துண்டு பிரதிகள்

Home துண்டு பிரதிகள்

விலை மதிப்பிடமுடியாத முத்து

நம் நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதியை ஒட்டியுள்ள ஒரு சிறிய கிராமத்தில் சாபு என்கிற வயதான முத்துக்குளிப்பவன் தனியே வசித்து வந்தான். ஒரு நாள் முத்துக்குளியல் முடித்துக்கொண்டு கரையை அடையும்போது, தன் நெருங்கிய நண்பர் நிற்பதை அடையாளம் கண்டுகொண்டதும் பெரு மகிழ்ச்சியடைந்தான். ஏனெனில், இருவரும் அடிக்கடி சந்தித்து மத சம்பந்தமான விஷயங்களை பேசுவர். சாபு இந்துமதப் பற்றுடையவனாக இருந்த போதிலும், தன் கிறிஸ்தவ நண்பரிடம் அன்போடு பழகுவான்.

இப்போது படகு தன் துறையை அடைந்துவிட்டது. நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்தபின், சாபுவின் குடிசையை நோக்கி பேசிக்கொண்டே நடந்தனர். ‘சாபு, உன்னைப் பார்க்கும்போது, மிகவும் சோர்ந்திருப்பதுடன், வயதாகிவிட்டபடியால் உன் நடையும் தள்ளாடுகிறது, இதுவே நீ கடைசி முறையாக முத்துக்குளிக்கச் சென்றதோ? என எண்ணுகிறேன்’ என்றதும், ‘ஆம், இனி இந்த கடலோரப் பகுதியில் நான் நடமாடப் போவதில்லை. மேலும், நான் விருத்தாப்பியம் அடைந்ததால் முத்துக்குளிப்பதும் சிரமமாக உள்ளது. என் வாழ்க்கையின் ஒரே இலட்சியம் நிறைவேறப்போகும் நாள் மிக அருகாமையில் இருக்கிறது, பல நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள கங்கை நதியில் நீராடி மனநிம்மதியடையப்போகிறேன். ஏனெனில் என் வாழ்நாள் எல்லாம் எதற்காக ஏங்கினேனோ அது விரைவில் நிறைவேறப்போகிறது” எனச் சொல்லி அளவிலா மகிழ்ச்சியடைந்தான்.

சாபுவின் கிறிஸ்தவ நண்பர், பலமுறை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அவனுக்கு தெளிவுபடுத்தியிருந்தார். மீண்டும் அதை அன்போடு விவரிக்க ஆரம்பித்தவர், பாவ மன்னிப்பானது எந்த புண்ணிய நதியில் நீராடுவதாலும் கிடைப்பதல்ல. ஆனால், பாவங்கள் மன்னிக்கப்பட ஒரே வழி யாதெனில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலமாக மட்டும் தான் கிடைக்கக் கூடியது. மேலும், இயேசுவானவர் நமக்கு இந்த மாபெரும் மீட்பையும், சந்தோஷத்தையும் இலவசமாக வழங்குவதற்காக சிலுவையில் தன்னுடைய ஜீவனைக் கொடுத்ததை விளக்கினார்.

இதை அடிக்கடி கேட்ட சாபு, நகைப்புடன் “நீர் சொல்லும் கிறிஸ்தவம் இலகுவானது, ஏனெனில் விசுவாசிப்பவனுக்கு இலவசமாக கிடைக்கிறதே ! நான் இரட்சிப்பை பிரயாசப்பட்டு சம்பாதிக்க விரும்புகிறேன்’ என்றான். இந்நேரத்தில் சாபுவின் சிறிய குடிசையை அடைந்துவிட்டார்கள். தன் நண்பரை அன்போடு வரவேற்றான் சாபு.

“நான் புண்ணிய யாத்திரை புறப்பட போவதால், நம் நட்பின் அடையாளமாக ஒரு வெகுமதியை உங்களுக்கு கொடுக்கப் போகிறேன்” என்றவன், குடிசையின் ஒரு மூலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறு துணி உருண்டையை தேடிக் கொண்டு வந்து மெதுவாகப் பிரித்தான். என்ன ஆச்சரியம்! சாபுவின் உள்ளங்கையில் நன்கு இழைக்கப்பட்ட, பிரகாசமான முத்து ஜொலிப்பதைக் கண்ட அவனுடைய நண்பரின் மூச்சு ஒரு விநாடி நின்று விட்டது. “எவ்வளவு அழகான ஒப்பற்ற முத்து ! இது அரசரின் கிரீடத்தில் பதிக்கப்பட வேண்டியது,” என்று அவர் சொன்னதும், சாபு ஆம், நான் என் ஆயுள் காலத்தில் பார்த்த முத்துக்களில் இதுவே பழுதற்றது. இதை நான் ஒரு விசேஷமான காரணத்திற்காக வைத்திருந்தேன். எனக்கொரு மகன் இருந்தான், அவன் முத்துக்குளிப்பதில் மிகவும் திறமைசாலி. பல மணி நேரம் மூச்சடக்கும் சக்தியுடையவனான அவன், ஒரு நாள் ஆழமான இடத்திற்குச் சென்று தேடிக்கொண்டு வந்ததுதான். இந்த விலையேறப்பெற்ற முத்து.’ எனக் கூறிவிட்டு அழஆரம்பித்தான் சாபு. ‘நண்பரே, நீண்ட நேரம் தண்ணீரில் இருந்ததால் அவன் நுரையீரல் பாதிக்கப்பட்டு மரணமடைந்தான்’, என்றவன், “நான் உமக்கு வெகுமதியாகக் கொடுக்கும் முத்தின் விலை மதிப்பு என் அன்பு மகனின் உயிர்” என்று கூறி கண்ணீரை துடைத்துக்கொண்டான்.

“இதையா எனக்குக் கொடுக்கப்போகிறாய்? வேண்டாம், இதை இலவசமாக பெற்றுக்கொள்ளமாட்டேன். யாரிடமாவது கடன் வாங்கியோ, அல்லது எப்படியாவது பாடுபட்டு வாங்கிக்கொள்கிறேன் ஆனால்,வெகுமதியாக இதை நான் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை” என்றார்.
‘நண்பரே, நீர் இதற்கு போதுமான தொகையை கொடுக்கவே முடியாது. ஏனெனில், இது விலை மதிப்பிட முடியாதது. அத்தோடு என் அன்பு மகன் தன் உயிரையே கொடுத்து சம்பாதித்ததல்லவா ! இதன் விலை என் மகனின் உயிர்’ என்றான் சாபு.

“சாபு, சற்று முன் சொன்னது என்ன? கிறிஸ்தவம் மிகவும் இலகுவானதும், இலவசமானதும் என்றல்லவா ! எதையாவது கொடுத்து சம்பாதிப்பதுதான் மதம் என்பது உன்னுடைய தவறான கருத்து. அருமையான நண்பா, உன்னுடைய இரட்சிப்புக்காக தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து தன் உயிரையே ஈடாகக் கொடுத்து அதை சம்பாதித்திருக்கிறார். நீ மீட்கப்பட்டு, சந்தோஷமுள்ளவனாக வாழ, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு மரித்து, பின் மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்தார். விசுவாசிக்கிற எவனும் எந்தக் கிரயமுமின்றி இலவசமாக இரட்சிக்கப்படலாம்’ என்றவர் கிறிஸ்தவம் ஒரு மதமல்ல என்பதையும் விவரித்தார். தொடர்ந்து, “இந்த முத்தின் விலை உன் அன்பு மகனின் உயிர் என்பது உண்மையே, அதுபோல தேவகுமாரனாகிய இயேசு இரட்சகர் தன் உயிரையே கிரயமாகக் கொடுத்து சம்பாதித்திருக்கும் இரட்சிப்புக்கு நீ விலை கொடுக்க முடியுமா? இது முற்றிலும் இலவசமான ஈவாகும்’ என்றார்.

வயதான சாபு கண்ணீரோடு, தேவனுடைய அன்பை எண்ணி தன்னையே அந்த அன்புள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு பரிபூரணமாக ஒப்புக்கொடுத்தான். அமைதியாக சிறிது நேரம் முழங்காலிலிருந்து எழுந்ததும், சாபுவின் நண்பர் தன்னிடமிருந்த தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமத்திலிருந்து கீழ்கண்ட பகுதிகளை உரக்கப் படித்தார். “….நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே. குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்’. (ரோமர் 5:6)

“தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்”. (1.யோவான் 5:11,12)

“கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல’. (எபேசி. 2:8,9)

காணாமல் போன படகு

ராஜூ திருப்தியோடு தனது கைவேலைப்பாட்டை ரசித்துக்கொண்டே இருந்தான். காரணம், தன் அயராத முயற்சியால் ஒரு சின்ன விளையாட்டுப் படகை ஒருவார காலத்துக்குள் மிக அழகாக செய்து முடித்திருந்தான். எத்தனை அழகு! என்ன அருமையாக உள்ளது .. என்று எண்ணிக்கொண்டு மகிழ்ச்சியடைந்தான்.

