தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 4

“அவனையேநோக்கிப் பார்ப்பேன்”

ஜனவரி 01

“அவனையேநோக்கிப் பார்ப்பேன்” ஏசாயா 66:2

எவனைநோக்கிப் பார்ப்பேன்? சிறுமைப்பட்டவனை, ஆவியில் நொறுங்குண்டவனை, தமது வசனத்துக்கு நடுங்குகிறவனை, சிங்காசனத்தில் வீற்றிருக்குமுன் தான் ஓன்றுமேயில்லை என தாழ்த்துகிறவனை, தன் பாவங்களை நினைத்து மனந்திரும்புகிறவனை, குற்றங்களை நினைத்து உண்மையாக மனஸ்தாபப்படுகிறவனை, தன் வாழ்வில் எல்லாமே இயேசுவால் மட்டுமே கிடைக்குமென்று அவரை நோக்குகிறவனையே.தேவாதி தேவன் நோக்கிப் பார்ப்பேன் என்கிறார்.

கர்த்தர் இப்படிப்பட்டவர்களைக் கவனித்துப் பார்க்கிறார். இவர்களைப் பார்த்து உள்ளம்பூரிக்கிறார். அகமகிழ்கிறார். தேவ அன்பை இவர்கள்மேல் அதிகம் ஊற்றுகிறார். இவர்கள்வாழ்க்கையையும் வழிகளையும் ஆசீர்வதிக்கிறார். தம்முடைய சிநேகிதராக இவர்களைச் சந்தித்துப் பேசி சஞ்சரிக்கிறார். இவர்களுடைய ஜெபங்களுக்குக் கட்டாயம் பதில்கொடுக்கிறார். இவர்களின் பொருத்தனைகளையும் வேண்டுதல்களையும் ஆவலாய் அங்கீகரித்துக்கொள்ளுகிறார். இப்படிப்பட்டவர்களைத் தமது மகிமைக்கு அலங்காரமாக பயன்படுத்தி மேன்மைப்படுத்துகிறார். கிதியோனைப்போல வல்லமையாய் பயன்படுத்தி பேதுருவைப்போல சீர்படுத்துகிறார். இவ்விதமக்கள்மேல் கர்த்தர் தமது நேசமுகப்பிரகாசத்தைத் திருப்புவார்.

என் ஆத்துமாவே, இன்று நீ கர்த்தரை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தாயா? அவரை உன் ஆசைத் தகப்பனாகப் பார்த்தாயா? உன் இரட்சகராக அவரை பார்த்தாயா? பார்த்திருப்பாயானால் அவர் தகப்பனுக்குரிய பட்சத்தோடு உன்னையும் பார்ப்பார். இப்போதும் உன்னை அப்படியே பார்த்துக்கொண்டிருக்கிறார். கர்த்தர் நம்மை பார்க்கிறது என்ன ஓர்ஆனந்தம்! என்ன ஒரு பேரின்பம்! தேவன் நம்மை கண்ணோக்குகிறார். உலக ஆஸ்தியைவிட மனித புகழைவிட, அன்போடு கண்ணோக்குகிறார் என்று நினைத்துக் கொண்டே இன்றையநாளில் இருப்பாயாக.

அவர் அன்பும் தயவும்

தேவமீட்பில் விளங்கும்

பாவங்களை மன்னித்து

அக்கிரமங்களை மறந்தார்.

அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர்

செப்டம்பர் 17

“அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர்” எரேமி. 50:34

நமது மீட்பர் நமக்கு மிகவும் நெருக்கமான உறவினர். கர்த்தராகிய இயேசுவைப்போல நமக்கு மிகவும் நெருக்கமானவர். வேறு யாரும் கிடையாது. பலவிதமான சூழ்நிலைகளிலும் நம்மோடு ஐக்கியப்படுபவர். இவரைப்போல் வேறு யாரும் இல்லை. இவர், தம்முடைய உயிரையே, நம்மை மீட்கும் பொருளாகத் தந்த நமது மீட்பர். நாம் சாத்தானுடைய வலையில் மீண்டும் விழுந்து விடாதபடி நம்மைக் காக்கத் தம்முடைய தூய ஆவியானவரையே நமக்குத் தாராளமாகத் தந்துள்ளார். மரித்தபின் நம்மை உயிரோடு எழும்பத் தம்முடைய மீட்பின் வல்லமையை முழுமையாகப் பயன்படுத்துகிறார். தாம் உலகிற்கு எதற்காக வந்தாரோ அதைப் பரிபூரணமாக நிறைவேற்றியுள்ளார். ஏனெனில், அவர் வல்லமையுள்ளவர். நீதிமான். வாக்கு மாறாதவர். சொன்னதைச் செய்வார்.

