சத்தியத்தை வாங்கு அதை விற்காதே

டிசம்பர் 24

“சத்தியத்தை வாங்கு அதை விற்காதே” நீதி.23:23

சத்தியம் நமக்கு அவசியம். நமது மனதுக்கு தெளிவைத்தர, இருதயத்தைத் தூய்மைப்படுத்த, ஆத்துமாவை மகிழ்விக்க, நடத்தையைச் சீர்படுத்த அது மிகவும் அவசியம். எந்த நன்மையும் சத்தியத்திலிருந்ததான் பிறக்கிறது. எல்லாத் தீமைகளையும், அவை பொய்யிலிருந்து உண்டாவதால், அது கண்டிக்கிறது. எனவே சத்தியத்தை வாங்கு. அதை விலைகொடுத்து வாங்க வேண்டிய அளவுக்கு உயர்ந்தது. அதை வாங்குவதற்கு நீ செலவிடவேண்டும். அது விலையேறப்பெற்றது. பலர் இந்தச் சத்தியத்திற்காக தமது சுகத்தையும், பெலத்தையும், இனத்தையும், ஜனத்தையும், ஏன், தங்கள் உயிரையும்கூட கொடுத்திருக்கிறார்கள். சத்தியம் ஒரு பெரும் புதையல். அதன் மையம் கிறிஸ்துவே. கிறிஸ்துவையே சத்தியம் உயர்த்திக் காட்டுகிறது. அதைத் தேடி கண்டுபிடித்து வாங்கு. அதை விற்காதே.

சத்தியத்தைச் சம்பாதிக்க பிரயாசப்படு. கிறிஸ்துவைப்பற்றி ஆழமாகத் தெரிந்துகொள். சத்தியம் எங்கும் நிறைந்துள்ளது. கிறிஸ்துவின் வார்த்தையே சத்தியம். அவரை எவ்வகையிலாயினும் பெற்றுக்கொள். அவரைத் தேடிப் பெற்றுக்கொள். அவருக்காக ஜெபம் செய். சத்தியம் கிடைக்கும்வரை போராடு. அதை உனக்குக் கொடுக்கிறவர் தூயஆவியானவரே. அவரைக் கனப்படுத்து. உனக்கு அவர் சத்தியத்தைக் காட்டுவார். அவர்தான் உன்னைத் தேவனண்டை நடத்துவார். எந்தச் சூழலிலும் உன்னை நடத்த அவரால் முடியும். மனகலக்கத்தில் அவர் உன்னைத் தேற்றி, உன் நோயில் உன்னைக் குணமாக்கி, ஆறுதல்படுத்தி, உன்னைச் சத்தியத்தில் நடத்துவார். அவர் கற்றுத் தருவதனைத்தையும் கற்றுக்கொள். அதுவே உனக்கு உணவும், துணைவுமாகட்டும். ஆண்டவரின் மாட்சிமைக்காக அதைப் பிரசங்கி.

நீரே வழி இயேசுவே
நீரே சத்யம், ஜீவனும்,
நீர் என்னை நடத்தும்,
நேர் வழி நான் காண்பேன்.

விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலன் இல்லாமற்போயிற்றோ

டிசம்பர் 12

“விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலன் இல்லாமற்போயிற்றோ” (ஏசா.50:2)

இவ்வசனம் அவிசுவாசத்தைப் பார்த்துக் கேட்கப்படும் கேள்வி. உன்னுடைய அவிசுவாசத்தையும் பார்த்து இக்கேள்வி கேட்கப்படுகிறது. தேவன் விடுவிக்கக்கூடியவர். விடுவிப்பேன் என்று அவர் வாக்களித்திருப்பதால், எந்தப் பயமும் கூடாது. எந்த வருத்தமும் வேண்டாம். எந்தக் கலக்கமும் வேண்டாம். உன்னை மனமடிவாக்கிய உன் துன்பத்தை நன்றாக கவனி. ஆண்டவர் எந்தக் கோணத்திலிருந்து வரும் உன் துன்பங்களைச் சந்திப்பார். பிறகு விடுவிப்பதற்கு என்னிடத்தில் பெலன் இல்லாமற்போயிற்றோ என்று கர்த்தர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல். பாவத்திலிருந்தும், குற்றத்திலிருந்தும், பிசாசின் வல்லமையிலிருந்தும், தண்டனையிலிருந்தும் உன்னை விடுவிக்க அவர் வல்லவரே, தேவனுடைய காரியத்தில் வரும் எப்பிரச்சனையிலிருந்தும் உன்னை விடுவிக்க அவர் வல்லவரே.