ஓ! இந்த அழகிய படகை ஆற்றங்கரையில் விட்டு விளையாடினால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று யோசித்த ராஜூ, அதிசீக்கிரமாக ஆற்றை நோக்கி ஓடினான். மூச்சிரைக்க ஓடிவந்தவன் ஆற்றங்கரையில் மகிழ்ச்சியுடன் அதனை மிதக்க விட்டான். அந்த சின்ன படகு அசைந்து அசைந்து செல்வதை கண்டு மிகவும் சந்தோஷமடைந்தான். ஆனால் அந்த நேரத்தில் எதிர்பாராமல் பலமாக அடித்த காற்றினால் அந்த படகு வேகமாக ஆற்றுப்போக்கிலே அடித்துச் செல்லப்பட்டது. எப்படியாவது தன் சின்ன படகை எடுக்க அவன் பெருமுயற்சி செய்தும், அது அவனுக்குக் கிட்டவில்லை. ஏமாற்றத்தோடு வெறுங்கையனாய் சிறுவன் ராஜூ கண்ணீரோடு வீடுவந்து சேர்ந்தான். தான் கஷ்டப்பட்டு செய்த பொருள் தன் கண் முன்னாலே போய்விட்டால் யாருக்கும் வருத்தம் இருக்கத்தானே செய்யும்?

இரண்டு நாட்களுக்குப் பிறகு கடைதெரு வழியாக நடந்து சென்ற ராஜூவிற்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. கடைத்தெருவில் ஒரு கடையில் விற்பனைக்காக கண்ணாடியில் வைக்கப்பட்டிருந்த ஒரு சின்னப் படகை கண்டான். அந்த அழகிய படகு ராஜூ செய்து விளையாடிய அதே படகுதான். அவன் கண்களையே அவன் நம்ப இயலாமல் போனது.

ராஜூ சந்தோஷத்துடன் அந்த கடைக்குள் நுழைந்து, கடைக்காரரிடம், மிகவும் உரிமையுடன் சொன்னான், “ஐயா, அந்த அழகிய படகு என்னுடையது. நான் கஷ்டப்பட்டு செய்தது. இதை நீங்கள் எனக்குத் தர வேண்டும்” எனக் கேட்டான். கடைக்காரர் அவனிடம் “தம்பி, இந்த படகை நான் ஒருவரிடம் ஐம்பது ரூபாய்க்கு வாங்கிவிட்டேன். நீ உன்னுடையது என்று சொல்வதால் நான் வாங்கின அதே விலைக்கு வேண்டுமானால் நீ இதனைப் பெற்றுக்கொள். இது உன் படகு என்று நீ சொல்வதினால் நான் இலவசமாய் இதை உனக்குத் தர முடியாதே” என்று கூறினார்.

நான் செய்த படகுக்கு ஐம்பது ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க வேண்டுமா? என்று ராஜூ சற்றும் யோசிக்கவில்லை. உடனே தன் வீட்டிற்கு ஒடினான். தான் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்திலிருந்து ஐம்பது ரூபாயை பொறுக்கி எடுத்து, வேகமாக அந்த கடைக்கு வந்தான். தொலைந்து போன அப்படகை திரும்பவும் தானே விலைகொடுத்து சந்தோஷமாக வாங்கிக் கொண்டு, தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு பெருமூச்சுவிட்டான்.

பிரியமானவர்களே, ராஜூவின் சிறிய படகைப் போலவே நாமும் இருக்கிறோம். ஆண்டவர் இயேசுதான் நம்மை உருவாக்கினார். ராஜூவின் படகு தொலைத்துவிட்டது போலவே நாமும் பாவம் செய்து நம்மை உண்டாக்கினவரை மறந்து அவரை விட்டு தூரம் போனோம். ஆனால் இன்று நம்மை உருவாக்கினவர், நம்மை அன்புடன் தேடி வந்துள்ளார்.

ராஜூ தன் படகை மீண்டும் விலை கொடுத்து வாங்கினது போலவே, ஆண்டவராகிய இயேசுவும் தன் சொந்த இரத்தத்தையே விலைக்கிரயமாக நமக்காக சிலுவையில் சிந்தினார். ஏன்? அவரால் சிருஷ்டிக்கப்பட்ட நாம் அவருக்கு சொந்தமாக வேண்டும் என்பதற்காகவே.

ராஜூ அந்த படகை அதிகமாக நேசித்ததாலே அந்த பணம் அவனுக்கு பெரிதாக தெரியவில்லை. தன் பொருளைத் திரும்பவும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதே அவனுக்கு பெரிதாக தெரிந்தது.

இதுபோலவே ஆண்டவராகிய இயேசுவும் நம் மேல் கொண்ட அளவற்ற அன்பினாலேயே தன் சொந்த உயிரை நமக்காகக் கொடுத்தார்.

ஓ! இறைவன் நம்மேல் வைத்த அன்பு எவ்வளவு பெரியது பார்த்தீர்களா? பாவத்தினால், அசுத்தத்தினால், இச்சையினால், அருவருப்பினால் இன்று உங்கள் வாழ்க்கையும் கூட தொலைக்கப்பட்டிருக்கலாம். கடவுளை விட்டு தூரம் போயிருக்கலாம். ஆனால் ஆண்டவராகிய இயேசு பாவத்தில் தொலைந்து போன உங்கள் வாழ்க்கையை மீட்கவே இன்று ஆவலுடன் உங்களை அழைக்கிறார்.

நீங்கள் அவருக்கு விரோதமாக எவ்வளவு கொடிய பாவங்களைச் செய்திருந்தாலும், இன்று மனம்வருந்தி அவரிடம் மன்னிப்பு கேட்டால், அவர் உங்களைத் தள்ளிவிடாமல், உங்கள் பாவங்களிலிருந்து நிச்சயம் உங்களை விடுவிப்பார்.

தன் சொந்த இரத்தத்தையே விலையாகக் கொடுத்து நம்மை மீட்கத் துணிந்த அவருக்கு நம் உள்ளத்தில் இடம் கொடுக்க நாம் தயங்கலாமா?

“என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுகிறது இல்லை” என்று கூறின இயேசு, நாம் இன்றைக்கு அவரிடத்தில் வந்தால் நம் பாவங்களை மன்னித்து, நமக்குப் பரிசுத்த வாழ்வினைத் தந்து, நம்மை ஆசீர்வதிக்க ஆவலுள்ளவராயிருக்கிறார்.

இன்னமும் தாமதம் ஏன் நண்பரே?

“இழந்து போனைதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்.” (லூக்கா 19:10)

“எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே.” (1தீமோத்தேயு 2:5,6)

தேவ அன்பின் செய்திகள் – மனமே மருளாதே!

மருந்தகம், சந்தடி அதிகமுள்ள அந்தச் சாலையின் பக்கத்தில் அமைந்துள்ளது ஓர் மருந்தகம். சேவையே தனது வாழ்க்கையின் குறிக்கோள் என்பதைச் சுட்டிக்காட்டும் வண்ணம் அந்த மருந்தகத்தில் ஒரு சிகப்பு விளக்கு எரிந்து கொண்டேயிருக்கும். இரவு பகல் பாராது மக்களுக்குச் சேவை புரிவதால் அம்மருந்தகத்திற்குமட்டும் ஒரு தனிச் சிறப்பு. சுமார் 35 வயது மதிக்கக்கூடிய வாலிபன் சுந்தர் ஓர் மருந்தாளுநன். தன் பணியில் எப்பொழுதுமே மிக உண்மையுள்ளவனும், மனச்சாட்சிக்குப் பயந்தவனும், மருந்துகளைப் பற்றிய நல்ல அனுபவமுள்ளவனுமாயிருந்தான். ஆனால், சில நேரங்களில் மருந்து பெறுமிடத்தில் அமர்ந்தவாறே அரைத் தூக்கத்தில் ஆழ்ந்துவிடுவான். அப்பொழுது மருந்து வாங்க வருவோரின் அவசர நடைச் சப்தம் கேட்டு விழித்துக் கொள்வான்.

