தினதியானம்

முகப்பு தினதியானம்

அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்

அக்டோபர் 11

“அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்” உன். 6:3

விசுவாசிகள் லீலி மலர்களுக்கு ஒப்பிடப்பட்டுள்ளார்கள். இம் மலர்கள் வெளிகளில் வளர்வன அல்ல, தோட்டத்தில் பயிரிடப்படுபவை. தேவ பிள்ளைகள் அவருடைய தோட்டத்தில் வளர்க்கப்படுகிறார்கள். அவர் அவர்களை அதிகம் நேசிக்கிறார். எப்பொழுதும் அவர்களைச் சந்தித்து உரையாடி அவர்கள் நடுவில் உலாவுகிறார். இந்தத் தோட்டத்தில் உள்ள தேவ பிள்ளைகளின், ஜெபங்கள், துதிகள், சாட்சிகள், செய்யும் ஊழியம் ஆகியவை தேவனுக்கு மிகவும் பிரியம். அவர் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தும்போது, அவரின் குரலை அவர்கள் கேட்கும்போதும் விசுவாசிகள் மிக மகிழ்ச்சிகொள்ளுகிறார்கள்.

இது ஓரு விசுவாசியின் உயர்ந்த தன்மையைக் காட்டுகிறதல்லவா? தொடுகிற எவரையும் காயப்படுத்தும் முள்ளைப்போலவோ, எதிரியையும் எவரையும் தாக்கும் கொடிய விலங்குபோலவோ இல்லாது, இவர்கள் லீலி மலர்களைப் போன்று உயர் பண்புடையவர்கள். உள்ளான அழகும், நற்குணங்களாகிய நறுமணமும் கொண்டு யாவராலும் விரும்பப்படுகிறார்கள்.

நண்பனே, நீ எவ்வாறு இருக்கிறாய்? உன் விசுவாச வாழ்க்கை நறு மணத்துடனுள்ளதா? பிறருக்கு தேவ சாட்சியாக வாழ்கிறாயா? எவ்விடத்திலிருப்பினும் ஒளி வீசும் சுடராய் நீ விளங்க வேண்டும். பலருக்குப் பயன்படும் பாத்திரமாக நீ இருக்க வேண்டும். மணம் வீசும் லீலி மலராகத் திகழ வேண்டும். அப்பொழுதுதான் உன் நேசர் உன் நடுவில் வந்து மேய்வார். உன்னோடு உரையாடுவார். உன்னுடனேயே அவர் தங்கியிருக்கும்படிடி அவரை வருந்தி வேண்டிக்கொள். அவர் உன் பிரியமான பிரியா நேசராயிருப்பார். நீ வருந்தி அழைத்தால் அவர் வருவார்.

உம் வல்லமையால் என்னை
உம்முடையவனாக்கும்
உம் லீலி மலர்களைப்போல்
உமக்குக் காத்திருக்கச் செய்யும்.

எங்களை எப்படிச் சிநேகித்தீர்

செப்டம்பர் 23

“எங்களை எப்படிச் சிநேகித்தீர்” மல். 1:2

இது எவ்வளவு விபரீதமான கேள்வி! கர்த்தருடைய ஜனங்கள் இவ்வாறு கேட்பது சரியல்ல. ஆயினும், அநேகர் இப்படிப்பட்ட துணிகரமான கேள்வியைக் கேட்கிறார்கள். நீங்கள் எப்பொழுதாகிலும் கர்த்தர் உங்களை எப்படிச் சிநேகித்தார் என்று கேட்டதுண்டா? அவர் உங்களுக்கு செய்துள்ள நன்மைகளை எண்ணிப்பாருங்கள். உங்கள் பாவங்களுக்காக மரிக்கத் தம்முடைய குமாரனையே தந்தார். உங்களை உயிர்ப்பித்து, உங்களுக்கு போதித்து, வழிநடத்தித் தூய்மையாக்கத் தமது ஆவியானவரைத் தந்திருக்கிறார். அவருடைய மார்க்கத்தைப் போதிக்க தம்முடைய போதகர்களைத் தந்தார். உங்கள் துயரத்தில் உங்களை ஆற்றித் தேற்றக் கிருபையாகப் பல வழிகளைத் திறந்திருக்கிறார். உங்களுக்கு ஊழியம் செய்யச் தம்முடைய தூதர்களையும் அனுப்பியுள்ளார். உங்களைப் பாதுகாக்க உடன்படிக்கையனி; ஆணைகளையும் கொடுத்திருக்கிறார். நீங்கள் நித்திய காலமாகச் சுதந்தரித்து வாழத் தமது பரம வாசஸ்தலத்தையும் உங்களுக்கு வாக்களித்திருக்கிறார்.

