தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 33

முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்

அக்டோபர் 10

“முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்” எபி. 10:32

நடந்து முடிந்த காரியங்களைத் திரும்பிப்பார்ப்பது அதிக பலனைத் தரும். நமந்து முடிந்த காரியங்களை நாம் இன்னு தியானிப்பது நல்லது. நமது நாடு முற்றிலும் இருண்டு, சிலை வணக்கத்திலும் அவ பக்தியிலும், கீழ்ப்படியாமையிலும், பாவத்திலும் வளர்ந்துள்ளது. இவைகளின் மத்தியில் தேவன் நம்மைத் தம்முடைய பிள்ளைகளாகத் தெரிந்துக்கொண்டார். முன்னால் நாம் பிசாசுக்கும் பாவத்திற்கும் அடிமைப்பட்டிருந்தோம். சாத்தானால் ஆளப்பட்டோம். வழிதவறி உலகப்பற்றுள்ளவர்களாக வாழ்ந்து வந்தோம். தேவனோ நம்மேல் இரங்கிக் கிருபையால் நம்மைத் தெரிந்துகொண்டார். பாவத்திலும் அக்கிரமத்திலும் முழ்கிக் கிடந்த நம்மை உயிர்பித்துக் கிறிஸ்துவுடனே சேர்த்துக் கொண்டார். அன்று இரட்சகர் நம்மை நினைத்ததால், இன்று அவரை நாம் இனியவராக அறிகிறோம். சுவிசேஷம் நம்மைக் தேடி வந்தது நமக்கு எத்தனை பெரும் பேறு.

தேவன் நம்மைத் தெரிந்துகொண்ட அந்த நாள் ஆனந்த நாள். அவருடைய ஆலயம் நம்கு இன்பமான வாசஸ்தலமாக மாறியது. ஆத்துமாவே, உனது இன்றைய நிலை யாது? ஆண்டவரைப் பற்றிய பக்தி வைராக்கியம் இன்று குறைந்திருக்கிறதா? வேதத்தின்மேல் முன்போல் வாஞ்சையாயிருக்கிறாயா? தேவ ஊழியத்தில் பங்குகொள்கிறாயா? உனது ஜெப வாழ்க்கை முன்னேறியுள்ளவதா? ஆத்துமா பாரம் உனக்கு உண்டா? ஆவிக்குரிய காரியங்களில் அனல்குன்றிவிட்டாய். முந்தைய நாள்களை நினைத்துக்கொள். ஆதி அன்பை விட்டுவிடாதே. கர்த்தர் உன்னைப் போஷித்து நடத்தினார். உன்னைத் தூய்மைப்படுத்தினார். இன்று உன்னை உன் முந்தின நாள்களை நினைத்துப் பார்க்கச் சொல்லுகிறார்.

முந்தின நாள்களிலெல்லாம்
முனைப்பாய்க் காத்து வந்தீர்
பிந்திய காலத்தில் பின் வாங்கிப்போன
பாவியென்னைத் திருப்பியருளும்.

கர்த்தாவே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும்

அக்டோபர் 13

“கர்த்தாவே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும்” ஆப. 3:2

தேவன் எப்போதும் தம்முடைய கிரியைகளுக்குப் புத்தியிரளிக்க வல்லவர். அவர் இச்செயலைத் தொடங்கி, அதை நடத்துபவர். அதைத் தாமாகவே முடிக்கவும் வல்லவர். தம்முடைய கிரியைகளைப் பல உபகரணங்களைக் கொண்டு செய்து முடிக்க வல்லவர். நாம் எழும்புதல் அடைய வேண்டும் என்று நமக்குக் கூறகிறார். அவ்வாறு செய்ய நம்மைத் தூண்டிவிடுகிறார். நாம், பல நேரங்களில் அவருடைய பாதத்தருகில் அதிக நேரம் செலவிட மறந்து விடுகிறோம். அவரின் சமுகத்தில் அதிகம் ஜெபிக்காமல் இருந்து நேரத்தை வீணாக்கி விடுகிறோம். ஆனால், அவர் சமுகத்தில் அதிக நேரம் செலவிடும் பொழுது ஒரு வேகத்தையும் தைரியத்தையும் பெறுகிறோம். அப்போது அந்தத் தீர்க்கன் சொன்னதைப்போல் உம்முடைய ஜனங்கள் உம்மில் மகிழும்படிக்கு எங்களைத் திரும்பவும் உயிர்ப்பிக்கமாட்டீரா என்று நாமும் சொல்லலாம்.

