தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 2

நீர் உண்மையாய் நடப்பித்தீர்

நவம்பர் 03

“நீர் உண்மையாய் நடப்பித்தீர்” நெகே. 9:33

தேவன் எதையும் உண்மையாகவே நடப்பிப்பார் என்பது யாருமே ஒப்புக்கொள்ளுவதுதான். ஆனால் துன்ப நேரத்தில் இது உண்மை என்று உணர்ந்து அதை நம்பி நடப்பது நம்மால் முடியாமற் போகிறது. கர்த்தர் தாம் ஏற்படுத்திய முறைபடியே என்றுமே செயல்படுவார். அவருடைய உண்மையும் ஒழுங்கும் அவருடைய ஞானத்திலிருந்தும், அன்பிலிருந்தும் பிறக்கின்றன. அவர் தாம் செய்யப்போகிறதெல்லாவற்றையும் ஏற்கெனவே தீர்மானித்துள்ளார். தமது தீர்மானங்கள் யாவும் நல்லவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

நாம் பணப்பிரியம், தற்பிரியர், திருப்தியற்றவர்கள், ஏழைகள். நாம் தேவனுடைய செயல்களை மனதிருப்தியுடன் ஏற்றுக்கொள்வதில்லை. காரணமின்றி எல்லாக் காரியங்களிலும் முறுமுறுக்கிறோம். நாம் தேவனைப் புரிந்துக்கொள்வதில்லை.

ஆனாலும், சிலவேளைகளில் நமக்கு வரும் இழப்புகள், துன்பங்கள், சோதனைகள் கண்ணீர்போன்று துயர நேரங்களில்தான் தேவரீர் எல்லாவற்றையும் உண்மையாய் நடப்பிக்கிறீர் என்று அறிக்கையிடுகிறோம். எகிப்தில் யாக்கோபு, யோசேப்பை அணைத்துக்கொண்டபோது இவ்வாறு உணர்ந்தான். யோபு இரட்டத்தனை ஆசீர்வாதங்களைப் பெற்றதுபோதுதான் இதை உணர்ந்தான்.

தானியேல் சிங்கங்களிடமிருந்து மீட்கப்பட்டபோது விசுவாசித்ததினால் இதை உணர்ந்தான். சோதனைக்குள் நாம் இருக்கும்போது இவ்வாறு நாமும் அறிக்கை செய்வது மிகவும் அவசியம். ஆண்டவர் நம்மை சோதிக்கும்போது நீர் உண்மையாய் நடப்பித்தீர் என்று உணர்ந்து சொல்வோமாக. இத்தகைய விசுவாசம் நமக்குள் வளர வேண்டும்.

கர்த்தர் செய்வதெல்லாம் நலமே
முடிவை நாமறியோம் அவர் அறிவார்
அவர் செய்வதெல்லாம் நமக்கு
முடிவில் பாக்கியமாகவே நிகழும்.

அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்

நவம்பர் 14

“அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்” அப். 9:11

பவுல் பரிசேயனாக இருந்தபொழுது எழுதப்பட்ட ஜெபங்களைமட்டும் வாசித்து வந்திருப்பான். இப்பொழுதுதான் அவர் மெய்யாகவே ஜெபம் செய்கிறான். இயேசு கிறிஸ்துவில் அவன் புதிய மனிதன் ஆனபடியினாலே அவனுடைய ஆவி புத்துயிரடைந்தது. ஆண்டவர்தாமே அவனுக்குப் போதகர். தனக்கு இரட்சிப்பு வேண்டும் என்று உணர்ந்து, அதற்காக ஜெபம்பண்ணினான். மறுபிறப்பு வேண்டும் என்று உணர்ந்து, அதற்காக ஜெபம்பண்ணினான். மறுபிறப்பு அடைந்தவர்கள்தான் மெய்யாகவே ஜெபம் செய்வார்கள். உயிர்ப்பிக்கப்பட்ட ஆத்துமாக்கள் தங்கள் இருதயதாபங்களைக் கர்த்தருக்கு முன்பாக ஊற்றிவிடுவார்கள். ஜெபம் இல்லாவிட்டால் தாங்கள் கெட்டுப்போவார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். ஜெபம் செய்யாவிடில் அவர்கள் சுமக்கும் பாரச் சுமைகளே அவர்களை நசுக்கிப்போடும். அவர்களது இதயம் நிறைந்திருக்கிறபடியால், உள்ளே உள்ள கருத்துக்களை வெளியே கொட்டவேண்டும். ஆதலால் நாம்  ஜெபிக்கும்பொழுது ஜெபத்தில் நம் எண்ணங்களைச் சொல்லி ஜெபிக்க வேண்டும்.

