துண்டு பிரதிகள்

முகப்பு துண்டு பிரதிகள்

டீனேஷாவின் சோகவாழ்வும் புதிய திருப்பமும்

விக்கிரகத் தேவர்கள் யாவும் கடலில் மூழ்கின

இந்தியாவிலிருந்து கென்னியாவிற்குக் குடிபெயர்ந்த டினேஷா, தனது குடும்பத்துடன் அங்கு வாழ்ந்து வந்தாள். இளவயதிலிருந்து ஒரு இந்துப்பற்றுள்ள அந்தப் பெண்மணி, வழக்கப்படி விரதம் இருந்து, கும்பிட்டு, அர்ச்சனை செய்துவந்தாள். டினேஷாவின் குடும்பத்தில் அதிக பிரட்சனைகள் இருந்தன, ஆகவே அவர்கள் அதிகமாக விக்கிரகத் தேவர்களை வணங்கி வந்தார்கள். “சிலவேளையில் அவைகளில்ஒன்றாவது எமக்கு உதவலாம்….” என்று நம்பிய டினேஷாவும் அவளது சகோதரியும் அதிகாலையில் மூன்றுமணிக்கு வீட்டில் உள்ள விக்கிரகங்களைக் கழுவிவந்தார்கள். அவர்கள் வீட்டில் பொன்னாலும், வெள்ளியினாலுமான நூற்றுக்கணக்கான விக்கிரகங்கள் காணப்பட்டன. அவைகளில் ஒவ்வொன்றும் உடுத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு, உணவு படைக்கப்பட்டும் வந்தன. அதன் பிற்பாடு அவர்கள் இருவரும் மணித்தியாலக் கணக்காக அந்த விக்கிரகங்கள் முன்பாக இருந்து தியானம் செய்து, எல்லாச் சடங்குகளையும் செய்து முடிப்பார்கள். காலை ஒன்பது மணிக்கு அவர்கள் தங்கள் கடையைத் திறப்பதற்கு முன்னதாக, காலைதோறும் அந்த வழிபாட்டைச் செய்து வருவார்கள். விக்கிரகங்களுக்குச் செய்யவேண்டிய சகல கிரியைகளும் டினேஷாவுக்கும் அவளது சகோதரிக்கும் முக்கியமாக இருந்தது.

டினேஷாவினதும் அவளது குடும்பத்தாரினதும் வாழ்வு இன்னும் கஷ்டமாகவே சென்று கொண்டிருந்தன. அவளது உடலில் நோய்கள் ஆரம்பித்து, அவைகள் பாரிசவியாதியை ஏற்படுத்தின. டினேஷா பதினான்கு தடவைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பதினொரு தடவைகள் சத்திர சிகிச்சை பெற்றாள். அவள் வியாதிப்பட்டுங் கூட, அவளது சமயச் சடங்குகள் யாவும் இன்னும் அதிகரித்தே வந்தன. மூடநம்பிக்கைகள் போன்ற பயங்கரச் செய்கைகளும் அவளிடத்தில் ஆரம்பித்தன. என்னவெனில் பறவைகள், மிருகங்கள் போன்றவைகளின் ஆவிகளுக்கு அவள் பலி செலுத்தினாள். மந்திரம், சூனியம், சாஸ்திரம் போன்றவற்றில் வசீகரிக்கப்பட்ட டினேஷா, தனது குடும்பத்தார் ஒவ்வொருவரிலும் சந்தேகப்பட ஆரம்பித்தாள். ஆகவே அவள் தனது குடும்பத்தாருடன் பகையை உருவாக்கி தனிமையும் ஆனாள்.

இந்த நாட்களிலேயே டினேஷா தனது விக்கிரகங்களைத் திட்டத்தொடங்கினாள்.”நீங்கள் உண்மையிலேயே எனக்கு உதவுகின்றவர்களா?”என்றுகேட்ட அவள்” நான் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? எனக்கு நிம்மதியில்லை, சமாதானமில்லை நான் நோய்வாய்ப்பட்டும் போனேன், எனக்கு இருந்ததெல்லாம் உங்களுக்குச் செலுத்தினேன். இனி உங்களுக்குத் தருவதற்கு என்னிடத்தில் எதுவும் இல்லை, நீங்கள் எனது வீட்டில் இருந்த வண்ணம் ஒரு அறையைப் பிடித்துக் கொண்டு இருக்கிறீர்கள், நீங்கள் பொன்னும், வெள்ளியுமாய் இருக்கிறீர்கள். நீங்கள் ஊமைகளும், காதுகேளாதவர்களுமானவர்கள், நான் கும்பிட்டுப் பிரார்த்திக்கும் போது உங்களால் கேட்க முடியாதுள்ளது. இனி எனக்கு எல்லாம் போதும்!” இவைகளைக் கூறிய டினேஷா, அந்த விக்கிரகத் தேவர்களுக்குப் பரிட்சை கொடுக்க முன்வந்தாள். பொன்னிலும், வெள்ளியிலும் செய்யப்பட்ட அந்த விக்கிரகங்களால் நீந்த முடியுமா? என்று கேட்ட டினேஷா: “நீங்கள் உண்மையிலேயே தேவர்கள் என்றால், நான் உங்களைக் கடலில் எறியும் போது, நீங்கள் மீண்டும் மேலே வரவேண்டும். நீங்கள் உங்களைக்காத்துக்கொள்ள முடியாவிடில் மூழ்கிப் போகுங்கள், நான் இனிமேல் உங்களைப் பார்க்க விரும்பவில்லை” என்று கூறி அவைகளைக் கடலிலே எறிந்தாள். அவைகள் யாவும் கடலில் மூழ்கின.

இந்த நாட்கள் கடந்த பின்னர், ஒரு நாள் டினேஷாவின் இந்து நண்பி ஒருத்தி அவளிடத்தில் வந்து, அவள் இதுவரையில் கேள்விப்படாத ஒரு கடவுளைக் குறித்து அறிவித்தாள். அந்த கடவுள் “இயேசு பிரபு” இயேசு கிறிஸ்து என்று டினேஷாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தன்னிடத்தில் இதுவரையில் இருந்தவைகளிலும் பார்க்க இயேசு அதிகமானவர் என்பதை டினேஷா உணர்ந்தாள். அவர்கள் இருவரும் ஒருமித்து வேறொரு இந்தியப் பெண்ணிடம் சென்றார்கள். அப்பெண் இயேசுவில் விசுவாசம் உள்ளவளாக இருந்தாள். அவளுடன் ஆழ்ந்த சம்பாசணையை வைத்த டினேஷா, இயேசு கிறிஸ்து ஒருவரே உண்மையான கடவுள் என்பதை நன்கு அறிந்தாள். எல்லா இருளான அசுத்த வல்லமைகளிலிருந்து, இயேசு அவளை விடுவிக்க வல்லவர் என்று உணர்ந்த டினேஷா அவரை ஜெபத்தில் ஏற்றுக் கொண்டாள்

அந்த நாளிலிருந்து டினேஷா தனது வாழ்வை இந்த உண்மையுள்ள ஆண்டவரிடம் ஒப்படைத்தாள். அவள் அவருக்கு ஊழியம் செய்து, தனது சமயத்தாரும் இயேசுவை அறிய விரும்பினாள். இக்காலம் கழிந்த நாட்களில் டினேஷாவின் முழு குடும்பமும் இயேசுவில் விசுவாசம் வைக்க ஆரம்பித்தார்கள்.

நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார், தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.

அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.

அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது,

அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

அவைகளுக்குக் காதுகளிருந்தும் கோளது, அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.

அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.

அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவை களை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.

(பைபிள்) சங்கீதம் 115: 3-8

பகைவரை நேசிக்கும் இறையன்பு

மிட்சுவோ புச்சிடா என்னும் ஜப்பானிய போர் விமானியே டிசம்பர் 7, 1941 -ஆம் ஆண்டு பேர்ல் துறை முகத்தின் மீது நடந்த விமானத் தாக்குதலைத் தலைமைதாங்கி நடத்தியவர். தாங்கள் நடத்திய அந்தத் தாக்குதலில் முழுவெற்றியை அடைந்து விட்டதைக் குறிக்கும் வகையில், “டோரா, டோரா, டோரா” என்ற செய்தியையும் அவர் அனுப்பினார்.

ஆயினும் இரண்டாம் உலகப்போர் நீடித்தது. கடும் சண்டை நடந்தது. இந்த ஜப்பானிய போர் விமானி தொடர்ந்து பல முறை பறந்து தங்கள் நாட்டின் எதிரிகளைத் தாக்கி வந்தார்.

பலமுறை அவர் சாவுக்கு மிக அருகில் வந்தும், பகைமை உள்ளம் கொண்டு தன் உயிரையும் துச்சமாகக் கருதினார். இறுதியில் போரின் திசை திரும்பியது, அமெரிக்க ஐக்கிய நாடுகள் வெற்றி பெற்றது.

