தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 33

அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்

யூன் 14

“அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்.” மத். 27:35

பிதா அவரை ஒப்புக்கொடுத்தார். யூதாஸ் காட்டிக்கொடுத்தான். அப்போதுதான் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அவரின் மரணத்தில் தேவன் கொண்ட நோக்கம் என்னவென்று நாம் யோசிக்க வேண்டும். தமது நீதிக்குத் திருப்தியுண்டாக தம்முடைய இரட்சிப்பில் தம் ஜனங்களுக்கு பங்கம் வராது காக்க, தம் ஞானத்தையும், இரக்கத்தையும் வெளிப்படுத்த நம்முடைய பாவங்களை நீக்கி அன்பின் ஆச்சரியங்களை விளக்க வேண்டுமென்பதே அவர் நோக்கம். இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது, அவர் நமக்குக் காட்டினது என்ன? அவர் குழந்தைப்போன்ற கீழ்ப்படிதல், பிதாவினிடத்தில் அவர் உறுதியாக வைத்த நம்பிக்கை, துன்பத்தில் காட்டின பொறுமை. சாந்தத்தோடு கூடிய மன்னிக்கிற குணம். தம் மக்கள்மீது வைத்த ஆச்சரியமான அன்பு. தேவ சித்தத்திற்கு அவர் கீழிருந்த விதம் போன்ற பலவற்றை நாம் பார்க்கிறோம்.

இவற்றிற்குப் பதிலாக மனிதனிடத்திலிருந்து இவருக்கு கிடைத்ததோ, கொடிய நன்றி கேடு. சொல்லி முடியா கொடுரம். அளவுக்கு மீறிய பெருமை. மிக மிஞ்சின அறிவீனம். உறுதியற்ற குணம். இவைகளைத்தான் தேவனுக்கு முன் காட்டினார்கள். பொருளாசையின் வலிமையும், தன்மையும் யூதாசினிடத்தில் பார்க்கிறோம். சுய நீதிக்குள் மறைந்துக்கிடக்கிற பொறாமையும், கொடுமையும் பரிசேயரிடத்தில் பார்க்கிறோம். மனுஷனுக்குப் பயப்படுகிற பயத்தால் உண்டாகும் கேட்டைப் பிலாத்துவிடம் பார்க்கிறோம். நல்லோரிடத்தில் காணப்படுகிற பெலவீனம் அவருடைய சீஷர்களிடத்திலும் காணப்படுகிறது. பாவத்தின் தன்மை மனிதரிடத்தில் தௌவாய்க் காணப்படுகிறது. மனிதருடைய சரியான தன்மையும் வெளியாகிறது.

ஜீவாமிர்தம் இதுவல்லோ
அளவில் அடங்கா அன்பு
பாவிக்கடைக்கலம் இதுவல்லோ
தூதர் பாடும் பாட்டு.

இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்

அக்டோபர் 31

“இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்” சங். 147:3

மனிதருடைய இருதயத்தைப் பாவம் நிரப்பி அதைக் கடினப்படுத்தியிருக்கிறது. தேவ கிருபையால் மட்டுமே அதைத் தூய்மையாக்கி மென்மைப்படுத்த முடியும். தேவ ஆவியானவரால் இருதயம் மென்மையாக்கப்பட்டவன்தான் தன் இருதயக் கடினத்தைக் குறித்து துக்கப்படுவான். தேவன் பாவங்களை மன்னித்தார் என்ற மனநிறைவு ஒன்றே இருதயத்தை இளகச் செய்யும். தேவ ஆவியானவரால் ஆன்மா உயிர்ப்பிக்கப்படும்பொழுது, பாவ உணர்வு அதிகம் ஏற்படும். நமது குற்றங்கள், குறைவுகள் எல்லாம் நமது இருதயத்தை நொறுக்கும் தேவ பயம் உண்டாக்கும். இந்நேரத்தில் நொறுங்குண்ட இருதயத்தைக் குணமாக்க இயேசு கிறிஸ்து மனபாரம் நீக்கி மனமகிழ்ச்சியளிப்பார்.