ஒருநாள் இரவு! மிக நோய்வாய்ப்பட்டிருக்கும் தன் தாய்க்கு மருந்து வாங்க ஒரு சிறுமி மருந்துச் சீட்டைக் கொண்டுவந்து சுந்தரிடம் கொடுத்தாள். அரைத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்த சுந்தரோ வெறுப்போடுகூட, பல்வேறு மருந்துப்புட்டிகளை எடுத்து, வைத்திய நியமத்தின் விகிதாச்சார முறைப்படி கலந்து ஒரு புட்டியில் ஊற்றி, புட்டியின் மேல் ஒரு அடையாளச் சீட்டையும் ஒட்டி அச்சிறுமியிடம் கொடுத்தான். அதை வாங்கிய அச்சிறுமி அதிவேகமாக ஓடி மறைந்தாள். அச்சிறுமி சென்றவுடன் பல்வேறு மருந்துப்புட்டிகளை அதனதன் இடத்தில் எடுத்து வைக்கும் பொழுது சுந்தரைப் “பெரும் பயம்” ஆட்கொண்டது. சுந்தர் என்ன காரியம் செய்து விட்டான்? தப்பிதமான வேறு ஒரு புட்டியையும் எடுத்திருந்தான். மருந்துகளை மருந்தோடு கலப்பதற்குப் பதிலாக கொடிய விஷத்தையும் கலந்துவிட்டான். நோயால் படுத்திருக்கும் அத்தாய் அதைச் சாப்பிட்டால் மரணம் நிச்சயம்! தாங்கொண்ணாத் துயர் கொண்ட மரணம்!!

சுந்தரால் என்ன செய்யமுடியும்? அச்சிறுமியையோ அல்லது அவள் வசிக்கும் இடத்தையோ அவன் அறியான். அச்சிறுமியை மட்டும் இப்போது அவன் கண்டு கொண்டானானால்! தன் மருந்தகத்தை விட்டு இருள் நிறைந்த வீதிக்கு ஓடினான்! தன்னால் முடிந்தமட்டும் வலதுபுறமும் பின் இடது புறமும் ஓடினான்!! தேடினான்!!! மூடிவோ பலனற்றுப் போயிற்று. அநேக வீதிகளின் ஊடாகக்கடந்த அச்சிறுமியையோ கரும் இருள் கவ்விக்கொண்டது. அச்சிறுமியோ வேறு அதிகப் பரபரப்புடன் காணப்பட்டாள். ஒருவேளை, தன் வீட்டையடைந்த சிறுமி அதே நிமிடத்தில் அவ்விஷத்தை ஊற்றித் தன் தாய்க்குக் கொடுத்திருந்தால்? ஆறியா சுந்தருக்குக் குப்பென்று வியர்த்துக்கொட்டியது! அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அப்பொழுது …… தன் கிறிஸ்தவ நண்பன் மறக்க வேண்டாமெனச் சொன்ன திருமறையின் தேவவாக்கு திடீரென அவன் ஞாபகத்திற்கு வந்தது.

“ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்”, கடந்த நாட்களில் சுந்தர், தன் கிறிஸ்தவ நண்பனிடம் குதர்க்கமும் கேலியும் செய்து ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப் புறக்கணித்திருந்தாலும் அவன் நினைவில் நின்ற நீங்காத வேத வாக்கு இதுவே.

சுந்தர் தன் மருந்தகத்துக்கு மிக அவசரமாகத் திரும்பினான். முழங்காலிட்டுத் தன்னை முற்றுமுடியத் தாழ்த்தி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை நோக்கி வேண்டுதல் செய்தான். இப்பொழுது அவன் எந்தவிதமான குதர்க்கமோ கேலியோ செய்யவில்லை. தன்னுடைய தாங்கொண்ணா வேதனையில் ஆண்டவராகிய இயேசுவை நோக்கிக் கூப்பிட்டு உதவி செய்யும்படி மன்றடினான். தன்னுடைய இருதயத்தை முற்றிலுமாகத் தேவனிடத்தில் ஊற்றி வேண்டுதல் செய்து கொண்டிருக்கும்பொழுது திடீரெனக் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டுத் திறந்தான். என்ன ஆச்சரியம்!!

கண்ணீர் வழிந்தோட, உடைந்த மருந்துப் புட்டியைப் பிடித்தவாறே, தான் அதிவேகமாக ஓடியதால் கீழேவிழுந்து மருந்துப் புட்டியை உடைத்து விட்டதாகவும், தன்னை மன்னிக்கும்படியும் விம்மியழுது கெஞ்சினாள் அச்சிறுமி! ஆனந்தப்பெருக்கில் சுந்தர் வேறு ஒரு புதுப் புட்டியை எடுத்து இம் முறை மிகக்கவனத்தோடு நிரப்பி அனுப்பினான். தான் அதிக நாட்களாகப் புறக்கணித்து வந்த தேவனின் ஒப்பற்ற பரிகாரத்துக்கு எவ்வளவு தகுதியற்றவன் என்று தன்னை நொந்துகொண்டான். சுந்தர் தன் கண்களை மூடினபொழுதோ, அவன் உள்ளத்துறைந்திருந்த சகல அசுத்தத்தையும், புத்தியில் புதைந்திருந்த துர்ச்சிந்தை யாவையும் கண்டான். தன் பாவங்களுக்காக மனம் வருந்தி, ‘என்னை உம்முடைய பிள்ளையாக மாற்றிக்கொள்ளும்’ என்று வேண்டுதல் செய்தான். அக்கணமே அவன் ஆண்டவராகிய இயேசுவின் பிள்ளையாக மாறினான். இப்பொழுதோ சுந்தர் அதிகச் சந்தோஷமுள்ளவனாகவும் உண்மையுள்ள தேவனுக்கு நன்றியுள்ளவனாகவும் காணப்பட்டான்.

இக்கைப்பிரதியை வாசிக்கின்ற என் அருமையான நண்பரே! சுந்தர் எப்பேர்ப்பட்ட ஆபத்திலிருந்து விடுதலை பெற்றன் என்பதை உம்மால் புரிந்துகொள்ள முடியும் என நம்புகிறேன். ஒருவேளை அவருடைய அன்பான அழைப்பைத் தொடர்ந்து புறக்கணித்திருந்தால் சுந்தரின் முடிவு எப்படியிருந்திருக்கும்? இதை வாசிக்கும் சிநேகிதரே! ஆண்டவர் உம்மைப் பார்த்து “வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 11:28) என்கிறார். உமக்கு மெய்வருத்தம் உண்டா? சுந்தருக்கு ஏற்பட்ட ஆபத்தைப் போல நீர் ஈடுபட்டிருக்கும் எப்பொறுப்பிலும் இவ்வித நிர்ப்பந்தமான நிலைமையை எதிர்பார்க்கலாம்.“ பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” (யோ.6:37) என்று தேவன் கூறுகிறார். தேவன் தமது கையை மிகுந்த ஆவலோடும் அன்போடும் நீட்டிக்கொண்டிருக்கிறார். உருகி அழைக்க உமக்கு மனமில்லையா? உருகி அழைத்தால் உமக்கேது துயரம்? வருந்தும் மனமே ஒளிவீசும் ஆலயம் என்பதை மறவாதேயும் !!

எனவே இதை வாசிக்கும் அன்பரே! பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன் (ரோ.6:23) என்று தேவன் கூறுகிறார். ஒருவேளை இத்தேவ அழைப்பின் சப்தத்திற்கு நீர் செவிசாய்க்காது போனால்….? ” மனமே மருளாதே! நீர் இன்றே அவரை உமது சொந்த இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டால் உமக்கு இளைப்பாறுதல் தந்து இளமையும் முதுமையுமற்ற நித்திய ஜீவனை உமக்களிப்பார்.

மனம் மாறிய மாலுமி

பல ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை ஒரு பெரிய கப்பல் நடுக் கடலில் சென்று கொண்டிருந்த சமயம் அக் கப்பலின் தலைவன் கேப்டன் ஜான் கொடிய வியாதிப் பட்டு மரணத் தருவாயில் இருந்தான்.

அப்பொழுது மரண பயமும், நித்திய வாழ்வைக் குறித்த கவலையும் அவனைப் பிடித்து வாட்டி வதைத்தன. தனக்குக்கீழ் பணிபுரியும் முக்கிய அதிகாரியை அழைத்தான். நான் பாவங்களையும் அக்கிரமங்களையும்” ஏராளமாய்ச் செய்துள்ளேன். அவைகள் எனக்கு மன்னிக்கப்படவும், எனது நித்திய வாழ்வுக்காக வும், எனக்காக ஜெபியுங்கள் என்று கேட்டுக்” கொண்டார். அந்த அதிகாரி தலைவனைப் பார்த்து, ஐயா! நான் ஜெபித்ததேயில்லை. ஜெபிக்க வும் தெரியாது என்றான். கப்பல் தலைவன் சத்தியவேதத்தைக் கொண்டுவந்தாவது வாசி”” என்றான். அதற்கு அந்த அதிகாரி வருத்தத்துடன் தலைவனைப் பார்த்து, என்னிடம் சத்திய” வேதமும் இல்லையே! என்ன செய்வது? என்றான்.