இப்போர் நடந்துகொண்டிருந்தபோது, பிலிப்பைன்ஸ் நாட்டில் கிறிஸ்தவ ஊழியர்களாகப் பணியாற்றிய வயது முதிர்ந்த தம்பதிகள் இருவரை ஜப்பானியர் படுகொலை செய்துவிட்டனர். அமெரிக்காவில் வசித்துவந்த அவர்களுடைய மகள் அந்தச் செய்தியைக் கேட்ட பிறகு, ஜப்பானியப் போர்க் கைதிகளைச் சந்திக்கவும், அவர்களுக்கு நற்செய்தியை வழங்கவும் தீர்மானித்தார். ஜப்பானியப் போர்க்கைதிகள் அப்பெண்மணியின் அன்பு பாராட்டுதலைக் கண்டு வியந்து, அதன் காரணத்தை வினவியபோதெல்லாம், “என்னுடைய பெற்றோர்கள் கொல்லப்படுவதற்குமுன் செய்த ஜெபமே என்னை இப்பணியில் வைத்திருக்கிறது” என்று பதில் உரைப்பார்.

தோல்வியால் மனக்கசப்பு அடைந்த புச்சிடா, தனக்குள் எழுந்த பகைமை உணர்ச்சியின் காரணமாக போர்க்காலக் குற்றங்களுக்காக அமெரிக்க ஐக்கிய நாடுகளை உலகப் பொது நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று தீர்மானித்தார். அதற்கென, அமெரிக்காவில் போர்க்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த ஜப்பானிய வீரர்களைச் சந்தித்து, சான்றுகளைத் திரட்டலானார். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சிறை வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய வீரர்கள் தங்களுடைய அனுபவங்களைக் கூறியபோது, அவருக்குப் பெரும் எரிச்சலும் ஏமாற்றமும் உண்டாயிற்று. அது அவர்கள் அடைந்த இன்னல்களினால் அல்ல. பிலிப்பைன்ஸ் நாட்டிலே படுகொலைக்கு ஆளான ஒரு தம்பதியின் மகள் அவர்களுக்குக் காட்டின அன்பைக் குறித்து மீண்டும் மீண்டும் அவர் கேள்விப்படலானார். அந்தப் பெண்மணி தங்களுக்குப் புதிய ஏற்பாடு என்னும் நூலைக் கொடுத்ததாகவும், அவருடைய பெற்றோர்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் ஏதோ புரிந்துகொள்ள முடியாத ஜெபத்தைச் செய்ததாகவும் கைதிகளாயிருந்த பலர் கூறினர். உண்மையில் புச்சிடா இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், அவருடைய உள்ளத்தில் அந்நிகழ்ச்சி ஆழமாகப் பதிந்துவிட்டது.

பலமுறை அக்கதையை அவர் கேட்டதினால் தானும் புதிய ஏற்பாடு ஒன்றை வாங்கினார். மத்தேயு நற்செய்தி நூலைப் படித்தபோது அவருக்கு அதில் ஆவல் மேலிட்டது. அடுத்து உள்ள மாற்கு நூலைத் தொடர்ந்து வாசித்தார். இன்னும் ஆவல் அதிகமாயிற்று, லூக்கா 23:34 -ஆம் வசனத்திற்கு வந்தபோது அவருடைய ஆத்துமாவில் ஒளி பிரகாசித்தது, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.” வயது முதிர்ந்த தம்பதியினர் தாங்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் என்ன ஜெபம் செய்தனர் என்பதை இப்பொழுது அவர் அறிந்துகொண்டார். தொடர்ந்து அந்த அமெரிக்க பெண்மணியைப் பற்றியோ, ஜப்பானியப் போர்க்கைதிகளைப் பற்றியோ அவருக்கு நினைக்கத் தோன்றவில்லை. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் ஜெபத்தைக் கேட்டு, கிறிஸ்துவிற்குப் பரம எதிரியாக வாழ்ந்த தன்னை மன்னிக்க ஆயத்தமாயிருக்கும் தேவனைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார். அந்த நேரத்திலேயே கிறிஸ்துவின்மீது விசுவாசம் கொண்டவராக, வேண்டுதல் செய்து, பாவமன்னிப்பையும், நித்திய ஜீவனையும் பெற்றுக்கொண்டார்.

பொதுநீதிமன்றத்தைக் குறித்து அவர் எண்ணியிருந்த திட்டம் அவரை விட்டு அகன்று போயிற்று. அதுமுதல் மிட்சுவோ புச்சிடா உலகெங்கும் சென்று, கிறிஸ்துவின் அளவற்ற ஐசுவரியத்தைக் குறித்துப் பிரசங்கித்துத் தனது எஞ்சிய வாழ்க்கையைக் கழித்தார்.

இயேசு கிறிஸ்து பாவங்களை மன்னித்து, பகையைக் கொன்று, அன்பினால் உள்ளங்களை வெல்லுகிறவர் என்பதை, அன்பு வாசகர்களே, இந்த உண்மைச் சம்பவம் உறுதி செய்கிறது. இதுவல்லவோ மனித உள்ளங்களை வெல்லும் இறையன்பு!

திருமறை கூறும் சத்தியங்கள் இவை:

“தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16).

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்

(1 தீமோ. 1:15). இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1 யோவான் 1:7,9).

உண்மையாதெனில், நாம் அனைவரும் தனிப்பட்ட நிலையில் பாவிகளாகவே இருக்கிறோம். “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை. தேவனைத் தேடுகிறவன் இல்லை. எல்லாரும் வழி தப்பி ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்.” என்று வேதம் கூறுகிறது (ரோமர் 3:10-12). ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களைச் சுமந்தவராகச் சிலுவைக்குச் சென்றார். நம் எல்லோருடைய பாவங்கள் அனைத்தையும் கழுவி, நம்மைச் சுத்தி செய்யத்தக்க வல்லமை, அவருடைய திரு உதிரத்திற்கு உண்டு. அவருக்கு நம்மை ஒப்படைப்போமாக! இயேசு கிறிஸ்து உங்கள் பாவங்களை மன்னிக்க ஆயத்தமாயிருக்கிறார்.

கிறிஸ்துவின் சிலுவைக் காட்சியை, ஒப்பற்ற திருக்காட்சியை, நம் கண்முன் நிறுத்துவோம். சிலுவையேயன்றி வேறொன்றிலும் நான் மேன்மை கொள்ளேன் என்ற பவுலடிகளின் கூற்றைச் சிந்திப்போம், தியானிப்போம், அவரை மனதார உள்ளத்தில் ஏற்போம்.

புச்சிடாவின் சாட்சி இது: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே’ என்ற வசனத்தை நான் படித்த அச்சணத்தில் முதன் முறையாக, இயேசு கிறிஸ்துவை நேரில் சந்தித்த உணர்வு எனக்கு உண்டாயிற்று. பாவிகளுக்கும் பகைவர்களுக்கும் பதிலாளாக சிலுவையில் மரிக்கையில் இயேசு ஏறெடுத்த ஜெபத்தின் பொருளைப் புரிந்துகொண்டேன். நான் என் பாவங்களை மன்னித்து என்னை ஏற்றுக்கொள்ளும்படியும், என் பகை உணர்வை அகற்றி நல்ல மனிதனாக ஆக்கும்படியும் ஆண்டவரிடம் ஜெபித்தேன். அவர் என்னைப் புதிய மனிதனாக்கினார்”, தனிப்பட்ட முறையில் நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உங்களை ஒப்படைப்பீர்களாக!

தேவ அன்பின் செய்திகள் – மனமே மருளாதே!

மருந்தகம், சந்தடி அதிகமுள்ள அந்தச் சாலையின் பக்கத்தில் அமைந்துள்ளது ஓர் மருந்தகம். சேவையே தனது வாழ்க்கையின் குறிக்கோள் என்பதைச் சுட்டிக்காட்டும் வண்ணம் அந்த மருந்தகத்தில் ஒரு சிகப்பு விளக்கு எரிந்து கொண்டேயிருக்கும். இரவு பகல் பாராது மக்களுக்குச் சேவை புரிவதால் அம்மருந்தகத்திற்குமட்டும் ஒரு தனிச் சிறப்பு. சுமார் 35 வயது மதிக்கக்கூடிய வாலிபன் சுந்தர் ஓர் மருந்தாளுநன். தன் பணியில் எப்பொழுதுமே மிக உண்மையுள்ளவனும், மனச்சாட்சிக்குப் பயந்தவனும், மருந்துகளைப் பற்றிய நல்ல அனுபவமுள்ளவனுமாயிருந்தான். ஆனால், சில நேரங்களில் மருந்து பெறுமிடத்தில் அமர்ந்தவாறே அரைத் தூக்கத்தில் ஆழ்ந்துவிடுவான். அப்பொழுது மருந்து வாங்க வருவோரின் அவசர நடைச் சப்தம் கேட்டு விழித்துக் கொள்வான்.