இந்நேரத்தில் சாத்தான் அதிக தீவிரமாக செயல்படுவான். தேவ வசனத்தைப்பற்றிய அறிவு குறைந்து அவிசுவாசம் பெருகும் போது மனம் கடினமாகும். மனந்திரும்புவதும் கடினமாகும். ஆவி நெர்ந்து போதும். இந்நிலையில் இருதயம் நொறுங்குண்டு போய்விட்டதால் தோன்றும். அப்பொழுது தன்னைக் தேவனுக்கு முன் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். நொறுங்குண்ட அவன் இதயம் குணமாகும். ஆண்டவருடைய வசனமும், இரட்சகருடைய இரத்தமுமே, மனசாட்சிக்கு அமைதியை கொடுத்து, உடைந்த இதயத்தைச் சீர் செய்யும். அப்பொழுது காயப்பட்ட இதயம் குணமாகும்.

இதை வாசிக்குத் நண்பனே, உன் இருதயம் நொறுக்கப்பட்டிருந்தால் அதைக் குணப்படுத்தும்படி உன் தேவனிடத்தில் கெஞ்சிக்கேள். கர்த்தரை நோக்கிப்பார். அவர் உன்னைக் குணமாக்குவார்.

காயப்பட்ட இருதயத்தைக்
கழுவி சுத்தப்படுத்தும்
தயக்கமுள்ள நெஞ்சை அது
மயக்கமின்றி விடுவிக்கும்.

நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடேன்

ஏப்ரல் 11

“நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடேன்” எசேக். 20:3

இந்த ஜனங்கள் தங்களை உத்தம மார்க்கத்தாரென்று சொல்லிக் கொண்டு பாவம் செய்தவர்கள். இப்படிப்பட்டோர் தேவனுடையப் பார்வையில் மகா அருவருப்பானவர்கள். இவர்களைத் தேவன் தம்முடன் ஐக்கியப்பட இடங்கொடார். என் இருதயத்தில் அக்கிரம சிந்தை வைத்தேனானால் தேவன் எனக்குச் செவி கொடார். வேதத்தை கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபம் அருவருப்பானது.

உன்னுடைய இருதயம் உத்தமமாய் இருக்கிறதா? உன் நடக்கை உண்மையுள்ளதா? நீ பாவத்தை நேசித்து, அதைச் செய்து, சாக்கு போக்குச் சொல்லுவாயானால் தேவன் உன்னுடன் ஐக்கியப்படார். உன்னைக் கழுவி சுத்திகரி என்பார். பாவம் ஆத்துமாவிற்குத் தீட்டு. பரிசுத்தம்தான் ஆத்துமாவிற்கு சுத்தரங்கம். பாவிகள் தீட்டுள்ளவர்கள். தேவன் அவர்களை வெறுக்கிறார். தன்னைப் பரிசுத்தவானென்று சொல்லி பாவம் செய்பவரைப்போல் அருவருப்பானவர்கள் வேறு யாரும் இல்லை. பாவம் உனது ஊழியத்தை கெடுத்துப் போடும். குறிப்பாய் நீ ஒரு பாவத்தை இன்னும் விடாதிருப்பாயானால், உன் ஊழியத்தை இன்னும் தள்ளிப்போடுவார். பாவத்தோடு உன் ஜெபத்தைக் கேளார். பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவனானபடியால் அவர் உன்னை அருவருத்துத் தள்ளுவார். இயேசுவானவர் பாவத்திற்கு ஊழியம்செய்ய மாட்டார். அக்கிரமத்துக்கு உடந்தையாக தம் கிரியையைபை; பிரயோகிக்கமாட்டார். நாம் கிருபையினால் நீதிமான்களாக்கப்பட்டு, சத்தியத்தினால் பரிசுத்தராக்கப்படகிறோம். நம்முடைய இருதயம் பாவத்திற்கு பகையாக இருக்கும்போதுதான் நம் ஜெபம் கேட்கப்படும். அன்பர்களே! பாவத்துக்கு இணங்க சோதிக்கப்படும்போது நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடேன் என்று தேவன் சொல்வதை நினைத்துக் கொள்வோமாக.

கர்த்தாவே என்னைக் கழுவும்
உள்ளத்தைச் சுத்திகரியும்
கிருபையின் ஆவி அளித்து
என்னைப் பரிசுத்தமாக்கும்.