உங்களைத் தமது ஆத்துமாவுக்கு அருமையாக எண்ணுகிறார். தமது ஆபரணங்கள், மகுடம், குமாரர், குமாரத்திகள் என்று அழைத்து மேன்மைப்படுத்தியிருக்கிறார். உலகம் வெறும் களிமண். நீங்களோ பொன் என்றும், அது பதர், நீங்கள் கோதுமை மணி, அதுவுமன்றி நீங்கள் ஆடுகள், அது பாம்பு. நீங்கள்புறாக்கள் என்று கூறுகிறார். உங்களுக்கும் அவருக்கும் உள்ள உறவைக் கவனியுங்கள். அவர் உங்கள் பிதா. இயேசு உங்கள் உடன்பிறப்பு. நண்பன். உங்களுக்காகப் பரிந்துரைப்போர், தலைவர், மன்னர், உங்களுக்கு மன்னிப்பை அருளினார். பரம நன்மைகளால் அவர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆச்சரியமான அவருடைய அன்பிற்கு ஒப்பில்லை.

என்றும் நன்றியுடன்
நானிருக்க அருளும்
உமதன்பிற்காகத் துதித்து
உமதிரக்கத்திற்காய் நன்றி சொல்வேன்.

தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்

ஓகஸ்ட் 04

“தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்” யோபு 11:5-6

யோபின் சிநேகிதர் அவன் நிலமையை புரிந்துக்கொள்ளவில்லை. அவர்கள் சொன்ன நியாயங்கள் அவன் மனதில் தங்கவில்லை. அவனுக்கு அவைகள் தெரிய வேண்டுமென்று அவர்களில் இவன் ஒருவன் விரும்பினதால், தேவன் பேசினால் நலமாய் இருக்கும் என்று வாய்விட்டுச் சொன்னான். இப்படித்தான் விசுவாசியும் கடைசியில் சொல்லுகிறார். யாரிடத்தில் தேவன் பேசினால் நலமாய் இருக்குமென்று விரும்புகிறோம்? நம்மிடத்தில்தான் அவர் பேசவேண்டும். அப்போதுதான் அவரின் அன்பு நம்மிடத்தில் இருக்கிறதென்று ஒரு நிச்சயம் உருவாகும். நமது வருத்தங்கள் விலகும். சத்தித்தில் நாம் நிலைப்படுவோம். பாவிகளிடத்தில் அவர் பேச வேண்டும். அப்போது அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். மனந்திருப்பி கர்த்தர் பட்சம் சேருவார்கள். துக்கப்படுவோரிடம் அவர் பேச வேண்டும். அப்போது அவர்கள் தேற்றப்படுவார்கள். சுயாதீனம் அடைவார்கள். பின்வாங்கி போனவர்களோடு அவர் பேசவேண்டும். அப்போது அவர்கள் திரும்பவும் பரிசுத்தர்களும் பாக்கியமும் பயனுள்ளவர்களும் ஆகலாம்.

இவைகளெல்லாம் நமக்குப் போதிக்கிறதென்ன? எந்த வேளையானாலும் தேவனிடம் ஓடி அவர்மேல் நம்பிக்கை வைக்கும்போது அவர் நம்மோடு பேசுவார். சோதிக்கப்படுகிற விசுவாசியே, தேவன் உனக்காகப் பேசுவார். பக்தியுள்ள கிறிஸ்தவனே, தேவன் உன்னோடு பேசுவார். எப்படிப் பேசுவார் என்று கேட்கிறாயா? தம்முடைய வசனத்தை கொண்டும், தமது கிரியைகளைக் கொண்டும், ஆவியானரைக் கொண்டும் பேசுவார். அப்படியானால் அவர் சத்தத்துக்குச் செவிக்கொடுப்போமாக. அவர் தம்முடைய வார்த்தையைக் கொண்டும், ஊழியர்களைக் கொண்டும் எவ்விதத்திலும் நம்மோடு பேச அவரை வேண்டிக்கொள்வோமாக.