அப்போது அங்கே அந்தக் கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்த தேவஊழியர் ஒருவர் முன்வந்தார். கப்பல் தலைவனின் வேண்டுதலின்படி அந்த ஊழியர் வேதத்தைத் திறந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் 53வது அதிகாரத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார்.

“நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு,

நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்.

நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது.

அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.” என்று அந்த அதிகாரத்தின் 5வது வசனத்தை வாசித்தார்.

உடனே, கப்பல் தலைவன், அங்கேயே நிறுத்திக் கொள்ளுங்கள் ஐயா! எனது” தாயார் இந்த வசனத்தில் எனது பெயரையும் வைத்து ஜெபிக்கும்படி கூறினாள். எனக்கோ இதன் அர்த்தம் புரியவில்லை. ஆகையால் இதை நான் ஜெபமாகக் கூறமுடியவில்லை. இந்த வசனம் என்ன சொல்லுகிறது. எனக்கு சற்று விளக்கிச் சொல்லுங்கள் என ஆவலுடன்” கேட்டான்.

அதற்கு அந்த தேவமனிதர், தலைவனே! ஒரு உதாரணம் கூறுகிறேன்.” கேளும். என்னிடமிருந்த விலையுயர்ந்த கண்ணாடிப் பொருளை என் வேலைக்கார சிறுவன் உடைத்துவிட்டு, பிறகு என்னிடம் வந்து அதற்காக மன்னிப்புக் கேட்டான். நானும் அவனை மன்னித்துவிட்டேன். இப்போது உம்மிடம் ஒரு கேள்வி? இந்த மன்னிப்புக்கான விலை எவ்வளவு?எனக் கேட்டார்.

கப்பல் தலைவன் போதகரே! “அந்தக்கண்ணாடிப்பொருளின் விலை எதுவோ? அதுவே மன்னிப்பின் விலை. அதாவது அந்தக் கண்ணாடிப்பொருள் தான் உமது மன்னிப்பின் விலை” என்றார். போதகர் கப்பல் தலைவனைப் பார்த்து நீங்கள் சரியாகச்” சொன்னீர்கள். நாமும் பாவம் செய்யும் போதெல்லாம் கடவுளுக்கு விரோதமாகத்தான் பாவம் செய்கிறோம். புpறகு அவரிடம் வந்து சரணடைந்து மன்னிப்புக் கேட்டால் அவர் உடனே மன்னித்து விடுகிறார். ஆனால் நம்மை அவர் மன்னிக்க அவர் ஒரு விலையைக் கொடுக்கவேண்டும். பாவத்தின் சம்பளம் மரணம். உயிருக்கு விலை உயிர்தான் அல்லவா? எனவே தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னுயிரைத் தந்து எம்மை மன்னிக்கும் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டார். என்றார்.”

மேலும் கப்பல் தலைவனிடம், இப்போது” உமது தாயார் சொன்னபடி சொல்லித் தருகிறேன் ஜெபியும் என்றார். தலைவன் உடனேயே” கண்களை மூடி ஜெபிக்க ஆரம்பித்தான். தனது பெயரை அழுத்தம்திருத்தமாக

“கேப்டன் ஜானுடைய மீறுதல்களினிமித்தம் இயேசு காயப்பட்டு,

கேப்டன் ஜானுடைய அக்கிரமங்களினிமித்தம்

இயேசு நொறுக்கப்பட்டார்.

கேப்டன் ஜானுக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை இயேசுமேல் வந்தது.

இயேசுவின் தழும்புகளால்

கேப்டன் ஜான் குணமடைகிறான். “என்று தேவ மனிதர் சொல்லச் சொல்ல கேப்டனும் ஜெபித்தார்.

ஜெபித்தவுடன் கேப்டனின் இருதயம் இலகுவானது.

கேப்டன் தானாகவே அழுகையுடன் திரும்பத்திரும்ப ஜெபித்துக்கொண்டிருந்தார். அப்போதே இயேசு தன் பாவங்களை மன்னித்து விட்டார் என்ற நிச்சயமும், இயேசுவின் காயப்பட்ட கரங்களினால் நான் சுகமானேன் என்ற நம்பிக்கையும் கேப்டன் ஜானுக்கு வந்து விட்டது. அந்த நாளிலேயே அவரது உடலில் ஏற்பட்ட வியாதி நீங்கி நல்ல சுகத்தைப் பெற்றார். மரண பயமும் நீங்கிப் போனது. தொடர்ந்து தன் கப்பற்பணியை சந்தோஷமாக நிறைவேற்றினார்.

ஆம்! கேப்டன் ஜானுடைய வாழ்க்கைப் பயணம் கூட புதிய திசையில் பயணிக்க ஆரம்பித்தது.

அன்பானவர்களே!

இந்த கைப்பிரதியை வாசிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் எந்த மார்க்கத்தவராயிருந்தாலும் கிறிஸ்துவுக்கு விரோதமானவராயிருந்தாலும் அவர் எல்லா வற்றையும் மன்னித்து தங்கள் வாழ்வில் சமாதானத்தையும், மாறாத சந்தோஷத்தையும் தரக் காத்திருக்கிறார்.

இந்த கேப்டன் ஜானைப் போல் அவரைத் தேடினால் கண்டு கொள்வீர்கள். அவனுக்கு உண்டானதுபோல் கொடிய வியாதியினாலோ, மனநிம்மதியின்றியோ, துயரத்திலோ, வேதனையிலோ நீங்கள் இருக்கக் கூடும். ஆனால் இனி நீங்கள் அவ்வாறு இருக்கத் தேவையில்லை. கடவுளுக்குப் பிரியமில்லாத தவறினை, பாவத்தைச் செய்வதால் நம் வாழ்வில் இத்துன்பங்களால் வாடுகிறோம். அவற்றிலிருந்து எம்மை விடுவிக்கவே ஆண்டவராகிய இயேசு காயப்பட்டார். சிலுவையிலே அறையப்பட்டார். கொலையுண்டார். நமக்;கு எட்டாத சந்தோஷமான சமாதானமான வாழ்வு கிடைக்கும்படிக்கே அவர் சிலுவையில் பலியானார்.

இயேசுவின் காயத்தின் தழும்புகள் உங்கள் வியாதிககைக் குணமாக்கும் வல்லமை யுள்ளது. இன்றே நீங்களும் கேப்டன் ஜானைப் போல அந்த வசனத்தில் உங்கள் பெயரை வைத்து நம்பிக்கையுடன் சொல்லிப் பாருங்கள்.

பூட்டிய அறையில் தனித்திருந்து இயேசுவை வேண்டி உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள். நிச்சயமாகவே நீங்களும் அவரிடம் பாவ மன்னிப்பைப் பெறுவதோடு இப்பூமியிலே மனசமாதானத்தையும் சந்தோஷத்தையும் மறுமையில் தேவனோடு கூட வாழும் பரலோக வாழ்வையும் பெறுவீர்கள்.

தேவன்தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக!

கடமையா – பாசமா

கடமைக் கண்ணனான திரு. ஆல்பர்ட் ஃபைசான் நதியின்மேல் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான இரயில் பாலத்தை இயக்கும் பணியில் இருக்கிறார். படகு கடந்து செல்ல திறப்பார். இப்போதும் பாலத்தை மூடவேண்டும், ஏனெனில் நியூயார்க் நகரிலிருந்து வரும் இரயில் பாலத்தைக் கடந்து செல்லவேண்டும்.

பாலத்தை அவருடைய பையன் பீட்டர் பாலம் மூடப்படுவதைப் பார்க்க ஓடோடி வந்தான். வந்த வேகத்தில் திடீரென கால் தவறி நதியில் விழுந்துவிட்டான். மறுவினாடியே இரயில் பாலத்தை நெருங்கிவிட்ட கூ சீழ்க்கையை அவர் கேட்டார். ஆனாலும் இரயில் இன்னும் கண்களுக்குப் புலப்படவில்லை. தான் உடனடியாகப் பாலத்தை மூடவேண்டியதை அவர் அறிவார். தவறினால் இரயில் பயணிகள் விபத்திற்குள்ளாவார்கள்! நதியில் விழுந்த பையனைக் காப்பாற்றுவதா அல்லது பாலத்தை மூடி இரயிலுக்கு வழியை அமைப்பதா? கடமையா – பாசமா? திரு. அல்பர்ட் என்ன செய்வார்?

உடைந்த உள்ளத்தோடு பையன் நதியில் மூழ்கிப்போவதைப் பார்த்தப்படி பாலம் மூடப்பட அதை முறைப்படி இயக்கினார். குடமை பாசத்தை வென்றுவிட்டது. இரயில் பாலத்தைக் கடந்ததும் நதியில் குதித்து பீட்டரின் உடலைக் கரைக்கு கொண்டுவந்தார். ஐயோ! காலம் கடந்து விட்டது. பையன் இறந்துவிட்டான்….