உன் தேவனால் உன்னை விடுவிக்க முடியாதா? உன்னை இரட்சிக்கக் கூடாதபடி அவருடைய கரங்கள் குறுகிப்போகவில்லை. உன் விண்ணப்பங்களுக்குப் பதில் கொடுக்க முடியாதபடி அவருடைய செவிகள் மந்தமாகிப்போகவில்லை. இல்லையென்றால் ஏன் சந்தேகப்படுகிறாய். தேவனிடத்தில் நம்பிக்கை வை. இதற்கு முன்னே அவர் உனக்குச் செய்தவைகளையெல்லாம் எண்ணிப் பார். உன்னைக் காத்தார், மீட்டார், நடத்தினார், ஆசீர்வதித்தார். இவைகளுக்காக அவரைப் போற்று, அவரைத் துதி. இனிமேலும் அவர் உன்னை நடத்துவார். அதை நம்பு. உன் அவிசுவாசத்தை விலக்கு. அவரை நோக்கிக் கூப்பிடு. அவருடைய வல்லமை உன்னை நிரப்பட்டும். என்னை நோக்கிகக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் என்கிறார்.

விடுவிக்கிறவர் வல்லவர்,
ஞானம் ஆற்றல் உள்ளவர்,
நித்தியத்தின் மீது அதிகாரம்
உள்ளவர், அவரைப் பற்று, பெலன் கொள்.

ஏற்ற நேரத்தில் சகாயம் செய்யும் கிருபை

டிசம்பர் 01

“ஏற்ற நேரத்தில் சகாயம் செய்யும் கிருபை”  எபி. 4:16

தேவனின் கிருபைதான் எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் நமக்கு நன்மையும் செம்மையுமானவைகளையெல்லாம் தருகிறது. ஓவ்வொரு நாளும் நமக்குத் தேவ கிருபை தேவை. ஆனாலும் சில நேரங்களில் அது அதிகமாக தேவைப்படுகிறது. நம்மைப் பெருமையிலிருந்து துணிகரமான பாவத்திலிருந்தும் தடுத்துக் கொள்ள நமக்கு தேவனுடைய கிருபை தேவையாயிருக்கிறது. நாம் முறுமுறுத்து நமது ஆன்மீக வாழ்வில் பின்வாங்கிப் போகாமலிருக்க தேவ கிருபை நமக்குத் தேவை. சோதனைகளாகிய கண்ணிகளுக்குத் தப்புவதற்கும், மகிமையுடன் நாம் மரிப்பதற்கும் தேவ கிருபை நமக்கு வேண்டும். தேவன் எவ்விதத்திலும் கிருபை செய்வார். தகுதியற்ற நமக்குக் கிடைக்கும் அவருடைய உதவி தேவ கிருபையால்தான் கிடைக்கிறது. நமது ஜெபங்களின்மூலமாக நாம் அதைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆகவே, நாம் இரக்கம் பெறவும், ஏற்ற நேரத்தில் சகாயம் பெறவும் கிருபையைத் தேட வேண்டும். நமது சுயபெலத்தால் நாம் எதையும் சாதிக்க முடியாது. நமது சொந்த ஞானமும் பயனற்றது. எல்லாவற்றிற்கும் தேவ கிருபைதான் அவசியம் என்று உணர்ந்து எப்பொழுதும் அதைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். தேவ கிருபையில்லாமல் நாம் வாழ முடியாது. நமது வாழ்நாள் முழுவதும் நாம் அதை வாஞ்சையோடு தேட வேண்டும். இதை நாமும் இச்சிந்தையுடன் ஆண்டவரிடம் கேட்போமானால் அவர் நிச்சயம் நமக்குத் தந்தருளுவார். நம்மைக் காப்பாற்றி, வாழ வைத்து, நோய் நொடியிலிருந்து மீட்டு, பெலன், ஜீவன் ஈந்து நம்மை நடத்தி வருவது தேவ கிருபைதான். ஆண்டவரே, என்னை ஜெப ஜெயவீரனாக்க உமது கிருபையை எனக்குத் தாரும்.

தேவ கிருபை, ஆசீர்வாதம்
தினமும் எங்களில் தங்கிட
தேவனே அருளும் உம் ஈவை
தினமும் எங்களைக் காத்திட.