ஒருநாள் இரவு! மிக நோய்வாய்ப்பட்டிருக்கும் தன் தாய்க்கு மருந்து வாங்க ஒரு சிறுமி மருந்துச் சீட்டைக் கொண்டுவந்து சுந்தரிடம் கொடுத்தாள். அரைத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்த சுந்தரோ வெறுப்போடுகூட, பல்வேறு மருந்துப்புட்டிகளை எடுத்து, வைத்திய நியமத்தின் விகிதாச்சார முறைப்படி கலந்து ஒரு புட்டியில் ஊற்றி, புட்டியின் மேல் ஒரு அடையாளச் சீட்டையும் ஒட்டி அச்சிறுமியிடம் கொடுத்தான். அதை வாங்கிய அச்சிறுமி அதிவேகமாக ஓடி மறைந்தாள். அச்சிறுமி சென்றவுடன் பல்வேறு மருந்துப்புட்டிகளை அதனதன் இடத்தில் எடுத்து வைக்கும் பொழுது சுந்தரைப் “பெரும் பயம்” ஆட்கொண்டது. சுந்தர் என்ன காரியம் செய்து விட்டான்? தப்பிதமான வேறு ஒரு புட்டியையும் எடுத்திருந்தான். மருந்துகளை மருந்தோடு கலப்பதற்குப் பதிலாக கொடிய விஷத்தையும் கலந்துவிட்டான். நோயால் படுத்திருக்கும் அத்தாய் அதைச் சாப்பிட்டால் மரணம் நிச்சயம்! தாங்கொண்ணாத் துயர் கொண்ட மரணம்!!

சுந்தரால் என்ன செய்யமுடியும்? அச்சிறுமியையோ அல்லது அவள் வசிக்கும் இடத்தையோ அவன் அறியான். அச்சிறுமியை மட்டும் இப்போது அவன் கண்டு கொண்டானானால்! தன் மருந்தகத்தை விட்டு இருள் நிறைந்த வீதிக்கு ஓடினான்! தன்னால் முடிந்தமட்டும் வலதுபுறமும் பின் இடது புறமும் ஓடினான்!! தேடினான்!!! மூடிவோ பலனற்றுப் போயிற்று. அநேக வீதிகளின் ஊடாகக்கடந்த அச்சிறுமியையோ கரும் இருள் கவ்விக்கொண்டது. அச்சிறுமியோ வேறு அதிகப் பரபரப்புடன் காணப்பட்டாள். ஒருவேளை, தன் வீட்டையடைந்த சிறுமி அதே நிமிடத்தில் அவ்விஷத்தை ஊற்றித் தன் தாய்க்குக் கொடுத்திருந்தால்? ஆறியா சுந்தருக்குக் குப்பென்று வியர்த்துக்கொட்டியது! அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அப்பொழுது …… தன் கிறிஸ்தவ நண்பன் மறக்க வேண்டாமெனச் சொன்ன திருமறையின் தேவவாக்கு திடீரென அவன் ஞாபகத்திற்கு வந்தது.

“ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்”, கடந்த நாட்களில் சுந்தர், தன் கிறிஸ்தவ நண்பனிடம் குதர்க்கமும் கேலியும் செய்து ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப் புறக்கணித்திருந்தாலும் அவன் நினைவில் நின்ற நீங்காத வேத வாக்கு இதுவே.

சுந்தர் தன் மருந்தகத்துக்கு மிக அவசரமாகத் திரும்பினான். முழங்காலிட்டுத் தன்னை முற்றுமுடியத் தாழ்த்தி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை நோக்கி வேண்டுதல் செய்தான். இப்பொழுது அவன் எந்தவிதமான குதர்க்கமோ கேலியோ செய்யவில்லை. தன்னுடைய தாங்கொண்ணா வேதனையில் ஆண்டவராகிய இயேசுவை நோக்கிக் கூப்பிட்டு உதவி செய்யும்படி மன்றடினான். தன்னுடைய இருதயத்தை முற்றிலுமாகத் தேவனிடத்தில் ஊற்றி வேண்டுதல் செய்து கொண்டிருக்கும்பொழுது திடீரெனக் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டுத் திறந்தான். என்ன ஆச்சரியம்!!

கண்ணீர் வழிந்தோட, உடைந்த மருந்துப் புட்டியைப் பிடித்தவாறே, தான் அதிவேகமாக ஓடியதால் கீழேவிழுந்து மருந்துப் புட்டியை உடைத்து விட்டதாகவும், தன்னை மன்னிக்கும்படியும் விம்மியழுது கெஞ்சினாள் அச்சிறுமி! ஆனந்தப்பெருக்கில் சுந்தர் வேறு ஒரு புதுப் புட்டியை எடுத்து இம் முறை மிகக்கவனத்தோடு நிரப்பி அனுப்பினான். தான் அதிக நாட்களாகப் புறக்கணித்து வந்த தேவனின் ஒப்பற்ற பரிகாரத்துக்கு எவ்வளவு தகுதியற்றவன் என்று தன்னை நொந்துகொண்டான். சுந்தர் தன் கண்களை மூடினபொழுதோ, அவன் உள்ளத்துறைந்திருந்த சகல அசுத்தத்தையும், புத்தியில் புதைந்திருந்த துர்ச்சிந்தை யாவையும் கண்டான். தன் பாவங்களுக்காக மனம் வருந்தி, ‘என்னை உம்முடைய பிள்ளையாக மாற்றிக்கொள்ளும்’ என்று வேண்டுதல் செய்தான். அக்கணமே அவன் ஆண்டவராகிய இயேசுவின் பிள்ளையாக மாறினான். இப்பொழுதோ சுந்தர் அதிகச் சந்தோஷமுள்ளவனாகவும் உண்மையுள்ள தேவனுக்கு நன்றியுள்ளவனாகவும் காணப்பட்டான்.

இக்கைப்பிரதியை வாசிக்கின்ற என் அருமையான நண்பரே! சுந்தர் எப்பேர்ப்பட்ட ஆபத்திலிருந்து விடுதலை பெற்றன் என்பதை உம்மால் புரிந்துகொள்ள முடியும் என நம்புகிறேன். ஒருவேளை அவருடைய அன்பான அழைப்பைத் தொடர்ந்து புறக்கணித்திருந்தால் சுந்தரின் முடிவு எப்படியிருந்திருக்கும்? இதை வாசிக்கும் சிநேகிதரே! ஆண்டவர் உம்மைப் பார்த்து “வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 11:28) என்கிறார். உமக்கு மெய்வருத்தம் உண்டா? சுந்தருக்கு ஏற்பட்ட ஆபத்தைப் போல நீர் ஈடுபட்டிருக்கும் எப்பொறுப்பிலும் இவ்வித நிர்ப்பந்தமான நிலைமையை எதிர்பார்க்கலாம்.“ பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” (யோ.6:37) என்று தேவன் கூறுகிறார். தேவன் தமது கையை மிகுந்த ஆவலோடும் அன்போடும் நீட்டிக்கொண்டிருக்கிறார். உருகி அழைக்க உமக்கு மனமில்லையா? உருகி அழைத்தால் உமக்கேது துயரம்? வருந்தும் மனமே ஒளிவீசும் ஆலயம் என்பதை மறவாதேயும் !!

எனவே இதை வாசிக்கும் அன்பரே! பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன் (ரோ.6:23) என்று தேவன் கூறுகிறார். ஒருவேளை இத்தேவ அழைப்பின் சப்தத்திற்கு நீர் செவிசாய்க்காது போனால்….? ” மனமே மருளாதே! நீர் இன்றே அவரை உமது சொந்த இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டால் உமக்கு இளைப்பாறுதல் தந்து இளமையும் முதுமையுமற்ற நித்திய ஜீவனை உமக்களிப்பார்.

மனம் மாறிய மாலுமி

பல ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை ஒரு பெரிய கப்பல் நடுக் கடலில் சென்று கொண்டிருந்த சமயம் அக் கப்பலின் தலைவன் கேப்டன் ஜான் கொடிய வியாதிப் பட்டு மரணத் தருவாயில் இருந்தான்.

அப்பொழுது மரண பயமும், நித்திய வாழ்வைக் குறித்த கவலையும் அவனைப் பிடித்து வாட்டி வதைத்தன. தனக்குக்கீழ் பணிபுரியும் முக்கிய அதிகாரியை அழைத்தான். நான் பாவங்களையும் அக்கிரமங்களையும்” ஏராளமாய்ச் செய்துள்ளேன். அவைகள் எனக்கு மன்னிக்கப்படவும், எனது நித்திய வாழ்வுக்காக வும், எனக்காக ஜெபியுங்கள் என்று கேட்டுக்” கொண்டார். அந்த அதிகாரி தலைவனைப் பார்த்து, ஐயா! நான் ஜெபித்ததேயில்லை. ஜெபிக்க வும் தெரியாது என்றான். கப்பல் தலைவன் சத்தியவேதத்தைக் கொண்டுவந்தாவது வாசி”” என்றான். அதற்கு அந்த அதிகாரி வருத்தத்துடன் தலைவனைப் பார்த்து, என்னிடம் சத்திய” வேதமும் இல்லையே! என்ன செய்வது? என்றான்.