கர்த்தர் தமது கிரியைகளை உயிர்ப்பிக்கும்போது நம்முடைய விசுவாசத்தைப் பெலப்படுத்துவார். நமது நம்பிக்கையை வளர்ப்பார். நமது அன்பிற்கு அனல் மூட்டுவார். தாழ்மையைக் கற்றுக்கொடுப்பார். நமது பக்தி வைராக்கியத்தை உறுதிப்படுத்துவார். நம்முடைய எழுப்புதலின் ஆவியைத் தூண்டிவிடுவார். அப்போது ஜெபம் நமக்கு இனிமையாகும். ஆலயம் அருமையாயிருக்கும். சபையில் தேவ மக்கள் மகிழ்ச்சியோடு உலாவும் நந்தவனம்போல் இருக்கும். வசனம் விருத்தியாகும். மோட்சத்தையே நாம் எப்பொழுதும் நினைத்துக்கொண்டே இருப்போம். தேவன் நம்மை என்றும் உயிர்ப்பிக்க வல்லவராகக் காத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய உயிர்ப்பிக்கும் ஆவியானவர் நம்மை அவரண்டை நேராக நடத்துவார்.

உமது தயவினாலே
எம்மை உயிர்ப்பியும்
நாங்கள் ஒளிவிட்டெழும்ப
கிருபை பாராட்டியருளும்

என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ?

அக்டோபர் 20

“என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ?” எரேமி. 32:27

சிருஷ்டிகரைவிட அதிகக் கடினமான காரியங்கள் சிருஷ்டிகளுக்கே உண்டு. சிருஷ்டிகரின் ஞானம் அளவிடமுடியாதது. அவருடைய வல்லமையைக் கணக்கிட முடியாது. அவருடைய அதிகாரத்திற்குட்படாதது ஏதுவுமில்லை. சகலமும் அவருக்குக் கீழானதே. அவர் யாவற்றையும் ஒழுங்காகவே ஏற்படுத்தியுள்ளார். கிரமமாக அவர் யாவற்றையும் நடத்துகிறார். அனைத்து காரியங்களையும் தம்முடைய சொந்த சித்தத்தின்படியே செய்கிறார்.

சில வேளைகளில் நாம் பல சிக்கல்களில் அகப்பட்டுவிடுகிறோம். மனிதர் உதவி செய்ய மறுத்து விடுகிறார்கள். நமது விசுவாசம் குறைகிறது. மனம் சஞ்சலப்படுகிறது. சோர்வடைந்து நாம் பயப்படுகிறோம். அப்படிப்பட்ட நேரத்தில் கர்த்தர் தலையிடுகிறார். நம்மைச் சந்தித்து என்னாலே செய்யக்கூடாத காரியம் ஒன்று உண்டோ? அதை என்னிடத்தில் கொண்டுவா. என்னை முற்றிலும் நம்பி உன்னை முற்றும் அர்ப்பணி. என் சித்தம் செய்யக் காத்திரு. அப்பொழுது நான் உன் காரியத்தைச் செய்து முடிப்பேன். அதை எவராலும் தடுக்க இயலாது என்கிறார்.

அன்பானவர்களே, உங்கள் கேடுகள், உங்கள் சோதனைகள் உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். உங்கள் தேவன் உங்களை விடுவிக்கக் கஷ்டப்படுபவரல்ல. உங்களுக்கு வரும் தீங்கை நீக்கி, உங்கள் துன்பங்களிலிருந்து உங்களை இரட்சிப்பார். உங்களது பெலவீனத்தில் அவருடைய பெலன் பூரணமாய் விளங்கும். கொடுக்கப்பட்ட இவ்வசனத்தில் கேட்கப்படும் கேள்வி, உங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தட்டும். நம்பிக்கையை வளர்க்கட்டும். உங்களுக்குத் தைரியம் தரட்டும். ஜெபிக்க உங்களை ஏவி விடட்டும். உங்கள் பெலத்தையே நோக்குங்கள். பெலவீனத்தை அல்ல. விடுவிக்க வல்லு அவருடைய கிருபையைத் தேடுங்கள்.