வார்த்தைகள் வராவிட்டாலும் ஜெபிக்கலாம். ஏன் என்றால் ஜெபம் உள்ளத்திலிருந்து வருவது. உதடுகளிலிருந்தல்ல. இதை வாசிக்கும் நண்பனே, இதற்குமுன் நீ ஜெபம் செய்யவில்லை. அக்கிரமத்திலும், பாவத்திலும் செத்துக் கிடந்தாய். பரிசுத்த ஆவியானவரால் நீ உயிர்ப்பிக்கப்பட்டபொழுது, ஜெபம் செய்ய ஆரம்பித்தாய். ஆனால் இப்பொழுது அனலற்றுப் போனாய். நீ ஜெபிக்காவிட்டால் பிழைக்கமாட்டாய். கர்த்தர் தமது மக்ள் செய்யும் ஜெபங்களைக் கேட்டு, ஆச்சரியப்பட்டு, சபையைத் துன்புறுத்தின ஒருவனின் ஜெபத்தைக் கேள் என்று கூறுகிறார். ஜெபிக்கும் ஆத்துமாவை அவர் கவனிக்கிறார். ஆகவே, நீயும் இடைவிடாமல் ஜெபம் செய். ஜெபிக்கும் மனதைத் தாரும் என்று தேவனிடம் கேள்.

ஜெபமே ஜீவன்
ஜெபம் ஜெயம்
ஜெபிக்கும் அவா
தாரும் தேவா.

நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்

யூன் 23

“நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்.” நீதி. 11:28

இவர்கள் இயேசு கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்டவர்கள். அவர்களுக்குக் கர்த்தர் தமது நீதியைக் கொடுக்கிறார். அவர்களில் அவர் தம்முடைய ஆவியை வைத்திருக்கிறார். கிறிஸ்துவினால் நீதிமான்களாய் தேவ சமுகத்தில் நிற்கிறார்கள். அவர்கள் மனிதர்முன் நேர்மையாய் நடந்து தேவ மகிமைக்காக கனி கொடுக்கிறவர்கள். மரத்தின் வேருக்கும் கிளைகளுக்கும் உள்ள உறவுப்போன்று அவர்கள் இயேசுவோடு இணைக்கப்பட்டு, ஐக்கியம் கொள்கின்றனர். அவரால் ஆதரிக்கப்பட்டு, அவருடைய நிறைவிலிருந்துத் தங்களுக்குத் தேவையானதப் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் ஜீவன், அழகு, பெலன், செழிப்பு ஆகியவைகளுக்கு அவர்தான் ஊற்று. கிறிஸ்துவை விட்டுப் பிரிந்தால் அவர்கள் கனியற்று வாடிப் பட்டுப்போய்விடுவார்கள்.

அத்திமரச் சாறானது எப்படி கிளைகளுக்கு போகிறதோ அப்படியே அவர்களுக்கு வேண்டியதை அவர் கொடுக்கிறார். மேலும் தமது கிருபையாகிய பனியையும், ஆசீர்வாதமாகிய மழையையும், அவர்கள்மேல் பொழியப்பண்ணுகிறார். ஆகவே, இவர்கள் செழிப்பாகி கனி கொடுத்து வளர்கிறார்கள். அவர் அவர்களைத் துன்பத்தினால் நெருக்கினாலும் அதிக கனிகளைக் கொடுக்கும்படித்தான் அப்படி செய்கிறார். கோடைக்காற்று கிளைகளை ஒடித்து, மூடுபனி அவைகளை முறித்தாலும், அவர்களின் ஜீவனோ வேரில் இருக்கும். அது கிறிஸ்துவோடு தேவனில் மறைந்திருக்கிறது. அன்பர்களே! கிறிஸ்துவோடு ஐக்கியப்பட்டிருப்பதனால் நாம் செழிப்புள்ளவர்களாகிறோம் என்பதை கவனியுங்கள். நமது மார்க்கம் மெய்மார்க்கம் என்பதற்கு இது அத்தாட்சி.

நீதியின் விருட்சங்களாய்
ஒங்கி வளருவோம்
விசுவாசம் அன்போடு
பரதீசில் கனிகொடுப்போம்.

