கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவன்

ஓகஸ்ட் 21

“கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவன்” கொலோசெயர் 1:28

விசுவாசி தன்னில் குறையுள்ளவனாக எல்லாரும் பார்க்கும்படி நடந்துக்கொள்ளுகிறான். அவர் உணர்வுகள், விருப்பங்கள், துக்கங்கள், செயல்கள், ஜெபங்கள், தியானம் எல்லாவற்றிலும் குறைவு வெளியரங்கமாய்க் காணப்படுகிறது. அவன் இருதயத்திலிருந்து எழும்பும் பெருமூச்சு, மனதில் வரும் அங்கலாய்ப்பு, கண்களிலிருந்து புறப்படும் கண்ணீர், எல்லாம் குறைவையே காண்பிக்கின்றன. ஆனால் கிறிஸ்து இயேசுவிலோ நிறைவுண்டு. நம்மை நீதிமான்களாக்க அவரிடத்தில் பூரண கிருபை உண்டு. நம்மைப் பரிபூரணமாக்க அவரிடத்தில் பரிபூரணமுண்டு. நம்மைப் போதித்து நடத்த அவரிடத்தில் பூரண ஞானம் உண்டு.

அவரோடு ஐக்கியப்படுவதால் நாம் பூரணராகிறோம். ஏனென்றால் அவருடைய மணவாட்டியாக அவருக்கிருப்பதெல்லாம் நமக்குச் சொந்தமாகிறது. அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளகிறதினால்தான் நாம் பூரணராகிறோம். அவருடைய நிறைவிலிருந்து நாம் கிருபையின் மேல் கிருபை பெற்றுக்கொள்கிறோம். ஏனெனில் தேவனுடைய ஆவியாலே நாம் மகிமையின்மேல் மகிமை அடைந்து அவர் சாயலாக மாற்றப்படுகிறோம். நாம் குறைவற்று, தேர்ச்சி பெற்றவர்களாவது, தேவனுடைய தீர்மானம். இப்படி வளர அவர் வாக்களித்துள்ளார். உதவி செய்கிறார். வசனத்தில் உள்ளபடியே நடந்தேறும். அவர் நம்மை பூரணராக்கி நிறையுள்ளவர்களாய், தேறினவர்களாய் பிதாவுக்குமுன் நிறுத்துகிறார். நாம் பூரண பரிசுத்தர் ஆவோம். பூரண பாக்கியர் ஆவோம்.

இயேசு மரித்தபோது
அவர் சீடரும் மரித்தார்
அவரும் அவர்களும் ஒன்றே
இப்பாக்கியம் மகா பெரியது.

அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்

ஓகஸ்ட் 15

“அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்” 1.சாமு. 2:9

பரிசுத்தமாக்கப்பட்டவர்களே பரிசுத்தர்கள். தம்முடைய புகழ்ச்சிக்காக பிதாவினால் பிரித்தெடுக்கப்பட்டவர்கள். கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் மீட்டெடுக்கப்பட்டவர்கள். உலகத்திலிருந்து எடுத்து பரிசுத்தாவியானவரால் நிரப்பி சுத்திகரிக்கப்பட்டவர்கள். இயேசு உலகத்தாரல்லாததுபோல இவர்களும் உலகத்தாரல்லாதவர்கள். இந்தப் பாக்கியம் இவர்களுக்கு இருந்தாலும்,இவர்கள் முற்றிலும்பலவீனமானவர்கள். இவர்களை எப்போதும் காதுகாக்க வேண்டியது அவசியம். தேவன்தான் இவர்களைப் பாதுகாக்கக் கூடியவர் உலகத்து மனிதனால் இது முடியாது. அவர்களும் பலவீனர்தானே.