சுவிசேஷத்தில் தொனிக்கும்
சத்தம் சமாதானமே
இதை உமதடியார்க்களித்து
விடாமல் என்றும் காரும்.

இரவிலும் கீதம்பாட

செப்டம்பர் 01

“இரவிலும் கீதம்பாட” யோபு 35:11

தேவ சமுகமும், அவர் சமுகத்தின் பிரகாசமும்தான் கிறிஸ்தவனுக்குப் பகல். இரவு என்பது துன்பத்திற்கு அறிகுறி. வியாதி, வறுமை, நஷ்டங்கள், சோர்வு, மரணம். இவைகள் எல்லாம் ஒன்று சேரும்போது அந்த இரவு எவ்வளவு இருட்டாயிருக்கும். இந்த இரவு மிகுந்த குளிர் நிறைந்த நீண்டதொரு இரவு. ஆனால் கர்த்தர் முகம் இருட்டிலும் நம்மைக் கீதம் பாடச்செய்யும். சந்தோஷம், கிருபை என்னும் ஒளியைக் கொண்டு நம் இருதயத்தைப் பளிச்சிட செய்கிறார். துதித்தலுக்கான காரியங்களை நமக்குத் தெரிவிக்கிறார். கண்ணீரிலும், எல்லாரும் பார்த்து வியக்கத்தக்கபடி நம்மைப் பாடச்செய்கிறார்.

பவுலும் சீலாவும் பிலிப்பு பட்டணத்தில் இப்படியே இரவில் துதித்துப் பாடினார்கள். பஞ்சம் வரும் என்று அறிந்தபோது ஆபகூக்கும் இப்படியே பாடினான். அநேக இரத்த சாட்சிகள் சிறைச்சாலையில் பாடனுபவிக்கும்போது இப்படியே பாடினார்கள். பலர் வறுமை என்னும் பள்ளத்தாக்கிலும், வியாதி படுக்கையிலும், மரணம் என்னும் யோர்தானிலும், சந்தோஷத்தால் பொங்கிப் பாடினார்கள். அன்பர்களே, என்னதான் பயங்கரமான காரியங்கள் வந்தாலும், இரவில் காரிருளில் கடந்து சென்றாலும் உனக்குப் பாட்டைக் கொடுக்கிறார். அவரோடு ஒட்டிக்கொண்டு அவரோடு சேர்ந்து நட. அப்போது அவர் முகப்பிரகாசம உனக்குச் சந்தோஷத்தையும், சமாதானத்தையும், நன்றியறிதலையும் கொண்டு வரும். அவருடைய அன்பு அவருடைய இரட்சிப்பில் உன்னைக் களிகூரப்பண்ணும். அவரின் ஜனம் பாக்கியவான்களாய் இருப்பதே அவர் விருப்பம். அவர்கள் பாடுவதைக் கேட்பது அவருக்கு இன்பம். அவரோடு நெருங்கி வாழ்பவர்கள் அவரில் மகிழ்ந்து களிகூர்வார்கள்.

இரவிலும் பாட்டளிப்பீர்
துக்கம் யாவும் மாற்றுவீர்
உமது சமுகம் காட்டி
பரம வெளிச்சம் தாருமே.

மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி

ஜனவரி 12

“மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி”  லூக்கா 2:10

நம்மை மனம் நோகச் செய்யவும், அதைரியப்படுத்தவும், அநேக காரியங்கள் நம் உள்ளத்தில் இருக்கிறது. நம்மை துக்கப்படுத்த குடும்பத்திலும், சபையிலும் பல சோர்வுகளைக் கொண்டு வரலாம். இவ்வுலகம் நமக்குக் கவலையையும் கண்ணீரையும் கொண்டு வரும். ஆனால் சுவிசேஷமோ மிகுந்த சந்தோஷத்தைக் கொண்டு வரும். சுவிசேஷம் பெரிய ஒரு மேலான இரட்சகரை நமக்கு முன் நிறுத்துகிறது. இயேசு கிறிஸ்து மனுஷ ரூபமானபடியினால், மனிதர்களாகிய நமக்கு மனமிறங்கி தேவனிடத்தில் சகலத்தையும் பெற்றுத்தர கூடியவர். என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறார்? ஏன் எனக்குள் தியங்குகிறாய் என உங்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொள்ளுங்கள்.