இப்பொழுது ஆக்கினைத்தீர்ப்பில்லை

மார்ச் 06

“இப்பொழுது ஆக்கினைத்தீர்ப்பில்லை.” ரோமர் 8:1

ஒவ்வொரு விசுவாசியும் கிறிஸ்துவில் இருக்கிறான். அவரோடு ஐக்கியப்பட்டு அவருடைய செயல்களுக்குப் பிரயோஜனப்பட்டு அவருடைய நீதியால் உந்தப்பட்டு அவருடைய ஆவியால் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறான். இப்படிப்பட்ட மனிதருக்கு ஆக்கினைத்தீர்ப்பு இல்லை. பாவம் பெருத்திருக்கலாம். சந்தேகங்கள் அதிகம் இருக்கலாம். நமக்குள் பாவசிந்தை இருந்;தாலும் அது நம்மை மேற்கொள்ள முடியாது. விசுவாசி எவனும் தேவனால் கைவிடப்படுவதில்லை. அவன் கிறிஸ்துவுக்குள் ஒன்றாய் இருப்பதினால் குற்றத்திலிருந்து விடுதலையாகி தேவனோடு நீதிமானாயிருக்கிறான். தனது சொந்தப்பிள்ளை என்று தேவனால் அங்கீகரிக்கப்படுகிறான். கிருபைக்கம் மகிமைக்கும் சுதந்தரவாளியாகிறான். பாவம் செய்தால் தேவனால் தண்டிக்கப்படுகிறான். தண்டனைப் பெற்றால் தன் குற்றங்களை அறிக்கை செய்கிறான். அப்படி செய்வதால் உண்மையும் நீதியுமுள்ள தேவன் அவனுக்கு மன்னிப்பளித்து, கிறிஸ்துவானவர் நிறைவேற்றின கிரியை தன்னுடையது என்று சொல்லி விடுதலையடைகிறான். ஒருவனும் அவனைக் குற்றவாளி என்று தீர்க்க முடியாது. கிறிஸ்து ஒருவர்தான் அவனுக்காக மரித்தபடியால், அவர் மட்டும்தான் அவனைக் குற்றவாளியாக தீர்க்க முடியும்.

அவரே அவனுக்குப் பரிகாரியாய் உயிர்த்தெழுந்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருந்து அவனுக்காய்ப் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவர் அவனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதில்லை. இது பாக்கியமான கிருபை. நீ குற்றவாளியாக தீர்ப்பு பெறுகிற பாவியல்ல. குற்றமற்றவன் என்றும் விடுதலையடைந்த தேவ பிள்ளை என்றும் நினைத்துக் கொண்டே உறங்கச்செல். இது தேவன் தன் பிள்ளைகளுக்குத் தந்த அதிசயமான கிருபை.

ஆக்கினை உனக்கில்லை
தேவன் தாமே சொன்னாரே
கிறிஸ்து மகிமையுள்ளவர்
உன்னையும் மகிமைப்படுத்துவார்.

தேவனை ஸ்தோத்தரித்து தைரியம் அடைந்தான்

நவம்பர் 07

“தேவனை ஸ்தோத்தரித்து தைரியம் அடைந்தான்” அப். 28:15

பவுலுக்கு அவன் சிநேகிதர்கள் காட்டின அன்பு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்து இதற்காக அவன் தேவனைத் துதித்து தைரியம் அடைந்தான். நாம் பெற்றுக்கொள்ளும் எல்லா நன்மைகளுக்காகவும் நாம் நன்றி கூற வேண்டும். நன்மையான எதுவானாலும் தேவனிடத்தில் இருந்துதான் வருகிறது. சகல நன்மைகளுக்கும் அவர்தான் காரணர். ஆகவே, ஒவ்வொரு நாளும் அவருக்கு துதிகளைச் செலுத்த வேண்டும். அவர் நம்மை மோசங்களிலிருந்து காத்து, துன்பங்களிலிருந்து விடுவித்து, தயவாக நன்மைகளைக் செய்கிறார். ஆகவே இப்போது நாம் அவருக்கு நன்றி சொல்லுவோம்.