அப்போது அங்கே அந்தக் கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்த தேவஊழியர் ஒருவர் முன்வந்தார். கப்பல் தலைவனின் வேண்டுதலின்படி அந்த ஊழியர் வேதத்தைத் திறந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் 53வது அதிகாரத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார்.

“நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு,

நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்.

நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது.

அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.” என்று அந்த அதிகாரத்தின் 5வது வசனத்தை வாசித்தார்.

உடனே, கப்பல் தலைவன், அங்கேயே நிறுத்திக் கொள்ளுங்கள் ஐயா! எனது” தாயார் இந்த வசனத்தில் எனது பெயரையும் வைத்து ஜெபிக்கும்படி கூறினாள். எனக்கோ இதன் அர்த்தம் புரியவில்லை. ஆகையால் இதை நான் ஜெபமாகக் கூறமுடியவில்லை. இந்த வசனம் என்ன சொல்லுகிறது. எனக்கு சற்று விளக்கிச் சொல்லுங்கள் என ஆவலுடன்” கேட்டான்.

அதற்கு அந்த தேவமனிதர், தலைவனே! ஒரு உதாரணம் கூறுகிறேன்.” கேளும். என்னிடமிருந்த விலையுயர்ந்த கண்ணாடிப் பொருளை என் வேலைக்கார சிறுவன் உடைத்துவிட்டு, பிறகு என்னிடம் வந்து அதற்காக மன்னிப்புக் கேட்டான். நானும் அவனை மன்னித்துவிட்டேன். இப்போது உம்மிடம் ஒரு கேள்வி? இந்த மன்னிப்புக்கான விலை எவ்வளவு?எனக் கேட்டார்.

கப்பல் தலைவன் போதகரே! “அந்தக்கண்ணாடிப்பொருளின் விலை எதுவோ? அதுவே மன்னிப்பின் விலை. அதாவது அந்தக் கண்ணாடிப்பொருள் தான் உமது மன்னிப்பின் விலை” என்றார். போதகர் கப்பல் தலைவனைப் பார்த்து நீங்கள் சரியாகச்” சொன்னீர்கள். நாமும் பாவம் செய்யும் போதெல்லாம் கடவுளுக்கு விரோதமாகத்தான் பாவம் செய்கிறோம். புpறகு அவரிடம் வந்து சரணடைந்து மன்னிப்புக் கேட்டால் அவர் உடனே மன்னித்து விடுகிறார். ஆனால் நம்மை அவர் மன்னிக்க அவர் ஒரு விலையைக் கொடுக்கவேண்டும். பாவத்தின் சம்பளம் மரணம். உயிருக்கு விலை உயிர்தான் அல்லவா? எனவே தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னுயிரைத் தந்து எம்மை மன்னிக்கும் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டார். என்றார்.”

மேலும் கப்பல் தலைவனிடம், இப்போது” உமது தாயார் சொன்னபடி சொல்லித் தருகிறேன் ஜெபியும் என்றார். தலைவன் உடனேயே” கண்களை மூடி ஜெபிக்க ஆரம்பித்தான். தனது பெயரை அழுத்தம்திருத்தமாக

“கேப்டன் ஜானுடைய மீறுதல்களினிமித்தம் இயேசு காயப்பட்டு,

கேப்டன் ஜானுடைய அக்கிரமங்களினிமித்தம்

இயேசு நொறுக்கப்பட்டார்.

கேப்டன் ஜானுக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை இயேசுமேல் வந்தது.

இயேசுவின் தழும்புகளால்

கேப்டன் ஜான் குணமடைகிறான். “என்று தேவ மனிதர் சொல்லச் சொல்ல கேப்டனும் ஜெபித்தார்.

ஜெபித்தவுடன் கேப்டனின் இருதயம் இலகுவானது.

கேப்டன் தானாகவே அழுகையுடன் திரும்பத்திரும்ப ஜெபித்துக்கொண்டிருந்தார். அப்போதே இயேசு தன் பாவங்களை மன்னித்து விட்டார் என்ற நிச்சயமும், இயேசுவின் காயப்பட்ட கரங்களினால் நான் சுகமானேன் என்ற நம்பிக்கையும் கேப்டன் ஜானுக்கு வந்து விட்டது. அந்த நாளிலேயே அவரது உடலில் ஏற்பட்ட வியாதி நீங்கி நல்ல சுகத்தைப் பெற்றார். மரண பயமும் நீங்கிப் போனது. தொடர்ந்து தன் கப்பற்பணியை சந்தோஷமாக நிறைவேற்றினார்.

ஆம்! கேப்டன் ஜானுடைய வாழ்க்கைப் பயணம் கூட புதிய திசையில் பயணிக்க ஆரம்பித்தது.

அன்பானவர்களே!

இந்த கைப்பிரதியை வாசிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் எந்த மார்க்கத்தவராயிருந்தாலும் கிறிஸ்துவுக்கு விரோதமானவராயிருந்தாலும் அவர் எல்லா வற்றையும் மன்னித்து தங்கள் வாழ்வில் சமாதானத்தையும், மாறாத சந்தோஷத்தையும் தரக் காத்திருக்கிறார்.

இந்த கேப்டன் ஜானைப் போல் அவரைத் தேடினால் கண்டு கொள்வீர்கள். அவனுக்கு உண்டானதுபோல் கொடிய வியாதியினாலோ, மனநிம்மதியின்றியோ, துயரத்திலோ, வேதனையிலோ நீங்கள் இருக்கக் கூடும். ஆனால் இனி நீங்கள் அவ்வாறு இருக்கத் தேவையில்லை. கடவுளுக்குப் பிரியமில்லாத தவறினை, பாவத்தைச் செய்வதால் நம் வாழ்வில் இத்துன்பங்களால் வாடுகிறோம். அவற்றிலிருந்து எம்மை விடுவிக்கவே ஆண்டவராகிய இயேசு காயப்பட்டார். சிலுவையிலே அறையப்பட்டார். கொலையுண்டார். நமக்;கு எட்டாத சந்தோஷமான சமாதானமான வாழ்வு கிடைக்கும்படிக்கே அவர் சிலுவையில் பலியானார்.

இயேசுவின் காயத்தின் தழும்புகள் உங்கள் வியாதிககைக் குணமாக்கும் வல்லமை யுள்ளது. இன்றே நீங்களும் கேப்டன் ஜானைப் போல அந்த வசனத்தில் உங்கள் பெயரை வைத்து நம்பிக்கையுடன் சொல்லிப் பாருங்கள்.

பூட்டிய அறையில் தனித்திருந்து இயேசுவை வேண்டி உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள். நிச்சயமாகவே நீங்களும் அவரிடம் பாவ மன்னிப்பைப் பெறுவதோடு இப்பூமியிலே மனசமாதானத்தையும் சந்தோஷத்தையும் மறுமையில் தேவனோடு கூட வாழும் பரலோக வாழ்வையும் பெறுவீர்கள்.

தேவன்தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக!

கடமையா – பாசமா

கடமைக் கண்ணனான திரு. ஆல்பர்ட் ஃபைசான் நதியின்மேல் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான இரயில் பாலத்தை இயக்கும் பணியில் இருக்கிறார். படகு கடந்து செல்ல திறப்பார். இப்போதும் பாலத்தை மூடவேண்டும், ஏனெனில் நியூயார்க் நகரிலிருந்து வரும் இரயில் பாலத்தைக் கடந்து செல்லவேண்டும்.

பாலத்தை அவருடைய பையன் பீட்டர் பாலம் மூடப்படுவதைப் பார்க்க ஓடோடி வந்தான். வந்த வேகத்தில் திடீரென கால் தவறி நதியில் விழுந்துவிட்டான். மறுவினாடியே இரயில் பாலத்தை நெருங்கிவிட்ட கூ சீழ்க்கையை அவர் கேட்டார். ஆனாலும் இரயில் இன்னும் கண்களுக்குப் புலப்படவில்லை. தான் உடனடியாகப் பாலத்தை மூடவேண்டியதை அவர் அறிவார். தவறினால் இரயில் பயணிகள் விபத்திற்குள்ளாவார்கள்! நதியில் விழுந்த பையனைக் காப்பாற்றுவதா அல்லது பாலத்தை மூடி இரயிலுக்கு வழியை அமைப்பதா? கடமையா – பாசமா? திரு. அல்பர்ட் என்ன செய்வார்?