அதனால் என்னை மறந்தார்கள்

செப்டம்பர் 19

“அதனால் என்னை மறந்தார்கள்” ஓசியா 13:6

ஆண்டவர் இஸ்வேலரை ஏன் கானான் தேசத்திற்குக் கொண்டுவந்தார்? அவர்களுக்கு ஏன் வளமான, செழிப்பான வாழ்வைத் தந்தார்? அவர்கள் அவருடைய மக்கள் என்பதற்காகவே. ஆனால் அவர்கள் தன்னலத்திற்கு இடம் கொடுத்து, பெருமையையும், மேட்டிமையையும் அடைந்தார்கள். அவர்களுக்கு எண்ணிலடங்கா நன்மைகளைச் செய்த தேவனை மறந்தார்கள். நாம் எப்பொழுதும் துன்பத்தை அல்ல நன்மையையே நாடித் தேடுகிறோம். ஆனால் சோதனைகளை அனுபவித்து வெற்றி பெற்றவர்களோ, நன்மையோ தீமையோ எது வந்தாலும் ஒரே சீராக இருப்பார்கள். நம்முடைய இதயம் தேவனைவிட்டு வழுவிக் கீழான காரியங்களில் பாசம் வைக்கிறது. மாம்ச இச்சைகளுக்கு இடம் கொடுக்கும்பொழுது ஆவிக்குரிய கடமைகளுக்கும், முயற்சிகளுக்கும் தகுதியில்லாதவர்களாகிறோம். பரத்துக்கடுத்த காரியங்கள் நமக்கு மகிழ்வளிப்பதில்லை. மாம்சத்தைப் பெரிதுபடுத்துவதில் பலன் இல்லை.

தேவ கிருபையையும், அவர் நமக்குச் செய்த சிறப்பான நன்மைகளையும் மறந்துவிடுகிறோம். தேவனுக்குரிய கடமைகளைச் செய்யத் தவறிவிடுகிறோம். நமது இருதயம் கடினமாகிறது. தேவ அன்பை மறந்துவிடுகிறோம். நமது மனட்சாட்சி மழுங்கிவிடுகிறன. மனம் கடினமாகிறது. இவ்வாறு நாம் ஆவதற்குச் சாத்தானும் துணை செய்கிறான். வேதவசனங்களையும், வேதவசனங்களையும், தேவனுடைய கிருபாசனத்தையும் வெறுக்கிறோம். ஜெபவாழ்வு மறைகிறது. உலகப்பற்று அதிகமாகிறது. அன்பரே, நமக்கு ஆண்டவர் காட்டின அன்பையும், நாம் அவருக்குச் செய்யவேண்டிய கடமைகளையும் மறவாதிருப்போம். நம்முடைய தவறுகளை உணர்ந்து, விழிப்புடன் இருப்போம். நன்றியறில் உள்ளவர்களாக வாழ்வோம். மரணபரியந்தம் நம்மை நடத்தவல்ல ஆண்டவரை மறவாதிருப்போம்.

உம் நல்ல பாதைதனை விட்டேன்,
சமாதானமின்றிக் கெட்டேன்
இயேசுவின் பாதம் இனிப்பிடிப்பேன்
மீண்டும் சுகித்து வாழ்ந்திடுவேன்.

இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப் பண்ணினார்

அக்டோபர் 01

“இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப் பண்ணினார்” ரோமர் 5:11

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காகச் சிலுவையில் சகல பாடுகளையும் சகித்து, நமக்கு நீதியுண்டாகப் பாவமன்னிப்பையும், நித்திய பாக்கியத்தையும் சம்பாதித்தார். அவர் பலியானது நம்முடைய பாவங்களுக்காகவும், சர்வ லோகத்தின் பாவத்திற்காகவுமே. அவர் செய்த அனைத்தும் நற்செய்தியாகச் சுவிசேஷங்களில் வேத புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. விசுவாசத்தினால் நாம் அதை ஏற்றுக்கொண்டு அதன்படி நடப்பதினால் சமாதானம் பெறுகிறோம். மனுக்குலத்திற்குத் தேவையானதை எல்லாம் அவர் கல்வாரியில் செய்து முடித்தார். இதை ஏற்றுக்கொள்ளாத எவரும் வாழ்வில் சமாதானம் அடைய முடியாது.

