துண்டு பிரதிகள்

முகப்பு துண்டு பிரதிகள்

பகைவரை நேசிக்கும் இறையன்பு

மிட்சுவோ புச்சிடா என்னும் ஜப்பானிய போர் விமானியே டிசம்பர் 7, 1941 -ஆம் ஆண்டு பேர்ல் துறை முகத்தின் மீது நடந்த விமானத் தாக்குதலைத் தலைமைதாங்கி நடத்தியவர். தாங்கள் நடத்திய அந்தத் தாக்குதலில் முழுவெற்றியை அடைந்து விட்டதைக் குறிக்கும் வகையில், “டோரா, டோரா, டோரா” என்ற செய்தியையும் அவர் அனுப்பினார்.

ஆயினும் இரண்டாம் உலகப்போர் நீடித்தது. கடும் சண்டை நடந்தது. இந்த ஜப்பானிய போர் விமானி தொடர்ந்து பல முறை பறந்து தங்கள் நாட்டின் எதிரிகளைத் தாக்கி வந்தார்.

பலமுறை அவர் சாவுக்கு மிக அருகில் வந்தும், பகைமை உள்ளம் கொண்டு தன் உயிரையும் துச்சமாகக் கருதினார். இறுதியில் போரின் திசை திரும்பியது, அமெரிக்க ஐக்கிய நாடுகள் வெற்றி பெற்றது.

இப்போர் நடந்துகொண்டிருந்தபோது, பிலிப்பைன்ஸ் நாட்டில் கிறிஸ்தவ ஊழியர்களாகப் பணியாற்றிய வயது முதிர்ந்த தம்பதிகள் இருவரை ஜப்பானியர் படுகொலை செய்துவிட்டனர். அமெரிக்காவில் வசித்துவந்த அவர்களுடைய மகள் அந்தச் செய்தியைக் கேட்ட பிறகு, ஜப்பானியப் போர்க் கைதிகளைச் சந்திக்கவும், அவர்களுக்கு நற்செய்தியை வழங்கவும் தீர்மானித்தார். ஜப்பானியப் போர்க்கைதிகள் அப்பெண்மணியின் அன்பு பாராட்டுதலைக் கண்டு வியந்து, அதன் காரணத்தை வினவியபோதெல்லாம், “என்னுடைய பெற்றோர்கள் கொல்லப்படுவதற்குமுன் செய்த ஜெபமே என்னை இப்பணியில் வைத்திருக்கிறது” என்று பதில் உரைப்பார்.

தோல்வியால் மனக்கசப்பு அடைந்த புச்சிடா, தனக்குள் எழுந்த பகைமை உணர்ச்சியின் காரணமாக போர்க்காலக் குற்றங்களுக்காக அமெரிக்க ஐக்கிய நாடுகளை உலகப் பொது நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று தீர்மானித்தார். அதற்கென, அமெரிக்காவில் போர்க்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த ஜப்பானிய வீரர்களைச் சந்தித்து, சான்றுகளைத் திரட்டலானார். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சிறை வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய வீரர்கள் தங்களுடைய அனுபவங்களைக் கூறியபோது, அவருக்குப் பெரும் எரிச்சலும் ஏமாற்றமும் உண்டாயிற்று. அது அவர்கள் அடைந்த இன்னல்களினால் அல்ல. பிலிப்பைன்ஸ் நாட்டிலே படுகொலைக்கு ஆளான ஒரு தம்பதியின் மகள் அவர்களுக்குக் காட்டின அன்பைக் குறித்து மீண்டும் மீண்டும் அவர் கேள்விப்படலானார். அந்தப் பெண்மணி தங்களுக்குப் புதிய ஏற்பாடு என்னும் நூலைக் கொடுத்ததாகவும், அவருடைய பெற்றோர்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் ஏதோ புரிந்துகொள்ள முடியாத ஜெபத்தைச் செய்ததாகவும் கைதிகளாயிருந்த பலர் கூறினர். உண்மையில் புச்சிடா இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், அவருடைய உள்ளத்தில் அந்நிகழ்ச்சி ஆழமாகப் பதிந்துவிட்டது.

பலமுறை அக்கதையை அவர் கேட்டதினால் தானும் புதிய ஏற்பாடு ஒன்றை வாங்கினார். மத்தேயு நற்செய்தி நூலைப் படித்தபோது அவருக்கு அதில் ஆவல் மேலிட்டது. அடுத்து உள்ள மாற்கு நூலைத் தொடர்ந்து வாசித்தார். இன்னும் ஆவல் அதிகமாயிற்று, லூக்கா 23:34 -ஆம் வசனத்திற்கு வந்தபோது அவருடைய ஆத்துமாவில் ஒளி பிரகாசித்தது, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.” வயது முதிர்ந்த தம்பதியினர் தாங்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் என்ன ஜெபம் செய்தனர் என்பதை இப்பொழுது அவர் அறிந்துகொண்டார். தொடர்ந்து அந்த அமெரிக்க பெண்மணியைப் பற்றியோ, ஜப்பானியப் போர்க்கைதிகளைப் பற்றியோ அவருக்கு நினைக்கத் தோன்றவில்லை. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் ஜெபத்தைக் கேட்டு, கிறிஸ்துவிற்குப் பரம எதிரியாக வாழ்ந்த தன்னை மன்னிக்க ஆயத்தமாயிருக்கும் தேவனைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார். அந்த நேரத்திலேயே கிறிஸ்துவின்மீது விசுவாசம் கொண்டவராக, வேண்டுதல் செய்து, பாவமன்னிப்பையும், நித்திய ஜீவனையும் பெற்றுக்கொண்டார்.

பொதுநீதிமன்றத்தைக் குறித்து அவர் எண்ணியிருந்த திட்டம் அவரை விட்டு அகன்று போயிற்று. அதுமுதல் மிட்சுவோ புச்சிடா உலகெங்கும் சென்று, கிறிஸ்துவின் அளவற்ற ஐசுவரியத்தைக் குறித்துப் பிரசங்கித்துத் தனது எஞ்சிய வாழ்க்கையைக் கழித்தார்.

இயேசு கிறிஸ்து பாவங்களை மன்னித்து, பகையைக் கொன்று, அன்பினால் உள்ளங்களை வெல்லுகிறவர் என்பதை, அன்பு வாசகர்களே, இந்த உண்மைச் சம்பவம் உறுதி செய்கிறது. இதுவல்லவோ மனித உள்ளங்களை வெல்லும் இறையன்பு!

திருமறை கூறும் சத்தியங்கள் இவை:

“தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16).

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்

(1 தீமோ. 1:15). இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1 யோவான் 1:7,9).

உண்மையாதெனில், நாம் அனைவரும் தனிப்பட்ட நிலையில் பாவிகளாகவே இருக்கிறோம். “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை. தேவனைத் தேடுகிறவன் இல்லை. எல்லாரும் வழி தப்பி ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்.” என்று வேதம் கூறுகிறது (ரோமர் 3:10-12). ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களைச் சுமந்தவராகச் சிலுவைக்குச் சென்றார். நம் எல்லோருடைய பாவங்கள் அனைத்தையும் கழுவி, நம்மைச் சுத்தி செய்யத்தக்க வல்லமை, அவருடைய திரு உதிரத்திற்கு உண்டு. அவருக்கு நம்மை ஒப்படைப்போமாக! இயேசு கிறிஸ்து உங்கள் பாவங்களை மன்னிக்க ஆயத்தமாயிருக்கிறார்.

கிறிஸ்துவின் சிலுவைக் காட்சியை, ஒப்பற்ற திருக்காட்சியை, நம் கண்முன் நிறுத்துவோம். சிலுவையேயன்றி வேறொன்றிலும் நான் மேன்மை கொள்ளேன் என்ற பவுலடிகளின் கூற்றைச் சிந்திப்போம், தியானிப்போம், அவரை மனதார உள்ளத்தில் ஏற்போம்.

