அன்பைக் பெறுவோர்.

வேண்டுதல் செய்யும்படி அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறார்

ஜனவரி 28

“வேண்டுதல் செய்யும்படி அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறார்.” எபி. 7:25

நம்முடைய பாவங்களுக்காக அவர் ஒரே தரம் மரித்தார். என்றாலும் தினந்தோறும் ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நிமிஷமும் நமக்காகப் பரிந்து பேச அவர் உயிரோடிருக்கிறார். அவருக்கு முடிவில்லாத ஜீவனும் மாறாத ஆசாரியத்துவமும் உண்டு. Nhட்சத்தில் நம்முடைய பிரதான ஆசாரியராக அவர் வெளிப்படுவார். நம்முடைய பெயர்கள் அவருடைய இருதயத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. நமது காரியங்களையெல்லாம் அவர் நன்றாய் அறிவார். நமக்காகப் பரிந்துப் பேசத்தான் அவர் அங்கேயும் உயிரோடிருக்கிறார். தம் அருமையான இரத்தத்தையும், பூரண நீதியையும் தேவன் முன்பாக வைத்து, அவைகளின்மூலம் நமக்கு மன்னிப்பு, தந்து நம்மை மகிமைப்படுத்த வேண்டுமென்று வேண்டுகிறார்.

பிதா அவருக்குச் செவிக் கொடுக்கிறார். ஏனென்றால் அவர் அவரை அதிகம் நேசிக்கிறார். நமது செழுமைக்காக தம்மாய் ஆனதெல்லாம் அவர் செய்தார். அவர் அன்பு எத்தனை ஆச்சரியமானது. நமக்காக பரலோகத்தைத் துறந்தார். பூமியிலேவந்து பாடுபட்டு உத்தரித்து நமக்காக மரித்தார். பின்பு மோட்சலோகஞ்சென்று அங்கே நமக்காக வேண்டிக்கொண்டு நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கிறார். நாம் மாறுகிறதை அவர் பார்க்கிறார். துக்கப்பட்டு இன்னும் நமக்காக மன்றாடுகிறார். நமக்கு நன்மை செய்யப் பிரியப்படுகிறார். இது எத்தனை ஆறுதல்! நம்பிக்கைக்கு எத்தனை ஆதாரம். நாம் தேவனுக்குச் சத்துருக்கயரிருக்கையில் அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், பின்பு நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாம்.

இரக்க ஆசனத்தின் முன்னே
நமக்காய் நின்று பேசுவார்
பாரியத்தில் உத்தமர்
வீரம் கொண்டு ஜெயிப்பார்.

என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ?

அக்டோபர் 20

“என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ?” எரேமி. 32:27

சிருஷ்டிகரைவிட அதிகக் கடினமான காரியங்கள் சிருஷ்டிகளுக்கே உண்டு. சிருஷ்டிகரின் ஞானம் அளவிடமுடியாதது. அவருடைய வல்லமையைக் கணக்கிட முடியாது. அவருடைய அதிகாரத்திற்குட்படாதது ஏதுவுமில்லை. சகலமும் அவருக்குக் கீழானதே. அவர் யாவற்றையும் ஒழுங்காகவே ஏற்படுத்தியுள்ளார். கிரமமாக அவர் யாவற்றையும் நடத்துகிறார். அனைத்து காரியங்களையும் தம்முடைய சொந்த சித்தத்தின்படியே செய்கிறார்.

சில வேளைகளில் நாம் பல சிக்கல்களில் அகப்பட்டுவிடுகிறோம். மனிதர் உதவி செய்ய மறுத்து விடுகிறார்கள். நமது விசுவாசம் குறைகிறது. மனம் சஞ்சலப்படுகிறது. சோர்வடைந்து நாம் பயப்படுகிறோம். அப்படிப்பட்ட நேரத்தில் கர்த்தர் தலையிடுகிறார். நம்மைச் சந்தித்து என்னாலே செய்யக்கூடாத காரியம் ஒன்று உண்டோ? அதை என்னிடத்தில் கொண்டுவா. என்னை முற்றிலும் நம்பி உன்னை முற்றும் அர்ப்பணி. என் சித்தம் செய்யக் காத்திரு. அப்பொழுது நான் உன் காரியத்தைச் செய்து முடிப்பேன். அதை எவராலும் தடுக்க இயலாது என்கிறார்.