அவர், நம்மைச் சிறைபிடித்த சாத்தானிடமிருந்தும், நம்மை ஒடுக்கி ஆண்ட பாவத்தினின்றும் நமது சத்துருவாகிய மரணத்தினின்றும் மீட்ட கர்த்தர். இது மெய்யானது. ஆதலால், நாம் நமது பெலவீனங்களையும், குறைவுகளையும் அவரிடத்தில் அறிக்கை செய்வோமாக. அவர் ஒருக்காலும் நம்மீது சத்துரு ஆளுகை செய்யவிடமாட்டார். அவன் ஒருக்காலும் வெற்றி பெறவிடார். அவருடைய நோக்கமும், விருப்பம் நம்மை உயர்த்துவதே. நம்மோடு மகிழ்ந்திருப்பதே அவருடைய பேரவா. அக்கிரமங்களிலும், பாவங்களிலும் உழன்று கிடந்த நம்மை மீட்டு கிருபையாக நம்மை உயிர்ப்பிப்பதே. நம்முடைய எதிர் காலத்தை அவர் வளமுள்ளதாக்குவார். நமது கரத்தின் கிரியைகளை ஆசீர்வதிப்பார். நம்முடைய காரியங்களை எவ்வகையிலும் செய்து முடிப்பார்.

வல்ல மீட்பர் இயேசுவே
என்னைத் தயவாய் மீட்டீரே
சாத்தானின் கரத்திலிருந்தென்னைத்
தயவாய் மீட்டுக் கொண்டீரே.

அவர் முற்றிலும் அழகுள்ளவர்

அக்டோபர் 25

“அவர் முற்றிலும் அழகுள்ளவர்” உன். 5:16

ஆண்டவரை அதிகம் தெரிந்து கொண்டவர்கள் இவ்வாறுதான் அவரை வர்ணிப்பார்கள். அன்பு செலுத்தத்தக்க பண்பு அவரிடத்தில் உண்டு. அவரை நேசிப்பவர்கள் அவரில் வாசம்பண்ணுவார்கள். பரிசுத்த ஆவியினால் போதிக்கப்பட்டவர்கள் அவரைப் போற்றிப் பாடுவார்கள். தேவகுமாரனாக அவரைப் பார்த்தால், அவர் முற்றிலும் அழகுள்ளவர். அவர் மனுஷரெல்லாரிலும் அழகுள்ளவர். அவருடைய அழகில் தெய்வத்தன்மை உண்டு. அவர் பதினாயிரம் பேரில் சிறந்தவர். அவர் அளவில்லா ஞானமும், மகத்துவமும் உள்ளவர். அன்பும், இரக்கமும் உள்ளவர். அழகற்றது ஒன்றும் அவரிடமில்லை. அவரே பூரண அழகுள்ளவர்.

திருச்சபையாகிய மணவாட்டி, அவரைக் குறித்துக்கூறிய சாட்சி, அவருடைய தீர்க்கதரிசி, ஆசிரியர், இராஜா ஆகிய பதவிகளுக்கும் பொருந்தும். உலகம் முழுவதையும் அவர் ஆண்டுகொண்டிருப்பதாலும், சகலமும் அவர் பாதங்களின்கீழ் இருப்பதாலும் அவரை இவ்வாறு போற்றிப் புகழலாம். வானத்திலும், பூமியிலும் அவருடைய பணிகளைக்குறித்தும் இச்சாட்சியைக் கூறலாம். அவர் கிருபை செய்வதில் வல்லவர். ஆகவே அவர் அழகுள்ளவராகக் காண்பிக்கப்படுகிறார். அவர் நம்மைச் சுத்திகரித்து, உயர்த்திக் கனப்படுத்தி அழகுபடுத்த வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.

பிரியமானவனே, நீ ஆண்டவரை அழகுள்ளவராகக் காண்கிறாயா? அவருடைய அழகில் நீ மகிழ்ச்சி கொள்ளுகிறாயா? அவரில் களிகூரு. அவரில் பேரின்பம் பெறு. அவர்மேல் சார்ந்து வாழ்ந்திரு. எவ்வளவாய் நீ அவரை அறிந்து கொள்ளுகிறாயோ, அவ்வளவாய் நீ அவரை நேசிப்பாய். அவரை நேசிக்கும் அளவுக்கு நீ பாக்கியவானாவாய்.