உடைந்த உள்ளத்தோடு பையன் நதியில் மூழ்கிப்போவதைப் பார்த்தப்படி பாலம் மூடப்பட அதை முறைப்படி இயக்கினார். குடமை பாசத்தை வென்றுவிட்டது. இரயில் பாலத்தைக் கடந்ததும் நதியில் குதித்து பீட்டரின் உடலைக் கரைக்கு கொண்டுவந்தார். ஐயோ! காலம் கடந்து விட்டது. பையன் இறந்துவிட்டான்….

இந் நிகழ்ச்சி நம் உள்ளத்தை உருகச் செய்கிறது. கதறி அழும் தகப்பனாருடன் நம் உள்ளம் கலந்து விடுகிறதில்லையா? பையனைக் காப்பாற்ற எவ்வளவாய் ஏங்கினார். சிக்கலான நேரம், திடீர் தீர்மானம் செய்யவேண்டும். சொந்தப் பையனா அல்லது பயணிகளின் உயிரா? இரண்டையும் செய்ய இவரால் இயலாது. பையனின் உயிரைப் பொருட்படுத்தாமல், இரயில் இரும்புப் பாதையின் சட்டத்திற்கு கீழ்ப்படிந்து, பாலத்தை இயக்கினார். விபரம் அறிந்ததும் எவ்வாறு பயணிகள் திரு. ஆல்பர்ட் அவர்களுக்கு ஆறுதல், நன்றி கூறியிருப்பார்கள்!

இப்போது மற்றொரு முக்கியமான காட்சியை நம் மனக்கண் முன்பாகக் கொண்டுவருவோமாக. இங்கு கீழ்ப்படிதல் மட்டுமல்ல, மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட தெய்வீக அன்பும் வெளிப்படுத்தப்படுகிறது. முழு இருதயத்தோடும் கல்வாரிக் காட்சியை நோக்குவோமாக! பரமபிதா தமது திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவை சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, மனித இனத்திற்கு இரட்சிப்பாகிய விடுதலையை உண்டாக்கி வைத்திருக்கிறார். இது இலவசம். பாவிகள் மீட்படைய இதுவே வழி. ஒன்று நம் பாவத்திற்கான தண்டனையை நாமே அடைந்து அழியவேண்டும் அல்லது பரமபிதா தம் திருக்குமாரனை உலகத்திற்கு அனுப்பி தண்டனை முழுவதையும் அவர்மேல் சுமத்த வேண்டும். ஆண்டவருக்கு நன்றி! ஒப்பற்ற அவரது அன்பு வெளிப்பட்டது.

தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் (இயேசுவை) தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோ.3:16).

திரு. ஆல்பர்ட் தன் பையனை நதிக்கு அனுப்பவில்லை. கால் தவறி தானே விழுந்துவிட்டான். ஆனால் பரமபிதா தம் திருக்குமாரனை அனுப்பினார் (1.யோ.4:14). தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை (இயேசு கிறிஸ்துவை) இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது (1.யோ.4:9).

அருமையான நண்பரே! தேவ அன்புக்கு உம்முடைய உள்ளம் நன்றி செலுத்துகிறதில்லையா? உமக்காக உம் நல்வாழ்வுக்காக உமது பாவப் பிரச்சனைக்காக அவர் தம் திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவின் உயிரைக் கொடுத்தார் அல்லவா! நீர் அடையவேண்டிய தண்டனையைத் தாமே முன் வந்து ஏற்றுக்கொண்ட அருமை நாதராம் இயேசு பெருமானுக்கு உம்மையே ஜீவபலியாக, காணிக்கையாக அவரது மலரடிகளில் படைக்கமாட்டீரா? உம்மை அரவணைக்க, ஆசீர்வதிக்க, உமது பாவங்களை மன்னிக்க அவர் காத்திருக்கிறார். இயேசு பெருமான் சிலுவையில் சிந்திய இரத்தம் உம் பாவபாரத்தை நீக்கும். மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த இயேசு இரட்சகர் இன்றும் உம் உள்ளத்தின் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறார். திறந்துவிடுங்கள்.

வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன் (மத்.24:15)

பானம் பண்ணுவோம் வாருங்கள்

உற்பத்தியைப் பெருக்கும் தொழிற்கூடங்கள் நிறைந்திருந்த ஒரு பெரிய பட்டணத்தில் ஒருநாள், நான் ஒருவரோடு சம்பாஷித்துக்கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்து, “வாருங்கள், நாம் பானம் அருந்தி செல்வோம்’ என்றார். அதற்கு நான் அவர் அழைத்த நோக்கத்தை அறிந்துகொண்டு, ‘வேண்டாம், உம்முடைய அழைப்புக்கு மிக்க நன்றி” என்று சொன்னேன். அச்சமயததில் என் உள்ளத்தில் அநேக ஆண்டுகளுக்குமுன் நான் கேள்விப்பட்ட: ‘ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்” (யோவான் 7:37). “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” (யோ.6:35) என்ற வேத வசனங்கள் ஞாபகத்துக்கு வந்தன. அவைகளை அவருக்குச் சொன்னேன்.

மேற்கூறிய அழைப்புகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் இப்பூவுலகில் இருந்தபோது கூறியவைகள், அவரது ஆசீர்வாதமான உதடுகளால் அப்பொழுது சொல்லப்பட்டவைகள், இன்றும் உண்மையுள்ளவைகளாக இருக்கின்றன. உலகிலுள்ள ஒவ்வொருவருடைய எண்ணங்களையும் அவர் அறிந்து, “ஒருவன் தாகமாயிருந்தால்” எனக் கூறியுள்ளார். உண்மையான ஆத்தும தாகமுள்ள ஆயிரக்கணக்கான ஆத்துமாக்கள் இன்றைக்கு பல சிற்றின்ப ஊற்றுகளால் தங்களுடைய ஆத்தும தாகத்தை தீர்த்துகொள்ள முயற்சித்தும் வெற்றிபெறாமலிருக்கிறதை அவர் நன்கு அறிவார். துக்கம், துன்பம், துயரம், வேதனை, கொடுமை மனச்சித்திரவதை, உபத்திரவம் ஆகிய பாவ நோய்களின் மூலம் அவர்களின் ஆத்துமாக்கள் மன நிறைவு அடையாமல் ஏங்கித் தவித்து நிற்பதையும் அவர் அறிந்துள்ளார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கிறிஸ்துவினால் மட்டும் அம்மன நிறைவு அருளப்படக்கூடும். இதினிமித்தமே “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்” எனக்கூறினார்.

அவரிடம் வந்து சேராத ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் இங்கே திட்டவட்டமான பரிகாரம் உண்டு. முதலாவதாக இதனை ஒரு தனிப்பட்ட அழைப்பாகத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். மனுக்குலத்தோர் யாராயினும் தங்களுடைய ஆத்தும தாகத்தை உணர்ந்து அவரண்டை வரக்கூடும். தேவனுடைய அருமையான குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே இந்த அழைப்பை விடுத்துள்ளார் என்பது எவ்வளவு ஆச்சரியமானது. ஆனால் என் அருமை நண்பனே ! நான் உம்மிடத்தில் மிக மிக முக்கியமான கேள்வி ஒன்றினைக் கேட்க அனுமதி கிடைக்கட்டும். இந்த அன்பும் கிருபையுமான அழைப்பிற்கு நீ இதுவரை எப்பொழுதாவது தக்க மறுமொழி கூறினதுண்டா?

உனது உள்ளம் தனிமையான நிலையில் துக்கத்தோடு பாவச் சுமையினால் அழுத்தப்பட்டு இருக்கும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சமாரியப் பெண்ணுடன் சம்பாஷிக்கையில் “இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகம் உண்டாகும். ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகம் உண்டாகாது. நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய காலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்’ என்று உரைத்தபோது அப்பெண்ணுக்கு உண்டானதுபோல, நீ இதை வாசிக்கையில் கர்த்தரின் பரிசுத்தாவியானவர் அதனை உணரும்படி உன் மனதுக்குள் உன்னை ஏவவில்லையா ?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இதனை என்ன கருத்துடன் கூறியுள்ளார் என்பதனை வேறு விதமாக சொல்வோமானால் ‘நான் குடிக்கக் கொடுக்கும் தண்ணீர்’ என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான் அந்த வாழ்வளிக்கும் ஊற்றாக இருக்கிறார். உடலுக்குப் புத்துயிர் அளிக்கத்தேவையானது இயற்கையான தண்ணீராகும். ஆனால் மரிக்காமல் என்றும் நிலைத்திருக்கும் ஆத்மாவின் உள்ளான தேவைகளை நிறைவேற்ற அந்த ஜீவத் தண்ணீர் தான் தேவைப்படுகிறது. எனது அருமை நண்பனே நீ ஒரு ஏழ்மையான, ஆதரவற்ற அனாதியான இழந்துபோன பாவியாக உள்ள நிலையில், நம்பிக்கையின் அடிப்படையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை, உன் மீட்பராக ஏற்றுக்கொள்ளமாட்டாயா? தேவன் எங்குமுள்ள எல்லா மனுமக்களுக்கும் “இப்பொழுதே மனந்திரும்புங்கள்’ (அப்போஸ்தலர் 17:30) என்று கட்டளையிடுகிறார். மனந்திரும்பு என்பது பாவத்தினின்று விலகிவா என்பது பொருள். உன்னில் காணப்படும் அசுத்த நிலை, இழந்து போன சீரழிந்த நிலை இவைகளை உணர்ந்து பேதுருவைப் போல, கர்த்தரின் முந்நிலையில் இவைகளை ஒப்புக் கொண்டு.’ஓ கர்த்தாவே நான் ஒரு பாவி” என அறிக்கையிடு. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் (1 யோவான் 1:7). தெய்வத்தின் அதிசயமான அழைப்பை ஏற்றுக்கொள்ளாத எல்லோரும் நியாயத்தீர்ப்பின்போது அக்கினிக் குழியில் தள்ளப்படுவார்கள் என்று உணர்ந்து, நரகத்திலே தள்ளக்கூடிய வல்லமையுள்ள “அவருக்கே பயப்படுங்கள்’ (லூக்கா 12:5) என நான் உனக்குக் கூறிக்கொள்ளுகிறேன்.

“தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16)

சுகமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எருசலேம் என்னும் பட்டணத்தில் பெதஸ்தா எனப்பட்ட ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தின் கரையில் ஐந்து மண்டபங்கள கட்டப்பட்டிருந்தன. அவைகளில் குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து தங்கள் சுகத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.

முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனிதன் அங்கே படுத்திருந்தான். இந்த மனிதனுடைய நிலைமை மிகவும் பரிதாபகரமாய் இருந்தது. இந்த மனிதனைக் குறித்து ஆராயும்போது, முதலாவது, இவன் நெடுநாள் வியாதியுள்ளவனாய் இருந்தான். ஒன்று இரண்டு வருடங்களல்ல, முப்பத்தெட்டு வருடம் படுக்கையில் கிடந்து இவனது உறுப்புகள் செயலற்றுப் போயிருந்தன.

இரண்டாவதாக இந்த மனிதன் உதவியற்றவனாயிருந்தான். இவனை ஆரம்பத்தில்கவனித்து வந்தவர்கள் இவனுக்கு உதவி செய்து சலித்துப் போனார்கள். இப்பொழுது உதவி செய்ய யாரும் முன் வரவில்லை. வேளா வேளைக்கு உணவு கொடுத்து கவனிக்கயாருமில்லை. மூன்றாவதாக நம்பிக்கையற்றவனாயிருந்தான். ஆரம்பத்தில் இந்த வியாதி சுகமாகிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. இப்பொழுதோ முப்பத்தெட்டு ஆண்டுகள் கடந்து விட்டது. “இனி யார் தான் என்னை சுகப்படுத்தப்போகிறார்கள்? நான் சாகும்வரை இதே படுக்கையில்தான் சாக வேண்டும்” என்று வாழ்க்கையில் நம்பிக்கையற்ற நிலையில் இந்த மனிதன் இருந்தான்.

இப்படி இந்த மனிதன் நெடுநாளாய் வியாதிப்பட்டு, உதவியற்றவனாக, நம்பிக்கையிழந்து படுத்திருக்கும்போது, ஒரு நாள் அவனைத்தேடி வந்த மனிதர் அதிசயமான கேள்வியைக் கேட்டார். சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா? என்பதே அக்கேள்வி. சுகத்திற்கு ஏங்கிக் கொண்டிருக்கும். அந்த மனிதன் இந்த வார்த்தைகளைக் கேட்டு உடனே, மிகுந்த ஆச்சரியப்பட்டு, என்னை அன்போடு விசாரிக்கும் இவர் யார்? என்று அவரை நோக்கிப் பார்த்தான். மன உருக்கமுள்ளவராக, கண்களில் அன்பு கனிந்தவராக இயேசு கிறிஸ்து அவனையே நோக்கிக் கொண்டிருந்தார். அவன் தன்னுடைய உதவியற்ற நிலைமையை இயேசுவுக்கு எடுத்துச் சொன்னான். இயேசு அவனை நோக்கி “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட” என்றார். உடனே அந்த மனிதன் சொஸ்தமாகி தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து போனான். (யோவான் 5:9)

இதை வாசிக்கும் அருமை சகோதரனே! சகோதரியே! ஒருவேளை நீயும் இந்த வியாதியஸ்தனைப்போல் நெடு நாட்களாக வியாதிப்பட்டு படுக்கையில் இருக்கலாம். “எனக்கு உதவி செய்ய யாருமில்லை. நான் தனிமையாக கஷ்டப்படுகிறேன்” என்று கலங்கிக் கொண்டு இருக்கலாம். பயப்படாதே! முப்பத்தெட்டு ஆண்டுகளாக தனிமையில் கிடந்த மனிதனைத் தேடி வந்த இயேசு கிறிஸ்து இன்று உன்னைத் தேடி வந்திருக்கிறார். அவர் உன்னை நேசிக்கிறவர். அன்போடு விசாரிக்கிறவர். காரணம் அவரே உன்னை உண்டாக்கினவர்.

“டாக்டர்கள் என்னை கைவிட்டார்கள், மருந்துகளாலும் பிரயோஜனமில்லை, நான் வாழப்போவது உறுதியில்லை’’ என்று நம்பிக்கையிழந்து கலங்கிக் கொண்டிருக்கிறாயா? கலங்காதே! முப்பத்தெட்டு ஆண்டுகளாக சுகமாகாத வியாதிக்காரனை “எழுந்து நட” என்ற ஒரே சொல்லால் சுகப்படுத்தின இயேசுக் கிறிஸ்து உன் வியாதியை சுகப்படுத்துவது அதிக நிச்சயம். ஏனென்றால் “இயேசு கிறிஸ்துதாமே நம்முடைய பலவீனங்களை ஏற்றுக் கொண்டு, நம்முடைய நோய்களை (சிலுவையில்) சுமந்தார்.’ மத்தேயு 8:17 இயேசு கிறிஸ்து உன் பலவீனங்களையும், நோய்களையும், சுமந்து தீர்த்துவிட்டபடியினால் அவர் உன்னைச் சுகமாக்க வல்லவராயிருக்கிறார்.

இந்த இயேசுகிறிஸ்து இப்போது உன்னைத் தேடி வந்திருக்கிறார். “சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா? என்று உன்னைப் பார்த்து கேட்கிறார். ஆனால் உன் வியாதிக்காக இயேசுவை நோக்கிப் பார்க்கும் முன்பாக ஒரு முக்கியமான காரியத்தை நீ செய்யவேண்டும். உன் பாவங்கள் மன்னிக்கும்படியாக சுகமாக்கும் இயேசுவை உன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால்… சுகத்தைப் பெற்றுக்கொண்ட இந்த வியாதியஸ்தனை இயேசு தேவாலாயத்தில் கண்ட போது “இதோ நீ சொஸ்தமானாய் அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனி பாவம் செய்யாதே” என்றார். (யோவான் 5:14) இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தையிலிருந்து, இந்த மனிதனுடைய பாவமே இவனுடைய வியாதிக்கு காரணமாயிருந்தது என்பதை அறிகிறோம்.

அருமையான சகோதரனே, சகோதரியே உன்னுடைய. வியாதிக்குக்கூட உன் பாவமே காரணமாயிருக்கலாம். ஆகவே உன் பாவத்தை சுமந்து தீர்த்த இயேசுவுக்கு உன் உள்ளத்தில் இடம் கொடு. தன்னிடத்தில் வந்த எந்த பாவியையும் அவர் புறம்பே தள்ளுவதில்லை.

இயேசு கிறிஸ்து உன் பாவங்களுக்காக சிலுவையில் இரத்தம் சிந்தினார் என்பதை விசுவாசி “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது.” (ஏசாயா 53:5) “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்.” (1 யோவான் 1:7)

“இயேசுவே என் பாவங்களை மன்னியும்” என்று இருதய கதவைத் திறந்து கொடு, அப்பொழுது அவர் இருதயத்தில் வருவார், உன் பாவங்களை மன்னிப்பார். உன் வியாதிகளை குணமாக்குவார். தெய்வீக சமாதானத்தினாலும், சந்தோசத்தினாலும் உன் உள்ளத்தை நிரப்புவார். “இதோவாசற்படியில் நின்று தட்டுகிறேன். ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவை திறந்தால் அவனிடத்தில் நான் பிரவேசிப்பேன்” இயேசு (வெளி 3:20)

உன் உன் இருதய கதவை தட்டிக் கொண்டிருக்கும் இயேசுகிறிஸ்து “சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?” என்று இப்பொழுது உன்னை கேட்கிறார். அவருக்கு உன் இருதய கதவைத் திறந்து கொடுத்து, இந்த வியாதியஸ்தனைப் போல நீயும் உன் நிலைமையை இயேசுவிடம் சொல், நான் அனுபவிக்கும் இந்த வியாதிக்கு காரணமான என் பாவங்களையும் நீர் எனக்காக சிலுவையில் சுமந்தீரே! ஆகவே என் பாவங்களை மன்னித்து என் வியாதியிலிருந்து சுகம் தாரும் என்று கேள். இயேசுகிறிஸ்து நிச்சயமாக உன்னைச் சுகப்படுத்துவார். “அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:5)

கிறிஸ்து இயேசு அவருடைய தழும்புகளால் தொட்டு உன்னை சுகப்படுத்துவாராக.