கிறிஸ்துவின் இரத்தத்தால் நம்முடைய பாவம் எல்லாமே பரிபூரணமாய் மன்னிக்கப்படுகிறது. அவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்தபடியால், நிறுத்தும்படி கிருபையை தமது நீதியால் உண்டாக்கிக் கொடுத்தார். அவர் பாவமில்லாதவரானபடியால், நமது பாவங்களை மன்னிக்க காத்திருக்கிறார் அவர் இரக்கமுள்ளவரானபடியால் நம்மீது எப்போதும் இரங்குகிற தேவனாய் இருக்கிறார். நாம் துன்பப்படும்போது தேற்றரவாளனால் உதவிட ஓடி வருகிறார். பாவிகளுக்கு இரட்சகராய் இருக்கிறார். பிதாவின் முன் பரிந்து பேசும் நேசராய் இருக்கிறார். பாவிகளை அழைத்து அவர்களைத் தம் இரத்தத்தால் கழுவி தமது இராஜ்யத்தில் சேர்த்துக் கொள்ளுகிறார். செய்திகளைச் சுபசெய்தியாக்குகிறதே சுவிசேஷம் தான். நம்மை சந்தோஷத்தில் நிரப்பும் அனைத்தும் நற்செய்தியில் இருக்கிறது.

இவ்வன்பை அளவிட முடியாது
நீளம் அகலம் அற்றது
ஆழம் உயரம் இல்லாதது
அளவிடப்பட முடியாதது.

உன் உக்கிராணக் கணக்கையொப்புவி

ஓகஸ்ட் 12

“உன் உக்கிராணக் கணக்கையொப்புவி”  லூக்கா 16:2

நமக்கெல்லாருக்கும் ஒவ்வொரு வேலையைத் தேவன் வைத்திருக்கிறார். அது பொறுப்பான நம்பிக்கையுள்ள வேலை. அந்த வேலைக்கு தலையும், மனமும், கைகளும், கால்களும் வேண்டும். இந்த உக்கிராணக்காரன் சுறுசுறுப்பும், உண்மையும் ஜாக்கிரதையுமாய் இருந்து கணக்கொப்புவிக்கவேண்டும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். நாம் எல்லாரும் கணக்கு கொடுக்கவேண்டியவர்கள். வெகு சீக்கிரத்தில் நாம் கணக்கொப்புவிக்கவேண்டும். நமது எஜமான் சீக்கிரம் வரப்போகிறார். அப்போது அவரை எதிர்கொண்டு போகாமல் பின்னடைவோமா? நம்முடைய செல்வாக்கு, பணம், யோசனைகள், செயல்கள் இவைகளை எப்படி பயன்படுத்தினோம். ஆத்துமாவின் வேலைகளில் என்ன பங்கேற்றோம்? எப்படி தேவனுக்குரிய காரியங்களில் நாம் ஈடுபட்டோம். இவைகளையெல்லாம் குறித்து கணக்கொப்புவிக்க வேண்டும்.

நண்பரே, நீ ஒர் உக்கிராணக்காரன் என்பது உனக்குத் தெரியுமா? வேதம் உன் எஜமான் இயேசு கொடுத்த சட்டம். உன் நடக்கைக்குப் பிரமாணம். இதைத் தியானிக்கிறாயா? உன் எஜமானுடைய கண் உன்மேல் இருக்கிறது. இதை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுகிறாயா? இந்த வசனத்துக்குப் பயப்படுகிறாயா? கர்த்தருடைய நாள் சமீபித்து வருகிறது. நம்முடைய கணக்குகளை ஒப்புவிக்க வேண்டிய வேளை நெருங்கிவிட்டது. இப்பொழுது உன் காரியம் எப்படியிருந்தாலும் உண்மையுள்ள உக்கிராணக்காரனுக்கு அப்போது தேவனால் புகழ்ச்சி கிடைக்கும். இப்போதாவது உன் பொறுப்பை உணர்ந்து, அதற்கு ஏற்றதாய் நடந்தால் எவ்வளவு நலம்!