கர்த்தர் மகிமை நிறைந்தவர்,
மா அழகுள்ளோர், அவரை நேசிப்பது
பேரானந்தம். அவரை அறிந்தோர்
எவருமவரைப் புகழ்ந்து போற்றுவார்.

உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்கும்.

மே 29

“உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்கும்.” யாக் 1:3

தேவனை விசுவாசிக்கிறேன் என்கிறவன் தன் விசுவாசம் பரீட்சிக்கப்படமனதாயிருப்பான். ஒவ்வொரு விசுவாசியும் சோதிக்கப்படுகிறான். சாத்தானாலாவது, உலகத்தினாலாவது, பேர் கிறிஸ்தவர்களாலாவது நாம் சோதிக்கப்படுவோம். நம்முடைய சோதனையைப் பார்க்கிறவர் தேவன். தமது வசனத்தில் நாம் வைக்கும் விசுவாசம் உத்தமமானதா என்றும், அவருடைய அன்பில் நாம் வைக்கும் விசுவாசம் உத்தமமானதா என்றும், அவருடைய அன்பில் குமாரனில் மட்டும் பூரண இரட்சிப்படைய நாம் விசுவாசிக்கிறோமா என்றும், அவருடைய வாக்கை நிறைவேற்றுவார் என்றும் அவருடைய உண்மையில் விசுவாசம் வைத்து எதிர்பார்க்கிறோமா என்றும் நம்மை அவர் சோதிக்கிறார். நம்முடைய விசுவாசம் தேவனால் உண்டானதா, அது வேர் கொண்டதா என்று சோதித்தறிகிறார். நமது நம்பிக்கையின் துவக்கத்தை உறுதியாய்ப் பிடித்திருக்கிறோமா என்று நம் உறுதியை சோதித்தறிகிறார். இப்படி சோதிப்பது நமது சொந்த நன்மைக்கும் நலனுக்கும். அவரின் சொந்த மகிமைக்கும் ஆகும். நம்மை கவனிக்கிற மற்றவர்களுக்காகவும், நமது அனுபவத்தின் பிரயோஜனத்திற்காகவும் இப்படிச் சோதித்தறிகிறார்.

இப்படிச் சோதிப்பது பொறுமையை உண்டாக்கும். இத்தகைய சோதனை பொறுமையை உண்டாக்கும். அடிக்கடி வருத்தமில்லாமல் இருக்கிறதற்குப் பதிலாக பொறுமையையும், ஐசுவரியத்திற்குப் பதிலாக மனதிருப்தியையும் நமது சொந்த பெலனுக்குப் பதிலாக கிறிஸ்துவின் பெலனை நம்பவும் செய்யும். ஆகவே விசுவாசம் பரீட்சிக்கப்பட வேண்டும். துன்பங்கள் விசுவாசத்தைச் சோதிக்கும். தேவாசீர்வாதம் பெற்ற துன்பங்கள் நம்மைப் பொறுமையுள்ளவர்களாக்கும். பொறுமை நிறைவாகும்போது சோதனைகள் அற்றுபோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோமாக. ஆகையால் நீங்கள் பொறுமையுள்ளவர்களாய் இருங்கள்.

சோதனை வரும் அப்போ
என் பக்கம் வந்திடும்
சாந்தம் பொறுமை அளியுமே
உமக்கடங்கச் செய்யுமே.

உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்

டிசம்பர் 22

“உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்” யோவான் 13:15

இயேசு கிறிஸ்து காட்டின மாதிரியின்படியே நீ நடக்க ஆயத்தமா? அவருடைய மாதிரியில் ஆச்சரியங்களைக் கண்டு பிடித்தாயா? அதன்படி நடக்க முழுமனதோடு விரும்புகிறாயா? அவருடைய மாதிரியின்படி நடவாமல், அவர் செலுத்தின பலியினால் நான் இரட்சிக்கப்பட்டவன் என்று சொல்லுவது வீண்பேச்சு. அவருடைய காலடிகளை நாம் தொடர்ந்து செல்லுமாறு அவர் நமக்கு நல்ல மாதிரிகளை வைத்துப்போனார். அவர் பிதாவின்மேல் வைத்த விசுவாசம், அவர்மீது காட்டின அன்பு, ஊழியத்தில் அவருக்கிருந்த பக்தி வைராக்கியம், பிதாவின் வேலைகளில் அவருக்கிருந்த வேகம், இவைகளை எல்லாம் கவனித்துப்பார். அவர் தமது ஜனத்தின்மேல் வைத்த அன்பு, பொறுமை, அமைதி, அவருடைய இரக்க உருக்கம், தன்னை வெறுத்தல், தாழ்மை இவைகள் எல்லாவற்றையும் கவனித்துப் பார்.