இனிமேல் நமக்கு நேரிடும் குறைவுகளில் நமக்குத் தேவையானதைத் தருவார். நமக்காக சிறப்பான வாக்குகளைக் கொடுத்திருக்கிறார். சகலமும் நமது நன்மைக்காக கிரியை செய்ய நிச்சயம் செய்திருக்கிறார். தேவன் நம்மைக் கைவிடுவதில்லை என்று வாக்களித்திருக்கிறார். ஆகவே, தைரியமடைந்து துதி செலுத்தி, நன்றியுள்ளவர்களரிருப்போம். நமது வழி கரடு முரடானதாக இருக்கலாம். சத்துருக்கள் நிறைந்ததாக இருக்கலாம். துன்பங்கள் சூழ்ந்ததாக இருக்கலாம். ஆனாலும், நம்முடைய பெலன் அதைத் தாங்க போதுமானதாக இருக்கலாம். நமக்குத் தேவையானது கட்டாயம் கிடைக்கும். நமது காரியத்தை அவர் வாய்க்கப்பண்ணுவார். இனி சாத்தான் சொல்வதைக் கேளாதே. அவிசுவாசத்திற்கு இடங்கொடாதே. நமக்கு இனி என்ன நடக்கும் என்று பயப்படாதே. இதுவரையில் நம்மை விடுவித்தவர் இன்னும் நம்மை விடுவிப்பார். இதுவரை கர்த்தர் செய்தவைகளை எண்ணிப்பார். உனக்கு அவர் காட்டின இரக்கத்தை சிந்தி. அவர் வாக்குகளை நினை. அதற்காக நன்றி கூறு.

இயேசுவே மீட்டு வழிநடத்தும்,
உம்மை நம்பி நடப்பேன் உம்மோடு
உம் நடத்துதலுக்காக நன்றி
உம் வாக்குகளுக்காக நன்றி.

அவர் தமது சித்தத்தின்படியே நடத்துகிறார்

டிசம்பர் 14

அவர் தமது சித்தத்தின்படியே நடத்துகிறார் (தானி.4:35)

தேவனுடைய சித்தம் நிறைவானது. அது எல்லாவற்றையும் ஆண்டு நடத்துகிறது. தேவன் தமக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்கிறார். நமது வாழ்க்கையில் நடப்பதை கவனித்தால், தேவன் என்ன செய்கிறார் என்பது விளங்கும். தம்முடைய வல்லமையான செயலினால் அவர் நடத்துவதை பார்த்தால், அவர் தமது சித்தப்படி செய்யப்போகிற கிரியை வெளிப்படும். எந்தக் காரியத்திலும் தாம் மகிமைப்படவேண்டும் என்பதுதான் தேவனுடைய திட்டம். தமது மக்கள் தம்மோடு இருப்பதனால், அவர்களையே மகிமைப்படுத்த விரும்புகிறார். தேவன் அவர்களை மேன்மைப்படுத்துவதினால் அவர்கள் நன்மைகளைப் பெறுகிறார்கள். தேவனுடைய சித்தம் நடக்கும்போது அவர் துதிக்கப்படுகிறார்.

மனிதர் செய்யும் தவறுகளின் மத்தியில் தம்முடைய சித்தத்தை தேவன் அமைதியாக நடத்துகிறார். எவரும் புரிந்துகொள்ள முடியாமல் அவர் தமது நோக்கத்தை நிறைவேற்றுகிறார். அவருடைய சித்தம்தான் சட்டம். அவருடைய நோக்கம்தான் வாழ்க்கையின் திட்டம். அவருடைய சித்தத்திற்கு விரோதமாய் நின்றால், அது தேவனுக்கு விரோதமாக நிற்பது ஆகும், முறையற்றதாகும். நிர்பந்தமான நிலையாகும். தேவனுடைய சித்தத்தில் சர்வ வல்லமை சேர்ந்துள்ளது. அவருடைய சித்தம் செயல்ப்படத் துவங்கினால், அதில் நேர்த்தியும், நலமும் இருக்கும். பூமியின் குடிகள் யாவர்மீதும் அவர் சித்தம் நடக்கிறது. அனைத்து அண்டங்களிலும் நடப்பது அவருடைய சித்தமே, எவராலும் அதைத் தடுத்து நிறுத்த இயலாது. விசுவாசியே, உனது வாழ்க்கையில் தேவசித்தம் நடக்க இடம் கொடு. நீ பரிசுத்தமடைய வேண்டுமென்று அவர் விரும்புகிறார். அவருடைய சித்தம் அது. அவ்விதமும் அதை அவர் செய்து முடிப்பார்.