எங்கள் தேவனே உம்மை அறிந்திருக்கிறோம்

டிசம்பர் 08

“எங்கள் தேவனே உம்மை அறிந்திருக்கிறோம்” ஓசியா 8:2

தேவனை அறிந்திருப்பது மிகவும் நல்லது. அவர் நமக்குப் போதிப்பதினால், நாம் அவரை அறிந்துகொள்ளுகிறோம். இயேசுவே நாம் அறிந்துகொண்டால்தான் நாம் தேவனை அறிந்து கொள்ள முடியும். ஏனெனில், அவர்தான் பிதாவை நமக்கு வெளிப்படுத்தினார். வேத வசனம் அவரை வெளிப்படுத்துகிறவிதமாய், இயேசுவை சுவிசேஷங்கள் வெளிப்படுத்துகின்றன. அவ்வண்ணமாக அவரை அப்படியே அறிந்துகொள்வோமானால். அந்த அறிவு நமக்கு மகிழ்ச்சியையும் ஞானத்தையும் தரும். நமக்கு அமைதியும் கிடைக்கும், அப்பொழுதுதான் அவருடைய இரக்கம், உருக்கம், தயவு, வல்லமை, அன்பு, நட்பு, உபகாரச் சிந்தை ஆகியவையும் வசனத்தின்மேல் நமக்கு நம்பிக்கையும் கிடைக்கும்.

இவ்வாறு அவர்மேல் நாம் நம்பிக்கை கொண்டால் அவருடைய தன்மைகளை நேசிப்போம். அவருடைய மக்களோடு ஐக்கியம் கொள்வோம். ஜெபிப்போம், வேத வசனத்தின்படி நடப்போம். தொடர்ந்து அவற்றைத் தியானிப்போம். அவரின் சித்தத்தில் பிரியப்படுவோம். நித்திய ஜீவனைப் பெறுவோம். இயேசு சொன்னார், ஒன்றான மெய் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். நாம் தேவனை அறிந்துகொள்ள வேண்டுமானால், அவருடைய வசனத்தை அறிய வேண்டும். அவருடைய செயல்களைக் கவனிக்க வேண்டும். அவருடைய பணிகளைச் செய்ய வேண்டும். அவருடைய தூய ஆவியானவரால் நடத்தப்பட வேண்டும். இன்றிரவு நாம் தேவனிடத்தில், தேவனே நான் உம்மை அறிந்து இருக்கிறேன். உம்மிடம் மிகவும் அன்பு செலுத்துவேன் என்று சொல்லக்கூடுமா?

தேவாவியே வாருமே
உம் வார்த்தை தெளிவாக்குமே
தேவனே அறியக் காட்டிடும்
கர்த்தாவே, உம்மைக் காட்டிடும்.

நீதியின் சூரியன்

டிசம்பர் 23

நீதியின் சூரியன் (மல்.4:2)

நீதியின் சூரியன் என்பது இயேசு கிறிஸ்துவினுடைய பெயர்தான். உலகத்திற்கு ஒரே சூரியன் இருப்பதுபோல ஒரே இரட்சகர்தான் உண்டு. இந்த உதாரணத்தை அவருடைய மாட்சிமையும், உன்னதமும், அழுகும், மகிமையும், நிறைவும், சகல நற்குணங்களும் விளக்கிக்காட்டும். அவர் நீதியின் சூரியன். அவர் தன்னில்தான் நிறைவுள்ளவர், மேன்மையுள்ளவர், ஆளும் கர்த்தர் என்பதையும் தமது ஜனத்திற்கு அவர் நீதியாய் செயல்படுகிறார் என்றும் காட்டுகிறது.

வெளிச்சம் சூரியனிடத்திலிருந்து வருவதுபோல, நம்முடைய நீதி இயேசு நாதரிடமிருந்து வருகிறது. அவரே பரிசுத்தத்தின் உறைவிடம். நம்மை நீதிமான்களாக்க அவரே அனைத்தையும் செய்து முடித்தார். உலகத்திற்கு தேவையான ஒளி சூரியனிடத்தில் இருப்பதுபோல, நமக்கெல்லாம் போதுமான ஆவிக்குரிய ஒளியும், நீதியும் அவரில் இருக்கிறது. சூரியனின் ஒளி நமக்கு இலவசமாகக் கிடைப்பதுபோல இயேசு கிறிஸ்துவும் தமது நீதியை இலவசமாய்த் தருகிறார். வானத்தில் சூரியன் பிரகாசிக்கும்பொழுது வேறிடத்திலிருந்து ஒளி கிடைக்குமென்றிருப்பது மதியீனம். பலர் இன்று இயேசுவைவிட்டு வேறிடங்களில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இது மதியீனம். சூரியனிலிருந்து சகல சிருஷ்டிகளுக்கும் தேவையான வெப்பமும், பிரகாசமும் கிடைப்பதுபோல இயேசு நாதரிடத்திலிருந்து ஆசீர்வாதங்களும், வெளிப்பாடுகளும் கிடைக்கின்றன. „நீதியின் சூரியனே, நாங்கள் உமது ஒளியில் நடந்து, நீர் கிருபையாகத் தருவதைப் பெற்றுக்கொண்டு, ஜீவனும் சமாதானமும் அடைய பாவிகளாகிய எங்களைப் பிரகாசிப்பித்தருளும் என்று ஜெபிப்போம்.

