A Paamalaigal

Aar Ivar Aararo

ஆர் இவர் ஆராரோ – இந்த – அவனியோர் மாதிடமே

ஆர் இவர் ஆராரோ – இந்த
அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த
இவ்வற்புதப் பாலகனார்?

பாருருவாகுமுன்னே – இருந்த
பரப்பொருள் தானிவரோ?
சீருடன் புவி , வான் , அவை பொருள் யாவையுஞ்
சிருட்டித்த மாவலரோ?

மேசியா இவர்தானோ? – நம்மை
மேய்த்திடும் நரர்கோனோ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும்
அதி அன்புள்ள மனசானோ?

தித்திக்குந் தீங்கனியோ? – நமது
தேவனின் கண்மணியோ?
மெத்தவே உலகிறுள் நீக்கிடும்
அதிசய மேவிய விண்ணொளியோ?

பட்டத்துத் துரைமகனோ? – நம்மைப்
பண்புடன் ஆள்பவனோ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும்
மன்னிப்புக் காட்டிடுந் தாயகனோ?

ஜீவனின் அப்பமோதான்? – தாகம்
தீர்த்திடும் பானமோதான்?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும்
அடைக்கல மானவர் இவர்தானோ?