அவர் பாவிகளின்மேல் வைத்த அன்பைப் பார். அவர்களுக்காக அவர்விட்ட பெருமூச்சைப் பார். அவர்களுக்காக சிந்திய கண்ணீரைப் பார். அவர்களைப்பற்றி அவருக்கிருந்த பாரத்தைப் பார். அவர்களுக்கு நன்மை செய்யவேண்டுமென்று அவருக்கிருந்த எண்ணத்தைக் கவனி. இவைகளை எல்லாம் சிந்தித்துப் பார். அவர் தம்மை எவ்வளவாய் தாழ்த்தினார். தமக்கெதிராக அவர்கள் செய்த கொடுமைகளை எவ்வளவு பொறுமையாகச் சகித்தார். அவர்தான் உன் முன்மாதிரி. எப்பொழுதும் அவரைப்போலிருக்க அவருடைய முன்மாதரியைப் பின்பற்றுங்கள். ஓவ்வொருமுறையும் உங்கள் நடத்தையை அவருடைய நடத்தையோடு ஒப்பிட்டுப்பாருங்கள். அவருடைய மாதிரி எத்தனை அழகு, எவ்வளவு நல்லது, எவ்வளவு பாக்கியமானது. „அவருடைய மாதரியின்படி நடத்த பரிசுத்த ஆவியானவரே, எனக்கு வலிமையையும், பெலத்தையும் தாரும்“ என்று தினமும் ஜெபி.

கிறிஸ்துவே என் முன்மாதிரி,
கிறிஸ்துவின் சாயல் ஏற்பேன்,
அவரது அடிகளைப் பின்பற்றி,
அவரைப்போலாக முயற்சிப்பேன்.

கடைசிச் சத்துரு

ஓகஸ்ட் 02

“கடைசிச் சத்துரு” 1.கொரி. 15:26

கிறிஸ்தவனுக்கு அநேகச் சத்துருக்கள் உண்டு. தேவ கிருபையினால் இவன் சகல சத்துருக்களையும் மேற்கொள்ளுவான். அதில் பரிகரிக்கப்பட வேண்டிய கடைசிச் சத்துரு மரணம். மரணம் தான் எல்லா இராஜ்யத்துக்கும் சத்துரு. இது ஞானவான்களையும், தேச தலைவர்களையும், பரிசுத்தரையும் அழித்துப் போடுகிறது. இது சபையின் சத்துரு. இது பக்தியுள்ளவரையும், நன்மை செய்பவரையும், பயனற்றவரையும் நீக்கிப்போடுகிறது. தேவாலயத்துக்கும் சத்துரு இது. பணிவிடைக்காரர்களையும், ஊழியர்களையும், போதிக்கிறவர்களையும், வாலிபரையும் தேவனுக்காய் உழைப்பவர்களையும் மரணம் கொடுமையாக கொண்டுபோய் விடுகிறது. இது குடும்பங்களுக்குச் சத்துரு. தாய் தந்தையையும், மனைவி புருஷனையும், பிள்ளைகளையும் பிரித்துவிடுகிறது. ஊழியர்களையும், பக்திமான்களையும் உலக மனிதரையும் பாவிகளையும் பட்சபாதமின்றி மரணம் விழுங்கி விடுகிறது. நம்முடைய ஆண்டவர் இயேசுவுக்கும் அது சத்துருவாய்தான் இருந்தது.