அன்பானவர்களே, உங்கள் கேடுகள், உங்கள் சோதனைகள் உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். உங்கள் தேவன் உங்களை விடுவிக்கக் கஷ்டப்படுபவரல்ல. உங்களுக்கு வரும் தீங்கை நீக்கி, உங்கள் துன்பங்களிலிருந்து உங்களை இரட்சிப்பார். உங்களது பெலவீனத்தில் அவருடைய பெலன் பூரணமாய் விளங்கும். கொடுக்கப்பட்ட இவ்வசனத்தில் கேட்கப்படும் கேள்வி, உங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தட்டும். நம்பிக்கையை வளர்க்கட்டும். உங்களுக்குத் தைரியம் தரட்டும். ஜெபிக்க உங்களை ஏவி விடட்டும். உங்கள் பெலத்தையே நோக்குங்கள். பெலவீனத்தை அல்ல. விடுவிக்க வல்லு அவருடைய கிருபையைத் தேடுங்கள்.

என் தேவனால் ஆகாதது
ஒன்றுண்டோ? அவர்தம்
கிருபை எனக்கு
எப்போதும் போதுமன்றோ!

நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்

பெப்ரவரி 19

“நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்.” மத். 6:34

வீணாய் வருத்தப்பட்டு, மனதைப் புண்ணாக்கிக் கொள்ளும்படி கவலைப்படாதேயுங்கள். நாளை நமக்குரியதில்லையென்று அறிவோமே? இன்றிரவு கர்த்தர் ஒரு வேளை உங்களை எடுத்துக்கொள்ளலாமே! நீங்கள் உயிரோடிருக்கிறதால் இன்றைக்கிருக்கிறவிதமாய் கர்த்தர் உங்கள்மேல் கவனமாய்ப் பட்சமாய் காப்பாராக. அனுதின உணவுப்போல் அனுதின கிருபையும் வேண்டும். நீங்கள் தகப்பனற்றவர்களல்ல: தரவற்றவர்கள் அல்ல. உங்களை கவலைக்குள்ளாக்குகிற காரியங்கள் எதுவானாலும், அது உங்கள் பரமபிதாவுக்கு தெரியும். தேவையானதை அவ்வப்போது உங்களுக்கு தந்து கொண்டேயிருப்பார். தேவ சமாதானம் உங்களை ஆளுகை செய்யட்டும். கர்த்தருடைய வார்த்தையை நம்பியிருங்கள்.

கவலைக்கு இடங்கொடாமல் இருங்கவும், வீண் சிந்தனைகளுக்கு இடங்கொடாமலிருக்கவும் கர்த்தரிடம் காத்திருந்து பொறுமையாய் விசுவாசித்தால் பெற்றுக்கொள்ளவுமே அவர் விரும்புகிறார். இன்றிரவு நீ அமைதியாய் உன் ஆண்டவர் சொன்னதை யோசித்துப்பார். ‘முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்போது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூட கொடுக்கப்படும். ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள். நாளை தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலை;படும். அந்தந்த நாளுக்கு அதினதன் பாடுபோதும்.” காலையில் நீ விழிக்கும்போது உன் தேவன் உன்னோடிருப்பார். ஆறு துன்பங்களில் உன்னை விடுவித்தவர், ஏழு துன்பங்களிலும் உன்னை கைவிடார்.

ஆகவே கவலைப்டாதே.
வீட்டிலும் வெளியிலும்
இரவிலும் பகலிலும்
அவர் கரம் உன்னைப் போஷிக்கும்
அவர் கரம் உன்னை நடத்தும்.