இந் நிகழ்ச்சி நம் உள்ளத்தை உருகச் செய்கிறது. கதறி அழும் தகப்பனாருடன் நம் உள்ளம் கலந்து விடுகிறதில்லையா? பையனைக் காப்பாற்ற எவ்வளவாய் ஏங்கினார். சிக்கலான நேரம், திடீர் தீர்மானம் செய்யவேண்டும். சொந்தப் பையனா அல்லது பயணிகளின் உயிரா? இரண்டையும் செய்ய இவரால் இயலாது. பையனின் உயிரைப் பொருட்படுத்தாமல், இரயில் இரும்புப் பாதையின் சட்டத்திற்கு கீழ்ப்படிந்து, பாலத்தை இயக்கினார். விபரம் அறிந்ததும் எவ்வாறு பயணிகள் திரு. ஆல்பர்ட் அவர்களுக்கு ஆறுதல், நன்றி கூறியிருப்பார்கள்!

இப்போது மற்றொரு முக்கியமான காட்சியை நம் மனக்கண் முன்பாகக் கொண்டுவருவோமாக. இங்கு கீழ்ப்படிதல் மட்டுமல்ல, மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட தெய்வீக அன்பும் வெளிப்படுத்தப்படுகிறது. முழு இருதயத்தோடும் கல்வாரிக் காட்சியை நோக்குவோமாக! பரமபிதா தமது திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவை சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, மனித இனத்திற்கு இரட்சிப்பாகிய விடுதலையை உண்டாக்கி வைத்திருக்கிறார். இது இலவசம். பாவிகள் மீட்படைய இதுவே வழி. ஒன்று நம் பாவத்திற்கான தண்டனையை நாமே அடைந்து அழியவேண்டும் அல்லது பரமபிதா தம் திருக்குமாரனை உலகத்திற்கு அனுப்பி தண்டனை முழுவதையும் அவர்மேல் சுமத்த வேண்டும். ஆண்டவருக்கு நன்றி! ஒப்பற்ற அவரது அன்பு வெளிப்பட்டது.

தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் (இயேசுவை) தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோ.3:16).

திரு. ஆல்பர்ட் தன் பையனை நதிக்கு அனுப்பவில்லை. கால் தவறி தானே விழுந்துவிட்டான். ஆனால் பரமபிதா தம் திருக்குமாரனை அனுப்பினார் (1.யோ.4:14). தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை (இயேசு கிறிஸ்துவை) இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது (1.யோ.4:9).

அருமையான நண்பரே! தேவ அன்புக்கு உம்முடைய உள்ளம் நன்றி செலுத்துகிறதில்லையா? உமக்காக உம் நல்வாழ்வுக்காக உமது பாவப் பிரச்சனைக்காக அவர் தம் திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவின் உயிரைக் கொடுத்தார் அல்லவா! நீர் அடையவேண்டிய தண்டனையைத் தாமே முன் வந்து ஏற்றுக்கொண்ட அருமை நாதராம் இயேசு பெருமானுக்கு உம்மையே ஜீவபலியாக, காணிக்கையாக அவரது மலரடிகளில் படைக்கமாட்டீரா? உம்மை அரவணைக்க, ஆசீர்வதிக்க, உமது பாவங்களை மன்னிக்க அவர் காத்திருக்கிறார். இயேசு பெருமான் சிலுவையில் சிந்திய இரத்தம் உம் பாவபாரத்தை நீக்கும். மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த இயேசு இரட்சகர் இன்றும் உம் உள்ளத்தின் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறார். திறந்துவிடுங்கள்.

வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன் (மத்.24:15)

பகைவரை நேசிக்கும் இறையன்பு

மிட்சுவோ புச்சிடா என்னும் ஜப்பானிய போர் விமானியே டிசம்பர் 7, 1941 -ஆம் ஆண்டு பேர்ல் துறை முகத்தின் மீது நடந்த விமானத் தாக்குதலைத் தலைமைதாங்கி நடத்தியவர். தாங்கள் நடத்திய அந்தத் தாக்குதலில் முழுவெற்றியை அடைந்து விட்டதைக் குறிக்கும் வகையில், “டோரா, டோரா, டோரா” என்ற செய்தியையும் அவர் அனுப்பினார்.

ஆயினும் இரண்டாம் உலகப்போர் நீடித்தது. கடும் சண்டை நடந்தது. இந்த ஜப்பானிய போர் விமானி தொடர்ந்து பல முறை பறந்து தங்கள் நாட்டின் எதிரிகளைத் தாக்கி வந்தார்.

பலமுறை அவர் சாவுக்கு மிக அருகில் வந்தும், பகைமை உள்ளம் கொண்டு தன் உயிரையும் துச்சமாகக் கருதினார். இறுதியில் போரின் திசை திரும்பியது, அமெரிக்க ஐக்கிய நாடுகள் வெற்றி பெற்றது.

இப்போர் நடந்துகொண்டிருந்தபோது, பிலிப்பைன்ஸ் நாட்டில் கிறிஸ்தவ ஊழியர்களாகப் பணியாற்றிய வயது முதிர்ந்த தம்பதிகள் இருவரை ஜப்பானியர் படுகொலை செய்துவிட்டனர். அமெரிக்காவில் வசித்துவந்த அவர்களுடைய மகள் அந்தச் செய்தியைக் கேட்ட பிறகு, ஜப்பானியப் போர்க் கைதிகளைச் சந்திக்கவும், அவர்களுக்கு நற்செய்தியை வழங்கவும் தீர்மானித்தார். ஜப்பானியப் போர்க்கைதிகள் அப்பெண்மணியின் அன்பு பாராட்டுதலைக் கண்டு வியந்து, அதன் காரணத்தை வினவியபோதெல்லாம், “என்னுடைய பெற்றோர்கள் கொல்லப்படுவதற்குமுன் செய்த ஜெபமே என்னை இப்பணியில் வைத்திருக்கிறது” என்று பதில் உரைப்பார்.

தோல்வியால் மனக்கசப்பு அடைந்த புச்சிடா, தனக்குள் எழுந்த பகைமை உணர்ச்சியின் காரணமாக போர்க்காலக் குற்றங்களுக்காக அமெரிக்க ஐக்கிய நாடுகளை உலகப் பொது நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று தீர்மானித்தார். அதற்கென, அமெரிக்காவில் போர்க்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த ஜப்பானிய வீரர்களைச் சந்தித்து, சான்றுகளைத் திரட்டலானார். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சிறை வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய வீரர்கள் தங்களுடைய அனுபவங்களைக் கூறியபோது, அவருக்குப் பெரும் எரிச்சலும் ஏமாற்றமும் உண்டாயிற்று. அது அவர்கள் அடைந்த இன்னல்களினால் அல்ல. பிலிப்பைன்ஸ் நாட்டிலே படுகொலைக்கு ஆளான ஒரு தம்பதியின் மகள் அவர்களுக்குக் காட்டின அன்பைக் குறித்து மீண்டும் மீண்டும் அவர் கேள்விப்படலானார். அந்தப் பெண்மணி தங்களுக்குப் புதிய ஏற்பாடு என்னும் நூலைக் கொடுத்ததாகவும், அவருடைய பெற்றோர்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் ஏதோ புரிந்துகொள்ள முடியாத ஜெபத்தைச் செய்ததாகவும் கைதிகளாயிருந்த பலர் கூறினர். உண்மையில் புச்சிடா இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், அவருடைய உள்ளத்தில் அந்நிகழ்ச்சி ஆழமாகப் பதிந்துவிட்டது.

பலமுறை அக்கதையை அவர் கேட்டதினால் தானும் புதிய ஏற்பாடு ஒன்றை வாங்கினார். மத்தேயு நற்செய்தி நூலைப் படித்தபோது அவருக்கு அதில் ஆவல் மேலிட்டது. அடுத்து உள்ள மாற்கு நூலைத் தொடர்ந்து வாசித்தார். இன்னும் ஆவல் அதிகமாயிற்று, லூக்கா 23:34 -ஆம் வசனத்திற்கு வந்தபோது அவருடைய ஆத்துமாவில் ஒளி பிரகாசித்தது, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.” வயது முதிர்ந்த தம்பதியினர் தாங்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் என்ன ஜெபம் செய்தனர் என்பதை இப்பொழுது அவர் அறிந்துகொண்டார். தொடர்ந்து அந்த அமெரிக்க பெண்மணியைப் பற்றியோ, ஜப்பானியப் போர்க்கைதிகளைப் பற்றியோ அவருக்கு நினைக்கத் தோன்றவில்லை. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் ஜெபத்தைக் கேட்டு, கிறிஸ்துவிற்குப் பரம எதிரியாக வாழ்ந்த தன்னை மன்னிக்க ஆயத்தமாயிருக்கும் தேவனைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார். அந்த நேரத்திலேயே கிறிஸ்துவின்மீது விசுவாசம் கொண்டவராக, வேண்டுதல் செய்து, பாவமன்னிப்பையும், நித்திய ஜீவனையும் பெற்றுக்கொண்டார்.