மரணம்தான் கடைசி சத்துரு.முதல் சத்துரு சாத்தான். இரண்டாம் சத்துரு பாவம். கடைசிய சத்துரு மரணம். இது கடைசியாக நம்மைத் தாக்குகிறது. வியாதியிலும், முதுமையிலும், ஏன் இளமையிலும் மரணம் வந்துவிடுகிறது. இதுவே கடைசியாக அழிக்கப்படுகிற சத்துரு.தேவ தீர்மானத்தின்படி மரணம் கிறிஸ்துவினால் அழிக்கப்பட்டுப்போய்விடும் என்று வாக்களித்திருக்கிறார். பரிசுத்தவான்கள் அதற்காக ஜெபிக்கிறார்கள். அது அழியும் என்று சபையும் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த வசனத்தை நிறைவேற்ற இயேசு கிறிஸ்துவும் வரப்போகிறார். அப்பொழுது அது நிச்சயமாய் அழிக்கப்பட்டுப்போம். பூரணமாய் அழிக்கப்பட்டுப்போம். இப்பொழுதும் பக்திமான்கள் அதன் வல்லமையை எதிர்த்து, அது வர சம்மதித்து முடிவுக்கு வாஞ்சித்து, மகிழ்ச்சியாய் அதற்கு உட்பட்டு, அதன் பிடிக்குத் தப்பி சொல்லமுடியாத மகிமையை அனுபவிக்க எதிர்நோக்கலாம்.

தேவா உமது சாயலை
எனக்களித்துப் போதியும்
அப்பொழுது உம் சமுகம்
கண்டு என்றும் களிப்போம்.

உலகம் அவரை அறியவில்லை

யூன் 16

“உலகம் அவரை அறியவில்லை.” 1.யோவான் 3:1

ஆண்டவர் இயேசு பூமியில் வாழ்ந்தபோது உலகம் அவரை அறியவில்லை. இப்போது மனிதரில் அநேகர் அவரை அறியவில்லை. தேவனுடைய இருதயத்தில் பொங்கி, மாம்சத்தில் வாசம்பண்ணும்படி செய்து அவரைத் துக்கமுள்ளவராக்கின அன்பை அவர்கள் அறியார்கள். கெட்டு, தீட்டுப்பட்டுப்போன மனிதனுக்கு அவர் காட்டுகிற அன்பான குணமும், பட்சமும் அவர்களுக்குத் தெரியாது. அவர்களை ஏற்றுக்கொள்ள அவருக்கிருக்கிற மனதைப்பற்றியும், அவர்களை வழி நடத்த அவருக்கிருக்கும் தீர்மானத்தைப்பற்றியும் அவர்களுக்கு அடைக்கலம் தர அவருக்கிருக்கும் இரட்சிப்பைப்பற்றியும் அவர்களுக்குத் தெரியாது. அவர் எவ்வளவு மகிமையுடையவரென்றும், அவரின் அதிகாரம் எப்படிப்பட்டதென்றும், அவரின் இரத்தத்தின் வல்லமையென்ன என்றும், அவர்கள் அறிவார்கள். அவர் எவ்வளவு தாழ்மையுள்ளவர் என்றும் எத்தனை பாடுகளை அனுபவித்தாரென்றும், கெட்டுப் போனவர்களை எப்படி இரட்சிக்கிறாரென்றும் அவர்கள் அறியார்கள். கிறிஸ்துவை நேசியாதவனும் விசுவாசியாதவனும் அவரை அறியான்.

அவரை அறிகிற எவரும், அவரை அறிவர். அத்தகையோர் அவர் சொல்வதை விசுவாசித்து, மகத்துவம் உள்ள வழியில் நடந்து அவர் உண்மையுள்ளவரென்றும் மகிழ்வர். இயேசுவை நாம் அறிய வேண்டுமானால், அவர் நமக்கு வெளிப்பட வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நம் மனதுக்கு வெளிச்சம் தந்து, அவரின் தன்மையைக் காட்டி, அவர் வார்த்தையை நம் மனதில் தங்கும்படி செய்வார். இல்லையேல் நாம் அவரை அறிந்துக்கொள்ள முடியாது. நாம் தினந்தோறும் அவரின் மகிமையைக் கண்டு கர்த்தருடைய ஆவியினால் மகிமையின்மேல் மகிமை அடைந்து அவருடைய சாயலாக மாற்றப்படுவோமாக.

சுத்த ஆவியை எனக்குத்தந்து
தேவ சுதனை எனக்குக் காண்பியும்
தெளிவாய் என் கண்களுக்கு
அவர் மகிமையை வெளிப்படுத்தும்.