நீர் எங்களுடனே தங்கியிரும்

அக்டோபர் 06

“நீர் எங்களுடனே தங்கியிரும்” லூக்கா 24:29

இரண்டு சீஷர்கள் எம்மாவு என்னும் ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்கள். வழியில் இயேசுவானவர் அவர்களோடு சேர்ந்து கொண்டார். ஆனால் அவரை இன்னாரென்று அறியவில்லை. வழியில் அவர் அவர்களுக்கு தேவ வசனத்தை விளக்கிக் கூறினார். பின்பு வேறு வழியிற் செல்பவர்போல் காணப்பட்ட அவரை அவர்கள் நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காம் ஆயிற்று, பொழுதும் போயிற்று, என்று அழைத்தார்கள். ஆண்டவருடைய சமுகத்தை அனுபவித்த எவரும் இப்படிச் சொல்லக்கூடும். உண்மையான தேவ பிள்ளைகள் அவர் தங்களைவிட்டுப் போவதை விரும்பமாட்டார்கள். தாங்கள் தேவனோடு இருக்கவும், அவர் அவர்களோடு இருப்பதையும் விரும்புவார்கள். ஆண்டவர் எப்பொழுதும் நம்மோடு இருக்கிறார். நாம்தான் அதை உணருவதில்லை.

இந்த நாளில் அவருடைய சமுகம் உங்களோடு இல்லை என்றாலும் உடனே அதைத் தேடுங்கள். எங்களோடு தங்கும் என்று கெஞ்சுங்கள். உங்கள் உள்ளத்தில் அனல்மூட்டி எழும்பும்படி அவரைக் கெஞ்சிக்கேளுங்கள். உங்களைவிட்டு அவர் கடந்துபோக விடாதேயுங்கள். அவரும் எப்போதும் நம்மோடேயே இருக்க விரும்புகிறார். நீங்கள் அவரை விரும்புவதிலும் அதிகமாக அவர் விரும்புகிறார். நீங்கள் கர்த்தரோடிருந்தால் அவர் உங்களோடிருப்பார். அவரைத் தேடி கண்டுபிடித்து, அவரை விட்டுவிடாது பற்றிக்கொள்ளுங்கள்.

பிரியமானவர்களே, நீங்கள் கர்த்தரின் சமுகத்தை அனுபவித்ததுண்டா? அதைக் கண்டு உணருகிற சந்தோஷத்தை உணர்ந்திருக்கிறீர்களா? அவர் சமுகமே மோட்சம். அவருடைய பிரசன்னம் இன்பம். நமது துக்க துன்பங்களை நீக்கும் வழி அவரே. அவர் நம்மோடிருப்பின் மகிழ்வோம். களிகூருவோம். அவரை நாம் கண்டு பிடித்துப் பற்றிக்கொண்டால் மரணபரியந்தம். ஏன், மரணத்திற்குப் பின்னும் சந்தோஷம் பெறுவோம்.

இயேசுவே என்னிடம் வாரும்,
வந்தென்னை ஆசீர்வதியும்
நீங்காதிரும் மாநேச கர்த்தரே
வெளிச்சம் மங்கி இருளாயிற்றே.

நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிவேன்

ஏப்ரல் 04

“நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிவேன்.” 1.தீமோ. 1:12

கிறிஸ்துவை அறிந்துகொள்வது பெரிய கிருபை. நம்முடைய ஜெபத்துக்கு அதுதான் காரணம். நம்முடைய விசுவாசத்துக்கு அதுதான் ஆதாரம். அவரை அறிந்துக்கொள்ளுகிற பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது. அவருடைய வசனத்தினால் அவரை அறிந்து கொள்ளுகிறோம். தேவனுடைய பிள்ளைகள் கூறிய சாட்சிகளால் தேவனை அறிந்துகொள்ளுகிறோம். இதற்கும் மேலாக பரிசுத்த ஆவியானவரின் போதனையினால் அவரை அறிந்து கொள்ளுகிறோம். ஆனாலும் நாம் அறிந்துகொள்ளுகிறது மிக குறைவுதான். அவரை நேசிக்கத்தக்கதாக, அவருடைய தன்மையை அறிந்துகொள்ளுகிறோம்.

தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட அவர் முடிந்த பூரணகிரியையை நம்பினவர்களாக அவரையே அறிய வேண்டும். நமக்குத் தேவையானதையெல்லாம் பெற்றுக்கொள்ள அவரிடத்தில் நிறைவு உண்டென்று அறிய வேண்டும். துன்பத்திலும், துக்கத்திலும் அவர் அருகில் செல்ல அவருடைய இரக்கத்தையும், உருக்கத்தையும் அறியவேண்டும். மற்றப் பாவிகள் ஜீவனையும் சமாதானத்தையும் அடைய அவரிடத்தில் செல்லுங்கள் என்று சொல்லுத்தக்கதாக, பாவிகளை ஏற்றுக்கொள்ள மனதுள்ளவரென்று அறிய வேண்டும். இரட்சகர் வல்லமையுள்ளவர் என்று நாம் அறிவோம். விசுவாசிக்கத்தக்கவரென்றும் நாம் அறிவோம். அவரை விசுவாசிக்கிற எந்த ஏழைப்பாவியையும் அவர் கைவிடமாட்டாரென்றும் அறிவோம். இவ்வாறு நாம் அறிவதினால்தான் நம்முடைய சகல காரியங்களையும் அவருடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கிறோம். அவரை அறிந்திருக்கிறபடியால்தான் அவரை நம்முடைய கர்த்தரும் தேவனும் என்று சொல்ல நாம் வெட்கப்படுகிறதில்லை. அவர் தேவ குமாரன் என்றும், இரட்சகர் என்றும், தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்றும் அறிவோம். நம்முடைய பாவங்களுக்காக மரித்து, நம்மை நீதிமான்களாக்க உயிர்த்தெழுந்தார் என்றும் மறுபடியும் தம்மண்டையில் நம்மைச் சேர்த்துக்கொள்வார் என்றும் அறிவோம்.

யாரை விசுவாகித்தேனென்று
நான் அறிவேன் அது நல்லது:
நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை
பாதுகாத்திடவார் எந்நாளும்.

நாம் இங்கே தேவ சந்நிதியில் சேரக் கடவோம்

யூலை 29

“நாம் இங்கே தேவ சந்நிதியில் சேரக் கடவோம்” 1.சாமு 14:36

நாம் சுபாவப்படி தேவனுக்குத் தூரமானவர்கள். கிருபையினால் மட்டுமே அவரோடு ஒப்புரவாகி அவரோடு கிட்டச் சேர்கிறோம். ஆயினும் நாம் அவருக்கு இன்னும் தூரமாய்தான் இருக்கிறோம். ஜெபம்பண்ணும்போது கிருபாசனத்தண்டையில் நாம் அவரைச் சந்திக்கிறோம். இதை நாம் உணர்ந்தாலும், உணராவிட்டாலும் சில சமயத்தில் அவர் சமுகத்திதால் இருக்கிறோம். ஜெபமானது தேவனுக்குக் கிட்டி சேருதல் என்பதை நாம் மறுக்கக்கூடாது. அடிக்கடி ஜெபம்பண்ணினால் அடிக்கடி அவரிடம் கிட்டி சேருவோம். இதற்காகவே அவர் இருக்கிறாரென்று விசுவாசிக்க வேண்டும். பிராயச்சித்த பலியை ஏற்றுக்கொண்டு அவர் வசனத்தை அதிலும் அவர் அருளின் வாக்குத்தத்தங்களை நம்ப வேண்டும். நமக்கு கேட்கிற விருப்பமும் வேண்டும். நமக்கு உள்ளபடி தேவையானவற்றையும் வாக்களிக்கிறார் அல்லவா?