பொதுநீதிமன்றத்தைக் குறித்து அவர் எண்ணியிருந்த திட்டம் அவரை விட்டு அகன்று போயிற்று. அதுமுதல் மிட்சுவோ புச்சிடா உலகெங்கும் சென்று, கிறிஸ்துவின் அளவற்ற ஐசுவரியத்தைக் குறித்துப் பிரசங்கித்துத் தனது எஞ்சிய வாழ்க்கையைக் கழித்தார்.

இயேசு கிறிஸ்து பாவங்களை மன்னித்து, பகையைக் கொன்று, அன்பினால் உள்ளங்களை வெல்லுகிறவர் என்பதை, அன்பு வாசகர்களே, இந்த உண்மைச் சம்பவம் உறுதி செய்கிறது. இதுவல்லவோ மனித உள்ளங்களை வெல்லும் இறையன்பு!

திருமறை கூறும் சத்தியங்கள் இவை:

“தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16).

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்

(1 தீமோ. 1:15). இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1 யோவான் 1:7,9).

உண்மையாதெனில், நாம் அனைவரும் தனிப்பட்ட நிலையில் பாவிகளாகவே இருக்கிறோம். “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை. தேவனைத் தேடுகிறவன் இல்லை. எல்லாரும் வழி தப்பி ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்.” என்று வேதம் கூறுகிறது (ரோமர் 3:10-12). ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களைச் சுமந்தவராகச் சிலுவைக்குச் சென்றார். நம் எல்லோருடைய பாவங்கள் அனைத்தையும் கழுவி, நம்மைச் சுத்தி செய்யத்தக்க வல்லமை, அவருடைய திரு உதிரத்திற்கு உண்டு. அவருக்கு நம்மை ஒப்படைப்போமாக! இயேசு கிறிஸ்து உங்கள் பாவங்களை மன்னிக்க ஆயத்தமாயிருக்கிறார்.

கிறிஸ்துவின் சிலுவைக் காட்சியை, ஒப்பற்ற திருக்காட்சியை, நம் கண்முன் நிறுத்துவோம். சிலுவையேயன்றி வேறொன்றிலும் நான் மேன்மை கொள்ளேன் என்ற பவுலடிகளின் கூற்றைச் சிந்திப்போம், தியானிப்போம், அவரை மனதார உள்ளத்தில் ஏற்போம்.

புச்சிடாவின் சாட்சி இது: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே’ என்ற வசனத்தை நான் படித்த அச்சணத்தில் முதன் முறையாக, இயேசு கிறிஸ்துவை நேரில் சந்தித்த உணர்வு எனக்கு உண்டாயிற்று. பாவிகளுக்கும் பகைவர்களுக்கும் பதிலாளாக சிலுவையில் மரிக்கையில் இயேசு ஏறெடுத்த ஜெபத்தின் பொருளைப் புரிந்துகொண்டேன். நான் என் பாவங்களை மன்னித்து என்னை ஏற்றுக்கொள்ளும்படியும், என் பகை உணர்வை அகற்றி நல்ல மனிதனாக ஆக்கும்படியும் ஆண்டவரிடம் ஜெபித்தேன். அவர் என்னைப் புதிய மனிதனாக்கினார்”, தனிப்பட்ட முறையில் நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உங்களை ஒப்படைப்பீர்களாக!

சுகமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எருசலேம் என்னும் பட்டணத்தில் பெதஸ்தா எனப்பட்ட ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தின் கரையில் ஐந்து மண்டபங்கள கட்டப்பட்டிருந்தன. அவைகளில் குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து தங்கள் சுகத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.

முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனிதன் அங்கே படுத்திருந்தான். இந்த மனிதனுடைய நிலைமை மிகவும் பரிதாபகரமாய் இருந்தது. இந்த மனிதனைக் குறித்து ஆராயும்போது, முதலாவது, இவன் நெடுநாள் வியாதியுள்ளவனாய் இருந்தான். ஒன்று இரண்டு வருடங்களல்ல, முப்பத்தெட்டு வருடம் படுக்கையில் கிடந்து இவனது உறுப்புகள் செயலற்றுப் போயிருந்தன.

இரண்டாவதாக இந்த மனிதன் உதவியற்றவனாயிருந்தான். இவனை ஆரம்பத்தில்கவனித்து வந்தவர்கள் இவனுக்கு உதவி செய்து சலித்துப் போனார்கள். இப்பொழுது உதவி செய்ய யாரும் முன் வரவில்லை. வேளா வேளைக்கு உணவு கொடுத்து கவனிக்கயாருமில்லை. மூன்றாவதாக நம்பிக்கையற்றவனாயிருந்தான். ஆரம்பத்தில் இந்த வியாதி சுகமாகிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. இப்பொழுதோ முப்பத்தெட்டு ஆண்டுகள் கடந்து விட்டது. “இனி யார் தான் என்னை சுகப்படுத்தப்போகிறார்கள்? நான் சாகும்வரை இதே படுக்கையில்தான் சாக வேண்டும்” என்று வாழ்க்கையில் நம்பிக்கையற்ற நிலையில் இந்த மனிதன் இருந்தான்.

இப்படி இந்த மனிதன் நெடுநாளாய் வியாதிப்பட்டு, உதவியற்றவனாக, நம்பிக்கையிழந்து படுத்திருக்கும்போது, ஒரு நாள் அவனைத்தேடி வந்த மனிதர் அதிசயமான கேள்வியைக் கேட்டார். சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா? என்பதே அக்கேள்வி. சுகத்திற்கு ஏங்கிக் கொண்டிருக்கும். அந்த மனிதன் இந்த வார்த்தைகளைக் கேட்டு உடனே, மிகுந்த ஆச்சரியப்பட்டு, என்னை அன்போடு விசாரிக்கும் இவர் யார்? என்று அவரை நோக்கிப் பார்த்தான். மன உருக்கமுள்ளவராக, கண்களில் அன்பு கனிந்தவராக இயேசு கிறிஸ்து அவனையே நோக்கிக் கொண்டிருந்தார். அவன் தன்னுடைய உதவியற்ற நிலைமையை இயேசுவுக்கு எடுத்துச் சொன்னான். இயேசு அவனை நோக்கி “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட” என்றார். உடனே அந்த மனிதன் சொஸ்தமாகி தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து போனான். (யோவான் 5:9)

இதை வாசிக்கும் அருமை சகோதரனே! சகோதரியே! ஒருவேளை நீயும் இந்த வியாதியஸ்தனைப்போல் நெடு நாட்களாக வியாதிப்பட்டு படுக்கையில் இருக்கலாம். “எனக்கு உதவி செய்ய யாருமில்லை. நான் தனிமையாக கஷ்டப்படுகிறேன்” என்று கலங்கிக் கொண்டு இருக்கலாம். பயப்படாதே! முப்பத்தெட்டு ஆண்டுகளாக தனிமையில் கிடந்த மனிதனைத் தேடி வந்த இயேசு கிறிஸ்து இன்று உன்னைத் தேடி வந்திருக்கிறார். அவர் உன்னை நேசிக்கிறவர். அன்போடு விசாரிக்கிறவர். காரணம் அவரே உன்னை உண்டாக்கினவர்.

“டாக்டர்கள் என்னை கைவிட்டார்கள், மருந்துகளாலும் பிரயோஜனமில்லை, நான் வாழப்போவது உறுதியில்லை’’ என்று நம்பிக்கையிழந்து கலங்கிக் கொண்டிருக்கிறாயா? கலங்காதே! முப்பத்தெட்டு ஆண்டுகளாக சுகமாகாத வியாதிக்காரனை “எழுந்து நட” என்ற ஒரே சொல்லால் சுகப்படுத்தின இயேசுக் கிறிஸ்து உன் வியாதியை சுகப்படுத்துவது அதிக நிச்சயம். ஏனென்றால் “இயேசு கிறிஸ்துதாமே நம்முடைய பலவீனங்களை ஏற்றுக் கொண்டு, நம்முடைய நோய்களை (சிலுவையில்) சுமந்தார்.’ மத்தேயு 8:17 இயேசு கிறிஸ்து உன் பலவீனங்களையும், நோய்களையும், சுமந்து தீர்த்துவிட்டபடியினால் அவர் உன்னைச் சுகமாக்க வல்லவராயிருக்கிறார்.