மெய் ஒளியாம் எம் இயேசுவே
நீரென் இதயத்துள் வாருமே
மெய் ஒளியால் என் பாவம் காட்டி
நீதியின் சூரியனே இரட்சியும்.

தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்

நவம்பர் 10

“தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்” ஓசியா 14:2

தேவனுடைய பிள்ளைக்குப் பாவத்தைப்போல் துன்பம் தரக்தக்கது வேறு ஒன்றுமில்லை. பாவத்திலிருந்து விடுதலைபெற வேண்டும் என்றுதான் அவன் விரும்புகிறான். அதற்காகவும் ஜெபிக்கிறான். அவன் எல்லாவற்றிலும் நீதிமானாக்கப்படும்பொழுது தனது குற்றங்களிலிருந்து விடுதலை பெறுகிறான். இதுமட்டுமல்ல, அவன் செய்யும் எல்லா செயல்களையும் பாவ விடுதலையோடு செய்ய விரும்புகிறான். பாவம்தான் ஒருவனை அலைக்கழித்து வருத்தப்படுத்துகிறது. கர்த்தருடைய பிள்ளை என்று சொல்லும் சாட்சியைக் கெடுத்து, அவனுடைய அமைதியைக் குலைத்து விடுகிறது. ஆகவே, அவன் ஆண்டவரிடம், தன்னிடமிருந்து எல்லாத் தீங்குகளையும் போக்கிவிட வேண்டுமென்று கெஞ்சுகிறான். ஜெபிக்க வேண்டும் என்ற இந்த எண்ணத்தைக் கர்த்தர் அவன் இருதயத்தில் உண்டாக்குகிறார். எந்தத் தேவனுடைய பிள்ளையும் முதலில் தேட வேண்டிய காரியம் இதுதான்.

ஒருவன் தன் அக்கிரமங்களினால் வீழ்ந்து இருக்கலாம். அவன் பரிசுத்தத்தின்மூலமாக மட்டுமே எழுந்திருக்கக்கூடும். தன் சொந்த புத்தியீனத்தினால் அவன் விழுந்திருக்கலாம். கர்த்தருடைய இரக்கத்தினால் அவன் எழுந்திருக்கக் கூடும். தேவன் எல்லா அக்கிரமங்களையும் நீக்கி போடுவாரா? ஆம், நீக்கிப்போடுவார். தமது பலியினால் எல்லாப் பாவங்களையும் நீக்குவார். தம்முடைய வசனத்தை நிறைவேற்றிப் பாவத்தின் வல்லமையை அகற்றுவார். மரணத்தை ஜெயிக்க பெலன் தருவார். ஆகவே, ஒவ்வொரு நாளும், கர்த்தாவே, என்னை முற்றிலும் பரிசுத்தமாக்கும். என் ஆத்துமா ஆவி, சரீரம் முழுவதையும் கிறிஸ்துவின் வருகைமட்டும் குற்றமில்லாததாகக் காப்பாற்றும். என்று ஜெபிப்பதால், நாம் மறுபடியும் பிறந்தவர்கள் என்று சாட்சியும் பெறுவோம். அந்த ஜெபத்தைக் கர்த்தர் கேட்பார். நீங்கள் முற்றும் பரிசுத்தமாவீர். அவர் உண்மையுள்ளவர். அவர் அப்படியே உங்களைப் பரிசுத்தமாக்குவார்.

நோயையும் துன்பத்தையுமல்ல
பாவத்தையே என்னிலிருந்து நீக்கும்
எவ்வாறு பெரும்பாவமாயினும்
தயவாக அதை மன்னித்தருளும்.

Popular Posts

My Favorites

நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியம் உள்ளவர்கள்

அக்டோபர் 16 "நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியம் உள்ளவர்கள்" தீத்து 2:14 தேவனுடைய சுத்தக் கிருபையால் நாம் இரட்சிக்கப்பட அவருடைய மகிமையைத் தேட வேண்டும். நற்கிரியைகளுக்காகத்தான் நாம் கிறிஸ்து இயேசுவில் புது சிருஷடிகளாக்கப்பட்டோம். தேவனுடைய செயல்களில் சிருஷ்டிகளாகிய நாம்...