இவர்களின் பாதைகள் கரடுமுரடானது. முள்ளுள்ளது. மோசமானது. இவர்களுக்குத் திரளான சத்துருக்கள் இருக்கிறார்கள். ஆயினும் இவர்கள் விழிப்புள்ளவர்கள். தைரியமானவர்கள். வெட்கப்படாதவர்கள். காரணம் கர்த்தர் இவர்களைக் காக்கிறார். கொடுமைக்கும், துணிகரத்திற்கும், கவலைக்கும், அழிவுக்கும் இவர்களைக் காக்கிறார். தம்முடைய ஆவியானவராலும், வல்லமையினாலும், தேவ தூதர்களாலும், துன்பங்களினின்றும், நஷ்டங்களினின்றும், மார்க்கப்பேதங்களினின்றும் இவர்களைக் காக்கிறார். தேவன் யாரைக் காக்கிறாரோ, அவர்கள்தான் பத்திரமாய் இருப்பார்கள். தமது பரிசுத்தவான்கள் எல்லாரையும் காக்கிறார். விசுவாசிகளை மாத்திரம் காக்கிறபடியால் பெயர் கிறிஸ்தவர்கள் கெட்டழிவார்கள். விசுவாசத்தினாலும், தேவன் மேல் வைக்கும் நம்பிக்கையினாலும் இவர்கள் காக்கப்படுகிறார்கள். என்னை ஆதரித்தருளும், அப்போது நான் இரட்சிக்கப்படுவேன்.

இயேசுவே நீர் உத்தமர்
என் நடையைக் காத்தருளும்
உம்மோடு நடப்பேன்
மோட்சம்பேறு அடைவேன்.

நான் தேவனை நாடி

ஓகஸ்ட் 31

“நான் தேவனை நாடி” யோபு 5:8

இது ஒரு நல்ல புத்தி. ஒரு நல்ல சிநேகிதன் சொல்லும் யோசனை. மனுஷரிடத்தில் போகிறதைவிட துயரங்களைத் துக்கித்து நினைப்பதைவிட, வீணய் பயப்படுவதைவிட, இதுவே நல்லது. துன்பங்களைத் தூரத்திலிருந்து பார்த்தூல் அவைகள் பயங்கரமாகத் தோன்றினாலும் உண்மையில் பயங்கரமானவைகள் அல்ல. நண்பா, நீ செய்கிறது என்னவென்று எனக்குத்தெரியாது. ஆனால் நான் கலங்கி நிற்கும்போது நான் தேவனையே நாடுவேன். துன்பத்தில் ஆறுதலுக்காகவும், பெலவீனத்தில் பெலனுக்காகவும், குற்றத்தில் மன்னிப்புக்காகவும், தேவனையே நாடுவேன். பயங்கர போராட்டத்தின்போது ஜெயத்திற்காகவும் சந்தேகத்தில் நம்பிக்கைக்காகவும், வெறுமையில் அவரின் நிறைவுக்காகவும், அவரையே நாடுவேன்.

அவ்விசுவாசத்தின் வல்லமையின்கீழ் இருப்பேனாகில் விசுவாசத்திற்காக அவரிடம் போவேன். அவனுடைய ஜெயத்தை அடக்க, அவனுக்கு விரோதமாய் ஜெயக்கொடியைப் பிடிப்பேன். நான் விழுந்து விடுவேனோ என்நு நினைக்கும்போது அவருடைய நீதியின் வலதுக்கரத்தை பிடித்துக்கொள்ள அவரையே நாடுவேன். மரணத்தைக் கண்டு நான் பயப்படும்போது மரண இருளை வெளிச்சமாக்கும்படி அவரையே நாடுவேன்.

உனக்கு எது தேவையோ அதைத் தேவனிடம் கேள். எந்த பயத்தையும் அவரிடம் சொல். எந்தத் துன்பத்தையும் அவர் முன்னே வை. நீ அவரை நாடித் தேடுவது மட்டும் வீணாய்ப் போவதில்லை.

கர்த்தரைத் தேடு கொடுப்பார்
கேள் உனக்குத் தருவார்
அவர் கிருபை பொழிவார்
நோக்கி கெஞ்சி காத்திரு.

தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்

ஓகஸ்ட் 27

“தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்”. நீதி. 2:8

விசுவாசி நடக்க வேண்டிய பாதை சத்துருக்களின் தேசத்திலும் இருக்கிறது. இது மிக துன்பம் நிறைந்தது. இது மிகவும் களைத்துப் போகக்கூடிய பிரயாணம். வருத்தம் நிறைந்தது. விசுவாசியின் பெலவீனம் அதிக வருத்தத்தைக் கூட்டுகிறது. உள்ளான போராட்டமும் அவன் வழியைக் கடினப்படுத்துகிறது. ஆகிலும் நாம் சேர வேண்டிய நகரத்திற்கு அந்த ஒரு பாதைதான் உண்டு. இந்தப் பாதை இளைப்பாறுதலுக்கும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட சுதந்திரத்திற்கும் நடத்துகிறது. இந்தப் பாதையில் கர்த்தரும் தம்முடைய பரிசுத்தவான்களுடன்கூட நடக்கிறார். அவர்களின் குறைவுகளைப் போக்கி அவர்களுடைய நிலைமைக்குத்தக்கதாக இரக்கம் பாராட்டுகிறார்.

சத்துருக்கள் இவர்களை மேற்கொள்ள முடியாமல் தற்காக்கிறார். மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை அவர்களுக்கு நேரிடுவதில்லை. தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதனையைத் தாங்கத்தக்கதாக சோதனையோடுகூட அதற்கு தப்பித்துக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார் என்று எக்கொடிய சோதனையைப்பற்றியும் சொல்லலாம். சாத்தான் உங்களைக் குற்றப்படுத்தும்போது பின்வாங்கிப் போகாமலும், பாதுகாக்கிறார். அவர்களுடைய பெலவீனத்தில் தம்முடைய பெலனைப் பூரணப்படுத்தி தம்முடைய கிருபை அவர்களுக்குப் போதும் என்று ரூபிக்கிறார். விழிப்பாய் அவர்களைக் கவனித்து பலத்த கையால் தாங்கி, அன்பான மனதால் அவர்களைத் தாங்குகிறார். அன்பரே, இன்றுவரை அவர் உங்களைப் பாதுகாத்து வந்ததை கவனித்துப் பாருங்கள். இனிமேலும் அவர் உங்களைப் பாதுகாப்பார் என்று நம்புங்கள். பரிசுத்தவான்களைப் பராமரிப்பதும் அவர்களின் பாதைகளைப் பாதுகாப்பதுமே அவருடைய வேலை.

இயேசுவின் கரத்தில் பக்தர்
என்றும் சுகமாய் இருப்பர்
அவரால் துன்பங்களைக்
கடந்து என்றும் சுகித்திருப்பர்.

உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்

ஓகஸ்ட் 18

“உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்” உன்.1:4

சுபாவப்படி உத்தமர் ஒருவரும் இல்லை. ஒருவரும் தேவனுக்குரியதைத் தேவனுக்கும் மனுஷருக்குரியதை மனுஷருக்கும் செலுத்தப் பார்க்கிறதில்லை. இப்படி செய்வதுதான் உத்தமம். இது கிருபையிலிருந்து உண்டாகிறது. உத்தமமே மறுபடியும் பிறந்தவர்க்கு அத்தாட்சி. உத்தமமானவர்கள் எப்பொழுதும் தேவனுடைய கண்கள் தங்கள் பேரில் இருக்கிறதென்றும், தாங்கள் தேவ வசனத்தின்படி நமக்கக் கடமைப்பட்டவர்கள் என்றும், தாங்கள் தேட வேண்டியது, தேவ தயவு என்றும், அவர் நிதானிப்பே மிகவும் முக்கியம் என்றும் எண்ணுவார்கள். உத்தமர்கள் ஆண்டவர் இயேசுவை வெகுவாய் நேசித்து அவரை அறிந்து அவரை மகிமைப்படுத்துவார்குள். உத்தமமாய் தேவனை நேசித்து, அதற்கு சாட்சியாக அவர் சமுகத்தில் சந்தோஷித்து சகலத்திலும் அவரில் பிரியமாய் நாடி வாழ்வார்கள்.