புச்சிடாவின் சாட்சி இது: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே’ என்ற வசனத்தை நான் படித்த அச்சணத்தில் முதன் முறையாக, இயேசு கிறிஸ்துவை நேரில் சந்தித்த உணர்வு எனக்கு உண்டாயிற்று. பாவிகளுக்கும் பகைவர்களுக்கும் பதிலாளாக சிலுவையில் மரிக்கையில் இயேசு ஏறெடுத்த ஜெபத்தின் பொருளைப் புரிந்துகொண்டேன். நான் என் பாவங்களை மன்னித்து என்னை ஏற்றுக்கொள்ளும்படியும், என் பகை உணர்வை அகற்றி நல்ல மனிதனாக ஆக்கும்படியும் ஆண்டவரிடம் ஜெபித்தேன். அவர் என்னைப் புதிய மனிதனாக்கினார்”, தனிப்பட்ட முறையில் நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உங்களை ஒப்படைப்பீர்களாக!

சுகமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எருசலேம் என்னும் பட்டணத்தில் பெதஸ்தா எனப்பட்ட ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தின் கரையில் ஐந்து மண்டபங்கள கட்டப்பட்டிருந்தன. அவைகளில் குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து தங்கள் சுகத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.

முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனிதன் அங்கே படுத்திருந்தான். இந்த மனிதனுடைய நிலைமை மிகவும் பரிதாபகரமாய் இருந்தது. இந்த மனிதனைக் குறித்து ஆராயும்போது, முதலாவது, இவன் நெடுநாள் வியாதியுள்ளவனாய் இருந்தான். ஒன்று இரண்டு வருடங்களல்ல, முப்பத்தெட்டு வருடம் படுக்கையில் கிடந்து இவனது உறுப்புகள் செயலற்றுப் போயிருந்தன.

இரண்டாவதாக இந்த மனிதன் உதவியற்றவனாயிருந்தான். இவனை ஆரம்பத்தில்கவனித்து வந்தவர்கள் இவனுக்கு உதவி செய்து சலித்துப் போனார்கள். இப்பொழுது உதவி செய்ய யாரும் முன் வரவில்லை. வேளா வேளைக்கு உணவு கொடுத்து கவனிக்கயாருமில்லை. மூன்றாவதாக நம்பிக்கையற்றவனாயிருந்தான். ஆரம்பத்தில் இந்த வியாதி சுகமாகிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. இப்பொழுதோ முப்பத்தெட்டு ஆண்டுகள் கடந்து விட்டது. “இனி யார் தான் என்னை சுகப்படுத்தப்போகிறார்கள்? நான் சாகும்வரை இதே படுக்கையில்தான் சாக வேண்டும்” என்று வாழ்க்கையில் நம்பிக்கையற்ற நிலையில் இந்த மனிதன் இருந்தான்.

இப்படி இந்த மனிதன் நெடுநாளாய் வியாதிப்பட்டு, உதவியற்றவனாக, நம்பிக்கையிழந்து படுத்திருக்கும்போது, ஒரு நாள் அவனைத்தேடி வந்த மனிதர் அதிசயமான கேள்வியைக் கேட்டார். சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா? என்பதே அக்கேள்வி. சுகத்திற்கு ஏங்கிக் கொண்டிருக்கும். அந்த மனிதன் இந்த வார்த்தைகளைக் கேட்டு உடனே, மிகுந்த ஆச்சரியப்பட்டு, என்னை அன்போடு விசாரிக்கும் இவர் யார்? என்று அவரை நோக்கிப் பார்த்தான். மன உருக்கமுள்ளவராக, கண்களில் அன்பு கனிந்தவராக இயேசு கிறிஸ்து அவனையே நோக்கிக் கொண்டிருந்தார். அவன் தன்னுடைய உதவியற்ற நிலைமையை இயேசுவுக்கு எடுத்துச் சொன்னான். இயேசு அவனை நோக்கி “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட” என்றார். உடனே அந்த மனிதன் சொஸ்தமாகி தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து போனான். (யோவான் 5:9)

இதை வாசிக்கும் அருமை சகோதரனே! சகோதரியே! ஒருவேளை நீயும் இந்த வியாதியஸ்தனைப்போல் நெடு நாட்களாக வியாதிப்பட்டு படுக்கையில் இருக்கலாம். “எனக்கு உதவி செய்ய யாருமில்லை. நான் தனிமையாக கஷ்டப்படுகிறேன்” என்று கலங்கிக் கொண்டு இருக்கலாம். பயப்படாதே! முப்பத்தெட்டு ஆண்டுகளாக தனிமையில் கிடந்த மனிதனைத் தேடி வந்த இயேசு கிறிஸ்து இன்று உன்னைத் தேடி வந்திருக்கிறார். அவர் உன்னை நேசிக்கிறவர். அன்போடு விசாரிக்கிறவர். காரணம் அவரே உன்னை உண்டாக்கினவர்.

“டாக்டர்கள் என்னை கைவிட்டார்கள், மருந்துகளாலும் பிரயோஜனமில்லை, நான் வாழப்போவது உறுதியில்லை’’ என்று நம்பிக்கையிழந்து கலங்கிக் கொண்டிருக்கிறாயா? கலங்காதே! முப்பத்தெட்டு ஆண்டுகளாக சுகமாகாத வியாதிக்காரனை “எழுந்து நட” என்ற ஒரே சொல்லால் சுகப்படுத்தின இயேசுக் கிறிஸ்து உன் வியாதியை சுகப்படுத்துவது அதிக நிச்சயம். ஏனென்றால் “இயேசு கிறிஸ்துதாமே நம்முடைய பலவீனங்களை ஏற்றுக் கொண்டு, நம்முடைய நோய்களை (சிலுவையில்) சுமந்தார்.’ மத்தேயு 8:17 இயேசு கிறிஸ்து உன் பலவீனங்களையும், நோய்களையும், சுமந்து தீர்த்துவிட்டபடியினால் அவர் உன்னைச் சுகமாக்க வல்லவராயிருக்கிறார்.

இந்த இயேசுகிறிஸ்து இப்போது உன்னைத் தேடி வந்திருக்கிறார். “சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா? என்று உன்னைப் பார்த்து கேட்கிறார். ஆனால் உன் வியாதிக்காக இயேசுவை நோக்கிப் பார்க்கும் முன்பாக ஒரு முக்கியமான காரியத்தை நீ செய்யவேண்டும். உன் பாவங்கள் மன்னிக்கும்படியாக சுகமாக்கும் இயேசுவை உன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால்… சுகத்தைப் பெற்றுக்கொண்ட இந்த வியாதியஸ்தனை இயேசு தேவாலாயத்தில் கண்ட போது “இதோ நீ சொஸ்தமானாய் அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனி பாவம் செய்யாதே” என்றார். (யோவான் 5:14) இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தையிலிருந்து, இந்த மனிதனுடைய பாவமே இவனுடைய வியாதிக்கு காரணமாயிருந்தது என்பதை அறிகிறோம்.

அருமையான சகோதரனே, சகோதரியே உன்னுடைய. வியாதிக்குக்கூட உன் பாவமே காரணமாயிருக்கலாம். ஆகவே உன் பாவத்தை சுமந்து தீர்த்த இயேசுவுக்கு உன் உள்ளத்தில் இடம் கொடு. தன்னிடத்தில் வந்த எந்த பாவியையும் அவர் புறம்பே தள்ளுவதில்லை.

இயேசு கிறிஸ்து உன் பாவங்களுக்காக சிலுவையில் இரத்தம் சிந்தினார் என்பதை விசுவாசி “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது.” (ஏசாயா 53:5) “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்.” (1 யோவான் 1:7)

“இயேசுவே என் பாவங்களை மன்னியும்” என்று இருதய கதவைத் திறந்து கொடு, அப்பொழுது அவர் இருதயத்தில் வருவார், உன் பாவங்களை மன்னிப்பார். உன் வியாதிகளை குணமாக்குவார். தெய்வீக சமாதானத்தினாலும், சந்தோசத்தினாலும் உன் உள்ளத்தை நிரப்புவார். “இதோவாசற்படியில் நின்று தட்டுகிறேன். ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவை திறந்தால் அவனிடத்தில் நான் பிரவேசிப்பேன்” இயேசு (வெளி 3:20)

உன் உன் இருதய கதவை தட்டிக் கொண்டிருக்கும் இயேசுகிறிஸ்து “சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?” என்று இப்பொழுது உன்னை கேட்கிறார். அவருக்கு உன் இருதய கதவைத் திறந்து கொடுத்து, இந்த வியாதியஸ்தனைப் போல நீயும் உன் நிலைமையை இயேசுவிடம் சொல், நான் அனுபவிக்கும் இந்த வியாதிக்கு காரணமான என் பாவங்களையும் நீர் எனக்காக சிலுவையில் சுமந்தீரே! ஆகவே என் பாவங்களை மன்னித்து என் வியாதியிலிருந்து சுகம் தாரும் என்று கேள். இயேசுகிறிஸ்து நிச்சயமாக உன்னைச் சுகப்படுத்துவார். “அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:5)

கிறிஸ்து இயேசு அவருடைய தழும்புகளால் தொட்டு உன்னை சுகப்படுத்துவாராக.