நியாயாதிபதியாம் கர்த்தாவே
உமக்குமுன் நான் நிற்பேன்
அப்போது குற்றமற்றுவனாக
விளங்கி மகிழ்வேன்.

அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்

நவம்பர் 14

“அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்” அப். 9:11

பவுல் பரிசேயனாக இருந்தபொழுது எழுதப்பட்ட ஜெபங்களைமட்டும் வாசித்து வந்திருப்பான். இப்பொழுதுதான் அவர் மெய்யாகவே ஜெபம் செய்கிறான். இயேசு கிறிஸ்துவில் அவன் புதிய மனிதன் ஆனபடியினாலே அவனுடைய ஆவி புத்துயிரடைந்தது. ஆண்டவர்தாமே அவனுக்குப் போதகர். தனக்கு இரட்சிப்பு வேண்டும் என்று உணர்ந்து, அதற்காக ஜெபம்பண்ணினான். மறுபிறப்பு வேண்டும் என்று உணர்ந்து, அதற்காக ஜெபம்பண்ணினான். மறுபிறப்பு அடைந்தவர்கள்தான் மெய்யாகவே ஜெபம் செய்வார்கள். உயிர்ப்பிக்கப்பட்ட ஆத்துமாக்கள் தங்கள் இருதயதாபங்களைக் கர்த்தருக்கு முன்பாக ஊற்றிவிடுவார்கள். ஜெபம் இல்லாவிட்டால் தாங்கள் கெட்டுப்போவார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். ஜெபம் செய்யாவிடில் அவர்கள் சுமக்கும் பாரச் சுமைகளே அவர்களை நசுக்கிப்போடும். அவர்களது இதயம் நிறைந்திருக்கிறபடியால், உள்ளே உள்ள கருத்துக்களை வெளியே கொட்டவேண்டும். ஆதலால் நாம்  ஜெபிக்கும்பொழுது ஜெபத்தில் நம் எண்ணங்களைச் சொல்லி ஜெபிக்க வேண்டும்.

வார்த்தைகள் வராவிட்டாலும் ஜெபிக்கலாம். ஏன் என்றால் ஜெபம் உள்ளத்திலிருந்து வருவது. உதடுகளிலிருந்தல்ல. இதை வாசிக்கும் நண்பனே, இதற்குமுன் நீ ஜெபம் செய்யவில்லை. அக்கிரமத்திலும், பாவத்திலும் செத்துக் கிடந்தாய். பரிசுத்த ஆவியானவரால் நீ உயிர்ப்பிக்கப்பட்டபொழுது, ஜெபம் செய்ய ஆரம்பித்தாய். ஆனால் இப்பொழுது அனலற்றுப் போனாய். நீ ஜெபிக்காவிட்டால் பிழைக்கமாட்டாய். கர்த்தர் தமது மக்ள் செய்யும் ஜெபங்களைக் கேட்டு, ஆச்சரியப்பட்டு, சபையைத் துன்புறுத்தின ஒருவனின் ஜெபத்தைக் கேள் என்று கூறுகிறார். ஜெபிக்கும் ஆத்துமாவை அவர் கவனிக்கிறார். ஆகவே, நீயும் இடைவிடாமல் ஜெபம் செய். ஜெபிக்கும் மனதைத் தாரும் என்று தேவனிடம் கேள்.

ஜெபமே ஜீவன்
ஜெபம் ஜெயம்
ஜெபிக்கும் அவா
தாரும் தேவா.