வான் புவி கடலெங்கும்
விளங்கிடும் தேவ சித்தமே,
உம் சித்தம் என் பாக்கியம்
என்றிருப்பதே உன் யோக்கியம்.

“அவனையேநோக்கிப் பார்ப்பேன்”

ஜனவரி 01

“அவனையேநோக்கிப் பார்ப்பேன்” ஏசாயா 66:2

எவனைநோக்கிப் பார்ப்பேன்? சிறுமைப்பட்டவனை, ஆவியில் நொறுங்குண்டவனை, தமது வசனத்துக்கு நடுங்குகிறவனை, சிங்காசனத்தில் வீற்றிருக்குமுன் தான் ஓன்றுமேயில்லை என தாழ்த்துகிறவனை, தன் பாவங்களை நினைத்து மனந்திரும்புகிறவனை, குற்றங்களை நினைத்து உண்மையாக மனஸ்தாபப்படுகிறவனை, தன் வாழ்வில் எல்லாமே இயேசுவால் மட்டுமே கிடைக்குமென்று அவரை நோக்குகிறவனையே.தேவாதி தேவன் நோக்கிப் பார்ப்பேன் என்கிறார்.

கர்த்தர் இப்படிப்பட்டவர்களைக் கவனித்துப் பார்க்கிறார். இவர்களைப் பார்த்து உள்ளம்பூரிக்கிறார். அகமகிழ்கிறார். தேவ அன்பை இவர்கள்மேல் அதிகம் ஊற்றுகிறார். இவர்கள்வாழ்க்கையையும் வழிகளையும் ஆசீர்வதிக்கிறார். தம்முடைய சிநேகிதராக இவர்களைச் சந்தித்துப் பேசி சஞ்சரிக்கிறார். இவர்களுடைய ஜெபங்களுக்குக் கட்டாயம் பதில்கொடுக்கிறார். இவர்களின் பொருத்தனைகளையும் வேண்டுதல்களையும் ஆவலாய் அங்கீகரித்துக்கொள்ளுகிறார். இப்படிப்பட்டவர்களைத் தமது மகிமைக்கு அலங்காரமாக பயன்படுத்தி மேன்மைப்படுத்துகிறார். கிதியோனைப்போல வல்லமையாய் பயன்படுத்தி பேதுருவைப்போல சீர்படுத்துகிறார். இவ்விதமக்கள்மேல் கர்த்தர் தமது நேசமுகப்பிரகாசத்தைத் திருப்புவார்.

என் ஆத்துமாவே, இன்று நீ கர்த்தரை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தாயா? அவரை உன் ஆசைத் தகப்பனாகப் பார்த்தாயா? உன் இரட்சகராக அவரை பார்த்தாயா? பார்த்திருப்பாயானால் அவர் தகப்பனுக்குரிய பட்சத்தோடு உன்னையும் பார்ப்பார். இப்போதும் உன்னை அப்படியே பார்த்துக்கொண்டிருக்கிறார். கர்த்தர் நம்மை பார்க்கிறது என்ன ஓர்ஆனந்தம்! என்ன ஒரு பேரின்பம்! தேவன் நம்மை கண்ணோக்குகிறார். உலக ஆஸ்தியைவிட மனித புகழைவிட, அன்போடு கண்ணோக்குகிறார் என்று நினைத்துக் கொண்டே இன்றையநாளில் இருப்பாயாக.

அவர் அன்பும் தயவும்

தேவமீட்பில் விளங்கும்

பாவங்களை மன்னித்து

அக்கிரமங்களை மறந்தார்.

கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்து

மார்ச் 17

“கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்து.” 1.நாளா. 16:29

தேவன் தமது நாமத்தை அவருடைய வல்லமையான கிரியைகள் எல்லாவற்றின் மேலும், அன்பான ஈவுகள் எல்லாவற்றின் மேலும் தயவாய் மாட்சிமையாய் வரைந்திருக்கிறார். தேவ நாமத்தை நாம் நன்கறிய வேண்டும். அதிலும் சுவிசேஷத்தை ஆராய்ந்தறிய வேண்டும். தேவன் தமது நாமத்தை, பாவங்களைக் குணமாக்குதலிலும், நீதிமான்களாக்கப்படுவதிலும், பரிசுத்தவான்களாக்கப்படுவதிலும், மகிமைப்படுத்துவதிலும் வரைந்திருக்கிறார். தமது மகிமையான தன்மைகளையும், குணநலன்களையும் விளக்கி வெளிப்படுத்துகிறார். தேவன் தமது நாமத்தை தம்முடைய வசனத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதை உபதேசங்களிலும், வாக்குத்தத்தங்களிலும், கட்டளைகளிலும், இனி வெளிப்படப்போகிற காரியங்களிலும் நாம் வாசிக்கிறோம்.