இந்த இயேசுகிறிஸ்து இப்போது உன்னைத் தேடி வந்திருக்கிறார். “சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா? என்று உன்னைப் பார்த்து கேட்கிறார். ஆனால் உன் வியாதிக்காக இயேசுவை நோக்கிப் பார்க்கும் முன்பாக ஒரு முக்கியமான காரியத்தை நீ செய்யவேண்டும். உன் பாவங்கள் மன்னிக்கும்படியாக சுகமாக்கும் இயேசுவை உன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால்… சுகத்தைப் பெற்றுக்கொண்ட இந்த வியாதியஸ்தனை இயேசு தேவாலாயத்தில் கண்ட போது “இதோ நீ சொஸ்தமானாய் அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனி பாவம் செய்யாதே” என்றார். (யோவான் 5:14) இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தையிலிருந்து, இந்த மனிதனுடைய பாவமே இவனுடைய வியாதிக்கு காரணமாயிருந்தது என்பதை அறிகிறோம்.

அருமையான சகோதரனே, சகோதரியே உன்னுடைய. வியாதிக்குக்கூட உன் பாவமே காரணமாயிருக்கலாம். ஆகவே உன் பாவத்தை சுமந்து தீர்த்த இயேசுவுக்கு உன் உள்ளத்தில் இடம் கொடு. தன்னிடத்தில் வந்த எந்த பாவியையும் அவர் புறம்பே தள்ளுவதில்லை.

இயேசு கிறிஸ்து உன் பாவங்களுக்காக சிலுவையில் இரத்தம் சிந்தினார் என்பதை விசுவாசி “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது.” (ஏசாயா 53:5) “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்.” (1 யோவான் 1:7)

“இயேசுவே என் பாவங்களை மன்னியும்” என்று இருதய கதவைத் திறந்து கொடு, அப்பொழுது அவர் இருதயத்தில் வருவார், உன் பாவங்களை மன்னிப்பார். உன் வியாதிகளை குணமாக்குவார். தெய்வீக சமாதானத்தினாலும், சந்தோசத்தினாலும் உன் உள்ளத்தை நிரப்புவார். “இதோவாசற்படியில் நின்று தட்டுகிறேன். ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவை திறந்தால் அவனிடத்தில் நான் பிரவேசிப்பேன்” இயேசு (வெளி 3:20)

உன் உன் இருதய கதவை தட்டிக் கொண்டிருக்கும் இயேசுகிறிஸ்து “சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?” என்று இப்பொழுது உன்னை கேட்கிறார். அவருக்கு உன் இருதய கதவைத் திறந்து கொடுத்து, இந்த வியாதியஸ்தனைப் போல நீயும் உன் நிலைமையை இயேசுவிடம் சொல், நான் அனுபவிக்கும் இந்த வியாதிக்கு காரணமான என் பாவங்களையும் நீர் எனக்காக சிலுவையில் சுமந்தீரே! ஆகவே என் பாவங்களை மன்னித்து என் வியாதியிலிருந்து சுகம் தாரும் என்று கேள். இயேசுகிறிஸ்து நிச்சயமாக உன்னைச் சுகப்படுத்துவார். “அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:5)

கிறிஸ்து இயேசு அவருடைய தழும்புகளால் தொட்டு உன்னை சுகப்படுத்துவாராக.

வாய்ப்பைத் தவறவிட்டவள்!

அமெரிக்கா நாட்டிலுள்ள கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்தவள் தான் சீமாட்டி மெர்லின். பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவளாதலால் வாழ்க்கையில் எந்தவித துன்பத்தையும் அனுபவிக்காமல் சுகபோகமான வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.

மெர்லின் பொழுதுபோக்குகளில் அதிக நாட்டமுடையவள். அதிக நேரத்தை அதிலேயே செலவிடுவாள். அவள் அதிக சீக்கிரத்தில் ஒரு சிறந்த நாட்டியக்காரியாகவும் மாறினாள்.

தன் ஊரில் நடக்கும் கேளிக்கை நிகழ்ச்சிகள், குதிரைப்பந்தயம், திரைப்படங்கள், நாட்டிய அரங்கம் போன்ற பற்பல இடங்களுக்கு மெர்லின் தவறாமல் செல்வாள். அவளின் அழகிய நடனம் அந்த நாட்டில் உள்ள பலரைக் கவர்ந்தது. சற்று பிரபலமானவுடன் அவளுக்குப் பெயரும், புகழும், பணமும் பெருகிவிட்டது.

ஒரு நாள் வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் போது சுவர்களில் எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததை கண்டாள். தன் காரை நிறுத்தி அதை வாசித்துப் பார்த்தாள். கடவுளைப் பற்றிச் சொல்லும்படியாக ஒரு தெய்வீக மனிதர் அந்த ஊருக்கு கடந்து வருவதாக அதில் விளம்பரப்படுத்தப்பட்ருந்தது. மெர்லின் அந்த நபரின் பெயரை படித்ததும், இவர் பெரியமனிதர் அல்லவா! இவரைப் பற்றி நான் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று சிந்தித்தவாறே தன் வீட்டை அடைந்தாள்.

அடுத்தநாள் அவள் வீட்டில் வேலை பார்க்கும் ஒரு பணிப்பெண் தான் நேற்றைய தினம் கிறிஸ்தவக் கூட்டத்திற்கு கடந்து சென்றதையும், அங்கு நடைபெற்ற நிகழ்சிகளையும் பற்றி சொன்னாள்.

இதைக் கேட்ட மெர்லின் மனதிலும், ஒரு விருப்பம் வரவே, அன்று சாயங்கால கூட்டத்திற்கு அவளும் புறப்பட்டாள்.

மெர்லின் தன் காரை ஓட்டிச் செல்லும்போதே கூட்டம் கூட்டமாக மக்கள் அந்த மைதானத்திற்கு செல்வதைப் பார்த்தாள். தனக்கு அந்த கூட்டம் பிடிக்கவில்லையெனில் இடையில் எழுந்து வெளியே வந்துவிட வசதியான ஒரு இடத்தில் காரை நிறுத்தி, உள்ளே சென்றாள். சற்று நேரத்தில் அந்த கூட்டம் ஆரம்பித்து நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. அவள், இத்தனை நாட்கள் சென்ற கேளிக்கை நிகழ்ச்சிகளிலிருந்து இது வித்தியாசமானதாகவும், அவள் மனதிற்கு ஒரு அமைதியை கொண்டு வருவதாகவும் இருந்தது.

கூட்டம் ஆரம்பமாயிற்று. அந்த தேவமனிதர் பேசத் துவங்கினார். கூடியிருந்த எல்லாரும் மிக ஆவலாக, அவர் சொல்லும் காரியங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பாவத்தில் சிக்கியிருப்பவர்கள் தண்டனைக்கு எப்படி தப்ப முடியும்? என்ற வார்த்தைகளை அவர் பேசும் போது அந்தக் கூட்டத்திலிருந்த அநேகர் தங்கள் பாவங்களை உணர்ந்தார்கள். அதில் நாட்டியப் பெண்ணான மெர்லினும் ஒருத்தி.

கூட்டம் முடியும் இறுதி நேரத்தில் மக்கள் பலர் தங்கள் பாவத்திற்காக மனம் உடைந்து, அழுதுகொண்டிருந்தனர். அந்த மனிதர் மேடையிலிருந்து சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுக்காகவே பேசப்பட்டதாக உணர்ந்தாள். நீ செய்த பாவங்கள் எவ்வளவு கொடிதானாலும், இயேசுவிடம் அறிக்கையிடு, இன்றே அதை விட்டு விடு. நிச்சயம் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, நீ சொர்க்க வாழ்வை அனுபவிப்பாய் என்று அவர் பிரசங்கித்தார்.

இதைக் கேட்ட மெர்லின், தான் கடவுளை விட்டு தூரம் போன பாவி என்று உணர்ந்தாள். ஆனால் அது ஒரு நிமிடம் தான் நீடித்தது. மறுவிநாடி அவள் எண்ணம் சற்று மாறியது. ஐயோ! நாளை ஒரு முக்கிய நடன நிகழ்ச்சி உள்ளதே. ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன் நான் ஆட வேண்டுமே, இன்று என் வாழ்வை நான் இயேசுவுக்கு கொடுத்தால், நாளை எப்படி நடனமாட முடியும்? என்று யோசித்தாள். அன்று மேடையிலிருந்து சொல்லப்பட்ட வார்த்தைகள் மூலம் பலர் தொடப்பட்டனர். ஆனால் மெர்லின் தன் டைரியில், ‘இன்று அல்ல, இன்று அல்ல, நாளை நான் இயேசுவை என் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்வேன்’ என எழுதிக் கொண்டவளாய் அந்தக் கூட்டம் முடியும் முன்னரே மனப் போராட்டத்துடன், காரை எடுத்துக் கொண்டு வேகமாகத் தன் வீட்டிற்குப் புறப்பட்டாள்.