நம்மை இரட்சித்தார்

ஏப்ரல் 08

“நம்மை இரட்சித்தார்” 2.தீமோ. 1:9

இரட்சிப்பு இம்மையிலும் கிடைக்கும் நன்மை. நாம் கிறிஸ்துவுக்குள் வந்தால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். தேவன் நம்முடைய பாவங்களை மன்னித்து நம்மை நீதிமான்களாக்கி நம்முடைய பாவத்தை மாற்றி நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். இப்போதும் விசுவாசத்தின் பலனாக ஆத்தும இரட்சிப்பைப் பெற்றிருக்கிறோம். ஆனால் இன்னும் நாம் பொல்லாப்பினின்றும், சத்துருக்களினின்றும், பயங்களினின்றும் முற்றிலும், நீங்கலானவர்களல்ல. என்றாலும் நமது இரட்சிப்பு நிச்சயந்தான். நாம் இப்பொழுது பூரணமாய் கிறிஸ்துவைப்போல் இல்லை. ஆனால் அவர் இருக்கிற வண்ணமாய் அவரைப் பார்ப்போம். ஆதலால் அவரைப் போலிருப்போம்.

ஒவ்வொரு விசுவாசியும் நீதிமானாக்கப்பட்ட நிலைமையில் இருக்கிறபடியால், தேவனோடு நடந்து தேவனுக்காக வேலை செய்து, தேவ சித்தத்துக்கு ஏற்றபடி வாழ வேண்டும். கிறி;ஸ்து நம்முடையவர். அவருடையதெல்லாம் நமக்குச் சொந்தம். தேவன் நம்முடையவர். அவருடைய குணாதிசயங்களுக்கும், ஆளுகைக்கும் குறைவுவராமல் அவர் நமக்காகச் செய்யக்கூடியதையெல்லாம் செய்வார். இந்த நிச்சயத்தை அறிந்தவர்ப்போல நாம் வாழ வேண்டும். அப்போஸ்தனாகிய பவுல் அப்படித்தான் ஜீவித்தான். இந்த நிச்சயம்தான் வேலைக்கு நம்மைப் பலப்படுத்தி, போராட்டத்தில் நம்மைத் தைரியப்படுத்தி, அடிமைக்குரிய பயத்தையெல்லாம் நீக்கி, கர்த்தருக்கென்று முற்றிலும் நம்மை அர்ப்பணிக்க உதவும். நமக்கு உறக்கம் வரும் வரையிலும் படுக்கையிலே இதைப்பற்றியே தியானிப்போம். தேவன் என்னை இரட்சித்திருக்கிறவர். எனக்கு அவர் சுகத்தையும், ஐசுவரியத்தையும் பட்சமுள்ள உறவினர்களையும், வீட்டு வசதிகளையும் ஓருவேளை கொடாதிருப்பினும், நித்திய இரட்சிப்பினால் என்னை இரட்சித்துள்ளார்.

கிறிஸ்துவால் மீட்கப்பட்டேன்
மேலானதையே நாடுவேன்,
ஸ்தோத்தரித்துப் போற்றுவேன்
அன்பின் சிந்தையில் நடப்பேன்.

நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியம் உள்ளவர்கள்

அக்டோபர் 16

“நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியம் உள்ளவர்கள்” தீத்து 2:14

தேவனுடைய சுத்தக் கிருபையால் நாம் இரட்சிக்கப்பட அவருடைய மகிமையைத் தேட வேண்டும். நற்கிரியைகளுக்காகத்தான் நாம் கிறிஸ்து இயேசுவில் புது சிருஷடிகளாக்கப்பட்டோம். தேவனுடைய செயல்களில் சிருஷ்டிகளாகிய நாம் நன்மைகளைப் பெறக் கவனத்துடனிருக்க வேண்டும். நற்கிரியை செய்தால் மட்டும் போதாது, அதற்காகப் பக்திவைராக்கியமும் உள்ளவர்களாயிருக்க வேண்டும். அப்படியே மற்றவர்களையும் உற்சாகப்படுத்த வேண்டும். நமக்காகத் தம்மையே கொடுத்தவருக்கு நாம் எதையும் செய்யத் தயங்கக்கூடாது. நம்முடைய எண்ணங்களும், செயல்களும் தேவ வசனத்தால் நடத்தப்பட்டு, அவருக்கே மகிமையைக் கொண்டு வருகிறவைகளாக இருக்க வேண்டும்.