என் தேவனால் ஆகாதது
ஒன்றுண்டோ? அவர்தம்
கிருபை எனக்கு
எப்போதும் போதுமன்றோ!

என் ஆத்துமா ஆறுதலடையாமல் போயிற்று

ஓகஸ்ட் 19

“என் ஆத்துமா ஆறுதலடையாமல் போயிற்று” சங்.77:2

கர்த்தர் தமது ஜனத்திற்கு தேவையானதும் போதுமானதுமான ஆறுதலைச் சவதரித்து வைத்திருக்கிறார். தம் பிள்ளைகளின் அவசர நேரத்தில் தேவைப்படுகிற ஆறுதல் சொல்பவர்களை அனுப்பி வைக்கிறார். ஆனால் சில வேளைகளில் அவர்கள் ஆறுதல் மொழிகளைக் கேட்க மறுக்கின்றனர். ஒருவேளை தேவன் அவர்கள் விக்கிரமாகப் பாவித்த ஒன்றை அவர்களிடமிருந்து எடுத்துப்போட்டிருப்பார். விசுவாசத்தினால் ஜீவனம்பண்ணும்படி தம் முகத்தை மறைத்திருக்கலாம். அல்லது இவ்வுலக காரியங்களில் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கலாம். தாங்கள் நம்பியிருந்தவற்றின்மேல் மாயை என்று எழுதி இருக்கலாம். யோனாவைப்போல் இவர்கள் கோபத்திற்கு இடம் கொடுத்து இருப்பார்கள்.

அல்லது பெருமை தங்களிலே ஆளும்படி இடம் கொடுத்திருப்பார்கள். ராகேலைப்போல கவலைக்கும் அதிகம் இடங்கொடுத்திருப்பார்கள். அல்லது சோதனைக்குள் விழுந்திருப்பார்கள். தவறுகளை அதிகம் செய்திருப்பார்கள். இது முழுவதும் தவறு. சுவிசேஷத்தில் உனக்கு இருக்கும் பாக்கியத்தைப் பார். மோட்சத்தின் மேன்மையைப் பார். சங்கீதக்காரன் இவ்வாறு தன்னையே நோக்கி, தன்னைத் தேற்றிக் கொண்டான். தன் பாவத்திற்காகத் துக்கப்பட்டான். தன் எண்ணத்தையும், நடத்தையையும் சீர்திருத்திக் கொண்டான். நமக்குப் போதனையாகவும், எச்சரிப்பாகவும் விழிப்பு உணர்ச்சி ஏற்படவும் இந்தச் சங்கீதத்தை எழுதியிருக்கிறான். ஆறுதலைப் பெறக்கூடியவர்களும் தங்குள் தவறுகளால் ஆறுதலை அனுபவியாமல் போகிறார்கள். கர்த்தரின் ஜனங்கள் அடிக்கடி தங்களையே வாதித்துக் கொள்கிறார்கள். ஆறுதலின் பாத்திரத்தைத் தங்களைவிட்டு அகற்றி தாங்கள் அதற்குப் பாத்திரர் அல்ல என்கிறார்கள்.

சகல நன்மைக்கும் ஊற்றே
துக்கம் நீங்கி ஆற்றிடும்
மறுமையில் சேரும்போது
வாழ்ந்தென்றும் சுகிப்பேன்.