ஒவ்வொரு நாளும் இந்த ஒப்புரவாக்குதலில் நம்பிக்கை வைக்காமலிருந்தால் நம்மால் அவரோடு மகிழ்ச்சியாக நடக்க முடியாது. முன்னே நாம் அதைப் பெறாமலும், நம்பாமலும் இருந்தோம். இப்பொழுதோ இயேசுவின் கல்வாரி இரத்தத்தினால் அதைப் பெற்று இருக்கிறோம். முன்னே நாம் அதன் தன்மையையும், அருமையையும் அறியாமலிருந்தோம். இப்பொழுது அவர் அவற்றை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய இரக்கமே நமக்குத் தைரியம் கொடுக்கிறது. இயேசுவின் மரணம் நமக்கு வாழ்வு. நமது சமாதானம் அவரே. அவருடைய நீதியின் மேலும், மகத்துவத்தின் மேலும் நாம் நமது கண்களை வைத்துக்கொண்டேயிருக்கவேண்டும். இதை மறந்தால் நாம் சாத்தானால் அடிமைகளாக்கப்படுவோம். நமது குற்றங்கள் நம்மைக் கலங்கடிக்கும் போதும், பயம் நம்மை ஆள்கொள்ளும்போதும், நாம் அவருடைய கல்வாரிப் பலியை விசுவாசித்தால், பற்றிப்பிடித்தால், நாம் தைரியசாலிகளாகவும், நீதிமான்களாகவும் பாக்கியமுள்ள தேவ மைந்தர்களாகவும் இருப்போம்.

இயேசுவே, உம் பிராயச்சித்தம்
எவருக்கும் அருமையானதே
சிலுவையையே நித்தம் யாம்
கண்டு பற்றிக் கொள்வோம்.

என்னைச் சோதித்துப் பாரும்

செப்டம்பர் 26

“என்னைச் சோதித்துப் பாரும்” மல்.3:10

தேவன் தம்மைச் சோதித்துப் பார்க்கும்படி நம்மை அழைக்கிறார். அவரின் உண்மையைப் பரீட்சித்துப் பார்க்கச் சொல்லுகிறார். அவர் வாக்குப்பண்ணினதைச் செய்யாதிருப்பாரோ என்று யார் சந்தேகிக்க முடியும்? நாம் சந்தேகிப்போமானால், அது அவரைச் சோதிப்பது போலாகும். நாம் எவ்வாறு அவரைச் சோதிக்கலாம்? அவருடைய வார்த்தையை நம்பி, அதை ஜெபத்தில் வைத்து, விழித்திருந்து, அவர் கட்டளையிட்டபடிச் செய்து, அவர் தாம் சொன்னபடிச் செய்கிறாரா என்று சோதித்துப் பார்க்கவேண்டும். எப்பொழுது சோதிக்கலாம்? நாம் பாவப்பாரத்தோடு சஞ்சலப்படுக்கையில் அவர் நம்மை மன்னிக்கிறாராவென்றும், நாம் துன்பப்படுக்கையில் அவர் இரக்கம் காட்டி நம்மை விடுவிக்கிறாராவென்றும், நாம் மனம் கலங்கி நிற்கையில் நம் கண்ணீரைத் துடைக்கிறாராவென்றும், வறுமை வேதனையால் நாம் வாடும் பொழுது, நமக்கு ஆதரவளித்து நம்மை மீட்கிறாராவென்றும் நாம் அவரைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.

அவருடைய ஊழியத்தை நாம் செய்யும்பொழுது நம்மை தெய்வபக்திக்கும், உயிருள்ள வாக்குத்தத்தங்களுக்கும் பங்குள்ளவர்களாக நம்மை மாற்றுகிறாரா என்று அவரைச் சோதித்துப் பார்க்கலாம். நமக்கு முன்னே கோடானகோடிப்பேர் அவரைச் சோதித்து, அவர் உண்மையுள்ளவர் என்று கண்டுகொண்டார்கள். அவரைச் சோதிக்குமளவுக்கு நாம் என்ன செய்யக்கூடும் என்று நம்மையே முதலில் சோதித்துப்பார்ப்போம். முதலில் விசுவாசத்தில் பெலப்படுவோம். தேவையான பொழுதெல்லாம் அவருடைய உண்மைக்குச் சாட்சிகளாக விளங்குவோம். என்றைக்கும் அவர் தமது வாக்கில் உண்மையுள்ளவர் என்று சான்று பகர்வோம். அவரை நாம் நம்பினால் பாக்கியவான்களாயிருப்போம்.