உத்தமர்கள் தேவனைக் குறித்து எப்போதும் சந்தோஷமாய் பேசப் பிரயாசப்பட்டு, அவருக்காக எதையும் செய்யவும், உலகத்தையும் பாவத்தையும், வெறுத்து தேவனுக்கு எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள். கர்த்தரை மகிமைப்படுத்தி அவரைக் கனம்பண்ணுவதைவிட வேறு எதையும் மிகவும் முக்கியமானதாய் நினைக்கமாட்டார்கள். அன்பரே, நீ உத்தமனா? இயேசுவை நேசிக்கிறாயா? உத்தம இருதயத்தோடு அவரை நேசிக்கிறாயா? எல்லாவற்றிலும் அதிகமாய் நேசிக்கிறாயா? நீ அவரை நேசிக்கவில்லையென்றால் நீ உத்தமன் அல்ல. ஒருவன் கர்த்தாகிய இயேசு கிறிஸ்துவில் அன்பு கூராவிட்டால் அவர் சபிக்கப்பட்டவன். கர்த்தர் வருகிறார். என்று அப்போஸ்தலன் இடும் சாபம் எவ்வளவு பயங்கரமானது.

இயேசுவே என் நோவில் நீ
சஞ்சீவி, மரணத்தில் ஜவீன்
உமது வாயின் வார்த்தைகள்
என் ஆத்துமாவுக்கு அமிர்தம்.

வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர்

ஓகஸ்ட் 25

“வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர்” எபி.10:23

தேவனுடைய வாக்குத்தத்தங்கள் இலவசமாய் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தேவன் உண்மையுள்ளவர். ஆகவே அவர் அவைகளைச் சொன்னபடியே நிறைவேற்றுவார். தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு நித்திய ஜீவனையும் பாவ மன்னிப்பையும், இருதயசுத்தத்தையும், சமாதானத்தையும், கிருபையையும், வாக்களித்திருக்கிறார். இவைகளை நாம் நம்பி அவர் அப்படியே நிறைவேற்றுவார் என்று விசுவாசிக்க வேண்டும். அவர் தம்முடைய வாக்குகளுக்கு உண்மையுள்ளவர். அது அவருடைய தன்மை. அவர் அளவற்ற சம்பூரணமுள்ளவராயிருப்பதனாலும், ஒழுங்குப்படுத்தப்பட்ட அவர் உடன்படிக்கை உறுதியாய் இருப்பதினாலும், அவர் ஆணையிட்டு இருப்பதினாலும், அவர் தன் அன்பான குமாரனைக் கொடுத்ததினாலும், பரிசுத்தவான்களின் சாட்சியினாலும், சபையின் சரித்திரத்தினாலும், வாக்குகள் கொடுக்கப்பட்ட நோக்கத்தினாலும் இது தெரிய வருகிறது.

அவர் அப்படியே செய்வார் என்பது கூறப்பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும். கர்த்தர் உண்மையுள்ளவர். ஆகையால் அவர் எல்லா பொல்லாங்கினின்றும் விலக்கி காப்பார் என்று விசுவாசியுங்கள். நாம் நன்மை செய்து, உண்மையுள்ள சிருஷ்டிகராகிய அவரண்டை நம் ஆத்துமாக்களை ஒப்புவிக்க வேண்டும். அவருடைய வார்த்தை நிறைவேறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்கக்கூடாது. வானமும் பூமியும் ஒழிந்துபோம். அவர் வார்த்தை மாறவே மாறாது. அவருடையத் தன்மையைப்போல அதுவும் மாறாது. தேவனுடைய வாக்கைப்போல உறுதியுள்ளது ஒன்றும் இல்லை.

தேவன் உரைத்த சொற்படி
குமாரனைத் தந்தார்
அவர் வாக்குபண்ணினதெல்லாம்
அவ்வாறே நிறைவேற்றுவார்.