இவர் யார்

இவர் பிறக்கும்போது, மிகவும் தாழ்வான சூழ்நிலையில் பிறந்தார். எனினும் அவர் பிறந்த அன்று வானமண்டலத்தில் தூதகணங்களின் மகிழ்ச்சியின் இன்ப கீதங்கள் எழும்பின. அவர் பிறந்த இடம் ஒரு மாட்டுக்கொட்டகையாய் இருந்தபோதிலும் ஒரு விண்மீன் அறிஞர்களைக் கீழ்த்தேசத்திலிருந்து வந்து அவரை வணங்கும்படி வழிநடத்தினது.

அவர் பிறப்பு இயற்கை விதிக்கு முரண்பட்டது. அவர் மரணம் மரணவிதிக்கும் மாறுபட்டது. அவர் ஜீவியமும், போதனையும் விளக்கவொண்ணாத ஒரு மாபெரும் அற்புதம். அவருக்கு கோதுமை வயலோ, மீன்பண்ணையோ இல்லாதிருந்தும் அப்பமும் மீனும் ஐயாயிரம் பேருக்கு திருப்திபடக்கொடுத்து மீதமும் வைக்கமுடிந்தது. அவர் நீர் மேல் நடந்தால் அது தரைபோல் அவரைத் தாங்கும்.

அவரைச் சிலுவையில் அறைந்ததோ கொடுமையிலும் கொடுமை. தேவன் அம் மரணத்தின்மூலம் கிருபையாய் பாவமன்னிப்பையும் மீட்பையும் மானிடர்க்கு அருளிச் செய்தார். அவர் மரித்த அன்று ஒரு சிலரே அவருக்காகப் புலம்பினர். ஆயினும் சூரியன் கருந்திரையினால் மூடப்பட்டதுபோல் அந்தகாரப்பட்டது. கீழிருந்த பூமியோ அக் கொடுமையின் பாரம் தாங்காமல் அதிர்ந்தது. சகல இயற்கையின் தத்துவங்களும் அவரை நன்கு மதித்து அவருடைய அநியாய மரணத்திற்கு தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்தன. ஆனால் இவ் உலகின் கொடிய பாவிகளோ அவரைத் தூஷித்து, புறக்கணித்து, சிலுவையில் அறைந்தனர்.

பாவம் அவரை எள்ளளவேனும் தீண்டவில்லை. அழிவோ அவரின் சரீரத்தை ஆட்கொள்ளஇயலவில்லை. அவர் இரத்தத்தால் கறைபட்ட மண் அவர் சரீரத்தை மேற்கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர் மரித்து மூன்றாம் நாள் மண்ணிலிருந்து உயிருடன் எழுந்தார்.

அவர் நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்து மூன்றரை வருஷங்கள் சுவிசேஷத்தைக் கூறி அறிவித்தார். அவர் ஒரு புத்தகமும் எழுதியதில்லை. ஒரு கட்சியும் அமைக்கவில்லை. ஒரு ஆலயமும் கட்டவில்லை. அவர் மாபெரும் நிதிகள் ஒன்றும் திரட்டவில்லை. என்றாலும் கடந்த இரண்டாயிரம் வருடங்களாக மனித சரித்திரத்தின் நடுநாயகமாக வீற்றிருக்கிறார். இடைவிடாமல் போதிக்கப்பட்டுவரும் பிரசங்கங்களின் மத்திய பொருள் இவரைப் பற்றியதே. காலத்தின் சகல வர்த்தமானங்களும் இயேசு கிறிஸ்து எனும் ஒரு அச்சாணியிலேயே சுழன்றுகொண்டுவருகிறது. இவர் ஒருவரே மானிடவர்க்கத்தை மீட்டு புதுப்பித்து நித்தியஜீவனைக் கொடுக்க வல்லவர்.

அவர் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றி மறைந்த மரியாளின் மைந்தனான வெறும் மைந்தனோ? இல்லை! இல்லை! இவர் தெய்வத்தில் தெய்வமானவர். பரஞ்சோதியான உண்மைக் கடவுள். இவர் சர்வத்துக்கும் மேலான தேவன். கல்வாரிச் சிலுவையில் அவர் செய்த ஒப்பற்ற தியாகம்தான் கடந்த நூற்றாண்டுகளில் கொடிய பாவிகளையும் நரமாமிசபட்சணிகளையும் மீட்டு, இரட்சித்து புனிதராக்கி, பிறரைத் தம் தோழராக நேசிக்கச் செய்து அவர்கள் ஜீவியத்தில் அற்புதமாறுதல்கள் உண்டுபண்ணிற்று.

இப்படிப்பட்ட மகத்துவம் நிறைந்த தூயவரை மானிடரை மீட்டு இரட்சித்து இம்மையில் பாவமன்னிப்பின் நிச்சத்தையும் மறுமையில் மோட்சானந்தத்தையும் அளிக்கவல்ல இவ் உன்னத மீட்பரை பகுத்தறிவுள்ள எந்த மனிதனும் என் ஆண்டவனே! என் தேவனே! என்னை இரட்சியும் என்று வணங்காமல் இருக்க மாட்டான்.

இதை வாசிக்கும் அன்பான நண்பரே, நீர் பாவ மன்னிப்பைப் பெற்று மோட்சம்செல்ல வாஞ்சிக்கிறீரா? இப்படிப்பட்ட ஒப்பற்ற நேசராகிய இயேசு கிறிஸ்துவை உமது உள்ளத்தில் உறையும் கடவுளாகவும், உமது சொந்த இரட்சகராகவும் ஏற்று அங்கீகரிப்பீராகில் அவர் உம்மை முற்றுமுடிய இரட்சித்து மோட்சானந்த பாக்கியத்தை உமக்கு அருளுவார். நீர் இம்மையிலும் மறுமையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் (அப்16:31).

சத்தியம் உங்களை விடுதலையாக்கும்!

இன்று உங்களுக்கு ஒரு விடுதலை
தேவையாயிருக்கிறது!

பாவத்தின் வல்லமையிலிருந்த உங்களுக்கு விடுதலை தேவை!

‘சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்…” (யோவான் 8:32) என்று இயேசு சொல்லுகிறார்.
ஆகவே கலங்காதீர்கள்!

சத்தியம் உங்களை விடுதலையாக்கும். சத்தியத்தை அறிய அறியத்தான் நீங்கள் விடுதலையை பெற்றுக்கொள்ள முடியும்.

சத்தியம் என்றால் என்ன?

நம்மை உண்டாக்கின தேவன் சத்தியமுள்ளவர் (யோவான்8:26), இயேசு கிறிஸ்து சத்தியமுள்ளவர் (யோவான்14:6), பரிசுத்த ஆவியானவர் சத்திய ஆவியானவர் (யோவான்16:13).

இவர்களை அறிய அறிய நம் வாழ்க்கையில் விடுதலை உண்டாகும். இவர்களை எப்படி அறிந்து கொள்வது? சத்திய வசனமாகிய வேத வசனங்கள் மூலமாகத்தான் சத்திய தேவனை அறிந்து கொள்ள முடியும் (யோவான்17:17).

வேத வசனம் சத்தியம். வேத வசனங்களை வாசித்து சத்தியத்தை அறிந்து கொள்ளும்போது நம் வாழ்க்கையில் விடுதலையை அனுபவிக்க முடியும்.