மீட்பு

எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள். (ரோ.3:23-24)

புதிதாக ஒருவர் உங்களை சந்திக்க வந்தால் அவர் மதிப்புக்குரியவர் என எண்ணி வீட்டுக்குள் வரவேற்று தேனீர் அருந்தக்கொடுப்பீர்கள். விருந்தினரை வரவேற்று அவர்களை உபசரிப்பது நமது கலாச்சாரம். சில சமயங்களில் அவருக்கு உதவி புரியவும் முன்வருவோம்.

இதுபோன்ற நற்பழக்க வழக்கங்களை, கெடுதியானதும் துன்பம் நிறைந்ததுமான சூழ்நிலைகளில் மனிதர்கள் மறந்து விடுவதுண்டு. இவ்விதமான சூழ்நிலையில் அநேக மதிப்பிற்குரியவர்களும் கூட மிகவும் முரட்டுத்தனம் உள்ளவர்களாகவும், கொடுமையானவர்களுமாய் மாறிவிடுகிறார்கள். பசியுற்றவர்கள் திருடுவார்கள், பயமுற்றவர்கள் தங்கள் அயலாரைக் காயப்படுத்துவார்கள். பொய்யும், பகையும் நம் சூழ்நிலைகளை கெடுத்துவிடும். அனுபவங்கள் மற்றவர்களைக் குறித்து சந்தேகப்படவும் தீமையான எண்ணங்கொள்ளவும் வழிநடத்திவிடுகின்றது. இவ்வாறு நாடுகளுக்கிடையேயும் கெடுதியான இருளான எண்ணங்கள் காணப்படுகின்றது. நீங்கள் எப்படிப்பட்ட கசப்பானவர்கள்? உங்கள் எதிரியைவிட நீங்கள் முன்னேற முயற்சிக்கும்போது அவனுடைய அழிவைக்கண்டு நகைப்பதில்லையா? பள்ளிப்படிப்பிலும் கூட மற்றவர்களைக் குறித்த கரிசனை, பாரம் இல்லாது உங்களுடைய வெற்றியைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பதில்லையா? உணவருந்தும்போதும் சுவையான ஆகாரத்தையே விரும்பி அதைப் பெற்றுக்கொள்ள துடிப்பதில்லையா? நீங்கள் ‘தூஆ’ செய்யும்போது உங்களுடைய பிரச்சனைகளுக்காகவே அதிகநேரம் இறைவனிடம் (அல்லாவிடம்) கேட்பது இல்லையா?

இயற்கையாகவே மனிதன் சுயநலமும், தயக்கமும், தீய நாவும் உடையவனாக இருக்கிறான். ஏனெனில் இறைவனின் இரக்கம் அவனில் வாசம் செய்வதேயில்லை. பிறர் உனக்கு எதிராக யாதொரு காரியத்தையும் செய்யும்போது இறைவன் உன்னில் அன்பு கூர்ந்ததுபோல நீ அவர்களில் அன்பு கூறுவதேயில்லை. நாமெல்லாரும் பாவம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து சாத்தானின் சோதனைகளைக் கண்டு நகைக்கிறவர்களாய் காணப்படுகிறோம். இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய நமக்கு பிரியமில்லை. மேலும், நம்மைப் படைத்தவரைப்பற்றிய எண்ணமும் நம்மில் இல்லை. நாம் நமது பாவங்களை விட்டுவிட மனமில்லாத அளவிற்கு நமது பாவத்தை விரும்புகிறோம். நமது எல்லா உறுப்புகளும் பாவம் நிறைந்ததாக இருப்பதால், நீதியும் நித்தியமுமான இறைவனின் கோபாக்கினைக்குப் பாத்திரராயிருக்கிறோம். நாம் நமது பாவங்கள் சிலவற்றை அறிந்திருக்கலாம். ஆயினும் இறைவன் நம் ஆன்மாக்களின் ஆழத்தையும் அறிந்திருக்கிறார். நமது பாவங்கள் அனைத்தும் அவருக்கு முன்னிருக்கின்றன. அவருடைய கட்டளையே நம்மை நியாயம் தீர்க்கிறது. அதன் தீர்ப்போ, “இப்பாவி தள்ளப்பட்டு இழக்கப்பட்டிருக்கிறான்” என்பதே.

மனிதத் தன்மைக்கு வேறுபட்ட தன்மையுடையவர் ஒருவர் இருக்கிறார். இவரே நமது பாவக்கட்டுகளைத் தகர்த்தெறிந்தவர். தம்மைப் பகைத்தவர்களையும் தம்மில் நிலைத் திருந்தவர்களையும் அவர் நேசித்தார். இறைவனுடைய மகிமை அவர் ஊடாக முடிவின்றிப் பிரகாசித்தது.

இந்த பாவமற்ற மனிதன் இயேசு கிறிஸ்துவே. இவர் நமதாண்டவர். கன்னிகையான மரியாளிடத்தில் இறைவனுடைய ஆவியினால் பிறந்தவர். அவருடைய உள்ளம் அன்பினாலும், சத்தியத்தினாலும் நிறைந்திருந்தது. அவரைக் குறித்து ரசூல்கள் கூறியதாவது, “அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.” (யோவான் 1:14) மனிதனை, பிசாசின் தந்திரங்களிலிருந்து விடுவிக்கவும், இறைஅன்பினால் மனிதனை நிரப்பவும் அவர் இவ்வுலகத்தில் வந்தார். அவர் ஊழியம் கொள்ளும்படிவராமல், ஊழியம் செய்யவும், எல்லாரையும் மீட்டுக்கொள்ளும் பொருட்டுத் தம் உயிரையே மீட்புப் பொருளாகக் கொடுக்கவும் வந்தார்.

தமது மகத்தான அன்பிலே, கிறிஸ்து நம்முடைய பாவங்களைச் சுமந்து, அவைகளுக்கான விலையை செலுத்தி, இறைவனுடைய கோபாக்கினையை நமக்குப் பதிலாக தாமே சகித்தார். நம்மை நித்திய அழிவிலிருந்து காப்பாற்ற, அவர் மரித்ததினிமித்தம் நம் மெய் மீட்பரானார். தம்மிடத்தில் சுகம் பெற்றவர்களிடத்தில் அவர் கூலி கேட்கவில்லை. மரித்தவர்களை உயிருள்ளவர்களாய் எழுப்பினார். “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்று உனக்கும் கூறுகிறார். உன்னிடம் நோன்பையோ, நற்கிரியைகளையோ அல்லது பலியையோ அவர் கேட்கவில்லை. உன்னை இறை சமாதானத்தில் ஆதரித்து, தம் சொந்த விலையேறப்பெற்ற இரத்தத்தினால் கழுவுகிறார். உன் இரட்சகரில் நம்பிக்கைவை, அப்போது உன்னுடைய விசுவாசத்தினால் நீ பிழைத்துள்ளாய் என்பதை நீ அறிந்து கொள்வாய்.

தம், நன்மையும் இரக்கமும் நிறைந்த கண்களினால் கடவுள் உன்னையும் மற்றெல்லா பாவிகளையும் பார்க்கிறார் என்பதனை நீ ஒருபோதும் மறந்துவிடாதே. நீ நல்லவன் என்பதால் உன்னை அவர் அவ்வாறு நோக்குகிறாறென்றல்ல, உன்னை நீயே மீட்டுக் கொள்ள முடியாதென்பதை அவர் அறிவார். சகல அங்கலாய்ப்பில் இருந்தும், துன்பத்தின் கண்ணியிலிருந்தும் உன்னை தூக்கியெடுக்க நித்தியமான கிறிஸ்து உன்னிடத்தில் வந்தார். கிறிஸ்துவண்டை வா! நீ சத்தியத்தைக் கண்டு கொள்வாய். இறை நீதியையும் பெற்றுக் கொள்வாய். கடவுள் உன்னைத் தள்ளிவிடாமல் அன்போடுன்னை வரவேற்கிறார். நீ அவரை உலக இரட்சகர் என நம்பியிருந்தால், இறைவன் உன்னை நீதிமானாகக் காண்கிறார். அன்புள்ள நண்பா, இறைவன் உன்னை நேசிக்கிறார். அதுமட்டுமல்ல, உன்னை சுத்தமாக்கவும் சித்தம் கொண்டுள்ளார். தாமதியாமல், அவர் உனக்கு அளிக்கும் அருளுக்காக அவருக்கு நன்றி செலுத்து. இறைவன் மகத்தானவரென்றும், தம்முடைய மீட்பின் நிமித்தம் மக்களை இலவசமாய் நீதிமானாக்குகிறாரென்றும் மற்றவர்களுக்குச் சொல். அவர்கள் மீட்பைப் பெற்றுக்கொள்ளவும், அளவில்லா அன்பினாலும், மகிழ்ச்சியினாலும், மேலும் நன்றியுள்ள இருதயத்தினாலும் நிரப்பப்படவும் உன் நம்பிக்கையினால் அவர்களுக்கு அறிவூட்டு.