தேவன் நம்மைத் தெரிந்து கொண்டார் என்று நாம் பெருமையடைதல் கூடாது. நாம் பிதாவின்மேல் வைத்திருக்கும் அன்புக்குச் சமமாக அவருடைய மக்களுக்குப் பணிசெய்வதில் தவறக் கூடாது. தேவன் நமக்கு எதையும் செய்வார் என்ற எண்ணத்தோடு எக்காரியத்தையும் செய்தல் கூடாது. தேவனுக்கு நாம் பிள்ளைகள். அவர் நம்மை நேசிக்கிறார். நாமும் அவரை முழுமனத்தோடு நேசிக்க வேண்டும். இச்சிந்தையோடுதான் நாம் எதையும் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், அதன் பலனை நாம் பெறுவோம். மோசேயைப் போல இனிவரும் பலன்மேல் நோக்கமாக இருப்போம். பவுலைப்போல் அதிகமாக உழைப்போம். நான் அல்ல, என்னில் உள்ள தேவகிருபை தான் என்று மனதாரச் சொல்லுவோம். தேவகிருபையை உள்ளத்தில் அனுபவிக்கிறவர்களாக, எப்பொழுதும் அவரை நேசித்து, அவருக்காகப் பக்திவைராக்கியம் கொண்டவர்களாக, நற்கிரியைகளைச் செய்வதில் இறங்குவோம்.

நான் பிழைப்பது உமக்கென்று
உம் முகத்தையே என்றும் நோக்கி
என் செயலிலெல்லாம் என்றும்
நான் உம்மையே சேவித்திட அருளும்.

தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு

நவம்பர் 18

“தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு” உன். 8:5

ஒவ்வொரு விசுவாசியும் இயேசு நாதரையே நேசிக்க வேண்டும். உலகம் விசுவாசிக்கும் பாழ்நிலம். பரலோகமோ அவனுக்குத் தந்தையார் இல்லம். அவன் வாழப்போகும் வாசஸ்தலம். கிறிஸ்துவையே துணையாகப் பற்றிக் கொண்டு இந்த உலகில் அவன் பயணம் செய்கிறான். இந்த வசனம் தன் நேசர்மேல் சாய்ந்து கொண்டு இருக்கும் மணவாட்டியைப்போல விசுவாசியைக் குறிப்பிடுகிறது. இது மணவாட்டிக்கு இருக்கும் பலவீனத்தையும், நேசருக்கு இருக்கும் பலத்தையும், அவர் மேல் அவளுக்கு இருக்கும் நம்பிக்கையையும் காட்டுகிறது. அவர் மவாட்டிக்கு துணையாகவும், பெலனாகவும் இருக்கிறார். திருச்சபை கிறிஸ்துவின் மணவாட்டி. சொரிந்து ஆறுதலளிக்கிறார். திருச்சபை தம்மேல் சார்ந்திருப்பதையே அவர் விரும்புகிறார்.

பிரியமான விசுவாசியே, உன் நேசரோடு நெருங்கியிரு. இக்கொடிய வனாந்தரமான உலகில் அவரை விட்டுப் பிரியாதே. எப்பொழுதும் அவர்மேல் சார்ந்திரு. உன் பெலவீனத்தை உணர்ந்துகொள். அவருடைய வலிமையான கரம் உனக்கு உதவ ஆயத்தமாயிருக்கிறது. உன்னைத் தூக்கி எடுத்து நடத்துவார். அவர்மேல் நீ எவ்வளவு அதிகமாக சார்ந்திருக்கிறாயோ, அவ்வளவு அதிகமாக அவர் உன்மேல் அன்பு செலுத்துகிறார். அவரை நேசிக்கும் அளவுக்கு அவருடன் ஐக்கியமாவாய். அவரே உன்னை நடத்தட்டும். அவரையே நம்பு. வல்லமையுள்ள அவரைப் பற்றிக்கொள். என்றும் அவரோடேயே நடந்து அவரையே போற்று. நீ அவரோடிருக்கும் மட்டும் எனக்குப் பமில்லை. அவருடைய சமுகத்தில் உன் இருதயம் கொழுந்து விட்டெரியும் அனுபவத்தைப் பெறுவாய். உன் நேசரை விசுவாசித்து, அவரை அறிந்து, எப்பாழுதும் அவர் பேரில் சார்ந்துகொள்.

எச்சோதனையிலும் நீ
உன் நேசர்மேல் சார்ந்திரு
அவரே உன் மீட்பர், இரட்சகர்
அவரே உன்னைக் காப்பார்.

Popular Posts

My Favorites