வேத வசனங்கள் மனிதனால் எழுதப்பட்ட தத்துவங்களல்ல.
‘வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது,” 2.தீமோ.3:16

பரிசுத்த ஆவியானவர், பரிசுத்த மனிதர்களைக்கொண்டு
எழுதியதுதான் வேத வசனங்களாகிய வேத புத்தகம்.

உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது வேத புத்தகம்தான்!
உலகிலேயே அதிகமாக விற்பனையாகும் புத்தகம் வேத புத்தகம்தான்!

தமிழில் முதன்முதலாக அச்சடிக்கப்பட்ட புத்தகம் வேத புத்தகம்தான்!

உலகிலேயே அதிகமான புத்தகங்கள், விளக்க உரைகள் எழுதப்பட்டது வேத புத்தகத்திற்குத்தான்!

காரணம்,
வேத புத்தகம் தேவனுடைய வார்த்தைகள்.
‘தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும்….இருக்கிறது.” எபி.4:12.

தேவனுடைய வார்த்தையாகிய சத்தியம் வல்லமையுள்ளது.
பாவியை பரிசுத்தமாக்கும் வல்லமை வேத வசனத்திற்கு உண்டு! வியாதியஸ்தரை குணமாக்கும் வல்லமை தேவனுடைய வார்த்தையில் உள்ளது! துக்கத்தில் மூழ்கிப்போகிறவர்களை ஆறுதல்படுத்தும் வல்லமை தேவனுடைய வார்த்தைக்கு உண்டு! சோர்ந்து போகிறவர்களை உயிர்ப்பிக்கும் வல்லமை வேத வசனத்தில் உள்ளது! எந்த சூழ்நிலையில் இருக்கிற மனிதனையும் விடுவிக்கிற வல்லமை வேத வசனத்திற்கு உண்டு!

வசனத்தில் வல்லமை மட்டுமல்ல, ஜீவனும் (உயிர்) இருக்கிறது. வேத வசனங்களை வாசிக்கும்போது, அது நம்மோடு பேசுவதை உணர முடியும்! இந்த ஜீவனும், வல்லமையுமுள்ள வேத வசனங்களை வாசிப்பது எவ்வளவு பெரிய சிலாக்கியம்! உங்களுக்கென்று ஒரு வேத புத்தகம் இல்லாவிட்டால் உடனே ஒரு வேத புத்தகத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.

தினமும் வேதத்தில் பிரியமாய் இருந்து. அதை வாசித்து, தியானியுங்கள். உங்கள் வாழ்க்கையில் பரிசுத்தமும், சுகமும், விடுதலையும், ஆசீர்வாதமும் உண்டாவதை காண்பீர்கள்.

சத்தியம் உங்களை பரிசுத்தமாக்கும்.
வேத வசனமாகிய சத்தியத்தை வாசித்து அறியும்போது உண்டாகிற ஆசீர்வாதங்கள் என்ன?

‘உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும், உம்முடைய வசனமே சத்தியம்.” யோவான்17:17
வேத வசனங்கள் நம்மை பரிசுத்தப்படுத்தும்.

இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று, ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக் கொள்ளக்கடவோம். களியாட்டும், வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.
துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள் ரோமர் 13:12,13,14.

நீங்கள் பரிசுத்தமாய் வாழ விரும்புகிறீர்களா?
தினமும் முழங்காலில் நின்று வேத வசனங்களை வாசித்து, தியானியுங்கள். வேத வசனங்களை மனப்பாடம் செய்து உங்கள் இருதயத்தில் வைத்துக் கொள்ளுங்கள். சத்திய வசனமாகிய வேத வசனம் உங்களை பரிசுத்தப்படுத்தும்.

‘வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான?  உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே’ சங்.119:9
கர்த்தருடைய வசனங்கள் தான் நம் வழிகளை சுத்தம் பண்ண முடியும்.
“நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்” சங்.119:11.

வேத வசனங்களை வாசித்து, தியானிப்பது மட்டுமல்ல, அதை நம் இருதயத்தில் வைத்து வைக்க வேண்டும்.

விசுவாசம்!

“விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.” ரோமர்10:17

அதாவது தேவனுடைய வசனத்தைகேட்கும்போது விசுவாசம் நம் உள்ளத்தில் வரும்.

வேத வசனங்களை வாசிக்கத்தான் விசுவாசம் பெருகும். விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாயிருக்கிறவர் இயேசு கிறிஸ்து  எபி. 12:1.

இயேசுவை ஒரு மனிதன் தன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்ளும்போது அவனுக்குள் விசுவாசம் துவக்கப்படுகிறது. இந்த விசுவாசம் வளர்ந்து பெருக வேண்டுமானால் தேவனுடைய வசனங்களை கேட்க வேண்டும், வாசிக்க வேண்டும், தியானிக்கவேண்டும்.

உங்களுக்குள் ஆண்டவர் மீது விசுவாசம் பெருக வேண்டுமா?  அதிகமாக வேத வசனங்களை வாசித்து, தியானியுங்கள்.

“விசுவாச வீரன்” என்று அழைக்கப்பட்டவர் ஜார்ஜ் முல்லர் என்கிற தேவ ஊழியர். கடந்த நூற்றாண்டில் இங்கிலாந்து தேசத்தில் வாழ்ந்தவர். விசுவாசத்தினால் கர்த்தருக்காக இவர் பெரிய காரியங்களை சாதித்தார்.

இவர் விசுவாச வீரனாக திகழ்ந்ததற்கு காரணம், வேத வசனங்கள்தான். இவர் தேவ புத்தகத்தை இருநூறு (200) முறை வாசித்து முடித்திருக்கிறார். நூறு முறைக்கு மேலாக முழங்காலிலேயே நின்று வேதத்தை வாசித்து முடித்தாராம்!

விடுதலை!

“சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” யோவான் 8:32

வேத வசனமாகிய சத்தியம் ஒரு மனிதனுக்கு விடுதலையை கொண்டு வரும். வேத வசனத்தை வாசிக்க வாசிக்க இந்த விடுதலையை உணரமுடியும்.
துக்கத்திலிருந்து விடுதலை!

“உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.” சங்.119:92

தேவனுடைய வசனம் நமக்கு மனமகிழ்ச்சியை கொடுக்கிறது. ஆகவே, அதை வாசிக்க வாசிக்க துக்கம் மறைந்து போகும்.

ஒரு கிறிஸ்தவரல்லாத ஒரு தாயார் மிகுந்த இக்கட்டான சூழ்நிலையில் இவர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டார்கள். இவர்கள் கணவரோ மிகவும் கண்டிப்பானவர். இவர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டதையே விரும்பாதவர். ஆலயத்திற்கோ, கூட்டங்களுக்கோ
இவர்கள் செல்ல முடியாது. டி.வியில் கூட கிறிஸ்தவ நிகழ்ச்சியை பார்க்க முடியாது.

இந்தச் சூழ்நிலையில் இவர்கள் எப்படி விசுவாசத்தை காத்துக் கொள்ள முடியும்? ஒரு சமயம் என்னிடத்தில் சொன்னார்கள்:

“வேத புத்தகம்தான் என்னுடைய ஒரே ஆறுதல். துக்கம் என்னை நெருக்குகையில் வேதத்தை திறந்து வாசிப்பேன். அப்பொழுது அதற்குள்ளிருந்து ஆண்டவர் என்னோடு பேசுவதை உணருகிறேன்.”
“வேத வசனங்களே என் மனமகிழ்ச்சி. இந்த வீட்டில் எனக்கு ஒரே துணை வேத புத்தகம்தான்” என்றார்கள் மகிழ்ச்சியோடு.
நீங்களும் வேதத்தை வாசிக்க வாசிக்க கவலையிலிருந்து விடுதலை அடைவீர்கள்.

பயத்திலிருந்து விடுதலை!

ஒரு சகோதரன் தன் அனுபவத்தை கூறினார். இவர் உள்ளத்தில் எப்பொழுதும் ஒரு பயம். எதற்காகவும் பயந்து கொண்டேயிருப்பார். பயம் இவரை அடிமையாக்கி விட்டது.