பொய் சொல்ல தேவன் மனிதரல்ல
அவர் என்றும் வாக்கு மாறாதவர்
சத்தியபரன் அவரையே என்றும்
நம்பி நாம் பேறு அடைவோம்.

துக்கம் நிறைந்தவர்

ஓகஸ்ட் 23

“துக்கம் நிறைந்தவர்” ஏசாயா 53:3

தேவகுமாரன் துக்கமாய் இருப்பது எவ்வளவு விசித்திரமான காரியம். அவர் மகிமையின் பிரகாசமானவர். பிதாவின் அச்சடையாளமானவர். ஆனாலும் அவருடைய ஜனங்கள் பட்ட துன்பத்தையும், பட வேண்டிய துன்பத்தையும் அனுபவத்தால் அறியவே இந்த உலகில் வந்தார். அவர் துயரங்களை கேள்வியால் அறிந்தவர். அவர் நம்முடைய சுபாவத்தை தரித்துக் கொண்டார். நமக்கு பதிலாக வந்தார். பிறந்தது முதல் துன்பத்தைச் சகிக்க ஆரம்பித்தார். மரணபரியந்தமும் துன்பத்தையே அனுபவித்து வந்தார். தன்னுடைய கடமையில் அதிக பாரத்தைச் சுமந்தவர். பிதாவை நிந்தித்தவர்களுடைய நிந்தை அவர்மேல் விழுந்தது. அவர் துக்கம் அனுபவித்தவர். பலவகையில் துக்கம் அனுபவித்தார். துக்கத்தின் ஆழம் அவருக்குத் தெரிந்திருந்தது.

அவரைப்போலவே துயரங்களை அனுபவித்தவர் வேறே ஒருவரும் இல்லை. சில வேளைகளில் சந்தோஷப்பட்டாலும் பல வேளைகளில் துக்கப்பட்டார். துக்கமே அவர் கூட்டாளிகளாய் இருந்தது. நண்பரே, கர்த்தர் உனக்காய் துக்கப்பட்டார். உன்னைப்போல் துக்கப்பட்டார். உன்னைவிட அதிகம் துக்கப்பட்டார். அதனால் இப்போது உனக்காகப் பரிதபிக்கிறார். மனிதன் அனுபவிக்கும் துக்கம் ஒவ்வொன்றும் அவருக்குத் தெரியும். அவருக்கு எப்பக்கத்திலிருந்தும் துக்கம், துயரம் ஏற்பட்டது. வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் ஏன், நரகத்திலிருந்தும்கூட அவருக்குத் துன்பம் வந்தது. உனக்காய் அவர் பாடுபட்டார். ஆதலால் உனது எல்லா துக்கத்திலும், துயரத்திலும் நிர்பந்தத்திலும் உனக்காகப் பரிதபித்து, உனக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார்.

மனிதனால் எனக்கிரங்கி
உருக்கத்தால் தவிர்க்கிறார்
கர்த்தாவே என்னைத் தாங்கி
முற்றிலும் இரட்சியுமே.