தேவனுக்குக் கீழ்ப்படிந்து இருங்கள்

செப்டம்பர் 25

தேவனுக்குக் கீழ்ப்படிந்து இருங்கள்” யாக். 4:7

சுபாவத்தின்படி மனிதன் எவருக்கும் கீழ்ப்படிபவன் அல்ல. ஆனால் கீழ்ப்படிதல் இல்லையெனில் மகிழ்ச்சி இருக்காது. நமது சித்தம், தேவ சித்தத்திற்கு இசைந்து அதற்கு மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிந்தால் தான் நமக்கு மகிழ்ச்சியும், சமாதானமும் இருக்கும். கீழ்ப்படிதலில்லாதபோது பரிசுத்தமும் இருக்காது. கீழ்ப்படியாமைக்கு முக்கிய காரணம் அகந்தையும், மேட்டிமையுமே. தேவனுக்குக் கீழ்ப்படிய நான் மனமற்றிருப்பது, அவருடைய அதிகாரத்திற்கு எதிர்த்து, அவருடைய ஞானத்தையும், மகத்துவத்தையும் மறுப்பதாகும். அவருடைய அன்பை மறுத்து அவருடைய வார்த்தையை அசட்டை செய்வதாகும். அவரால் அங்கீகரிக்கப்பட்டு, அவருக்கு அடங்கி இருக்கும்பொழுது நாம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்கிறோம். அவருக்குக் கீழ்ப்படியும் பொழுது அவர் தரும் அனைத்தையும் நாம் நன்றியறிதலோடு பெற்றுக்கொள்வோம்.

தேவ அதிகாரம் என்று முத்திரை பெற்றுவருகிற எதற்கும் நாம் கீழ்படிந்து நடக்கவேண்டும். அவருக்கு நாம் கீழ்ப்படியாவிடில் நமக்கு இரட்சிப்பில்லை. இந்த நியாயத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, அவருடைய பாதத்தில் பணிந்து தொழுது கொள்ள வேண்டும். அவருக்கு நாம் கீழ்ப்படியாவிடில், அவருடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும். எனவே, தேவ கிருபையால் இரட்சிக்கப்படுதலுக்கும், அவருடைய வார்த்தையில் வளருவதற்கும் கீழ்படிதலே காரணம். தேவனுடைய சித்தத்தின்படி நடக்கட்டும் என்று எல்லாக் காரியங்களையும் அவருக்கு ஒப்படைத்து விடுவதற்கு நம்மில் கீழ்ப்படிதல் இருக்கவேண்டும். ஆத்துமாவே, நீ கீழ்ப்படிந்தால் பெலவானாயிருப்பாய். பரிசுத்தவானாய் இருப்பாய். உன் வாழ்க்கையிலும், மரண நேரத்திலும் தைரியசாலியாயிருப்பாய்.

தயாளம், இரக்கம் நிறைந்தவர் கர்த்தர்
தம் மக்களை ஒருபோதும் மறந்திடார்
அவருக்கே நான் என்றும் கீழ்ப்படிந்து
அவர் நாமம் போற்றித் துதிப்பேன்.

அவர்களைச் சகோதரர் என்று சொல்ல வெட்கப்படாமல்

யூன் 10

“அவர்களைச் சகோதரர் என்று சொல்ல வெட்கப்படாமல்…” எபி. 2:11

ஆண்டவருக்கும் நமக்கும் இருக்கும் உறவு மிக பெரியதென்று உணருவோமானால் இந்த வசனத்தில் சொல்லியிருப்பது ஆச்சரியமாய் இருக்கும். இந்த உறவு எத்தனை பெரியது. அவர் பரிசுத்தர். நாம் அசுத்தர். அவர் பெலவான். நாம் பலவீனர். அவர் பாக்கியவான். நாம் நிர்பந்தர். அவர் சர்வ ஞானி. நாம் அறிவீனர். அவர் மகத்துவமானவர். நாம் அற்பர். அவர் வாழ்த்துக்குரியவர். நாம் இழிவுள்ளவர்கள். இவ்வளவு வேறுபாடுகளிருந்தாலும் அவர் நம்மை அங்கீகரித்துக்கொள்கிறார். நமக்கும் அவர்களுக்கும் ஒருவகை ஒற்றுமை இருக்கிறது. நம் இருவருக்கும் பிதா ஒருவர்தான். அவர் தேவன்.