யேகோவாவின் நாமத்தை நாம் சரியானபடி வாசித்து அறிவோமானால், ஆச்சரியத்தோடும் நிரப்பப்படுவோம். அப்படி நிரப்பப்படும்போது நமது ஜெபங்களிலும், துதிகளிலும், நடக்கைகளிலும் அவரை மகிமைப்படுத்துவோம். அவருடைய நாமத்திற்குரிய பிரகாரம் அவரை மகிமைப்படுத்த நமது திறமைகளும், காலமும் போதவே போதாது. அவரை மகிமைப்படுத்துவது நமது கடமை. இருதயம் மட்டும் சுத்தமாய் இருக்குமானால் அது நமக்கு இனிமையாய் இருக்கம். நாம் அடிக்கடி தேவமகிமையை அசட்டை செய்கிறோம். தேவனுக்குரியதை நாம் செலுத்தாமல் போவதால் ஆத்துமாவுக்கரிய ஆறுதலை நாம் அனுபவிக்க முடியாமல் இருக்கிறோம். அவரு நாமத்திற்கரிய மகிமையை அவருக்குச் செலுத்த நாம் கற்றுக்கொள்வோமாக.

வான் கடல் பூமி யாவும்
உம் நாமம் துதித்து போற்றும்
உமது நாமம் கற்போம்
அப்போது ஞானிகள் ஆவோம்

கர்த்தரில் அன்பு கூறுகிறவர்களோ தீமையை வெறுத்துவிடுங்கள்

ஜனவரி 18

“கர்த்தரில் அன்பு கூறுகிறவர்களோ தீமையை வெறுத்துவிடுங்கள்.” சங்கீதம் 97:10

தெளிவான கடமைகளைக் குறித்து நமக்குப் புத்தி சொல்வது அவசியந்தான். ஏனென்றால் சில வேளைகளில் நாம் அவைகளை மறந்துபோகிறோம். அடிக்கடி கவலையுற்று வெதுவெதுப்பான சிந்தனைகளுக்கு இடங்கொடுத்து விடுகிறோம். நாம் கர்த்தரை நேசிப்பது உண்மையானால் அவரின் ஜனங்ளை நேசிப்போம். அவருடைய நியமங்களையும் அவருடைய சுவிசேஷத்தையும் நியாயப்பிரமாணத்தையும் நேசிப்போம். நமக்குச் சேதமுண்டாக்குகிறதைத்தான் அவர் விலக்குகிறார் என அறிந்து, அவரின் வாக்குத்தத்தங்களையும் நேசிக்கிற அளவிலேயே அவர் வேண்டாமென்று விலக்குகிறதையும் நேசிப்போம். இந்த நாளில் தாவீதைப்போல் ‘நான் உம்முடைய பிரமாணத்தை எவ்வளவாய் நேசிக்கிறேன். நாளெல்லாம் அது என் தியானம்’ என்று நாம் சொல்ல முடியுமா?

தேவபிரமாணம் தீமையான யாவையும் விலக்குகிறது. ஆகவே நாம் தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து பாவத்தையும், தீமையையும் அவர் வெறுக்கிற விதமாகவே வெறுத்து விலக்குவோமாக. தீயநினைவுகளை எதிர்த்துப் போராடுவோமாக. கெட்ட வார்த்தைகளை விலக்கி கடிவாளத்தினால் வாயை காப்போமாக. கெட்ட செய்கையை விலக்கி பொல்லாப்பாய் தோன்றுகிறதைவிட்டு விலகுவோமாக. இருதயம் பொல்லாங்குள்ளதும் அதிக கேடானதுமானது. எல்லா பொல்லாங்குகளும் அதிலிருந்து வருகிறது. முக்கியமாய் தேவனை விட்டு விலகுகிற அவிசுவாசமுள்ள இருதயத்தைப்பற்றி எச்சரிக்கையாய் இருப்போமாக.