கர்த்தாவே….. என்னை நினைத்து

ஓகஸ்ட் 30

“கர்த்தாவே….. என்னை நினைத்து” சங். 106:4-5

இது அதிக பொருள் அடங்கியுள்ள ஒரு நல்ல ஜெபம். ஓர் ஏழை ஐசுவரியத்திற்காகவும், நிர்பந்தன் இரக்கத்திற்காகவும், அநாதை சிநேகிதனுக்காகவும் வேண்டுகிற ஜெபம். கர்த்தர் நம்மை நினைத்தால் நாசத்திலிருந்து காத்து, மோசத்திற்கு விடுவித்து, வருத்தத்தில் நம்மை நடத்தி, குறைவிலிருந்து நிறைவுக்கு அழைத்து துக்கத்தில் ஆறுதல்படுத்த நாள்தோறும் நடத்திச் செல்கிறார். கர்த்தர் நம்மை நினைத்துவிட்டால் யார் நம்மை மறந்தாலும் கவலையில்லை. அவர் சகல சிருஷ்டிகளைக் காட்டிலும் நமக்கு அதிகம் செய்வார். யார் கைவிட்டாலும் அவர் கைவிடார். அவர் எப்போதும் நம்மை நினைத்துக்கொண்டிருக்கிறார். நம்மை மண் என்றும், பெலவீனர் என்றும் மோசத்துக்கு ஏதுவானவர்கள் என்றும், அடிக்கடி சோதிக்கப்படுகிறவர்கள் என்றும் அவர் நம்மை நினைக்கிறார். நமக்காகச் செய்த தமது உடன்படிக்கையையும், தமது வாக்குத்தத்தங்களையும், தமது குமாரன் பட்ட பாடுகளையும், அவர் நமக்கு வைத்திருக்கும் சம்பத்துக்களையும் அவர் நினைக்கிறார்.

அவரின் திவ்ய ஈவுகளையும், அவர் கிருபைகளையும் நமக்கு இன்னும் கொடுக்க வேண்டுமென்று அவரைக் கேட்கலாம். நம்முடைய பாவங்களை மன்னிக்க நம்முடைய ஆத்துமாக்களை சந்திக்க, உயிப்பிக்க, நமது பிரயாசங்களுக்குப் பலன் கொடுக்க, நாம் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில் பெருக, விசுவாசத்தில் வளர, சந்தோஷத்திலும், சமாதானத்திலும் பெருக நம்மை அவர் நினைக்க வேண்டும் என்று அவரை நாம் கேட்கலாம். ஆத்துமாவே, இந்த இராத்திரியில் எல்லா மோசங்களுக்கும் என்னை விலக்கிக் காத்து, விசுவாசத்தால் நிறைந்து, பக்தி வைராக்கியத்தால் ஏவப்பட்டு, அன்பில் பிரகாசித்து, தாழ்மையைத் தரித்துக்கொண்டவனாய் நாளை காலை நான் எழுந்து கொள்ளச் செய்யும்.

பரிந்து பேசும் கர்த்தாவே
என்னை உமக்கொப்புவிப்பேன்
ஏழைக்கிரங்கி அருளும்
அடியேனை நினைத்தருளும்.

உன் உக்கிராணக் கணக்கையொப்புவி

ஓகஸ்ட் 12

“உன் உக்கிராணக் கணக்கையொப்புவி”  லூக்கா 16:2

நமக்கெல்லாருக்கும் ஒவ்வொரு வேலையைத் தேவன் வைத்திருக்கிறார். அது பொறுப்பான நம்பிக்கையுள்ள வேலை. அந்த வேலைக்கு தலையும், மனமும், கைகளும், கால்களும் வேண்டும். இந்த உக்கிராணக்காரன் சுறுசுறுப்பும், உண்மையும் ஜாக்கிரதையுமாய் இருந்து கணக்கொப்புவிக்கவேண்டும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். நாம் எல்லாரும் கணக்கு கொடுக்கவேண்டியவர்கள். வெகு சீக்கிரத்தில் நாம் கணக்கொப்புவிக்கவேண்டும். நமது எஜமான் சீக்கிரம் வரப்போகிறார். அப்போது அவரை எதிர்கொண்டு போகாமல் பின்னடைவோமா? நம்முடைய செல்வாக்கு, பணம், யோசனைகள், செயல்கள் இவைகளை எப்படி பயன்படுத்தினோம். ஆத்துமாவின் வேலைகளில் என்ன பங்கேற்றோம்? எப்படி தேவனுக்குரிய காரியங்களில் நாம் ஈடுபட்டோம். இவைகளையெல்லாம் குறித்து கணக்கொப்புவிக்க வேண்டும்.