நேசருக்கு இருக்கிற சுபாவமும், ஆவியும் சாயலும் நமக்கும் ஒருவாறு உண்டு. அவருக்கும் நமக்கம் இருக்கும் ஒரே வேலை வேதனை மகிமைப்படுத்துவது மட்டும்தான். கர்த்தருடைய வேலைகளில் இயேசுவுக்கும் நமக்கும் இருக்கும் வாஞ்சை ஒன்றுதான். அவரின் நேக்கமே நமது நோக்கம். அவரின் வாசஸ்தலம்தான் நமக்கும் வீடு. நாம் அவரைக் குறித்தும் மற்ற தேவனுடைய பிள்ளைகளைக் குறித்தும் அடிக்கடி வெட்கப்படுகிறோம். ஆனால் இயேசுவோ நம்மைக் குறித்தும் வெட்கப்படுவதே இல்லை. இவர் இப்பொழுதும், பிதாவுக்கு முன்பாகவும் பரிசுத்த தூதருக்கு முன்பாகவும் நம்மைச் சொந்தம் பாராட்டுகிறார். பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்து நமக்காகப் பரிந்து பேசுகிறார். வருங்காலத்தில் பிதாவினால் ஆசீhவதிக்கப்பட்டவர்கள் என்றும், சகோதரர் என்றும் அழைப்பார். ஆண்டவரே நம்மைச் சகோதரர் என்று அழைக்கும் போது நாம் சில காரியங்களில் வித்தியாசப்பட்டாலும் ஒருவரைக்குறித்து ஒருவர் ஒருக்காலும் வெட்கப்படாதிருப்போமாக.

நீசப் புழுவை இயேசு
சகோதரர் என்கிறார்
தேவ தூதர்களுக்கும் அவர்
இம்மேன்மையை அளியார்.

வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தாவி

பெப்ரவரி 15

“வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தாவி.” எபேசி.1:13

பழைய ஏற்பாட்டில் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டிருக்கிற பெரிய ஆசர்வாதம் தே குமாரன்தான். புதிய ஏற்பாட்டில் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டிருக்கிறவர் பரிசுத்தாவியானவர். இயேசு கிறிஸ்து செய்து முடித்த கிரியைகளுக்குப் பதிலாக, அவர் நமக்குக் கொடுக்கப்பட்டார். அவரை நோக்கி கேட்கிற எவருக்கும் ஆவியானவரைத் தந்தருளுவார். இந்த ஜீவத் தண்ணீரைக் கொடுப்பவர் இயேசுவானவN. இதைப் பெறுகிற யாவரும் நித்திய ஜீவகாலமாய் ஊறும்ஊற்றைப் பெறுவர். நம்மைத் தேற்றவும், ஆற்றவும், போதிக்கவும், நடத்தவும், உதவி செய்யவும் ஆவியானவேர பொறுப்பெடுக்கிறார். கிறிஸ்துவால் நமக்கு நீதியும் இரட்சிப்பும் கிடைக்கிறதுபோல, பரிசுத்தாவியானவர்மூலம் நமக்கு அறிவும், ஜீவனும், சந்தோஷமும், சமாதானமும் கிடைக்கிறது.

இவர் வாக்குத்தத்தத்தின் ஆவியாயிருக்கிறார். இவர் உதவியின்றி தேவ வாக்குகளை நாம் வாசித்தால் அதன் மகிமையை அறியோம். சொந்தமாக்கிக் கொள்ளும் உணர்வையும் அடையோம். அவர் போதித்தால் தான் வாக்குகள் எல்லாம் புதியவைகளாகவும், அருமையானதாகவும், மேலானதாகவும் தெரியும். எந்தக் கிறிஸ்தவனும் துன்பமென்னும் பள்ளிக்கூடத்தில் தன் சுய அனுபவத்தால், வாக்குத்தத்தமுள்ள ஆவியானவர் தினமும் தனக்கு அவசியத் தேவையெனக் கற்றுக்கொள்ளுகிறான்.

தேவ பிள்ளையே, ஆவியானவரைத் துக்கப்படுத்தாதபடி ஜாக்கிரதையாக இருப்போமாக. அவர் ஏவுதலை ஏற்று, அவர் சித்தம் செய்ய முற்றிலும் இடங்கொடுப்போமாக.

பிதாவே உமது ஆவி தாரும்
அவர் என்னை ஆளட்டும்
உமது வாக்கின்படி செய்யும்
என் தாகத்தைத் தீரும்.

கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து அறிகிறார்

ஏப்ரல் 20

“கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து அறிகிறார்” 1.நாளா.28:9

இது பயங்கரமான காரியம்! என் இருதயத்தை அவர் ஆராய்கிறார். அதில் எதைக் காண்கிறார்? பொல்லாத நினைவுகள், அசுத்தங்கள், பயங்கரமான நிர்ப்பந்தம், இவைகள்மட்டும்தானா காண்கிறார்? இல்லையென்று நினைக்கிறேன். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப்ப்றி அதில் நல்ல எண்ணங்களும் உண்டு. என் நினைவுகள் எல்லாம் பொல்லாதவைகள் அல்ல. பொல்லாத நினைவுகளை நான் பகைக்கிறேன். எல்லாம் கேடானதல்ல. சீர்த்திருத்துகிற சத்தியம் உண்டு. எல்லாம் நிர்ப்பந்தம் அல்ல. அதில் நல்லெண்ணங்களும் உண்டு. நம்பிக்கையும் விசுவாசமும் உண்டு. தேவன் என் இருதயத்தை ஆராய்கிறது நிஜமானால் நான் அப்படி செய்வது எத்தனை அவசியம்.

உங்கள் இருதயம் மோசம் போகாதபடி எச்சரிக்கையாயிருங்கள் என்றாரே. கூடுமானால் சாத்தான் நம்மை மோசம் போக்குவான். நாம் துணிகரத்திற்கு இடங்கொடுக்கும்படி நமது சாட்சிகளைக் கெடுப்பான். இருதயங்களையெல்லாம் கர்த்தர் ஆராய்கிறதினால் நாம் மாய்மாலம் செய்கிறது மகா புத்தியீனம். அவரை ஏமாற்ற நம்மால் முடியாது. அவருக்கு நாம் கோபமூட்டலாம். ஆனால் அவருடைய இரக்கத்தை மட்டுப்படுத்த கூடாது. தினமும் தேவனுக்கு முன்பாக நம்முடைய இருதயத்தைத் திறந்து கொடுத்து பரிசுத்த ஆவியானவர் சுத்தம்பண்ண வேண்டிக்கொள்ள வேண்டும். திறக்கப்பட்ட ஊற்றாகிய இரட்சகரண்டையில் ஓடி பரிசுத்த தேவ வசனமாகிய தொட்டியில் நித்தம் கழுவிக்கொள்ளப் பார்ப்போமாக. எப்போதும் சங்கீதக்காரனைப்போல் கர்த்தாவே என் இருதயத்தை சோதித்தறியும் என்று அடிக்கடி கெஞ்சுவோமாக. நாம் சொல்கிறதிலும், செய்கிறதிலும் சகலத்திலும் உத்தமமாய் விளங்குவோமாக.

நீர் என்னைப் பார்க்கிறீர்
எங்கே ஓடி ஒளிவேன்
உள்ளத்தை ஆராய்கிறீர்
இதை உணர்ந்து நடப்பேன்.

மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்?

அக்டோபர் 22

“மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்?” பிர. 6:12

உலகக்காரியங்களில் மூழ்கியிருப்போருக்கு இக்கேள்வி வருத்தத்தைக் கொடுக்கும். தேவனுடைய செயல்கள்தான், இதற்கும் பதில் அளிக்கக்கூடும். சில நேரங்களில் வாழ்வும், சில நேரங்களில் தாழ்வும் நலமானவை. சில நேரங்களில் உடல் நலம் நல்லது. சில நேரங்களில் உடல் நலக்குறைவும் நலமாகும். பூமியிலே சில நேரங்களில் காரியம் கைகூடாமையும், சில நேரங்களில் கை கூடுதலும் நலமாயிருக்கும். நாம் அதிகமாக விரும்பும் காரியங்தான் நமக்குத் தீங்கு ஆகக்கூடும். தேவன் நம்மைத் தடுத்து, நம்மைவிட்டு எடுத்து விடும் காரியம் நமக்கு நன்மையாக இராது.