நண்பரே! தீமையைப் பகைக்க உனக்கு மனதிருக்கிறதா? அப்படியானால் தேவனோடு நெருங்கி பழகு. அப்போது பரிசுத்த வாழ்வு உனக்குச் சுலபமாகிவிடும். அப்போது எந்தப் பொல்லாப்பையும் வெறுத்துத் தள்ளுவாய். கர்த்தரின் தாசர்களே, பொல்லாப்புக்கு முழு மனதோடு பயப்படுங்கள். யாவரோடும் சமாதானமும் பரிசுத்தமாயுமிருங்க நாடுங்கள். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனைத் தரிசிக்க முடியாதே.

நேச பிதாவே உம்மில்
எனக்கு எல்லாம் சொந்தம்
என்னையும் தந்தேன் உமக்கு
இதுவே எனக்கானந்தம்.

உன் நோய்களையெல்லாம் குணமாக்கி.

யூலை 06

“உன் நோய்களையெல்லாம் குணமாக்கி.” சங். 103:3

கர்த்தர் ஒருவரே பரிகாரி. அவரே சரீரத்தையும், ஆத்துமாவையும், குணமாக்குகிறவர். விசேஷமாய் அவர் ஆத்துமாவுக்கும் பரிகாரி. எல்லா வியாதிக்கும் துன்பத்துக்கும் காரணம் பாவமே. பாவத்துக்கு இருப்பிடம் இருதயமே. இந்த வியாதி வுருத்தமானதும் அருவருப்பானதும் ஆகும். இது ஞாபகத்தையும் பாசத்தையும், மனசாட்சியையும், சித்தத்தையும் முழு மனுஷனையும் கெடுக்கும். நம் எல்லாருக்கும் இந்த வியாதி உண்டு. இதனால் நாம் யாவரும் வருத்தப்படுகிறோம். கர்த்தராகிய இயேசுதான் நம்மைக் குணமாக்க முடியும். அவர் பெரிய பரிகாரி.. அவரிடத்தில் போனால் சுகமடைவோம்.

இப்படி நீங்கள் தைரியம் கொள்ளும்படி அவர் எப்படிப்பட்டவர் என்று கவனியுங்கள்.அவர் அளவற்ற ஞானமும், உருக்கமும், திறதையும் உள்ளவர். அவரைப்போல் அனுபவம் மிக்க வைத்தியர் எவருமில்லை. அவர் தொட்டால் எந்த வியாதியானாலும் சுகமாகிவிடும். அவரின் ஒளடதமோ திரு இரத்தம், திரு வசனம், பரிசுத்தாவியானவர் என்பவைகள். துன்பங்களாலும், நஷ்டங்களாலும், மெய் உணர்வினாலும், இரகசிய கிரியைகளினாலும் இவைகளை நம்மில் பெலன் செய்யப்பண்ணுகிறார். அவர் சிகிச்சை அளித்து சுகமடையாமல் இருப்பது யாருமல்ல. தாவீதின் வியாதி கொடியதாயிருந்தாலும், என் நோய்களையெல்லாம் குணமாக்கினார் என்கிறான். இதை உணர்ந்து சொல்கிறான். ஆனால் இதை நம்பலாம். நீ பாவியானால் நீ வியாதிஸ்தன். உன் வியாதி மோசமானது. நீ இயேசுவண்டை போ. சத்தியத்தைவிட்டு விலகினவனே, நீ வியாதியாய் இருக்கிறாய். நீயும் இயேசுவண்டைக்கு போ. விசுவாசியே, நீ முற்றிலும் சுகமாக வேண்டுமென்று விரும்புகிறதில்லையா? அப்படிhனால் இன்றே இரட்சகரண்டைக்குப் போ. கர்த்தாவே உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று சொல்.

மன்னித்துக் கிருபை அளித்து
பாவப் பிணியை நீக்கும்
ஆத்தும சுகம் ஈந்து
பூரண சுத்தம் தாரும்.

Popular Posts

My Favorites

பயப்படாமலும் கலங்காமலும் இரு

மார்ச் 18 "பயப்படாமலும் கலங்காமலும் இரு." உபா. 1:21 கர்த்தர் நம்மை சோதித்தாலும் நமக்குத் தைரியம் கொடுக்கிறார். அவர் தமது வசனத்தில் முன்னூற்று அறுபத்தாறு முறைக்குமேல் பயப்படாதே என்கிறார். ஆனால் நாமோ அடிக்கடி பயப்படுகிறோம். இதை...