நியாயமாய் கேட்கும்போது நிச்சயமாய் கிடைக்குமென்று கேட்க வேண்டும். இயேசுவின் நாமத்தையே தஞ்சமென்று பற்றிப் பிடிக்க வேண்டும். கேட்டது கிடைக்கும்வரை தொடர்ந்து கேட்கவேண்டும். அவர் சந்நிதியில் பிள்ளையைப்போலவும், பாவியைப்போல் பணிவோடும், அவரை அண்டினவர்கள்போல அடிக்கடி போக வேண்டும். சுத்தமான சாட்சியோடும், கோபமின்றியும், சந்தேகமின்றியும், இருதயத்தில் அக்கிரமத்தை பேணி வைக்காமல் போக வேண்டும். தனிமையிலும், குடும்பத்திலும், தேவாலயத்திலும், தெருவில் நடக்கும்போதும் அவரைக்கிட்டி சேருவாமாக. அவர் நம்மை அழைக்கிறார். புத்தி சொல்ல வா என்று அழைக்கிறார். அவர் சமூகத்தில் போவோமாக. அவர் அழைக்கும்போது போகாவிட்டால் அது பாவமாகும். நாமும் வருத்தப்படுவோம்.

கர்த்தாவே இரங்குவேன்,
கடைக் கண்ணால் பாருமேன்
பாவப் பேயைத் தொலைத்திடும்
உம்மைச் சேரச் செய்திடும்.

அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்

யூலை 18

“அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்” யோவான் 17:10

பிதாவை மகிமைப்படுத்துகிறதுதான் இயேசுவின் கிரியை. பிதா அவரில் மகிமைப்படுகிறார். இயேசுவை மகிமைப்படுத்துவது அவருடைய வேலையாய் இருக்குமானால் இயேசு நம்மில் மகிமைப்படுவார். அவருடைய இரத்தம் நம்மை மன்னித்து சமாதானப்படுத்தி, சகல பாவங்களிலிருந்தும் நாம் பூரணராய் நீதிமானாக்கப்படுவதனால் மகிமைப்படும். அவருடைய வல்லமை நாம் உலகத்தினின்று பிரிந்து நித்திய ஜீவனுக்கென்று காக்கப்படுவதனால் மகிமைப்படும். நாம் உயிர்பிக்கப்பட்டு அனுபவிக்கும் எண்ணில்லா நன்மைகளால் அவர் இரக்கமும், நாம் விடுவிக்கப்பட்டு சந்தோஷப்படுவதில் அவர் வார்த்தையும், நாம் அவரோடு ஐக்கியப்பட்டு ஒன்றாவதில் அவருடைய சிந்தையும் மகிமைப்படும்.

நம்முடைய ஜெபங்களுக்கும் விண்ணப்பங்களுக்கும் கிடைக்கும் உத்தரவில் அவருடைய உண்மையும், நாம் தைரியமாய் நம்பிக்கையோடு கிருபாசனத்தண்டை சேருவதில் அவருடைய அன்பும், துன்பத்தில் நமக்கு வேண்டியதைத் தந்து ஆதரிப்பதில் அவருடைய தயையும் மகிமைப்படும். நம்முடைய துக்கங்களிலும் வருத்தங்களிலும் அவருடைய உருக்கமும், நம்முடைய பெலவீனங்களிலும் முரட்டாட்டத்திலும் நம்மை தாங்குகிறதில் மரணத்திலும் நம்முடைய நித்திய இரட்சிப்பிலும் அவருடைய கிருபையும் மகிமைப்படுகிறது. நாம் எதிர்பார்க்கிறதெல்லாம் அவரிடத்திலிருந்துதான் வரவேண்டும். அவருடைய சபை அவருடைய மகிமையானதால் அவர் அதை மகிமையுள்ளதாக்குவார். அதை அவர் மாசு திரை ஒன்றுமில்லாமல் மகிமையுள்ள சபையாக தமக்கு முன் நிறுத்துவார். இயேசு என்னில் மகிமைப்படுகிறார் என்பது எத்தனை அருமையான சத்தியம்.

என்னில் உம் மகிமை
தங்கிட அருளும்
உமக்காகவே பிழைப்பேன்
உமக்கென்றே சாவேன்.

Popular Posts

My Favorites

தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு

யூன் 03 "தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு...." 1.கொரி. 15:28 யோகோவா எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருக்கிறார். தமது சகல வழிகளிலும் கிரியைகளிலும் தாம் மகிமைப்படுவதே அவர் நோக்கம். இரட்சண்ய ஒழுங்கில் அவர்தான் சமஸ்தம். அந்த ஒழுங்கு நித்தியத்தில் அளவற்ற...