நண்பரே, நீ ஒர் உக்கிராணக்காரன் என்பது உனக்குத் தெரியுமா? வேதம் உன் எஜமான் இயேசு கொடுத்த சட்டம். உன் நடக்கைக்குப் பிரமாணம். இதைத் தியானிக்கிறாயா? உன் எஜமானுடைய கண் உன்மேல் இருக்கிறது. இதை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுகிறாயா? இந்த வசனத்துக்குப் பயப்படுகிறாயா? கர்த்தருடைய நாள் சமீபித்து வருகிறது. நம்முடைய கணக்குகளை ஒப்புவிக்க வேண்டிய வேளை நெருங்கிவிட்டது. இப்பொழுது உன் காரியம் எப்படியிருந்தாலும் உண்மையுள்ள உக்கிராணக்காரனுக்கு அப்போது தேவனால் புகழ்ச்சி கிடைக்கும். இப்போதாவது உன் பொறுப்பை உணர்ந்து, அதற்கு ஏற்றதாய் நடந்தால் எவ்வளவு நலம்!

நியாயாதிபதியாம் கர்த்தாவே
உமக்குமுன் நான் நிற்பேன்
அப்போது குற்றமற்றுவனாக
விளங்கி மகிழ்வேன்.

தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்

ஓகஸ்ட் 04

“தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்” யோபு 11:5-6

யோபின் சிநேகிதர் அவன் நிலமையை புரிந்துக்கொள்ளவில்லை. அவர்கள் சொன்ன நியாயங்கள் அவன் மனதில் தங்கவில்லை. அவனுக்கு அவைகள் தெரிய வேண்டுமென்று அவர்களில் இவன் ஒருவன் விரும்பினதால், தேவன் பேசினால் நலமாய் இருக்கும் என்று வாய்விட்டுச் சொன்னான். இப்படித்தான் விசுவாசியும் கடைசியில் சொல்லுகிறார். யாரிடத்தில் தேவன் பேசினால் நலமாய் இருக்குமென்று விரும்புகிறோம்? நம்மிடத்தில்தான் அவர் பேசவேண்டும். அப்போதுதான் அவரின் அன்பு நம்மிடத்தில் இருக்கிறதென்று ஒரு நிச்சயம் உருவாகும். நமது வருத்தங்கள் விலகும். சத்தித்தில் நாம் நிலைப்படுவோம். பாவிகளிடத்தில் அவர் பேச வேண்டும். அப்போது அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். மனந்திருப்பி கர்த்தர் பட்சம் சேருவார்கள். துக்கப்படுவோரிடம் அவர் பேச வேண்டும். அப்போது அவர்கள் தேற்றப்படுவார்கள். சுயாதீனம் அடைவார்கள். பின்வாங்கி போனவர்களோடு அவர் பேசவேண்டும். அப்போது அவர்கள் திரும்பவும் பரிசுத்தர்களும் பாக்கியமும் பயனுள்ளவர்களும் ஆகலாம்.

இவைகளெல்லாம் நமக்குப் போதிக்கிறதென்ன? எந்த வேளையானாலும் தேவனிடம் ஓடி அவர்மேல் நம்பிக்கை வைக்கும்போது அவர் நம்மோடு பேசுவார். சோதிக்கப்படுகிற விசுவாசியே, தேவன் உனக்காகப் பேசுவார். பக்தியுள்ள கிறிஸ்தவனே, தேவன் உன்னோடு பேசுவார். எப்படிப் பேசுவார் என்று கேட்கிறாயா? தம்முடைய வசனத்தை கொண்டும், தமது கிரியைகளைக் கொண்டும், ஆவியானரைக் கொண்டும் பேசுவார். அப்படியானால் அவர் சத்தத்துக்குச் செவிக்கொடுப்போமாக. அவர் தம்முடைய வார்த்தையைக் கொண்டும், ஊழியர்களைக் கொண்டும் எவ்விதத்திலும் நம்மோடு பேச அவரை வேண்டிக்கொள்வோமாக.