அவர் மரணத்தைப் பரிகரித்தார்

அக்டோபர் 26

“அவர் மரணத்தைப் பரிகரித்தார்” 2.தீமோ.1:10

நமக்குப் பெரிய விரோதி மரணம். என்ன செய்தாலும் நாம் அதனிடமிருந்து தப்பிக்கொள்ள முடியாது. மரணம் உலகத்திலிருக்கும் ஒவ்வொருவரையும் வாரிக்கொண்டு போய்விடும். தேவ பிள்ளைகளையும்கூட அது விட்டுவைக்காது. நமது நண்பர்களையும், பிள்ளைகளையும்கூட அது விட்டுவைக்காது. நாம் அன்பாக நேசிக்கிறவர்களையும் அது நம்மிடமிருந்து அது பிரித்துவிடும். மரணம் மகா கொடிய பகைவன். நம்மைப் பயத்தால் நிரப்பி எப்பொழுதும் நம்மை நடுங்கச் செய்கிற நமது விரோதி. ஆனாலும் இந்த மரணச்சத்துருவுக்கு மேலான ஒரு பெரிய நண்பர் உண்டு. இந்த தயவுள்ள நண்பர் நம்மை நன்றாகத் தெரிந்தவர். அளவில்லாமல் நம்மை நேசிக்கிறார். நமக்கு இரக்கம் காட்டி, மனுக்குலத்தின் மீட்புக்காக தம்மையே ஒப்புக்கொடுத்தார். நம்மைத் தப்புவிக்க வேண்டுமென்று சந்தோஷமாகப் பூமிக்கு இறங்கி வந்தார்.

நமக்காகப் பெருந்துன்பத்தைச் சகித்தார். சொல்லிமுடியாத வண்ணமாகப் பாடுகள்பட்டார். இப்பாடுகளினால் நமது கடைசிச் சத்துருவாகிய மரணத்தை ஜெயித்தார். சாவின் கூரை ஒடித்தார். அவர் மரணத்தை ஜெயித்ததால், நாம் மரணத்திற்குப் பயப்பட வேண்டியதில்லை. மரணம் இப்பொழுது உறங்கிக்கிடக்கிறது. அதை அவர் மாற்றிப் போட்டதினால், அதைச் சிறையாக்கி, அதனால் சிறைப்படுத்தப்பட்டோரை விடுதலை செய்தார். அதன் பயங்கரத்தை நீக்கினார். இப்பொழுது அது திவ்விய மகிமை நிறைந்து அவர் சாவின் கூரை ஒடித்ததினால் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார். நீதி திருப்தியடைந்தது. துரைத்தனங்களையும் வல்லமைகளையும் அழித்தார். சாத்தானுடைய கரங்களிலுள்ள திறவுகோலைப் பறித்து விட்டார். நித்திய இரட்சிப்பைச் சம்பாதித்தார். இயேசு நமக்குள் இருந்தால் நமக்குச் சாவு இல்லை.

நம் பரமநேசரை நம்பி
அவர் வாழ்க்கையைப் பின்பற்றினால்
மரணத்தின் பயம் நமக்கில்லை
கல்லறையும் அச்சுறுத்தாதே.

நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிவேன்

ஏப்ரல் 04

“நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிவேன்.” 1.தீமோ. 1:12

கிறிஸ்துவை அறிந்துகொள்வது பெரிய கிருபை. நம்முடைய ஜெபத்துக்கு அதுதான் காரணம். நம்முடைய விசுவாசத்துக்கு அதுதான் ஆதாரம். அவரை அறிந்துக்கொள்ளுகிற பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது. அவருடைய வசனத்தினால் அவரை அறிந்து கொள்ளுகிறோம். தேவனுடைய பிள்ளைகள் கூறிய சாட்சிகளால் தேவனை அறிந்துகொள்ளுகிறோம். இதற்கும் மேலாக பரிசுத்த ஆவியானவரின் போதனையினால் அவரை அறிந்து கொள்ளுகிறோம். ஆனாலும் நாம் அறிந்துகொள்ளுகிறது மிக குறைவுதான். அவரை நேசிக்கத்தக்கதாக, அவருடைய தன்மையை அறிந்துகொள்ளுகிறோம்.

தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட அவர் முடிந்த பூரணகிரியையை நம்பினவர்களாக அவரையே அறிய வேண்டும். நமக்குத் தேவையானதையெல்லாம் பெற்றுக்கொள்ள அவரிடத்தில் நிறைவு உண்டென்று அறிய வேண்டும். துன்பத்திலும், துக்கத்திலும் அவர் அருகில் செல்ல அவருடைய இரக்கத்தையும், உருக்கத்தையும் அறியவேண்டும். மற்றப் பாவிகள் ஜீவனையும் சமாதானத்தையும் அடைய அவரிடத்தில் செல்லுங்கள் என்று சொல்லுத்தக்கதாக, பாவிகளை ஏற்றுக்கொள்ள மனதுள்ளவரென்று அறிய வேண்டும். இரட்சகர் வல்லமையுள்ளவர் என்று நாம் அறிவோம். விசுவாசிக்கத்தக்கவரென்றும் நாம் அறிவோம். அவரை விசுவாசிக்கிற எந்த ஏழைப்பாவியையும் அவர் கைவிடமாட்டாரென்றும் அறிவோம். இவ்வாறு நாம் அறிவதினால்தான் நம்முடைய சகல காரியங்களையும் அவருடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கிறோம். அவரை அறிந்திருக்கிறபடியால்தான் அவரை நம்முடைய கர்த்தரும் தேவனும் என்று சொல்ல நாம் வெட்கப்படுகிறதில்லை. அவர் தேவ குமாரன் என்றும், இரட்சகர் என்றும், தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்றும் அறிவோம். நம்முடைய பாவங்களுக்காக மரித்து, நம்மை நீதிமான்களாக்க உயிர்த்தெழுந்தார் என்றும் மறுபடியும் தம்மண்டையில் நம்மைச் சேர்த்துக்கொள்வார் என்றும் அறிவோம்.

யாரை விசுவாகித்தேனென்று
நான் அறிவேன் அது நல்லது:
நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை
பாதுகாத்திடவார் எந்நாளும்.

கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவன்

ஓகஸ்ட் 21

“கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவன்” கொலோசெயர் 1:28

விசுவாசி தன்னில் குறையுள்ளவனாக எல்லாரும் பார்க்கும்படி நடந்துக்கொள்ளுகிறான். அவர் உணர்வுகள், விருப்பங்கள், துக்கங்கள், செயல்கள், ஜெபங்கள், தியானம் எல்லாவற்றிலும் குறைவு வெளியரங்கமாய்க் காணப்படுகிறது. அவன் இருதயத்திலிருந்து எழும்பும் பெருமூச்சு, மனதில் வரும் அங்கலாய்ப்பு, கண்களிலிருந்து புறப்படும் கண்ணீர், எல்லாம் குறைவையே காண்பிக்கின்றன. ஆனால் கிறிஸ்து இயேசுவிலோ நிறைவுண்டு. நம்மை நீதிமான்களாக்க அவரிடத்தில் பூரண கிருபை உண்டு. நம்மைப் பரிபூரணமாக்க அவரிடத்தில் பரிபூரணமுண்டு. நம்மைப் போதித்து நடத்த அவரிடத்தில் பூரண ஞானம் உண்டு.

அவரோடு ஐக்கியப்படுவதால் நாம் பூரணராகிறோம். ஏனென்றால் அவருடைய மணவாட்டியாக அவருக்கிருப்பதெல்லாம் நமக்குச் சொந்தமாகிறது. அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளகிறதினால்தான் நாம் பூரணராகிறோம். அவருடைய நிறைவிலிருந்து நாம் கிருபையின் மேல் கிருபை பெற்றுக்கொள்கிறோம். ஏனெனில் தேவனுடைய ஆவியாலே நாம் மகிமையின்மேல் மகிமை அடைந்து அவர் சாயலாக மாற்றப்படுகிறோம். நாம் குறைவற்று, தேர்ச்சி பெற்றவர்களாவது, தேவனுடைய தீர்மானம். இப்படி வளர அவர் வாக்களித்துள்ளார். உதவி செய்கிறார். வசனத்தில் உள்ளபடியே நடந்தேறும். அவர் நம்மை பூரணராக்கி நிறையுள்ளவர்களாய், தேறினவர்களாய் பிதாவுக்குமுன் நிறுத்துகிறார். நாம் பூரண பரிசுத்தர் ஆவோம். பூரண பாக்கியர் ஆவோம்.

இயேசு மரித்தபோது
அவர் சீடரும் மரித்தார்
அவரும் அவர்களும் ஒன்றே
இப்பாக்கியம் மகா பெரியது.

Popular Posts

My Favorites