நீ உன் தீய பழக்கவழக்கங்களிலேயே உழன்று கொண்டிராமல் அவைகளை விட்டு கிறிஸ்துவோடு வாழவும் அவருடைய பலத்தினால் தூய வாழ்வு வாழவும், கிறிஸ்து உன்னை உன் தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிக்க வல்லவராயிருக்கிறார். இதற்கு சந்தேகமேயில்லை. கிறிஸ்துவின் மீட்பு ஒரு முற்றுப்பெற்ற ஒரு வேலை. உன் வாழ்வை அதோடு தொடர்புள்ள போராட்டங்களோடும், சிக்கல்களோடும், தோல்விகளோடும் அவருக்கு அர்ப்பணி. அப்போது அவர் தமது காயப்பட்ட கரங்களை உன்மேல் வைத்து உன்னை ஆசீர்வதித்து, தமது சமாதானத்தை உன் சரீரத்திலும், தமது மகிழ்ச்சியை உன் உள்ளத்திலும், தமது சுத்திகரிப்பை உன் மனச்சாட்சியிலும் ஊற்றுவார் என்பதை நீ அறிந்து கொள்வாய். கிறிஸ்துவினுடைய அன்பின்விளைவை மக்கள் உன் வாழ்விலும் உன் வாழ்வினூடாகவும் கண்டு கொள்வார்கள்.

மன அழுத்தம், ஆபத்தா?

நாம் வாழ்கின்ற இந்த உலகம் நிலையற்றதாக. வேகமான ஓட்டத்தில் மாறிக்கொண்டிருக்கின்றது. அந்த ஓட்டத்தோடு போகும் நம்முடைய அன்றாட வாழ்வில். மன அழுத்தமானது ஒரு எதிர்மறையான பகுதியாக அமைந்துவிட்டது. மன அழுத்தம் என்பதை விளக்கப்படுத்தும் போது வாழ்வில் திணிக்கப்படுகின்ற மேலதிக நம் தாக்கங்கள் தேவைகள் மற்றும் பாரங்களால், மக்களில் ஏற்படுகின்ற எதிர்விளைவு என குறிப்பிடலாம்.

லண்டனில் சுமார் 5.000,000 மக்கள் தங்கள் வேலைகளினால் மிக அதிகமான மன அழுத்தத்தை அனுபவிப்பதாக அறிக்கைகள் குறிப்படுகின்றன. 2004 மற்றும் 2005 இல் மொத்தமாக 12.8 மில்லியன் வேலை நாட்கள் மன அழுத்தம் காரணமாக இழக்கப்பட்டுள்ளன. மனஅழுத்தமானது ஒரு ஆரோக்கிய சமூகத்திற்கு பெரிதான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

தோற்றம்:

மன அழுத்தம் ஏற்படும் வேளையில், நாம் நம் வாழ்வை சிந்தித்துப்பார்க்க வேண்டும். மன அழுத்தமானது நம் சுயத்தால், உள்ளான மனதின் காரியங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம், அல்லது நம் மேல் சுமத்தப்பட்ட ஒன்றாக அமையலாம். எப்படி அமைந்தாலும், அடிப்படைக் கொள்கையில் எந்தவித மாற்றமும் இருப்பதில்லை. மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால். அதனால் அவனுக்கு என்ன லாபம்? என இயேசு கிறிஸ்து கேட்ட கேள்வியே அந்த அடிப்படைக் கொள்கை (மாற்கு 8:36)
இது நமக்கு நிஜமான சவாலோடு அமைகின்றது. முன அழுத்தங்கள் நிறைந்த வாழ்விலிருந்து. சூழ்நிலையிலிருந்து வெற்றி பெற அல்லது தப்புவதற்கு முக்கிய விஷயமாக அமைவது எது? இந்த பூமியில் நம்முடைய வாழ்க்கைக் காலமானது. நித்தியத்திற்கு ஒரு படியேறுகின்ற ஒரு குறுகிய பயணமே. நாம் நித்தியவாழ்வைக் குறித்ததான காரியங்களுக்கு நம் எண்ணங்களை ஒருமுகப்படுத்துவோமானால். நம் வாழ்வு வேறொரு தோற்றத்தில் காணப்படும். இந்த உலகின் அழுத்தங்கள். உடைமைகள். தகுதிகள் யாவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. ஏனெனில். நம் வாழ்க்கை முறைக்கேற்ப நம் ஆத்மா. நித்திய காலமும் இருக்கப் போகும் இடத்தின் முடிவு பரலோகம் அல்லது நரகம் ஆகும்.

ஆயத்தமா?

இது ஒரு மிக முக்கியமான விஷயமாகும். எல்லா மனிதர்களுமே ஏதோ ஒரு நித்திய இடத்திற்கு செல்ல வேண்டியது தவிர்க்க முடியாத கட்டாயமான ஒன்று. நல்ல இடத்தை அடைவதற்குரிய முன்னேற்றப்பாடுகளை செய்து, தயாரான நிலையில் இருந்தால் தான் பரலோகத்தினுள் போக முடியும். அதற்கு நாம் எப்படி தயாராக முடியும்?

நமது பாவங்களை தேவனிடத்தில் அறிக்கைவிட்டு. பாவ வழிகளை விட்டு விலகி மனம் திரும்ப வேண்டும். கிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைத்து அவர் சொல்லிய வழிப்படி நாம் வாழ வேண்டும் (அவரை நம் இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும்). தன்னிடத்தில் விசுவாசம் வைக்கிறவர்கள் எவர்களோ, அவர்களுடைய பாவங்களுக்கான தண்டனையை தன்மீது சுமந்து கிறிஸ்து இயேசு சிலுவையில் மரித்தார். அதன்பின், நமக்கு ஜீவன் கொடுக்கும்படி தேவனாக உயிர்தெழுந்தார். நமக்காக பாடுகள் பட்டு மரித்து, உயிர்தெழுந்து நமக்கு ஜீவன் தந்த கிறிஸ்துவை நாம் தொடர்ந்து பின்பற்றி வாழ வேண்டும். அப்போது தான். நமது வாழ்வில் பரலோகத்தை நாம் நிச்சயத்துடன் நோக்கிப் பார்க்க முடியும்.

இதில், சிறப்பான விஷயம் என்னவென்றால். அழுத்தங்கள் நிறைந்த உலகில் வெற்றி பெறுவதோ. உயிர்வாழ்வதோ முக்கியமல்ல. இரட்சிப்பை அடைவதும், நித்தியத்திற்கான ஆயத்தங்களை செய்வதுமே பெரிய காரியம். இயேசு கிறிஸ்து மூலமாக இரட்சிப்பைப் பெற்ற மனிதன். எவ்வித அழுத்தங்களுமில்லாமல், பரிபூரணம் நிறைந்துள்ள பரலோகத்தை, நித்திய எதிர்காலமாக நோக்கிப் போக முடியும். அங்கு நித்திய மகிழ்ச்சி உண்டு.

அதே வேளை, தேவனை விசுவாசிக்காமல் உலகத்தை ஆதாயப்படுத்த எண்ணி வாழ்பவர்கள் நித்திய நரகத்தை அடைவார்கள். அங்கே (நரகத்தில்) நித்தியமான மன அழுத்தங்களால் அவதிப்படுவர் என்பதையும் வேதாகமம் நமக்கு எச்சரிக்கின்றது.
இதை வாசிக்கின்ற உனது நிலை என்ன? உலகத்தை ஆதாயப்படுத்த எண்ணி மன அழுத்தங்களாலேயே சாகப் (மடிய) போகின்றாயா? அல்லது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாக கிடைக்கும் நித்திய வாழ்க்கையை நோக்கி வாழப்போகின்றாயா?

Popular Posts

My Favorites

கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்

ஓகஸ்ட் 01 "கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்." 2.சாமு. 12:13 தாவீது இராஜா உரியாவின் மனைவியிடம் பாவம் செய்தது பெரிய பாவம். உரியாவைக் குடிக்கச் செய்து அவனைக் கொல்வதற்கு ஏற்பாடுகளை செய்து இது தேவனால் நடந்தது...