கிறிஸ்து நமக்காக மரித்தார்

ஜனவரி 24

“கிறிஸ்து நமக்காக மரித்தார்.” ரோமர் 5:8

இது எத்தனை மகத்துவம் நிறைந்த சத்தியம். இன்றைய நாளில் இதைச் சற்று கவனமாய்ச் சிந்திப்போம். தேவனின் ஒரே மகனும், சகல நன்மைக்கு ஊற்றும், எல்லா மேன்மைக்கு மகிமையும், முதலும் முடிவுமாய் கிறிஸ்து மரித்தார். தேச சுபாவத்தையும் மனுஷ சுபாவத்தையும் தம்மில் ஒன்றாய் சேர்த்து வைத்திருந்த இயேசுவானவர் மரித்தார். உடன்படிக்கையில் நமது சுதந்தரராக ஏற்பட்டு நமக்காக பூமிக்கு இறங்கியவர். மரணத்தைவிட தம் சிநேகிதரை நேசித்ததால் அவர் மரித்தார். நம்மை அவர் நேசித்ததாலும் பிதா அவரை தெரிந்துகொண்டதினாலும் அவர் நமக்காக மரித்தார். நாம் நிர்பந்தரும், துன்மார்க்கவுரும், பெலனற்றவர்களும், சத்துருக்களுமாயிருந்தபோது அவர் நமக்காக மரித்தார்.

நமது சரீரத்திற்குச் சிரசாகவும், பிணிப்போக்கு ம் மருந்தாகவும், சிறைப்பட்டவர்களை விடுதலையாக்கவும் தன் மணவாட்டிக்கு மணவாளனாகவும், மந்தைக்கு மேய்ப்பனாகவும், பிதாவின் சித்தத்தை முடிக்க வந்த பணிவிடைக்காரனாகவும், அவர் நமக்காக மரித்தார். நம்மை மரணத்திலிருந்து மீட்கவும், நித்திய ஜீவனுக்கு உயர்த்தவும், தேவனோடு ஒப்புரவாக்கவும், தமது பரிசுத்த வாழ்வுக்கு நம்மை தகுதியுள்ளவர்களாக்கவும், நமக்கு முடிசூட்டி தம்மோடு இருக்கச் செய்யவுமே அவர் மரித்தார். நாமும் எந்நாளும் இயேசுவை நோக்கிக் கொண்டே ஜீவனம்பண்ணுவோமாக.

பாவிகளைத் தேடி வந்தார்
பாவங்கள் யாவையும் போக்கினார்
நம்மை மீட்க அவர்
ஆக்கினைக்குள்ளானார்
மேய்ப்பன் இரத்தம் சிந்தவே
ஆட்டுக்கு உயிர் வந்ததே.

நீதிபரன்

நவம்பர் 13

“நீதிபரன்” அப். 7:52

நமதாண்டவரின் நாமங்களில் இதுவும் ஒன்று. அவர் பரிசுத்த தன்மையுடையவர். பூரண நீதிமான். யாவருக்கும் செலுத்த வேண்டியவைகளைச் செலுத்தி முடித்தவர். தேவ குமாரனாக அவர் தமது பரம தகப்பனுக்குக் கீழ்ப்படிந்து அவரைக் கனம்பண்ணினார். பணிவுடனும் பக்தியுடனும் அவருக்குப் பணிபுரிந்தார். தமது ஜனத்திற்குப் பிணையாளியாக, அவர்கள் சகிக்க வேண்டியதைத் தாமே சகித்தார். நியாயப் பிரமாணத்தைக் கனப்படுத்தி மேன்மைப்படுத்தினார். தமது இரத்தத்தால் கழுவப்பட்டவர்களை முற்றும் பரிபூரண பரிசுத்தராக்கினார். அவர் நீதிபரர்.

தமக்குக் கொடுக்கப்பட்ட எல்லாப் பணிகளையும் நிறைவேற்றினார். தமது மக்கள் ஒவ்வொருவருக்கும் தக்கப்படித் தமது தன்மைகளைக் காட்டி வருகிறார். முறைப்படி தம்முடைய சத்துருக்களைத் தண்டித்துத் தம்மை நம்புகிற எல்லாரையும் இரட்சிக்கிறார். அவர் தம் வார்த்தையில் என்றும் மாறாதவர். அவருடைய நடத்தையில் யாதொரு குறையும் காணப்படவில்லை. தம்மிடம் அண்டிவரும் எப்பாவியையும் அவர் தள்ளிவிடார். தமது மந்தையில் வந்து சேருகிற ஆடுகளை அன்பாகக் கண்காணிப்பார். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் அவர் செவி கொடுப்பார். தான் னஒரு பாவியென்று அவர் பாதத்தைக் தேடுகிற எவருக்கும் அவர் இரட்சிப்பைத் தருகிறார். தமது ஊழியக்காரருக்குக் கொடுக்கும் ஒரு கலசம் தண்ணீரைக்கூட அவர் மறந்துவிடாமல், அதற்குகந்த பதிலளிப்பார். அக்கிரமக்காரரையும் அகந்தையுள்ளோரையும் அழித்து, தமது பரிசுத்தவான்களுக்கு என்றும் நித்திய பாக்கியத்தைக் கொடுத்து நீதிபரராகவே விளங்குகிறார்.