ஒருசமயம் ஏசாயா 41:10ஐ வாசித்தபோது ஆண்டவர் இவரோடு பேசினார்:
“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நான் உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”
என்று ஆண்டவர் இந்த வசனத்தின் மூலம் பேசினவுடன் பயம் உள்ளத்தை விட்டு விலகினது. இந்த சத்திய வசனம் விடுதலை கொடுத்தது.
நீங்களும் விசுவாசத்தோடு வேத வசனத்தை வாசிக்க வாசிக்க பயத்திலிருந்து விடுதலையடைவீர்கள். உங்களுக்குள் தைரியமும், பெலனும் உண்டாகும்.

ஆதலால், தினமும் தவறாமல் வேதத்தை வாசியுங்கள்!
வசனத்தை கருத்தாய் தியானியுங்கள்! வசனத்தின்படி வாழுங்கள்!

சத்தியம் உங்களை விடுதலையாக்கும்!

சத்தியமுள்ள தேவனே!

உமது வசனமாகிய சத்திய வசனத்திற்காக உமக்கு ஸ்தோத்திரம்!

நீர் விரும்புகிற வண்ணமாக சத்தியத்தை அறிந்து கொள்ள எனக்கு கிருபை தாரும்!

உம்முடைய சத்தியத்தினால் என்னை பரிசுத்தமாக்கும்!
உம்முடைய சத்திய வசனங்களினால் என் விசுவாசத்தை பெருகச் செய்யும்!

உம்முடைய வசனமாகிய சத்தியம் என்னை விடுதலையாக்கட்டும்!

மீட்பு

எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள். (ரோ.3:23-24)

புதிதாக ஒருவர் உங்களை சந்திக்க வந்தால் அவர் மதிப்புக்குரியவர் என எண்ணி வீட்டுக்குள் வரவேற்று தேனீர் அருந்தக்கொடுப்பீர்கள். விருந்தினரை வரவேற்று அவர்களை உபசரிப்பது நமது கலாச்சாரம். சில சமயங்களில் அவருக்கு உதவி புரியவும் முன்வருவோம்.

இதுபோன்ற நற்பழக்க வழக்கங்களை, கெடுதியானதும் துன்பம் நிறைந்ததுமான சூழ்நிலைகளில் மனிதர்கள் மறந்து விடுவதுண்டு. இவ்விதமான சூழ்நிலையில் அநேக மதிப்பிற்குரியவர்களும் கூட மிகவும் முரட்டுத்தனம் உள்ளவர்களாகவும், கொடுமையானவர்களுமாய் மாறிவிடுகிறார்கள். பசியுற்றவர்கள் திருடுவார்கள், பயமுற்றவர்கள் தங்கள் அயலாரைக் காயப்படுத்துவார்கள். பொய்யும், பகையும் நம் சூழ்நிலைகளை கெடுத்துவிடும். அனுபவங்கள் மற்றவர்களைக் குறித்து சந்தேகப்படவும் தீமையான எண்ணங்கொள்ளவும் வழிநடத்திவிடுகின்றது. இவ்வாறு நாடுகளுக்கிடையேயும் கெடுதியான இருளான எண்ணங்கள் காணப்படுகின்றது. நீங்கள் எப்படிப்பட்ட கசப்பானவர்கள்? உங்கள் எதிரியைவிட நீங்கள் முன்னேற முயற்சிக்கும்போது அவனுடைய அழிவைக்கண்டு நகைப்பதில்லையா? பள்ளிப்படிப்பிலும் கூட மற்றவர்களைக் குறித்த கரிசனை, பாரம் இல்லாது உங்களுடைய வெற்றியைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பதில்லையா? உணவருந்தும்போதும் சுவையான ஆகாரத்தையே விரும்பி அதைப் பெற்றுக்கொள்ள துடிப்பதில்லையா? நீங்கள் ‘தூஆ’ செய்யும்போது உங்களுடைய பிரச்சனைகளுக்காகவே அதிகநேரம் இறைவனிடம் (அல்லாவிடம்) கேட்பது இல்லையா?

இயற்கையாகவே மனிதன் சுயநலமும், தயக்கமும், தீய நாவும் உடையவனாக இருக்கிறான். ஏனெனில் இறைவனின் இரக்கம் அவனில் வாசம் செய்வதேயில்லை. பிறர் உனக்கு எதிராக யாதொரு காரியத்தையும் செய்யும்போது இறைவன் உன்னில் அன்பு கூர்ந்ததுபோல நீ அவர்களில் அன்பு கூறுவதேயில்லை. நாமெல்லாரும் பாவம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து சாத்தானின் சோதனைகளைக் கண்டு நகைக்கிறவர்களாய் காணப்படுகிறோம். இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய நமக்கு பிரியமில்லை. மேலும், நம்மைப் படைத்தவரைப்பற்றிய எண்ணமும் நம்மில் இல்லை. நாம் நமது பாவங்களை விட்டுவிட மனமில்லாத அளவிற்கு நமது பாவத்தை விரும்புகிறோம். நமது எல்லா உறுப்புகளும் பாவம் நிறைந்ததாக இருப்பதால், நீதியும் நித்தியமுமான இறைவனின் கோபாக்கினைக்குப் பாத்திரராயிருக்கிறோம். நாம் நமது பாவங்கள் சிலவற்றை அறிந்திருக்கலாம். ஆயினும் இறைவன் நம் ஆன்மாக்களின் ஆழத்தையும் அறிந்திருக்கிறார். நமது பாவங்கள் அனைத்தும் அவருக்கு முன்னிருக்கின்றன. அவருடைய கட்டளையே நம்மை நியாயம் தீர்க்கிறது. அதன் தீர்ப்போ, “இப்பாவி தள்ளப்பட்டு இழக்கப்பட்டிருக்கிறான்” என்பதே.

மனிதத் தன்மைக்கு வேறுபட்ட தன்மையுடையவர் ஒருவர் இருக்கிறார். இவரே நமது பாவக்கட்டுகளைத் தகர்த்தெறிந்தவர். தம்மைப் பகைத்தவர்களையும் தம்மில் நிலைத் திருந்தவர்களையும் அவர் நேசித்தார். இறைவனுடைய மகிமை அவர் ஊடாக முடிவின்றிப் பிரகாசித்தது.

இந்த பாவமற்ற மனிதன் இயேசு கிறிஸ்துவே. இவர் நமதாண்டவர். கன்னிகையான மரியாளிடத்தில் இறைவனுடைய ஆவியினால் பிறந்தவர். அவருடைய உள்ளம் அன்பினாலும், சத்தியத்தினாலும் நிறைந்திருந்தது. அவரைக் குறித்து ரசூல்கள் கூறியதாவது, “அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.” (யோவான் 1:14) மனிதனை, பிசாசின் தந்திரங்களிலிருந்து விடுவிக்கவும், இறைஅன்பினால் மனிதனை நிரப்பவும் அவர் இவ்வுலகத்தில் வந்தார். அவர் ஊழியம் கொள்ளும்படிவராமல், ஊழியம் செய்யவும், எல்லாரையும் மீட்டுக்கொள்ளும் பொருட்டுத் தம் உயிரையே மீட்புப் பொருளாகக் கொடுக்கவும் வந்தார்.

தமது மகத்தான அன்பிலே, கிறிஸ்து நம்முடைய பாவங்களைச் சுமந்து, அவைகளுக்கான விலையை செலுத்தி, இறைவனுடைய கோபாக்கினையை நமக்குப் பதிலாக தாமே சகித்தார். நம்மை நித்திய அழிவிலிருந்து காப்பாற்ற, அவர் மரித்ததினிமித்தம் நம் மெய் மீட்பரானார். தம்மிடத்தில் சுகம் பெற்றவர்களிடத்தில் அவர் கூலி கேட்கவில்லை. மரித்தவர்களை உயிருள்ளவர்களாய் எழுப்பினார். “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்று உனக்கும் கூறுகிறார். உன்னிடம் நோன்பையோ, நற்கிரியைகளையோ அல்லது பலியையோ அவர் கேட்கவில்லை. உன்னை இறை சமாதானத்தில் ஆதரித்து, தம் சொந்த விலையேறப்பெற்ற இரத்தத்தினால் கழுவுகிறார். உன் இரட்சகரில் நம்பிக்கைவை, அப்போது உன்னுடைய விசுவாசத்தினால் நீ பிழைத்துள்ளாய் என்பதை நீ அறிந்து கொள்வாய்.