சுவிசேஷத்தில் தொனிக்கும்
சத்தம் சமாதானமே
இதை உமதடியார்க்களித்து
விடாமல் என்றும் காரும்.

தேவனையே நோக்கி அமர்ந்திரு

ஓகஸ்ட் 06

“தேவனையே நோக்கி அமர்ந்திரு” சங். 62:5

தேவனையே நோக்கி அமர்ந்திருப்பதென்றால் அவர்மேல் சார்ந்திருப்பதாகும். குடிமகனும், தேவ ஊழியனும், சிறுபிள்ளையும் இப்படிச் சார்ந்திருக்கிறவர்கள்தான். அமர்ந்திரு என்பது நம்பிக்கையின் குறி. இந்த நம்பிக்கைதான் நம்மைத் தேவனிடம் நடத்துகிறது. அவரைநோக்கி காத்திருக்கச் செய்கிறது. ஆவிக்குரிய எந்த செய்கைக்கும் ஏது செய்கிறது. அவரை நோக்கி அமர்ந்திருப்பதென்பது நமது விருப்பத்திற்கு அடையாளம். அவரிடத்திலிருந்து ஒன்றைப் பெற்றுக்கொள்ள விரும்பாவிட்டால் நாம் அவரை நோக்கி பார்க்க மாட்டோம். அவர்முன் காத்திருக்கவும் மாட்டோம். இதில் கீழ்ப்படிதல் அடங்கியிருக்கிறது. இந்தக் கடமையை அசட்டை செய்வது பாவம்.

இப்படி தேவனையே நோக்கி அமர்ந்திருப்பதில் அடங்கியிருப்பது என்ன? அவருடைய வசனத்தின்மேல் விசுவாசம். அருடைய ஆசனத்தண்டையில் செய்யும் விண்ணப்பம். அவரின் நற்கிரியைகளை செய்தல். ஜெபத்திற்குப் பதில் கிடைக்குமென்று காத்திருத்தல். நம்முடைய விஷயத்தில் தேவன் உதவி செய்வாரென்று எதிர்பார்த்தல். எல்லா இடத்திலும் தேவன் இருக்கிறார் என்று உணர்ந்து அவருக்குப் பயப்படுதல். அவரே நன்மைகளுக்கு காரணமும் ஊற்றுமானவர் என்று அவருக்குப் பயப்படுதல் போன்ற பல்வேறு செய்திகள் அடங்கியிருக்கிறது. கர்த்தரிடம் அமர்ந்திருந்தால் நாம் சுகபத்திரராகவும், பரிசுத்தமாகவும், ஜசுவரியர்களாகவும், திருப்தியுள்ளவர்களாகவும், பாக்கியசாலிகளாகவும் இருப்போம். நீ செய்கிற எல்லாவற்றிலும் கர்த்தருக்காகக் காத்திரு. அதிலும் துன்பப்படும்போதும், கலங்கும்போதும், அவருக்குக் காத்திரு. அதிலும் ஆத்துமாவுக்கு ஆசீர்வாதம் கிடைப்பது நிச்சயம். கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கமடையார் என்று அவர் சொல்லுகிறார்.

உமது சமுகம் தரிசிக்க
ஆவலோடு காத்திருப்பேன்
கர்த்தரைத் தேடிய
இஸ்ரவேலர் வெட்கப்பட்டதில்லை.

Popular Posts

My Favorites

நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?

மார்ச் 08 "நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?." யோவான் 6:67 ஆண்டவர் இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது, அவருடைய சீஷர்கள் அவரை விட்டுப் பின்வாங்கி போய்விட்டார்கள். அதேப் போல பலர் இந்நாளிலும் அவரை விட்டுப்போய்விட மனதுள்ளவர்களாயிருக்கிறார்கள். அநேகர்...