நமக்கிருப்பது எதுவோ அதை நாம் சரியானபடி பயன்படுத்திக் கர்த்தருடைய மகிமைக்கு அதைப் பயன்படுத்துவோமானால், அது நன்மையாகவே இருக்கும். நமக்கு நாம் மகிமை தேடாமல், தேவனுக்கு மகிமையைத் தேடும்பொழுது அது நன்மையே ஆகும். அன்பானவர்களே நீங்கள் உங்களுக்கு இல்லாததொன்றைத் தேடி அதையே நாடுவீர்களானால் அது தீமையாகவே முடியும். தேவ சித்தத்திற்கு உங்களை ஒப்புக்கொடுத்து, அவருடைய வசனத்தின்படி செயலாற்றுவதே நன்மையைத் தரும். தினமும் விசுவாசத்தினால் இயேசுவோடு ஜெபம்பண்ணி, தேவனோடு சஞ்சரித்து, பரலோகத்தில் உங்களுக்குச் செல்வங்களைச் சேமித்து வைத்து, நம்மைச் சூழ்ந்த யாவருக்கும் நன்மை செய்ய முயற்சிப்பதே மிகவும் நல்லது. இவ்வுலகில் நன்மையைத் தேடுவதில் கவனமாய் இருப்போம். இந்த உயிர் இருக்கும்பொழுதே தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருவதை நாடித்தேடுவோம்.

கர்த்தர் என் தந்தை, எனக்கு
நலமானதையே அவர் தருகிறார்
இவ்வுலகை விட்டுச் செல்கையில்
தருவார்மோட்ச பாக்கியம்.

அவர் நம்மேல் இரங்குவார்

பெப்ரவரி 22

“அவர் நம்மேல் இரங்குவார்.” மீகா 7:19

நாம் பாவம் செய்ததால் நம் பேரில் அவருக்குக் கோபம் ஏற்பட்டது. ஆனால் எப்போதுமே அவர் கோபத்தோடிருப்பவரல்ல. நமது பாவம் நம்மை நிர்மூலமாக்குமானால் தேவ இரக்கம் நம்மை பாக்கியவான்களாக்குகிறது. அவர் வார்த்தையின்படி ஆறுதலும் தேறுதலும் உண்டாகும்படி நமக்கு இரங்குவார். அவர் உருக்கம் நிறைந்தவர். அவர் இரக்கத்தில் சம்பூணர். மன்னிக்க ஆயத்தமானவர். இவைகள் தேவனுடைய சொந்த வாக்கியங்கள். நாம் அவைகளை மட்டும் நம்பினோமானால் நம்முடைய பங்களும், திகிலும் பறந்தோடும். நம்முடைய சந்தேகங்களும் மறைந்துப்போம். நாம் சந்தோஷத்தாலும், சமாதானத்தாலும் நிரப்பப்படுவோம்.

நாம் அவரைவிட்டு வீணாய் அலைந்தோம். ஆனாலும் அவர் நம்மேல் இரங்கினார். அலைந்துதிரிந்த ஆட்டைத் திரும்பவும் சேர்த்துக் கொள்கிறார். கெட்ட குமாரனை, ஆடல் பாடலோடு வரவேற்றுக் கொள்கிறார். சாத்தான் என்ன பழி சொன்னாலும் அவர் மனம் துருகவே உருகுவார். உன் பாவங்களும், பயங்களும் வெகுவாய் இருந்தாலும் அவர் மனம் உருகிவிடுகிறார். அவர் வாக்களித்தபடியாலும், அவர் தன்மையின்படியும் இரக்கமுள்ளவராயிருக்கிறார். எத்தனை முறை நமக்கு அப்படி செய்திருக்கிறார். இப்போதும் அவர் மனம் உருக்கத்தால் பொங்குகிறது. நீ பாவத்திற்காக மனம் வருந்துவதைக் கண்டாலோ தப்பிதங்களுக்காக அழுகிறதைப் பார்த்தாலோ அவர் உருகி விடுகிறார். உன் அக்கிரமங்களையெல்லாம் நிராகரித்து உன் பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழத்தில் போட்டு விடுகிறார்.

இயேசு மனதுருகி
காயம் கட்டுவார்
துக்கிப்பவர்களுக்கு
ஆறுதலளிப்பார்.

Popular Posts

My Favorites

அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்

யூலை 03 "அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்." மீகா 7:18 தேவனை விரோதிப்பவர்கள்மேல்தான் தேவ கோபம் வரும். தேவனுடைய கோபம் யார்மேல் வருகிறதோ அவர்களுடைய நிலை மகா வருத்தமானது. கொஞ்ச காலம் அவருடைய ஜனங்களுக்கு விரோதமாகவும் அது...