தம், நன்மையும் இரக்கமும் நிறைந்த கண்களினால் கடவுள் உன்னையும் மற்றெல்லா பாவிகளையும் பார்க்கிறார் என்பதனை நீ ஒருபோதும் மறந்துவிடாதே. நீ நல்லவன் என்பதால் உன்னை அவர் அவ்வாறு நோக்குகிறாறென்றல்ல, உன்னை நீயே மீட்டுக் கொள்ள முடியாதென்பதை அவர் அறிவார். சகல அங்கலாய்ப்பில் இருந்தும், துன்பத்தின் கண்ணியிலிருந்தும் உன்னை தூக்கியெடுக்க நித்தியமான கிறிஸ்து உன்னிடத்தில் வந்தார். கிறிஸ்துவண்டை வா! நீ சத்தியத்தைக் கண்டு கொள்வாய். இறை நீதியையும் பெற்றுக் கொள்வாய். கடவுள் உன்னைத் தள்ளிவிடாமல் அன்போடுன்னை வரவேற்கிறார். நீ அவரை உலக இரட்சகர் என நம்பியிருந்தால், இறைவன் உன்னை நீதிமானாகக் காண்கிறார். அன்புள்ள நண்பா, இறைவன் உன்னை நேசிக்கிறார். அதுமட்டுமல்ல, உன்னை சுத்தமாக்கவும் சித்தம் கொண்டுள்ளார். தாமதியாமல், அவர் உனக்கு அளிக்கும் அருளுக்காக அவருக்கு நன்றி செலுத்து. இறைவன் மகத்தானவரென்றும், தம்முடைய மீட்பின் நிமித்தம் மக்களை இலவசமாய் நீதிமானாக்குகிறாரென்றும் மற்றவர்களுக்குச் சொல். அவர்கள் மீட்பைப் பெற்றுக்கொள்ளவும், அளவில்லா அன்பினாலும், மகிழ்ச்சியினாலும், மேலும் நன்றியுள்ள இருதயத்தினாலும் நிரப்பப்படவும் உன் நம்பிக்கையினால் அவர்களுக்கு அறிவூட்டு.

நீ உன் தீய பழக்கவழக்கங்களிலேயே உழன்று கொண்டிராமல் அவைகளை விட்டு கிறிஸ்துவோடு வாழவும் அவருடைய பலத்தினால் தூய வாழ்வு வாழவும், கிறிஸ்து உன்னை உன் தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிக்க வல்லவராயிருக்கிறார். இதற்கு சந்தேகமேயில்லை. கிறிஸ்துவின் மீட்பு ஒரு முற்றுப்பெற்ற ஒரு வேலை. உன் வாழ்வை அதோடு தொடர்புள்ள போராட்டங்களோடும், சிக்கல்களோடும், தோல்விகளோடும் அவருக்கு அர்ப்பணி. அப்போது அவர் தமது காயப்பட்ட கரங்களை உன்மேல் வைத்து உன்னை ஆசீர்வதித்து, தமது சமாதானத்தை உன் சரீரத்திலும், தமது மகிழ்ச்சியை உன் உள்ளத்திலும், தமது சுத்திகரிப்பை உன் மனச்சாட்சியிலும் ஊற்றுவார் என்பதை நீ அறிந்து கொள்வாய். கிறிஸ்துவினுடைய அன்பின்விளைவை மக்கள் உன் வாழ்விலும் உன் வாழ்வினூடாகவும் கண்டு கொள்வார்கள்.

பணத்தால் சாதிக்க முடியாது

பணத்தைக் கொடுத்து…..

மெத்தை படுக்கைகள் வாங்கலாம்,
நித்திரையைப் பெற முடியாது.
மருந்துகள் வாங்கி சாப்பிடலாம்,
சுகத்தைப் பெற இயலாது.
புத்தகங்களை வாங்கிப் படிக்கலாம்,
அறிவை அடைய முடியாது.
ஆபரணங்கள் வாங்கி அணியலாம்,
அழகைப் பெற முடியாது.
வேலை வாய்ப்புகள் கிடைக்கும்,
ஆயினும் வாழ்க்கை அமையாது.
வீடுகளைக் கட்டலாம்,
குடும்பத்தைக் கட்ட முடியாது.
வசதிகள் பலதும் பெறலாம்,
மெய்யின்பத்தை நுகர முடியாது.
உறவுகள் பெற்றிருக்கலாம்,
அன்பைப் பெற முடியாது.
தான தருமங்கள் செய்யலாம்,கடவுளைக் காண இயலாது.
புண்ணிய யாத்திரை செல்லலாம்,
ஆன்ம இரட்சிப்பை அடைய முடியாது.

பணம் வாங்கிக் கொடுக்க முடியாதவைகளை எல்லாம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு இலவசமாகவே அருளுகிறார். மெய்தேவனிடம் சிபாரிசுகள் பலிக்காது; பணமும் செல்லாது. “நமக்கு பதில் கிடைக்கும்படிக்கு முந்தி தேவனுக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?” என்று தூய வேதம் கேட்கிறது. பணம் கொடுத்து நாம் தேவனை திருப்தி செய்ய முடியாது. நமக்கு ஜீவன் கொடுத்து, நாம் வாழ்வதற்குத் தேவையான காற்றையும், நீரையும் இலவசமாக கொடுக்கிற இயேசு கிறிஸ்து நமக்கு பாவமன்னிப்பையும், ஆன்ம இரட்சிப்பை யும் பணமுமின்றி விலையுமின்றி வழங்குகிறார்.

“வருத்தப்பட்டுப்பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக் கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.” (மத். 11:28-30) தம்மாலே தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தினால் நமக்கு உண்டுபண்ணி, உன்னதத்திற்கு ஏறிச் சென்றிருக்கிறார்.

ஆன்ம இரட் சிப்பையும் தேவ சமாதானத்தையும் அவரிடம் வரும் எவருக்கும் இலவசமாக அருளுகிறார்.

“சமாதானத்தையே உங்களுக்கு வைத்துப்போகிறேன்.

என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (யோவான் 14:27) என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆணித்தரமாக வலியுறுத்தியிருக்கிறார். உங்கள் பாவங்களை அறிக்கை செய்து, அவரையே உங்கள் ஆண்டவரும், இரட்சகருமாக ஏற்றுக் கொள்ளுங்கள். இன்றே அவரிடம் வருவீர்களா?

மன அழுத்தம், ஆபத்தா?

நாம் வாழ்கின்ற இந்த உலகம் நிலையற்றதாக. வேகமான ஓட்டத்தில் மாறிக்கொண்டிருக்கின்றது. அந்த ஓட்டத்தோடு போகும் நம்முடைய அன்றாட வாழ்வில். மன அழுத்தமானது ஒரு எதிர்மறையான பகுதியாக அமைந்துவிட்டது. மன அழுத்தம் என்பதை விளக்கப்படுத்தும் போது வாழ்வில் திணிக்கப்படுகின்ற மேலதிக நம் தாக்கங்கள் தேவைகள் மற்றும் பாரங்களால், மக்களில் ஏற்படுகின்ற எதிர்விளைவு என குறிப்பிடலாம்.