மெர்லினுடைய உள்மனதில் திரும்பத் திரும்ப அந்த தேவமனிதரின் வார்த்தைகள் ஓடினாலும், அவள் “இன்று அல்ல, இன்னும் ஒரே ஒரு ஆட்டத்திற்குப் பின் நாளை மனம் மாறுவேன்” என்று நினைத்தவாறே நான்கு வழி ரோட்டில் காரை ஒட்டினாள். அப்போது எதிர்புறமாக இருந்து வந்த ஒரு லாரி மின்னல் வேகத்தில் அவள் காரை மோதியது. கார் சுக்கு நூறாக உடைந்தது. இரத்த வெள்ளத்தில் மெர்லின் அந்த இடத்திலே பிணமாக கிடந்தாள். அவள் எழுதி வைத்திருந்த டைரியும் அங்கு திறந்து கிடந்தது. ‘இன்று அல்ல, இன்று அல்ல, நாளை நான் இயேசுவை என் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்வேன்’ என்ற வரிகளுடன் …

பிரியமானவர்களே, நாளையை சந்திப்பதற்கு முன் அவள் இருளுக்குள் சென்றுவிட்டாளே! நாளை என்பது நம்முடைய கையில் இல்லை. நல்ல தீர்மானங்களை எடுக்க காலந் தாழ்த்துவது நல்லதல்ல. அதினால் நாம் அவற்றை இழந்துபோக நேரிடலாம் – மெர்லினைப் போல.

நாம் இந்த பூமியில் வாழும் வாழ்க்கை நிலையற்றது. நிச்சயம் மரணம் ஒருநாள் நம்மை சந்திக்கும். அதற்குப் பின்னர் தான் நமக்கு என்றும் அழிவில்லாத ஒரு வாழ்க்கை ஆரம்பமாக உள்ளது. இந்த பூமியில் நாம் செய்யும் தவறுகளுக்கு பின்னர் நாம் அனுபவிக்கும் தண்டனை முடிவில்லாத நரக வாழ்க்கையே. நித்திய வாழ்வைப் பெற இயேசுவிடம் திரும்புங்கள். இன்றே தீர்மானம் எடுங்கள்.

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். (நீதி 28:13)

இவர் யார்

இவர் பிறக்கும்போது, மிகவும் தாழ்வான சூழ்நிலையில் பிறந்தார். எனினும் அவர் பிறந்த அன்று வானமண்டலத்தில் தூதகணங்களின் மகிழ்ச்சியின் இன்ப கீதங்கள் எழும்பின. அவர் பிறந்த இடம் ஒரு மாட்டுக்கொட்டகையாய் இருந்தபோதிலும் ஒரு விண்மீன் அறிஞர்களைக் கீழ்த்தேசத்திலிருந்து வந்து அவரை வணங்கும்படி வழிநடத்தினது.

அவர் பிறப்பு இயற்கை விதிக்கு முரண்பட்டது. அவர் மரணம் மரணவிதிக்கும் மாறுபட்டது. அவர் ஜீவியமும், போதனையும் விளக்கவொண்ணாத ஒரு மாபெரும் அற்புதம். அவருக்கு கோதுமை வயலோ, மீன்பண்ணையோ இல்லாதிருந்தும் அப்பமும் மீனும் ஐயாயிரம் பேருக்கு திருப்திபடக்கொடுத்து மீதமும் வைக்கமுடிந்தது. அவர் நீர் மேல் நடந்தால் அது தரைபோல் அவரைத் தாங்கும்.

அவரைச் சிலுவையில் அறைந்ததோ கொடுமையிலும் கொடுமை. தேவன் அம் மரணத்தின்மூலம் கிருபையாய் பாவமன்னிப்பையும் மீட்பையும் மானிடர்க்கு அருளிச் செய்தார். அவர் மரித்த அன்று ஒரு சிலரே அவருக்காகப் புலம்பினர். ஆயினும் சூரியன் கருந்திரையினால் மூடப்பட்டதுபோல் அந்தகாரப்பட்டது. கீழிருந்த பூமியோ அக் கொடுமையின் பாரம் தாங்காமல் அதிர்ந்தது. சகல இயற்கையின் தத்துவங்களும் அவரை நன்கு மதித்து அவருடைய அநியாய மரணத்திற்கு தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்தன. ஆனால் இவ் உலகின் கொடிய பாவிகளோ அவரைத் தூஷித்து, புறக்கணித்து, சிலுவையில் அறைந்தனர்.

பாவம் அவரை எள்ளளவேனும் தீண்டவில்லை. அழிவோ அவரின் சரீரத்தை ஆட்கொள்ளஇயலவில்லை. அவர் இரத்தத்தால் கறைபட்ட மண் அவர் சரீரத்தை மேற்கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர் மரித்து மூன்றாம் நாள் மண்ணிலிருந்து உயிருடன் எழுந்தார்.

அவர் நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்து மூன்றரை வருஷங்கள் சுவிசேஷத்தைக் கூறி அறிவித்தார். அவர் ஒரு புத்தகமும் எழுதியதில்லை. ஒரு கட்சியும் அமைக்கவில்லை. ஒரு ஆலயமும் கட்டவில்லை. அவர் மாபெரும் நிதிகள் ஒன்றும் திரட்டவில்லை. என்றாலும் கடந்த இரண்டாயிரம் வருடங்களாக மனித சரித்திரத்தின் நடுநாயகமாக வீற்றிருக்கிறார். இடைவிடாமல் போதிக்கப்பட்டுவரும் பிரசங்கங்களின் மத்திய பொருள் இவரைப் பற்றியதே. காலத்தின் சகல வர்த்தமானங்களும் இயேசு கிறிஸ்து எனும் ஒரு அச்சாணியிலேயே சுழன்றுகொண்டுவருகிறது. இவர் ஒருவரே மானிடவர்க்கத்தை மீட்டு புதுப்பித்து நித்தியஜீவனைக் கொடுக்க வல்லவர்.

அவர் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றி மறைந்த மரியாளின் மைந்தனான வெறும் மைந்தனோ? இல்லை! இல்லை! இவர் தெய்வத்தில் தெய்வமானவர். பரஞ்சோதியான உண்மைக் கடவுள். இவர் சர்வத்துக்கும் மேலான தேவன். கல்வாரிச் சிலுவையில் அவர் செய்த ஒப்பற்ற தியாகம்தான் கடந்த நூற்றாண்டுகளில் கொடிய பாவிகளையும் நரமாமிசபட்சணிகளையும் மீட்டு, இரட்சித்து புனிதராக்கி, பிறரைத் தம் தோழராக நேசிக்கச் செய்து அவர்கள் ஜீவியத்தில் அற்புதமாறுதல்கள் உண்டுபண்ணிற்று.

இப்படிப்பட்ட மகத்துவம் நிறைந்த தூயவரை மானிடரை மீட்டு இரட்சித்து இம்மையில் பாவமன்னிப்பின் நிச்சத்தையும் மறுமையில் மோட்சானந்தத்தையும் அளிக்கவல்ல இவ் உன்னத மீட்பரை பகுத்தறிவுள்ள எந்த மனிதனும் என் ஆண்டவனே! என் தேவனே! என்னை இரட்சியும் என்று வணங்காமல் இருக்க மாட்டான்.

இதை வாசிக்கும் அன்பான நண்பரே, நீர் பாவ மன்னிப்பைப் பெற்று மோட்சம்செல்ல வாஞ்சிக்கிறீரா? இப்படிப்பட்ட ஒப்பற்ற நேசராகிய இயேசு கிறிஸ்துவை உமது உள்ளத்தில் உறையும் கடவுளாகவும், உமது சொந்த இரட்சகராகவும் ஏற்று அங்கீகரிப்பீராகில் அவர் உம்மை முற்றுமுடிய இரட்சித்து மோட்சானந்த பாக்கியத்தை உமக்கு அருளுவார். நீர் இம்மையிலும் மறுமையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் (அப்16:31).

Popular Posts

My Favorites

துக்கம் நிறைந்தவர்

ஓகஸ்ட் 23 "துக்கம் நிறைந்தவர்" ஏசாயா 53:3 தேவகுமாரன் துக்கமாய் இருப்பது எவ்வளவு விசித்திரமான காரியம். அவர் மகிமையின் பிரகாசமானவர். பிதாவின் அச்சடையாளமானவர். ஆனாலும் அவருடைய ஜனங்கள் பட்ட துன்பத்தையும், பட வேண்டிய துன்பத்தையும்...