நீதிபரர், என் ஆண்டவர்
தம் நீதியால் என்னை நித்தம்
தாங்குவார், அருள்தனை அளித்து
ஆனந்தம் தருவார் பரத்தில்.

அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரில் அன்புகூருகிறோம்

மார்ச் 11

“அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரில் அன்புகூருகிறோம்.”
1.யோவான் 4:19

நாம் தேவனை நேசிக்கும் நேசம் அவர் நமதுபேரில் வைத்த நேசத்தின் தயைதான். நாம் இந்த ஜீவகாலத்தில் அவரை நேசிக்கும்படி, அவர் நித்திய காலமாய் நம்மை நேசித்தார். நேசிக்க வேண்டிய தகுதி ஒன்றும் நம்மில் இல்லாதிருந்தும் நம்மை அவர் நேசித்தார். அவர் அளவற்ற அன்பு நிறைந்தவரானபடியால், நாம் அவரை நேசிப்பது நம்முடைய கடமை. அவரின் அன்பு நமக்கு வெளிப்பட்டபடியினாலே தான் அவரை நாம் நேசிக்க ஏவப்படுகிறோம். அவரின் அன்பு நமது இருதயத்தில் ஊற்றப்பட்டபடியால்தான் நாம் அவரை நேசிக்கிறோம் சாபத்தின்படி ஒருவனும் தேவனை நேசிக்கிறதில்லை. தன் மாம்சத்தின்படி ஒருவனும் தேவனை நேசிக்கவும் முடியாது. ஏனென்றால் மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை. அது தேவ பிரமாணத்திற்கு அடங்கியிருக்கிறதுமில்லை. அடங்கியிருக்கவும் மாட்டாது.

நாம் தேவனை நேசித்தால், அல்லது மனதார நேசிக்க விரும்பினால், நமது இருதயம் மாற்றப்பட்டதற்கு அது ஓர் அத்தாட்சி. அந்த மாறுதல் அவர் நம்மை நேசித்ததின் பலன். எந்தப் பரம நம்மையும் அவருடைய அன்பிலிருந்து பாய்கிறது. அவரில் உண்டாகியதெதுவும் உடன் படிக்கைக்குரிய ஆசீர்வாதமானதால் திரும்ப அவரண்டைக்கே நம்மை நடத்துகிறது. அவரின் வார்த்தையில் வைக்கிற  விசுவாசமும், அவர் இரக்கத்தில் நமக்கு நம்பிக்கையும், அவர் பிள்ளைகளிடத்தில் நாம் வைக்கிற அன்பும், அவர் சேவைகளில் நமக்கிருக்கும் வைராக்கியமும், பாவத்திற்காக நாம் படும் துக்கமும், பரிசுத்தத்தின்மேல் நமக்கிருக்கும் வாஞ்சையும் அவர் நம்மை நேசிக்கிறார் என்பதற்கு அத்தாட்சிகள். நம்மைப்போல பாவிகள் தேவனுடைய பிள்ளைகள் என்று சொல்லப்படுவதற்கு இணையான அன்புண்டோ.

நீர் என்னை நேசிக்கிறீரென்பதை
நான் சந்தேகிக்கக் கூடாது
உம்மை நேசிக்கச் செய்யுமேன்
என் நேசம் வர்த்திக்கப்பண்ணுமேன்.

Popular Posts

My Favorites

தேவ குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்

பெப்ரவரி 18 "தேவ குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்." 1.தெச. 1:10 நம்மை மீட்டுக்கொள்ளவே கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டார். நம்மைப்பரிசுத்தமாக்க இயேசு பரிசுத்தாவியை அனுப்பினார். அவரே திரும்ப வந்து நம்மை அழைத்துக்கொண்டு தாம்...