லண்டனில் சுமார் 5.000,000 மக்கள் தங்கள் வேலைகளினால் மிக அதிகமான மன அழுத்தத்தை அனுபவிப்பதாக அறிக்கைகள் குறிப்படுகின்றன. 2004 மற்றும் 2005 இல் மொத்தமாக 12.8 மில்லியன் வேலை நாட்கள் மன அழுத்தம் காரணமாக இழக்கப்பட்டுள்ளன. மனஅழுத்தமானது ஒரு ஆரோக்கிய சமூகத்திற்கு பெரிதான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

தோற்றம்:

மன அழுத்தம் ஏற்படும் வேளையில், நாம் நம் வாழ்வை சிந்தித்துப்பார்க்க வேண்டும். மன அழுத்தமானது நம் சுயத்தால், உள்ளான மனதின் காரியங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம், அல்லது நம் மேல் சுமத்தப்பட்ட ஒன்றாக அமையலாம். எப்படி அமைந்தாலும், அடிப்படைக் கொள்கையில் எந்தவித மாற்றமும் இருப்பதில்லை. மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால். அதனால் அவனுக்கு என்ன லாபம்? என இயேசு கிறிஸ்து கேட்ட கேள்வியே அந்த அடிப்படைக் கொள்கை (மாற்கு 8:36)
இது நமக்கு நிஜமான சவாலோடு அமைகின்றது. முன அழுத்தங்கள் நிறைந்த வாழ்விலிருந்து. சூழ்நிலையிலிருந்து வெற்றி பெற அல்லது தப்புவதற்கு முக்கிய விஷயமாக அமைவது எது? இந்த பூமியில் நம்முடைய வாழ்க்கைக் காலமானது. நித்தியத்திற்கு ஒரு படியேறுகின்ற ஒரு குறுகிய பயணமே. நாம் நித்தியவாழ்வைக் குறித்ததான காரியங்களுக்கு நம் எண்ணங்களை ஒருமுகப்படுத்துவோமானால். நம் வாழ்வு வேறொரு தோற்றத்தில் காணப்படும். இந்த உலகின் அழுத்தங்கள். உடைமைகள். தகுதிகள் யாவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. ஏனெனில். நம் வாழ்க்கை முறைக்கேற்ப நம் ஆத்மா. நித்திய காலமும் இருக்கப் போகும் இடத்தின் முடிவு பரலோகம் அல்லது நரகம் ஆகும்.

ஆயத்தமா?

இது ஒரு மிக முக்கியமான விஷயமாகும். எல்லா மனிதர்களுமே ஏதோ ஒரு நித்திய இடத்திற்கு செல்ல வேண்டியது தவிர்க்க முடியாத கட்டாயமான ஒன்று. நல்ல இடத்தை அடைவதற்குரிய முன்னேற்றப்பாடுகளை செய்து, தயாரான நிலையில் இருந்தால் தான் பரலோகத்தினுள் போக முடியும். அதற்கு நாம் எப்படி தயாராக முடியும்?

நமது பாவங்களை தேவனிடத்தில் அறிக்கைவிட்டு. பாவ வழிகளை விட்டு விலகி மனம் திரும்ப வேண்டும். கிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைத்து அவர் சொல்லிய வழிப்படி நாம் வாழ வேண்டும் (அவரை நம் இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும்). தன்னிடத்தில் விசுவாசம் வைக்கிறவர்கள் எவர்களோ, அவர்களுடைய பாவங்களுக்கான தண்டனையை தன்மீது சுமந்து கிறிஸ்து இயேசு சிலுவையில் மரித்தார். அதன்பின், நமக்கு ஜீவன் கொடுக்கும்படி தேவனாக உயிர்தெழுந்தார். நமக்காக பாடுகள் பட்டு மரித்து, உயிர்தெழுந்து நமக்கு ஜீவன் தந்த கிறிஸ்துவை நாம் தொடர்ந்து பின்பற்றி வாழ வேண்டும். அப்போது தான். நமது வாழ்வில் பரலோகத்தை நாம் நிச்சயத்துடன் நோக்கிப் பார்க்க முடியும்.

இதில், சிறப்பான விஷயம் என்னவென்றால். அழுத்தங்கள் நிறைந்த உலகில் வெற்றி பெறுவதோ. உயிர்வாழ்வதோ முக்கியமல்ல. இரட்சிப்பை அடைவதும், நித்தியத்திற்கான ஆயத்தங்களை செய்வதுமே பெரிய காரியம். இயேசு கிறிஸ்து மூலமாக இரட்சிப்பைப் பெற்ற மனிதன். எவ்வித அழுத்தங்களுமில்லாமல், பரிபூரணம் நிறைந்துள்ள பரலோகத்தை, நித்திய எதிர்காலமாக நோக்கிப் போக முடியும். அங்கு நித்திய மகிழ்ச்சி உண்டு.

அதே வேளை, தேவனை விசுவாசிக்காமல் உலகத்தை ஆதாயப்படுத்த எண்ணி வாழ்பவர்கள் நித்திய நரகத்தை அடைவார்கள். அங்கே (நரகத்தில்) நித்தியமான மன அழுத்தங்களால் அவதிப்படுவர் என்பதையும் வேதாகமம் நமக்கு எச்சரிக்கின்றது.
இதை வாசிக்கின்ற உனது நிலை என்ன? உலகத்தை ஆதாயப்படுத்த எண்ணி மன அழுத்தங்களாலேயே சாகப் (மடிய) போகின்றாயா? அல்லது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாக கிடைக்கும் நித்திய வாழ்க்கையை நோக்கி வாழப்போகின்றாயா?

சுமை தாங்கிகள்

நம் நாட்டில் பல பகுதிகளில் சுமை தாங்கி கற்கள் பாதையின் ஓரங்களில் அடுத்தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. சுமைகளை தூக்கி நடப்பவர்கள் சுமைதாங்கி மீது தங்கள் சுமைகளை வைத்து அருகிலுள்ள மரத்தின் நிழலில் சிறிது நேரம் இளைப்பாறுவார்கள். கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் ஒருவர், ஒரு சமயத்தில் இளைப்பாறிக்கொண்டிருந்தவர்களை நோக்கி ‘வேறு ஏதாவது சுமை உங்களுக்கு உண்டா” என்று கேட்டார்; ஆம், என்றார் அவர்களில் ஒருவர். என் மனைவியும் பிள்ளைகளும் எனக்கு சுமையாக இருக்கிறார்கள்; ஏனெனில் அவர்களுக்குப் போதுமான உணவு வகைகளை கொடுக்க என்னால் முடியவில்லை என மிக வருத்தத்துடன் கூறினார். என் பிள்ளைகளை படிக்கவைக்கமுடியவில்லையே என்றார் மற்றவர். உலக வாழ்க்கையில் கண்களினால் காணமுடியாத சுமைகள் பல உண்டு. இதை கேட்ட அந்த தேவனுடைய ஊழியர் பாவ சுமையைப் பற்றி அவர்களுக்கு சொன்னார், இந்த சுமையை அவர்கள் பார்க்க முடியாவிட்டாலும் அது உண்மை என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். மேலும் பாவச்சுமையை தம்மிடம் கொண்டு வரும்படி அழைத்த அன்புள்ள இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவர்களிடம் கூறினார்.

அநேக மாதங்களுக்குப்பின் ஒருவன் அதே தேவஊழியரைச் சந்தித்து, “நான் இயேசு கிறிஸ்துவின் மூலம் என் பாவச் சுமையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறேன். நீர் எனக்கு மெய்யான தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொன்னதற்காக தேவனுக்கு மிகவும் நன்றி செலுத்துகிறேன்” என்றான். உடனே அவனை அடையாளம் கண்டுகொள்ள அவரால் முடியவில்லை. பின்பு சுமைதாங்கி கல் அருகே சந்தித்ததை நினைவுகூர்ந்தார். அந்த மனிதன் தன் கடந்தகால வாழ்க்கையில் சுய முயற்சியால் பாவச் சுமையை நீக்க எடுத்துக்கொண்ட முயற்சியையும் அதினால் தான் சோர்வடைந்ததையும், காலம் வீணானதையும் கூறினதோடு, இயேசு கிறிஸ்துவின் மூலம் தான் பெற்ற சந்தோஷத்தையும் கூறினான். இவனுடைய திடீர் மாறுதலைக் குறித்து அறிந்து கொள்ள அந்த கிராமத்து மக்களும், இவனுடைய உறவினர்களும்’ விருப்பங்கொண்டு விசாரித்தனர் (மாற்கு 10:46-52). இயேசு கிறிஸ்து ஒரு குருடனை முதலில் “அழைத்தார்” பின்னர் “அவர் கண்களை திறந்து குணமாக்கினார்” அவன் இயேசு கிறிஸ்துவை பின் தொடர்ந்தான். அதைப்போலவே இவனும் தான் குணமடைந்த பின்பு அவரை பின் தொடர்ந்தான். கிராமத்தார்களுக்கும், தன் உறவினர்களுக்கும் இரட்சகரைப்பற்றி சொல்வதில் ஆனந்தமடைந்தான். இந்த ஏழை மனிதன் தன்னுடைய பாவச் சுமையை “எக்காலத்திலும் மாறாத கன்மலையின் மேல் வைத்து ஓய்வடைந்தான். 1 பேதுரு 2:6-ல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலைக்கல் என்று சொல்லப்பட்டிருக்கிறார்.” அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை.” கர்த்தராகிய இயேசு “விடாய்த்த பூமிக்கு பெருங்கன்மலையின் நிழலாக இருக்கிறார்.

மனந்தளர்ந்து போனவர்களையும், பாவபாரம் சுமந்து தவிப்பவர்களையும் இயேசு கிறிஸ்து வருந்தி அழைக்கிறார். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்பவர்களே ! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்.11:28).

இதைப் படித்துக்கொண்டிருக்கும் சிறு பிள்ளைகளே, பெரியோரே, இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதினால் “மரண வழி தொடராதிருக்க முடியும்.” தேவன் உங்களை நேசிக்கிறார். நீங்கள் உங்கள் பாவச் சுமையை உணர்ந்து விசுவாசத்தினால் இயேசு கிறிஸ்துவின் மூலமாக இரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். இப்படி செய்யமாட்டீர்களா? அருமையானவர்களே உங்கள் பாவத்தை விட்டு மனந்திரும்புங்கள்; இயேசு இரட்சகரை விசுவாசியுங்கள். அவர் ஒருவரே உங்கள் பாவத்திற்காக சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் ஜெய வேந்தராக உயிர்த்தெழுந்தார். நீங்கள் தாமதிப்பீhகளானால் தேவனுடைய சந்நிதியை விட்டு நிரந்தரமாக புறம்பாக்கப்பட்டு பாவத்தின் கடும் சுமையை சுமந்துகொண்டு அக்கினி கடலுக்கு இரையாவீர்கள். இதிலிருந்து தப்புவதற்கு வேறெந்த நம்பிக்கையோ மார்க்கமோ இல்லை. இப்பொழுதே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது அவர் உங்கள் பாவச் சுமையை நீக்கி மெய்யான சமாதானத்தை இலவசமாக கொடுப்பார். “இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் எப்படி தண்டனைக்குத் தப்பித்துகொள்ளுவோம்” (எபிரெயர் 4:2).

கடமையா – பாசமா

கடமைக் கண்ணனான திரு. ஆல்பர்ட் ஃபைசான் நதியின்மேல் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான இரயில் பாலத்தை இயக்கும் பணியில் இருக்கிறார். படகு கடந்து செல்ல திறப்பார். இப்போதும் பாலத்தை மூடவேண்டும், ஏனெனில் நியூயார்க் நகரிலிருந்து வரும் இரயில் பாலத்தைக் கடந்து செல்லவேண்டும்.

பாலத்தை அவருடைய பையன் பீட்டர் பாலம் மூடப்படுவதைப் பார்க்க ஓடோடி வந்தான். வந்த வேகத்தில் திடீரென கால் தவறி நதியில் விழுந்துவிட்டான். மறுவினாடியே இரயில் பாலத்தை நெருங்கிவிட்ட கூ சீழ்க்கையை அவர் கேட்டார். ஆனாலும் இரயில் இன்னும் கண்களுக்குப் புலப்படவில்லை. தான் உடனடியாகப் பாலத்தை மூடவேண்டியதை அவர் அறிவார். தவறினால் இரயில் பயணிகள் விபத்திற்குள்ளாவார்கள்! நதியில் விழுந்த பையனைக் காப்பாற்றுவதா அல்லது பாலத்தை மூடி இரயிலுக்கு வழியை அமைப்பதா? கடமையா – பாசமா? திரு. அல்பர்ட் என்ன செய்வார்?

உடைந்த உள்ளத்தோடு பையன் நதியில் மூழ்கிப்போவதைப் பார்த்தப்படி பாலம் மூடப்பட அதை முறைப்படி இயக்கினார். குடமை பாசத்தை வென்றுவிட்டது. இரயில் பாலத்தைக் கடந்ததும் நதியில் குதித்து பீட்டரின் உடலைக் கரைக்கு கொண்டுவந்தார். ஐயோ! காலம் கடந்து விட்டது. பையன் இறந்துவிட்டான்….

இந் நிகழ்ச்சி நம் உள்ளத்தை உருகச் செய்கிறது. கதறி அழும் தகப்பனாருடன் நம் உள்ளம் கலந்து விடுகிறதில்லையா? பையனைக் காப்பாற்ற எவ்வளவாய் ஏங்கினார். சிக்கலான நேரம், திடீர் தீர்மானம் செய்யவேண்டும். சொந்தப் பையனா அல்லது பயணிகளின் உயிரா? இரண்டையும் செய்ய இவரால் இயலாது. பையனின் உயிரைப் பொருட்படுத்தாமல், இரயில் இரும்புப் பாதையின் சட்டத்திற்கு கீழ்ப்படிந்து, பாலத்தை இயக்கினார். விபரம் அறிந்ததும் எவ்வாறு பயணிகள் திரு. ஆல்பர்ட் அவர்களுக்கு ஆறுதல், நன்றி கூறியிருப்பார்கள்!

இப்போது மற்றொரு முக்கியமான காட்சியை நம் மனக்கண் முன்பாகக் கொண்டுவருவோமாக. இங்கு கீழ்ப்படிதல் மட்டுமல்ல, மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட தெய்வீக அன்பும் வெளிப்படுத்தப்படுகிறது. முழு இருதயத்தோடும் கல்வாரிக் காட்சியை நோக்குவோமாக! பரமபிதா தமது திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவை சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, மனித இனத்திற்கு இரட்சிப்பாகிய விடுதலையை உண்டாக்கி வைத்திருக்கிறார். இது இலவசம். பாவிகள் மீட்படைய இதுவே வழி. ஒன்று நம் பாவத்திற்கான தண்டனையை நாமே அடைந்து அழியவேண்டும் அல்லது பரமபிதா தம் திருக்குமாரனை உலகத்திற்கு அனுப்பி தண்டனை முழுவதையும் அவர்மேல் சுமத்த வேண்டும். ஆண்டவருக்கு நன்றி! ஒப்பற்ற அவரது அன்பு வெளிப்பட்டது.

தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் (இயேசுவை) தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோ.3:16).

திரு. ஆல்பர்ட் தன் பையனை நதிக்கு அனுப்பவில்லை. கால் தவறி தானே விழுந்துவிட்டான். ஆனால் பரமபிதா தம் திருக்குமாரனை அனுப்பினார் (1.யோ.4:14). தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை (இயேசு கிறிஸ்துவை) இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது (1.யோ.4:9).

அருமையான நண்பரே! தேவ அன்புக்கு உம்முடைய உள்ளம் நன்றி செலுத்துகிறதில்லையா? உமக்காக உம் நல்வாழ்வுக்காக உமது பாவப் பிரச்சனைக்காக அவர் தம் திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவின் உயிரைக் கொடுத்தார் அல்லவா! நீர் அடையவேண்டிய தண்டனையைத் தாமே முன் வந்து ஏற்றுக்கொண்ட அருமை நாதராம் இயேசு பெருமானுக்கு உம்மையே ஜீவபலியாக, காணிக்கையாக அவரது மலரடிகளில் படைக்கமாட்டீரா? உம்மை அரவணைக்க, ஆசீர்வதிக்க, உமது பாவங்களை மன்னிக்க அவர் காத்திருக்கிறார். இயேசு பெருமான் சிலுவையில் சிந்திய இரத்தம் உம் பாவபாரத்தை நீக்கும். மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த இயேசு இரட்சகர் இன்றும் உம் உள்ளத்தின் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறார். திறந்துவிடுங்கள்.

வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன் (மத்.24:15)

Popular Posts

My Favorites

சமாதானம் சமாதானம்

ஏப்ரல் 05 "சமாதானம் சமாதானம்." ஏசாயா 57:19 இவ்விதமான மிருதுவான அமைதி தரும் வார்த்தைகளைத்தான் சுவிசேஷம் நமக்குச் சொல்லுகிறது. நமக்கு வரும் எத்துன்ப நேரத்திலும், சோதனையிலும், வியாதியிலும், வருத்தத்திலும் அது நம்மிடம் சமாதானம் சமாதானம் என்றே...